நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன்

நேர்காணல்கள்

ன்னிக் காடுகளின் புதல்வி தமிழ்க்கவி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவர். கடைசிவரை புலிகளுடன் களத்தில் இருந்தவர். தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்றுத் தேறிய சட்டவாளர். புலிகள் இயக்கத்தின்  நட்சத்திர மேடைப் பேச்சாளர். ‘புலிகளின் குரல்’ வானொலி, ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ ஆகியவற்றில் முதன்மையான நிகழ்ச்சித் தயாரிப்பாளர். சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நாட்டாரியல், நடிப்பு, இசை, ஒலி – ஒளிப்பதிவு, மொழிபெயர்ப்பு எனக் கலையின் வெவ்வேறு பரிமாணங்களையும் வசப்படுத்திக்கொண்டவர்.

இவ்வருடத்தின் தொடக்கத்தில் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டபோது அனைத்துலகத் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பிலும் தமிழ்க்கவி கவனம் பெற்றார். இறுதி யுத்தத்திற்குள் சிக்கியிருந்த மூன்று இலட்சம் மக்களது சாட்சியமாக அந்த நாவல் இருந்தது. இலங்கை அரச படைகளது இனவழிப்பையும் கொடூரங்களையும் நிணமும் தசையுமாக முன்னே வைத்த நாவல்; விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களையே கொன்றொழித்ததையும் அவர்களது மனிதவுரிமை மீறல்களையும்கூட பதிவு செய்யத் தவறவில்லை. தன்னை உறுதியான தமிழ்த் தேசியவாதியாகப் பிரகடனப்படுத்தும் தமிழ்க்கவி என்ற படைப்பாளியின் நேர்மைத்திறனான சாட்சியம் அந்த நாவல்.

இராணுவத்தின் பிடியிலும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலும் கிடக்கும் வன்னி நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்க்கவியிடம் மின்னஞ்சலூடாக நிகழ்த்திய இந்த நேர்காணலைத் தொகுக்கும்போது பதற்றமும் துயரும் என்னோடிருந்தன. தமிழ்க்கவி அம்மா வாரிப் பலிகொடுத்த அவரது மூத்த மகனுக்கும் எனக்கும் ஒரே வயது. போராட்டத்திற்காக தமிழ்க்கவியும் அவரது குடும்பமும் செய்த தியாகங்கள் மிகப்பெரிது.  கண்ட இழப்புக்களும் பட்ட வலிகளும் ஏராளம்.  அந்த வலிகளைத் தாண்டியும் திமிர்த்து நிற்கும் போராளியின் – படைப்பாளியின் நேர்காணலிது. அதேவேளையில் வன்னியின் சாமான்ய மனுஷியின் கதையுமிது.

– ஷோபாசக்தி
29.05.2014.

நான் வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்புதுக்குளம் கிராமத்தில் ஒரு செத்தை வீட்டுக்குள் இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்தேன். கந்தப்பு என் தந்தை. தாயார் பெயர் லட்சுமி. என் உடன் பிறப்புகள் பதினொருவர். இப்போதும் உயிருடன் அய்ந்து சகோதரங்கள் உள்ளனர்.

என் தந்தை காடுவெட்டி, விவசாயி, வேட்டைக்காரன், கடின உழைப்பாளி. அப்பு இரண்டாம் வகுப்புப் படித்தவராம்.  அம்மா அவரிடம் எழுத வாசிக்கக் கற்றிருந்தார். அப்புவுக்கு கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன் இவற்றுடன் தினசரி வீரகேசரியும் வேண்டும். காலையில் தன் கொட்டப்பெட்டியிலிருந்து பத்துச்சதம் எடுத்து என்னிடம் தருவார். நான் அதை வைத்துக்கொண்டு படலைக்குள் நின்று பேப்பர்காரரிடம் ஒரு ‘வீரகேசரி’ வாங்குவேன். அதில் டார்ஸான், உதயணனின் கடற்கன்னி, கிருஷ்ணாவதாரம் என்பவற்றைப் படித்துவிட்டு அப்புவுக்காக வைத்திருப்பேன்.

ஏழுவயதிலேயே சேனைப்புலவுக்கு குரங்குக் காவல். மந்துக்காடுகளில் மாடு கலைக்க, வட்டுக்காய் குருவித்தலைப் பாகற்காய் ஆய, வற்றுக்குளத்தில் மீனுக்கு கரப்புக் குத்த, சீலைவார, ஊர்ப் பொடியளோடு கிட்டியடிக்க, மாபிளடிக்க, அப்பு பன்றிக்கு வெடிவைத்தால் நெருப்புமூட்ட, வாட்ட, மான்மரைக்கு வெடிவைத்தால் இறைச்சி விற்பனையைப் பார்க்க, காடுகளில் கதிகால் வெட்ட, அப்புவோடு காட்டுக்குப் போக என்றெல்லாம் இயங்கியவள் மேலதிகமாக ஒருமைல் தொலைவிலிருந்த பாடசாலைக்கும் போவேன். பாடசாலை விட்டு வந்ததும் சாணியள்ளி பட்டிகூட்ட, மாடுகளைச் சாய்த்துப் பட்டியடைக்க என்று முடிக்க எப்படியும் இருளும். இருண்டதும் சாப்பிட்டுவிட்டு நேரத்தோடு படுத்து நேரங் கழித்து எழுவேன். அப்பு செல்லம், அவரோடுதான் உறங்குவேன். அவரோடு காடு கரம்பையெல்லாம் திரிவேன். வேட்டைக்காடுகளில் தடயம் பார்ப்பது எல்லாம் அத்துப்படி.

என்னுடைய படிப்பை  அய்ந்தாம் வகுப்போடு நிறுத்தினார் அப்பு. “பிள்ளைக்கு எழுத வாசிக்க ஏலுந்தானே இனிக் காணும். பிலவுக்கு குரங்கு வருதம்மா விட்டா இந்த வரிச உழைப்புப் போச்சு” என்றார்.

“ஓ”என்று மகிழ்ச்சியாகத் தலையாட்டி ஏற்றுக் கொண்டேன். அதற்கு முந்தைய வருடம் அய்ந்தாம் வகுப்புக்கான அரசாங்கப் பரீட்சையில் மாகாணத்தில் முதல் மாணவியாகத் தேறியிருந்தேன். அது எனக்கும் தெரியாது, என் வீட்டுக்கும் தெரியாது. ஆனால் பாடசாலைக்கு அதற்கான விருது வந்து விட்டது. அப்போது நான் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தேன். பாடசாலையிலிருந்து முத்துலிங்கம் ஆசிரியர் வந்து என் தந்தையைக் கண்டித்து மீண்டும் என்னைப் பாடசாலைக்கு இழுத்துச்சென்றார்.

நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்தது. அப்போது எனது படிப்பு மீண்டும் நின்று போனது. அதற்குப் பிறகு பதினான்கு வயதில் எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள், பதினைந்து வயதில் தாயானேன். முப்பத்தியிரண்டு வயதில் எனக்குப் பேத்தி பிறந்தாள். அது என் வாழ்வின் இருண்ட காலம். இளவயதுத் திருமணங்கள் பற்றி யாரும் பேசினாற்கூட என் உடலும் உள்ளமும் நடுங்குகின்றன .

பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான உங்களது போராட்ட வாழ்வின் ஆரம்பச் சுழி எங்கே தொடங்குகிறது?

1956-ல் வவுனியாவில்  தமிழரசுக் கட்சியின் மாநாடு நடந்தபோது எனக்கு எட்டு வயது. அப்பு அந்த மாநாட்டு ஊர்வலங்களிலெல்லாம் என்னைத் தனது தோள் மீது ஏற்றி நடந்துசென்றார்.

‘துப்பாக்கிக் குண்டு விளையாடும் பந்து’, ‘சிறைச்சாலை பூஞ்சோலை’  என்ற கோஷங்களிலெல்லாம் நானும் குரல் கொடுத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து வந்த இன வன்செயலில் பாதிக்கப்பட்ட  தமிழ்மக்களை எங்களது வீட்டுக்கருகே புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கூட்டுறவுக் கட்டடத்தில்தான் கொண்டுவந்து தங்கவைத்தனர். அந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் ஊர்ப் பெரியவர்களுடன் என் தந்தையும் கலந்து கொண்டார்.  அதனால் நானும் அப்புவுடன் அங்கெல்லாம் சென்றேன். புரிந்தும் புரியாமலும் தெரிந்த அவலம் எனக்குச் சிங்களவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்குள்ளாகவே அரசாங்கம் அகதிகளை அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பக் கட்டளையிட்டு நிவாரண உதவிகளை நிறுத்தியது. அநேக மக்கள் திரும்பிப் போக விரும்பவில்லை. எனவே நம் ஊரவர்கள் அந்தக் குடும்பங்களை பங்கு போட்டு தமது வீடுகளில் தங்க வைத்தனர். அந்த வகையில் எமது வீட்டுக்கு மூன்று குடும்பங்கள் வந்தன.

வீட்டோடு ஒத்தாப்பு இறக்கி ஒரு குடும்பமும், கூடத்தில் ஒரு குடும்பமும், மால் என்ற பகுதியை இரண்டாகத் தடுத்து ஒரு குடும்பமும் குடியிருத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து நான் கேட்ட அதிர்ச்சிதரும் கதைகள் அரசாங்கத்தின்மீது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது என்றாலும் நான் என்ன செய்யமுடியும்.. நான் சிறுமியல்லவா! 1981 – 1983 இன வன்செயல்களிலிலும்  பாதிக்கப்பட்ட மக்கள் எமது கிராமத்துக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.

1977-ம் வருடம் தமிழீழத்துக்கான பிரச்சாரக் கூட்டங்களில் முன்வரிசையில் இருந்தும் அரசியல் விளக்கம் கற்றோம். எமது கிராமத்தில் இவ்வகைப் பிரச்சாரக் கூட்டம் நடந்த போது மாதர் சங்கத் தலைவி என்ற முறையில் நான் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசினேன். தொடர்ந்து வந்த இன வன்செயல்களில் எங்களது கிராமம் பாதிக்கப்படவில்லை எனினும் எமது அயற் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சிங்களவர்களால் எமது கிராம வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. கால்நடைகள் களவாடப்பட்டன. பெரும்பாலும் உழவு செய்யும் மாடுகளைக் கடத்திச் சென்று கப்பம் வசூலித்தபின் திருப்பிக் கொடுத்தனர்.

அது குறித்து பொலிஸில் முறைப்பாடு கொடுத்தால் மாடு மேசைக்கு கறியாகப் போய் விடும். நல்ல விதைப்புக் காலத்தில் இந்தக் களவு நடப்பதால் மாடுகளை மீட்கவே விவசாயிகள் விரும்புவார்கள். இந்தக் களவுக்கு  சில தமிழர்கள் ஊருக்குள்ளேயே திருடர்களிற்கு உதவியாக இருந்தார்கள். பயிர் விளையும் தருணத்தில் சிங்கள மக்கள் ஆண்கள் – பெண்கள் – குழந்தைகளெனக் கூட்டமாகத் தமிழர்களுடைய வயல்களில் இறங்கி கதிராகவே அறுத்துக்கொண்டு போனார்கள். திருடர்களைத் துரத்திச் சென்றவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். அதைப்பற்றி முறைப்பாடு செய்யப் பொலிஸ் நிலையத்திற்குப் போனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவங்களெல்லாம் இவர்களை எதிர்க்க – தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என்ற கொதிப்பை சினிமாப் பாணியில் என்னுள் வளர்த்தன.

எனது அரசியல் ஆர்வப்புள்ளி அங்குதான் ஆரம்பமானது. அதற்கான சந்தர்ப்பம், இயலுமை வந்தபோது நான் ஒரு குடுப்பத் தலைவியாக குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியிலிருந்தேன். அதுவும் என்னை அரசியலுக்குள் வலிந்திழுத்தது. அதுதான் விதி!

உங்களது இரு மகன்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்தபோதும் அவர்களது மரணத்தின் போதும் ஒரு தாயாக எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

எனது சின்ன மகன் பதினான்கு வயதில் இயக்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நான் எனது இன்னொரு மகனைத் தேடி யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகியிருந்தேன். வாகனங்கள் எதுவும் அப்போது ஓடுவதில்லை. எனவே புலிகளின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளரிடம் ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு வன்னியின் இருண்ட காடுகள் ஊடாக சைக்கிளில் யாழ்ப்பாணத்திற்குப் பயணமானேன். ஏ-9 வீதி மக்களுக்கு மறுக்கப்பட்டு இராணுவம் அங்கே குடியிருந்தது. மாங்குளம், ஆனையிறவு இரண்டும் பெரிய முகாமகள்.  பூநகரியே கடவைப் பாதை, எனவே காட்டுவழி. எந்தப் பிரதேசத்திலும் புதியவர்கள் நடமாட முடியாது. புதியவர்களைக் கண்டால் புலிகள் பிடித்துக்கொள்வார்கள். எனவேதான் எங்கள் பகுதிப் பொறுப்பாளரிடம் கடிதம் வாங்கிச் செல்லவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் பாண்டியன்குளத்திலும் பிடிபட்டு, பின் யாழ்ப்பாணத்திலும் ஒருநாள் அடைபட்டேன். பெண்புலிகளிடம் என்னை இரவு ஒப்படைக்க முயன்றபோது அவர்கள்தான் என்னை மீட்டார்கள்.

தனியொரு பெண்ணாக இருண்ட வனத்தினூடாக என்மகனைத் தேடிச்சென்றேன். இந்தியப்படையின் காலத்தில் நடந்த பிள்ளைபிடியில் என் மகனை ‘ஈ.என்.டி.எல்.எவ்.’ இயக்கத்தினர் பிடித்துச் சென்றிருந்தனர். அப்போது இந்திய அமைதிப்படையோடு இயங்கிய எல்லா இயக்கங்களும் இப்படி ஏராளமான பிள்ளைகளைப் பிடித்துச் சென்றிருந்தன. பிடிக்கப்பட்ட பிள்ளைகளிற்கு இந்திய இராணுவம் கட்டாய இராணுவப் பயிற்சி கொடுத்தது. எங்கு பார்த்தாலும் பெற்றார் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகத் திரிந்தனர். அவர்களுள்  ஒருத்தியாக நானும் திரிந்தேன்.

இந்திய இராணுவம் வெளியேறிக்கொண்டிருந்தபோது நான் என் மகனைத் தப்ப வைத்திருந்தேன். பிரபாகரன் -பிரேமதாஸ தேன்நிலவுக் காலத்தில் புலிகள் வெளியே வந்தனர். “மாற்று இயக்கங்களில் பயிற்சியெடுத்தவர்கள் யாராகயிருந்தாலும் எம்மிடம் சரணடையவேண்டும், நாங்களாகத் தேடிக் கண்டுபிடித்தால் விடமாட்டோம்” என்ற அறிவித்தலை ஒலிபெருக்கிகள் வழியே புலிகள் தெருவெங்கும் ஒலிபரப்பினார்கள். என்ன எங்கேயோ கேட்டமாதிரி இருக்கா! ஆம் ஓமந்தையில் 2009-ல் இதே வாக்கியத்தைத்தான் இராணுவத்தினரும் ஒலிபரப்பினார்கள். புலிகளின் அறிவிப்பைக் கேட்ட நான் எனது மகனை அழைத்துப்போய் புலிகளிடம் சரணடைய வைத்தேன். புலிகள் தாம் விசாரித்த பின்பு இரண்டு நாட்களில் என் மகனை என்னிடம் அனுப்புவதாகச் சொன்னார்கள். மகனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன். ஆனால் பத்து மாதங்கள் கழிந்த பின்னும் மகன் திரும்பி வரவேயில்லை. புலிகளிடம் சரணடைந்த பலர் திரும்பிவரவில்லை. நான் புலிகளிடம் சென்று கேட்டபோது ‘அவன் இயக்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்தான் அதனால் அவனை யாழ்ப்பாணம் அனுப்பிவிட்டோம்’ என்றனர். நான் அவனைத் தேடி வனங்களிலும் இருளிலும் தனியாக அலைந்தேன்.

பலநாட்கள், பலமாதங்கள், பலமுகாம்கள் என அலைந்தேன். அவன் இன்னமும் இவர்களிடம் கைதியாகத்தான் இருக்கிறானோ என்ற சந்தேகமும் என்னைக் கலங்க வைத்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட சிலரை நான் சந்தித்து அவர்களிடம் மகனைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் யாரும் அவனைப் பார்த்திருக்கவில்லை. எனினும் புலிகளிடமுள்ள  சித்திரவதை முறைகள், விசாரணை முறைகள் பற்றி அவர்கள் கதைகதையாக என்னிடம் சொன்னார்கள்.

‘கடவுளே! என்மகன் புலிகளிடம் கைதியாக இருந்தால் அவனைக் கொன்றுவிடு’ என்று கோயில் வாசலில் கிடந்து கதறினேன். ஆனால் என் மகனைப் பற்றிய செய்தி நான் புலிகள் இயக்கத்தில் இணைந்து எனக்கென ஓர் இடத்தை தக்கவைத்த பின்பே எனக்குக் கிடைத்தது. நான் இயக்கத்தில் இணைந்து பல முக்கியஸ்தர்களை அறிமுகமாக்கி, தலைவருக்கு கடிதத்துக்குமேல் கடிதம்போட்டு -அப்போது நான் ஒரு அடிமட்டப் போராளிப் பேச்சாளர்- என் மகனைத் தேடிக்கொண்டிருந்தேன். பதினான்கு வயதில் இயக்கத்துக்குப் போயிருந்த என் இன்னொரு மகன் ஆனையிறவுச் சமரில் வீரச்சாவடைந்திருந்தான். அப்போது அவனுக்கு வயது பதினாறு. அவனுடைய சாவுச்செய்தி  இரண்டு மாதம் கழித்துத்தான் என்னிடம் வந்தது. அப்போது நான் யாழ்ப்பாணத்தில் பெண்புலிகளின் முகாமொன்றிலிருந்தேன். வவுனியாவிலிருந்து மகனின் சாவுச்செய்தியைக் கொண்டுவந்தவரை  மனதை இறுக்கிக்கொண்டு வரவேற்று உபசரித்து அனுப்பியதன் பின்பு முகாம் பொறுப்பாளரிடம் மகனின் சாவுச் செய்தியைக் கொடுத்தேன். அந்தத் துக்கத்தைக் கொண்டாட என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள். நான் புறப்பட்டு என் மகளுடைய வீட்டுக்குப் போனேன். சிற்றூர் அவையினரும் ஊர்ப் பெண்களும் சாவீட்டுக்கு வந்தார்கள் அவர்களுக்கு பிஸ்கட், தேநீர் கொடுத்தோம். வீரமகனைப் பெற்றேன் என்ற பெருமை என்னுள் இருந்தாலும் உள்ளே மனம் குமைந்து கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தது. நான் வெளிப்படையாக அழவில்லை. ஆம்! துக்கம் விசாரிக்க வந்த பெண்களைக் கட்டியழ வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. மகன் எப்போது இயக்கத்துக்குப் போனானோ அப்போதே இந்த செய்தியும் எதிர்பார்த்ததுதானே.

ஆனையிறவுச் சமர் நடந்து கொண்டிருந்தபோது, நான் ‘பத்தினியார் மகிழங்குளம்’ புலிகளின் முகாமில்தான் இருந்தேன். அன்றாடம் வித்துடல்கள் வரும். இரண்டு, மூன்று, சில நாட்களில் ஆறேழு வித்துடல்கள். நித்தமும் செத்தவீடு. தினமும் சாவீடுகளிலும் இடுகாட்டில் மண்போடவுமாகத் திரிந்தோம். குறிப்பாக என் மகன் இறந்த அன்று இரு சாவீடுகளில் நான் நின்றிருக்கிறேன். ஆனால் என்மகன் ஆனையிறவிலே, அந்தக் கானல் வெளியிலே நாய்நரி கழுகுகளுக்கு இரையாகிப் போன செய்தி இரண்டு மாதங்கள் கழித்துத்தான் எனக்கு வந்திருக்கிறது.

களத்திலே வீழ்ந்து பட்ட கணக்கற்ற புலிகளின்

பிணக்குவியலோடு சேர்ந்து நீ வரவில்லை.

நாள்முழுதும் பார்த்தழுது நான் தாங்க மாட்டேனென்றா

பூமாலை கட்டிப் பல புகழுடலில்போட்டுவிட்டாய்

போதுமம்மா கைவலிக்கும் என்றெண்ணிக் கொண்டாயா

என என் துயரங்களை நான்கு பக்கக் கவிதையில் கொட்டி இரவு முழுதும் அழுது தீர்த்தேன்.  அப்படி அழுதாலும் மற்றவர்கள் புகழ, வீரத்தாயாக வீரத் திலகமிட்டு மகவையும் மற்றவர்களையும் போருக்கு அனுப்பிவிட்டு வீட்டிலிருந்த புறநாநூற்றுத் தாயாக நான் இராமல் நானும் தொடர்ந்து போர்ப்பணிகளில் ஈடுபட்டேன். ஏனென்றால் என்னிடம் மீதமிருந்த ஒரேமகனும் தானும் இயக்கத்துக்குப் போகப்போவதாகச் சொன்னான். ‘என்ன மசிர் வாழ்க்கை! இவங்களுக்காக இவங்களைக் காப்பாற்ற நான் எவ்வளவு துன்பமனுபவித்தேன். இவங்களுக்காகத்தானே வாழ்ந்தேன். இவங்களே போனா நான்?…இயக்கத்துக்குப் போக எனக்கும் தெரியாதா’ என்ற வீம்பு அதுவரை இயக்கத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறு ஊதியத்துக்காக வேலை செய்துகொண்டிருந்த என்னை முழுமையாக இயக்கத்திற்குப் போக வைத்தது.

இவ்வளவும் நடந்ததற்குப் பின்பாக, சற்றேறக்குறைய இரண்டு வருடங்களின் பின்பாக; நான் புலிகளிடம் சரணடைய வைத்த, நான் அல்லும் பகலும் தேடிக்கொண்டிருந்த  என்மகன் கொல்லப்பட்டான் என்று புலிகளின் தலைமைச் செயலகம் தந்த செய்தியை வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் எனக்கு அறியத்தந்தாள். நான் உடனேயே எழுந்து நின்று ‘என்மகன் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன ?’  என்று கேட்டேன்.  ‘எனக்குத் தெரியாது, இவ்வளவு தகவலும்தான் தந்திருக்கிறார்கள், கூடவே மன்னிப்பும் கேட்டார்கள்’ என்றாள். நான் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மாங்குளத்திலிருந்து புறப்பட்டேன். எமது முகாம் இருந்த பத்தினியார் மகிழங்குளத்தை நோக்கி என் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன்.

என் மூன்று மகவுகளிலே ஒருவன் வீரச்சாவடைந்தான், ஒருவன் களத்திலிருக்கும் போராளி, ஒருவன் கொல்லப்பட்டான், நான் இரண்டுங்கெட்டான். புளியங்குளம் கடந்து பெருங் காட்டோரமாக மிதிவண்டியைக் கீழே போட்டுவிட்டு ஒரு பாலைமரத்தின் கீழே மல்லாந்து விழுந்தேன். தாகம் நாவை வரட்டியது, தொண்டைக்குழிக்குள் எதுவோ முள்ளுப்பத்தை போல அடைத்துக்கொண்டது. மேலே பாலைமரம் மஞ்சள் நிறமாகிப் பழுத்துக் குலுங்கிக் கிடந்தது. பறவைகள் வருவதும் போவதும் கடிபடுவதுமாகத் திரிந்தன. நான் கண்விழித்தபோது ஒரு குடிசையில் கிடந்தேன். வவுனியா மாவட்டத் தளபதி தேவன்தான் என்னை அங்கே கொண்டு வந்ததாக அந்தக் குடிசையிலிருந்த மலையகப் பெண் தெரிவித்தாள்.கொஞ்சம் நீரருந்தினேன். புறப்பட ஆயத்தமான போது ‘ஒங்கள இங்கனயே வெச்சிக்கிறச் சொன்னாங்கம்மா  அவிங்க வருவாங்களாம்’ என்றாள் அந்தப்பெண்.எனக்குள் எந்த உணர்ச்சியுமில்லை. தலை மட்டும் விறைத்துப்போயிருந்தது. கொஞ்ச நேரத்தில் ‘பிக்கப்’ வாகனம் வந்தது. அவர்கள் எனக்கு உணவு கொண்டுவந்தார்கள். நான் உண்ண மறுத்துவிட்டேன். மிதிவண்டியையும் என்னையும் ஏற்றிக்கொண்டு சென்று எமது முகாமில் இறக்கிவிட்டனர். இந்தச் செய்தியை எங்களது முகாமில் யாரும் அறிந்திருக்கவில்லை என அவர்களுடைய நடவடிக்கையிலறிந்தேன்.

அடுத்த வாரம் அறிக்கை கொண்டுசெல்லும் போராளிகளுடன் நானும் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். தலைமைச் செயலராக கண்ணன் இருந்தார். நான் நீதி கேட்டு மதுரைக்குச் சென்ற கண்ணகியாகியிருந்தேன். இரண்டு தினங்களில் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா வந்தார் .

“உங்களது மகன் பயிற்சிக்காக துணுக்காயில் இருந்தபோது விமானத் தாக்குதல் நடந்தது,  அவனை பயிற்சியிலிருப்போருக்கான உணவுத் தயாரிப்பில் விட்டிருந்தோம். இறந்தவர்களின் விபரங்களை உடனடியாகத் திரட்ட முடியவில்லை. வேறிடங்களையும் சரிபார்க்க வேண்டியிருந்தது, அதனால் நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்” என்றார் மாத்தையா.

அந்தக்கணத்தில் என்மனம் ஒரு நிலைக்கு வந்தது. என்னுள் இருந்த கலக்கம் விடைபெற நிதானத்துக்கு வந்தேன். இல்லாத ஒன்றுக்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக அலைந்ததை எண்ணிப்பார்த்தேன், அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்தவரை நான் உங்களுடைய இக்கேள்விக்கு சரியாகத்தான் பதிலளித்திருக்கிறேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையும்போது உங்களுக்கு வயதென்ன?

நான் இயக்கத்தில் இணைந்த போது எனக்கு வயது நாற்பத்து மூன்று. நான் படிப்படியாக இலக்கு வைத்தே இயக்கத்துக்குள் உள்ளிளுக்கப்பட்டேன் என்று லெப்.கேணல் நளாயினி கூறியிருக்கிறாள். அது ஒரு பெரிய கதை.

இயக்கத்தில் எத்தகைய பணிகளைச் செய்தீர்கள்?

ஆரம்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கமர்த்தப்பட்டேன். வைத்திய வசதியற்ற பகுதியாதலால் இரண்டு பிரசவங்களும் பார்த்தேன். பாம்பால் தீண்டப்பட்ட இருவரைக் காப்பாற்றினேன். தரப்பட்ட மருந்துகளை மக்களுக்கு வழங்கினேன். எனது வீடு பணியிடத்திலிருந்து இருபத்துநான்கு மைல்கள் தொலைவில் இருந்தது. எனவே நான் அருகிலிருந்த முகாமில் தங்கி வேலை செய்தேன். சனிக்கிழமை எனது ஊருக்கு மிதிவண்டியில் போய் ஞாயிறு மாலை திரும்பி வருவேன். மாலையில் முகாமில் போராளிகளுக்கு கல்வியில் உதவினேன். அறிக்கை தயாரிப்பதிலும் தொகுப்பதிலும் உதவினேன்.பிரதேசங்கள் பற்றியும் கடந்த கால அரசியல்பற்றியும் பேசுவோம். எனது வேலை நேரத்தில் எழுத நிறைய நேரம் கிடைத்தது.  கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினேன். அப்போது  சர்வதேச மகளிர் தின நிகழ்வொன்று புளியங்குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  அதற்குத் தலைமை தாங்க ஓர் ஆசிரியையை  ஒழுங்கு செய்திருந்தார்கள். அக்காலத்தில் புலிகளுடன் இணைந்து வேலை செய்தால் வவுனியா நகரத்துக்குள் போக முடியாது. போனால் திரும்ப முடியாது.  பலர் நகரத்துக்குள் போய் நின்றுவிட்டனர். இந்த ஆசிரியையும் அப்படிப் போய்விட்டார். இறுதியாக உப்புக்குச் சப்பாணியாக  முகாமிலேயே தங்கி வேலைசெய்த என்னைத் தலைமை தாங்கக் கேட்டார்கள். நான் சரியென்று போனேன். பேச்சு.. அதுவும் பெண்ணியம் சார்ந்தது. நாங்க ‘மைக்’கப் புடிச்சா விடமாட்டமே!அன்றிலிருந்து வவுனியா மாவட்டப் பொதுக்கூட்டங்களிலெல்லாம் நானும் ஒரு கோயில் மேளமாகப் பரிணமித்தேன். அத்தோடு மேடை நாடகங்களை எழுதித் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன். நான் எழுதியதெல்லாம் ஒரு உரப்பையை நிறைத்து நிமிர்ந்தாலும் எதுவும் பிரசுரமாகவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உயர்மட்டப் போராளிகள் அவற்றைக் கேட்டு வாங்கிப் படிப்பார்கள். பாராட்டுவார்கள், பின்பு என்னிடம் தந்துவிட்டுப்போவார்கள். அப்போது சுதந்திரப்பறவைகள், விடுதலைப்புலிகள், வெளிச்சம் போன்ற பத்திரிகைகள் வன்னியில் பெரிதாகக் கால்பதிக்கவில்லை.  தினசரியான ‘ஈழநாதம்’ அது வெளிவந்த மறுநாள் மாலையில்தான் எமக்குக் கிடைக்கும். பாவம் அதுவும் கிளாலிக் கடல் கடந்து வரவேண்டுமல்லவா. இவைகளுக்கு எழுதப் போதிய எழுத்தாளர்கள் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார்கள். அப்படித் தப்பித் தவறி மட்டு – அம்பாறை – திருமலை – வன்னி எழுத்துகள் வருமாயின் அவற்றை அந்தந்தப் பகுதி தளபதிகள் கொண்டுசென்று கொடுத்திருப்பார்கள்.

இயக்கத்தில் பயிற்சியெடுக்காத சீருடையணிந்த போராளிகள் பலரிருந்தனர்.  சீருடையணியாத போராளிகளும் இருந்தனர். ஆனையிறவுச் சமரின்போது அவசர வேலைகளுக்காக இவர்கள் களமிறக்கி விடப்பட்டனர் . உடல்களை அடக்கம் செய்ய, வீரச்சாவு வீடுகளுக்குப் போக, புதிய போராளிகளை இணைக்க, மருத்துவ நிலையங்களில் சேவையாற்ற என்றவாறாக இவர்கள் செயற்பட்டனர். இவர்கள் முகாமில் போராளிகளாகக் கணிக்கப்படவில்லை. இவர்கள் பொறுப்பாளரால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள். எந்த விடயத்திலும் முன்வந்து பேசவோ கருத்துச் சொல்லவோ முடியவில்லை. இத்தகைய சீர்கேடுகளைக் கண்டபின் நான் ஆயுதப் பயிற்சியெடுத்து முழுப் போராளியாக மாற முடிவு செய்தேன். தவைருக்கு எழுதிப் போட்டேன். பயிற்சி முகாமுக்குப் போனேன்.

ஆயுதப் பயிற்சி முகாம்கள் குறித்து ‘புதியதோர் உலகம்’ கோவிந்தன் எழுதியதையும் ‘கொரில்லா’ ஷோபாசக்தி எழுதியிருந்தவற்றையும் நான் அப்போது படித்திருக்கவில்லை. உண்மையிலேயே பயிற்சி முகாம் என்பது சாவதற்காகப் பயிற்சி எடுக்கும் இடமே. அங்கு நடக்கும் ஓட்டு மாட்டு , தில்லுமுல்லு, அதுஇது எல்லாவற்றையும் வென்று பயிற்சியை முடித்தேன். தாய்மை என உலகால் புகழப்படும் பெண்களை  அதிகாரம்  எப்படிப் பேய்களாக மாற்றியிருந்தது என்பதை அங்கு கண்டுகொண்டேன்.

கடின உழைப்பாளியான எனக்கு பயிற்சி ஒரு தூசு! பயிற்சிக்காலத்தில் – சொன்னால் நம்பமாட்டீங்க –  ‘லாஸ்ட் ரண் பாஸ்ட்’ என்றால் நூற்றைம்பது பேராவது என்னை விரட்டிக்கொண்டு வருவார்கள். அதேயளவில் விட்டத்தில் மந்தி போல் சுழன்று வருவேன். துப்பாக்கிப் பயிற்சியில் ‘டச்’ அடிக்கையில் ‘புல்புல்’லாகக் குறிபார்த்து அடித்து ஒரு ரைபிளைப் பரிசாகப் பெற்றேன்.

பயிற்சி முடிந்து அரசியற்துறைக்கு அனுப்பப்பட்டதும் முதல் வேலையாக அந்தத் துப்பாக்கியை எடுத்து பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டேன். பிறகு  நூலகத்தில் எனக்கொரு வேலை போட்டார்கள். குடிகாரனுக்கு சாராயக்கடையில வேலைகிடைத்த மாதிரியாகிவிட்டது. வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தேன். லெனின், மாவோ, சே குவேரா, ஹிட்லர், ஹோசிமின், பிடல் கஸ்ரோ என எல்லோரையும் படித்தேன். படிக்கக் கூடாதவை படிக்கக் கூடியவை எதையும் விடவில்லை. மொழிபெயர்ப்புகள், விருது பெற்ற நூல்கள் முடிந்ததா.. ஆங்கில நாவல்களிலும் தாவினேன். ஆச்சரியம், அற்புதம் மிகுந்த உலகில் சஞ்சரித்தேன். யாழ் பல்கலைக் கழகத்தில் ‘இதழியல் வெளிவாரி கற்கைநெறி’யைக் கற்றேன். உளவியலையும் அதேபோல கற்றேன்.  நான் திரும்பவும் வன்னிக்கு அனுப்பப்படவில்லை. எனக்கென காத்திரமான வேலை எதுவும் தரப்படவில்லை. ஒருதடவை நானே  பொறுப்பாளரிடம் வலியச் சென்று “என்னை வீட்டுக்கு அனுப்புங்கள், இங்கே சும்மா இருப்பதைக்காட்டிலும் நான் அங்கே தோட்ட வேலைகள் செய்வேன்” என்றேன்.

அப்போதெல்லாம்  எங்காவது தாக்குதலுக்குத் திட்டமிடும்போது, தாக்குதலில் இழக்கப் போகும் போராளிகளின் வெற்றிடத்தை  நிரப்ப புதிய போராளிகளைத் திரட்டப் புலிகளின் நிர்வாகங்கள் அனைத்தும் களத்தில் இறக்கிவிடப்படும். புலிகளின் குரல், நிதர்சனம் தொலைக்காட்சி, நீதி – நிர்வாக சேவை, பொருண்மிய மேம்பாடு அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம்,  மாணவர் அமைப்பு, மாவீரர் பணிமணை என அனைத்துப் பிரிவுகளும் களமிறங்கும்.பெரிய பொறுப்பாளர்களுடன் இரண்டு – மூன்று பேச்சாளர்கள் பிரச்சாரத்துக்கு இறக்கிவிடப்படுவார்கள். வீதி நாடகங்கள்,  தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளி வீச்சு, ஆங்கிலப் படங்களை ஒளிபரப்புதல் எனத் தமக்குரிய வட்டங்களில் தீவிர பிரச்சாரத்தைச் செய்து இயக்கத்துக்கு ஆட்களைத் திரட்டுவார்கள். மகளிர் அமைப்பிலிருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பேச்சாளரைக் கொடுத்தாக வேண்டும். 1993-ல் பூநகரித் தாக்குதலுக்கான திட்டம் என நினைக்கிறேன், செப்ரம்பர் மாதம் பிரச்சாரம் ஆரம்பமாகியது. மகளிர் அமைப்பு சார்பில் யாழ் வட்டம் செல்ல வேண்டியவளாக தேன்மொழி இருந்தாள். தேன்மொழி, மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகத்தின் மகள். யாழ் மாவட்ட பதில் பொறுப்பாளராக அவள் இருந்தாள். ஒக்ரோபர் 10-ம் தேதி வரயிருந்த தமிழீழ மகளிர் நாளான ‘மாலதி நினைவு தின’த்திற்கு முன் கோப்பாய் -கைதடி வீதியில், மாலதி உயிர்விட்ட இடத்தில் ஒரு நினைவுத் தூபியைக் கட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவளால் போக முடியவில்லை. மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளரிடம் வந்து “வேறு யாரையாவது அனுப்புங்கள் அக்கா, நான்  இரண்டு மூன்று நாட்களிற்குள் வந்திருவேன்” என்று கெஞ்சினாள். அனைவரையும் பிரித்துக் கொடுத்தாயிற்றே. இப்போது நான் மட்டுமே நூலகத்தின் புத்தகங்களோடு தனித்திருந்தேன். என்னைப் பார்த்து “போறீங்களா.. ஒரு இரண்டு நாளைக்குத்தான்..” என்று பொறுப்பாளர் கேட்டாள். சரி என்று  என் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு யாழ் வட்டச் செயலகத்திற்குச் சென்றேன். அங்கே இயக்கத்தின் மிகச் சில புத்திஜீவிகளில் ஒருவரான டொமினிக் இருந்தார். அப்போது யாழ்ப்பாணத்தில் என்னை யாருக்கும் தெரியாது.எனக்கும் எல்லோருடைய பெயர்களைத் தெரிந்திருந்தாலும் ஆட்களைத் தெரியாது. டொமினிக் நகைச்சுவையாக எதையும் நெற்றிக்கு நேரே சொல்லக் கூடியவர். என்னுடன் பேச்சாளராக அம்பாறை மாவட்ட மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் வின்சன் வந்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மட்டு – அம்பாறைப் போராளிகள் பின்வாங்கி வந்து யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாளில் தங்கியிருந்தனர். அப்படிப் பின்வாங்கி வந்தவர் தான் வின்சன். மிரட்சியோடு அமர்ந்திருந்தார்.

டொமினிக் வந்தார். “எங்கே மகளிர் தரப்புப் பேச்சாளர்?” என்றார்.

“அன்ரி வந்திருக்கா” என்றனர் பெண்கள். என்னை திரும்பிப் பார்த்த டொமினிக் உடனேயே “ஏன் தேன்மொழி வரவில்லை, இந்தக் கிழவியை வச்சு நான் என்ன செய்கிறது?” என்றார்.

“இரண்டு நாளைக்குத் தானாம் அண்ணை, அங்கால அக்கா வந்திடுவா” என்றாள் என்னை அழைத்து வந்தவள்.

“ரவிராஜண்ணை ஒருக்கா ரிகர்சல் பாருங்க, இதுகள் என்னக் கவுட்டுப் போடுங்கள் போல” என்றார் டொமினிக். அப்போது அவருக்கு ‘வோக்கி’ அழைப்பொன்று வந்தது. எழுந்து போய் விட்டார். நான் ஏதோ பேருக்கு பேச வேண்டிய விடயங்களைக் கூறினேன். சும்மா எப்படியாம் பேசிக் காட்டுவது!

மாலையில் நாச்சிமார் கோயிலடியில் யாழ்ப்பாணத்தின் எனது முதல் அரங்கு. எந்த அறிமுகமும் இல்லாமல் ஒலிவாங்கியைக் கையில் எடுத்தேன். இருபது நிமிடங்கள் ‘சிச்சுவேசன் ரிப்போர்ட்’ . முடிவு உங்கள் கையில் என்று விட்டு வெளியே வந்தேன். நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்… ரவிராஜ் என்னிடம் ஓடி வந்தார். “உங்களை டொமினிக் அண்ணை கூப்பிடுகிறார்” என்றார். நான் சற்று யோசித்தவாறே அவரைப் பின் தொடர்ந்தேன். ஓர் அழகிய சிவப்புக் காரின் பின் கதவைத் திறந்து “ஏறுங்கள்” என்றார். நான் உள்ளே ஏறினேன். உள்ளே டொமினிக் அமர்ந்திருந்தார். “அன்ரீ நீங்கள் ஆர் அன்ரீ.. இனி எனக்கு தேன்மொழி  வேண்டாம். உங்கள விட ஏலாது” என்றார். அன்று முதல் நான் பேச்சாளர், மக்களைக் கவர்ந்த பேச்சாளர்!

பிரச்சாரக் காலம் முடிந்தவுடன் பழையபடி புத்தகங்களுடன் கொட்டாவி விட ஆரம்பித்தேன். சோம்பல் மிகுந்தால் சும்மா யாழ் வீதிகளில் சுற்றிவருவேன். ஒருநாள் நல்லூர் வீதியால் வரும்போது வின்சனைக் கண்டேன். என்னை வரவேற்ற அவர் தனது அலுவலகத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். அது ‘புலிகளின் குரல்’ செயலகம். “இங்கே நான் பதில் பொறுப்பில் இருக்கிறேன் அன்ரி, நீங்கள் இவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்கள்.. உங்களால் எழுதவும் முடியும் கதை, நாடகம் என்று ஏதாவது எழுதித் தாருங்கள்” என்றார். நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த ஒரு சிறுகதையைக் கொடுத்தேன். அது ஒலிபரப்பாகும் நாளை எனக்கு வின்சன் கூறினார். காத்திருந்து கேட்டேன். அதுவே வெளிவந்த எனது முதற்படைப்பு. எனக்குள் ஆனந்தம் சிறகடித்தது. பின்னர் நாட்டார் பாடல் நிகழ்ச்சிக்கு உண்மையான நாட்டார் பாடலுடன் பிரதி கொடுத்தேன். மெட்டுகள் சிதைந்து விடாமல் நானே பாடினேன். ‘புலிகளின் குரல்’ ஒட்டிக் கொண்டது. வாரம் ஒரு பிரதி கொடுத்தேன். அக்காலப் போக்கில் சுதந்திரப்பறவைகளோ,ஈழநாதமோ, வெளிச்சமோ என்னை மட்டுமல்ல வெளி மாவட்டப் போராளிகளையே ஏற்கவில்லை. புலிகளின் குரல் வன்னிக்கு இடம் பெயர்ந்த பின் ‘குயிலோசை’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்னை அந்த நிகழ்ச்சியை முழுமையாகத் தயாரிக்கப் பழக்கினார். ‘பறை’ என்ற பெயரில் பறை பற்றி நான் நடத்திய நிகழ்ச்சி தலைவரை எட்டியது. தலைவருடைய விருப்பத்தின்படி அந்த நிகழ்ச்சி எனது பொறுப்பில் விடப்பட்டது. நானும் அத்துறையில் படித்தும் கேட்டும் என் அறிவை விருத்தி செய்தேன். பிரச்சாரத்தின்போது அறிமுகமான நிர்வாக சேவைக்கெனப் பயிற்றப்பட்ட போராளிகள் என்னுடன் நெருங்கிப் பழகினார்கள் . ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களைச் சந்திக்கப்போவேன். அருகிலேயே கல்விக்குழுப் போராளிகள் இருந்தார்கள். அதன் பொறுப்பில் ஆர்த்தி இருந்தாள். ஆங்கில நாவல்களைத் தந்து படிக்கச் செய்தாள்.  ‘ஈவ்’ என்ற ஆங்கில நாவலைப் படித்தபோது எனக்கும் சில விடயங்களை எழுத வேண்டும் போல் இருந்தது. என் இளைய மகனை நான் பிரசவித்த தருணம் பற்றி எழுதத் தொடங்கினேன்.

நாற்பது தாள் குறிப்பேட்டில் எனக்கு வலி கண்ட இடத்தில் ஆரம்பித்தேன். அது இப்படி வளருமென்று நான் நினைத்திருக்கவில்லை. எழுதியெழுதித் தாள்கள் தீர்ந்தன. அதைக் கொண்டுபோய் ஆர்த்தியிடம்  படிக்கக் கொடுத்தேன். படித்தவள் “தொடர்ந்து எழுது மனிசி,  உன்னால ஏலும்” என்று ஊக்குவித்தாள். ஒரு நுற்றியிருபது பக்கக் குறிப்பேடும் தந்தாள் . அடுத்தநாள் தொடர்ந்தேன். மூன்று தினங்களில் குறிப்பேடு தீர்ந்தது. ஆர்த்தியிடமிருந்து பெற்று நிர்வாக சேவை மாணவிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாசித்தனர். தொடர்ந்தேன், குறிப்பேடுகளை அவர்கள்தான் வாங்கித் தந்தார்கள். சுமார் இருபத்தெட்டு நாட்களில் நாவல் முடிந்தது. கட்டிப் பெட்டியில் போட்டேன்.

வன்னியிலிருந்து நாவல் வெளிவருவது அவ்வளவு சுலபமல்ல என்பதை ‘இனி வானம் வெளிச்சிரும்’ எனக்குக் கற்றுத் தந்தது. சுமார் ஏழு வருடங்கள் பல கைகளுக்கு மாறி, பாதி அடியோடு தொலைந்ததன் பின்பாக தலைவரிடம் கொடுத்த பிரதியை அவர் பத்திரமாகத் திருப்பித் தந்தார். அதனால்தான் அது உயிர் பெற்றது.  வன்னியைச் சேர்ந்த ஒருவரே அதைப் பதிப்பித்தும் உதவினார்.

இயக்கத்தில் பிரதேச வேறுபாடுகளைப் பார்க்காத ஒரே நபர் தலைவர் மட்டும்தான். இயக்கத்திற்குள் பிரதேச வேறுபாடு பேசுவது  கடுமையான கண்டனத்துக்குரியது, ஆதலால் யாரும் அதைப் பேசமாட்டார்கள்..ஆனால் பார்ப்பார்கள்.

புத்தகத்தை வவுனியாவில்தான் வெளியிட்டோம். அது சமாதான காலம். எனது நாவலுக்கு மாகாண சபையினதும் அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினதும் முதற்பரிசு கிடைத்தது. நான் பரிசைப்  பெறச் சென்றபோது என்னுடன் யாரும் வரவில்லை.

‘எப்படி தமிழ்க்கவி அந்தப் பரிசைப் பெறலாம்’ என்றொரு கேள்வியையும் சிலர் கேட்டனர். ஆனாலும் மேலும் சில போராளிகளின் ஆக்கங்கள் வெளியில் பரிசுகளை வென்றபோது கமுக்கமாகப் போய் பெற்றுக்கொண்டனர்.

என்னை யாரும் எழுது என்று கேட்காத போதும் நான் எழுதினேன். ‘இனி வானம் வெளிச்சிரும்’ வெளியாகிய பின்பு ‘இருள் இனி விலகும்’ என்ற நாவலை எழுதினேன். நாட்டார் இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்பட்டபின் நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டேன்.

‘சூரியக்கதிர்’ நடவடிக்கைக்குப்பின் வன்னிக்குள் நாங்கள் வந்ததோடு யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களின் பங்கு குறைந்தது. வன்னி –  மட்டு – அம்பாறை – திருமலை எழுத்தாளர்கள் பத்திரிகைகளிலும்  வானொலியிலும் கால்பதித்து முன்னேறினர். நான் வானொலிக்கு எழுதிவந்தாலும் ‘குயிலோசை’ நிகழ்ச்சியை நானே தயாரிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவானது. நான் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஏராளமான இரசிகர்களைத் தேடிக்கொண்டேன். வானொலி நாடகப் போட்டியில் முதற்பரிசை வென்றேன். ஒளிவீச்சிலும் எனக்கு பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. நா.யோகேந்திரநாதன் ‘உயிர்த்தெழுகை’ என்ற தொடர் நாடகத்தை எழுதி இயக்கினார். அதில் ‘குஞ்சாத்தை’ என்ற பாத்திரம் எனக்குக் கிடைத்தது. வன்னி வழக்குத் தமிழில் வக்கணையாகவும் பழமொழிகளுடனும்  சுயமாகப் பேசும் வாய்ப்பை அந்த நாடகம் எனக்குக் கொடுத்தது. அந்தப் பாத்திரம் என் நடிப்புக்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

மகளிர் அமைப்பினர் எனக்கென எந்த வேலையும் தரவில்லையாயினும் எனது வேலைகளில் குறுக்கிடவும் இல்லை. புலிகளின் குரலில் வாரம் மூன்று நிகழ்ச்சிகளை எழுதித் தயாரித்தேன். புதன் ‘பார்வை’ சஞ்சிகை, வியாழன் ‘தீச்சுடர்’ பெண்களுக்கான நிகழ்ச்சி, சனி  ‘குயிலோசை’ நாட்டார் பாடல்களுடனானது. இந்த நிகழ்சியொன்றைக் கேட்ட தலைவர் நிலையத்துக்கு ஒரு நேயர் கடிதம் அனுப்பியிருந்தார். குறித்த நிகழ்ச்சியைத் தான் மிகவும் ரசித்ததாகவும் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்டோரைப் பாராட்டிக் கவுரவிக்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார் . பொறுப்பாளர் அக்கடிதத்தை எல்லோருக்கும் வாசித்துக் காட்டினார். நிலையத்தில் சிலர் பாராட்டினார்கள், சிலர் வெளிப்படையாகவே “நாங்கள் இத்தனை வருடங்களாக உழைக்கிறோம் எம்மை யாரும் இப்படிப் பாராட்டவில்லையே” என அங்கலாய்த்தனர்.

நிதர்சனத்தின் புதிய பயிற்சிக் கல்லூரி ஆரம்பமானது. ஆரம்ப விழாவுக்கு நானும் போனேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செய்வதால் அதன் நுட்பங்களை அறிய விரும்பினேன். விழாவுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் வந்திருந்தார். “நானும் ஒலி-ஒளி படிக்க விரும்புகிறேன்” என்றேன். “தாராளமாக, படிக்க விரும்பும் எவருக்கும் அனுமதியுண்டு எனத் தலைவரே கூறியுள்ளார்” என்றார்.  நான் வகுப்பில் இணைந்தேன். வானொலியில் ஒலிப்பதிவு செய்யும் நேரத்தை மாற்றி இரவில் போட்டேன். பிரதிகளை அதிகாலையிலும் மதிய உணவு நேரத்திலும் எழுதினேன்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தொடங்கியது. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தனது நிகழ்ச்சியில் என்னை நடித்துத் தரும்படி கேட்டார். எனது முகத்தை நான் ‘கமரா’வுக்குக் காட்டுவதில்லை. சின்ன வயதிலிருந்தே எனது முக லாவண்யம் குறித்து எனக்குத் தாழ்வுணர்ச்சி உண்டு. ஆனால் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் விடுவதாயில்லை. தயக்கத்தோடு போனேன். என்பங்கை ஒரே ‘டேக்’கில் முடித்துவிட்டேன். முதல் நிகழ்ச்சியாதலால் பார்வையாளர்களும் அதிகமாக இருந்தனர். ‘எடிட்டிங்’ முடிந்ததும் கூப்பிட்டுக் காட்டினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் தயாரிப்பாளர் மாரடைப்பால் இறந்து போனார். அந்த நிகழ்ச்சியைக் கைவிட விரும்பாத பொறுப்பாளர் என்னிடம் அந்த நிகழ்ச்சியைப் பொறுப்பேற்குமாறு கேட்டார். எப்போதோ நான் கற்ற ஒலி -ஒளி பாடநெறிகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ‘அம்பலம் ‘ என்ற அந்த நிகழ்ச்சி எனது தயாரிப்பில் உலகம் முழுவதும் போனது. வெளிநாடுகளிலிருந்து வருவோர் என்னை ‘அம்பலம் அன்ரீ’ என அழைக்குமளவுக்கு அந்நிகழ்ச்சி பிரசித்தமானது.

முதலிரு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும்போது லைட்ஸ், வாகனம் எனக் கொண்டுவந்து  தொலைக்காட்சி நிலையத்தினர் படப்பிடிப்பில் அமர்க்களப்படுத்தினர். அதன்பிறகு பகல் வெளிச்சத்தில் ஒரேயொரு கமெராவை வைத்துக்கொண்டு  மூன்று மணித்தியாலத்துக்குள் படப்பிடிப்பை முடித்தேன். லொக்கேசனுக்கும் அலையவில்லை. வேலியடைப்பு, சூடடிப்பு, பணியாரச்சூடு, கூரை வேய்தல், வேலிச்சண்டை,  வைக்கோற்கத்தைக் கட்டு, அரிவுவெட்டு என மண்வாசனையைக் கலந்து விட்டேன் .போட்டி, பொறாமை, இடையீடு,கேலி,எச்சரிக்கை எல்லாம் உள்ளிருந்தே வந்தன . அவற்றை எனது உழைப்பால் கடந்தேன்

ஒருகட்டத்தில் ‘புலிகளின் குரல்’ நிறுவனத்தில் பொறுப்பாளருடைய உறவினர்கள் ஊதியம் பெறும் ஊழியர்களாக வந்து சேர்ந்தனர். அவர்கள் என்னைப் போதியளவு அவமானப்படுத்தத் தவறவில்லை. அதுகுறித்து நான் பொறுப்பாளருக்கு அறிவித்தும் பயனில்லை. எனது ஒன்பது வருட ‘புலிகளின் குரல்’ சேவையைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டேன். அய்ந்து வருடங்கள் அந்த எல்லைக்கே போகவில்லை. என்னை யாரும் கட்டுப்படுத்தவில்லை. கட்டளையிடவுமில்லை. நான் இயக்கத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் அவர்கள் கேட்ட வேலைகளைச் செய்து கொடுத்தேன். எனது தன்மானத்துக்கு இழுக்கு வரும்போது விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

தமிழீழ சட்டக் கல்லூரி, வெளிவாரி கற்கைநெறியை ஆரம்பித்தது. கட்டணம்தான். நான் அரசியற்துறை நிதிப் பொறுப்பாளரிடம் போய், சட்டம் படிக்க அய்நூறு ரூபா கேட்டேன். அவன் “நானும் சட்டம் படிக்கிறேன் எனக்கும் சேர்த்துக்கட்டு” என்று ஆயிரம் ரூபா தந்தான். மாதக் கட்டணம் ஆயிரத்து அய்நூறு ரூபா தந்தார்கள். இடையிடையே சண்டை, சமர், இடப்பெயர்வு எல்லாம் கடந்து அய்ந்து ஆண்டுகள் தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்று சட்டவாளராக வெளியே வந்தேன்.

மகளிர் அமைப்பினர் என்னை எட்டி நின்றே பார்த்தனர். எனது வேலைகள் எனது விருப்பப்படி நடந்தாலும் செலவுகளை சு.ப.தமிழ்ச்செல்வனின் நிதிப்பிரிவே செய்தது. நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தார்கள். மின்சாரமில்லாத ஊரில் எனக்கு மின்சாரம் போட்டுக்கூடத் தந்தார்கள் எரிமலை, புலிகளின் குரல், ஐ.பி.சி, உலகத் தமிழர், ஈழமுரசு, சுதந்திரப்பறவைகள், நாற்று, தெகல்கா போன்ற பத்திரிகைகளில் எனது ஆக்கங்களோ பேட்டிகளோ வந்தன. சிலவற்றில் தொடர்களும் வந்தன. ஈழநாதம் எனக்கொரு பத்தியை ஒதுக்கியது. ‘காரசாரம்’ என்ற பெயரில் இயக்கத்தின் பலதுறைப் பொறுப்பாளர்களுக்கு மறைமுகமாகச் சூடு வைக்கவும் மக்களுடைய பிரச்சனைகளை வெளியே கொண்டுவரவும் முடிந்தது. நான் யாருக்கும் அஞ்சவில்லை! தலைவர் எனக்கு ஆதரவாக நின்றார்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட்டங்களுக்கு அழைப்பும் அறிவுறுத்தல்களும் போனதையும் அறிவேன். ‘தமிழ்க்கவி அன்ரியா.. அவ அறிஞ்சா பேப்பரில வரும் கவனம்’ என்ற கருத்து பொதுவாக நிலவியது. மக்களுக்கு எதிராக இயக்கப் பொறுப்பாளர்கள் அநீதி இழைத்தபோதெல்லாம் அதைத் தலைவர்வரை கொண்டுசென்று தீர்வு பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அது இன்றைக்கும் எனக்குப் பெருமையாக உள்ளது. அதே மரியாதையுடன இன்றும் என்னை மக்கள் நடத்துகிறார்கள்.

கிளிநொச்சியில் கணினி கற்கை நெறியை ஒரு நிறுவனம் 2007-ல் ஆரம்பித்தது. மாதம் மூவாயிரத்து அய்நூறு ரூபா நிதிப்பொறுப்பாளரிடம் வாங்கிக்கொண்டு போய் கட்டிப் படித்தேன். எனக்கு இயக்கத்தில் குடும்பக் கொடுப்பனவு இல்லை. உதவிப்பணமாக நாலாயிரம் ரூபா தருவார்கள். இயக்கத்தில் என்ன பணி செய்தீர்கள் என்றால் இதுதான் பதில். இதெல்லாம் பணியா என்பதில் எனக்கொரு சந்தேகமுமுண்டு.

ஒரு படைப்பாளியாக சுயமாகத் தடைகளற்று இயங்குவதற்கு உங்களது இயக்க வாழ்வு சாதகமாக இருந்ததா?

சுதந்திரமாக எல்லாவற்றையும் எழுத முடியவில்லை.போராளியல்லாதவர்களாலும்தான் சுதந்திரமாக எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. நான் என் எண்ணத்துக்கு வெளிப் பத்திரிகைகளுக்கு  எழுத முடியாது,எழுதக்கூடாது. எல்லா வெளிப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எமக்குத் தடை. சினிமாப் படங்கள் முற்றாகத் தடையிலிருந்தன. சினிமாப் பாடல்களைத் திருமணமாகாத போராளிகள் கேட்கக்கூடாது. எல்லாப் பத்திரிகைகளையும் படிக்கப் பாக்கியம் கிடைத்தவர்கள் ஊடகத்துறைப் பொறுப்பாளர்களே. ஏனைய துறைப் பொறுப்பாளர்களுக்கும் சிலது வரும். உங்களுக்குத் தெரியுமோ ‘கொரில்லா’ என்ற நாவலை ஒரு பொறுப்பாளருக்காகக் காத்திருக்கையில் அவருடைய மேசையிலிருந்து எடுத்து திருட்டுத்தனமாகத்தான் படித்தேன்.

கட்டையில் நீண்ட கயிறுகொண்டு பிணைக்கப்பட்ட மாடுகள் கயிறு எட்டும் வரை சுற்றிச் சுற்றி மேய்வது போல குண்டுச்சட்டிக்குள் குதிரையோடினோம். களமுனைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும், மக்களை யுத்தத்தை நோக்கியே வைத்திருக்கவும் எழுதினோம். சுதந்திரமடைந்த நாடுகள் பற்றியும் களமுனைகளில் எமது போராளிகள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் எழுதினோம். அவையும் தணிக்கை என்ற பெயரில் உயிர்நிலை கிள்ளப்படாமல் வெளியே வரவேண்டுமே என்ற திகிலில் எப்போதும் இருப்போம். எழுத்துத்துறையின் ஆரம்ப அறிவேயின்றி, வாசிப்புப் பழக்கமேயில்லாதவர்கள் எனது பிரதியை தணிக்கை செய்வதை என்னால் தாங்கவே முடிவதில்லை. இது எல்லா ஊடகத்துறைகளிலும் இருந்தது. சில இடங்களில் எனது பிரதியை நிராகரித்துவிட்டு அதிலிருந்து தகவல்களைத் திருடி தனது நிகழ்ச்சில் சேர்த்த தணிக்கையாளர்களை அப்படியே விட முடியாமல் நிகழ்ச்சியையே இடைநிறுத்திவிட்டு தலைவர் மட்டத்தில் விசாரணைக்குப் போட்டிருக்கிறேன். அதில் வெற்றியும் பெற்றேன். என்பிரதியில் எனது சம்மதமின்றி எந்தத் திருத்தமும் செய்வதில்லை என்ற வாக்குறுதியையும் பெற்றிருந்தேன்.

குருதி, கல்லறை, ஆயுதம்,வீரச்சாவு,எதிரி, பதுங்குகுழி, களம், பொருளாதாரத்தடை, அரச பயங்கரவாதம், போராளி, இலக்கு, ஈகம்,கையிலேந்திய கருவி.. இவற்றில் ஒன்றோ பலதோ இல்லாமல் கதையில்லை கட்டுரையில்லை கவிதையில்லை! நாங்களும் அதற்குள்தான் எழுதினோம். கொஞ்சம் மிகையாகப் பெண்ணியமும் பேசினோம். நான் இன்னும் கொஞ்சம் மேலே போய் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளையும் எழுதினேன். இவற்றைக் கடந்து இருந்த யதார்த்தம் எமக்குப் புரியாமலில்லை. ஆனாலும் செக்கு மாடுகள்போலச் சுற்றிச் சுற்றி வந்தோம்.

புலிகள் இயக்கத்தில் இருந்த சக படைப்பாளிகளுடனான உங்களது உறவு எப்படியிருந்தது?

படைப்பாளிகள் என்னை மிக மரியாதையுடன் அணுகினார்கள். என்னுடைய எழுத்து நடையும் மொழி நடையும் பாரம்பரிய பேச்சு வழக்குகளைக் கொண்ட தனித்துவமானது. அதை யாராலும் வசப்படுத்த முடியவில்லை. எனது பார்வையும் நான் தேர்ந்தெடுக்கும் விடயங்களும் வேறு கோணங்களில் இருந்தன. அதனால் என்னை எல்லோரும் வியந்தனர். யோசனை கேட்பார்கள். சுதந்திரப்பறவையில் எனக்கொரு பத்தி ஒதுக்குமளவுக்கு மனம் மாறினார்கள். ‘நாற்று’ என்ற சஞ்சிகையில் ‘பெண்களும் சட்டமும்’ என்ற பகுதியை தொடர்ந்து எழுதினேன். ஒருபோதும் அவர்கள் என்னோடு முரண்பட்டதில்லை. சிலவேளைகளில் வேடிக்கை செய்வார்கள். “அன்ரி தாறுமாறாகக் குத்தி எழுதுகிறாய், கவனம் மாட்டப் போகிறாய்” என்பார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?

1991-ம் வருடம் நான் தலைவரை முதன் முதலில் பார்த்தேன். முதலாவது மகளிர் மாநாடு யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் நடந்து முடிய எம்மில் இருபது பேர்கள் தலைவரைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டோம். வல்வெட்டித்துறையின் ஒரு வீட்டு விறாந்தையில் அச் சந்திப்பு நிகழ்ந்தது. தலைவருக்கு மிக அருகில் எனக்கு இருக்கை கிடைத்தது. மூன்று தினங்களும் மாநாட்டில் நடந்த நிகழ்ச்சிகளை தலைவர் ஒளிநாடாவில் பார்த்திருந்தார். எம்மை அழைத்துச் சென்றவர்கள் தேவையற்ற வகையில் பேச வேண்டாம் என எம்மிடம் கூறியே கூட்டிச் சென்றிருந்தனர். இயக்க முகாமும் எனக்குப் புதிது. மகாராஜாக்கள் பாணியிலான பாதுகாப்பு ஒழுங்குகள் சற்றே பயத்தை ஏற்படுத்தினாலும்,  மாத்தையா தலைவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார் என்ற வதந்தி இந்திய இராணுவத்தால் பரப்பப்பட்டு அதை நம்பியும் நம்பாமலும் மக்கள் இருந்த காலமது. புன்னகையோடு இரு மெய்ப் பாதுகாவலர்களுடன் வந்து எம்முன்னே  கைக்கெட்டும் தொலைவில் தலைவர் அமர்ந்த அந்தக் காட்சி இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. “பிறகு …சொல்லுங்கோ…” என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் – நாம் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் – அவரே சொல்லி முடித்தார். பத்து நிமிடங்கள்தான் சந்திப்பு எனக் கூறியிருந்தனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். தனித்தனிப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு விடைபெற்றபோது எம்மை இயக்கத்தில் இணைந்துகொள்ளும்படி தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் நாங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டோம்.

நான்கு வருடங்களின் பின்பாக ‘புலிகளின் குரல்’ ஆண்டு விழாவில் அவரிடமிருந்து பரிசு பெற்றேன். ஒரு வருடத்துக்குள் நாட்டாரியல் சார்ந்த ஒரு ஆக்கத்துக்காக மீண்டும் அவரிடமிருந்து ஒரு விருது கிடைத்தது. அவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பார்வையாளராக இருந்தேன் .

எனது வளர்ச்சி இயக்கத்திற்குள் பலருக்குப் பிடிக்கவில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளில் தெரிந்தது. மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு முக்கிய சந்திப்பு நடந்தது. இது நிகழ்ச்சி பற்றிய ஆலோசனைக் கூட்டம்தான். தலைவர் பங்கு கொண்டிருந்தார் . ஆனால் என்னை  இந்தக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மகளிர் அணியில் நான் முக்கிய பங்காற்றும் நிதர்சனப் பிரிவினர் முழுமையாகச் சென்றிருந்தனர். அரசியற்துறை மகளிரும் சென்றிருந்தனர். நான் இந்த இரண்டு அணியிலும் இல்லாமலாக்கப்பட்டேன். எனக்கு அசாத்தியக் கோபம்தான். பழிவாங்கக் காத்திருந்தேன். இயக்கப் போராளிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் வேலையை தலைமைச் செயலகம் செய்துகொண்டிருந்தது. அனைவரையும் பதிவு செய்த பின்பு எனது பெயர் விட்டுப் போயிருந்ததால் தலைமைச் செயலகத்தினர், என்னை அழைத்துவரும்படி அரசியற்துறையிடம் கேட்டனர். ஒரு போராளி என்னிடம் வந்தாள். நான் வீட்டிலிருந்துதானே வேலை செய்தேன். வீட்டுக்கு வந்தாள். நான் முகாமுக்குப் போனேன். வந்திருந்த தலைமைச் செயலகத்தினர் கேள்விக் கொத்தின்படி எந்தப்பிரிவு என்று கேட்டனர். நானும் ‘அரசியற்துறை மகளிர் பிரிவு’ என்றேன். அவள் ‘மகளிர் பிரிவு’ என்று எழுதினாள். நான் அதில் ஒப்பமிட மறுத்து விட்டேன். பிரச்சினை தலைவரிடம் போனது. நான் எனது தரப்பு நியாயத்தைச் சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு என்னை சு.ப.தமிழ்ச்செல்வனுக்குக் கீழ் பதிவு செய்யும்படி கூறிவிட்டார் .

தலைவரிடம் நான் அளப்பரிய மரியாதை வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன், வைத்திருப்பேன். வெறும் வாயை மெல்லுவோர் கூறுவது போல அவர் தன்னிச்சையாக ஒருபோதும் முடிவுகளை எடுப்பவரல்ல. அவர் ஒரு மத்திய குழுவை வைத்திருந்தார். முக்கியமான முடிவுகளைக் கலந்து ஆலோசித்தே எடுத்தார். எனக்கு நன்கு தெரியும்… ஒருவருக்கு மரணதண்டனை வழங்குவது பற்றி அவர் தனியே முடிவு எடுப்பதில்லை. எல்லாப் பொறுப்பாளர்களும் கூடிய சபையில் பிரச்சினை பேசப்பட்டு என்ன தண்டனை வழங்கலாம் என்று கேட்கப்பட்டு பெரும்பான்மையினரின் முடிவே தீர்ப்பாகியது. இயக்கத்தின் ஆரம்ப காதலர்களை சுட்டுக்கொல்வதாக முடிவெடுத்த பெண்கள் அது பற்றிப் பெருமையாகப் பேசியதை நான் அருகிலிருந்து கேட்டிருக்கிறேன். பின்நாளில் அந்தப் பெண்களும் காதலித்தே திருமணம் செய்தார்கள். தலைவர் காதலித்த போது அவருக்கெதிராக முடிவெடுக்க யாராலும் முடியவில்லை. அதனால்தான் இயக்கத்தில் காதல் வாழ்ந்தது.

எந்தப் பிரச்சினைக்கும் குழுவாக முடிவு எடுத்துவிட்டு ‘தலைவர் முடிவெடுத்தார்’ என்பதுதான் இயக்கத்தின் பொதுவான வழக்கு.

ஒரு பிரச்சினையில் ஒரு நல்ல முடிவை சிறுபிள்ளை எடுத்திருந்தால்கூட அதைத் தலைவர் வரவேற்பார். இது நான் கண்ட உண்மை. ஒருதடவை, பாலியல் வன்புணர்வுக்காக நீதிமன்றம் ஒருவனுக்கு மரண தண்டனை வழங்கியது. அந்த விசாரணைக் கோப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்வதற்காகத் தலைவரிடம் போனது. அந்த கேஸ் விபரங்களை முற்றாகப் படிக்கிற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தபின், சம்பவங்களிலுள்ள முரண்பாடுகளின்படி அங்கே ஒரு குற்றம் நடந்திருக்கவில்லை எனத் தனிப்பட தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதி அவருடைய கைக்குக் கிடைக்கும்படி அனுப்பினேன். அதன்பின் சில நாட்களில் அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான்.  வேறுகோணத்தில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டது .

புலிகளின் குரலில் நான் நடத்திய பிரதான நிகழ்ச்சியான ‘குயிலோசை’ நிகழ்ச்சியை நேரமுள்ள போதேல்லாம் தலைவர் கேட்பார். ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி நிலையத்துக்கு நேயர் கடிதம் எழுதியிருந்தார். சில நாட்களின் பின் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கினார். என்னையும் அப்பாடலைப் பாடிய தவமலரையும் தனியே அழைத்து உரையாடினார். அப்போது எனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் தான் தவறவிடுவதேயில்லை என மனம் திறந்து சொன்னார். ஒரு முறை ‘ரீடர்ஸ் டைஜஸ்டி’ல் வந்த ஒரு சீனக்கதையை  மொழி பெயர்த்து ஒலிபரப்பினேன். மூன்று வாரங்கள் தொடராக வந்தது. ஒவ்வொரு வாரமும் அதை விடாமல் கேட்டது மட்டுமன்றி அந்த வாரம் நடந்த பொறுப்பாளர்களுக்கான கூட்டத்திலும் அது குறித்துப் பாராட்டிப் பேசினாராம். ‘புலிகளின் குரல்’ பொறுப்பாளர்  அதன்பிறகே அதன் ஒலிபரப்பை போட்டுக் கேட்டார்.

தனது ஒவ்வொரு போராளிமீதும் எவ்வளவு கண்டிப்பை வைத்திருந்தாரோ அவ்வளவு கரிசனையும் கவனமும் வைத்திருப்பார். ஒரு கூட்டத்தில் எமது தளபதி விதுசாவிடம் “ஏன் பிள்ளைகளுக்கு தலைக்கு எண்ணெய் இல்லையா? முகத்தை அலம்பி நல்ல ஆடைகளை அணிவதில்லையா? நான் பிள்ளைகளை வீதியில் பார்க்கும்போது வாட்டமாகப் போகிறார்கள், களமுனைகளில் நின்றால் பரவாயில்லை அங்கு இவற்றை செய்ய முடியாது, மக்களிடையே நிற்பவர்கள், திரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டாமா” என்றார்.

என்னிடம் “இந்தப் பாரம்பரியக் கலைகளை பெரிய அளவில் தயாரித்து ஆவணப்படுத்துங்கள் என்ன செலவானாலும் பரவாயில்லை” என்றார். அவர் அப்பால் போனதும் அவற்றை நிறைவேற்ற வேண்டிய துறைப் பொறுப்பாளர்கள் அசட்டையாக விட்டுவிடுவார்கள். வெளிப்பூச்சுக்கு தலைவருடைய ஆணையை உடனே செய்வதாகக் கூறுவார்கள். இதை நான் பலமுறை, பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன், கேட்டுமிருக்கிறேன். உயர்மட்டப் போராளிகள்  சிலர் தலைவருடைய கொள்கைக்கு மாறாக நடப்பதை அஞ்சாமல் சுட்டிக் காட்டியுமிருக்கிறேன். மிகச்சில விசுவாசிகள் தலைவரிடும் ஆணைக்கு தம்முயிர் கொடுத்துமிருக்கிறார்கள்.

“குமரிமுதல் இமயம்வரை

கொடிநாட்டிப் புகழ் கண்ட

கொற்றவர் கண்ட தமிழின்

நற்றவம்தான் எங்கள் நலமான வளமான

வல்வை நகர் தந்த வீரன்.

தலைவனிடும் ஆணைக்குத் தளராது களமாடி

தலைசிதறும் வீரமறவர் உளமார தம்மோடு

உணர்வாகக் கொண்டதோ தமிழீழமென்ற கனவு

என்று கவிதையெழுதி அதைக் கவியரங்கில் வாசித்திருக்கிறேன். இதன்பிறகே ஈழநாதத்தில் பத்தியெழுதும் பணி கிடைத்தது. 1997-ல் யாழ்ப்பாணம் சென்ற ‘பிஸ்டல்’ குழுவினருக்கு  கிறிஸ்துமஸ் விழாவுக்காக நாடகம் பழக்கினேன். அப்போது என் இரண்டாவது நாவலுக்காக அவர்களுடனேயே தங்கியிருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். கரும்புலிகளின் ஆண் – பெண் குழுவினரும் நிகழ்ச்சிகளைக் கொண்டுவந்திருந்தார்கள்.

முக்கிய தளபதிகளுடன் தலைவர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். எனது நிகழ்ச்சியை நாட்டுக் கூத்துப் பாணியில் அமைத்திருந்தேன். கருப்பொருள் தற்காலத்துக்கானது. பாத்திரமேற்றவர்களும் சிறப்பாகவே செய்தார்கள்.  ஆயினுமென்ன! அது சில பெண்போராளிகளைக் கவரவில்லை. நான் மேடையைவிட்டு இறங்கி வரும்போது முகத்தைக் கடுப்பாக்கி வைத்துக்கொண்ட போராளியொருத்தி “அண்ணைக்குப் போடுற நிகழ்ச்சியே உது? ச்சீக்.. பட்டிக்காடுமாதிரி” என்றாள். நான் இடிந்து போனேன். தலை குனிந்தவாறே போய் முன்வரிசையில் தரையில் அமர்ந்திருந்த போராளிகளுடன் அமர்ந்தேன். நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. அப்போது தணிகைச்செல்வியிடம் விதுசா “நிகழ்ச்சிய முதல் போட்டுப் பாக்கயில்லையா ? உவளவை என்ன பாத்தவளவை?” எனக் கண்டித்ததும் எனது நிகழ்ச்சி பற்றித்தான். அவள் அப்பால் நகர்ந்ததும் என்னருகே வந்த தணிகைச்செல்வி “விடு அன்ரீ கவலைப்படாதை, உங்களுக்குத் திருப்திதானே” என்று ஆறுதல்கூற, பெண்களை விலக்கிக்கொண்டு உள்ளே வந்த  அரசியற்துறை பதில் பொறுப்பாளர் தங்கன் “எங்கே ? தமிழ்க்கவி அன்ரி எங்கே” என்றவாறே வர நான் முன்னே சென்றேன் “அன்ரீ வாங்க அண்ணை கூட்டிவரட்டாம்” என்றான். நான் அவனைத் தொடர்ந்தேன், வெளியே ஒரு தென்னை மரத்தடியில் தலைவர் நின்றார் . “வணக்கம்” என்றார் நான் பதிலுக்கு “வணக்கம்” என்றேன் . “எனக்கு நல்லாப் பிடிச்சுது அக்கா உங்கட நிகழ்ச்சி. இப்பிடித்தான் எங்கட நிகழ்ச்சியள் இருக்கோணும். எங்கட பாரம்பரியங்கள விட்டிட்டு …என்ன கலை.  நவீன நாடகங்கள்ள பூடகமாகக் கருத்துச் சொல்லுறது சரியா இருக்கலாம், ஆனா இப்ப உள்ள நிலையில உதையெல்லாம் ஆர் குந்தியிருந்து யோசிக்கப்போறாங்கள். கருத்தை முகத்தில அறையிற மாதிரிச் சொன்னியள் நல்ல கரு”  என்று ஆரம்பித்து  நீண்ட நேரம் அது பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். மண்டபம் உணவுக்காகத் தயார் செய்யப்பட்டபின் வந்து கூப்பிட்டார்கள். தலைவர் என்னிடம் “அக்கா பன்னெண்டு மணியாகுது சாப்பிடுவம் வாங்க” என்றார். நான் தொடர்ந்தேன். பிள்ளைகளுக்கு மத்தியில் தலைவருக்கான மேசை இருந்தது. என்னையும் தன்னோடு அமரும்படி கேட்டுக்கொண்டார். அவருடன் அமர்ந்தேன். இந்த சமபந்தி போஜனம் பல தளபதிகளுக்குக் கூட வாய்த்ததில்லை. நான் யார்? என்னால் அவருக்கு ஆகப்போவது என்ன? அந்தஸ்துப் பாராது, யாரிடமிருந்தாலும் திறமைகளை ஊக்குவிக்கும் அவரது பண்பு எனக்குப் பிடித்தது.

அதன் பிறகு மேலும் இரு தடவைகள் அவரிடம் எனது பாடலுக்காகவும் எழுத்துக்காகவும் பரிசு பெற்றேன். அவ் வருடத்துடன் மகளிர் அரசியல் துறையினரின் பொறுப்பாளர் மாற்றம் நடந்தது. இடையிடையே பெரும் சமர்களும் நடந்தன. எனக்கும் பரப்புரை, நிகழ்ச்சித் தயாரிப்புகள் எனப் பணிகள் அதிகரித்தன. முள்ளியவளையில் இருந்து வட்டக்கச்சிக்கு ஒரு பேட்டி எடுப்பதற்காக மிதிவண்டியில் சென்று விட்டு திரும்பும்போது களைப்பினால் ஒரு மர நிழலில் நின்றேன். அப்போது கேணல் சங்கருடன் அவ்வழியே வந்த தலைவர் “எங்கத்தையால?” என்றார். நான் “வட்டக்கச்சிக்கு” என்றேன். “மிதிவண்டியிலா” என்றுவிட்டுப் போனார். ஒரு வாரத்தின் பின்பாக தமிழ்ச்செல்வன் என்னை அழைத்து “அக்கா மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியுமா…” என்றார். தெரியும் என்றேன். அரதப்பழசான ‘எக்கணேபர்’ உந்துருளியைத் தந்தார். அதை வைத்துக்கொண்டு அவிவேக பூரண குருவும் சீடர்களும் குதிரையோடு மாரடித்த மாதிரி படாத பாடெல்லாம் பட்டு இயலாத இடத்தில் போட்டு விட்டு வந்துவிடுவேன். பின்னர் ஒரு நல்ல ‘எம்.டி. நைன்ரி’ உந்துருளி கிடைத்தது. முழங்காவில் தொடக்கம் முல்லைத்தீவு வரை வட்டக்கண்டல் தொடக்கம் தாளையடி வரை ஓடியோடி வேலை செய்தேன். அதை வட்டுவாகல்வரை கொண்டு வந்தேன்.

இந்த நிலையில், இயக்கத்தில் இருந்த என் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். இதன்பின் என் சம்பந்தி அவர்களுடைய வீட்டுக்கு நான் அடிக்கடி போக வேண்டிய சந்தர்ப்பங்களும் தலைவரின் மனைவியார் மதிவதனியுடனான நெருக்கமும் ஏற்பட்டது. எல்லாத் தளபதிகளின் மனைவியருடனும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் எனது நிகழ்ச்சிகள் பெரிய மட்டங்களில் இரசிக்கப்படுவதையும், தலைவர் எல்லோரிடமும் அதைக் கேட்டீர்களா? இதைப் பார்த்தீர்களா? என வினவுவதையும் அறிந்தேன். அநேகமாக ஈழநாதம் பத்தியான ‘காரசாரம்’ ஏதாவது ஒரு துறையைக் கிண்டல் செய்துவிடும். அது அவர்களைத்தான் என்று என்னிடம் பேச முடியாதபடி மக்களை மையப்படுத்தி எழுதிவிடுவேன். இப்படி கிளிநொச்சி வைத்தியசாலைக் கட்டடம் பற்றி நான் எழுதிய ஆக்கம் வெளிவந்த மறுநாள் மதிவதனி என்னிடம் “சிரித்ததில் ஆளுக்கு புரையேறிவிட்டது” என்றார்.

நான் தலைவருடன் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு. நேருக்கு நேர் வாதத்திலும் ஈடுபட்டு மற்றப் போராளிகளிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அவர் சிறுபிள்ளை போல வாதித்துவிட்டு பின்பு புன்னகையோடு இருந்துவிடுவார். “ஆற்ற துறையப்பா எப்பிடிச் சமாளிக்கிறியள்?” என்று வேடிக்கையாகக் கூறுவார். வெளியிலே அவரைப்பற்றி ஏற்படுத்தப்பட்டிருந்தது பெரும் மாயை என்றும் அது சரியல்ல என்றும் கூறுவார். ஒரு பாடலில் ‘முருகனுக்கே அவன் நிகரானவன்’ என்ற வரி இடம் பெற்றிருந்தது. தலைவர் மிகுந்த வேதனையுடன் ‘இதெல்லாம் என்ன பேத்தல், இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டாம்’ என்றார்.  யார் கேட்டார்கள்! எந்த ஒலிநாடாவிலும் அவரைப்பற்றி ஒரு பாடல் கட்டாயம் போட்டார்கள். அவரிடமிருந்தது புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் என்ற பிரமை எனக்கும் உண்டு. அவர் காதலித்த பின்பாக காதல் சரி என்றது போல,  அரசனுக்குப் பின் இளவரசன் என்ற கொள்கையும், முன் வழுக்கையை மறைக்க அவர் தொப்பி அணியவேண்டி இருந்தபோது அனைத்துப் போராளிகளுக்கும் தொப்பி சீருடையின் ஒரு பகுதியானது எனவும் நான் நினைக்கிறேன். அவரும் சாதாரண மனிதர்தானே.

அவரை நாத்திகர் என்று சொல்வதுண்டு. அவர் எல்லா மதங்களையும் சமமாகப் பார்த்தார். மக்களிடையே போராளிகள் மதம் சார்ந்து அடையாளப்படுத்தப்படக் கூடாது என்றார். ஒருதடவை, போராளிகள் கோயில்களுக்குச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் எனப் பொதுக்குழுவில் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது “இது நடைமுறைச் சாத்தியமாகாது” எனத் தலைவர் கூறினார். ஆனால் பலர் உறுதியாக நின்றதால் போராளிகளை இப்படி ஒரு வாக்குறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைப்பதாக முடிவெடுத்தனர். ஆனால் நான் அவையிலேயே மறுத்துவிட்டேன்.  ஏன் மறுக்கிறீர்கள்? எனக் கேட்டார் ஒருவர். “எனக்கு பிரபாகரனை எழுபத்தேழாம் ஆண்டுக்குப் பின்தான் தெரியும், பிள்ளையாரை பிறந்ததிலிருந்தே தெரியுமே” என்றேன். அந்த ஒப்பந்தத்தில் நானும் புதுவை இரத்தினதுரையும் ஒப்பமிடவில்லை.

இறுதிக் காலத்தில் தலைவர் தப்பிச் செல்ல பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதும், மக்களுக்கு நடப்பதே எனக்கும் என்று களத்திலேயே நின்றவர் அவர். ‘வெற்றி அல்லது வீர மரணம்’  என்ற அவருடை வீரம் போற்றப்பட வேண்டியதுதான். இப்படி ஒரு தலைவரின் கீழ் நின்றோம் என்பதில் எனக்குப் பெருமைதான். அவர் எல்லோரும் நினைப்பது போல தெய்வமில்லை. ஆசாபாசங்களுள்ள சராசரி மனித குணங்களுடன் கூடிய வீரன். அவ்வளவுதான்!

புலிகளது போராட்டம் வெற்றி பெறும் என்ற உங்களது நம்பிக்கை எப்போது தகர்ந்தது?

புலிகள் போரிட்டு நாட்டைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதை  நான் இயக்கத்தில் இணைவதற்கு முன்பே என்னால் உணர முடிந்தது. தலைவரே ஒரு தடவை “நாம் இப்படித் தாக்குதல்களைச் செய்து நாட்டை அடையமுடியாது. அது ஒரு பேச்சுவார்த்தையில் தான் முடியும். நமது தாக்குதல்கள் மூலம் ஒரு நெருக்கடியை அரசாங்கத்துக்குக் கொடுத்து அதைப் பேச்சுவார்த்தைக்கு இழுப்பதே எனது நோக்கம்” என்றார்.

நீங்களே நினைத்துப் பாருங்கள்.. ஒட்டுமொத்தத் தமிழர்களில் ஈழத்தில் இருந்தவர்கள் அனைவரும் போரிட முன்வரவில்லை. போருக்கான நிதியைக்கூடப் பலவந்தமாகத்தான் திரட்ட முடிந்தது. போராளிகள் பலரது உறவினர்கள்  அநேகமாக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பொருளாதார வசதியற்றவர்களே நாட்டில் இருந்தனர். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். வல்வெட்டியில் என் சகோதரி இருந்தாள். அவளிற்கு இளந்தாரிப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு மிக அருகே திலீபன் நினைவு உண்ணாவிரதப் பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கே மத்தியானப் பொழுதுக்கான பேச்சாளராக நான் போயிருந்தேன். நேரமிருந்ததால் என் சகோதரி வீட்டுக்கும் போனேன். அங்கே பிள்ளைகள் விளையாடப் புறப்பட்டார்கள். “ஏன் இங்கே திலீபன் நிகழ்வு நடக்குதே, இவங்கள் போக மாட்டாங்களா ?” என்று கேட்டேன். “சீக்.. அதுக்க நாலு பதினெட்டுச் சாதியும் வந்திருக்கும் இவங்கள் போமாட்டாங்கள்” என்றாள் சகோதரி. அந்தக் கிராமத்தின் மேட்டுக்குடிகள் எவரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. என்றாலும்  நடந்த போரைக் காரணம் சொல்லி -பயன்படுத்தி – அவர்கள் இன்று வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். ஆக ஏராளமான மக்கள் புலிகளின் ஆட்சியை விரும்பவில்லை என்பது கண்கூடு.

‘சூரியக்கதிர்’ நடவடிக்கையின்போது நான் மானிப்பாயில் நின்றிருந்தேன். மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளிலிருந்த மக்கள் புலிகளோடு வெளியேற முனையவில்லை. அவர்களது விருப்பத்துக்கு மாறாகவே தென்மராட்சி நோக்கித் திருப்பி விடப்பட்டனர். சில யாழ்ப்பாண வர்த்தகர்கள் தமது கடைப் பொருட்களை சுழிபுரம், சண்டிலிப்பாய் நோக்கி நகர்த்தினர்.  இருந்துமென்ன அவர்கள் அனைவரும் வலிந்து தென்மராட்சிக்கு இயக்கத்தால் திருப்பிவிடப்பட்டனர். அப்போது, புலிகளுக்கு மக்கள் அனைவரும் தம்முடன் வந்து விட்டார்கள் என்ற பிரச்சாரத்துக்கு அது உதவினாலும் தென்மராட்சியிலிருந்து மக்கள் வடமராட்சி நோக்கி நகர்ந்த போது நிலைமை மாற்றமடைந்தது. இலவசப் படகுச் சேவை வழங்கி, மக்களை வன்னிக்கு நகர்த்த பெரும் பரப்புரை செய்யவேண்டியதாயிற்று. போராளிக் குடும்பங்களும் ஆதரவாளர்களும் தாமாக முன்வந்து வன்னிக்கு நகர்ந்தனர். இப்படியே வெளியே போய்விடலாம் என்ற குறிக்கோளுடன் நகர்ந்தவர்களும் உண்டு. ஏதோ ஒரு இக்கட்டு, இராணுவத்தைப் பற்றிய பயம் இவைதான் புலிகளைச் சகித்துக்கொண்டிருக்க வைத்தது. மேலும் தேசப்பற்றும் யார் குத்தியாவது அரிசியாக வேண்டுமென்ற நப்பாசையும் புலிகள்மீது மக்கள் நம்பிக்கை வைக்கக் காரணங்களாக அமைந்தன.

ஆயினும் வெளியே தெரிந்த புலிகளின் பிரமாண்ட பிம்பம்போல உள்ளே நிலைமைகள் இருக்கவில்லை. இவர்கள் வெல்லப்போவதில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் நிலையே இருந்தது. தலைவருடன் முன்னரங்கக் காவல் நிலைகளில் சாவை எதிர்பார்த்து எதிரிக்காகக் காத்து நின்றவர்களை மட்டுமே போராளிகள் எனக் கருத முடிந்தது. அதேவேளையில் இயக்கத்தின் உள்ளே அதிகாரப்போட்டி, பொறாமை ,தகடுவைத்தல் (கோள்சொல்லுதல்), காத்து இறக்குதல் (பதவி பறிப்பது), அதிகாரமுள்ளவருக்கு யாரையாவது பிடிக்காது போனால்  பிடிக்காதவரை முன்னரங்கக் காவல் நிலைக்கு அனுப்புவது எனப் பல சீர்கேடுகள் நிறைந்து கிடந்தன.

சக போராளிகளைக் குறித்துக் கேலி பேசினார்கள். அழகிய, படித்த, வேலைபார்க்கும் மனைவியையே தேடினார்கள். போராளிகள் சாதி பார்க்கக் கூடாது என்பதெல்லாம் போதனைக்கு மட்டுமே. கல்யாணத்திற்குத் தாலியும் கூறையும் வாங்கிய பின்பும் சாதியால் தடைப்பட்ட போராளிகளின் திருமணங்கள் உண்டு. இவற்றுக்கெல்லாம் இயக்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. “நான் சாதி பாக்கேல்ல …அதுக்காக ஆகவும் அடியில பாத்திடாதையுங்கோ” என்றவர்களும் முப்பத்தைந்து வயது கடந்தும் பதினெட்டு வயதுப் பெண் தேடியவர்களும் இயக்கத்தின் பெரும் தலைகளே. இவர்களை வைத்துக்கொண்டா சமதர்ம தமிழீழம் உருவாக்க முடியும்! தமக்கெனச் சொத்துச் சேர்க்கவும் தனிப்பட்ட வாழ்க்கையை வளப்படுத்தவும் அலைந்தோர் அதிகம்.

இவர்களிடையே அப்பழுக்கற்ற தியாக சிந்தையுடன் தமது சொத்துகளையும் இயக்கத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டு, திருமணமும் செய்யாமல் வீரச்சாவடைந்தவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக எல்லாம் தேசப்பற்றில் நடக்கவுமில்லை. தேசப்பற்றில்லாமல் நடக்கவுமில்லை.

1991-ல் விடுதலைப் புலிகள் வசம் ஒரு பெரு நிலப்பரப்பு வந்தது எப்படி? போரிட்டு வென்றதா என்ன! இந்திய இராணுவத்தின் பிடி விலகியபோது பிரேமதாஸவுடனான  சங்காத்தத்தில் கிடைத்த பரிசு அது. இக்காலப் பகுதியில் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இவர்களுடைய கைகளில் போடப்பட்டனர். அழிக்க முடியாத கறை படிந்த வரலாற்றைப் புலிகள் உருவாக்கினர். இவர்கள் நமது பொது எதிரியைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. தமது சொந்த இனத்தை அழிப்பதில் மும்முரமாக இயங்கினர். அது சிங்கள அரசை மகிழ்விக்கவும் இருந்திருக்கலாம். இந்தியப் படையின் துணையுடன் பலவந்தமாகப் பிடித்துச்செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள்  புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமன்னிப்புத் தருவோம் என்ற வாக்குறுதியுடன் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்களும் கொல்லப்பட்டனர். மற்றைய இயக்கங்கள் நாட்டை விட்டோடிவிட அந்த இயக்கங்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானவர்கள் ஆண்கள் – பெண்கள் என்ற பேதங்களின்றிப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இதெல்லாம் கடந்து இவர்கள் போரிட்டு வென்ற சிறு நிலங்களைக்கூட வெகு நாட்களுக்கு இவர்களால் தக்க வைக்க முடியவில்லை. நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணத்தை வெறும் நாற்பதாயிரம் இராணுவத்தினரே தக்க வைத்திருந்தனர். பின் எப்படி இவர்கள் வெல்வார்கள் என நம்பலாம். நான் ஐம்பத்தைந்து வருடங்களாக நிகழ்வுகளை அலசிக்கொண்டிருப்பவள். நான் சிறுபிள்ளையில்லையே. ஒரு கட்டத்துக்குப்பின் பல முடிவுகளைத் தப்புத் தப்பாகவே புலிகள் எடுத்தனர்.”அதெல்லாம் இறுதி முடிவு தலைவர்தான்” என்பார்கள். ஆனால் அவர் எந்த முடிவையும் தனியாக எடுப்பதில்லை என்பது பலருக்கும் தெரியும். அவருக்கே இந்த நம்பிக்கை இல்லை. நடந்த போராட்டம் எங்கள் இருப்புக்காக மட்டுமே.

இறுதி யுத்தத்தின் போக்கு மாற்றப்படலாம் , அமெரிக்கக் கப்பல் வரும், இந்தியாவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் போரில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றெல்லாம் அப்போது வன்னியில் நிலவிய நம்பிக்கைகளை நீங்களும் கொண்டிருந்தீர்களா?

இல்லை! அது ரொம்ப சின்ன பிள்ளைத்தனமான நம்பிக்கை. அது எப்படிங்க, அமெரிக்கா தனக்கு இம்மியளவும் நன்மை பெற முடியாத தமிழீழ மண்ணுக்காக மூச்சுவிடும். இந்தியாவில் உள்ள தமிழர்களே எத்தனையோ விதமாக ஒடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் நகரங்கள் கேரள, கர்னாடக , வடநாட்டார்களின் முதலீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன. தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும் தமிழக மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமா என்ன! போதாததற்கு மீனவர் பிரச்சினை வேறு. ‘தன்ரை குண்டி அம்மணமாம், தங்கச்சி குண்டிக்கு பச்சைவடம் கேக்குதாம்’ என்றொரு பழமொழி உண்டு. இலங்கைத் தமிழருக்காக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஒற்றைத் துரும்புகூட அனுதாபத்தோடு அசைவதில்லை. ஈழத் தமிழர்களான நாங்கள் அவர்களுக்கு வர்த்தகமும் அரசியலும் கலையும் வளர்க்க உதவுகிறோம். அவ்வளவுதான். நீண்டகாலமாக தமிழகத்து அகதி முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களது நிலை பற்றி நான் அறிவேன். அங்கிருந்து கள்ளதோணிகளில்  மீண்டும் இலங்கைக்குள் வந்த மக்களை நான் அப்போதே சந்தித்துப் பேசியிருக்கிறேன். சில ஆக்கங்களைக் கூட நான் எழுதினேன். ஆனால் எழுதியதைப் பிரசுரிக்கக் கொடுத்தபோது “நாங்கள் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம், இந்த நிலையில் இதைப் பிரசுரிக்கக் கூடது” என மறுத்துவிட்டனர். இலவு காத்த கிளியாக நான் இல்லை. எனக்கு அந்த நம்பிக்கையிருக்கவில்லை.

புலிகள், ஆயுதங்களை மவுனிப்பதாகச் சொல்லி தங்களது சரணடைவை அறிவித்த போது உங்களது மனநிலை எப்படியிருந்தது. போராளிகளது கூட்டு இலட்சியம் தகர்ந்த தருணமல்லவா?

புலிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்கால் கடந்துதான் செய்யப்பட்டன.  திரு.பா.நடேசனிடமோ, புலித்தேவனிடமோ மீதமுள்ள புலிகளின் தொகையோ,பட்டியலோ இல்லை. அப்படியொன்றைத் தயாரிக்க அவர்கள் முனைந்தாலும் அது உயிருடன் இருந்த முக்கியமானவர்களை மட்டுமே அடக்கியிருக்கும். ‘புலிகள் அனைவரும் வந்து அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்’ என ஒலிபெருக்கியில் அறிவித்தாலும் அப்படியான அலுவலகம் எதுவுமிருக்கவில்லை. புலிகள் ஒன்றுகூடவும் முடியவில்லை.

நான் பிள்ளைகளுடன் வட்டுவாகல் வந்தேன். அவர்களுடனேயே ஓமந்தை வந்தேன். ஓமந்தையில் ஆயிரக்கணக்கானவர்கள் அறிவித்தல் மூலம் பிரிக்கப்பட்டனர். ‘இயக்க உறுப்பினர்கள் – ஒருநாள் இருந்தவரோ பல ஆண்டுகள் இருந்தவரோ – பதிவு செய்துவிட்டுப் போங்கள். யாராவது பதிவு செய்யாமல் மக்களுடன் சென்று அங்கிருந்து நாம் பிடித்தால் நீங்கள் கைதி. நீங்களாகப் பதிவு செய்தால் பொதுமன்னிப்பு வழங்குவோம்’ என அறிவித்தனர். என்னை நன்கு தெரிந்த போராளிகளே இராணுவத் தரப்பில் நின்று இதனை அறிவித்தனர். அவர்களில் ஒருவன் என்னிடம் வந்து “ஆரோடை வந்தனீங்கள் அன்ரி?” என்றான். “நான் பிள்ளையோடை வந்தனான்” என்றேன்.போராளிகள் பதிவுக்காக ஒரு புறமும் பொதுமக்கள் பதிவுக்காக ஒரு புறமுமிருந்தது. இயக்கத்தில் சம்பளத்துக்கு வேலை செய்தோருக்கும் போராளிக் குடும்பங்களிற்கும் பதிவு செய்யத் தனிப் பகுதிகள். என்னை அழைத்தவனுடைய பெயர் சுரேஷ். பழைய போராளி. என்னையும் என்னுடன் இருந்த காயமடைந்த போராளிகளையும் பதிவு செய்யும் இடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனான். எனக்கு முன்பே ஏராளமான போராளிகள் அங்கிருந்தனர்.நாம் வாயால் சொன்ன விபரங்களை எழுதினார்கள். நிழற்படங்கள் எடுத்தனர். பின்னர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பினர். வேறெந்தப் பிரச்சினையுமில்லை. மனநிலை வெறுமையாக இருந்தது. அவ்வளவுதான்.

ஊழிக்காலம்நாவலுக்கு இலங்கையில் எவ்வகையான வரவேற்பு இருக்கிறது?

‘ஊழிக்காலம்’ இங்கு வெளியிடப்படவில்லை. மிகச் சில நண்பர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவந்தனர். வன்னியில் சம்பவத்துள் இருந்து வந்தவர்கள் நால்வர் படித்துவிட்டு, ” ஒவ்வொரு சம்பவத்துக்கும் பிறகு இதுதான் வருமென்று தெரிகிறதே,  நடந்தது எதையும் தவறவிடாமல் எழுதி இருக்கிறீங்க.. மற்றும்படி ‘திறில்’ இல்லை” என்றனர். சம்பவத்தில் சம்பந்தப்படாத ஒருவர் ஒரு பிரதியை இரவல் வாங்கிக்கொண்டு சென்றார். அதை நான்கு நண்பர்கள் படித்தனர். பன்னிரெண்டு கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்து மிதிவண்டியில் வந்து பாராட்டினார்கள். கட்டாயம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமை என்றார்கள். என்னை கண்டதிலேயே பரவசப்பட்டார்கள். சிங்கள அன்பர் ஒருவர் வாங்கிச் சென்றார். தான் மிகவும் ஆறுதலாக வாசித்ததாகவும் தாங்கமுடியவில்லை என்றும் சொன்னார். இதை மொழிபெயர்க்க கொடுக்கலாமா என்றும் கேட்டார்.  என்னை முன்னமே தெரிந்தவர்தான். சாதாரணமாகப் பழகியவர். இப்போது மிகுந்த மரியாதை கொடுக்கிறார். எனக்கு அது இடைஞ்சலாயிருக்கிறது என்றாலும் கேட்பதாயில்லை. அவர் ஒரு புலனாய்வாளர் கூட. நான் ஒரு பத்துப் புத்தகங்கள்தான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்தேன். வெளியிடும் அல்லது அறிமுகம் செய்யும் அளவுக்கு என்னிடம் பணபலம் இல்லை.

இராணுவக் கட்டுபாட்டுப் பகுதிக்கு தப்பி செல்ல முயன்ற மக்களை புலிகள் சுட்டுக் கொன்றது, புலிகள் பலவந்தமாக சிறுவர்களை இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றது குறித்தெல்லாம் நீங்கள் விபரமாக எழுதியிருப்பது தமிழ்த் தேசியத் தரப்புகளிடம் உங்களுக்கு கடுமையான விமர்சனத்தைப் பெற்றுத் தந்திருக்குமல்லவா?

உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது. மூன்றரை இலட்சம்  மக்களைச் சாட்சியாக வைத்து நடந்தவைகளை நான் எழுதுகிறேன். அதில் பொய்யாக ஒரு சொல் எழுத முடியுமா? அல்லது நடந்தவற்றைத் திரித்துத்தான் எழுத முடியுமா? இன்னுமொரு காலம் இதுபோன்ற போராட்டம் வரும். அந்தக் காலத்தில் எதுவெல்லாம் மக்களிடமிருந்து புலிகளைப் பிரித்தது என்பதை வருங்காலச் சந்ததி அறிய வேண்டும் என நான் நினைத்தேன். ‘மக்கள் கடல் போன்றவர்கள், அதில் வாழும் மீன்கள் போன்றவர்கள் புலிகள்’  எனத் தலைவர் வாக்கு ஒன்றிருக்கிறது. இரவல்தான்,  இது சீன விடுதலைப் போர்க் காலத்தே மாவோ சொன்னது. பிறகு எப்படி இந்தக் கடல் மாறியது. சந்திக்குச் சந்தி இராணுவம் நின்றபோது பத்துப் பதினைந்து இளைஞர்களோடு தொடங்கின இயக்கம்தானே. அப்போது காப்பாற்றிய மக்கள் ஏன் இப்போது இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார்கள்? இதை நான் எனது நாவலில் விசாரணை செய்கின்றேன்.

நமது வெற்றிகளையே கொண்டாடிப் பழகியவர்கள், தமது தவறுகளைச் சுட்டி காட்டியவர்களை இயக்கத்தை விட்டே துரத்தியவர்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிறீர்களா? என்னுடைய மனநினையில் இன்னும் ஏராளமான போராளிகள் இருக்கின்றனர் என்பதும், அவர்கள் இதைத் தம்மால் செய்ய முடியவில்லை என அங்கலாய்த்தனர் என்பதும் உண்மை. எதிர்ப்பு என் வீட்டிலேயே கிளம்பியது.”இயக்கத்தில் இருந்த நீ இதை எப்படி எழுதலாம்” என்று கதையில் நாயகனாய் வரும் என் பேரன் தினேஸ் கேட்டான். பழைய தளபதிகளின் மனைவிகள் கேட்டனர். இவர்களுக்கு எல்லாம் நான் அளித்த பதில்: “நான் இயக்கமாக இருந்துதான் எழுதுகிறேன்.”

இன்னமும் எனக்கு எனது சந்ததி சுதந்திரமாக வாழவேண்டும் என்ற நப்பாசை உண்டு. காரணமேயில்லாமல் இதை எழுதவில்லை. இது என்னுடைய கடமை. நான் தமிழ்த் தேசியத்தை நேசித்த -நேசிக்கும்- நேசிக்கவுள்ள எழுத்தாளர். எழுத்தும் பேச்சும் எனக்குக் கைவரப் பெற்றதே  மொழியையும் நாட்டையும் உணரவும் உணர்த்தவும்தான். எதிர்ப்பு இல்லாமல் எதுவுமில்லைத் தானே.

நீங்கள் நாவலில், புலிகள் இழைத்ததாகக் குறிப்பிடும் கொடுமைகளை அவர்கள் முன்பும் இழைத்தனர். கட்டாய ஆள்சேர்ப்பு வன்னியில் 2009-க்கு முன்னும் நடந்தது. அப்போது நீங்கள் அமைப்பில்தானே இருந்தீர்கள்?

ஒரு குடிகாரத் தந்தை தன் பெண்ணை இன்னொரு குடிகாரனுக்குக் கட்டிவைத்து விட்டான். இங்கேயும் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியைத் துன்புறுத்துகிறான், அடிக்கிறான். ஆனாலும் உடை, உணவு என்பவற்றையும் அன்பையும் கொடுக்கவே செய்கிறான். அவள் அடிவாங்கி அழும்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் தாங்க முடியாமல் ‘நீ உன் அம்மா வீட்டுக்குப் போய்விடு’ என்கிறார்கள். அம்மா வீடு இவளுக்கு இதை விடப் பெரிய கொலைக்களம்.  எப்படிப் போவாள்? வேறெங்காவது கடல் கடந்தும் போக முடியாது. முழுதாக ஆயிரம் ரூபாவைக்கூட கண்ணால் பார்க்க முடியாதவள் இலட்சக்கணக்கில் கொடுக்க எங்கே போவது? போதாததற்கு பிள்ளைகள் வேறு. அந்தப் பெண் ஆயுள் தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.

நான் அமைப்பில் விரும்பித்தான் சேர்ந்தேன். மறுபடியும் கழற்றிக்கொள்ள முடியாமல் நன்கு மாட்டிக்கொண்டேன். புலிகளின் மட்டு – அம்பாறை பகுதிதான் முதலில் கட்டாய ஆட்சேர்ப்பை 2003-2004 காலப்பகுதியில் செய்தது. வன்னியில் 2006-ன் பிற்பகுதியில் வீட்டுக்கொருவர் கட்டாயம் எனவும், இயக்கத்திலிருந்து விலகியவர்கள் கட்டாயமாக மீண்டும் இணைக்கப்பட்டதும் நடந்தது.  இயக்கத்திலிருந்து விலகக் கடிதம் கொடுத்து, தண்டனைக் காலம் இரண்டு வருடங்கள் முடிந்து வீட்டுக்குப் போனவர்கள் வர விரும்பவில்லை. அவர்களைக் காவற்துறையினர் வேட்டையாடிப் பிடித்தனர். அகப்பட்டவர்கள் கைதிகள் போல் ட்ரக்குகளில் ஏற்றப்பட்டு மணலாற்று காட்டுப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீதியில் இந்த ட்ரக்குகளில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் கொண்டு செல்லப்படும்போது அழுதுகொண்டே செல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் அழியும். போனவர்கள் போராட வேண்டுமல்லவா.. அவர்களை ஆற்றுப்படுத்த, பேசிச் சரிக்கட்ட என்னை அழைத்துப் போனார்கள். ‘இக்கட்டான சூழல்,  பயிற்சி எடுத்தவர்கள் கூடிக்  கைகொடுத்தால் தானே வெல்ல முடியும்’ என்று பலவாறு பேசினாலும் அவர்கள் என்னைக் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. பின்பு அவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டு பலர் தப்பியோடினார்கள். பலர் கொல்லப்பட்டனர். புதியவர்களோடு பழைய போராளிகள் ஒட்டவேயில்லை. நாங்கள் இதை மூன்று வகையாகக் கூறுவோம். ஒன்று முதல் ஒன்பதாம் பயிற்சி அணிவரை  ‘கீழ்ப்படிவு – உத்தரவிற்குப் பணிதல்’குழு. பத்து முதல் பதினெட்டாவது பயிற்சி அணிவரை ‘நீ சொல்லு நான் விரும்பினால் செய்வன்’ குழு. பதினெட்டாவது பயிற்சி அணிக்கு மேல் ‘நீ யார் சொல்லுறது? நான் யார் கேட்கிறது?’ குழு.

2006 – 2007ல் இந்தப் பிரச்சாரப் பிரிவில் என்னையும் ஒரு அணியில் போட்டிருந்தாலும் நான் போகவில்லை. தமிழ்ச்செல்வன் கூப்பிட்டுக் கேட்டார். “அதுதான் கட்டாயமாக்கிற்றீங்களே..  போய்ப் பிடிக்கிற இடங்களில அடியும் நடக்குது. நம்மால முடியாது சாமி. அப்பிடிப் போகத்தான் வேணும் எண்டால் எழுதவோ நிகழ்ச்சிகள் செய்யவோ முடியாது” என்றேன். அப்போது என்னை விட்டு விட்டார்கள். மீண்டும் ஒரு தடவை  அப்படி என்னைக் கேட்டபோது “நீங்கள் வேண்டாம் அன்ரி நாங்களே செய்கிறோம்” என்று குழுத் தலைவனே மறுத்துவிட்டான். தலைவருடைய கட்டளைக்கு மாறாக நடக்கத் தொடங்கியிருந்தனர். நான் நின்றால் நடக்கும் அநீதிகள் உடனுக்குடன் நேரடி ஒலிபரப்பாகிவிடும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.

ஒரு வீட்டில் உழைக்கும் பிள்ளை அதுதான் என்றிருந்தால் எடுக்க வேண்டாம்,  ஒரே பிள்ளை வேண்டாம், வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை மற்றது எல்லாம் பெண்பிள்ளை என்றால் வேண்டாம்,  வீட்டுக்கு ஒரே பெண் அடுத்ததெல்லாம் ஆண் என்றால் வேண்டாம், பதினாறு வயது நிரம்பியிருக்க வேண்டும், போராளி – மாவீரர் குடும்பங்களில் பிடிக்க வேண்டாம் என்றெல்லாம் கட்டளைகள் இருந்தன. இதை யார் கடைப்பிடித்தார்கள்.. எவருமில்லை! நாங்கள் மதிவதனி , திருமதிகள் சிலர் கூடிப் பேசி வேதனைப்படத்தான் முடிந்தது. ஒரு போராளி புதிய போராளியாக இணைந்த பெண்ணொருவரை பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்றும் பிடிபட்டது. எனினும் அவன் சிறு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டான். காரணம், பிள்ளை பிடியில் அவனை மிஞ்ச ஆளில்லை என்பதாகும். ஈற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் அவனைக் கொன்றனர்.  அவனுக்கு லெப்.கேணல் விருது கூட வழங்கப்பட்டது.  இப்படி நிறையச் சம்பவங்களுண்டு.

மக்களை விடத் தாங்கள் உயர்வானவர்கள், மக்களை விடவும் அதிகாரமும் சலுகையும் படைத்தவர்கள் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்ததாகக் கருதுகிறீர்களா?

தமக்கென ஒரு பெரு நிலப்பரப்பு, அதிகாரம், பதவி,  வரி வசூலிக்கும் இறை, சொத்துகளைக் கையகப்படுத்தும்  அதிகாரம், நீதி வழங்கும் அதிகாரம், காவற்துறை, ஆயுதப்படை எல்லாவற்றையும் கொண்டு தம் மக்களின் வெளியுலகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தி, கடவுச்சீட்டு நடைமுறையைக் கொண்டு வெளிப் பயணங்களையும் கட்டுப்படுத்தி, வர்த்தக மேலாண்மையையும் தமக்குள் வைத்துக்கொண்டு அரச அதிகாரிகளையும் தம் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்த புலிகள் மக்களை விட மேலானவர்கள் தானே. என்னதான் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட காவற்துறை, நீதிமன்றம் என்பவை இருந்தாலும் வனத்துறை தானே கைது செய்து தானே தண்டனை வழங்கியது. பொருண்மிய மேப்பாட்டுத்துறையும் அவ்வாறே. நிர்வாக சேவை, புலனாய்வுத்துறையும் அவ்வாறே. திரைப்பட வெளியீட்டுத்துறையும் அவ்வாறே. இவ்வாறு ஏகப்பட்ட நீதிபதிகளுக்குப் பணிந்து மக்கள் வாழும்போது யார் பெரியவர்?

அது முந்தியொருகாலம்.. மூத்தண்ணர் இருக்குங் காலமொண்டு… சிங்கள இராணுவமும் பொலிசும் இருந்த காலத்தே மக்களே பெரிசு. புலிகள் சோத்துக்கும், பாதுகாப்புக்கும் மக்களை நம்பியிருந்த காலம்.. மக்கள் பெரிசு! வேறு ஏதாவது நல்ல கேள்வியாகப் போடுங்கோ.

இறுதி யுத்தத்தில் புலிகளின் தளபதிகளும் பொறுப்பாளர்களும் தலைமையின் கட்டளையை மீறி நடந்தார்கள் என்கிறீர்கள். தலைமை தனது தளபதிகள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருந்ததா?

உண்மை! 2007-ல் நடந்த பல அராஜகங்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டபோது “யுத்தம் நெருக்கமாக இருக்கும்போது நாம் விசாரணை அது இது என்று போட்டுக் கொண்டிருந்தால் அப்படி அப்படியே போட்டுட்டு போயிடுவாங்க, நான் பொறுத்துத்தான் போக வேண்டும்” என்று தலைவர் கூறினார். வாய் வார்த்தைக்கு ஆதாரம் கேட்காதீர்கள். கூட இருந்த இருவருமே கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் இவர்களிடம் நம்பிக்கையிழந்த தலைவர் ஆனந்தபுரச் சமருக்கு நேரடியாகவே இறங்கிவிட்டார். அவரை மீட்க நடந்த சமரில் தான் பெரிய தளபதிகள் இறந்தனர். இச் சமரில் என் பேத்தியும் நின்றிருந்ததால் என்னிடம் விபரம் சொன்னாள்.

எமது போராட்டத்தின் இயங்கு திசை இனி எதுவாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

புயல் ஓய்ந்த பின் முறிந்த மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். இருக்கும் செடிகளை மீளெழுப்ப வேண்டும் . உடைந்த குளங்களைச் செப்பனிட வேண்டும். புதிய விவசாயிகளுக்கு விதை வேண்டும். இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? மக்கள் உறங்கிவிட்டார்கள் என்று எண்ணக்கூடாது. அவர்கள் பசி மயக்கத்தில் கிடக்கிறார்கள். அவர்கள் எழட்டும், நடக்கட்டும், தமது பாதைகளில் தடைகளை அகற்றவும், தமது வீடுகளிற்குள் அந்நியர் புகாமல் பாதுகாக்கவும், தாம் கைகளை வீசி நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? வன்னியில் இவ்வருடம் தேன் இல்லை. பாலைப்பழம் இல்லை. உடும்பு, முயல், பன்றி எதுவுமில்லை. காடுகளில் விறகு பொறுக்கக் கூட யாரும் போவதில்லை. எமது மக்கள் எங்கள் காடுகளில் காடேறிகள் உலாவுவதாக உணர்கிறார்கள். பேய்களுக்குப் பயந்து பெண்கள் போவதுமில்லை. எப்போது மீட்பர் வருவாரென்று தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். நாங்கள் எழுதலாம். வாசிப்போர் அருகிவிட்டனர். செத்த வீடு, கலியாணவீடு, சமூர்த்திக் கூட்டம் எல்லாயிடமும் உதுதான் கதையாம். பாலனைப் பொலிசு கொண்டு போட்டான் . கள்ள மரம் அரிஞ்சதாம். ‘அவன் பொமிற் எடுத்தவன் தானே’ , ‘பொமிற் மூன்று நாளைக்கு தானாம் அதுக்குள்ளை அரிஞ்சு கூரைக்கு ஏத்திப் போடணுமாம்’.  இல்லாட்டி வீட்டிலை கிடந்த மரமும் போச்சு அவனும் கைதி . பெண்டில் கதறுகிறாள் ஒன்றரை இலட்சம் கொடுத்து அழிஞ்சதாம். உள்ள நகையும் போச்சு மரமும் போச்சு. இந்த நிலை நீடிக்கிறது.பல முனைகளிலும். புதிய போராட்டத்திற்கு விதை ஊன்றியாகிவிட்டது. மக்கள் உணரவேண்டும், உணர்த்த வேண்டும்!

உங்களது மேடும் பள்ளமுமான நீண்ட வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்களது இயக்க வாழ்வைப் பெருமிதமாக உணர்கிறீர்களா?

நான் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவள். மனிதனோ மற்றவையோ காரணமில்லாமல் காரியமில்லை. எனது வாழ்க்கை எந்த அசம்பாவிதமுமின்றி இருந்திருந்தால் இந்தப் பேனா என் கையிலிருந்திருக்காது. எனக்குப் பதினான்கு வயதில் கல்யாணம் ஆகாதிருந்திருந்தால் குடும்பச் சுமையை நான் இப்போதும் சுமந்திருப்பேன். இருபத்து நான்கு வயதுக்குள் பிரசவம் முடிந்தது. நாற்பத்து மூன்று வயதில் எந்தக் குடும்பப் பொறுப்பும் என்னிடமில்லை. காட்டாறு போன்ற என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்துப் பார்க்கலாம். எனக்குத் துன்பங்கள் வரும் போதெல்லாம் நான் வருந்தியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். துடித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்திற்குப் பின் நான் அழுததை யாரும் பார்த்திருக்க முடியாது. தியானம் என்னை வழிப்படுத்தியது. வாழ்க்கையில் நான் விரும்பிய அனைத்துமே எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்கு என்னுள்ளேயே எனக்கு உருவம் கொடுத்து முயன்றேன்.  எனக்கு வெளியே கடவுள் இருப்பதை நான் நம்பவில்லை. ஆனால் என் எண்ணங்களின் சக்தியை எனக்குத் தெரியும். அதில் நல்ல எண்ணங்களையே விதைக்கப் பழகினேன். இன்பம்- துன்பம் எல்லாமே சமமாகிவிட்டது. அவமானம் என்று எதையும் கருதவில்லை. அவை எனக்களித்த பாடங்கள் தெளிவானதாக இருந்தன. கொடுப்பதில் இன்பம், அணைப்பதில் இன்பம்.

வாழ்கையில் எல்லாமே கற்பதற்கான செயல்கள் தான். அந்த வகையில் என் இயக்க வாழ்வு எனக்குப் பெருமிதமானது. அந்த வாழ்க்கையில் நான் அநேகருக்கு நன்மை செய்திருக்கிறேன். ஒரு கிராமத்தையே வாழ வைத்திருக்கிறேன். இன்றும் என்னிடம் அதே அன்புடன் பழகுகிறார்கள். வேறென்ன வேண்டும்! அன்புள்ளவர் எங்கிருந்தாலும் வாழ்வில் அன்பையே பெறுவார். நான் பெருமிதமாக உணர்கிறேன். பல மடங்கு பெருமிதமாக இப்போதும் உணர்கிறேன்.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? வாழ்வின் மீதியை எவ்வாறு கழிக்க விரும்புகிறீர்கள்?

நான் சரணடைந்ததிலிருந்து விடுவிக்கப்பட்டதுவரை எழுதிவிட்டேன். ‘எங்கே அவள்’ என்றொரு சிறு நாவலை எழுதி பதிப்பகத்துக்குக் கொடுத்து விட்டேன். ‘ஊழிக்காலம்’ மூலம் பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைத்தன. ஆனால் என்னுடைய இந்தியப் பயணம் நாற்பத்தைந்தாயிரத்தை விழுங்கி விட்டது. மேலும் மேலும் ஆக்கங்களைக் கோருவோர் எதுவும் தருவதில்லை.‘ஆம்பல்’ என்றொரு இணையப் பத்திரிகை மாதம் பத்தாயிரம் ரூபாய்கள் தந்தார்கள். அதுவும் இம்மாதத்துடன் நின்றுவிட்டது.  ஆனாலும் நான் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையின் மீதிதான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது. பார்க்கலாம்.. இயற்கை என்ன வழி வைத்திருக்கிறதோ! பொதுவாகவே புலமையும் வறுமையும் சேர்ந்துதானே இருக்கின்றன. மகளுடனும் பேத்திகளுடனும் சேர்ந்திருக்கிறேன். மகிழ்ச்சிதான். அது மனதைப் பொறுத்தது.

என்னை இதயம் திறந்து பேச வைத்ததற்கு நன்றி.

23 thoughts on “நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன்

  1. Great lady. Reminds me of teachings of Bagavathgeetai. Thank you Shoba for interviewing.

  2. நன்றி தமிழ்கவி…… சுதந்திரத்தினை LTTE அல்லது சிங்கள அரசினாலோ கொடுத்து விட முடியாது ,,,,,, உம்மைப்போன்ற சுதந்திர காதலிகளினால்தான்……………

  3. மொத்த பதிலில் 60% நேர்மையாகவும், 40% திரித்துக் கூறப் பட்டுள்ளதாகவும் எனக்கு மட்டும் தான் தெரிகிறதோ .
    100% சத்தியமான வார்த்தைகள், பதில்கள் இல்லை என்று என் உள்மனம் சொல்கிறது.
    சிங்களவர்கள், சிங்கள ஆட்சி அமைப்பு செய்த கொடுமைகள் குறித்து ஒரு வாக்கியம் கூட இல்லாதது கூடுதல் சிறப்பு

  4. tமனிதர்கள் எனப்படுவோர் படிக்கவேண்டிய உரையாடல் இது.
    சகமனிதர்களைப் பற்றி சிறிதேனும் சிந்திப்பவர்களுக்குப் பரவலான பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஒரு பாடம் இது.
    உண்மை, நீதி, நியாயம், சமூகம் பற்றி சிந்திப்பவர்களுக்கு இப் பேட்டி ஒரு நிறைவான ஆவணம். மனச்சாட்சி உள்ளவர்களை இந்த அனுபவங்கள் நிச்சயம் பாதிக்கும்.
    மனிதநேயம் உள்ளவர்களால் மட்டுமே இந்தத் ‘தமிழ்க்கவியை’ப் பூரணமாகப் புரிந்துகொள்ளமுடியும்.

    இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் கடந்தகால வரலாறு பற்றி நான் இதுவரை கொண்டிருந்த கணிப்பீடுகளுக்கும் யூகங்களுக்கும் உரிய விளக்கங்கள் இந்த உரையாடலில் பரவலாக சிந்திக் கிடக்கின்றன.
    இந்த உரையாடலை நான் படிப்பதற்கு உதவிய சோபாவிற்கும்-தமிழ்க்கவிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    அழகிரி
    30.05.14

  5. வணக்கம்,

    தமிழ்க்கவி அவர்கள் எனது அம்மா என்றாலும் கூட அவர் தாயகத்தில் வாழவேண்டும் என்பதற்காக இவ்வாறான மிகைப்படுத்தப்பட்ட புரளிகளை அவர் எழுதுவதை தவிர்க்க முடியாது, ஏப்ரல் மாதம் அம்பலவன் பொற்கணைப் பகுதியில் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இருந்த குடிசையில் அம்மா குடும்பத்தாரோடு இருந்தபோதும் போராட்டம் வெல்லும் எங்கள் தலைவர் வெல்லுவார்.. இன்றும் சில மாதங்கள் அவருக்கு காலம் கூடாது என்று சொன்னதை இப்போதும் நினைத்துப்பார்கிறேன். என்னை மேலதிக கல்விக்காக அனுப்பியதும் அம்மா குறிப்பிடும் அதே அமைப்புத்தான். ஒரு விடயம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இன்னமும் நிறைய பணம் வழங்கினால் இன்னமும் அவரிடமிருந்து அருமந்தன்ன அற்புதமான பழமொழிகளையும் கதைகளையும் வகை தொகையாக பெற முடியும்.

    நன்றி

    இப்படிக்கு
    ஒப்பிலான்
    (சட்டத்துறை)

  6. .

    தமிழ் கவி அவர்களே நீங்கள் எழுதியதில் இருந்தே எனக்கு சில கேள்விகள் உங்களிடம் ,
    பாலா இராஜேஸ்வரன்

    நீங்கள் எழுதியது கீழே

    “நான் சரணடைந்ததிலிருந்து விடுவிக்கப்பட்டதுவரை எழுதிவிட்டேன். ‘எங்கே அவள்’ என்றொரு சிறு நாவலை எழுதி பதிப்பகத்துக்குக் கொடுத்து விட்டேன். ‘ஊழிக்காலம்’ மூலம் பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைத்தன. ஆனால் என்னுடைய இந்தியப் பயணம் நாற்பத்தைந்தாயிரத்தை விழுங்கி விட்டது. மேலும் மேலும் ஆக்கங்களைக் கோருவோர் எதுவும் தருவதில்லை.‘ஆம்பல்’ என்றொரு இணையப் பத்திரிகை மாதம் பத்தாயிரம் ரூபாய்கள் தந்தார்கள். அதுவும் இம்மாதத்துடன் நின்றுவிட்டது. ஆனாலும் நான் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையின் மீதிதான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது. பார்க்கலாம்.. இயற்கை என்ன வழி வைத்திருக்கிறதோ! பொதுவாகவே புலமையும் வறுமையும் சேர்ந்துதானே இருக்கின்றன.

    என் கேள்வி இதுதான் ,

    உங்களது தற்சமய நிலைமையில் உங்களுக்கு வன்னியில் சாதாரணமாக வாழும் ஒருசராசரி குடும்பத்தை விட உங்கள் வாழ்வை மேம்படுத்த மேலதிக பணம் தேவைபடுகிறது !அதற்காக நீங்கள் எதையும் எழுத தயாராக இருக்கிறீர்கள் ,இதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா ?

    நீங்கள் எழுதியது கீழே

    புலிகள் போரிட்டு நாட்டைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதை நான் இயக்கத்தில் இணைவதற்கு முன்பே என்னால் உணர முடிந்தது.
    ” மாலையில் நாச்சிமார் கோயிலடியில் யாழ்ப்பாணத்தின் எனது முதல் அரங்கு.
    எந்த அறிமுகமும் இல்லாமல் ஒலிவாங்கியைக் கையில் எடுத்தேன். இருபது நிமிடங்கள் ‘சிச்சுவேசன் ரிப்போர்ட்’ . முடிவு உங்கள் கையில் என்று விட்டு வெளியே வந்தேன். நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்… ரவிராஜ் என்னிடம் ஓடி வந்தார். “உங்களை டொமினிக் அண்ணை கூப்பிடுகிறார்” என்றார். நான் சற்று யோசித்தவாறே அவரைப் பின் தொடர்ந்தேன். ஓர் அழகிய சிவப்புக் காரின் பின் கதவைத் திறந்து “ஏறுங்கள்” என்றார். நான் உள்ளே ஏறினேன். உள்ளே டொமினிக் அமர்ந்திருந்தார். “அன்ரீ நீங்கள் ஆர் அன்ரீ.. இனி எனக்கு தேன்மொழி வேண்டாம். உங்கள விட ஏலாது” என்றார். அன்று முதல் நான் பேச்சாளர், மக்களைக் கவர்ந்த பேச்சாளர்”!

    என் கேள்வி இதுதான்

    நம்பிக்கை இல்லாமலே இயக்கத்தில் சேர்ந்த நீங்கள் உங்கள் வாய்பேச்சால் நூற்றுக்கணக்கானவர்களை மூளைசளைவை செய்து இயக்கத்தில் சேர்த்தது உங்களுக்கு மாபெரும் குற்றமாக உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ? நீங்கள் இயக்கத்தில் சேருவதற்கு உங்களின் குடும்பவறுமைதான் காரணமாக இருந்திருக்கவேண்டும் ,இல்லாவிடில் இப்படியான ஒரு இழிசெயலை உங்களால் செய்திருக்கமுடியாது .என் கேள்விக்கு உங்களிடமே பதிலும் இருக்கிறது “ஒரு குடிகாரத் தந்தை தன் பெண்ணை இன்னொரு குடிகாரனுக்குக் கட்டிவைத்து விட்டான். இங்கேயும் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியைத் துன்புறுத்துகிறான், அடிக்கிறான். ஆனாலும் உடை, உணவு என்பவற்றையும் அன்பையும் கொடுக்கவே செய்கிறான். அவள் அடிவாங்கி அழும்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் தாங்க முடியாமல் ‘நீ உன் அம்மா வீட்டுக்குப் போய்விடு’ என்கிறார்கள். அம்மா வீடு இவளுக்கு இதை விடப் பெரிய கொலைக்களம். எப்படிப் போவாள்

    நீங்கள் எழுதியது கீழே

    நான் அமைப்பில் விரும்பித்தான் சேர்ந்தேன். மறுபடியும் கழற்றிக்கொள்ள முடியாமல் நன்கு மாட்டிக்கொண்டேன்!

    என் கேள்வி இதுதான்

    நூற்றுக்கணக்கில் இளைஞர்களை வாய்பேச்சில் வசீகரித்து இயக்கத்தில் சேர்த்துவிட்டு நீங்கள் எப்படி களரமுடியும்?அவர்கள் பெற்றோர் உங்களை சும்மாவிடுவார்களா?

    நீங்கள் எழுதியது கீழே

    ” ஊழிக்காலம்”. சிங்கள அன்பர் ஒருவர் வாங்கிச் சென்றார். தான் மிகவும் ஆறுதலாக வாசித்ததாகவும் தாங்கமுடியவில்லை என்றும் சொன்னார். இதை மொழிபெயர்க்க கொடுக்கலாமா என்றும் கேட்டார். என்னை முன்னமே தெரிந்தவர்தான். சாதாரணமாகப் பழகியவர். இப்போது மிகுந்த மரியாதை கொடுக்கிறார். எனக்கு அது இடைஞ்சலாயிருக்கிறது என்றாலும் கேட்பதாயில்லை. அவர் ஒரு புலனாய்வாளர் கூட. ? வேறெங்காவது கடல் கடந்தும் போக முடியாது. முழுதாக ஆயிரம் ரூபாவைக்கூட கண்ணால் பார்க்க முடியாதவள் இலட்சக்கணக்கில் கொடுக்க எங்கே போவது? போதாததற்கு பிள்ளைகள் வேறு.

    என் கேள்வி இதுதான்

    உங்கள் வாயாலையே உங்கள் தற்போதைய நிலைமையை தெளிவாக விளக்கிவிட்டீர்கள் ,நீங்கள் யார் பிடியில் இருக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது ,மக்களுக்கு இது போதும் நீங்கள் யார் என்று அறிய ,தயவுசெய்து இனிமேலும் இப்படி எழுதுவதை நிறுத்துங்கள் .

    நீங்கள் எழுதியது கீழே

    தலைவரிடம் நான் அளப்பரிய மரியாதை வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன், வைத்திருப்பேன் !!!!!

    என் கேள்வி இதுதான்
    இதை kp கூடத்தான் சொல்லுகிறார் ,கருணா ஒருவரை விட மற்ற தலையாட்டிகள் எல்லாம் இதைதான் சொல்கிறார்கள் , நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ???

  7. அங்கே இயக்கத்தின் மிகச் சில புத்திஜீவிகளில் ஒருவரான டொமினிக் இருந்தார். அப்போது யாழ்ப்பாணத்தில் என்னை யாருக்கும் தெரியாது.எனக்கும் எல்லோருடைய பெயர்களைத் தெரிந்திருந்தாலும் ஆட்களைத் தெரியாது. டொமினிக் நகைச்சுவையாக எதையும் நெற்றிக்கு நேரே சொல்லக் கூடியவர். என்னுடன் பேச்சாளராக அம்பாறை மாவட்ட மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் வின்சன் வந்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மட்டு – அம்பாறைப் போராளிகள் பின்வாங்கி வந்து யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாளில் தங்கியிருந்தனர். அப்படிப் பின்வாங்கி வந்தவர் தான் வின்சன். மிரட்சியோடு அமர்ந்திருந்தார்.

    டொமினிக் வந்தார். “எங்கே மகளிர் தரப்புப் பேச்சாளர்?” என்றார்.

    “அன்ரி வந்திருக்கா” என்றனர் பெண்கள். என்னை திரும்பிப் பார்த்த டொமினிக் உடனேயே “ஏன் தேன்மொழி வரவில்லை, இந்தக் கிழவியை வச்சு நான் என்ன செய்கிறது?” என்றார்.

    “இரண்டு நாளைக்குத் தானாம் அண்ணை, அங்கால அக்கா வந்திடுவா” என்றாள் என்னை அழைத்து வந்தவள்.

    “ரவிராஜண்ணை ஒருக்கா ரிகர்சல் பாருங்க, இதுகள் என்னக் கவுட்டுப் போடுங்கள் போல” என்றார் டொமினிக். அப்போது அவருக்கு ‘வோக்கி’ அழைப்பொன்று வந்தது. எழுந்து போய் விட்டார். நான் ஏதோ பேருக்கு பேச வேண்டிய விடயங்களைக் கூறினேன். சும்மா எப்படியாம் பேசிக் காட்டுவது!

    மாலையில் நாச்சிமார் கோயிலடியில் யாழ்ப்பாணத்தின் எனது முதல் அரங்கு. எந்த அறிமுகமும் இல்லாமல் ஒலிவாங்கியைக் கையில் எடுத்தேன். இருபது நிமிடங்கள் ‘சிச்சுவேசன் ரிப்போர்ட்’ . முடிவு உங்கள் கையில் என்று விட்டு வெளியே வந்தேன். நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்… ரவிராஜ் என்னிடம் ஓடி வந்தார். “உங்களை டொமினிக் அண்ணை கூப்பிடுகிறார்” என்றார். நான் சற்று யோசித்தவாறே அவரைப் பின் தொடர்ந்தேன். ஓர் அழகிய சிவப்புக் காரின் பின் கதவைத் திறந்து “ஏறுங்கள்” என்றார். நான் உள்ளே ஏறினேன். உள்ளே டொமினிக் அமர்ந்திருந்தார். “அன்ரீ நீங்கள் ஆர் அன்ரீ.. இனி எனக்கு தேன்மொழி வேண்டாம். உங்கள விட ஏலாது” என்றார். அன்று முதல் நான் பேச்சாளர், NANRE ANTEY

  8. ஒப்பிலன் என்ற பெயரில் தன் பதிவை போட்டிருப்பது ஒப்பிலன் அல்ல . நேருக்குநேர் நின்று பேச துணிவில்லாத ஒரு நுளம்பு. ஒப்பிலனை படிக்க அனுப்பியது பற்றியும் பணத்துக்காக நான் எழுதினேன் எழுதுவேன் என்றும் குழறியிருக்கிறது.பாவம்

  9. முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அதுவும் வன்னியில் வாழும் ஒருவர் எப்படி புலிகளை புகழ்ந்து கதைக்க முடியும் ?என்னை பொறுத்த வரையில் இதுவும் மக்களின் மனதில் புலிகளை பற்றிய வெறுப்பை உண்டாக்கும் முயற்சிதான் ,அதை கொஞ்சம் கவனமாக செய்கிறார்கள் , புலிகளை முற்றுமுழுதாக குற்றம் சொன்னால் வாசிப்பவர்களிட்கு இவர் புலிகளிற்கு எதிரானவர் என்ற தோற்றம் வந்துவிடும் என்பதற்காக கொஞ்சம் விஷம் கொஞ்சம் அமிர்தம் கலந்து படைத்திருக்கிறார்கள் , நல்ல முயற்சி ஆனால் எல்லோரிடமும் பலிக்காது , better luck next time

  10. தமிழ்க்கவி தன் வாய்வீச்சால் வசீகரித்து குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்து ,களப்பலி கொடுத்த உயிர்களின் எண்ணிக்கை ,இப்போது அவருக்கே தெரியாது .புனர்வாழ்வுக்கு போனவுடனேயே சிறீலங்கா புலனாய்வாளர்களின் அடிவருடி ஆகிவிடதால் இப்போது தினாவெட்டு .புலிகளின் காலத்தில் தியாகி .இப்போது அதிதியாகி .கேட்போர் எல்லாம் புண்ணாக்கும் ,புறம்போக்கும் எண்ட நினைப்பு .புலிகளுக்கு முன்பும் தமிழ்க்கவி ஒரு வசைபாடிதான் புளட் அமைப்பின் வவுனியா செயற்பாட்டில் .குடும்பம் துரோகப் பட்டம் சுமக்கப்போகுதே என்ற தன்மையை மறைக்க போராளி ஆகிய பாட்டி .பாட்டி உன் வாயை பூட்டிவைத்துக்கொண்டு இருந்தால் ,அதுவே உன் மாவீர மைந்தனுக்கு நீ செய்யும் மரியாதையாகும் .வாழ்ந்து முடித்துவிட்டு வாழத் துடித்த குருத்துகளை குதறியது உன் வார்த்தைகளும்தான் .மறக்காதே .அரசியல் வேறு அதன் நடைமுறை வேறு என்பது உன்னில் இருந்தும் படிக்கலாம் .உனக்கு இயக்கம் தந்த மரியாதை இனி எப்படி எழுதினாலும் ,சிங்கள புலனாய்வு தராது .எங்கள் மானிப்பாயிலும் ,சண்டிலிப்பாயிலும் உன் பாதம் படாமல் பார்த்துக்கொள் .அன்றுதான் உனக்கு இறுதி சடங்கு .

  11. காலத்திற்கு காலம் எமது இனத்தில் பல கோடரிக்காம்புகள் உருவாகி இருக்கின்றார்கள் அந்த வரிசையில், தமிழ்க்கவி அன்றியும் இணைந்துள்ளார். இயக்கத்‌தால் வழங்‌கப்பட் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுதித்தி தன்னை சகலதுறைகளிலும் வளர்த்துக்கொண்டவர், தலைவரால் மிகவும் மதிக்கப்படவர் {அண்ணைக்குப்பக்கத்‌தில் இருந்து உணவருந்தியவர்} எமது போராட்டத்தையும் இயக்கத்தையும் மிகவும் திட்டமிட்டமுறையில் காட்டிக்கொடுப்பது அப்பட்டமான துரோகம். மிகவும் கவலையளிக்கின்றது, எங்கோ காடுமேடுகளில் வாழ்ந்த அன்றியை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்‌டியது யார்??? என்பதனையும் வெறும் ஐந்தே வருடத்தில் மறந்தது கொடுமையிலும் கொடுமை.

  12. தமிழ்க்கவி அன்ரி! தலைவரை மட்டும் புனிதமாகவும் ,ஏனைய எல்லோரையும் தரக் குறைவாகவும் எழுதியுள்ளீர்கள் . விடுதலைப் புலிகள் அமைப்பில் மிகப் பெரிய சக்தியாக உருவகப் படுத்தவும் இதன் மூலம் படாத பாடு படுகிறீர்கள் . உங்களை இப்போது ஆட்டி வைக்கும் சக்தி பற்றியும் எமக்கும் உணர முடிகிறது . செத்தைக்குள் இருந்த உங்களை மெத்தையில் கொண்டுவந்து விட்டதும் ,நாலு பேருக்கு முன்னால் மதிப்பு எனும் அடையாளத்தில் அமர வைத்ததும் விடுதலைப் புலிகள்தான் .சொந்தப் புருசனாலேயே கைவிடப்பட்டபோதும் , தேசத் துரோகத்தை உன் மகன் செய்தபோதும் ,உனக்கு இருந்த தகுதிக்கு விஞ்சிய சலுகைகளை உன் வயதின் மதிப்புக்கும் தந்தது இயக்கம் .உன் குடும்பத்தால் கனவிலையும் எண்ணிப் பார்க்க முடியாத தொகையினை செலவிட்டு ,சின்னம் சிறுசுகள் களமாட ………கிழட்டு உன்னை படிப்பித்தது இயக்கம் .இப்ப என்ன புலுடாவும் ,பிதற்றலும் ………அறளை பேர்ந்துவிட்டால் கம் எண்டு கிடக்கலாம்தானே ? உனக்குத் தெரியுமா உன்னைவிட ……….ஏன் உனக்கே பணிகளைத் தந்து ……….இன்று அமைதியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் .புனிதத்திலும் புனிதமாக நீ ஒருத்தி என்றும் ,தலைவருக்குப் பக்கத்தில் இருக்கும் தகமை உனக்கு மட்டும் என்றும் பிதற்றுகிறாய் .கல்லறையில் புதைக்க புதைக்க அதை ஒரு புறத்தே விட்டு ,,,,,,,,,,,,உன் வாழ்வை நன்கு ரசித்து ரசித்து ருசித்துவிட்டு ,,,,,,,,,,,இன்னும் என்ன யாரிடம் எதிர் பார்க்கிறாய் ?நாட்டுப்புற பாணியில் நாடகம் ஆடியது போதும் .எல்லாவற்றையும் மூடிக்கட்டி வைத்துவிட்டு அமைதிகொள் .சாகிற நேரம் நாலு சனம் இனியும் காறித் துப்பாமல் இருக்கட்டும் .ஆடுவாவாம் ……….பாடுவாவாம் ………….மேடை கொஞ்சம் நெளியுதாம் .உன்னைப்போல பத்துப்பேர் இருந்தா ???????????????????????????

  13. 1993ம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாரையில் இருந்து போராளிகள் பின்வாங்கவில்லை.தலைவரின் தித்டப்படி ஆயிரக்கணக்கான போராளிகள் தவளை நடவடிக்கைக்காக மட்டு/அம்பாரை மாவட்டாங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தலைவரால் அழைக்கப்பட்டார்கள் அவர்களோடு வந்தவர்தான் போராளி வின்ஷன், இக்காலகட்டதில்தான் எமது இயக்கத்தை ஒரு மரபு வழி இராணுவமாக மாற்றுவதற்கான முடிவை தலைவர் எடுத்திருந்தார். அதற்காகவே மட்டு/அம்பாரை யாழ்ப்பாணத்திற்கு நகர்த்தப்பட்டு ஜெயந்தன் படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது. பின்னாளில் ஜெயந்தன் படையணி களத்தில் புரிந்த சாதனைகளை நீங்‌கள் நன்கு அறிவீர்கள், தயவு செய்து வரலாற்றை தவறாக பதிவு செய்யவேண்டாம்.

  14. Anti is only seeking attention, i think the same thing she did when she was with LTTE. As a former member, Its not all true what she saying. Of course individuals have different personalities and issues (Think of our own families, are we all same). She is also taking very personal level attack (Dominic Issue) and do not have any bigger picture. Dear Shoba this interview is a waste of time. She is not more than a greedy attention seeking old day (Ever).

  15. பொய்யளவு உண்மைகளை யாரும் ஏற்பதில்லை. ஆனால் அதற்காக உண்மைகள் வெளிவராமல் அமிழ்ந்து விடுவதில்லை. இன்னொருவன் முகம் மலர மட்டுமே பேசுபவன் உண்மையானவனல்ல. உண்மை கசக்கும். கசந்தாலும் உண்மை பலமானது.

  16. மே 18 இற்கு பிறகு திடீர் “ஞானோதயம்” பெற்ற அரசியல் “அவியலாளர்கள்”, “கொலை”ஞர்களுக்கு இது ஏன் அப்போது தெரியாமல்போனது?

    இதையும் விடுவோம்.. தாம் பின்வாங்கும் ஒவ்வொரு தடவையும் பணயக் கைதிகளாக மக்களை பிடித்து சென்றார்கள் என்று புலம்பும் இவர்கள், 90 களின் நடுப்பகுதியில் முழு யாழ் குடாவையும் புலிகள் வழித்து துடைத்து தம்மோடு அழைத்து சென்றபோது ” வரலாற்று இடப்பெயர்வு” என்று கவிதை வாசித்த மர்மம்தான் என்ன?

    அப்போது அது “பணயக்கைதிகள்” என்று தோன்றவில்லையா?

    இப்போதும் அவர்கள் பணயக்கைதிகள் அல்ல.. அப்போதும் அல்ல..

  17. மறைந்த படைத்துறை ஆய்வாளர் சிவராமின் மொழியில் சொன்னால், “படைத்துறைரீதியாக ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பு தவிர்க்க முடியாத ஒரு விபத்து அது. அதில் சமரசம் செய்வதும் ஒன்றுதான் போராட்டத்தை கைவிடுவதும் ஒன்றுதான்..”

    Vகருணாவின் வரலாற்று துரோகத்தை அடுத்து தமிழ்த்தேசியம், விடுதலைப்போராட்டம் குறித்த முரணான கருத்துக்கள் என்றுமில்லாதவாறு மேலெழுந்திருந்த நேரம், சிவராமுடன் நாம் பாரிஸ் ஈழமுரசு அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது ஒரு விடயத்தை குறிப்பிட்டார்.

    V”களத்தில் நிற்கும் போராளிகள் குறித்து எந்தப் பிரச்சினையுமில்லை.. அவர்கள் மாறும் வாய்ப்பும் இல்லை. ஆனால் புலிகளின் பினதளங்களோடு ஒட்டிக்கொண்டு நிற்பவர்கள் ஆபத்தானவர்களாக காட்சியளிக்கிறார்கள்.

    புலிகளின் இருப்பு தொடர்ந்தால் பாதிப்பில்லை.. ஆனால் புலிகள் முற்றாக அழிய நேரிட்டால் இவர்கள் தம்மை அம்பலப்படுத்தி போராட்டத்தின் நியாயத்தை, இருப்பை நிர்மூலமாக்க கூடும்.

    ஏனென்றால் தமிழ்த்தேசியம், போராட்டம், புரட்சிகர வன்முறை, படைப்பரம்பல், இராணுவ உட்கட்டுமானம் குறித்து எந்த போதிய அறிவும் அவர்களுக்கில்லை.

    எனவே தமது இருப்பு, பதவி பறிபோகும் சூழலில் போராட்ட நியாயங்களுக்கு எதிரானவர்களாக மாறி தாம் செய்யும் துரோகத்திற்கு மக்களையும் பங்காளிகளாக்க முனைவார்கள்.” என்றார்..

    இன்று நடந்து கொண்டிருப்பது இதுதான்..

    எனவே நாம் விழிப்புணர்வுடன் இருப்போம்.. தொடர்ந்து போராட உறுதியெடுப்போம்..

  18. அன்றி பாவம்! அவர் ஒரு கைதி. எதிரியிடம் அகப்பட்டுள்ள கைதிகளால் மட்டும் தான் இவ்வாறு எழுத முடியும்….நாம் தான் 2009 இன் பின் இப்படியான பலரை கண்டு விட்டோமே…தான் பிடிபட்டதன் பின் தனக்கு என்ன நடந்தது? தான் தற்போது வன்னியில் எப்படி உள்ளேன் என கேள்விகள் கேட்கப்படவுமில்லை..அவர் பதிலளிக்கவுமில்லை. இராணுவத்தால் தனக்கும் மக்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகள் என்ன?..ம்..ம்…வாயே திறக்கவில்லை. இதே இப்பெட்டியின் உள்நோக்கமான எமது மக்களை வெருப்படையச்செய்ய வைக்கும் மனோவியல் போரின் ஒரு அம்சம் என்பதைக் காட்டிக்கொடுக்கிறது.

    குபேரன் (முன்னாள் போராளி)

  19. தமிழ் கவி அவர்களே. நீங்கள் பார்த்ததும் கேட்டதும் புலிகளின் ஒரு வட்டத்தை மட்டுமே,
    பொட்டல் வெளியில் மண்ணெணெய் பரல் புதைத்து
    அதற்க்குள் காவல் காத்துகொண்டு நின்ற வட்டம் உங்களுக்கு தெரியாது.நீங்கள் படித்ததும் ,அதில் இருந்து அறிந்ததும் இயக்கத்தின் பணத்தில்.மக்களின் பணத்தில்.எல்லாம் செய்து விட்டு இப்பொழுது
    யாரும் இல்லை என்றவுடன் துணிவுடன் உண்ட வீட்டிற்க்கு
    இரண்டகம் செய்கின்றீர்கள். நாலு பேர் உள்ள வீட்டிலேயே ஆயிரம்
    பிரச்சனைகள் இருக்கும் பொழுது ஆயிரம் சதி சனம் இருக்கும்
    அமைப்பில் இப்படியான பிரச்சனைகள் எழுவது யதார்த்தம் .இது எப்படி இருக்கு என்றால் எண்கள் முக்கை குத்தி அடுத்தவருக்கு மணக்க
    கொடுப்பது போன்றது.இவை எல்லாம் இயக்கத்தில் இருக்கும் பொழுது
    எழுதினால் அது எழுத்து,இப்பொழுது எழுதுவதும் கூறுவதும் வசதிக்காக
    இயக்கத்தில் இருந்தது போன்றது.உங்கள் மனதுக்குள் இவளவு காழ்ப்புணர்ச்சி வைத்துக்கொண்டு பெயருக்கு ஒட்டிக்கொண்டு இருந்துள்ளீர்கள்.களம் மாறும் இப்படியானவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவர்கள் .நன்றி…….

  20. தமிழ் கவி அவர்கள் இயக்கத்தின் ஒரு வட்டம் மட்டுமே அறிந்தவர் ,
    அத்தோடு கலை ,அரசியல் துறை சார்ந்தே இருந்தமையால் இயக்கத்தின் முதுகெலும்பான காவல் அரண் தொடர்மாக எதுவும் தெரியவில்லை.
    புலிகளின் பணத்திலே படித்து பட்டம் வாங்கி அவர்கள் சாப்பாட்டிலேயே
    உடம்பையும் வளர்த்துக்கொண்டு இப்பொழுது எதுவும் இல்லை என்றவுடன் நியாயம் பேசுகிறார்,பொட்டல் வெளியில் மண்ணெண்ணெய் பரல் புதைத்து போராளிகள் காவல் காத்தமையால் தான் உங்களால் உடம்பையும், மூளையையும் வளர்க்க முடிந்தது.
    அது உங்கள் மேல் தப்பில்லை 43 வயதில் எல்லாத்தையும் அனுபவித்து விட்டு இயக்கத்துக்கு போனால் இப்படி தான் .அவர்கள் பணத்திலேயே
    படித்து ,சாப்பிட்டு ,அவர்களையே குறை கூறுபவரை எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியவில்லை.உண்ட வீட்டுக்கு —- செய்தவர் என்று.
    உங்கள் மனசாட்சி உங்களை கேள்வி கேட்கும் ….வன்னிக்குள் எங்கோ
    இருந்த ஒரு பெண்ணை உலகுக்கு காட்டியது புலிகளின்
    பணம்.அதை மறந்து விட வேண்டாம்….

  21. இந்த பேட்டி ஒரு அற்புதமான வரலாற்று பதிவு. மிக சரியான கேள்விகளும் அவற்றிற்கு தெளிவான உண்மையான பதில்களும் தந்தமைக்கு ஷோபா சக்திக்கும் தமிழ்கவி அம்மாவுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். எனக்கு தெரிந்து இது ஒரு முக்கியமான ஒரு பேட்டி.முக்கியமான வரலாற்று உண்மைகள் பலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து இருக்கிறீர்கள். கடந்த முப்பது ஆண்ட்டுகளாக நான் மிகவும் தூரத்தே இருந்தாலும் நிகழ்வுகளை அவதானித்து ஓரளவு இப்படித்தான் இருக்கிறது என்று ஊகித்தே இருந்தேன். இருந்தாலும் தமிழ்கவி அம்மா அவர்களின் பதில்கள் என்னை கொஞ்சம் உலுக்கி விட்டது.எதிர்காலம் நிச்சயம் அறியவேண்டிய சரித்திர சான்றுகள் இவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *