அந்த மூன்று நிமிடச் சாட்சியம்

கட்டுரைகள்

ண்பர்கள் சயந்தனும், சோமிதரனும் இன்று வெளியிட்டிருக்கும், ஒரு மூன்று நிமிட நேரக் காணொளி குறித்துப் பேசிவிட நினைக்கிறேன்.

இற்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்னதாக, யாழ் பொதுநூலக நிலையத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அது ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது, எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. தடுத்து நிறுத்திய புலிகள் அதற்கான காரணத்தை எப்போதுமே சொன்னதில்லை.

அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் தலைமையில், வீ. ஆனந்தசங்கரி அந்த நூலகத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டதும், சம்மந்தப்பட்ட செல்லன் கந்தையனும் ஆனந்தசங்கரியும் அறிக்கைகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டார்கள். அவற்றில் சொல்லப்பட்ட காரணம் ‘செல்லன் கந்தையன் தலிச் சாதியொன்றைச் சேர்ந்தவர் என்பதாலேயே திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது’.

இருவரதும் இந்தச் சாட்சியங்களை, அப்போது புலிகளோ, யாழ் மாநகரசபையின் மற்றைய உறுப்பினர்களோ மறுக்கவில்லை. புலிகள் திறப்புவிழாவைத் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து ஒட்டுமொத்த மாநகரசபை உறுப்பினர்களும் உடனடியாகவே பதவி விலகினார்கள்.

இதற்கு வெளியிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. பல்வேறு சிறிய அமைப்புகள் நூலகத் திறப்புவிழாவை எதிர்த்தன. ஆனால் எதிர்த்தற்கு அவை சொல்லிய காரணங்கள் நம்பத் தகுந்தவையாக இருக்கவில்லை. ‘நூலகத் திருத்த வேலைகள் முற்றுப்பெற முன்பு திறப்புவிழாவை நடத்தக்கூடாது’ என்பதே அவர்கள் முன்வைத்த சப்பைக் காரணம். தேசிய நாளிதளான ‘தினக்குரல்’ செல்லன் கந்தையனை உள்ளாடை தெரிய, சாதிய இழிவு தொனிக்கக்கூடிய ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.

செல்லன் கந்தையன் இந்தச் சந்தர்ப்பத்தில் தனது தரப்பைத் தெளிவாகவே பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தினார். டெய்லிமிரர் – தினமுரசு போன்ற பத்திரிகைகளில் தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார். புலிகளுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்யப் பல ஊடகங்கள் மறுத்திருக்கும் என்பதும் நாம் அறிந்ததே. பத்திரிகைச் சுதந்திரம் பாதாளத்தில் கிடந்த காலமது. புலிகள் கடுமையாகப் பத்திரிகைகளைக் கண்காணித்தார்கள். ஆனால் தினக்குரலில் வெளியான சாதிவெறிக் கேலிச் சித்திரத்தை அவர்கள் கவனித்து ஏதும் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்களில்லை.

01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு செல்லன் கந்தையன் வழங்கிய செவ்வியில் “இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால் வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம் புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.

‘தினமுரசு’ பத்திரிகைக்கு 23.02.2003-ல் வழஙகிய நேர்காணலில் “ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த என்னுடைய பெயர் நூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் இடம்பெற்று விடக்கூடாது என்பதற்காகவே திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது” என்றார் செல்லன் கந்தையைன்.

பின்னொரு நாளில் இந்தியத் தூதுவரகத்தால் யாழ் நூலகத்துக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்ட வைபவத்தில் செல்லன் கந்தையன் கலந்துகொண்டார். அப்போது அவர் உணர்சிபொங்கக் கண்ணீர் மல்கி இவ்வாறு பேசினார் என்பதை Sunday Times பதிவு செய்து வைத்திருக்கிறது:

“சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடுபவர்கள் என சொல்லிக்கொள்ளும் விடுதலைப்புலிகள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் நூலகத்தை திறந்து வைக்கும் வரலாற்றுப் பெருமையை தடுத்து நிறுத்தியுள்ளனர்” (The controversy over the opening of the Jaffna library which was postponed has drawn in the issue of caste. The former Mayor of Jaffna, Sellan Kandaiyan is on record saying that though the LTTE was supposed to be carrying its struggle for the oppressed low caste, now they have deprived him of opening the library and going down in history as a member of the low caste who had the privilege of opening the building. In a moving speech at the ceremony of the Indian High Commission handing over a donation of books to the Jaffna Library last Monday at the Indian Cultural Centre, Mr. Kandaiyan broke down in tears and recounted the story of the attempts he made to get the library opened.)

இந்தப் பின்னணியினதும் சாட்சியங்களினதும் அடிப்படையில்தான் தலித் அரசியலாளர்களும் இடதுசாரிகளும் எழுத்தாளர்களும் நிகழ்ந்த சாதிவெறியைக் கண்டித்தும், செல்லன் கந்தையனுக்கு நியாயம் கோரியும் எழுதினார்கள். அப்போது நாங்கள் சிலபேர் இயங்கிய ‘NON’ என்ற குழு வெளியிட்ட ‘ஒரு வரலாற்றுக் குற்றம்’ என்ற சிறுநூலே முதலில் இதை விரிவாக ஆவணப்படுத்தியது என நினைக்கிறேன். இந்தச் சிறுநூலை சாதி எதிர்ப்புப் போராளியான தாயார் காசிநாதர் மணிமேகலை அவர்களின் நினைவாக மறுபிரசுரமாக்கி, சுவிஸ் யோகா மாஸ்டர் நூற்றுக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார். பல்வேறு எழுத்தாளர்களும் நிகழ்ந்த சாதிவெறியைக் கண்டித்து எழுதினார்கள். ‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’ என்ற ஆவண நூலில் வெகுஜனன் – இராவணாவால் இந்தச் சாதிவெறிச் செயல் கண்டிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டது.

சோமிதரனும் சயந்தனும் நீண்ட காலமாகவே, செல்லன் கந்தையன் சொன்னதை மறுத்துவந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தங்களுடைய மறுப்புக்கு ஆதாரங்கள் எதையுமே நேற்றுவரை வைத்திருக்கவில்லை. இன்று அவர்கள் ஓர் ஆதாரத்தை உருவாக்கிவிட்டார்கள். அவர்கள் செல்லன் கந்தையைனை நேர்கண்டு ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான ஒரு வரலாற்று நிகழ்வை வெறும் மூன்றே நிமிடக் காணொளியின் மூலம் தெளிவுபடுத்த நினைக்கும் அவர்களது முயற்சி வியக்கத்தக்கது. அதனிலும் வியக்கத்தக்கது செல்லன் கந்தையனிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகள்.

செல்லன் கந்தையன் நூலகத் திறப்புவிழா குறித்து, அவர் இதுவரை கூறிவந்த எல்லாச் செய்திகளையும் மறுப்பதுபோன்ற தொனியில் இக்காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நூலகத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டதற்குக் காரணம் சாதியம் அல்ல.

இது உண்மையாகவே இருந்தால், இது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. நூலகத்திலிருந்து செல்லன் கந்தையனின் பெயர் பதிக்கப்பட்ட கற்பலகை சென்ற ஆண்டு பெயர்த்தெடுக்கப்பட்டதை நாம் மறந்துவிடலாம். தினக்குரல் வரைந்த கேலிச் சித்திரத்தில் உள்ளவர் செல்லன் கந்தையனே இல்லை என்றுகூட நாம் ஆறுதல் அடையலாம். ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை உள்நோக்கமுடையது என நாம் முடிவு செய்துவிடலாம். ஆனால் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் தினமுரசுவுக்கும் டெய்லிமிரருக்கும் தனது வாயால் சொன்ன செய்தியை நாம் எப்படி மறக்க முடியும்? இந்தியத் தூதரக வைபவத்தில் அவர் கண்ணீர் மல்க நின்று “எனக்குக் கிடைத்திருக்கவேண்டிய வரலாற்றுப் பெருமை என் சாதி காரணமாகவே எனக்கு மறுக்கப்பட்டது” எனச் சொன்னதை நாம் எப்படி மறக்க முடியும்?

இந்தக் கேள்விகளையல்லவா செல்லன் கந்தையனை நேர்கண்டவர் கேட்டிருக்க வேண்டும். செல்லன் கந்தையன் வழங்கிய பத்திரிகை நேர்காணல்கள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டனவா? இந்தியத் தூதரக வைபவத்தில், “ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவர் ஒருவர் நூலகத்தை திறந்து வைக்கும் வரலாற்றுப் பெருமையைப் புலிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்” எனப் பேசுமாறு அவர் வற்புறுத்தப்பட்டாரா? என்றெல்லாவா கேட்டிருக்கவேண்டும். இந்தக் கேள்விகள் ஏன் தவிர்க்கப்பட்டன. இதுதானே இந்நேர்காணலின் மையக் கேள்வியாக இருக்க முடியும்! இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, இந்தக் கேள்வியையும் அவர்கள் செல்லன் கந்தையனிடம் கேட்டுப் பதிலைப் பெற்று வெளியிட்டுவிட்டால் நமக்குப் பூரணமான தெளிவு கிடைத்துவிடும். யாழ் நூலகத்தின் மீதும் புலிகளின் மீதும் விழுந்த வரலாற்றுக் கறை முழுவதுமாகவே துடைக்கப்பட்டுவிடும். அது எனக்கும் மகிழ்ச்சியே.

அதேவேளையில் யாழ் நகரத்தின் முதலாவது தலித் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான செல்லன் கந்தையன் ஒரு வடிகட்டின பொய்யரே என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். செல்லன் கந்தையன் பொய்யரே என நிறுவும் முயற்சியில் முதல் கட்டமாக மூன்று நிமிட வெற்றி சயந்தனாலும் சோமிதரனாலும் சாதிக்கப்பட்டுவிட்டது.

பார்க்கலாம், வரலாறு நமக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது என்று…

நிகழ்ந்த உண்மைகளைத் தெட்டத் தெளிவாக அறிந்தவர்களும், அந்த உண்மைகளை ஆவணப்படுத்தக் கூடியவர்களும் நம்மிடையே ஏராளமாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது கனத்த மவுனமே பலவேளைகளில் ஒடுக்குபவர்களுக்குச் சாதகமாகவும் வாய்ப்பாகவும் மூடுதிரையாகவும் அமைந்துவிடுகிறது. ‘ஓர் இன ஒடுக்குமுறையின் போது மவுனம் சாதிப்பவர்களும் யுத்தக் குற்றவாளிகளே’ என்பார்கள். அது சாதி ஒடுக்குமுறைக்கும் நிச்சயமாகவே பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *