இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறை: கூட்டறிக்கை

அறிவித்தல்கள்

 

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றின் கூட்டறிக்கை:

-06 மார்ச் 2018

இவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள், நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. வடக்கு – கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களான நாம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் இவ்வன்முறை தொடர்பில் பெரும் கவலை கொள்கிறோம்.

இந்த அரசாங்கம் முந்தைய ஆட்சியில் அளுத்கமவில் நடந்தேறிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்ற சம்பவங்கள் இனி மேல் இடம்பெறா என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தன. ஆட்சிக்கு வந்து அளுத்கமவில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய தவறியிருக்கிறது. அதனாலேயே இன்று கண்டியிலும் அம்பாறையிலும் அதற்கு முன்னர் காலியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி இருக்கின்றன. வன்முறைகள் பரவாதவாறும் வன்முறைக்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதும் அரசாங்கம் எடுக்க வேண்டிய  உடனடி நடவடிக்கைகள் ஆகும்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் முஸ்லீம் மக்கள் தொடர்பிலான அச்ச / வெறுப்பு மனப்பான்மை தொடர்பிலும் நாம் பெரிதும் அச்சம் கொள்கிறோம். அத்தகைய அச்சமானது இவ்வன்முறைக்கு தேவையான சூழமைவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இத்தகைய மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும். முஸ்லீம் சமூகத்திற்கு இவ் இக்கட்டான வேளையில் எமது சகோதரத்துவத்தை தெரிவித்துக் கொள்வதோடு சமூகங்களுக்கிடையிலான அச்ச உணர்வுகளைக் களைவதற்கு சேர்ந்து பணியாற்ற எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வன்முறைகளுக்கு காரணமான தொடர்  பொறுப்புக்கூறாத்தனத்திற்கு எதிராக செயலாற்ற உறுதி பூணுகிறோம்.

Tamil Civil Society Forum
Adayaalam Centre for Policy Research
Centre for the Promotion and Protection of Human Rights (Trincomalee)
Jaffna University Teachers Association
Jaffna University Employees Union
Justice and Peace Commission, Diocese of Jaffna
SUYAM – Centre for Women’s Empowerment
SUYAMPU – Theatre Active Movement

 

நன்றி: தமிழ் சிவில் சமூக மையம்

1 thought on “இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறை: கூட்டறிக்கை

  1. ஆரோக்கியமாக எழுகிற தமிழ் குரல் நிம்மதிதருகிறது. தமிழரும் மலையகதமிழரும் முஸ்லிம்களும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாவதும் வளர்ந்துவரும் சிங்கள ஜனநாயக சக்திககளை நம்கண்டு கைகோர்ப்பதும் காலத்தின் கோரிக்கை. முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதும் முஸ்லிம்கள் தனிமைப்படுவதும் என்கிற நச்சுவட்டம் என்னை அச்சுறுத்துகிறது. முஸ்லிம்களோடு நாம் எல்லோரும் மனப்பூர்வமாகச் சேர்ந்து இந்த நச்சுவட்டத்தை தகர்த்தாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *