சுகனின் கவிதை – 18.04.2006

கட்டுரைகள்

Paris nord இலிருந்து Sarcelles இற்கு
ரயிலில் நண்பர்கள் மூவர் சென்று கொண்டிருந்தோம்.
நம்பாவிடில் செனறு கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.அருகிலுள்ள கடையொன்றில்
நாங்கள் போகும் வீட்டிலுள்ள குழந்தைக்கு
ஒரு சொக்கிலேற் பக்கற் வாங்குகிறோம்.

வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம்
எங்கள் நண்பரில் ஒருவர் நடையை நிறுத்துகிறார்
நாங்கள் “என்ன” என்று கேட்கிறோம்.
“நான் வரயில்லை வீட்டை போகப் போகிறன்” என்கிறார் நண்பர்.
“ஏன்” என்கிறோம்
“இல்லை எனக்கு என்னவோ செய்யுது.. நான் வரயில்லை
வீட்டை போகப் போறன்” என்று திரும்பிப் போகிறார்.

வீட்டிலிருந்த அவரது நண்பர் கேட்கிறார்
“Sarcelles இற்குப் போறதெண்டு போனனீங்கள்..திரும்பி வந்து நிற்கிறீங்கள்.. போகயில்லையே ?”
“இல்லை எனக்கு என்னவோ செய்யுது நான் படுக்கப் போறன்”
என்று படுக்கையறைக்குச் செல்கிறார்.

வீட்டுக் கதவு தட்டப்படுகிறது
“உங்கள் வீட்டிலிருந்து ஒரு குழந்தையொன்று
மாடி யன்னலால் விழுந்து விட்டது..?!
நாங்கள் அவசர உதவிப்பிரிவிற்கு அறிவித்திருக்கிறோம்”
என்கிறார் கதவைத் தட்டிய நபர்
“இல்லையே எங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லையே”
என்று யன்னலாற் பார்க்கிறார் அவரது நண்பர்.

எங்கள் நண்பர் உள்ளாடையுடன் நிலத்தில்விழுந்து கிடக்கும் காட்சி தெரிகிறது
நம்பாவிடில் தெரிகிறதாக வைத்துக் கொள்ளுங்கள்.

-சுகன்- 18.04.2006