தேசம் நெட்டின் கோழைத்தனம்!

கட்டுரைகள்

-லீனா மணிமேகலை

ழி நாணுவார் என்ற தோழர் ஷோபாசக்தியின் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் என்னைப் பற்றிய அவதூறுகளுக்கான பதிலாக “அவதூறு என்பது பலவீனர்களின் முதலும் கடைசியுமான ஆயுதம்” என்ற என் கருத்தை, உங்களால் அவமரியாதை செய்யப்பட்டவர் என்ற வகையில் என் மறுப்புரையை, உங்கள் தளத்தில், பின்னூட்டமாக ஏன் வெளியிட மறுத்தீர்கள் ஜெயபாலன்?

மட்டறுப்பு என்பது முதுகெலும்பை கழற்றி வைப்பதற்கென்றால், ஜெயபாலன் அவர்களே, உங்களுக்கெல்லாம் எதற்கு ஒரு இணையதளம், செய்தி, கட்டுரை, விவாதம் மண்ணாங்கட்டியெல்லாம்?

ஒருவரைப் பற்றிய அவதூறுகளையும், வதந்திகளையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் வக்கிர புத்தி தலை தெறிக்க பதிப்பிக்க முடியும், ஆனால், அதற்கு மறுப்புரையோ, வாதமோ எழுதியனுப்பினால், அதை வெளியிட துப்பிருக்காதென்றால், தேசம் நெட் என்ற இணையதளத்தின் நோக்கம் என்ன? இந்த மோசடிகளின் மூலம் ஜெயபாலன்,மற்றும் அவர் அனுமதிக்கும், நியமிக்கும் பின்னூட்டவாதிகள் நிறுவ விரும்புவது என்ன? இதற்கெல்லாம் பிண்ணனி யாது?

அப்பாவி மக்களுக்கு மத்தியில் குண்டு வைத்துவிட்டுப் போகும் மூட வன்முறையாளர்களுக்கும், தேசம்நெற், வினவு போன்ற தகாத சொற்களின் மூலம் பெண் படைப்பாளியை பாலியல் பலாத்காரம் செய்து பார்க்கும் இணையதள வக்கிர வன்முறையாளர்களுக்கும் சிறிதும் வித்தியாசமில்லை.

இந்த இணையதளத்தின் எடிட்டர்களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் இந்த வெளியில் எழுதும் படைப்பாளிகளுக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமையிருக்கிறது.