வடக்குக் கிழக்கும் தமிழர் தேசியமும்

கட்டுரைகள்

கிழக்கில் சிங்கள மக்களின் குடியேற்றத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியர்கள் தென்னிலங்கையில் தமிழ் மக்களின் குடியேற்றத்தை எதிர்ப்பதில்லை என்பது அவர்களது இரட்டைவேட இனவாத அரசியல் நிலைப்பாடாகும

தமிழரசன்

tamilarasan

னிதர்களின் பரிணாம வளர்ச்சிக் கட்டத்திலே கிட்டத்தட்ட 200000 வருடங்களுக்கு முன்பாகவே மனிதர்கள் குடிபெயரத் தொடங்கி விட்டனர். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தமது ஆபிரிக்கத் தாய் நிலத்திலிருந்து ஏனைய இடங்களுக்குப் பரவத் தொடங்கினர். பழங்கால மனிதர்கள் இயற்கையைப் பின் தொடர்ந்து சென்றார்கள். ஆறுகள் குளங்கள் நீரோடைகள் கொண்ட நிலங்களையும் மந்தை வளர்ப்புக்கேற்ற சிறந்த மேய்ச்சல் தரைகளையும் நோக்கிக் குடிபெயர்ந்தார்கள். வேதங்கள், பைபிள் மகாவம்சம், குரான் உட்பட ஆதி நூல்கள் மனித குடியேற்றம்பற்றிக் கூறுகின்றன. நாடோடி வாழ்க்கையில் தேசம், தேசியம் என்ற எல்லைகள் இருக்கவில்லை. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க புதிய இடங்களுக்கு குடிபெயர்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மக்கள் ஆக்கிரமிப்பதற்காகவும் அந்நிய மக்களை அடிமைகொள்வதற்காகவும் குடிபெயர்ந்து செல்வதில்லை. மாறாக புதிய பொருளாதார வாழ்வைப் பெறுவதற்காகவும் உயிர் தப்பிப் பிழைப்பதற்காகவும் குடிபெயர்கிறார்கள். மக்களின் இடப்பெயர்வு என்பது மனிதசமூக முன்னேற்றத்தின் விதியாக இருந்தது. புதிய உற்பத்தியை, அது சார்ந்த புதிய நாகரீகங்களை அவர்கள் குடியேற்றங்களின்போது படைத்துக் கொள்கிறார்கள்.

கொலனிக் காலத்தில் சீனர்கள், இந்தியர்கள், ஆபிரிக்கர்கள் தாம் பிறக்காத இதுவரை கண்டு கேட்டறியாத புதிய பிரதேசங்களுக்கு உழைப்பாளர்களாகச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அமெரிக்கக் கண்டத்திற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பல மில்லியன் மக்கள் குடிபெயர்ந்தார்கள். நிலமற்றவர்கள், ஏழைவிவசாயிகள், கடனாளிகள், குற்றவாளிகள், சாகசவிரும்பிகள் அமெரிக்கக் கண்டத்தில் புதியவாழ்வு தேடிச் சென்றார்கள். 1815 முதல் 1859 வரை மட்டும் பிரிட்டனிலிருந்து 4 மில்லியன் மக்கள் குடியேறினார்கள். 1880 முதல் 1889 வரை ஜேர்மனியிலிருந்து 1.5மில்லியன் பேர் நீண்ட கடற்பயணத்தினூடு அமெரிக்காவைச் சென்றடைந்தனர். சுவீடன், இத்தாலி, ஸ்பெயின், கங்கேரி,ருஷ்யா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்து 13.4 மில்லியன் மக்கள் 1900-1914 ஆண்டுகளுக்கிடையில் குடிபெயர்ந்து சென்றார்கள்.

அமெரிக்கக் கலாச்சாரம் என்பது பல்லினக் கலாச்சாரமாகும். பல கண்டத்து மனிதர்களின் கறுப்பு வெள்ளை நிறம் படைத்தவர்களின் குவிமையமாகும். 19ம் நூற்றாண்டில் அயர்லாந்தில் நிலம் இழந்த விவசாயிகள் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தார்கள். இலங்கையில் தேயிலை இரப்பர் பயிர்ச் செய்கைக்காக இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்குக்; கொண்டுவரப்பட்டார்கள். இவர்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் வந்தவர்களாக பிற்காலத்தில் சிங்கள இனவாதம் விளக்க முற்பட்டது. தேசிய இனத்தின் நிலம் பாரம்பரியப் பிரதேசம் என்ற கருத்துக்கள் தனியே தேசியப் பிரச்சனையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாகும். அது மனிதப் பொதுவான வளர்ச்சிகட்கு தற்காலிகமாகவேனும் தடையாக உள்ளது.

இன்று தினசரி இத்தாலிய ஸ்பானியக் கடற்கரைகளில் உயிருடனும் பிணமாகவும் வந்தொதுங்கும் ஏழை ஆபிரிக்கச் சீவன்களை ஐரோப்பாவின் தொழில்கள், இருப்பிடம் ,பெண்களைக் கைப்பற்ற வந்தவர்களாக விளக்கத்தக்க தேசியவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் குடிபெயர்வுகளை எந்த வகையிலும் நிறுத்தமுடியாது. 2000 ஆண்டில் உலகின் 172மில்லியன் பேர், தாம் பிறந்திராத நாடுகளில் குடியேறி வாழ்ந்தனர். இத்தொகையானது 2005 இல் 191 மில்லியனாக அதிகரித்தது. இன்றுள்ள அவுஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 25 வீதமான மக்கள் அந்த நாட்டில் பிறக்காதவர்களாகும். இன்று ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 44 மில்லியன் வெளிநாட்டவர்கள் குடியேறியுள்ளனர். தூய ஆரிய இனம், ஆரியர்களின் நிலம்பற்றிய கோட்பாடுகளை ஒருபொழுதில் கொண்டிருந்த ஜேர்மனியின் மக்கள் தொகையில் 20 வீதமானவர்கள் வெளிநாட்டவர்களாகவோ வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களின் சந்ததிகளாகவோ உள்ளனர். 1951இல் ஜேர்மனியின் மக்கள் தொகையில் 1 வீதம் மட்டுமே வெளிநாட்டவர்கள். இது 1979ல் 6 சதவீதமாகவும் 2005ல் 8.8 வீதமாகவும் உயர்ந்தது. இன்று 6.7 மில்லியின் வெளிநாட்டவர்கள் ஜெர்மனியில் வாழ்கிறார்கள். 1.3 மில்லியன் ஜேர்மனியர்கள் ஒரு வெளிநாட்டு ஆணையோ பெண்ணையோ தமது வாழ்க்கைத் துணையாகக் கொண்டுள்ளனர். இந்தக் கலப்புத் திருமண வளர்ச்சி விகிதம் 1996ஐ விட 2005இல் 86 வீதத்தால் அதிகமாகும். 2026ஆம் ஆண்டில் ஒரு ஜேர்மனியப் பெண்ணுக்குச் சராசரியாக 1.1 குழந்தையும் வெளிநாட்டுப் பெண்ணுக்குச் சராசரியாக 2.1 குழந்தையும் இருக்கும் எனவும் 50 வீதமான குழந்தைகள் வெளிநாட்டு மூலத்தைக் கொண்டிருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும் ஜேர்மனிய நகரங்களிலும் தொழிற்துறை வளர்ச்சிகண்ட மாநிலங்களிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். வடக்கு-றையின் வெஸ்பாலன் மாநிலத்தில் 27 சதவீதமாகவும் பாடன் வூடன்பேர்க் மாநிலத்தில் 18 சதவீதமாகவும் பவேறியாவில் 16 சதவீதமாகவும் ஜேர்மனியர் அல்லாத மக்களின் தொகை உள்ளது. பெரு நகரங்களான frankfurt- mainsy இது 25 சதவீதமாக munichல் 20 சதவீதமாகவும் offenbach நகரில் மூன்றில் ஒரு பகுதியாகவும் வெளிநாட்டவர்கள் தொகை உள்ளது. ஜேர்மனியில் உள்ள 9.7 மில்லியன் மாணவ மாணவிகளில் 10 சதவீதம் வெளிநாட்டுக் குடியேறிகளின் பிள்ளைகளாகும். ஜேர்மனி குடியேறிகளின் நாடு அல்ல என்ற புதிய பாசிஸ்டுகளின் குரலை அலட்சியம் செய்து ஜேர்மனி ஒரு பல்லின மக்களின் வாழ்வில் வேகமாகப் பிரவேசிக்கின்றது.

ஜேர்மனியில் வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்படும் 137000 சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் 600000 பேர் பணிபுரிகிறார்கள். ஜேர்மனியின் மொத்தக் கால்பந்தாட்ட வீரர்களில் 43 சதவீதமானவர்கள் வெளிநாட்டுக்காரர்களாவர். இங்கு புதிய பாசிஸ்டுகளின் “தந்தையர் நாடு” என்ற குரல் செத்து வருகிறது. குடும்பம் திருமணம் இவைகளின் தகர்வு குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத பல மில்லியன் ஆண் பெண்களை உருவாக்கியுள்ளது. குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஜேர்மனிய வரலாற்றிலே இல்லாத அளவு குறைவடைந்து ஜேர்மனிய இனமானது தானே சாகத் தொடங்கிவிட்டது. அதீத நுகர்வுக் குணாம்சம,; தீவிர முலாளித்துவத் தனிமனிதவாதம், ஐரோப்பியக் கூட்டமைப்பு, உலகமயமாதல், ஜேர்மனியின் இனம், நாடு போன்ற உணர்வுகளை சொல்லமுடியாத வேகத்தில் தகர்த்தெறிந்து வருகின்றது. கல்வியாளர்கள் மருத்துவர்கள் தொழிற்துறை பயிற்சிபெற்ற நிபுணர்கள் தொழிலாளர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலமை, எதிர்காலத்தில் தடுக்கமுடியாதபடி முன்னே நிற்கிறது. நாடு கடந்த பொருளாதார செயற்பாடுகள், மனிதக் குணங்களை ஒரேதன்மையாய் படைக்கத் தொடங்கிவிட்டது. ஜேர்மனியிலிருந்து வருடாவருடம் 200000 ஜேர்மானியர்கள் வெளிநாடுகளுக்கு நிரந்தரமாய் குடியேறச் செல்கின்றனர். 2005இல் 147000 பேர் வேலை தேடியும் 2004இல் 69000 பேர் கல்வி கற்கவும் வெளிநாடுகளுக்குப் போய் விட்டார்கள். இனி தேசியவாதக் கோட்பாடுகளுக்கோ பாசிசத்திற்கோ இடம் இல்லை. ஐரோப்பிய மயமாதல்,உலக மயமாதல் ,தேசியம் கடந்த நிலைக்கு மனிதர்களை மாறும்படி வற்புறுத்துகிறது. யூதர்கள், சிந்தி, ரோமா, ஆபிரிக்கர்கள் ஆபிரிக்க ஜேர்மானியக் கலப்பினத்தவர்கள், சிலாவியர்கள் என்று சகலரையும் அழித்துத் தூய ஜேர்மானிய இனத்தைப் படைக்கும் கனவுகளை மனித சமுதாயத்தின் வலிமையான வளர்ச்சி விதிகள் அழிக்கின்றன.

தொழிலாள வர்க்கத்திற்கு நாடு இனம் என்பதெல்லாம் கிடையாது என்பதுதான் மார்க்ஸ்சியம். சர்வதேசியமென்பது தேசியத்தை எதிர்த்துத்தான் பிறந்ததாகும். தேசியத்தைத் தோற்கடித்தே சோஷலிசப் புரட்சிகள் பூர்த்திசெய்யப்பட்டன. மார்க்சியம் தேசியத்திற்கும் மூலதனத்திற்திற்கும் எதிரான போராட்டத்தை நடாத்திய வரலாற்றினூடாகவே வளர்ந்தது. தேசியம் எப்பொழுதும் சோஷலிசத்தின் எதிரியாகவே வந்துள்ளது. ஹிட்லரின் தேசிய சோஷலிசம் ஜேர்மனியத் தொழிலாளர்களை சோஷலிசத்திலிருந்து திசைதப்பச் செய்த அரசியலாகும். தேசியம் – சுயநிர்ணயம் ஆகியவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திய முலாளியஅபிவிருத்தியாகவும் சோஷலிசத்திற்கு முந்திய பொருளாதார சக்திகளை தொழிற்துறைகளை வளர்க்கும் ஒன்றாகவே மாக்சியம் விளக்கியிருக்கிறது. தேசியம் மிகத் தொன்மையான சமுதாய அரசியற்போக்கல்ல. அது வரலாற்றில் மிகவும் இளையது. சில நூறு வருடங்கள் வயதுடையதாகும். பிரான்சின் தேசிய கீதம் 1792ற்தான் ரூகே என்பவரால் எழுதி இசையமைக்கப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது தேசிய கீதம். அவ்வாறே இத்தாலிய தேசிய கீதம் 1847ல் கொப்ரெடோ மமிலிம்மால்இயற்றப்பட்டது. ஜேர்மனியத் தேசியக் கொடியும் தேசிய கீதமும் நெப்பொலியனுக்கு எதிரான போராட்டத்தில் பிறந்து பிற்காலத்திலேயே உருவானது. ஜேர்மனிய தேசிய இன உருவாக்கம் பிஸ்மாக்கின் காலத்தில் இரத்தத்தாலும் இரும்பாலும் நெருப்பாலும் படைக்கப்பட்டது. இந்தியாவின் தேசியம் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் எழுந்தது. தேசியமென்பது ஒரு குறிப்பிட்ட புவியல் பரப்பில் நாட்டு எல்லையுள் மக்களை, இனக் குழுக்களை ஒன்றிணைத்து பரந்த நாடு தழுவிய பொருளாதாரத்தையும் பேச்சுமொழியையும் பண்பாட்டையும் உருவாக்குவதாகும்.

இங்கு வர்க்கங்கள் மறைந்து அழிந்து விடுவதில்லை. மாறாக வர்க்கங்கள் எதிரும் புதிருமாக அரசியல் மற்றும் கருத்துரீதியில் பலமடைகின்றன. உழைக்கும் வர்க்கங்கள்; தமது வாழ்வதற்கான போராட்டத்தை நிறுவுகின்றன. தொழிலாளர் இயக்கங்களையும் தொழிற் சங்கங்களையும் நிறுவி சக்தி படைத்ததாக்கின்றன. முதலாளியம் தொழிலாளர்களை சோலிசத்திற்கு வரவிடாமல் இனரீதியிற் பிளந்தபோதுதான் சிறிய இனங்களின் தேசிய விடுதலையை ஆதரிக்கும் செயற்தந்திரமாக சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு சோஷலிசத்துள் வந்து சேர்ந்தது. அதுவும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் மாத்திரம் வந்து சேர்ந்தது. முதலாளித்துவப் புரட்சி நடந்த நாடுகளில் எதிர்ப்புரட்சிக்கு சேவை செய்தது. சோஷலிசம் முன்மொழிந்த தேசிய இனங்களின் விடுதலை என்பது ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது முதலாளித்துவப் பொருளாதார கடமைகளை நிறைவேற்றிக்கொண்டு சோலிசத்தை நோக்கி வளர்வதாகும். லெனின் காலத்திய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு என்பது அன்றய ருஸ்சியப் புரட்சியின் உள்-வெளி நிபந்தனைகளின் விளைவாக இருந்தது. ஒரு புரட்சியின் அக மற்றும் புறரீதியிலான பொருளாதார அம்சங்கள் மாறும் என்ற சமுதாய இயங்கியற் போக்கை நாம் விளங்க வேண்டும். தேசிய இனச் சுயநிர்ணய உரிமையை எக்காலத்தக்குமான மாறாநிலைவாதக் கோட்பாடாகக் கொள்வது சமூக இயங்கியலை மறுப்பதாகும். உலக மயமாதல் என்பது என்ன? உலகின் முன்னேறிய தொழிற்துறை ஆற்றல் படைத்த ஏகாதிபத்திய நாடுகளின் தேசிய மூலதனங்கள் உலகளாவிய வடிவில் பிரமாண்டமாக ஒன்றிணைதல் என்பதுவே பொருளாகும். இங்கு வளராத தேசிய இனங்கள் இனி நின்று நிலைக்க முடியாது. எங்கு தேசியப் பொருளாதாரம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. உற்பத்தியும் நுகர்வும் உலகமயமாகும்போது தேசிய பண்புகள் இன அடையாளங்கள் ஒருபோதும் தொடர்ந்து வளராது. மாறாக அழிவு தொடங்கும்.

தேசியம், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக வாதிடுபவர்கள் உலகில் எந்தவொரு வெற்றிகரமான தேசிய விடுதலை இயக்கத்தையும் காண்பிக்க முடியாது. யூகோஸ்லாவியாவின் தேசியக் கிளர்ச்சிகள் முதல் கிழக்குத் திமோர்வரை ஏகாதிபத்தியங்களால் எற்படுத்தப்பட்ட பலாத்காரமான அறுவைச் சிகிச்சைகளாகும். அவர்களின் கூலி இயக்கங்களால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதம் மூலம் இனக் குழப்பங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டவையாகும். பாலஸ்தீன மக்களின் எழுச்சியும் ஈராக் ஆப்கானிஸ்தான் மக்களின் கலகங்களும் முழு இஸ்லாமிய உலகத்தினதும் எரிபொருள் வளங்களையுடைய நாடுகளதும் ஆதரவில் நடைபெறும் மேற்குலக நாடுகட்கு எதிரான அரசியலாகும். மார்க்சியவாதிகளாக அல்லாதவர்களான, ஆனால் பொருளாதார இயக்கம் பற்றிய கரிசனையுடைய முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கூட இன்று இதை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மார்க்சிய அரசியற் சொற்களை சில ஸ்டாலினிஸ்ட்டுகள் மனம்போனபடி பாவிக்கின்றார்கள். கலைச் சொற்கள் வரலாற்று வளர்ச்சியின் அனுபவச் சேமிப்புகளை உடையவை. அவற்றை உணர்ந்து பொருள் கொள்ளத் தெரிதல் வேண்டும். ஊகமாயும் எழுந்தமானமாயும் பாவிக்கக் கூடாது. இவர்கள் குறைபாடான தத்துவ அறிதல் முறையூடாகத் தேசியம் சார்ந்த விளக்கங்களின் துணை விபரங்களையும் கடந்தகாலத்தில் முற்றிலும் மாறான நிலமைகட்குப் பிரயோகிக்கப்பட்ட கருத்துக்களையும் நடப்புக்குப் பொருத்த முயல்கின்றனர். எதார்த்த நிலமைகளின் தேவைகளை அதற்கே உரிய தத்துவ நிலைகளில் நின்று எதிர்கொள்ள வேண்டும். வர்க்கத்திற்குச் சமமாய் தேசியத்தை நிறுத்தியது இனத்தூய்மைக் கோட்பாடாகப் பாசிசமாக உருமாற்றம் பெற்றதை ஏதோ மனிதகுல முன்னேற்றத்திற்கான புனித தேசியம் போல கட்டமைத்தல் நடைபெறுகிறது.

ஸ்டாலினிசம் மார்க்சியத்துள் கருத்து முதல்வாதத்தைக் கலந்தது. பொருள்முதல்வாத இயங்கியலில் இருந்து விலகிச் சென்றது. பல்தேசிய இனங்கள் வாழும் சோவியற் யூனியனை ருஷ்சிய வகைப்பட்ட தேசிய சோஷலிசமாய் மாற்றியது. ருஷ்சிய தேசபக்தியை வர்க்க உணர்வுக்கு மாற்றாக்கியது. மேற்குலக மார்க்சியவாதிகள் ஸ்டாலினிசத்திற்கு மரியாதை தருவதில்லை. வளர்ச்சியடையாத விவசாயக் குணாம்சமுடைய முரட்டுச் சமூகநிலமைகளுக்கு மட்டுமே ஸ்டாலினிசம் பொருத்தமாய் இருந்தது. முன்னேறிய பாட்டாளி வர்க்கத்தின் நாகரீக அரசியலுக்கு ஸ்டாலினிசம் பொருத்தமற்றதாகும். அது அரசியல்ரீதியில் வறிய சித்தாந்தமாகும். மார்க்சியமானது எக்காலத்துக்குமானதாய் நடப்பை நுட்பமாகக் கவனித்து மதிப்பிட்டு நாளாந்த நிகழ்வுகளுடன் ஒப்பு நோக்கி பொதுமைப்படுத்தி தத்துவநோக்கில் சரிபிழை பார்க்கப் பயிற்றுவிப்பதாகும்.

தேசியம், வர்க்கம் கடந்ததல்ல. மாறாக வர்க்க முரண்பாடுகளின் தீவிர நிலையை நோக்கி வளரும் அரசியல் விளைநிலமாகும். தேசிய உருவாக்கமென்பது அதற்கு முந்திய விவசாயப் பொருளாதாரத்தின் சிறு உற்பத்தி வடிவங்கள், தந்தைவழிச் சமூகம் , குடும்ப இறுக்கம் இவைகளைத் தகர்த்து, பரந்த மனிதத் தொடர்பு, போக்குவரத்து, புதியதாக மொழிவளர்ச்சி, கல்வியறிவு, ஜனநாயகங்களைச் சாதிக்க வேண்டும். ஆனால் புலிகள் தமிழ் பகுதிகளில்; ஒரு சிறு சமூக பொருளாதார செயற்பாட்டையும் சாதிக்கவில்லை. தமிழ் சமூகம் காற்றை உறிஞ்சிக்கொண்டு வாழ முடியாது. அவர்கட்கு சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் உருவாகாது விட்டால் எந்த மனித முன்னேற்றமும் வராது. முதலாளிய ஜனநாயகமும் பன்மைத் தன்மையும் வளராது. புலிப் பாசிசம் தமிழ் சமூகத்தை ஒட்டச் சுரண்டி அதன் கடைசிப் பொருளாதாரச் சக்திகளையும் உறிஞ்சி விட்டது. புலியை பாசிச அமைப்பு என்று ஒப்ப பலருக்கு மனமில்லை. பாசிசம் வரலாற்றில் நேரடியாக மூலதன சக்திகளிலிருந்து உருவாகியதில்லை. ஜேர்மனிய இத்தாலிய கிரேக்க ஸ்பானிய பாசிச அடிப்படைகள் நடுத்தர வர்க்கத்திடமும் சமூக உதிரிகளிடமும் இருந்தே உருவாகியது. ஈராக்கில் குர்திஸ் விடுதலை அமைப்புகள் யாவும் அமெரிக்காவின் இராணுவப் படைப் பிரிவுகளாகிவிட்டன. முழு ஈராக்கிய மக்களுக்குமெதிரான பாசிஸ்டுகளாக குர்திஸ் விடுதலை அமைப்புகள் ஆகிவிட்டன. ஈரானிய ஈராக்கிய குர்திஸ் அமைப்புகள் பல பத்துவருடங்களாக இஸ்ரேலிய அமெரிக்க இராணுவ நிதி உதவிகளாலேயே வளர்ந்து உருவாகின. இன்று தேசிய இயக்கங்கள் எதுவும் சுயமாய் சொந்த மக்களிடம் தங்கி இருக்கவில்லை.

சுயநிர்ணய உரிமையை விதந்து உரைத்துவரும் சில ஸ்டாலினிஸ்டுகள் தேசிய இனங்கள் மேலான ஸ்டாலினின் பலவந்தத்தைப் பேசுவதில்லை. லெனினே சுட்டிக்காட்டிய ருஷ்சிய பெரும் தேசியவாதத்தைப் பொருட்படுத்துவதில்லை. ஸ்டாலினிசம் தத்துவத்திற்குப் பதில் வன்முறையை ஏவியது. ஜேர்மானியர்களின் வொல்கா குடியரசு முதல் யூதர்களின் குடியரசுவரை இல்லாது ஒழிக்கப்பட்டன. 1939 முதல் 1952 வரை பல மில்லியன் ஆசியக் குடியரசுகளின் மக்களினங்கள் பலவந்தமாய் சைபீரியப் பகுதிகளுக்கு குடிபெயர்க்கப்பட்டன. 1946ல் ஈரானின் குர்திஸ் மக்களுக்கு ஸ்டாலின் ஆயுதம் இராணுவப் பயிற்சி வழங்கியதுடன் 23 ஜனவரி 1946இல்; மகாபாட் குடியரசு அமைக்கவும் உதவினார். ஆனால் அதே வருடம் முடிவதற்கிடையில் ஈரானுடன் அதன் வடபகுதி எண்ணைபெறும் ஒப்பந்தத்தில் உடன்பாடு கண்டவுடன் குர்திஸ் மக்கள் ஸ்டாலினால் கைவிடப்பட்டனர். குர்டிஸ் மக்களின் தலைவரும் மகாபாட் குடியரசை செம்படையின் உடை அணிந்து பிரகடனப்படுத்தியவருமான ஹாஜி மொகமட் ஈரானால் கைதுசெய்யப்பட்டு அவரின் தோழர்களோடு 1946இல் தூக்கிலிடப்பட்டார். இவர் ஒரு சிறந்த கொம்யூனிஸ்டும் செம்படையால் பயிற்றப்பட்டவருமாவார். ஸ்டாலின் எரிபொருள் வளத்தைப் பெறுவதற்கு குர்திஸ் மக்களைப் பயன்படுத்திய அரசியற் துரோகம்தான் இது. இதில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஸ்டாலினிசத்தில் எங்கே தேடுவது.
மில்லியன் கணக்கான மக்களின் விதிபற்றி ஆராயும்போது தத்துவத்தை எப்படி முறைப்படுத்திப் பார்ப்பது என்பது தெரிய வேண்டும். மூலதனத்தின் வளர்ச்சியும் வர்க்கங்களின் வளர்ச்சியும் பரஸ்பர செயலாற்றல் என்பவற்றை மையமாய்க் கொண்ட ஆய்வு முறைகளைக் கைக்கொள்ள வேண்டும். சோவியற் புரட்சி குத்தீட்டிகள் கொண்ட துப்பாக்கிகளுடன் நடந்தது என்றால் அத்தகைய துப்பாக்கிகளை ஏந்தி இன்று புரட்சிகளைச் செய்ய முடியாது. இன்றைய முதலாளித்துவ இராணுவ வளர்ச்சிக்குச் சமமாகத்தான் சோஷலிய எழுச்சியும் தனது இராணுவத் தயாரிப்பைச் செய்யுமே தவிர போல்சவிக் கால இராணுவ யுத்த தந்திரங்களை பிரதிசெய்யாது. மனிதர்கள் சிந்திக்கும் திறன் கொண்ட பொருளாதார உயிரிகளாகும். இனம் தேசியம் பண்பாடு என்பதெல்லாம் உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியைப் பொறுத்தே உயர்வு தாழ்வு வளர்ச்சிகளை எய்துகின்றன. மனிதப் பண்பாட்டை வந்தடைகின்றன. வர்க்கங்கள் உள்ள வரை தூய ஜனநாயகத்தைப் பேச முடியாது. இனங்களின் சமத்துவத்தைக் கூட்டைக் கனவு காணமுடியாது. அழிவுகள் பற்றி முறையிடுவதும் தேசிய இனப் பிரச்சனைகளின் இராணுவ மோதல்களைக் கண்டு அரசியல் அறியாது திகைத்து நிற்பதும் மாக்ஸ்சியவாதிகளின் பண்பல்ல. லெபனானில் கிறீஸ்தவ சிறுபான்மையினரின் அமைப்பான ப்ளாங் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய உளவுப் பிரிவின் படைப்பிரிவாய் செயற்படுகிறது. ஸப்ரா ஸாலில்; பாலஸ்தீன மக்களின் அகதி முகாங்களில் கூட்டங்கூட்டமாய் இவர்கள் பாலஸ்தீன அகதிகளைக் கொன்றார்கள். இவர்கள் புலியை ஒத்த பாசிசக் குழுவாகும். சிறுபான்மைத் தேசிய இனம் சிறு மக்கள் பிரிவு என்பதெல்லாம் அவர்களின் பின்புலமுள்ள அரசியல் எத்தகையது எந்த சக்திகளின் வர்க்கத்தின் சார்பில்
உள்ளனர் என்பதைப் பொறுத்தே இறுதி முடிவு எட்டப்பட வேண்டும். மேற்கத்திய உலகுகள் தேசியத்தை உதிர்த்துவிட்டு உலகளாவிய ஆக்கிரமிப்பு அரசுகளாய் வளரும்போது வளாராத நாடுகளில் சிறு சிறு தேசிய இனங்கள் தேசியத்தை முன்வைப்பது மேற்குலக அரசுகளின் காவற்படைகளாக மாறுவதிலேயே முடிவடையும்.

உற்பத்திக் கருவிகள் மட்டுமல்ல மனிதர்களும் சமுதாய உற்பத்திச் சக்திகளாகும். மனிதர்கள் என்போர் உயிருள்ள உழைப்புச் சக்திகளாகும். அதற்கு இனம் மதம் தேசியம் என்ற பேதங்கள் கிடையாது. மனிதர்கள் என்றால் இன்றய உலகில் உலகமயமானவர்கள் உலகமயமாகி வருபவர்கள் என்று நாம் பொருள்கொள்ள முடியும். இதற்கு இன மத நிற பால் நாடு மற்றும் கண்டம் தழுவிய வேலிகள் நீண்ட காலத்திற்குத் தடை விதிக்க முடியாது.

தமிழத் தேசியவாதிகளின் தனிநாடு பொருளாதாரரீதியிற் சாத்தியமற்ற சர்வதேசமயமாதலின் கீழ் ஒருபோதும் எட்ட இயலாத கோசமாகும். ஈழவேந்தன் போன்ற ஆதித் தமிழரசுவாதிகள் புகலிட நாடுகளின் தொலைக் காட்சிகளில் தோன்றி ‘தமிழன் வாழவேண்டுமானால் அவன் தன்னை ஆளவேண்டும்.” ‘தமிழன் இல்லாத நாடில்லை, ஆனால் தமிழனுக்கென்றொரு நாடில்லை” என்ற இனவாத வகுப்பெடுக்கிறார்கள். உலகெல்லாம் உள்ள பலவித இன நிற நாகரீக மக்களோடு வாழும் தமிழ் மக்களை ஈழவேந்தனை ஒத்தவர்கள் இலங்கையின் 1980ம் ஆண்டு அரசியலுக்கு வருந்தி அழைக்கிறார்கள். பங்களாதேஸ் போராட்டம் எழுந்த காலத்தில் குடாநாட்டு நடுத்தரவர்க்கம் தனது யாழ்தேஸ் கோரிக்கையை எழுப்பியது. இக்காலத்தில் இவர்கள் ஒல்லாந்தர்கால நாற்சதுர வீடுகளையும், வீடுகளைச் சுற்றிச் சுற்றுமதில்களையும் உயர்வேளாளக் கற்புடைப் பெண்டிர் படித்தொழுகும் சைவமங்கையர்-,இந்துமகளிர் கல்லூரிகளையும் கொண்டிருந்தனர். அது ஒடுக்கப்பட்ட சாதிசனங்களை தம் வீடுகளிலும் முற்றங்களிலும் கோவில் குளங்களிலும் உள்ளேவிடாமல் தடுத்த கொடிய சமூகமாகும். இலங்கை மக்களை அடிமை கொண்டவர்களின் மொழியான ஆங்கிலத்தை அந்நியமாய்க் கருதாத இவர்கள் இலங்கை மக்களின் பெரும்பான்மை மொழியை மனமொப்ப மறுத்தனர். பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பணிபுரிந்த தமிழ் உத்தியோகத்தர் சமூகம் சிங்கள மொழியில் அறிவு பெற்றிருக்கவேண்டும் என்ற இயல்பான விடயத்தை தங்கள் மேலான சிங்கள மொழியின் திணிப்பென்று விளக்கினர். ஏழைச் சிங்களக் கிராமவாசிகள் இவர்களைப் பணிந்து தொரே, மாத்தையா என்று சொன்ன காலத்தைச் சிங்கள அரசகரும மொழிச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவந்தது.

தமிழ் நடுத்தரவர்க்கமும் அவர்களின் தேசியவாதமும் எப்போதுமே மேற்குலகம் சார்பானதாக இருக்கிறது. சிங்கள முஸ்லீம் விரோதமும், இடதுசாரி எதிர்ப்பும் ஒன்றிணைந்த அரசியலாக அது இருந்தது. தமிழ் ஈழத் தனிநாடு கேட்ட ஊர்காவற்துறை வ.நவரத்தினம் முதல் வவுனியா சி. சுந்தரலிங்கம் வரை சாதிவெறியர்களாகவும் பிரித்தானிய அபிமானிகளாகவுமே இருந்து வந்தனர். 1972ல் இலங்கை குடியரசாகப் பிரகடனப்பட்டபோது “மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் பிரசை என்ற தன் உரிமையை புதிய அரசியல் அமைப்புத் திட்டம் பறித்துவிட்டது” என சி. சுந்தரலிங்கம் முறையிட்டார். இவர் மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களைக் கோவிலுக்குள் விடக் கூடாதென்று லண்டன் பிரிவுக் கவுன்சில்வரை போகத் தயாராக இருந்தார். ஊர்காவற்துறை நவரத்தினம் பிரெஞ்சுக் கூலிப்படைகளைக் கொண்டு போராடித் தனித் தமிழ்நாடு எடுக்க முடியுமென்று அந்தக்காலங்களில் கூட்டங்களிற் பேசிக்கொண்டு திரிந்தார். இதேபோல் கடந்தவருடம் யூலைமாதம் லண்டனில் புலிகட்காக உண்ணாவிரத நாடகம் நடாத்திய இடைக்காடர் பத்திரிகையாளரிடம் பேசும்போது நான் சிலோன் என்றுதான் சொல்வேன். சிறீலங்காவென்று சொல்லமாட்டேன் என்று அறிக்கை செய்தார். அந்தளவுக்குத் தமிழ் தேசியவாதிகள் அனைவரும் மேற்குலகமயமானவர்கள்.

தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் ஈழம் என்பதை இனம் மற்றும் மொழிரீதியில் மட்டுமே காண்கிறார்கள். அதன் பொருளாதார சமூகவியல் பண்பாட்டு அம்சங்களை நினைத்துப் பார்க்கக் கூடப் பலம் இல்லாதவர்கள். தேசியம் என்பதைத் தேசியப் பொருளாதாரத்தோடு சம்பந்தப்படுத்த புலமை இல்லாதவர்கள். 1980 களில் தமிழ் தேசிய விடுதலை தீவிரம் பெற்றபோது உலகமெல்லாம் தனித்தனி நாடுகளில் தேசியப் பொருளாதாரம், சுயசார்புப் பொருளாதாரக் கட்டமைப்புகள் என்பன நிலவின. ஆனால் இப்போ 25 வருடங்களின் பின்பு தேசியப் பொருளாதாரம் என்பது உலகப் பொருளாதார ஓட்டத்தில் கலந்துவிட்டது. அது தன்னைத்தானே நிர்வகிக்கும் சக்திபடைத்ததாய் இல்லை. 1960- 1970 களில் இலங்கையில் சுயசார்புப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வேகத்தில் வளர்ந்தது. இன்று இலங்கை மக்களின் நிலம் கடல் நீர் வானம் அனைத்தும் அந்நிய சக்திகளிடம் போய்விட்டது. நீண்ட இடதுசாரிப் பாரம்பரியமும் சுயபொருளாதாரக் கட்டமைப்புமுடைய இலங்கையே உலகமயமாதலில் காணாமற் போய்விட்டது. இந்நிலையில் மேற்குலக சார்பு நிலை கொண்ட தமிழ் ஈழத்தேசம் எப்படி இருக்கும்? உலகமயமாக்கலை எதிர்த்துத் தனி நாட்டுள் தமிழ் ஈழம் , தன் சொந்தப் பொருளாதாரத்தைக் கட்ட முடியுமா? தமிழ்த் தேசியவாதிகள் இயல்பில் முதலாளித்துவ வாலயக்காரர்கள். திறந்த பொருளாதாரக் கொள்கையான முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் வெளிப்படையான ஆதரவாளர்கள் என்ற வகையில் முழுத் தமிழ் பிரதேசமும்
சிறீலங்காவிடமிருந்து விடுதலைபெற்றாலும் மேற்குலக நிறுவனங்களிடம் விலைபோய்விடும். உலகமயமாதல் புதிய உலகார்ந்த நுகர்வுக் கலாசாரம் சுயபொருளாதாரத்தின் அழிவு இவைகளை எதிர்த்து தமிழ்த் தேசியவாதிகளோ புலிகளோ ஒருபோதும் சிறுவிமர்சனம் கூடச் செய்ததில்லை.

1970பதுகளில் இலங்கையில் ரோட்மாஸ்டர் சைக்கிள் முதல் உபாலி கார்வரை பொருத்தினார்கள். நெருப்புப் பெட்டி முதல் யூனிக் ரேடியோவரை தயாரித்தார்கள். பழைய ரயர்களைகூடப் புதுக்கித் திரும்பவும் பாவிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்தார்கள். அன்று கிழக்கு ஜெர்மனியின் உதவியுடன் களனியில் ரயர் தொழிற்சாலையை நிறுவி சைக்கிள் ரயர் முதல் லொறி ரயர்வரை தயாரித்தார்கள். மீன்பிடி துறைமுகம் மின்சாரம் தபால் தொலைத்தொடர்பு போக்குவரத்து கல்வி சுகாதாரம் வங்கி சகலதும் அரசுடமையாக இருந்தது. அரச கூட்டுத்தாபனங்களாக அரசுத்துறை நிறுவனங்களாகச் செயற்பட்டது. ஆனால் இன்றோ பாராளுமன்றம் அரசியற் கட்சிகளின் கொடிகள் தவிர சகலதும் அந்நிய நிறுவனங்கட்கு விற்றுச்சுட்டாகிவிட்டது. ஆசிய நாடுகளின் பொருளாதாரக் கட்டளைகள் இலங்கைக்குள் வந்துகொண்டிருக்கின்றன. தேசியம் சுயநிர்ணயம் இறைமை சுயபொருளாதாரம் என்பதெல்லாம் இலங்கைக்கே கிடையாதபோது கைகால் நீட்டிப் படுக்கக்கூட நிலப்பரப்பில்லாத தமிழீழத்தின் சீத்துவக் கேடு எப்படியிருக்கும். இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானும், பாகிஸ்தானிலிருந்து பிரிந்த வங்காள தேசமும் ஒன்றையொன்று நெருங்கி வந்து அரசியற் பொருளாதார ஒற்றுமைகளைக் காட்டுகின்றன. ஆசிய நாடுகளின் வளர்ச்சி இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகளதும் மூலப்பொருள் உற்பத்தி உழைப்பு என்பனவும் மூலதனரீதியாகவும் சார்ந்து வளரும் காலம் உருவாகிவிட்டது. எனவே இந்தியத் துணைக் கண்டத்தில் சகல பிரிவினைப் போக்குகளும் அருகிவிடும். தமிழ்த் தேசியமும் இன்று அரசியல் இரத்தோட்டம் இழந்தமையின் காரணம் இதுதான். உலகம் தழுவிய பொருளாதாரம் உலகக் கலாச்சாரத்தை வளர்க்குமே தவிர உள்ளூரில் மட்டுமே தங்கிய தேசியத்தை வளர்க்காது.

இனப்பெருமை பூணல் என்பது ஒருவகையான விலங்கியல் தன்மை படைத்ததாகும். இதிலிருந்து தூய இனம், உயரிய இனம் என்ற கோட்பாடுகள் எழுகின்றன. புலிப்பாசிசம் இடைவிடாது எழுப்பும் தமிழ் தேசியப் பெருமை உணர்வு மாவீரர் நிர்ணயங்கள் என்பன மிருக இயல்பு உணர்வுடன் இணைந்த பாசிசப் பண்பாகும். ஒடுக்கப்படும் தேசிய இனம் சிறுபான்மைத் தேசிய இனம் என்ற சுலோகங்களினூடு புலிப்பாசிசம் அரசியலில் வாழ்ந்துவிட முயல்கிறது. தமிழ் தேசியமானது இனத்தூய்மைக் கோட்பாடாக தனித்த சிங்கள முஸ்லீம் வெறுப்பாக அவர்கள் மேலான இராணுவ பயங்கரவாதமாக மாறிவிட்டது. தமிழ்த் தேசியவாதிகள் இலங்கையில் தம் சகோதர இனங்களைப் பகைத்துக்கொண்டு மேற்குலக ஏகாதிபத்தியங்களுடன் மிகவும் நட்புப் பாராட்டுகிறார்கள். தமிழ் தேசியவாதம் ஏகாதிபத்தியம் சார்ந்த கூலித் தேசியவாதமாகும்.

யூகோஸ்லாவியாவின் குரேசியா, கொசோவோ, அல்பானிய சிறுபான்மைத் தேசிய வாதங்கள் எப்படி ஏகாதிபத்திய சார்பு பாசிசமாக மாறியது, முழுத்தேசத்திற்கும் ஆபத்தானது என்ற உதாரணத்துடன் புலிப் பாசிஸ்ட்டுகளையும் சமப்படுத்திப் பார்க்க முடியும். ஈராக்கில் பல பத்து வருடங்கள் ஒடுக்கப்பட்ட குர்திஸ் மக்களின் முழு அமைப்புகளும் இன்று அமெரிக்கக் கூலிப் படைகளாகி, முழு ஈராக்குக்கும் மத்திய கிழக்குப் பிரதேசத்திற்கும் ஆபத்தாகிவிட்டன. ஈராக்கின் முக்கிய குர்திஸ் தலைவனான தலபானி அமெரிக்க ஆதரவுப் பாசிஸ்ட் ஆகிவிட்டான். யூதர்கள் மத்திய கிழக்கில் சிறுபான்மை மக்கள் என்ற உண்மையை வைத்துக் கொண்டு நாம் அவர்களை ஒடுக்கப்படும் மக்கள் பிரிவாகப் பார்க்க முடியாது. ஐரோப்பாவில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக யூதர்கள் கொல்லப்பட்டர்ர்கள். நாசிகளினால் ஆறு மில்லியன் யூதர்கள் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மையையும் அனுதாபத்தையும் வைத்துக் கொண்டு இன்றைய இஸ்ரேலிய சியோனிசத்தைப் பரிசோதிக்க முடியாது. சியோனிசம் யூதப் பாசிசமாகும். புலிகள் தமிழ்ப் பாசிசமாகும்.
யூதர்களும் அரபுக்களும் ஒருபோதும் ஒன்றாக வாழ முடியாது. பிரிந்து வாழ்வதே தீர்வு. காசா பகுதியில் ஒரு கல்லைக் கூட விட்டுத் தரமாட்டோம் என்று இஸ்ரேலிய அரச பிரதிநிதியான அவிக்டொர் லீபர்மன் கூறுகிறான். எப்படி அரபு யூத மக்களையும் இருபகுதித் தொழிலாளர்களையும் சேராமற் தடுக்க ஏகாதிபத்தியங்கள் இஸ்ரேலைப் பாவிக்கிறார்களோ அப்படியே புலிப் பாசிஸ்டுகளையும் மேற்குலக நாடுகள் இலங்கையில் பாவிக்கின்றன. இந்தத் தைரியத்தில் தான் புலிகள் முழு இலங்கையையும் அழிப்போம். சிங்கள மக்களைக் கொல்வோம் எனச் சவால் விடுகிறார்கள். தென் இலங்கையில் சிங்கள மக்கள் மேல் தாக்குதல் நடத்துவதும் கிழக்கு இலங்கையில் முஸ்லீம் மக்களை இனச் சுத்திகரிப்பு அடிப்படையில் வெளியேற்ற முயல்வதும் இதன் அடிப்படையிற்தான். புலிகளின் இனச் சுத்திகரிப்புச் செயலை- பாசிசப் பயங்கரவாதங்களை- தமிழ்த் தேசத்தின் யுத்தம் என்பவர்கள் வரலாற்றின் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படுவர்.

1958, 1971, 1979 1983இனக் கலவரங்களுக்குப் பின்னரும் பவுத்த சிங்களப் பேரினவாதத்துடன் வாழ முடியாது என்பவர்கள் தமிழ் மக்களைச் சிங்கள இனவாதிகள் செய்தது போல் சுட்டும் வெட்டியும் எரித்த புலிகளுடன் எப்படி வாழ்வது? சகோதர தமிழ் இயக்கங்கள் அத்தனையையும் அழித்த புலிகளுடன் எப்படி வாழ்வது? நாசிகால வதை முகாங்களைப் போல் வடக்குக் கிழக்கு எங்கணும் வதைமுகாங்களை நிறுவி, தமிழர்களை அடைத்துவைத்திருக்கும் புலிகளுடன் எப்படி வாழ்வது? வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்
மக்களைக் குடி எழுப்பிய, கிழக்கில் பள்ளிவாசல்களிலும் குடியிருப்புகளிலும் படுகொலைகளை நடாத்திய புலிகளுடன் வாழ எப்படி முஸ்லீம் மக்கள் சம்மதிப்பர்? யாழ் குடாநாட்டிலும் வன்னியிலும் சிங்கள முஸ்லீம் மக்கள் பரிபூரணமாக வெளியேற்றப்பட்டு விட்டனர். தனித்துத் தமிழ் மக்கள் மட்டுமே வர்ழ்கிறார்கள். இந்தத் தமிழ் ஆட்சியில் தமிழ் மக்கள் அன்பும் அறனும் உடைத்தாகி வையுத்துள் வாழ்வாங்கு வாழ்கிறார்களா?

“மக்கள் தொகைப் பெருக்கமே மக்களைக் குடிபெயர நிர்ப்பந்திக்கின்றது” என்று மாக்ஸ் எழுதினார். மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க இயற்கையைப் பயன்படுத்துவது அதிகரிக்கும். காடுகள் நிலங்கள் நீர்நிலைகள் கடல்கள் மனித உபயோகத்தின் கீழ் வரும். அதிக உற்பத்தி தேவைப்படும். நீர்பாசன வசதியுள்ள பயிர்ச் செயகையில்லாமல் உணவுற்பத்தியைப் பெருக்க முடியாது. மனித இடப் பெயர்வுகளை இனவாதத்தால் விளக்குவது தேசியவாதத்தின் பண்பாகும். இது தூய இனம், தூய நிலம் போன்ற பாசிசக் கருத்தோட்டங்களுடன் தொடர்புடையது. மனிதர்களின் இயற்கையான குடிபெயர்வு உரிமையை மறுப்பது, பயிர்செய்ய நிலத்திற்கும் குடியிருக்க வீட்டுக்கும் போராடும் ஏழை மனிதர்களை தடுப்பது மனித உரிமையிற் தலைவிடுவதாகும். கிராம மக்கள் நகரத்திற்குக் குடிபெயர உரிமை இருப்பது போல் ஒரு நாட்டின் எப்பகுதிக்கும், உலகத்தின் எப்பகுதிக்கும் குடியேற மனிதர்களுக்குள்ள சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. நிலங்கள் போதிய அளவு இருக்கும் போது காடுகளாக, வெளிகளாக பயிரிடப்படாத நிலங்களாக இருக்கும் போது வேறு இனத்தின் நிலம் தேசிய இனத்தின் பாரம்பரியச் சொத்து என்று சொந்த நாட்டிக்குள் நிலமின்றி இருக்கும் மக்களைக் குடியேற விடாமல் தடுக்கமுடியுமா? குடியிருக்க பயிர் செய்ய நிலம் தேடி வரும் மனிதர்கள் இனவாதிகளா? நிலத்தைப் பறிக்க வரும் ஆக்கிரமிப்பாளர்களா? இலங்கை முழுவதும் பல்தேசிய இன வாழ்வு நிகழும் பொழுது வடக்கை இனத்தூய்மை நிலையில் வைத்திருப்பதும் கிழக்கில் சிங்கள மக்களைக் குடியேறவிடாமற் தடுப்பதும் நியாயமாகுமா? காடுகள் குடியேற்றங்களாக, கிராமங்களாக, கிராமங்கள் நகரங்களாக மாறுவது தடுக்க முடியாததாகும். தமிழர்களின் பாரம்பரியப் பூமி வடக்குக் கிழக்கென்றால், தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியத் தமிழ் தேசத்தில் மட்டும்தான் வாழ்கிறார்களா? தமிழ் மக்களின் 60 சதவீதமானவர்கள் இன்று தமது தாய் நிலமென்று உரிமைகோரும் பிரதேசத்திற்கு வெளியே, சிங்கள மக்களின் பாரம்பரிய நிலத்தில் வாழ்ந்து வருவதை தமிழ் தேசிய வாதிகள் எங்ஙனம் விளக்குவர்? யாழ் குடாநாட்டுத் தமிழர்கள் கிழக்கில் வன்னியில் குடியேறியதை விடச் சிங்கள மக்களின் பிரதேசத்திற்குப் பெரும்தொகையில் குடி பெயர்ந்தனர். உத்தியோகம் வர்த்தகம் விவசாயம், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை உட்படப் பலதுறைகளில் ஈடுபட்டிருந்தனர். கிழக்குப்பிரதேசம் வடக்கு மக்களுக்கு ஆயுதப்போராட்டம் எழும் வரை தூரதேசமாகவும் அந்நியதேசமாகவும் இருந்தது. இருபகுதி மக்களும் வந்து போய்க் கொண்டாடி, தொழில் புரிந்து, விற்று வாங்கிப் பயணிக்கும் எந்த உறவும் நிலவவில்லை. 1980 களுக்கு முன்பு கொழும்பு மாப்பிள்ளைமாருக்கு யாழ் குடாநாட்டுள் பெரிய பெரிய சீதனமும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால் ஒரு மட்டக்கிளப்புக் கமக்காரன் ஒரு குடாநாட்டு விவசாயியின் மகளைத் திருமணம் செய்வது பற்றி கனவுகூடக் காண முடியாது. அப்போ யாழ்பாணத்தில் ஆண்களின் திருமண வயது 30 -35 வரைகூட இருந்தது. பெண்கள் முதிர் கன்னிகளாக சீதனம் கொடுக்க முடியாமல் கலியாணம் காட்சி இல்லாமல் இருந்தபோதும் “குமர் முத்திக் குரங்கானது” என்று சொல்லப்பட்டபோதும் யாழ்ப்பாணம் தொடர்ந்து யாழ்ப்பாணியத்தைப் பாதுகாத்தது.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேற்குலக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் கிழக்கில் குடியேறிய சிங்கள மக்களை சிங்கள இனவாதத்தின் கருவியாகக் காட்டி வந்தனர். காசி ஆனந்தன் போன்ற தமிழின வெறிக்கவிகள் வாழைச் சேனை காகித நகரய ஆகிவிட்டது. பட்டிப்பளை ஆறு கல்லோயா ஆக ஆகிவிட்டது. யானைப் பள்ளம் யானைப் பள்ளம ஆக ஆகிவட்டது. குமேரேசன் கடவை கொமரங்கடவல ஆகவும் தேவேந்திர முனை தெவிநுவர ஆகவும் ஆகிவிட்டதாய் மேடை மேடையாய் கூறிவந்தார். ஆனால் யாழ்ப்பாணம் jaffna ஆகியதையோ பருத்தித் துறை pointpedro ஆகியதையோ மட்டக்களப்பும் திருகோணமலையும் batticalloa, trinco ஆகிவிட்டதையோ கண்டித்து அந்நிய மொழிப் பெயர்களை நிறுத்தி தமிழைப் பாவிக்க வேண்டும் என்று கேட்டது கிடையாது. அவர்களுக்கு இங்கிலீசு இன்பமாக இருந்தது. கிழக்கின் கரையோரப் பகுதிகளில் எழுந்த குடியேற்றத் திட்டங்களின் பின்புதான் கிழக்கில் நெல் உற்பத்தி பெருகியது. மட்டக்களப்பும் பொலநறுவயும் இலங்கையில் அதி கூடிய நெல் உற்பத்திப் பிரதேசங்களாக மாறின. உணவுற்பத்திப் பெருக்கத்தால் மக்கள் தொகைப் பெருக்கமும் நிகழ்ந்தது. வர்த்தகமும் போக்குவரத்தும் கல்வி சுகாதார வசதிகளும் வளர்ந்தன. காணி வீடுகளின் மதிப்பும் அதிகரித்தது. யாரும் தேடாமற் கிடந்த நிலங்கள் விளைச்சலுக்குள் வந்தன. தமிழ், சிங்கள, முஸ்லீம்
மக்கள் அருகருகே வாழப் பழகினார்கள். இவர்களால் அரவணைக்கப்
பட்ட புதிய பொருளாதார உறவுகளும் கூட்டு வாழ்வுக்கான அம்சங்களும் அதிகரித்தன. அடர்ந்த காடுகளும் மனிதர்கள் புகாத நிலப் பரப்புகளும் மனித முயற்சிகளுக்கு வழி விட்டன. கிழக்கின் எல்லைப் புறங்களும் சிங்கள மக்களின் புராதன நிலங்களும் இணைந்து பெருவிவசாயப் பிரதேசங்கள் ஆகின.

தமிழ்த் தேசியவாதிகள் சட்டவிதிகளையும் தமிழ் சிங்களப் பகைமைகளையும் பேசித் திரிந்தார்களேயொழிய குடியேற்றங்களின் பொருளாதாரரீதியான அர்த்தத்தைப் பேசியதில்லை. பொருளாதாரத்தின் பின்விளைவுகளை, தலைகீழ் உறவுகளை சிந்தித்ததும் இல்லை. பொருளாதார நோக்கில் சிந்திக்கும் அரசியல்வாதிகளும் தமிழ் பரப்பில் இருக்கவில்லை. இன்றும் இருக்கவில்லை. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த இடதுசாரிகள் இலங்கையின் பொதுவான பொருளாதாரப் போக்கின்மீது கரிசனை கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியோடு ஒப்பிடக் கூடிய ஏகாதிபத்திய சார்பு இனவாத அமைப்பாக, சிங்கள மக்கள் மத்தியில் நாம் யூஎன்பியையே காண முடியும். இடதுசாரிக் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் இனவாதம் கடந்த ஜனநாயக அரசியல் ஒன்றை முன்னெடுக்கத் தென் இலங்கையில் தொடர்ந்து போராடினர். தமிழ்ப் பகுதிகளில் அத்தகைய அரசியற் பாரம்பரியம் எதுவும் நிலவவில்லை. தமிழ் தேசியவாதிகள் பூரண பலம் பெற்றிருந்தனர். முதலாளிய ஜனநாயகமோ பன்மைத் தன்மையோ கூட அங்கே நிலவவில்லை. தமிழ்க் குறுந் தேசியவாதம் சிங்கள இனவாதத்தைக் காட்டிக் காட்டித் தன்னைத் தொடர்ந்து வளர்த்தது.

பாரம்பரிய நிலம்பற்றி அதிதீர வீரத்துடன் பேசி வந்த தமிழ்த் தேசியவாதிகள் சிங்கள மக்களின் பாரம்பரிய நிலமான மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியேறியது பற்றி என்ன கூறுவர்? கிழக்கில் சிங்கள மக்களுக்குக் குடியேற தமிழர் பாரம்பரியப் பிரதேசம் என்ற வாதம் தடையாக இருக்குமாயின் மலையகத்தில் குடியேறிய தேயிலைத் தொழிலாளர்களுக்கு எதிராகச் சிங்கள இனவாதத்திற்கும் ஒருவாதம் கிடைக்கும். எப்படித் தென் இலங்கையிலும் கொழும்பிலும் தமிழ் மக்கள் பரந்து வாழும் உரிமை உண்டோ அதே உரிமையும் மனிதப் பொது அடிப்படையும் சிங்கள மக்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் உண்டு. சிங்கள மக்கள் தமிழர்களின் பாரம்பாரியப் பிரதேசம் எனப்படுவதில் குடியேறியதிலும் பார்க்க தமிழர்கள் சிங்கள மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் குடியேறியமை என்பது ஓப்பீட்டுரீதியில் அதிகமாகும். இனவாதம் எப்பொழுதும் இத்தகைய உண்மைகளை நேர்மையான பார்வைகளைக் கொன்று தின்றுதான் வளர்ச்சியடைகிறது. கிழக்குத் தமிழ் முஸ்லீம் மக்களினதும் மட்டுமல்ல, சிங்கள மக்களினதும் அன்னை பூமியாகும் . கிழக்கில் சிங்கள மக்களின் குடியேற்றத்தை எதிர்ப்பவர்கள் தென்னிலங்கையில் தமிழ் மக்களின் குடியேற்றத்தை எதிர்ப்பதில்லை என்பது அவர்களது இரட்டை இனவாத அரசியல் நிலைப்பாடாகும். தமிழர்கள் தம் தாய் நிலத்தில் மட்டும்தான் வாழ்கிறார்களா? வாழ வேண்டுமா? இலங்கை முழுவதும் பரந்து வாழும் உரிமை தமிழ் மக்களுக்கு வேண்டாமா? அவர்கள் வடக்குக் கிழக்கில் மட்டும் வாழ்வது சாத்தியமல்லவென்று யதார்த்தம் நிரூபித்துக் காட்டவில்லையா? உத்தேசத் தமிழீழம் புத்தளம் அம்பாறை உட்பட 9 மாவட்டங்களின் இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் கிட்டத்தட்ட 40 வீதத்தை உள்ளடக்குகின்றது. அதாவது இலங்கையில் மொத்த சனத்தொகையில் 7.9 வீதமான தமிழர்கட்கு இது உரிமை கோரப் படுகிறது. சிங்கள முஸ்லீம் மலையக மக்களின் சனத்தொகையைவிட குறைந்தவர்களாக, நாலாவது சிறுபான்மையினராக தமிழர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் தொகையில் இலங்கைத் தமிழரின் தொகை 1.9 மில்லியனாகும். முஸ்லீம் மக்கள்; 12 வீதமாகவும் மலையக மக்கள் 10 வீதமாகவு முள்ளனர்.

சிங்களக் குடியேற்றம் தமிழ் நிலம் பறிப்பு போன்ற கருத்தியல்கள் தமிழ் தேசிய வாதிகளால் கடந்த 50 வருடத்திற்கு மேலாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, ஆளமாகப் பதிந்துள்ளன. இவை அறிவுபூர்வமாக உண்மைகளையும் புள்ளி விபரங்களையும் துணையாகக் கொண்டு ஆராயப்படாமல், இனவாத அடிப்படையில் மட்டுமே விளக்கப்பட்டு வந்துள்ளன. தமிழர்களின் நிலப் பறிப்பை நோக்காகக் கொண்ட சிங்களக் குடியேற்றங்கள் டி.எஸ் சேனநாயக்க காலத்தில்தான் தொடங்கப்பட்டது என்ற சொல்லாடல் தமிழரசுக் கட்சியால் பல ஆயிரம் தடவைகள் மந்திரம் மாதிரித் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்யப்பட்டு வந்துள்ளது.

1909ல் இலங்கைத் தேசாதிபதியாக இருந்த மக்கலம் யாழ்ப்பாணம்-வன்னி பிரிட்டிஷ் கால நிர்வாகிகளான மணியகாரர், முதலியார்மார் மற்றும் கிழக்கின் வன்னிபங்கள் உட்பட முழு இலங்கையினதும் அரச நிர்வாகிகளைக் கூட்டி குடியேற்றத் திட்டங்கள், பாழடைந்த குளங்களைத் திருத்துவது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது,விவசாயிகளுக்கான வங்கிகளை ஆரம்பிப்பது பற்றி ஆய்வு செய்தார். அப்போது யாழ்ப்பாண விவசாயிகளுக்கு நிலம் போதியளவு இருக்கவில்லை. சனத்தொகை அதிகமாக இருந்தது. ஆனால் மன்னார் வவுனியா திருகோணமலை ஆகிய பகுதிகளில் செய்கை பண்ணப்படாத பெரும் தொகை நிலமும் மிகக் குறைவான சனத்தொகையும் காணப்பட்டது. சுகாதார வசதியின்மை, வறுமை, போக்குவரத்து வசதியின்மை, காட்டு நுளம்பு என்ற குறைபாடுகளும் அங்கிருந்தன. எனவே பாழடைந்துகிடந்த இரணைமடு, அக்கிராயன் குளம் ,கட்டுக்கரைக் குளம் ஆகியவைகளைத் திருத்தி அதைச் சூழவுளுள்ள, காடாகிப் போன இடங்களை அழித்து, மக்களைக் குடியேற்றுவது பற்றி, இக் கூட்டத்தில் மக்கலம் ஆராய்ந்ததுடன் மணியகாரர், முதலியார்மார் ஆகியோரின் கருத்துக்களையும் கேட்டார்.

இக் கூட்டத்தில் தமிழ் பகுதிகளுள் காடாக உள்ள நிலங்களை குறைந்த விலையில் ஏலத்தில் விற்கவும் விளைச்சலில் நாலில் ஒருபங்கைக் கொடுத்து காணிக்கான கடன்களை அடைக்கவும் இந்தக் குடியேற்றத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டத்தை மக்கலம் அறிவித்ததுடன் நிலங்களைக் கொள்வனவு செய்ய சிங்களவர்கள் உட்பட ஏனைய மக்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் நிலங்கள் பெருமளவு இருப்பதால் மிகுதியாக இருக்கும் காணிகளில் தென்னிந்தியாவின் சனத்தொகை கூடிய கிராமங்களிலிருந்து மக்களைக் கெண்டுவந்து குடியேற்றும் திட்டம் பிரிட்டிஷ் அரசிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் யாழ்ப்பாணத் தலைமைக்காரர்களான முதலியார்மார் மணியகாரர் என்போர் யாழ்ப்பாண மக்களை மன்னார் வுவனியா திருகோணமலை போன்ற பகுதிகளில் குடியேற்ற முடியாது என்றும் யாழ்ப்பாண விவசாயிகள் கடுமையான முயற்சி உடையவர்களாக இருந்த போதிலும் அவர்கள் சொந்த ஊரில் அதிகப் பற்றுடையவர்கள் ஆதலால் அங்கிருந்து நீங்கி வேறு இடங்களுக்குப் போய்க் குடியேற மாட்டார்கள் என்றும் கூறினர். அவர்கள் ஏழைகளாகவும் கடனாளிகளாகவும் இருப்பதால் குளம் மற்றும் நிலங்களைத் திருத்தி அமைக்கவும் அவர்களிடம் பணம் இருக்காது என்பதால் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறினர். விவசாய வங்கிகளை அமைத்து விவசாயிகளுக்கு வட்டிக்குப் பணங் காடுப்போரின் கொடுமையிலிருந்தும் சிறுவிவசாயிகட்கு உதவும் திட்டங்களையும் தேசாதிபதி மக்கலம் வெளியிட்டபோது அது சிங்கள மக்களின் மத்தியில் இருந்துவந்த தலைமைக்காரர்களால் ஆதரிக்கப்பட்ட செய்தி சி.பத்மநாதன் எழுதிய இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூகவழமைகளும் என்ற நூலில் குறிப்பிடப்பட்டது. 1914 இல் முதலாம் உலக யுத்தம் மூண்ட காரணத்தினாலேயே தென்னிந்தியாவிலிருந்து இப்பகுதிகளுக்குத் தமிழர்களைக் குடியேற்றும் திட்டம் நின்று போனது. ஏனெனில் பெருந்தொகையாக இருந்த உபரித் தொழிலாளர்கள் பிரித்தானிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டதால் அது நிறுத்தப்பட்டது என்பதை நாம் விளங்க முடியும்.

ஆக இலங்கையின் முதலாவது நீர்ப்பாசனத் திட்டம் குடியேற்றம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலே தொடங்கி விட்டது. அப்போதைய திட்டங்களே சுதந்திரத்தின் பின்பு செயல் வடிவம் பெற்றன என்று கூறவும் முடியும். முதற் குடியேற்றங்கள் நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழ் பகுதிகளில் அல்ல சிங்கள மக்களின் புராதான நிலங்களிலேயே தொடங்கப்பட்டன. அது புவியியல் ரீதியில் கிழக்கு மாகாணத்திற்கு அருகாமையில் என்பதை நாம் காண முடியும். 1925ம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தபோவா 1933ல் நச்சக்கமுவ மின்னேரியா, காகம(பழையது ) நீர்ப்பாசனம் மற்றும் குடியேற்றத் திட்டங்கள் தொடங்கப் பட்டன. 1939ல் எலகர, மினிப்பே என்பனவும் 1940ல் பெரகம, 1942ல் பராக்கிரம சமுத்திரம், 1943ல் ரெயிபிந்தில என்பன தொடங்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தச் சூழலின் உணவுத் தட்டுப்பாடு, பங்கீட்டு முறை என்பன பாரிய விவசாயத் திட்டங்கட்கும் குடியேற்றங்கட்கும் உடனடிக் காரணமாக இருந்தது.

பராக்கிரம சமுத்திரம், தபோவா, நச்சக்கமுவ, பெரகம, ரெயிபிந்தில என்பன பொலநறுவ, குருநாகல், அம்பாறைப் பகுதிகளுக்கு அருகே இருந்தன. அனுராதபுரப் பகுதியிலுள்ள இலங்கையின் ஆகக் கூடிய குளங்களின் புனரமைப்பும் 1950களில் தீவிரமாக நடந்தது. இப்பகுதிகள் புராதன காலத்தில் மக்கள் தொகை அதிகமாக வாழ்ந்த நுகரகளாவி என்று அழைக்கப்பட்ட பிரதேசமாகும். பெருங்கற்காலப் பண்பாடு நிலவிய காலத்திலேயே அனுராதபுரத்தில் குளங்களில் நீரைத்தேக்கி நெற்செய்கை செய்யும் முறை ஆரம்பிக்கப் பட்டது. இவை பிற்காலத்தில் மலேரியா அம்மை கொலேரா போன்ற தொற்று நோய்களாலும் இடைவிடாத தென்னிந்தியப் படையெடுப்புகளாலும் அழிந்து பட்டன. சுதந்திரத்தின் பின்பு நீர்ப்பாசனத் திட்டங்கள் தீவிரமடைந்தன என்ற உண்மையையே நாம் இங்கு காண்கிறோம்.

1948ல் கிழக்கு மாகாண எல்லைப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய கந்தளாய், பதவியா, அல்லை போன்ற குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பமாயின. சீ.பி.டி.சில்வா விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் முப்பது ஆண்டுத் திட்டமாக மகாவலி கங்கையை வடக்குக்குத் திருப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. உடனே தமிழரசுக் கட்சி மகாவலிகங்கையை வடக்கே யாழ்ப்பாணம் வரை கொண்டுவந்து தமிழ் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றப் போகிறார்கள் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. மகாவலிகங்கையை வடக்கே திருப்புதல் என்பது அனுராதபுரம் தம்புல்ல பகுதிக் குளங்களுக்கு நீர் கொண்டுவரும் திட்டமாகவேயிருந்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மகாவலிகங்கை நீரின் ஒருபகுதி மின்னேரியாக் குளத்துடன் இணைக்கப் பட்டது.

இப்பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்கள் தின்று திமிரெடுத்த உயர்வர்க்கச் சிங்களவர்கள் அல்ல. மாறாக நிலமற்ற ஏழைச் சிங்கள மக்களும் விவசாயிகளுமாவர். அந்நியர் ஆட்சிக் காலத்தில் தேயிலை ரப்பர் பயிர்ச் செய்கைக்காக நிலம் பறிக்கப்பட்ட ஏராளமான சிங்கள மக்களின் சந்ததிக்கு நிலம் வழங்கவேண்டிய தேவை சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசுக்கு இருந்தது. தேயிலை ரப்பர் தோட்டங்கள் சிங்கள மக்களின் பாரம்பரியப் பிரதேசமான வளமான பிரதேசங்களில் உருவாகியதும் அங்கே மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குடியேற்றமும் சிங்களமக்களின், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப நிலம் வழங்கமுடியாத நிலமையை ஏற்படுத்தியது என்பதைச் சிந்திக்க முடியாதவர்கள் பிற்காலக் குடியேற்றங்களின் உண்மைத் தன்மையை ஒருபோதும் விளங்க முயற்சிக்க மாட்டர்ர்கள்.

1950களில் தென்னிலங்கையில் நிலம் இல்லாப் பிரச்சனை பெரும் அரசியற் பிரச்சினையாக இருந்தது. சிங்கள விவசாயிகள் நிலம் கோரிப் போராட்டங்களை நடாத்திக்கொண்டிருந்தார்கள். இன்றுங்கூட சிங்கள மக்களுக்கு நிலமில்லாப் பிரச்சனை மிகப் பெரும் சமுதாயப் பிரச்சனையாகும். ஜே.வி.பி போன்ற இயக்கங்கள் நிலமற்ற சிங்கள விவசாயிகளதும் ஏழைகளதும் இயக்கங்களாகும்.

1950 கள் வரை கிட்டத்தட்ட 12 குடியேற்றத் திட்டங்கள் இலங்கையில் எழுந்தன. இதில் வடமாகாணத்தில் தமிழ் பகுதியில் அமைந்த இரணைமடுக் குடியேற்றத் திட்டமும் அடக்கம். மொத்தமாக இத்திட்டங்களில் 26737 ஏக்கர் நிலம் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இது 1955களில் 61000 ஏக்கராகவும் தொடர்ந்து வளர்ந்து 1960களில் 139301 ஏக்கராகவும் அதிகரித்தது. இக்குடியேற்றத் திட்டங்களில் பெரும்பகுதி சிங்கள மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை உள்ளடக்கியதாகும். பிற்காலக் குடியேற்றத் திட்டங்கள் கிழக்கின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கியதாக வளர்ந்தன. கிழக்கின் முஸ்லீம் தமிழ் மக்கள் இதை எதிர்க்கவில்லை. அவர்களுக்குப் போதிய நிலம் இருந்தது. மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் கிழக்கின் பரப்பளவு மிகப் பெரியாதாக இருந்தது. எனினும் கிழக்கில் குடியேற்றங்கள் நிகழ்ந்த போது அவைகளை அண்டியுள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப் பட்டது. உதாரணமாக கல்லோயாவில் 44 குடியேற்றக் கிராமங்கள் அமைக்கப்பட்டபோது 6 கிராமங்களில் மட்டுமே தமிழர்கள் வந்து குடியேறினர். மட்டக்களப்புக் கச்சேரியில் நடந்த காணிக் கச்சேரிக்கு; வந்திருந்தவர்களில் 5 சதவீதங் கூடத் தமிழர்களாக இருக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தின் தமிழர்கள் தொகையானது அதன் முழு நிலப் பரப்பில் 20 சதவீதமான பகுதியில் மட்டுமே குடியேறப் போதுமான சனத்தொகை உடையதாகும். 1949 முதல் 1966 வரை கல்லோயாத் திட்டத்திற்கு 910 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டது. இது 1950 ஆண்டின் மொத்த அரச வருமானத்திற்குச் சமமானதாகும். யாழ் குடாநாட்டு அரசியலை வழி நடாத்திய நடுத்தர வர்க்கம் குடாநாட்டின் நிலமில்லாப் பிரச்சனைக்காகப் போராடும் அரசியல் இயக்கங்களை நடாத்தத் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தமது உத்தியோகங்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். உத்தியோகக் கல்விக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். குடாநாட்டின் நிலமற்ற விவசாயிகள் குத்தகை விவசாயிகள் நிலமோ வீடோ இல்லாத சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் போன்றவர்களை இவர்கள் பொருட்படுத்தவில்லை. இடதுசாரிகள் மட்டுமே அதுசார்ந்த உணர்வு பெற்றிருந்தனர்.

வி.பொன்னம்பலம் போன்றவர்கள் நிலம் இல்லாத ஒடுக்கப்பட்ட சாதியினர் தாம் குடியிருக்கும் பெருங்காணிகளை வைத்திருக்கும் மேல்சாதியினரின் நிலங்களை அவர்களுக்கே உடமையாக்கவேண்டுமென்று பேசிவந்தனர். மேலும் யாழ்பாணக் குடாநாட்டுள் நிலத்தை அதிகமாகக் கொண்ட பணக்கார விவசாயிகள் இருக்கவில்லை. பெரிய நிலப்பரப்பு இருந்து பெரிய விவசாய நிலங்களில் பாரிய விவசாய உற்பத்திகள் நடந்து அதில் கூலிக்கு உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள் இருந்திருந்தால் விவசாயிகளுடைய இயக்கங்கள் எழுந்திருக்கும். வடக்கில் எங்காவது விவசாயிகள் நிலங்கோரிப் போராடிய வரலாறு இருக்கின்றதா? ஆனால் சிங்கள விவசாயிகள் இதற்கு எதிர்மாறாக இருந்தார்கள்.

புலிப் பாசிச சார்பு ஏடான தேசியவாதத் தினக் குரல் எழுதிய கட்டுரையொன்றில் கிழக்கின் தமிழர்கள் தொகை 1881 இல் 67 வீதமாக இருந்தது, முஸ்லீம் தொகை 30 வீதமாகவும் இருந்தது, சிங்களவர் தொகை 3 வீதமாகவும் இருந்தது. 1981ல் தமிழர் தொகை 45 வீதமாகவும் முஸ்லீங்கள் தொகை 35 வீதமாகவும் சிங்கள மக்கள் தொகை 20 வீதமாகவும் இருந்ததாக இனவாத விசாரணை நடாத்தியிருந்தது. தினக்குரல் மாவோவாதத்திலிருந்து புலிப்
பாசிசமாகப் பரிணாமம் பெற்றவர்களின் பத்திரிகையாகும். அவர்கள் அதில் ஒட்டியிருந்த இடதுசாரிப் போக்குகளையும் கைவிட்டுப் பரிபூரண புலிப் பாசிசமாகப் பிறப்பெடுத்துள்ளார்கள். கிழக்கு மக்களின் தமிழ் சிங்கள முஸ்லீம் கூட்டு வாழ்வை பன்மைத் தன்மையை குற்றமாய் கருதுமளவு அது தீவிர இனவாதத் தன்மை பெற்றுள்ளது. இனி எதிர்காலத்தில் கி.மு 10ம் நூற்றாண்டில் தமிழர்கள் மட்டுமே திருகோணமலையில் தன்னந்தனியாக வாழ்ந்தார்கள் என்று நிறுவ இவர்கள் முயற்சி எடுக்கக் கூடும். இதே தினக் குரல் 1881ல் சிங்கள மக்களின் தலைநகரான கொழும்பில் எத்தனை சதவீதம் தமிழர்கள் வாழ்ந்தார்கள்? 100 வருடங்களின் பின்பு 1981ல் எத்தனை சதவீதமான தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று ஆராய்ச்சி பண்ணியிருக்கலாம். இன்று கொழும்பில் தமிழ் மக்களின் தொகை சிங்கள மக்களை விட அதிகரித்து விட்டது. இதைச் சுட்டிக்காட்டி சிங்களத் தேசியவாதிகள் பேசத் தொடங்கினால் தினக்குரல் அதை எப்படி எதிர்கொள்ளும். தமிழ் பகுதிகள் தூய இனக்கலப்பற்ற பிரதேசமாக இருக்கவேண்டுமென்ற புலிப் பாசிசவாதிகளின் அதே கருத்தியலைத் தினக்குரலும் பிரச்சாரம் செய்கின்றது. ஏன் தினக்குரல் சிங்கள சிறீலங்காவின் தலைநகரில் இருந்து வெளிவருகிறது. ஏன் தேசியத் தலைவர் உயிர் தரித்திருக்கும் வன்னியின் தமிழ் மண்ணிலிருந்து தினக்குரல் வெளிவருவதில்லை.

திருகோணமலை நகரில் துறைமுக வேலைகட்கும் பின்பு மீன் பிடியாளர்களாகச் சிங்களத் தொழிலாளர்கள் குடியேறியபோதும் அவர்கட்கு துறைமுக மேலதிகாரிகளாகவும் மீன்பிடி முதலாளிகளாகவும் தமிழர்களே இருந்தனர். திருகோணமலைத் துறைமுகத் தொழிலாளர்களாக சிங்கள மக்கள் இயற்கையான தேவையின் பொருட்டே குடியேறினர். திருகோணமலைத் தமிழ் விவசாயிகள் துறைமுகக் கூலிவேலைக்குப் போகத் தயாராக இருக்கவில்லை. அங்கே வேலைசெய்யக் கூடிய தமிழர்கள் உபரியாகவும் இருக்கவில்லை. இது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமாகவும் இருக்கவில்லை. இவர்கள் துறைமுகம் மற்றும் மீன்பிடியை மட்டும் நம்பி வாழும் தொழிலாளர்களாக இருந்தனர். இவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக வர்ணிப்பது பச்சையான தமிழ் தேசிய வெறியாகும்.

திருகோணமலையில் இராஜவரோதயம் போன்ற ஆரம்பகாலத் தமிழரசுவாதிகள் யாழ் குடாநாட்டுத் தமிழரசுவாதிகள் போலத் தீவிர இனவெறியர்களாக இருக்கவில்லை. இராயவரோதயம் மூதூர் தங்கத்தரை, முதூர் அப்துல் மஜீத் போன்றவர்கள் தம் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தமிழர்- சிங்களவர்- முஸ்லீங்கள் என்ற வேறுபாடுகளின்றி உதவினார்கள். இராஜவரரோதயத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு இருந்தது. இந்தச் சூழல் இனவாத இறுக்கமின்மை கிழக்குப் பகுதி
மக்களின் வாழ்வுச் சூழல் தோற்றுவித்த போக்காகும். திருமலை மக்கள் யாழ் குடாநாட்டைப்போல் தனித்து வாழந்தவர்கள் அல்ல. ஏனைய இன மத மக்களோடு பரந்து பழகிய சகிப்புணர்வும் தாராளமனமும் உள்ள மக்களாக இருந்தனர். ஆகக் கூடின கலப்புத் திருமணமும் சமூகவாழ்வில் நாளாந்த இனக்கலப்பும் நிலவிய பிரதேசம் திருமலை. தமிழர்கள், முஸ்லீங்கள் சந்தையில் சிங்கள வியாபாரிகளிடம் பொருட்களை வாங்குவார்கள். தமிழர் கடைகளிலே சிங்களவர்களும் முஸ்லீங்களும் பலசரக்குப் பொருள் வாங்குவார்கள். தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லீம் கடைகளிலே புடவை துணிவகைகளை வாங்குவார்கள். ஒருவரை ஒருவர் சார்ந்து ஒருவரில் ஒருவர் தங்கியிருந்த மூவின மக்களும் அங்கே வாழ்ந்தனர். மட்டக்களப்பிலும் மீன்பிடி நாட்கூலித் தொழிலாளர்களாகவே சிங்கள மக்கள் குடியேறினர்.

திருமலையில் இரா.சம்பந்தர் அரசியலில் தலையெடுத்த பின்பே வலிந்து இனவாதம் உருவாக்கப்பட்டது. 1977ல் செத்த செல்வநாயகத்தின் சாம்பலை சிங்கள மக்களின் கிராமங்களான சிறீமாவோபுர, மகிந்தபுர, லங்கபுர போன்றவை ஊடாக ஊர்வலமாகக் கொண்டுசெல்ல சம்பந்தரின் தமிழரசுக் காடையர்கள் முனைந்தபோதே நெருக்கடி உருவானது. பொலிசார் கலவர நிலை தோன்றுமென்று எச்சரித்ததை மீறி தமிழரசுவாதிகள் செய்வநாயகத்தின் அஸ்தியை சிறிமாபுரம் ஊடாகக் கொண்டு சென்றபோதே சிறு குழப்பம் எற்பட்டது. அன்று இரவு சம்பந்தரின் தமிழரசுக் காடையர்கள் திருமலை நகரில் வாழ்ந்த விறகுவெட்டிப் பிழைக்கும் ஒரு ஏழைச் சிங்களப் பெண்ணின் அங்கவீனமான சிறுவனைக் கொன்று கடற்கரையில் சிங்கள மீன் பிடியாளர்களின் குடியிருப்புக்கு அருகே வீசி எறிந்ததை அடுத்தே குழப்பம் மூண்டது. அகிம்சை, கொல்லாமை, அறவழிப் போராட்டம் பேசிய செல்வநாயகத்தின் தனயர்கள் திருகோணமலையில் முதலாவது தமிழ் சிங்களக் கலவரத்தை மூட்டி விட்டனர்.

இத்கைய தமிழ் இனவாதிகளின் செயல்கள் தமிழர் வரலாற்றில் ஒளித்து வைக்கப்பட்டு சிங்களவர்கள் தரப்பில் மட்டும் கே.எம்.பி இராஜரத்தினாக்களும் பிலிப் குணவர்த்தனாக்களும் சிறில் மத்தியூக்களும் தேடப்பட்டனர். இத்தகைய செயலின் மூலம்தான் கிழக்கில் இனப் பகைமை உருவாக்கப்பட்டது. இறுதிக் கட்டமாக சிங்கள முஸ்லீம் மக்கள்மேல் தமிழ் ஆயுத இயக்கங்கள் ஆயுதப் பயங்கரவாதத்தைத் தொடக்கினார்கள். இவை கூட்டம் கூட்டமாய் படுகொலை, மதவழிபாட்டிடங்களில் சுட்டுக் கொலை, குடிபெயர்த்தல், கொள்ளையிடல் என்பவைகளாக விடுதலை “நியாங்களுடன்” வளர்ந்தன. இவை தென்னிலங்கையில் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்களுக்குச் செய்ததை விடப் பல மடங்கு பெரியதாகும். யாழ் தமிழ் அரசியல்வாதிகட்கு கொழும்பைத் தெரிந்தளவுக்குக் கூடக் கிழக்கு மாகாணத்தைத் தெரியாது. கொழும்பு உயர்வர்க்கத் தமிழர்களோடு இருந்த கூட்டும் கொண்டாட்டமும் கிழக்கு மாகணத் தமிழர்களோடு அவர்களுக்கு ஒருகாலமும் இருந்ததில்லை. தமிழ் மண்ணில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறார்கள். கிழக்கு பறிபோகிறது எனும் யாழ் குடாநாட்டுத் தமிழ் தேசியவாத மறவர்படை, ஏன் கிழக்கில் சென்று குடியேறியதில்லை? குடியேறுவதில்லை? தமிழ் கலாச்சாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத நிறத்தாலோ மொழியாலோ மதத்தாலோ சகோதரத்தன்மை பெற்றிராத ஐரோப்பிய நாடுகளில் கனடா, அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பல நூறாயிரக் கணக்கில் குடியேற முடியுமென்றால் இதில் நூற்றில் ஒரு பகுதிகூட தமிழ் மண்காக்க ஏன் கிழக்கில் குடியேறச் செல்லவில்லை. வெளிநாடுகளில் 847000 பேர் குடியேறி வாழ்கிறார்கள். இதில் ஒருவீதமாவது கிழக்கில் குடியேறியதா? தமிழரசு முதல் புலிகள் வரை கிழக்கை வன்னிப் பிரதேசத்தைக் காக்கக் குடியேறுங்கள் என்று அழைப்பு விட்ட நிகழ்ச்சிகளாவது இருக்கின்றதா? கட்சி, இயக்கம் என்று அமைப்பு வடிவம் பெற்றவர்களால் கூட இதைச் செய்ய முடியவில்லை. வெளிநாடுகளில் நடக்கும் புலி ஊர்வலங்களில் எங்களுக்குத் தமிழ் ஈழம் வேண்டுமென்று கத்துபவர்கள் புகலிடத் தமிழ் ஊடகங்களிலே வந்து கிழக்கைச் சிங்களவன் பறித்துவிட்டான் என்று கள்ளக் கண்ணீர் உருத்துபவர்கள் ஒரு பத்துப்பேராவது கிழக்குத் தமிழ் மண்காக்கப் போன சங்கதி உண்டா?

உண்மையில் யாழப்பாணக் குடாநாட்டுச் சமூகம்தான் புகலிட நாடுகளில் நிரம்பியுள்ளது. இவர்கள் குடாநாட்டுக்கு வெளியே தமிழ் பிரதேசங்கள் உள்ளன என்று எண்ணிப் பழக்கப்படாதவர்களாகும். கிழக்கும் வன்னியும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசமென்று உணர்வுபூர்வமாக எண்ணத் தெரியாத தமிரசுப் பிரச்சாரங்கட்கு ஆட்பட்டவர்களாகும்.

ஏன் அதிகம்! யாழ் குடாநாட்டுக்குள்ளே அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களைக் கூடத் தமது கிராமத்தில் குடியேற விடமாட்டர்ர்கள். வாடகைக்கு வீடு தர மாட்டார்கள். காணி வீடு தோட்டம் வயல் வாங்க விடமாட்டார்கள். புறத்தியார்க்கு விற்கக் கூடாது, புறத்தியாரை நுழைய விடக் கூடாது, ஒன்றுக்குள் ஒன்று குமைபட்டு சொந்த பந்தங்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு விடக்கூடாதென்றும் ஊர்பற்று, கிராம அபிமானம் பேசுவார்கள். தம் ஊருக்குள் கூட ஒடுக்கப்பட்ட சாதிச் சகோதர மக்களை காணிவாங்க, தம் குடியிருப்பு ஊர்மனைகட்கு அருகே குடியேற விடமாட்டார்கள். தம் சொந்தம் சாதி சனத்துக்குள்ளேதான் வீடுவளவு விற்பது முதல் கல்யாணம் காட்சிவரை வைத்துக் கொள்ளுவார்கள். காணிச் சச்சரவுகளில் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் போன்றோருடன் பிணக்குப்பட்டு கோடேறுவார்களே தவிர ஊரைவிட்டு குடாநாட்டைவிட்டு வன்னிக்கோ கிழக்குக்கோ குடியேறப் போகமாட்டார்கள். யாழ் குடா நாட்டுக்குள் நிலமில்லாப் பிரச்சனை உச்சநிலையில் இருந்தபோதும் இனக்குழுத் தன்மை வாய்ந்த யாழ்பாணச் சமூகம் தாம் வாழ்ந்த கிராமங் குறிச்சிகளை விட்டு வெளியேற மறுத்தது. புதிய சமுதாய நிலமைகட்குப் பழக்கமற்றதாயும் கடும் பிடிவாதம் வாய்ந்ததாயும் இருந்தது. யாழ்பாணச் சமூகமானது சிவத்தம்பி வகைப்பட்டவர்களின் விவரணங்களில் அடங்கக் கூடியதல்ல. கல்விச் சமூகமென்ற நடுத்தரவர்க்க மனக் குதூகலங்களுக்குள் கண்டறியக் கூடியதுமல்ல. அது நிலமில்லாப் பிரச்சனையால் காணி, வேலி, வேலிக்கதியால் தள்ளிப்போட்டு எல்லை அரக்குவதும் ஒழுங்கை பிடிப்பதும் பங்குக்கிணறுச் சண்டை, எல்லையிலுள்ள பனைமரத்தின் பயன் யாருக்கு என்பதிற் சண்டை, காணிகளுக்களுக்கிடையேயுள்ள எல்லை கூட்டிப் பிடிப்பதும் என்ற மட்டத்திற்கு மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப நிலமின்மையால் வருந்திய சமூகமாகும்.

யாழ் குடாநாட்டில் நிலவிய காணிச் சிவில் வழக்குகளின் எண்ணிக்கை இலங்கையின் மற்றய பிரதேச காணிச் சிவில் வழக்குகளின் கூட்டுத்தொகையிலும் கூடியது என்று சொன்னாற்கூட மிகையாகாது. அதன் விகிதாசாரத்திற்கு ஏற்றாற்போல அங்கே ஒட்டுண்ணிப் படுபிற்போக்குச் சட்டத்தரணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

யாழ் குடாநாட்டு அரசசேவை அதிகாரிகள் தென்னிலங்கையிலும் கிழக்கு வன்னிப் பகுதிகளிலும் பணிபுரிந்தனர். இவர்களில் பலருக்கு வன்னியில் காணிக் கச்சேரிகளில் காணிகள் கிடைத்தன. பேராசையில் காணியை எடுத்தாலும் இக்காணிகளில் காடுகள் வெட்டப்படுவதில்லை. சிலர் காட்டை வெட்டிவிட்டு தொடர்ந்து பராமரிக்காமையாலும் பயிர் செய்யாமையாலும் குடியிருக்காமல் விடுவதாலும் அது பழையபடி காடுவளர்ந்து மந்தாகிவிடும். எனினும் 1960 – 1970களில் இதற்கும் மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. பிரஜா உரிமை, வாக்குரிமை அற்று வன்னிப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களாக இருந்த மலையக மக்கள் இக்காணிகளில் குடியேற்றப்பட்டனர். இந்த மக்கள் இரவு பகலாக இக்காணிகளில் குடும்பமாய் பிள்ளை குட்டிகளோடு உழைப்பார்கள. காடு வெட்டி எரிப்பதிலும் எரித்த காட்டைத் துப்பரவு செய்வதும் கட்டை பிடுங்குவதும் மிகவும் சிரமமான பலமடங்கு காசுச்செலவாகும். வெட்டிய காட்டின் கட்டைகளைப் பிடுங்கிக் காணியைப் பயிர்செய்யத் தக்கதாக உழத் தக்கதாக மாற்ற அதிக காலமும் செலவும் தேவைப்படும். கட்டைகள் உக்கப் பல வருடங்கள் செல்லும். உக்கினாலும் நிலத்துள் பல அடிகட்கு வேர்கள் இருக்கும். ஒவ்வொரு மாரிகாலத்தின் பின் சாகாத மரக் கட்டைகளிலிருந்து திரும்பவும் மந்து முளைக்கும். மரங்களாக வளரத் தொடங்கும். இக்காணிகளில் குடியேற்றப்பட்ட மலையக மக்கள் பொருளாதார பலமில்லாமலும் நாளாந்தச் சீவியத்திற்கு தாம் உழைக்கும் நிலத்திலிருந்து போதிய பலன் கிட்டாத நிலையிலும் கடினமாக உழைத்துக் காணிகளைத் துப்பரவு செய்வார்கள். இவர்கள் பிரஜா உரிமை, வாக்குரிமை அற்றவர்கள் என்பதால் அரசின் சட்டபூர்வமான பதிவுகளில் இடம் பெறமாட்டார்கள் என்பதுடன் இவர்களை நினைத்தவுடன் காணியை விட்டு எழுப்பித் துரத்திவிடலாம். ‘காணியில் நீண்டகாலம் இருந்தோம், பயிர் செய்தோம், காணியை ஆட்சி செய்தோம்’ என்ற எந்த உரிமையும் அவர்களால் கோர முடியாது.

மலையக மக்கள் சமூகபலமும் அங்கீகாரமும் அற்ற மனிதர்களாக சாமி, தொரே என்று வன்னிப் பிரதேச மக்களை பணிந்து வாழும் அவலநிலைக்கு ஆட்பட்டிருந்தனர். அநேகமாக இவர்கள் காணிகளைத் திருத்தி ஐந்து அல்லது ஆறு வருடங்களில் நன்றாகச் செப்பனிட்டதும் உழவு இயந்திரத்தை இறக்கி உழக் கூடிய நிலை ஏற்பட்டதும் யாழ் குடாநாட்டுக் காணி உரிமையாளர்களால் துரத்தப்பட்டு விடுவார்கள். சிலசமயம் காணிக்குப் பாதுகாப்பு காவல் என்று தொடர்ந்து இருக்கவிடுவதும் உண்டு. துரத்தப்படும் மலையக மக்கள் அதிக குழந்தைகளோடும் அதை மிஞ்சிய வறுமையோடும் புதிய வெட்டப்பட்ட அல்லது வெட்டப்படாத காட்டுக் காணிகளை நோக்கித் திரும்பவும் குடிபெயர்வர்ர்கள். அநேகமாக இவர்கள் குடியிருக்கும் காணிகளில் கிணறுகள் இருக்காது. கிணறு வெட்ட பெருந்தொகைப் பணம் தேவைப் படும். எனவே இவர்கள் தம் சொந்த முயற்சியால் கிணற்றை வெட்டுவார்கள். பணமின்மையால் வெட்டிய கிணற்றை சீமந்துச் சுவரெழுப்பிக் கட்டாமல் விடுவார்கள். கட்டாமல் விடும் கிணறுகள் மாரிகாலக் கடும் மழையில் இடிந்து விழும். மழை நீரால் கிணறுகள் நிரம்பும். இந்தச் சுகாதாரக் கேடான நீரைக் குடித்து இவர்கள் நோய்வாய்ப்படுவார்கள். மலையக மக்களின் குழந்தைகள் இக் கிணறுகளில் விழுந்து சாவார்கள். இடிந்து விழுந்த கிணறுகள் மீண்டும் கோடையில் தோண்டப்படும். வன்னிப் பகுதியில் மலையகத் தமிழ் மக்கள் பட்ட துன்பம், சமூக அவமானம் சிங்கள இனவாதத்தில் பட்டதிலும் பார்க்க பலமடங்கு பிரமாண்டமானதாகும். அது இன்றுவரை எழுதப்படாத இலக்கியமாகவோ வாய்மொழிச் செய்தியாகவோ கூட இல்லை.

மலையக மக்களுக்கு வன்னியில் கிழக்கில் நிலந்தரவேண்டும் குடியேற்ற வேண்டுமென்று தமிழரசுக் கட்சியோ கூட்டணியோ கேட்டது கிடையாது. 1979 இனக்கலவரத்தின் பின்புதான் காந்தியம் போன்ற அமைப்புகள் மலையக மக்களை வன்னியிலும் கிழக்கிலும் குடியேற்ற முயற்சித்தன. 1950 – 1960களில் சிங்களக் குடியேற்றம் நடைபெற்றதாய் சொல்லப்பட்ட காலங்களில் தமிழ்பகுதிகளில் மலையக மக்களைக் குடியேற்ற வேண்டுமென்று தமிழ்த் தேசியவாதிகள் ஒருபோதும் கூறியதில்லை. 1970கள் வரை வன்னிப் பகுதியில் காணி கேட்கும் எவருக்கும் அவர் இலங்கைப் பிரசையாக இருப்பின் தமிழரோ சிங்களவரோ முஸ்லீமோ தடையின்றிக் காணி கிடைத்தது. அடாத்தாக அரச காணிகளைப் பிடிப்பது காடுகளை வெட்டி எரித்து இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றிப் பயிரிடுவது சாதாரணமாய் இருந்தது. அக்காலகட்டங்களில் வன்னிப் பகுதி மலையகத் தொழிலாளர்களின் உழைப்பை நம்பியே இருந்தது. காடு வெட்டுதல் கிணறு வெட்டுதல் கதிரறுப்பு சூடடிப்பு இரவுக்காவல் வேலை, மாடு வளர்ப்பு தோட்ட வேலை போன்ற தொழில்களில் அத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கும் கிழக்கும்:

வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற வாதம் தமிழரசு காலத்தில் தொடங்கி இன்றைய புலிகள் மற்றும் தமிழ் ஜனநாயக பரப்புகளிலும் தொடர்ந்து ஒலித்துவருகிறது. கருணாவின்
உடைவுடன் வடக்குக் கிழக்குப் பற்றிய விவாதங்கள் தீவிரமாகி ஜே.வி.பியின் வழக்கை அடுத்து 2007.01.01 தொடக்கம் கிழக்கு மீண்டும் இணையாத பழைய நிலைக்குப் போய்விட்டது. வடக்குக் கிழக்கு இணைப்புப் பற்றிய நியாயங்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியவாத வழிகளில் விளக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு வாழ் மக்களின் மூவினக் கலாச்சாரம் சமூகநிலை வர்க்கப் பிளவுகள் எதையும் கணக்கெடாமல் எல்லோரும் வடக்குக் கிழக்குப் பிரிக்கப்படக் கூடாது என்று வாதித்து வருகின்றனர்.

இன்றைய கிழக்கு மாகாண மக்களின் மொத்த சனத்தொகை 1096334 பேராகும். இதில் 442911 முஸ்லீங்கள், 324446 பேர்கள் தமிழர்கள் 311522 பேர்கள் சிங்களவர்களாகும். இதில் தமிழர்களின் தொகை முஸ்லீம் மக்களுக்கடுத்த இரண்டாவது நிலையிலேயே உள்ளது. முஸ்லீம் மக்களின் தொகை முதலாவது இடத்திலிருப்பதுடன் கிழக்கில் மூன்றில் இரண்டு பகுதிக்கு மேற்பட்டவர்கள் தமிழர் அல்லாத மக்கள் பிரிவினராகும் என்பதுடன் வேடர், குறவர், பறங்கியர் உட்பட ஏனைய சிறுமக்கள் பிரிவினரும் கிழக்கில் வாழ்கின்றனர். 1977ல் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கிழக்கின் மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதமானவர்களே வாக்களித்திருந்தனர். பெரும்பான்மை கிழக்குவாழ் மக்கள் தனிநாட்டையோ தமிழ் ஈழத்தையோ ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். கிழக்கில் 74 சதவீதமான வாக்குகள் தனிநாட்டுக்கு எதிராக விழுந்ததென்பதை தமிழ் தேசியவாதிகள் காணப் பயந்தனர். தமிழ் ஈழத்தின் தலைநகர் என்று புனையப்பட்ட திருமலை மாவட்டத்தில் தமிழர்கள் 35 சதவீதமாகவும் முஸலீம்கள் 35 சதவீதம், சிங்களவர் 30 சதவீதம் என்ற அளவில் உள்ளனர். இங்கு 65 வீதமான மக்கள் தமிழர் அல்லாத மக்கள் பிரிவினராகும். இங்கு மூவின மக்களும் சமுதாய முன்னேற்றத்தின் இயல்பான விதிகளுக்கேற்ப கூடிவாழ்ந்தனர். இனங்களைக் கலந்துறவாட விடாமலும் கலக்கவிடாமலும் நீண்ட நாட்களுக்கு இனவாதத்தால் தடுக்க முடியாது.

வடக்கு சார்ந்த தமிழ்த் தேசியவாதிகட்கு கிழக்கின் பல்லினவாழ்வு காணச் சகிக்காத அரசியற் காட்சியாக இருந்தது. அவர்கள் சுத்த தனித் தமிழ் பிரதேசத்தில் வாழ்ந்து தூய தமிழினம் இனக்கலப்புக் கூடாது என்ற இனவாத எண்ணங்களில் வளர்ந்து ஆளாகியவர்கள். கோணமாமலை அமர்ந்தாரை திருஞானசம்பந்தர் பாடியதால் திருகோணமலை தமிழர்கட்கு மட்டுமே உரியதென்று தமிழ் ஈழ வாதிகள் ஆதரங்கள் தேடித் தந்தனர். இனச் சுத்திகரிப்பு என்ற பாசிசப் பண்புகள் தமிழரசுக் கட்சியிடம் கருத்துரீதியிற் பிறந்து புலிப் பயங்கரவாதத்துடன் இணைந்து வளர்ந்தது.

வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லீங்களும் தமிழர்களே என்று முஸ்லீம் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று இவர்கள் பலவந்தம் செய்தனர். முஸ்லீம் மக்கள் தமிழீழத்திற்கு விசுவாசம் காட்டாமைக்கும் சிங்கள மக்களை எதிர்க்காமைக்குமாக அடிக்கடி தண்டிக்கப்பட்டனர். முஸ்லீங்களும் தமிழர்களும் ‘இரட்டைகுழல் துப்பாக்கி’, ‘புட்டும் தேங்காய்ப் பூவும்’ என்ற சொல்லாடல்கள் தமிழத் தேசிய வெறியை மறைக்கும் கள்ளத்தனமான சொற்களாக மட்டுமே இருந்தன.

சிங்கள, முஸ்லிம் மக்களைப் போன்று இலங்கை எங்கும் பரந்து வாழ்ந்த அனுபவம் சிங்கள மொழி பேசும் ஆற்றல் குடாநாட்டுத் தமிழர்களுக்கு இருக்கவில்லை. அரச சேவையில் ஆங்கில மொழியூடாக தென்னிலங்கையில் சிங்கள மக்களுடன் சமமற்ற உயர்வு நிலையில் பணிபுரிந்தவர்களாக இவர்களில் ஒரு பிரிவினர் இருந்தனர். ஏழைச் சிங்களக் கிராமவாசிகள் மீது மோட்டுச் சிங்களவர் என்பது போன்ற இனவாதக் கருத்தியல்களே நிலவின. 1980களின் முன்பு தினசரி பெருமளவு சிங்கள மக்கள் தென்னிலங்கையிலிருந்து அவர்களால் ‘நாகதீப’ என்று அழைக்கப்படும் நயினாதீவிலுள்ள புத்த விகாரையைத் தரிசிக்க வருவார்கள். வடபகுதியிலுள்ள கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலுள்ள பவுத்த விகாரைகளில் தங்கி நயினாதீவுக்குச் சென்று திரும்புவார்கள். அவர்கள் “சாது… சாது” என்று பிரார்த்தனைக் குரலோடு வடபகுதியூடாகச் செல்வதும் கூட தமிழ் தேசியவாதிகளுக்கு சிங்களவர்களின் ஆத்திரமூட்டலாகவேயிருந்தது. இது நயினாதீவு புத்த விகாரையூடாக யாழ்பாணத்தைப் பிடிக்கும் தந்திரமாக விளக்கப்பட்டது. ஆனால் வடக்குக் கிழக்கிலுள்ள இந்துக் கோயில்களைவிட தென்னிலங்கையிலுள்ள இந்துக் கோவில்களின் தொகை அதிகாமானதும் பழமையானதுமாகும். பலநூறு இந்துக் கோவில்கள் சிங்கள மக்களின் பிரதேசங்களில் இருந்தன என்பதும் பெரும்பாலான பவுத்த விகாரைகளில் புத்தருடன் இந்துத் தெய்வங்களும் சேர்த்தே வணங்கப்பட்டன என்பதையும் தமிழ் தேசியவாதிகள் கண்டாரில்லை.

தேவேந்திர முனையிலே மிகப் புராதனமானதும் மிகப் பெரியதுமான விஷ்ணு கோயில் இருக்கிறது. இந்த இந்துக் கோவில்கள் பெரும்பகுதி சிங்களவர்களாலேயே ஆதரிக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்டத் தமிழர்களால் கைவிடப்பட்ட கண்ணகி வழிபாடு ‘பத்தினித் தெய்யோ’ என்ற பெயருடன் சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகிறது. மட்டக்களப்புப் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் 1950கள் வரை சிங்கள மக்கள் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்தது. அவர்கள் வள்ளியைத் தம் இனத்தைச் சேர்ந்த சிங்களப் பெண்ணாகக் கருதினர். மொனராகல, திஸமாறா, கக்மன, பெலியத்த போன்ற இடங்களில் சிங்கள மக்கள் இப்பொழுதும் முருகனை வழிபடுவர். காளியைக் கோபாவேசம் கொண்ட கடவுளாகக் கருதி தென்னிலங்கைச் சிங்களக் கிராமங்களில் கோழிகளைப் பலியிடுவதும் நேர்த்திக்கடன் வைப்பதும் வழக்காக இருந்தது. காலி நகரத்தின் மத்தியில் உள்ள காளி கோவில் ஆயிரக்கணக்கான சிங்களவர்களால் தரிசிக்கப்படுகிறது. இது போர்த்துக்கேயரின் அழித்தொழித்தலிலிருந்து தப்பியாதாக ஐதீகங்கள் உண்டு.

மேலும் நயினாதீவிலுள்ள பவுத்த விகாரை தமிழர்களின் பழைய பவுத்த வழிபாட்டுடன் தொடர்புடையதாகும் என்ற வரலாற்று உண்மையை குறுகிய தமிழின வெறி மறைத்தது. சிங்களவர்களும் பரணவிதானவும் இந்திரபாலாவும் வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்ற தமிழ் தேசியவாதிகள் தாமே சொந்தமாக வரலாற்றைத் திரித்தார்கள். வடக்கிலும் வன்னியிலும் காணப்பட்ட பவுத்த வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன அல்லது மறைக்கப்பட்டன. ஈழவேந்தன் போன்றவர்கள் இலங்கை இராவணனின் தமிழ் பூமியென்ற புராண இதிகாச வகைப்பட்ட ஐதீகங்களைப் பரப்பினர். இப்போதும் உடுராவணா, மயில்ராவணா, மேகாவதி, சீதா, இந்திரஜித்து, விபீஷணகுமார போன்ற பெயர்கள் தமிழர்களிடம் அல்ல சிங்கள மக்களிடம்தான் வழங்கி வருவது வரலாற்று முரண்நகையாகும். இன்றைக்கு எந்தத் தமிழனும் தனது பிள்ளைக்கு ஆதித் தமிழன், ஆதித் திராவிடன் என்று கூறப்படும் இராவணனின் பெயரை வைக்கத் தயாராகயில்லை. மனித இனம் ஒரே மூலத்திலிருந்தே உலகெலாம் பரவியதென்பதும் அது மீண்டும் ஒன்றாய் கலந்து உலக மனிதமாவது ஒரு தவிர்க்க முடியாத விதியாகும் என்றும் யோசிக்க வடக்குத் தமிழ் தேசியவாதிகளுக்கு மண்டை போதாததாக இருந்தது, இருக்கிறது.

இத்தகையவர்கள் வடக்குக் கிழக்கு இணைப்புக்குத் தீவிரமாய் நின்றனர். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட பிரதேசமாய்க் கருதப்படக் கூடிய அரசியல் உறவுகள் பலமாய் நிலவவில்லை. இருபகுதியும் தமிழ் மொழியைப் பேசுவதும் கலாச்சார ஒற்றுமைகளைக் குறிப்பிடத்தக்களவு கொண்டிருப்பதும் இணைவிற்கான அடிப்படைக் காரணமாக இராது. சிங்கள மொழியின் கலப்பு கிழக்கில் பேசப்படும் தமிழ் மொழியில் அதிகம். கந்தளாய், தெரியாய், தீகவாவி, லகுகல போன்ற புராதன சிங்களப் பிரதேசங்கள் கிழக்கில் இருந்தன. இவைகளிற் பல கிறிஸ்துவுக்கு முற்பட்ட பழைய குடியிருப்புகளாகும். தீகவாவி மட்டக்களப்பிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ளது என்பதும், மட்டக்களப்பு பழைய இராசதானியான உருகுணரட்டையின் பகுதியாகும் என்பதும் வரலாறு. மட்டக்களப்புக்கு அண்மையில் உள்ள லகுகலையில் பவுத்த தாதுகோப இடிபாடுகளுடன் சேதமடைந்த இந்துக் கோவில்கள் உள்ளன என்பது தமிழ் சிங்கள மக்களின் வரலாற்றுரீதியான தொடர்புகளுக்கு அடையாளமாகும்.

பல்லினக் குணாம்சம் கிழக்கு மக்களிடம் வடக்கைவிட வித்தியாசமாக நிலவியது. வடக்கின் உற்பத்திப் பொருட்கள் கிழக்கிற்கோ கிழக்கின் உற்பத்திப் பொருட்கள் வடக்கிற்கோ செல்வதில்லை. ஒன்றில் ஒன்று தங்கி நிற்பதோ பொருளாதார சமூகப் பரிமாற்றங்களோ நிலவவில்லை. திருமண உறவுகளோ ஏனைய ஒரு தேசிய இனத்துக்கான உறவுகளோ காணப்படவில்லை. வடக்குக் கிழக்கை நேரடியாக இணைக்கும் பாதைகளோ போக்குவரத்துத் தொடர்புகளோ கூட இருக்கவில்லை. கிழக்குத் தமிழ் மக்களுக்கு வடக்குத் தமிழர்களைவிட தம்பிரதேசத்தில் வாழும் சிங்கள முஸ்லீம் மக்களுடன்தான் வாழ்வியற் தேவைகள் பின்னிப் பிணைந்திருந்தன. வடக்கும் கிழக்கும் தம்மிடையேயுள்ள தொடர்புகளை விட கொழும்புடன்தான் முழுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனா. வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் பொருளாதாரரீதியாக இணைக்கப்பட்டு அதுசார்ந்து சமுதாய நடவடிக்கைகள் நடந்திருந்தால் ஒன்றிணைந்திருந்த தேசியமாக வளர்ந்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

இன்று உலகில் 8.5 லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகக் குடிபெயர்ந்து வாழ்கின்றனர். வேற்றின மக்களின் பாரம்பரிய நிலங்களுக்குக் குடிபெயர்ந்து வாழும் உரிமையை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். கனடாவில் 3 லட்சம், பிரித்தானியாவில் 1.5 லட்சம் ஜேர்மனியில் 60000 பேர் என்று ஈழத் தமிழர்கள் குடியேறியுள்ளனர். இத்தொகையோடு ஒப்பிடுகையில் கிழக்கில் குடியேறிய ஏழைச் சிங்களவர்களின் தொகை சில பத்தாயிரங்களாகும். தமிழர்களின் நிலம் பறிபோய்விட்டது சிங்களவன் குடியேறிவிட்டான் என்று புகலிட நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளும் வானொலிகளும் குளறும். வெளிநாட்டுத் தமிழர்களின் தொகையில் ஒருவீதம் கூடத் தாய்நிலம் காக்க
கிழக்குக்குத் தமது வெளிநாட்டு வாழ்வைத் துறந்து போவார்களா? பிள்ளை குட்டிகளோடு அங்கு போய்க் குடியேறுவார்களா? இனி ஒரு போதும் இலங்கைக்கு திரும்பி வாழச் செல்லாதவர்களும் பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் சோற்றுக்கும் கஞ்சிக்கும் வழியில்லாத ஏழைச் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லீங்களும் ஒருவரோடொருவர் சண்டையிட்டு தமிழீழத்திற்காகச் சாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். புலிகளே தாய்லாந்தில் குட்டித் தீவுகளை வாங்கிக் குடியேறுகிறார்களாம். டென்மார்க்கில் தீவு வாங்கப் போகிறோம் என்று கூறிப் புகலிடங்களில் காசு கேட்கிறார்கள். இக்காசிலே நயினாதீவையும் நெடுந்தீவையும் ஏன் முன்னேற்றக் கூடாது?

1938ல் ஆரம்பிக்கப்பட்ட இரணைமடுக் குடியேற்றத் திட்டத்தில் முதன் முதலில் 60 பேருக்குத்தான் காணி வழங்கினார்கள். கிளிநொச்சிப் பகுதியில் ஆட்கள் இல்லாமையால் பெரும்பகுதிக் காணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கே வழங்கப்பட்டன. 1960 ஆண்டுவரை அக்காணிகளில் கூடக் குடியேற ஆட்கள் வரவில்லை. 1950ம் ஆண்டுகளில் மாங்குளத்தில் 10 வீட்டுத் திட்டத்தில் யாழ்பாணத்திலுள்ள நிலமற்ற ஏழை விவசாயிகட்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும் ஒரு ஏக்கர் குடியிருப்புக் காணி, 2 ஏக்கர் தோட்டக்காணி, 3 ஏக்கர் வயற்காணியுடன் ஒரு சோடி வடக்கன் மாடு, வண்டி, இரும்புக் கலப்பையுடன் வீடும் கட்டிக் கொடுத்தார்கள். இத்தனை கொடுத்தும் சனம் வந்து குடியேறப் பல வருடங்கள் எடுத்தன. முதலில் வீடு எடுத்தவர்கள் கூட வீடு காணிகளை விட்டுவிட்டுத் திரும்ப யாழ்ப்பாணம் ஓடி விட்டர்ர்கள். 1970களிற் கூட முத்தையன் கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் முதலில் காணி வழங்கப்பட்ட பெரும்பகுதியினர் குடியேறச் செல்லவில்லை. அதன் அண்மைக் கிராமங்களான ஒட்டிசுட்டான், கற்சிலைமடு ,புதுக்குடியிருப்பு, நெடுங்கேணி ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள் முதலில் இதிற் குடியயேற ஆர்வம் காட்டவில்லை. முத்தையன் கட்டில் செத்தல் மிளகாயால் பெரும் செல்வம் ஈட்டப்பட்டதைக் கண்ட பின்னே அங்கு குடியேறச் சனங்கள் போட்டியிட்டர்ர்கள். முத்தையன்கட்டுக் குடியேற்றத் திட்டத்தின் பின்பே ஒட்டிசுட்டான் கிராமம் விரைவாக முன்னேறியது. மக்கள்தொகை தீவிரமாக அதிகரித்தது. உணவுப் பொருட்கள் உற்பத்தியும் விரைவாக உயர்ந்தது. வன்னியின் பல நூறு வருடப் பழைமை வாய்ந்த கிராமங்களை விட முத்தையன்கட்டு விரைவாக முன்னேறியது. கல்வீடுகள் எழுந்தன. விவசாயிகள் உழவு இயந்திரங்களை வாங்கினார்கள். முத்தையன் கட்டு குளத்து நீர் மூலம் காணிகள் பசுஞ்சோலையாக மாறின.
இக்குடியேற்றத் திட்டத்தில் இன்று பெரும்பகுதி அழிந்துவிட்டது. வாய்கால்களிலிருந்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களைப் புலிகள் கழற்றிக்கொண்டு சென்று விட்டார்கள். போர்க்கால உணவுற்பத்திக்காகப் புலிகள் செய்யும் சேவை இதுதான்.

வன்னியிலோ கிழக்கிலோ யாழ் குடாநாட்டுக் கல்விச் சமூகம் குடியேறாமைக்கான காரணம் அவர்கள் உடல் சார்ந்த உழைப்பை இழிவாய்க் கருதியாதாலாகும். படித்துப் போட்டுத் தோட்டம் கொத்துவது படித்த படிப்புக்கு மரியாதை தரும் செயலாகக் கருதப்படவில்லை. மண்வெட்டி பிடிப்பதற்குப் பதில்; காற்சட்டை போட்ட மூளை உழைப்புக்கு அவர்கள் ஆசைப்பட்டார்கள். இலங்கையில் உத்தியோக வாய்ப்புத் தடுக்கப்பட்டபோது அவர்கள் கப்பல் வேலைகளுக்கும் வெளிநாடுகளுக்கும் போனார்களே தவிர காடடர்ந்த மக்கள் தொகை குறைந்த வன்னிக்கோ கிழக்குக்கோ சென்று குடியேறத் தயாராக இருக்கவில்லை. பண்டாரநாயக்க காலத்துத் தென்னிலங்கை நிலச் சீர்திருத்தம் தென் இலங்கையில் விவசாயிகளிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியது போல வடக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. செல்வநாயகம் காணி உச்சவரம்புச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்திற்கு எதிராக எவரும் மூச்சுக்கூட விடவில்லை.

யாழ் குடாநாட்டுக்குள் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனை அவர்களுக்கு சொந்த நிலமின்மையின் பிரச்சனையாகும். அவர்களை வன்னியிலும் கிழக்கிலும் குடியேற்றியிருந்தால் சாதிசார்ந்த தொழில்களிலிருந்து அவர்கள் வெளியேறி இருப்பார்கள். சொந்த நிலங்களில் சுதந்திரமாக உழைக்கவிட்டிருந்தால் யாழ்ப்பாணச் சாதி அமைப்பே தகரத் தொடங்கியிருக்கும். ஆனால் யாழ் குடாநாட்டு உயர் சமூகம் தம் அடிமை குடிமைகளை இழக்கத் தயாரின்மையால் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை குடாநாட்டுக்கு வெளியே சுதந்திரமான நிலங்களுக்கும் உழைப்புக்கும் செல்லவிடத் தயாராயிருக்கவில்லை. முல்லைத்தீவு, நாயாறு போன்ற பகுதிகளில் தமிழ் சம்மாட்டிமாரால் நீர்கொழும்பு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மீன்பிடித் தொழிலாளர்கள் உழைத்தார்கள். இவர்கள் முல்லைத்தீவையோ நாயாற்றையோ கைப்பற்ற வரவில்லை. சிறுபகுதியினர் அங்கு குடியேறினார்கள் என்ற போதும் அது அவர்களின் தொழில்நிலை சார்ந்த இயல்பான செயலாக இருந்தது. சிங்களவர்கள் ஏதோ தமிழர்களின் நிலத்தைப் பிடிக்க அலைந்தார்கள் என்பது தமிழ் இனவாதப் பொய்யாகும். வன்னிக்கோ கிழக்குக்கோ தம் சீவியத்தில் ஒருமுறைகூடப் போகாதவர்கள் யாழ்குடாநாட்டிலிருந்து கொண்டு தமிழரசுக் கட்சியின் பிரச்சாரத்தைக் கேட்டுவிட்டுத் தமிழர் நிலம் பறிபோவதாகக் கூறினார்கள்.

மட்டக்களப்புப் பகுதியில் பட்டிருப்பு, கற்குடா போன்ற தொகுதிகளைத் தவிர தனித் தமிழ் பகுதி என்று சொல்ல எதுவுமேயில்லை. மக்கள் இனரீதியிற் கலந்தே வாழ்ந்தனர். மீன்பிடி, விவசாயம், மந்தை வளர்ப்பு, சிறு கைத்தொழில்கள் ,வர்த்தகம், காடுசார்ந்த தொழில்கள் போன்றவற்றிற் கூட்டாகவே பல்லின மக்களும் ஈடுபட்டிருந்தனர். மேலும் கிழக்கு மாகாணம் திருகோணமலை தவிர யாழ்ப்பாண இராச்சியத்தின் பகுதியாக இருக்கவில்லை என்பதும் கண்டி இராச்சியத்தின் பகுதியாகவே இருந்து வந்தது என்பதும் நினைவில் இருத்தக் கூடியவை. சோழராட்சிக் காலம் தவிர அதற்கு முன்பும் பின்பும் மட்டக்களப்பை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி சிங்கள மன்னர்களின் ஆட்சியின் கீழ் தமிழ் சிங்கள மக்கள் வாழ்ந்த பிரதேசமாகவே இருந்துள்ளது. ‘மட்டக்களப்பு’ என்பது ‘மட்டக்களப்புவ’ என்ற சிங்களச் சொல்லிலிருந்து வந்ததான விளக்கங்களும் உள்ளன. இங்கு தமிழர்கள்- சிங்களவர்கள்- முஸ்லீங்கள் மட்டுமல்லாமல் வேடர்- குறவர்- பறங்கியர்கள் ஆகியவர்களுடன் மலையாளத் தேசத்தவர்கள், ஒரிசாவைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் காலத்துக்குக் காலம் இப்பகுதிகளிற் குடியேறினர். மட்டக்களப்பு முழுமையாகக் கலப்பின மக்களின் பிரதேசமாகும். கண்டி நாயக்க மன்னர் காலங்களில் தென் இந்தியாவிலிருந்து தமிழரல்லாதவர்களின் குடியேற்றங்களும் மட்டக்களப்புப் பிரதேசங்களையொட்டி நிகழ்ந்துள்ளன. 1815-1818ல் அந்நியர்களுக்கு எதிரான கண்டிக் கிளர்ச்சிகளின் பின்பு பெருந்தொகையான சிங்கள மக்கள் மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்ட கிழக்குப் பிரதேசங்களில் பெருந்தொகையாக் குடியேறினர்.

ஆசியாவின் மிகச் சிறந்த சர்வதேசவாதிகளாகவும் தத்துவ அறிஞர்களுமாயிருந்த இடதுசாரிகளைக் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. கொல்வின்; ஆர்.டி. சில்வா 1950கட்கு முன்பும் பின்புமாக சிறந்த மார்க்சிய அறிஞராக விளங்கியவர். இந்தியாவின் எம்.என்.ரோய் போன்றவர்களை விடச் சிறந்த எழுத்துக்களை எழுதியவர். ஸ்பெயின் எழுச்சி தொடங்கி இந்தியத் துணைக்கண்ட சோஷலிசப் புரட்சிவரை சிந்தித்தவர். இத்தகையவர்கள் பிற்காலத்தில் பாராளுமன்ற வாதத்தாலும் ஸ்டாலினிசக் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டுகளாலும் சீர்கெட்டனர். 1930களில் தொடங்கி 1960கள் வரை மிகச்சிறந்த தொழிலாளர் தலைவர்களாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா உட்பட சமசமாஜிகள் விளங்கினர். 1935ல் சமசமாஜக் கட்சி தொடங்கியபோது உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடமை ஆக்குவது, உற்பத்தியையும் விநியோகத்தையும் அரசு கட்டுப்படுத்துவது, வங்கி, இறக்குமதி ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவது, நிலச் சீர்திருத்தம், இனம் சாதி பால் கடந்த சமுதாயத்தை உருவாக்குவது என்பன அவர்களது இலக்குகளாகயிருந்தன. இலங்கை வரலாற்றில் முதன் முதலில் உழைப்பாளர்கட்காக, ஏழை மனிதர்கட்காக, தோட்டத் தொழிலாளர்கட்காக அமைப்புகளை உருவாக்கியவர்கள் சமசமாஜிகள்தான். யாழ் குடாநாட்டுக்குள் பஸ் ஊழிர்கள், சுருட்டுத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் வரை அமைப்பாக்கியவர்கள் சமசமாஜிகளே. இந்தத் தொழிற்சங்க முன்முயற்சிகளைச் செய்த ஒப்புவமை இல்லாத தொழிலாளர் தலைவனான தோழர். தர்மகுலசிங்கத்தை நினைத்துக் கூடப் பார்க்காத குற்றத்திற்காக குடாநாட்டு மக்களை வரலாறு இன்று தண்டிக்கிறது.

தமிழரசுவாதிகள் தொழிலாளர்களையோ ஏழை மனிதர்களையோ குறித்துப் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. நல்லூர் – கதிர்காமம் கொடியேறினால் அவர்கள் பாராளுமன்றத்தில் பக்திமயமாகி விடுவார்கள். வன்னியசிங்கம் பாராளுமன்றத்தில் தேவார திருவாசகம் பாடுவார். அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம் “அருமை.. அருமை! தொடர்ந்து பாடுங்கள்!” என்று ஊக்குவிப்பார். இராசதுரையும் கா.பொ. இரத்தினமும் பழந்தமிழர் பெருமை பேசுவார்கள். ஒருநாளாவது பொருளாதரத்தைப் பற்றியும் உழைக்கும் தமிழ் மக்களைப் பற்றியும் இவர்கள் பேசியது கிடையாது. இத்தகைய தமிழினவாதிகளையும் மறுபுறம் சிங்கள இனவாதிகளையும் இடதுசாரிகள் ஒன்றுசேர எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருபகுதியும் வளர்த்த இனவாதத்தின் கொடுமையிற் சிக்கி இடதுசாரிகளும் உருத்திரிந்து போயினர். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன தமிழ் இனவாதக் கட்சிகளாக இருந்தபோதும் சிங்கள இனவாத அரசியற் தலைவர்களுடன் – முக்கியமாக யூஎன்பியுடன் – நெருக்கமாக இருந்தனர், இன்றும் இருக்கின்றனர். தமிழரசுக் கட்சியின் நாகநாதன் யாழப்பாண மாம்பழச் சீசனுக்கு பண்டாரநாயக்காவுக்கு மாம்பழம் காவிக் கொண்டுபோய்க் கொடுத்து மகிழ்விக்கும் நெருங்கிய நண்பராவார். “தமிழனைத் தேத்தண்ணிக்கும் சுருட்டுக்கும் வாங்கலாம்” என்பதை ஒத்த சிங்கள இனவாதிகளின் பேச்சுக்குச் சமமாக “என் வீட்டின் வேலைக்காரன் சிங்களவன்” என்பது போன்ற தமிழ் இனவாதிகளின் பேச்சுக்களும் ஏராளம் உண்டு.

சுகாதாரம்:

1930களில் அனுராதபுரப் பகுதியில் மலேரியாவால் ஒரு லட்சத்தியிருபதினாயிரம் மக்கள் இறந்தனர். 1950ல் 611000 பேர் இலங்கை முழுவதும் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இக்காலத்தில் மலேரியாவுக்கு எதிரான வெகுசன இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொற்று நோய்கட்கு எதிரான மருத்துவரீதியிலான போராட்டங்களும் தீவிரமாகத் தொடங்கின. D.D.T நாசினியை, வீடுகள் – அதன் சுற்றுப் புறங்களில் தேங்கி நிற்கும் நீர் குட்டைகளில் தெளிப்பது நடைபெற்றது.

மலேரியாவுக்குக் ‘Quinine 9’ மருந்து கண்டுபிடிக்கப்பட்டதுடன் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைவிட யானைக்கால் நோய், கொலோரா, போலியோ, கொப்பிளிப்பான் அம்மை போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்டுக் கிராமங்களில் மக்கள் இறந்தனர். வாழ்நாள் முழுவதும் துன்பங்களை அனுபவித்தனர். குழந்தைகள் இளம்பிள்ளைவாதத்தால் கைகாலகள் சூம்பிப் போனவர்களாக அங்கவீனர்களாக நடமாடமுடியாமல் நிலத்தில் ஊரந்து திரிபவர்களாக ஆகினர். ஒவ்வொரு பெருமழைக்கும் வெள்ளத்துக்கும் கொலோரா வந்து மக்கள் கிராமம் கிராமமாக இறந்தனர். அம்மைப்பால் குத்துதல் தடுப்பூசி முறைகள் வந்தபின்பே மக்களிடையே இத்தகைய நோய்கள் அழிக்கப்பட்டு மரணவீதம் குறையத் தொடங்கியது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மரணங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தன. 1940 – 1950களில் ஒரு குடும்பத்தில் எட்டுப்பத்து என்று பிள்ளைகள் இருக்கும். அதில் அரைவாசிக் குழந்தைகள் 5, 10 வயதுகட்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள். சனங்கள் தொற்று நோய்களை கடவுளின் கோபம் என்று கருதினர். அம்மனுக்கு நேர்த்தி வைப்பது, காப்புக் கட்டுவது திருநீறு மந்திரித்துப் போடுவது, உடுக்கடித்து வேப்பிலை அடிப்பது போன்றவற்றுடன் கிராம வைத்தியர்கள் பரிகாரிமார் மருந்துகள், மந்திரங்கள் மூலமும் வீட்டின் கைமருந்துகள் மூலமும் செய்வினைப் பிராயச்சித்தம் மூலமும் மக்கள் நோய்களுக்கு எதிராகப் போராடி வந்தனர். ஒவ்வொரு பிள்ளை பிறக்கும்போதும் அப்பிள்ளை உயிர்தப்ப வேண்டுமென்று தாய் தகப்பன் கடவுளுக்கு நேர்த்திக்கடன் கட்டுவார்கள். தட்சணை தருவதாகவும் காவடி எடுப்பதாகவும் மொட்டை அடித்து முடி இறக்குவதாகவும் வேண்டிக் கொள்வார்கள். சாத்திரிகள், பூசாரிமார்களிடம் எதிர்காலப் பலன் கேட்டும் சாதகத்தில் உள்ள கண்டங்களைப் போக்க பரிகாரம் செய்வதற்குமாகத் தம் வாழ்நாளை அவர்கள் செலவிட்டனர்.

இப்போக்குகள் சுகாதார வளர்ச்சியாலும் இலவச வைத்தியத்தாலும் இலவசக் கல்வி முறையாலும் அழியத்தொடங்கின. கர்ப்பிணிகள், குழந்தைகள் முதியோர்களின் மரண வீழ்ச்சியென்பது சமூக வளர்ச்சியின் அடையாளமாகயிருந்தது. டி.டி.ரியுடன் மலத்தியோன் போன்ற மருந்துகள் சேர்த்துத் தெளிக்கப்பட்டன. இவை பக்க விளைவுகளை சுற்றாடலுக்கு ஏற்படுத்தியபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்ச்சி மேற்கு நாடுகள் போல இலங்கையில் நிலவவில்லை என்றபோதும் பல ஆயிரம் ஆண்டுகளாக மில்லியன் கணக்கான மக்களை வாட்டிய நோய்களும் மரணங்களும் பெரும்பான்மையாய் ஒழிக்கப்பட்டன. இலங்கை மக்களின் உடல்நலம் சுகாதார அறிவு என்பன தொடர்ந்து வளர்ந்து வந்தன. சுகாதாரம் பள்ளிக்கூடப் பாடமாக்கப்பட்டது. 1967ல் இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்த நிலையில் காணப்பட்டது. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 65 வருடங்களாகவும் பெண்களின் வாழுங்காலம் 67 வருடங்களாகவும் இருந்தது. இந்தியாவில் இக்காலத்தில் நகர்ப்பறத்தில் வாழ்ந்த ஆண்களின் ஆயுட்காலம் 48.9 வருடங்களாகவும் பெண்களிடையே 46.2 வருடங்களாகவும் இருந்தது. ஆப்கானின் தலைநகரமான காபூலில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 1960- 1961 களில் 35 வருடங்களாக மட்டுமே இருந்தது. 1984 ல் இலங்கையில் ஆண்களின் வாழும் காலம் 68 வருடங்களாகவும் பெண்களின் ஆயுள் 72 வருடங்களாகவும் தொடர்ந்து உயர்ந்து வந்ததுடன் சராசரி வாழுங்காலம் 70 வருடங்களாகவுமிருந்தன. இலங்கையில் நோய்கள் ஒழிக்கப்பட்டமை மக்களின் ஆரோக்கியம் உயர்ந்தமை அவர்கள் அச்சமின்றிப் புதிய பகுதிகட்குக் குடிபெயரவும் காடடர்ந்த வெப்பவலையப் பிரதேசங்களுக்கு குடும்பங்களோடு சென்று வாழவும் முக்கிய ஏதுக்களாக அமைந்தன. பாம்புக் கடிக்கு Antivenom என்ற மருந்து கண்டு பிடிக்கப்பட்டமையும் மக்கள் காடடர்ந்த பிரதேசங்களுக்குக் குடியேற புதிய துணிவைத் தந்தது. அதற்கு முன்பு ஒவ்வொரு கதிரறுப்புக் காலங்களிலும் மக்கள் விசப்பாம்புக் கடியால் கிராமங்கள் தோறும் இறந்தனர்.

அரிசியின் அரசியல்:

tamilarasan

இன்றுபோல் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அரிசி இலங்கை மக்களின் நித்திய உணவாக இருக்கவில்லை. யாழ்குடா நாட்டுள் தினை, குரக்கன், சாமை, பயறு எள்ளு, இறுங்கு, சோளம் என்பவற்றுடன் பனங்கிழங்கு, ஒடியல், ஒடியல்மாப் பண்டங்கள், பனாட்டு, பனங்கருப்பட்டி என்பன முக்கிய உணவுகளாக இருந்தன. சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், கழி, பிட்டு என்பனவும் தயாரிக்கப்பட்டதுடன் தினைச் சோறும் பாணிப் பனாட்டும் சேர்த்து உண்ணப் பட்டது. கூழ் காய்ச்சி குடும்பமாய்க் கூடியிருந்து, பருமில், பலா இலையைக் கரண்டிபோல் பாவித்து கூழை அள்ளிக் குடிப்பார்கள். பனை ஓலையால் செய்யப்பட்ட புழாவிலும் குடிப்பார்கள். கூழ் ஏழைகளின் உணவாக அப்போது இருந்தது. கருணைக்கிழங்கு, மரவள்ளி, இராசவள்ளி, வத்தாளை போன்றவையும் உணவாகயிருந்தன. மரவள்ளிக் கிழங்கு பஞ்சம்போக்கி என்றழைக்கப்பட்டது. அவித்த மரவள்ளிக் கிழங்கும் சம்பலும் பொதுவான மக்களின் உணவாகயிருந்ததன. மரவள்ளிக் கிழங்குடன் இஞ்சிச் சம்பலைச் சேர்த்துச் சாப்பிட்டு நஞ்சாகிச் செத்த கதைகள் அக்காலத்தில் ஏராளம். வன்னிப் பகுதியில் சிறுதானியங்களும் கிழங்கு வகைகளும் வேட்டையால் கிட்டும் இறைச்சியும் முக்கிய உணவுப் பொருட்களாக இருந்தன. மான், மரை, பன்றி போன்ற மிருகங்களை வேட்டையாடிப் பெறப்பட்ட இறைச்சியை வாட்டிப் பதப்படுத்தி அதைத் தினசரி உணவுடன் பயன்படுத்துவர்கள். இந்த உலர்ந்த இறைச்சியை வற்றல் என்று அழைப்பர்கள். இதுசிறுதானியத்துடனும் சேர்த்துண்ணப்பட்டது. பண்டி இறைச்சியைப் பொரித்து பன்றிக் கொழுப்பில் ஊறவைத்துப் பெருஞ்சாடிகளில் இட்டு பாதுகாப்பார்கள். இறைச்சியும் உணவில் சேர்க்கப்படும். இது ‘ஈப்பண்டி’யென்று அழைக்கப்படும். மட்டக்களப்புப் பகுதியில் பெரிய மந்தை வளர்ப்பு இருந்தமையால் பால், தயிர், வெண்ணெய், நெய் என்பவற்றுடன் அரிசி, கோழி, மீன், பழவகை, தேன் என்பனவும் இருந்தன. இங்கு உற்பத்தியான பொருட்களுக்குக் கண்டி உட்படத் தென்னிலங்கையில் சந்தை இருந்தமையால் பெருமளவு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வன்னிப் பகுதியில் பெருமளவு நிலம் இருந்தபோதும் குறைந்தளவு நிலமே பயிரடப் பட்டது. மக்கள் தொகை குறைவாகவும் காட்டு மிருகங்களால் பயிர் சேதமடைவதும் அதிகமாக யிருந்தது. வன்னியில் தானியங்கள் விற்பனைப் பண்டமாக உற்பத்தி செய்யப்படவில்லை. அவற்றுக்குப் பரிவர்த்தனைப் பெறுமதி இருக்கவில்லை. பாவனைப் பெறுமதியே இருந்தது. யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லுட்பட்ட தானியங்கள் சுயதேவையைப் பூர்த்தி செய்ய முடியாதிருந்தன. தென்னிந்தியப் பகுதியிலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் பர்மாவிலிருந்தும் அரிசி போன்ற உணவுப் பொருட்கள் கடல் மார்க்கமாக இறக்குமதி செய்யப்பட்டன. போத்துக்கேயர் காலத்தில் புகையிலைச் செய்கையும் ஒல்லாந்தர் காலத்தில் சாயவேர் உற்பத்தியும் உணவுற்பத்தியைப் பாதித்தது. புகையிலை, சுருட்டு போன்ற உற்பத்திகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. சிங்கள மக்களுக்குச் சிறுதானிய வகைகளுடன் ஈரப்பலாக்காய், பலாக்காய், தேங்காய், மரவள்ளிக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, சேமைக் கிழங்கு போன்றவற்றுடன் பழவகைளும் முக்கிய உணவாகளாக இருந்தன. இலங்கை மக்களின் உணவில் கடல் உணவுகளும் பிரதானமாக இருந்தன.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையும் ஏற்றுமதிப் பொருளாதாரமும் உள்ளுரின் உணவுற்பத்தியையும் சுய பொருளாதாரத்தையும் அழித்தன. உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலங்களை தென்னிலங்கையில் பெரும் பகுதியாய் தேயிலை, ரப்பர், கோப்பி, கொக்கோ பயிற்செய்கைகள் கைப்பற்றிக்கொண்டன. சிறுதானிய உற்பத்தி வீழ்ச்சி கண்டுவந்த நிலையிலேயே நெல்லரிசிச் சோறு முக்கியத்துவம் பெற்றது. நெல் ஆதியிலே இலங்கையில் விளைவிக்கப்பட்டதாயினும் அது பிரதான உணவாகத் தினசரி உண்ணும் உணவாகயிருக்கவில்லை. அது குறைவாகப் பயிரிடப்பட்டதுடன் விலை உயர்ந்ததாகவும் அருமை பெருமையாய் சாப்பிடும் உணவாகவும் இருந்தது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அரிசி பிரதான உணவுப் பொருளாக ஆகியதுடன் இந்தியா, தாய்லாந்து, பர்மா, சீனா போன்ற நாடுகளிலிலிருந்து இறக்குமதியும் செய்யப்பட்டது. அரிசி இறக்குமதி செய்பவர்களும் விற்பவர்களும் பெருஞ் செல்வந்தர்கள் ஆயினர். இரண்டாம் உலக யுதத வேளையில் பங்கீட்டு முறையில் அரிசி வழங்கப்பட்டது. இலங்கை மக்களின் உணவில் தினசரி இரண்டு தடவைகள் நெல்லரிசிச் சோறு இடம்பெறத் தொடங்கியது. கூடவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் பாவனையும் அதிகரித்ததுடன் சிறுதானியங்களிலிருந்து செய்யப்பட்ட ஆட்டாமாவு பாவனை குறையத் தொடங்கியது. இந்த ஆட்டாமாவு அக்காலத்தில் ஒன்பது வகையான சிறுதானியங்களிலிருந்து அரைத்துப் பெறப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பாகவே குடியேற்றத் திட்டங்களும் நெல் உற்பத்திக்கான முயற்சிகளும் தொடங்கின. முதலாம் உலக யுத்தம் தோற்றுவித்த உணவுப் பஞ்சத்தை அடுத்து 1920களின் நடுப் பகுதியிலேயே இலங்கையில் பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

1951ல் 236.2 மிலியன் ரூபாவுக்கு இலங்கை அரிசியை இறக்குமதி செய்தது. ஆனால் 1952ல் இதேயளவு அரிசிக்கு 328.7 மில்லியன் ரூபா தரவேண்டியிருந்தது என்ற மட்டத்தில் உலகச் சந்தையில் ஏகபோக நிறுவனங்களால் அரிசி விலை உயர்த்தப் பட்டது. எனினும் இலங்கை அரசு உலகச் சந்தையின் விலைக்கேற்ப உள்ளுரில் அரிசி விலையை அதிகரிக்கவில்லை. மாறாக அரிசிக்கு மானியத்தைத் தந்தது. அரிசி விலை அதிகரித்ததால் மக்கள் அரசைப் புரட்டிவிடுவார்கள் என்ற நிலை அன்றிருந்தது. கொரிய யுத்தத்தின் பின்பு இலங்கையின் ரப்பர் ஏற்றுமதி பாதிப்படைந்தது. ரப்பர் விலை வீழ்ந்தது. அமெரிக்கா ரப்பரை இறக்குமதி செய்துகொண்டு அதற்கு மாற்றாக அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால் காலப்போக்கில் இராணுவத் தேவைகளையொட்டி இறக்குமதியான ரப்பர் அமெரிக்காவுக்குத் தேவைப்படாததுடன் அது செயற்கை ரப்பரை குறைந்த விலையில் உற்பத்தி செய்யவும் தொடங்கியது. இதனால் இலங்கை ரப்பரை உலகச் சந்தையில் முன்பு போல் விற்க முடியவில்லை. அரிசியின் விலையும் உலகச் சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் 1953 ஒக்டோபர் மாதம் அரிசி மீதான மானியத்தை இலங்கை அரசு நீக்கியதை அடுத்து ஒரு கொத்து அரிசியின் விலை 25 சதத்திலிருந்து மும்மடங்காக 75 சதமாக அதிகரித்தது. சனங்கள் அரிசி விலையை எதிர்த்துக் கலகங்களில் இறங்கினார்கள். தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் ஊடாக அரசுக்குப் பதில் அளித்தார்கள். முழு அரச எந்திரமும் முடக்கப் பட்டது. இதை எதிர்கொள்ள முடியாத டட்லி சேனநாயக்க பதவியை விட்டு விலகினார். பதவிக்கு வந்த புதிய அரசு முதல் வேலையாக அரிசி விலையை 55 சதமாகக் குறைத்தது. சோவியற் யூனியனுடனும் சீனாவுடனும் பகைமை கொண்டிருந்த, இந்த இரண்டு நாடுகளையும் அங்கீகரிக்க மறுத்து வந்த இலங்கை அரசு சீனாவுடன் ரப்பரைக் கொடுத்து அரிசியை வாங்கும் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. சீனா உலகச் சந்தையின் விலையிலும் பார்க்க அதிக விலையை ரப்பருக்குத் தரவும் அரிசியை உலகச் சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிற்
தரவும் உடன்பட்டுத் தன் நல்லெண்ணத்தையும் காட்டியது.

சீனா உட்பட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வெள்ளையானதாகவும் சிறியதாகவும் வெகுவிரைவில் செமிபாடடையக் கூடியதாகவும் இருந்தது. இது பசிதாங்கக் கூடியதாக இருக்காமையால் கடுமையாக உழைக்கும் மக்களால் அது பெருமளவு விரும்பப்படவில்லை. ஆனால் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட புழுங்கல் அரிசி சிவப்பாகவும் பெரியதாகவும் சத்து மிகுந்ததாகவும் இருந்தது.

இலங்கையில் அரசியற் கட்சிகள் எல்லாம் தாம் “பதவிக்கு வந்தால் இரண்டு கொத்து இலவச அரிசி தருவோம், அரிசி விலையைக் குறைப்போம்” என்று கூறியே பதவிக்கு வந்தன. அரிசி என்பது அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்தது. அரிசி விலையை உயர்த்திய கட்சிகளை மக்கள் தேர்தலில் தோற்கடித்தார்கள். எனவே தான் அரிசியில் தன் நிறைவு நெல்லுற்பத்தியைப் பெருக்குதல் குடியேற்றங்கள் நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்தல் என்பன அரசுகளின் முதன்மையான விடயங்களாக அமைந்தன. புதிய குளங்கள் அமைக்கப்பட்டுப் பழைய மன்னர்காலக் குளங்கள் புனரமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம் தமிழ் தேசியவாதிகள் குரலிடுவதுபோல் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதற்கல்ல. மாறாக நெல்லுற்பத்தியை அதிகரிப்பதும் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களை வழங்குவதுமே அரசின் முதன்மை நோக்காக இருந்தது. இங்கு சிங்கள இனவாதத்தை ஒரு துணைச் செயற்பாடாக மட்டுமே காண முடியும்.

இலங்கையின் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயற்படத் தொடங்கி நெல்லுற்பத்தி அதிகரித்தபோது அரிசி இறக்குமதி குறையத் தொடங்கியது. 1948ல் 18.7 மில்லியன் புசலாக இருந்த நெல் விளைச்சல் 1951ல் 22 மில்லியன் புசலாகவும் 1955ல் 35.7 மில்லியன் புசலாகவும் அதிகரித்தது. 1966ல் நெல் விளைச்சல் 43.7 மில்லியன் புசலாகவும் 1970ல் 77.4 மில்லியன் புசலாக 1948ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 மடங்காகவும் அதிகரித்தது. 1970களில் அரிசி உற்பத்தியில் தன் நிறைவு எட்டப்பட்டதுடன் உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட புழுங்கல் மற்றும் சிவப்பு வெள்ளைப்பச்சை அரிசிகள் போதியளவு சந்தைக்கு வந்தன.

இலங்கை விவசாயிகள் தோட்டம் துரவுகளில் வேலை செய்பவர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்க முன்பு தனியாகவும் குடும்ப அங்கத்தவர்களுடனும் மாடு கலப்பை மண் வெட்டியுடன் உழைக்கத் தொடங்குபவர்களாவர். சிறுவர்கள், முதியோர்கள் ,கற்பிணிப் பெண்கள் ஆகியவர்களின் உழைப்பு அங்கு அன்றாட வழமைகளாகும். பின்தங்கிய விவசாய உற்பத்தி முறைகளினால் அவர்கள் அதிகமாக உழைத்து குறைந்த பயனையே பெற்றார்கள். விவசாயத்தை நவீன முறைகட்கு மாற்றி குறைந்த உழைப்பில் அதிக உற்பத்தி செய்யும் நிலை இன்மையால் எமது நாடுகளில் பெருமளவு மனித சக்தியும் நேரமும் வீணடிக்கப்படுகின்றன. மணிக்கணக்கில் இயந்திரம் மற்றும் நவீன தொழில் நுட்பக் கருவிகளுடன் சாதிக்கக் கூடிய வேலைகள் நாட்கணக்கில் வாரக் கணக்கில் செய்யப்படுகின்றன. எனினும் வாழ்வுக்கேற்ற பெருளாதாரத் தேவைகளை அவர்களால் அந்த உழைப்பு மூலம் ஈட்டிக்கொள்ள முடியவதில்லை. ஓய்வும் உழைப்புக்கேற்ற வருமானமும் கிட்டுவதில்லை. பண்டைக்கால விவசாய உற்பத்தி முறைகளை விட்டு அவர்கள் இன்னமும் வெளியேறவில்லை. மிகச் சிறிய நிலப் பரப்புகளிலும் சிறிய உற்பத்தி முறைகளாலும் அவர்களின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இரண்டு விவசாயிகள் 1000 பேருக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்கிறார்கள். இலங்கையில் ஒரு விவசாயியால் 5 அல்லது 10 பேருக்கான உணவைக் கூட உற்பத்தி செய்ய முடியாத அளவு மோசமான உற்பத்தித் திறன் நிலவுகின்றது.

தமிழ்ப் பகுதிகளில் ஒரு பசுமாடு 1 தொடக்கம் 2 போத்தல் பால் கறந்தால் அது திறமான பால்மாடு, சீதேவிமாதிரி என்று மக்கள் புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் ஜேர்மனியில் ஒரு பசுமாடு காலையில் 60 லீட்டரும் மாலையில் 40 லீட்டருமாகச் சராசரியாய் 100 லீட்டர் பால் தருகிறது. தினசரி 120 லீட்டர் பால் தரக் கூடிய சிறந்த இன மாடுகளும் உள்ளன. இலங்கையில் அதிக பயன்பாட்டைத் தரமுடியாத சிறுவின மாடுகளும் போதிய பராமரிப்பு உணவுவகைகள் கிட்டாத கட்டாக்காலி வத்தல், தொத்தல் மாடுகளும் எப்படி அதிக பயன்பாட்டைத் தரும்? யாழ்ப்பாண மாடுகள் வைக்கோல் தின்று உயிர் வாழ்பவை. அதுவும் கிடையாது தெருக்களில் கடுதாசிகளையும் போஸ்டர்களையும் தின்று உயிர்வாழும் கொடுமையிலும் பல மாடுகள் விடப்பட்டிருக்கின்றன. சிறந்த பால்தரக் கூடிய இனங்களைத் தேர்ந்து கொள்வதும் உயர்ந்த பராமரிப்பும் உணவூட்டலும் அதிக பாலைத் தரும். அதற்குப் பாலுற்பத்தி, மாடு வளர்ப்பென்பன நவீன உற்பத்திமுறை கொண்டுவரப்பட வேண்டும். மக்கள் பால் வெண்ணை தயிர் என்று வாங்கத் தக்க நுகர்வுச் சக்தியையும் அதுசார்ந்த வாழ்க்கைத் தரத்தையும் கொண்டிருக்க வேண்டும். ஜேர்மனியில் ஒரு இறைச்சிக் கோழி 28 நாளில் ஒன்றரை முதல் 2 கிலோ நிறையை அடைந்துவிடும். ஒரு கோழி வருடத்தில் 340 முட்டைகளை இடுகிறது. இலங்கையில் ஆறுமாதமானால் கூட ஒரு கோழியைப் பிஞ்சுக் கோழியென்று கூறி வெட்டமாட்டார்கள். ஜேர்மனியில் உள்ள 1300க்கு மேற்பட்ட அப்பிள் மரவகைகளில் அதிக பயன்தரக் கூடிய உச்ச இனங்களான 5 இனங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. ஆனால் எமது நாடுகளில் அதிக பயன் தராத, பயன்தர நீண்ட நாட்களை எடுக்கக் கூடிய அதிக உழைப்பைக் கோரக்கூடிய பாரம்பரியமான பயிர்களையே பெரும்பாலும் பயிரிடுகின்றனர்.

அதிக முதலீடு, தொழில் நுட்பம, துறைசார் பயிற்சியின்மை, சந்தை வசதியின்மை எமக்குப் பிரதான தடைகளாக உள்ளன. இதை மாற்ற புலிகள் தமிழ்ப் பகுதிகளில் என்ன செய்தார்கள்? விவசாயம் கைத்தொழில் மீன் பிடி, தொழிற்துறை சார்ந்து எதைப் புதிதாகச் செய்தார்கள்? எங்கெங்கு முதலீடுகளைச் செய்தார்கள்? எத்தனை பேரைத் இத்துறைகளில் பயிற்றுவித்தார்கள். சொந்த இராணுவம், பொலீஸ், நீதி மன்றம், உளவுத்துறை, கடற்படை இருக்கிறதென்று சொல்பவர்கள் எத்தனை புதிய பொருளாதாரத் திட்டங்களை விவசாயப் பண்ணைகளைத் தொடக்கினார்கள். எந்தெந்த உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவைக் கண்டுள்ளனர்? மக்களுக்கு முன்மாதிரியாக எத்தனை தொழிற்சாலைகளை நிறுவி வெற்றிகரமாகச் செயற்படுத்திக் காட்டியுள்ளார்கள்? புதிய முதலீடுகள், தொழிற்துறை, விவசாயம் முயற்சிகளில் ஈடுபட புலி ஆட்சியில் எந்த உத்தரவாதமும் இல்லை. புலிகளின் மாபியா வகைப்பட்ட பொருளாதாரத்தில் கிடைத்ததைத் தட்டிச் சுத்தும் கொள்ளைப் பொருளாதாரத்தில் விவசாயிகள் எப்படிப் புலியை நம்பி ஒரு மிளகாய்க் கன்றையோ வாழையையோ நடுவார்கள்? ஆடு மாடு கன்று காலிகளையோ கோழிகளையோ வளர்ப்பார்கள்? தொழில் முயற்சி தொடங்கு முன்பே புலிகள் வரி வட்டி என்று போய் நிற்பார்கள். விவசாயம் செய்ய ஆலோசனைகள், கடன், விதைபொருள், உரம், கிருமிநாசினி, சந்தைவசதி எதுவும் இல்லை. ஏழை விவசாயிகள் இதை நம்பி எப்படிப் பயிரிட முடியும். போர்க் கொடுமையால் சனங்கள் கையிலிருந்ததையும் விற்றுச் சுட்டுத் தின்றுவிட்டார்கள்.

இலங்கையில் இடதுசாரி அரசியல் நிலவிய காலத்தில் விவசாயிகட்கு விதைபொருள், பசளை, கிருமிநாசினி என்பன மானிய விலையில் கிடைத்தன. நீரிறைக்கும் இயந்திரம் முதல் கிணறு வெட்டுவது வரை நிதியுதவிகள் கிடைத்தன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் வரியின்றி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப் பட்டது. வெங்காயச் சங்கங்கள் முதல் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் வரை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை வாங்கின.

உழைப்பில் ஈடுபடக் கூடியவர்கள் இளம் சந்ததியினர் புலிகளின் இராணுவத்திற்காகப் பிடித்துச் செல்லப்பட்டு விட்டனர். புலிகள் இன்று ஆட்சி புரியும் பிரதேசங்களில் உற்பத்தியென்பது, அங்கு வாழும் மக்களுக்கு உணவுதர வலிமையற்றதாகும். புலிகளின் இராணுவ – பொலீஸ் அதிகார கும்பல் மாத்திரமே உயர்ந்த நுகர்வும் வாழ்க்கைத் தரத்தையும் கொண்டுள்ளனர். மக்கள் தமது உழைப்பினூடு நாளாந்தத் தேவைகளை நிறைவு செய்ய முடியவில்லை. மக்களிடம் உபரியே இல்லாமல் இருக்கும்போது அவர்களின் சிறு நிதி இருப்பையும் புலிகள் சூறையாடுகின்றனர். மக்களின் வீடுகள் விளை நிலங்கள் தோட்டம் துரவுகள் உழவு இயந்திரங்கள் ஆடுமாடுகள் என்பன கூட புலிகளால் கைப்பற்றப்பட்டு வருகையில் விவசாயம் தொழில் முயற்சிகட்கு மக்களிடம் எந்த நம்பிக்கையும் இருக்காது. மாறாகத் தம் சொத்துக்களையும் உழைப்பின் பெறுமதிகளையும் இரகசியமாக்கவே மக்கள் முயல்வர்.

வன்னிப் பகுதியில் உள்ள நூற்றுக் கணக்கான புராதன குளங்கள் கட்டுகள் அணைகள் கால்வாய்கள் உடைந்து புனரமைக்கப்படாமல் கிடக்கின்றன. இவைகளைத் திருத்தி அமைத்தாலே வன்னி மக்களுக்குத் தேவையான அரிசியை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் புலிகள் இதைச் செய்ய மாட்டார்கள். அரசாங்கம் குளங்கட்ட, தெருக்கள், பாலங்கள் அமைக்க, பள்ளிகள் வைத்தியசாலைகள் என்று கட்ட ஒதுக்கும் நிதியிலும் தாம் எவ்வளவு காசு அடிக்கலாம், ஒப்பந்தமாய் எடுத்து வறுகலாம் என்றுதான் புலி செயற்பட்டு வருகின்றனர். இங்கு எப்படி ஒரு பொருளாதார அபிவிருத்தி நடக்கும்? மக்களின் போர்க்காலத்திற்கான அத்தியாவசியப் பொருளுற்பத்திக்கு முயற்சிக்கப்படும்? மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகள் சொந்தக் கார் வீடு நிலங்களை வைத்திருக்கிறார்கள். வீடுகளில் தொலைக்காட்சி முதல் குளிர்சாதனப் பெட்டிவரை இருக்கின்றது. சினிமா நாடகம் நடனம் உல்லாசப் பயணம் என்று செல்கிறார்கள். உயர் நுகர்வு நிலவுகிறது. தனிமனித சுதந்திரமும் ஜனநாயகமும் இருக்கின்றன. ஆனால் இலங்கையின் பழைய விவசாய சமூக வாழ்க்கையை இப்போதுதான் உலகமயமாக்கல் உலுக்கத் தொடங்கியுள்ளது. புலிப்பாசிசம் தோற்கடிக்கப் பட்டால் குறிப்பிடத்தக்க முதலாளித்துவ ஜனநாயக அபிவிருத்திகள் நடைபெறும். ஆசிய முதலீடுகள் தடங்கலின்றி இலங்கைக்குள் நுழையும். இதன் எதிர்விளைவாக வலிமை படைத்த புதிய உழைப்பாளர்களின் தலைமுறை எழும். இவர்கள் சோஷலிச இயக்கங்களையும் கூடவே கொண்டு வருவார்கள்.

தரப்படுத்தல் சிங்கள இனவாதத்தின் நேரடி விளைவு அல்ல :

யாழ் நடுத்தர வர்க்கம் அந்நியர் ஆட்சிக் காலம் முதல் விசுவாசமான அரச பணியாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் அரச இயந்திரங்களில் பங்கெடுத்தனர். இக்காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக சிங்கள மக்கள் பெரும் எதிர்ப்பு இயக்கங்களை ஒழுங்கமைத்துப் போராடி வந்தார்கள். சிங்களத் தொழிலாள வர்க்கம் இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் வேலை நிறுத்தங்களை நடாத்தியது. யாழ்குடா நாட்டிலோ சிறந்த கிறிஸ்தவப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியையும் ஆட்சிக்குச் சேவை செய்வதையும் தனது வாழ்வியல் நோக்காகக் கொண்ட அரச விசுவாசம் மிக்க சக்திகளாக நடுத்தர வர்க்கம் விளங்கியது. 1930ல் இலங்கையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் 70 வீதமானவர்கள் யாழ்குடா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அப்பொழுது குடாநாட்டின் மக்கள் தொகை முழு இலங்கையின் மக்கள் தொகையில் 10 சதவீதமாக மட்டுமேயிருந்தது. 1948ல் மருத்துவத் துறையில் 32.4 சதவீதமாகவும் பொறியியலில் 40 சதவீதமாகவும் கணக்கியலில் 46 சதவீதமாகவும் தமிழர்களின் பல்கலைக்கழக நுழைவு இருந்தது. இது 1955ல் முறையே 35.5 வீதம் ,46.1 வீதம், 59.9 வீதமாக அதிகரித்தது. 1963ல் இது தொடர்ந்து 46.6 வீதம் , 48.1 வீதம், 56.2 வீதமாக வளர்ந்தது. யாழ் குடா நாட்டுள் சிறந்த கல்வி நிலையங்கள் கல்வி கற்பதற்கு அடிப்படையான கல்வி மற்றும் பொருளாதாரப் பின் புலங்களும் வாய்த்திருந்தன. இலவசக் கல்வி முறை வந்த பின்பு யாழ்குடாநாடு, கொழும்பு, கம்பகா, காலி போன்ற பிரதேசங்களுக்கு வெளியே தென்னிலங்கையிலும் கிழக்கு மற்றும் வன்னிப் பகுதிகளிலும் பகுதியாக மலையகத்திலும் முதல்முறையாகக் கல்வி கற்றவர்கள் தோன்றினர். பல்கலைக்கழகத்துள் நுழைந்தனர். அரசசேவைக்கு முன்னேறினர். இலவசக் கல்வி முறையே யாழ்குடாநாட்டு நடுத்தர வர்க்கத்திற்குக் கல்விச் சமூகம் என்று உரைக்கப்பட்டவர்கட்கு இலங்கை தழுவிய போட்டியாளர்களை உருவாக்கியது. இலங்கை தழுவிய இலவசக் கல்வியின் வளர்ச்சியால் யாழ் சமூகம் தனது கல்வியின் முதன்மை இடத்தை வேகமாக இழக்கத் தொடங்கியது. 1967ல் மக்கள் தொகையில் 11.1 வீதமாக இருந்த தமிழர்களின் பல்கலைக்கழக நுழைவு 14 சதவீதமாக மாறியது. எனினும் அரச சேவையில் பலம் படைத்தவர்களாகத் தமிழர்களிருந்தனர். பொறியியலாளர்களில் 63 சதவீதமானவர்களும் மருத்துவம் விவசாயத் துறைகளில் 59 சதவீதமும் சட்டத்துறையில் 28 சதவீதமும் யாழ்ப்பாணத் தமிழர்களின் வசமேயிருந்தது. யாழ் மத்தியதர வர்க்கம் உடல் உழைப்பை இழிவாய்க் கருதியது. தோட்டம் கொத்துவதை மரியாதை கெட்ட தொழிலாக்கியது. கூலி வேலைக்குப் போகாதே! ரியூசனுக்குப் போய்ப் படி! ஏ.எல் எடு! பாடுபட்டுப் படித்துப் பாஸ்பண்ணு! என்பது அதன் வேதமாக இருந்தது. இலவசக்கல்வி, சிங்கள அரசகரும மொழிச் சட்டம், தரப்படுத்தல் முறை, யாழ் கல்விச் சமூகத்தின் தொடர்ச்சியைப் பயமுறுத்தியது. ஆங்கிலக் கல்வியின் மேன்நிலை போய் சிங்கள மொழி அதன் இடத்தைப் பிடித்தது. கல்வி கற்றவர்களும் பட்டதாரிகளும் இலங்கை முழுவதும் பெருமளவு தோன்றினார்கள். இவர்கள் அனைவருக்கும் தொழில் கிடைக்கவில்லை. கல்வி கற்றவர்களின் தொகை தொடர்ந்து பெருகி வந்தது. யாழ் குடாநாட்டுச் சமூகம் இதைக் கப்பல் வேலை வெளிநாட்டுப் பாயணம் ஊடாக ஈடுகட்ட முயன்றது. இக்கறுப்பு ஆங்கிலேயர்களின் ஒரு பகுதி பிரித்தானியாவுக்குச் சென்றது.

ஏற்கனவே யாழ் குடாநாட்டுச் சமூகத்தில் மச்சான் மச்சாளைக் கட்டுவது நெருங்கிய சொந்தத்துள் சம்பந்தம் செய்வது என்ற போக்குகள் அருகி உத்தியோக மாப்பிள்ளை, கொழும்பு மாப்பிள்ளை, லோங்ஸ் போட்ட மாப்பிள்ளை போன்று வெளிநாட்டு மாப்பிள்ளைமாரின் மதிப்பு சீதனச் சந்தையில் தீவிரமாக உயர்ந்தது. தோட்டம் செய்பவர்கள், காற்சட்டை போடாது வேட்டி சாரம் கட்டுபவர்கட்கு நடுத்தர வர்க்கம் பெண் கொடுக்கத் தயாராகயிருக்கவில்லை. பின்னடிக்கு அரசாங்கப் பென்சன் வராத பொடியங்களைக் கட்டுவதைப் பெண்பிள்ளைகளும் விரும்பவில்லை. காசு நகை வீடுவளவுக்காக சொந்தத்திற்கு வெளியே புறத்தியில் மாப்பிள்ளை பொம்பிளை எடுப்பது பெருகியதால் உறவுமுறைகளுள் தீராப் பகையும் போட்டியும் ஏற்படத் தொடங்கியது. சொந்தம் விட்டுப் போகாமல் இருக்க தாய்மாமன் மாமி மகள் மகளைக் கட்டும் வழக்கங்கள் நெருக்கடிக்குள்ளாகியதால் செத்தாலும் வீட்டு முற்றம் மிதிக்கமாட்டோம், பச்சைத்தண்ணி கூடக் கையால் வாங்கிக் குடியோம், என்ற சபதமெடுப்புகள் சொந்தத்துள் பகைமையின் உச்சத்தைக் காட்டின.

1971ல் தரப்படுத்தல் வந்த போது அதன் பொருளாதார மூலங்களைத் தெரியாதவர்கள் இலகுவாக அதைச் சிங்கள இனவாதமென்று இதுவரை விளக்கி வந்துள்ளனர். 1970களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்த போது ஜே.வி.பியின் ஆயுத எழுச்சியால் இலங்கை குலைக்கப்பட்டதுடன் பெருமளவு பொருளாதார உயிர் இழப்புகளும் ஏற்பட்டு இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கியிருந்தது. இதைச் சாட்டிக் கொண்டு உலக வங்கியும் சர்வதேச நாணய சபையும் இலங்கைக்கு கடும் நிபந்தனைகளை விதித்தன. இவர்களின் கட்டளைப்படி கல்வி சுகாதாரம் சமூக சேவைகள் உட்பட பெரும்பகுதிக்கான மானியங்கள் வெட்டப்பட்டன. கல்விக்கான நிதிகள் பெருமளவு குறைக்கப் பட்டமையால் இலவசக் கல்வி முறையே நெருக்கடிக்குள்ளானது. கொழும்பு பேராதன வித்தியலஙகார வித்தியோதையா பல்கலைக்கழகங்களின் கொள்ளவிலும் பார்க்க, பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிவாய்ந்த மாணவர்களின் தொகை பத்து மடங்கால் அதிகரித்தது. இவர்கள் அனைவருக்கும் பல்கலைக் கழகங்களில் இடமிருக்கவில்லை. இதனை மேலும் புதிதாகப் பல்கலைக் கழகங்களை திருகோணமலையிலும் மாத்தறையிலும் காலியிலும் அமைத்துச் சுலபமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால் உலக வங்கியின் நிபந்தனைகளை ஏற்று கல்விக்கான செலவினங்களை குறைத்தமையால் புதிய பல்கலைக் கழகங்களை அமைக்க வழியும் இருக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில் கட்டுப்பத்தை தொழில் நுட்பக்கல்லூரி பல்கலைக்கழகமாக்கப்பட்ட போதும் பெரும் தொகைத் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புகுவதற்கான இடங்களை அரசால் வழங்க முடியவில்லை.

இப்பிரச்சனையைத் தீர்க்கவே தரப்படுத்தல் எனும் மாவட்டக் கோட்டா முறை கொண்டுவரப் பட்டது. இதனால் பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள- முஸ்லீம்- தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பை முதன் முதலாகப் பெற்றனர். இதன் எதிர்வினையாக யாழ் குடாநாட்டு மாணவர் சமூகம் தொடர்ந்து பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் யாழ் குடாநாட்டு மாணவர்கள் இருப்பிடங்களையும் கூப்பன் பதிவுகளையும் குடாநாட்டுக்கு வெளியே மாற்றி பின்தங்கிய மாணவர்களின் சலுகையைப் பயன்படுத்தி பல்கலைக்கழக அனுமதி பெறும் தந்திரத்தைக் கையாண்டனர்.

தரப்படுத்தலை முழுமையாக சிங்கள, பௌத்த இனவாதத்தின் செயற்பாடாகக் காண்பிப்பது ஆனையிறவுக்கப்பாலுள்ள யாழ் குடாநாட்டுத் தேசியவாதத்தின் அரசியற் பண்பாகும். சர்வதேச மூலதன சக்திகள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளுக்குப் பணிந்து கல்விக்கான நிதியைக் குறைத்தமையே தரப்படுத்தல் வந்தமைக்கான மூல காரணமாகும். இது இலங்கை முதலாளித்தவத்தின் வேறு மார்க்கமறியாச் செயற்பாடாகும். எனினும் இலங்கையின் கல்வியறிவு 1970ல் மிகமிக உயர்வாக இருந்தது. அப்பொது ஆண்களிடையே கல்வியறிவு 85.6 வீதமாகவும் பெண்களிடையே 70.5 சதவீதமாகவும் சராசரியாக 78.5 சதவீதமாகவுமிருந்தது. இவை 1980களில் ஆண்களிடையே 90.5 சதவீதமாகவும் பெண்களிடையே 82.4 வீதமாகவும் சராசரியாக கல்வி கற்றவர்களின் தொகை 86.5 வீதமாகவும் இருந்தது. இச்சமயத்தில் இந்தியாவில் 36 சதவீதமானவர்களும் பாகிஸ்தானில் 24 சதவீதமானவர்களும் தான் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர் என்பது இலங்கையின் கல்வியறிவின் உயர்வைக் காட்டியது. இது அன்றைய ஐரோப்பிய நாடான கிரேக்கத்திற்கச் சமமானதாகும். தரப் படுத்தலை முழுத் தமிழ் மாணவர்களுக்கும் எதிரான சிங்கள இனவாதத்தின் நடவடிக்கையாகக் காட்டுவது, வன்னி கிழக்கு மலையக தமிழ் முஸ்லீம் மாணவர்களும் தென்னிலங்கையின் ஏழைச் சிங்கள மாணவர்களும் பெற்ற பயன்களை மறைப்பதாகும். யாழ் குடா நாட்டுத் தமிழ் தேசியவாதிகளின் பொய்யைத் திருப்பிச் சொல்வதாகும்.

சிறிய நாடுகளின் பொருளியலின் நிகழ்காலமும் எதிர்காலமும்:

அண்மையில் ‘தீபம்’ தொலைக்காட்சியிற் தோன்றிய தமிழின வெறியனும் புலி ஒழுக்கவாதியுமான ஈழவேந்தன் உலகில் தமிழீழத்தைவிட 22 சிறிய நாடுகள் உள்ளதாய் அறிக்கையிட்டார். தமிழ் தமிழ் என்னும் ஈழவேந்தன் ஆங்கிலக் கலப்பின்றி ஒருவசனம் கூடப் பேச முடியாதவர். ஜாதிக, ஜனதா, லங்கா, சலூசல, போற, மகாஜன போன்ற சிங்கள மொழியின் சொற்கள் தமிழ் மொழியிற் புகுந்துவிட்டதென்று மேடைகளில் சொல்லி வந்த ஈழவேந்தன் போன்றவர்கள் தமிழ்மொழியுடன் இணைத்து அதிக அளவில் ஆங்கிலத்தைப் பேசுகின்றார்கள். இவர்கள் ஆங்கில மொழியை அந்நிய மொழியாய்க் கருதுவதில்லை. சகோதர மொழியான சிங்களத்தையே அந்நியமாகக் கருதுகின்றனர். யாழ் குடாநாட்டு அரச சேவையாளர்களின் சுவாசமாகத் தமிழ் மொழியல்ல, ஆங்கில மொழிப் பிரயோகமே இருந்து வந்தது. தேசியவாதக் கட்டுக்கதை சொல்லியான ஈழவேந்தன் இலங்கை மத்திய வங்கியில் முன்பு பணி புரிந்த போதும் அரசியல் பொருளாதாரம் பற்றி எந்தப் பார்வையும் இல்லாத பச்சை இனவாத அரசியலை உடையவராகும். இவர் நிர்வகித்த மொழிவழித் தொழிற்சங்கம் இவர் கூறும் சிங்கள அரசாங்கங்களுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டங்களை நடாத்திய பொழுதெல்லாம் கருங்காலி வேலைசெய்து வேலை நிறுத்தங்களை உடைத்த கைங்கரியத்தைச் செய்தது. 1976 சிறீமா அரசாங்கத்திற்கு எதிரான புகையிலைக் கூட்டுத்தாபனத் தொழிற்சங்கத்தின் தொடர்வேலை நிறுத்தத்தின்போது “சிங்களவனும் சிங்களவனும் சண்டைப்படுகிறான் தமிழர்கள் இதிலே அக்கறை காட்டக் கூடாது” என்று பிரச்சாரம் செய்து சிறீமாவின் முதலாளித்துவ அரசாங்கத்தைக் காப்பாற்றத் தமிழர்களை வேலைக்கு ஈழவேந்தன் என்ற கருங்காலி வேந்தன் அனுப்பினார். பிற்போக்குத்தனத்தின் உச்சப் பிரதிநிதியான ஈழவேந்தனுக்குப் பாராளுமன்றப் பதவி பாசிசப் புலியால் இதற்காகவே வழங்கப்பட்டது. இவரின் 22 நாடுகள் தமிழீழத்தைவிடச் சிறியவை என்ற ஒப்பீடு, இவற்றைவிடப் பெரிய தமிழீழம் தனித்து இந்த உலகு தழுவிய பொருளாதாரத்தின் காலத்தில் வாழ்ந்துவிட முடியும் என்ற தொனியுடன் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈழவேந்தனால் வாய்பாடு போல் சொல்லப்பட்டு வருகின்றது.

இலங்கையின் மொத்த நிலப்பரப்பு 65610 சதுரக் கிலோமீற்றர்களாகும். தமிழத் தேசிய வாதிகளின் கற்பனாவாத உத்தேச தமிழீழ நிலப்பரப்பு 24000 சதுரக் கிலோமீற்றர்களாகும். 30 வருடமுன்பாக தமிழீழம் கேட்கத் தொடங்கிய காலம்போல் இன்றைய இலங்கையினதும் உலகத்தினதும் செயற்பாடுகள் இல்லை. இலங்கையே மிகச் சிறிய நிலப் பரப்பளவும் சிறிய மக்கள் தொகையுமுடைய சிறிய நாடாகும். உலகமயமாக்கலுக்கு முன்பே அது இந்தியாவுடன் இணைந்து இந்தியத் துணைக் கண்டத்தில் சேர்ந்திருந்தால் மட்டுமே தப்பி வாழக் கூடிய பொருளாதார சக்தி படைத்ததாக இருந்தது. இப்போது சர்வதேசமயமாகிவிட்ட பொருளாதாரச் செயற்பாட்டில் இலங்கை தனது தேசிய வளங்களையும் சொத்துகளையும் தொழிற்சாலைகள் உட்படச் சகலதையும் அந்நிய மூலதனச் சக்திகளுக்குத் தந்துவிட்டது. இலங்கையின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, துறைமுகம், கடல் வளம் என்று அனைத்துமே இந்தியா உட்பட ஆசிய நாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. இந்த நிலையில் இலங்கையின் பாதியளவு நிலமும் பத்தில் ஒரு பங்கு மக்கள் தொகையுங் கூட இல்லாத தனித் தமிழீழம் எப்படி உலகமயமாதலில் தனது பொருளாதாரத்தைக் காக்க முடியும். புலிகளின் தமிழீழம் என்பது ஒரு சோஷலிச நாடல்ல;ஒரு முதலாளிய தமிழீழம் என்பதால் அது அந்நிய மூலதனத்தையோ நிறுவனங்களையோ தமிழீழத்தில் தடை செய்ய முடியாது. ஆகத் தமிழீழத்திற்கென்று தேசியப் பொருளாதாரம் இருக்காது. சும்மா பெயருக்குத் துவக்கு அடையாளம் போட்ட சிவப்புப் புலிக்கொடி போட்ட ஒரு ரூபா 2 ரூபா முத்திரை அடித்து விற்கலாம். பொருளாதாரத்தை அந்நிய சக்திகள் கட்டுப்படுத்துவார்கள் என்றால் அரசியலை அந்நிய சக்திகள் கண்காணித்து இயக்குகிறார்கள் என்றே பொருள். புலிகள் தமிழ் ஈழத் தொழிற்சாலைகளில் மில்க் வைற்சோப், நல்லெண்ணெய் வல்வெட்டித்துறைச் சோடா, தோலகட்டி நெல்லிரசம் தயாரித்தா உலகப் பொருளாதாரத்துடன் மோதித் தமிழீழத் தனியரசைக் காக்கப் போகிறார்கள்?

இருந்த சீமெந்துத் தொழிற்சாலையையும் பரந்தன் சோடாத் தொழிற்சாலையையும் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையையும் நட்டுவேறு ஆணிவேறாகக் கழற்றிக் களவெடுத்து அழித்து விட்டார்கள். இதுதான் குட்டி முதலாளித்துவ தமிழ்த் தேசிய அழிப்புக் குணாம்சம் கொண்ட அரசியலுக்கும் தொழிலாளி வர்க்கப் படைப்புத் தகமை கொண்ட அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்.

முதலாளியம் உள்ளவரை தமிழீழமோ தமிழத் தேசமோ ஏகாதிபத்தியங்களின் அடிமைத் தேசமாகவே இருக்கும். மறுபுறம் உலகமயமாதலை எதிர்கொள்ள உலகின் பெரிய நாடுகள் இணைந்து பெரும் பொருளாதாரக் கூட்டுகளை உருவாக்குகின்றன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் ஆசிய நாடுகளது கூட்டுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டுகள் என்பன ஏற்படுத்தப்பட்டுப் பலமடைந்து வருகின்றன. தேசியப் பொருளாதாரத்தின் காலகட்டம் முடிவடைந்து கண்டம் தழுவிய கூட்டுகள் பன்னாட்டு நிறுவனங்கள் பொருளாதாரரீதியாக எழுகின்றன.

இங்கு ஈழவேந்தன் மற்றும் புலிகள் குறிக்கும் இந்தக் குட்டிக் குட்டி நாடுகள் மிகச்சிறிய மக்கள் தொகை நிலப்பரப்புடன் வாழ்தல் இயலுமா? இன்று தமிழீழத்தைவிடக் கிட்டத்தட்ட 40ற்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் சிறிய நாடுகள் உலகில் இருந்தபோதும் அவை தமக்கு அண்மையில் உள்ள பெரிய நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டே வருகின்றன. இப்போது உலகமயமாகும் நிகழ்வின் பின்பு இவை முழுமையாப் பொருளாதாரத்தை இழந்துவிட்டதுடன் இந்தக் குட்டி நாடுகளை விட்டு மக்கள் வெளியேறுவது தீவிரமாகியுள்ளது.

மொறிசியஸ் 2040 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் மாலைதீவு 289 சதுரகிலோமீற்றர் பரப்பளவும் பிஜி தீவுகள் 18376 சதுர கிலோ மீற்றர் பரப்பளவும் மேற்கிந்தியத் தீவுகள் 2554 சதுர கிலோமீற்றர் கொண்டவவையாகவும் இருந்தன. இவை உண்மையில் இந்தியா அல்லது அவுஸ்திரேலியா போன்றவைகளால்தான் கட்டுப்படுத்தப்பட்டன. அந்தமான்-நிக்கோபார் தீவுகள் இந்தியாவுடன் இல்லாது இருந்திருந்தால் அவற்றின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் இன்னமும் கீழ் நிலையில் இருந்திருக்கும். இப்போது இருப்பதைவிட அதிக வறுமையும் பொருளாதாரச் சீர்கேடுகளும் அங்கே நிலவியிருக்கும்.

மற்றய குட்டி நாடுகளான கிறிபாட்டி(Kiribati) 750 சதுர கிலோமீற்றரும் Seychelles 404 சதுர கிலோ மீற்றர் 70000 மக்கள் தொகை ), Naura 21.3 சதுர கிலோ மீற்றர் பால்க் லண்ட் 11900 சதுர கிலோ மீட்டர் (மக்கள் தொகை 2260 ) ,கிறெனடா 344 சதுர கிலோமீற்றர், Belize 2300 சதுர கிலோ மீற்றர்,Berberdos 403 சதுர கிலோ மீற்றர், Brberdos 403 சதுர கிலோ மீற்றர், பகமாஸ் 13935 சதுர கிலோ மீற்றர் அமெரிக்கசமோவா 187 சதுர கிலோ மீற்றர் (30000 பேர் மக்கள் தொகை) Anguilla 91 சதுர கிலோ மீற்றர்( 7000 மக்கள் தொகை , கரிபியன் தீவுகளான செயினற் கிறீஸ்தோபா , Nevis இரண்டும் 261 சதுர கிலோமீற்றரும்(65000 மக்கள் தொகை) Saint Vincent, The Arenadines தீவுகளது நிலப் பரப்பு 400 சதுர கிலோ மீற்றர்கள்(மக்கள்தொகை 150000 ) இந்த நாடுகள் தமது நாணய, முத்திரைகளைக் கூட வெளிநாடுகளில் அச்சிடுகின்றன. அருகிலுள்ள பெரிய நாடுகளின் ஆளுகையின் கீழ் செயற்படுகின்றன. அமெரிக்கா முதல் ஜப்பான் வரையுள்ள நாடுகளிடம் சில மில்லியன் டொலர்களைக் கையூட்டாகவாங்கிக் கொண்டு ஐ.நாவில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. இந்த நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலைகள் என்பன கிடையாது. இவை சிறிதளவு விவசாயம் மீன்பிடியை மட்டுமே கொண்ட ஏற்றுமதி செய்யாத இறக்குமதியால் உயிர் வாழும் நாடுகளாகும்

ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள சிறு நாடுகளில் 9251 சதுர கிலோ மீற்றர் பரப்புடைய சைபிரஸ் இறக்குமதி செய்யும் நாடாகும். குக் தீவுகள் 234 சதுர கிலோ மீற்றர்கள், மக்கள் தொகை 21000 பேர். ஜிபுறோல்டர் 6.5 சதுர கிலோ மீற்றர், 30000 மக்கள் தொகை. ஐலண்ட் ஒவ் மான் 572 சதுர கிலோ மீற்றர், 68000 மக்கள் தொகை. ஜேர்சி116 சதுர கில்லோ மீற்றர், 74000 மக்கள் தொகை . கிறேட்டா 8375 சதுர கிலோ மீற்றர். பிறிட்டிஸ் வேர்ஜின் தீவுகள் 155 சதுர கிலோ மீற்றர், 14000 மக்கள் தொகை. அண்டோறா 468 சதுர கிலோ மீற்றர். Niue 2509 சதுரக் கில்லோ மீற்றர், சன்மறினோ 63.13 சதுர கிலோமீற்றர். மல்டா 316 சதுரக் கிலோ மீற்றர்.

இவை ஐரோப்பிய நாடுகளின் சார்பு நாடுகளாகும். இவை ஐரோப்பிய நாட்டுச் செல்வந்தர்களின் சட்ட விரோதப் பணங்களைப் பதுக்கும் வங்கிகளைக் கொண்டுள்ள போதும் ஐரோப்பாவின் பெரும் செல்வந்தர்கள் இங்கு குடியேறி வாழ்கின்றனர். இவை இப்போது ஐரோப்பிய யூனியனில் படிப்படியாக இணைகின்றன. ஐரோப்பாவின் Liechtenstein 157 சதுரக் கிலேமீற்றர் பரப்பளவு நிலப் பரப்பையும் லுக்ஸ்சம்பேர்க் 2568 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும் Monoko 1.9 சதுர கிலோ மீற்றர் பரப்பளவும் கொண்ட உற்பத்தி செய்யாத நாடுகளாகும். உலகிலுள்ள செய்வந்தர்களின் சட்ட விரோதப் பணங்கள், போலி நிறுவனங்கள், இவைகட்கான வங்கிகள் இங்குள்ளன. இந்த நாடுகளில் வாழும் வெளிநாட்டுச் செல்வந்தர்களின் தொகை அந்த நாட்டு மக்கள் தொகையை விட அதிகமாகும். இவை வங்கி மூலதனம் மூலம் செயற்படும் நாடுகளாகும். சுவிஸ் ‘மணிக்கூடு’ உற்பத்தியாலும் ‘சொக்ளேற்’ தயாரிப்பாலும் வாழ்ந்துவிடவில்லை. அதன் பிரதான வருவாய் வங்கித் தொழிலாகும். உலகின் எண்ணெய் வளநாடுகள் முதல் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய சட்டவிரோதப் பணங்களை நிருவகிக்கும் வங்கிகளை இந்த நாடுகள் கொண்டுள்ளன. மூன்றாம் உலகநாட்டு சர்வாதிகாரிகளதும் அரசியல்வாதிகளதும் ஊழல்நிதி குவியும் நாடாகும். இப்போது ஆசிய, ஆபிரிக்கச் சர்வாதிகாரிகளோ லத்தீன் அமெரிக்க, அரபு நாடுகளது கறுப்புப் பணங்களோ இங்கு வருவதில்லை. இவர்கள் தமக்கான சொந்த வங்கிகளையும் பங்குச்சந்தைகளையும் பொருளாதாரக் கூட்டுக்களையும் உருவாக்கத் தொடங்கி விட்டனர். எனவே சுவிற்சலாந்து போன்ற ஐரோப்பியக் குபேர நாடுகளின் வாழ்வு இனி முடிவுறத் தெடங்கும்.

1034 சதுர கிலோ மீற்றர் பரப்புடைய கொங்கொங் சீனாவுடன் சேர்ந்துவிட்டது. 35961 சதுர கில்லோமீற்றர் பரப்பளவுடைய தாய்வான் எதிர்காலத்தில் இராணுவ வற்புறுத்தல் இல்லாமலே சீனாவுடன் சேரும். 581 சதுர கிலோமீற்றர் கொண்ட சிங்கப்பூர் மீண்டும் ஆசிய வளர்ச்சியுடன் கரையத் தொடங்கும். உலகின் 40 வீத மக்கள் தொகையைக் கொண்ட சீனாவும் இந்தியாவும் முழு ஆசியப் பொரளாதாரத்தையும் ஒன்றிணைத்துத் தமது கட்டுள் கொண்டுவருவார்கள். ஐரோப்பாவில் நாட்டோவால் யூகோஸ்லாவியாவிலிருந்து உடைத்ததெடுக்கப்பட்ட 20226 சதுர கிலோமீற்றர் பரப்புடைய ‘சிலோவேனியா’ 13813 சதுர கிலோமீற்றர் பரப்புடைய ‘மோன்றொநீக்குறோ’ என்பன நாட்டோ நாட்டுத் தூதர்களால் வழிநடாத்தப் படுகின்றன. மத்திய கிழக்கின் சிறிய இஸ்ரேல் அமெரிக்காவால் வருடாவருடம் பல பில்லியன் டொலர் இறைக்கப் பட்டு செயற்கையாக இராணுவரீதியில் நிறுவப்பட்ட நாடாகும். இனிமேல் நீண்டகாலம் இஸ்ரேல் தனது இராணுவ வலிமையைத் தக்கவைப்பது முடியக் கூடிய காரியமல்ல. அது அரபு, ஆசிய, கிழக்கைரோப்பிய ,லத்தீன் அமெரிக்கக் கூட்டுவளாச்சியின் முன்பு பணிந்தே தீரும். அப்போது யூத- அரபு உழைக்கும் மக்களின் ஐக்கியம் தொடங்கும்.

சிறிய நாடுகள் உலகமயமாதலின் பொருளாதாரரீதியில் தம்மை இழப்பது தீவிரமடைந்துள்ளது. குட்டி நாடுகளிலிருந்து இளம் சந்ததிகள் வெளிநாடு செல்வது கடந்த பத்து வருடங்களின் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார விடிவு தேடி வேலை தேடி வெளிநாடுகளுக்குப் பயணிப்போர் தொகை தொடர்ந்து பெருகி வருகிறது. பொலினேசியா தங்கோவிலிருந்து 31 சதவீதமானவர்களும் மொல்டாவியாவிலிருந்து 53 சதவீதமானவர்களும் Lesothoவிலிருந்து 26 சதவீதமானவர்களும் டொமினிக்கன் குடியரசிலிருந்து 38 சதவீதமானவர்களும் தெயிட்டியிலிருந்து 53 சதவீதமானவர்களும் ஜமேக்காவிலிருந்து 17 சதவீதமானவர்களும் கொண்டூறாசிலிருந்து 16 சதவீதமானவர்களும் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர். பல சிறு நாடுகளில் இளம் சந்ததியினர் முழுமையாக வெளியேறி முதியவர்கள் நிரம்பிய நாடுகளாக அவை ஆகிவிட்டன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. விவசாயம் மீன் பிடிக்கக்கூட ஆட்களில்லை. தென் கடற்பகுதிக் குட்டித் தீவுகளான Tuvalu, Kiribatiலிருந்து இளம் சந்ததியின் வெளியேற்றம் விரைவாக நடைபெறுகிறது.

குட்டிநாடுகள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் அன்னிய நாணயங்களில் வாழும் நாடுகளாகி விட்டன. 2005 இல் வெளிநாடுகளுக்குக் குடியேறிய மக்கள் தம் நாடுகளுக்கு அனுப்பிய பணத்தின் தொகை 165 பில்லியன் டொலர்களாகும்.

சிறிய நாடுகள் தம்மைக் காக்குமளவுக்கு இராணுவ பொருளாதார வலிமையற்ற சார்பு நாடுகளாகவே உள்ளன. உல்லாசப் பயணத்தால் வாழ்ந்துவந்த மாலை தீவை எப்படி PLOTன் கூலிப் படையினர் கைப்பற்ற முயன்றனர் என்ற படிப்பனவு இருக்கிறது. இன்றய காலம் தேசிய இனங்கள் மட்டுமல்ல சிறு நாடுகள் தீவுகள் தொடர்ந்து தனித்து வாழ்ந்துவிட முடியாத காலமாகும். தனியாகப்பிரியப் போராடிய ‘தீபெத்’ சீனமயமாகவில்லை, மாறாக உலகமயமாகிறது. உலகக் கலாச்சாரங்களை உள்வாங்குகின்றது. தீபெத்தின் இளம் பவுத்த பிக்குகள் கூட மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்கள். ‘பில்லியாட்’ விளையாடுகிறார்கள். இணையத்தளங்களில் நுழைந்து உலகை வலம் வருகிறார்கள். பொருளாதார உலகை வெறுத்து ஆன்மீகத்தில் நுழைந்து தன்னை ஒறுத்து உள்சுருங்கிய இந்தப் பவுத்த பிக்குகள் வாகனம், வீடுகள் என்று வாங்குகிறார்கள். பொருள் தேடலில் ஈடுபடுகிறார்கள். பவுத்த நூல்கள் இளம் பவுத்த பிக்குகளால் முன்புபோல் தீவிரமாய் கற்கப்படுவதில்லை. மாறாக தொலைக் காட்சிகளுள் நுழைந்து உலகைச் சுற்றப் போய்விடுகிறார்கள். பவுத்த விகாரைகள் தூசியும் இருட்டும் குளிரும் நிறைந்து பழங்கால மண்டபங்களாகி வருகின்றன. முதிய பவுத்த பிக்குகள் மட்டும் மாறி வரும் நிலமையைத் துயரத்தோடு பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உலகமயமாதலின் வலிமையாகும்.

ஜேர்மனியிலுள்ள Leipziger-Max-planck-Institut (மானிடவியல் பிரிவு) நடாத்திய ஆய்வில் இன்றய உலகளாவிய பொருளாதாரச் செயற்பாட்டின் காரணமாக இன்றுள்ள 6500 உலக மொழிகளில் 21ம் நூற்றாண்டில் 2000 மொழிகள் மட்டுமே மிஞ்சும். மிகுதி அழிந்துவிடும். 273 மொழிகள் மட்டுமே இன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. ஆங்கிலம் உலகின் அரசியற் பொருளாதார விஞ்ஞான மொழியாக வளர ஜேர்மனிய மொழியானது 21 நூற்றாண்டின் இறுதியில் அழிந்துவிடும் நிலையை எட்டியுள்ளது என்று எழுதியுள்ளது.

மார்க்ஸ், எங்கல்ஸ், றோசா லுக்சம்பேர்க், கான்ட், கெகெல், பொயர்பார்க், தோமஸ்மான், கோதே, சில்லர், கப்கா, பிறெஸ்ட், பேசிய எழுதிய ஜேர்மானிய மொழி அழியத்தொடங்குகிறதே என்று நாம் துக்கித்திருப்பது சமூகவரலாற்று வளர்ச்சி விதிகளை தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஜேர்மனியப் பெருவங்கியான ‘டொச்சபாங்க்’ பெரு நிறுவனங்களான ‘சீமன்ஸ்’ என்பவை தமது உத்தியோக பூர்வ மொழியாக ஜேர்மனுக்குப் பதிலாக ஆங்கில மொழியைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டன. ஜேர்மனிய மொழியை ஒத்த மொழிகள் அழிவதும் ஆசிய, ஆபிரிக்க, ஐரொப்பிய, அமெரிக்கக் கண்ட மனிதர்கள் பேசக்கூடிய உலகப் பொதுமொழி உருவாவதும் கற்பனையல்ல. அது உலக மனிதத்தின் தேவையாகும். வரலாற்று நியதியாகும்.

மேற்கைரோப்பிய நாடுகள் 25 இனங்கள் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியமாகிவிட்டது. இவை 35 நாடுகளின் கூட்டாக எதிர்காலத்தில் வளர உள்ளன. இவைகள் தமக்கெனப் பொதுவான வங்கி, வரி, நாணய முறை, பொலீஸ், இராணுவம், பாதுகாப்பு, பாராளுமன்றம், சட்டமுறை என்று ஏற்படுத்திவிட்டன. ஐரோப்பா ஒன்றுகலக்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகால இன அடையாளங்கள் தொலையத் தொடங்கிவிட்டன. மறுபுறம் அமெரிக்க, ஆசிய கண்ட வளர்ச்சிகளை எதிர்கொள்ள வல்ல சக்தியாய் மாறுகின்றன. ஜேர்மனிய ‘டொச்ச வங்கி’யின் தலைவராக இருந்தவர் ஜேர்மனியர் அல்லாத சுவிஸ்சைச் சேர்ந்த யோசெப் அக்கமென் ஆகும். ஜேர்மனிய விமானச் சேவையான Lufthandaவின் நிர்வாகி ஆஸ்திரியாவைச் சேர்ந்த Wolfgang Magrhuber. ஜேர்மனிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான MANன் தலைவர் Hargen Samuelsson சுவீடனைச் சேர்ந்தவர். எரிபொருள் மின் சக்தி நிறுவனமான RWE நிர்வாகத் தலைவர் ஒல்லாந்தைச் சேர்ந்த Harry Roels.. மேற்கத்திய மூலதனம் நாடு இனம்தாண்டி இரண்டறக் கலக்கின்றது.

உலகமயமாதலின் விளைவாக இந்திய TCSG (Tata Consaltancy Service) நிறுவனத்திற்கு ஜேர்மனிய ரெலிகொம் நிறுவனத்தின் முன்னைநாள் நிர்வாகியான Ron Sommer பதவியேற்கிறார். தேசிய எல்லையுள் இயங்கும் நிறுவனங்கள் இன்று உலகில் கிடையாது. ஜேர்மனியின் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான VW Golfன் 50 வீத உதிரிப் பாகங்கள் வெளிநாட்டிலேயே தயாராகின்றன. ஏனைய கார்களில் Polo 35 சதவீதம் Pasat 60 சதவீதம் Opel 35 சதவீதம் Astra 35 சதவீதம் உதிப் பாகங்கள் வெளிநாடுகளில் தயாராகின்றது. ரஸ்யாவின் எரிபொருள் நிறுவனமான Gasprom மேற்கைரோப்பியச் சந்தையுள் நுழைகிறது. ஜேர்மனியின் RWG, RAG, EWE ஆகிய மின்சக்தி- எரிபொருள் நிறுவனங்களில் பங்குகளை வாங்குகின்றது. மற்றொரு ரஸ்சிய நிறுவனமான Sistema ஜேர்மனியின் பிரமாண்டமான தொலைத்தொடர்பு நிறுவனமான ரெலிக்கொம்மின் 20 வீதப் பங்குகளை வாங்கவுள்ளது. இதே நிறுவனம் ஐரோப்பிய விமான உற்பத்தி மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனமான EADS பங்குகளை வாங்கப் பேரம் நடாத்துகிறது. ஜேர்மனிய சீமென்சின் கைத்தொலைபேசி நிறுவனமான Spartaவை தாய்வானின் Benq நிறுவனம் வாங்கி 3000 ஜேர்மானியத் தொழிலாளர்களை
வெளியேற்றுகின்றது.

ஆசிய முதலாளி வெள்ளைத்தொழிலாளர்களின்
வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பகிறான். உலகின் மிகப்பெரும் இந்திய இரும்பு- உருக்கு நிறுவனமாய் மாறியுள்ள Luxumi Metal ஐரோப்பிய பெரும் இரும்பு- உருக்கு நிறுவனங்களை விழுங்குகிறது. தொழிலாளர்களை வெளியேற்றுகிறது. முதலாளிகள் சர்வதேசிய மட்டத்திற்கு வளர மறுபுறம் தொழிலாளர்கள் குறுகிய தேசியவாதத்தால் உடைத்தெறியப்படுகிறார்கள்.

ஆனால் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி உட்படத் தமிழ் தேசியவாதிகள் சிங்கள இனவாதக் கட்சியான யூஎன்பியுடன் நெருக்கமாக இருந்தன. சிங்களத் தொழிலாளர்கள் தமது இனத்தைச் சேராத போர்த்துக்கேய -சலாகம சிறுபான்மை மக்கள் பிரிவிலிருந்து வந்த N.M பெரேரா, கொல்வின் ஆர். டீ. சில்வா, பீற்றர் கெனமன் போன்றவர்களைத் தமது தலைவர்களாக ஏற்குமளவு பக்குவப்பட்ட அரசியலைக் கொண்டிருந்தனர். ஆனால் தமிழ் தேசியவாதிகள் சிங்கள இனவாதிகளைக் காட்டிக் காட்டி சிங்கள வெறுப்பை ஊட்டி வளர்த்தனர். பெருமளவு தமிழ்த் தலைவர்கள் கொழும்பில் வாழ்ந்தார்கள். வீடுகளைக் கொண்டிருந்தனர். தென்னிலங்கையில் தோட்டங்கள் இருந்தன. ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம், திருச்செல்வம் போன்றவர்கள் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் சிங்கள மக்களை நம்பியே தமது சட்டத்தரணித் தொழிலைச் செய்து வந்தனர். இதனூடு பெரும் செல்வம் குவித்தனர். தேர்தலில் வென்றவுடன் ஜீ.ஜீ பொன்னம்பலம் போன்றவாகள் கொழும்புக்கு ஓடிவிடுவார்கள். யாழ்ப்பாண எம்பியை அவர் தொகுதி மக்கள் பார்க்க வேண்டுமானால் பலசமயங்களில் கொழும்புக்குத்தான் போக வேண்டியிருந்தது.

தனித் தமிழரசு கேட்ட ஊர்காவற்றுறை நவரத்தினத்திற்குக் கொழும்பில் பெரிய சொந்தவீடு இருந்தது. தமிழ்த் தேசியவாதிகளின் நலன்கள் கொழும்புடன் இணைக்கப்பட்டிருந்தன. வீட்டில் கூட ஆங்கிலம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் தாம் தமிழுக்காகப் போராடுவதாய் தொடர்ச்சியாக் கூறிவந்தார்கள். ஜேர்மனியில் 1980களின் தொடக்கத்தில் இலங்கைத் தூதராக இருந்த தமிழரசு நாகநாதனின் மகள் இலங்கைத் தூதரகத்திற்குச் செல்லும் தமிழர்களிடம் ஆங்கிலத்தில் தான் பேசுவார். அவர் ஆங்கிலம் தெரியாதவர்களை அவமானப்படுத்திய சம்பவங்கள் ஒரு தொகையாக நடந்தது. தமிழரசுத் தலைவர்களின் வாரிசுகள் கொழும்பில் உயர்ந்த கல்லூரிகளிலும் வெளிநாடுகளிலும் படித்து வீடுகளில் கூட ஆங்கிலம் பேசி வளர்ந்த கன்னித் தமிழின் காவற் தெய்வங்களாகும். அதே சமயம் வவுனியாவில் வாழ்ந்த கொம்யூனிஸ்ட் நடராசா தன்னிடம் உதவி கேட்டு வீட்டுக்கு வருபவர்களுக்குத் தேனீர் கொடுத்து உபசரித்து கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பீற்றர் கெனமனுக்கு தனித் தமிழிலேயே கடிதங்களை எழுதிக் கொடுத்தனுப்புவார். எவரும் எச்சமயத்திலும் அவரிடம் உதவி கேட்டுச் செல்ல முடியும்.அவருக்கு ஆங்கிலம் தெரியாத போதும் அப்பழுக்கற்ற நேர்மையான கொம்யூனிச மனிதராக மக்களுக்குச் சேவை செய்து வாழ்ந்தார்.

கொழும்பு ஆட்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெரிய மரியாதை நிலவியது. அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெரும் உபசரிப்பைப் பெற்றார்கள். கொழும்புத் தமிழர்கள் உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் செல்வமும் நாரீகமும் படைத்தவர்களாகவும் கருதப்பட்டனர். உயர் உத்தியோகங்கள், வர்த்தகம், அரசியல், தொழிற்துறை, மருத்துவம், சட்டத்துறைகளில் இவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இவர்கள் கொழும்பில் கறுவாக்காடு, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை போன்ற செல்வந்தர்கட்கு உரிய இடங்களில் வாழ்ந்தனர். ஆனால் இப்போது கொழும்பு முழுவதுமே தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, வத்தளை, கிருலப்பன, கொட்டாவ, மட்டக்குளி, காக்கைதீவு, கொட்டாஞ்சேனை, மருதானை, தெகிவளை, நாரென்பிட்டி போன்ற இடங்கள் தமிழர் வசமாகி வருகின்றன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கிருலப்பன, தெகிவளை போன்ற பகுதிகளில் கல்வி மற்றும் பொருளாதார வசதிபடைத்த தமிழர்கள் வாழ்கின்றனர். அரசசேவை, வர்த்தகம், வெளிநாட்டுப் பணங்களில் வாழ்பவர்களே இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். பெரும்பகுதி சொந்த வீடுகளைக் கொண்டிருக்கின்றனர். மொறட்டுவ அரசமாடிக் குடியிருப்புகளில் முன்பு சிங்கள மக்களே பெருமளவு குடியிருந்தனர். இப்போது பெரும்பகுதி தமிழர்களால் வாங்கப்பட்டு விட்டதுடன் இங்கு தமிழர்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செல்வம் படைத்த தமிழர்களிடம் சிங்களவர்கள் வீடுகளை விற்றுவிட்டு வெளியேறுகிறார்கள்.

பொருளாதாரப் பலங்குறைந்த தமிழர்கள் மட்டக்குளி, காக்கைதீவு வத்தள, மருதானை போன்ற இடங்களில் வாழ்கின்றனர். இப்பகுதிகளில் சிங்கள மக்களிடமிருந்தும் கொழும்புத் தமிழர்களிடமிருந்தும் வடபகுதித் தமிழர்களால் வீடுகள் வாங்கப்பட்டன. காக்கைதீவிலுள்ள அரசகுடியிருப்பின் பெரும்பகுதி தமிழர்கள் வசமாகி விட்டது. வெளிநாடுகளிலிருந்து பிள்ளைகளைப் படிப்பிக்க வருவோர், பிள்ளைகளைப் படிப்பிக்க வடக்கிலிருந்து வருவோர் வெளிநாடுகளில் வாழ்வோரின் தாய் தந்தையர் சகோதர சகோதரிகட்காக இவ் வீடுகள் வாங்கப்படுகின்றன. புலிகட்குப் பயந்து தமிழ்ப் பகுதிகளிலிருந்து தப்பி வந்தவர்களும் இதில் அடங்கும். கொழும்பில் வர்த்தக நிலையங்கள் தொழிற்துறைகளில் தொழிலாளர்களாக ஊழியர்களாக உள்ள வடபகுதித் தமிழர்களும் இங்கு வாழ்கின்றனர். கொழும்பு இப்போது தமிழர்களின் கல்வியின் மையமாகி விட்டது. வெளிநாடுகளிலிருந்தும் யாழ் குடாநாட்டிலிருந்தும் பிள்ளைகளைப் படிப்பிக்கவென்றே பெரும்பகுதித் தமிழர்கள் வருகிறார்கள்.

வீடுகள் வாங்குவது வாடகைக்கு எடுப்பது அதிகரித்துச் செல்கிறது. 1970, 1980 ஆண்டுகால யாழ்க் குடாநாடுபோல் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெகிவளை, கொட்டாஞ்சேனை எங்கும் டியூட்டறிகள் தோன்றியுள்ளன. தமிழர்களின் கல்வி நாட்டம் முன்புபோல் அரச உத்தியோகங்களை இலக்காகக் கொள்ளாத போதும் மரியாதைக்காகப் படிப்பிப்பது பெருகியுள்ளது.

முன்பு கொழும்பில் உயர்வர்க்கத் தமிழர்கள் மட்டுமே கல்வி கற்ற செயின்ட் தோமஸ், ரோயல் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, ரத்மலானை இந்துக்கல்லூ,ரி கொட்டாஞ்சேனை விவேகானந்தாக் கல்லூரி, மோதர இந்துக் கல்லூரி என்பன யாழ்ப்பாணத் தமிழர்களின் பிள்ளைகளால் நிரம்பி விட்டன. தமிழ் பிள்ளைகட்கு இடம் போதாமை காரணமாக 1983ல் மூடப்பட்ட இரத்மலானை இந்துக் கல்லூரி 1990ல் மீண்டும் திறக்கப் பட்டது. தமிழர்களின் திருமணம், சாமத்திய வீடுகள் வரவேற்புக் கொண்டாட்டங்கள் யாவும் கொழும்பில் பெரும் மண்டபங்களில் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் கொண்டாட்டங்களுக்குத் தோதான மண்டபங்கள், போக்குவரத்து வசதி அழகு, ஆடம்பரங்களை உடையதாகயில்லை. வெளி நாட்டில் வாழ்பவர்கள் வீடுகளையும் மாடி வீடுகளையும் வாங்கித் தமது தாய் தந்தையரையோ உறவுகளையோ குடியிருத்துவது இடைவிடாமல் நடக்கிறது. நினைத்தவுடன் வந்துபோகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளத்தக்க இடமாகக் கொழும்பு மாறிவிட்டது. புகலிட நாடுகளின் தமிழ்த் தொலைக் காட்சிகள் வானொலிகள் தினசரி கொழும்பில் வீடுவாங்கும்படி கேட்கும் விளம்பரங்களைத் தவறாமற் செய்கின்றன. கொழும்பில் தமிழர் தனியார் நிறுவனங்கள் புறநகர்ப்பகுதியில் நிலங்களை வாங்கி வீடுகளை அமைத்து விற்கிறார்கள். இன்று கொழும்பில் வீடுகளின் விலை 80, 90 லட்சம் ரூபா முதல் ஒரு கோடி ரூபாவரை போகிறது. இந்த விலையேற்றத்தின் முக்கிய காரணம் தமிழர்களின் குடியேற்றமே. இதனால் சாதாரண கொழும்புச் சிங்கள மக்களுக்கு கொழும்பில் வீடு வாங்குவது இப்போது நிறைவேற இயலாத கனவாகும். அவர்கள் தமது உள்ள வீடுகளையும் நிலங்களையும் விற்றுக் கொழும்பில் புறநகர்ப் பகுதிகட்கு குடிபெயர்கிறார்கள். கொழும்பில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள் கொழும்பு நகாப்புறப் பகுதிகளை விட்டு வெளியேறும் பொருளாதாரக் கட்டாயங்கள் ஏற்படுகின்றன. கொழும்பில் மக்கள் தொகை அதிகரிப்பானது வீடு, காணி வாடகைகளின் விலைகளை மட்டுமல்ல உணவுப் பொருள், போக்குவரத்து என்ற சகல திசைகளிலும் விலைகளை ஏற்றியுள்ளது.

மேலும் குடாநாட்டின் வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியிலாளாகள், பேராசிரியர்கள், அரச
சேவைகளில் இருப்போர் கொழும்பிற்தான் வாழ்கின்றனர். தமிழ் சட்டத்
தரணிகள் மருத்துவர்கள் தொகை இலங்கையின் எப்பாகத்தையும் விடவும் கொழும்பில் அதிகமாக உள்ளது. கொழும்பில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனைகளான ‘அப்பலோ’, ‘ஆசாசென்றல்’, ‘டெல்மன்’, ‘சுலைமான்’, ‘ரட்னம் கொஸ்பிற்றல்’, நவலோகா என்பன உட்பட சகலதிலும் தமிழ் மருத்துவர்களே அதிக தொகையில் உள்ளனர். இங்கு வைத்தியம் செய்யும் நோயாளிகளும் அதிகளவு தமிழர்களாகவே உள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களின் தாய் தந்தையர் குடும்ப அங்கத்தினர் உறவினர்கள் இத்தகைய அதிக செலவு தரும் தனியார் மருத்தவமனைகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் ஏழைகளான சிங்கள, முஸ்லீம் மற்றும் கொழும்புத் தமிழர்கள் அரசாங்க தர்ம ஆஸ்பத்திரிகளில் நிரம்பியுள்ளனர். மோசமான பராமரிப்பும் உரிய மருத்துவ வசதியும் கிட்டாமல் அதிகம் இறப்பவர்களாகவும் நோயாளிகளாகவும் இவர்கள் உள்ளனர். கொழும்புச் சேரிப் பகுதிகளில் சிங்களவர்கள், முஸ்லீங்கள், தமிழர்கள் ஒன்றாக அக்கம் பக்கமாகவே வாழ்ந்தனர். வறுமையையும் பசியையும் சட்டமீறல்களையும் குற்றங்களையும் பங்கிட்டு இவர்கள் வாழ்கிறார்கள்.

கொழும்பில் தனியார் துறையில் தமிழர்கள் குறிப்பிடப்பட்ட தொகையினர் இருக்கின்றனர். கொழும்பு 4ம், 5ம் குறுக்குத் தெரு, மெயின்வீதி போன்ற முக்கிய வர்த்தக மையங்களும் ஏற்கனவே தமிழர்கள் வசம் இருந்தன. இப்போது புறக்கோட்டை, கோட்டை, வெள்ளவத்தை போன்ற இடங்களில் சுப்பர் மார்க்கட்டுகள், உணவு விடுதிகள், லொட்ஜூகள் என்பன எழுந்துள்ளன. தமிழீழம் கேட்கும் புலிகள் சிங்கள தேசத்தின் தலைநகரான கொழும்பில் பெரும் வர்த்தக நிலையங்கள், வீடுகள் உட்பட பெருஞ் சொத்துப் பத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர் என்பதுடன் புலிகள் இப்போது மலையகப் பகுதிகளிலும் மிகவும் மலிவாக நிலங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழர்களின் குடியேற்றம் கொழும்பு தவிர நீர்கொழும்பு, புத்தளம், நுவரெலியா ஹற்றன் போன்ற இடங்களிலும் தொடங்கியுள்ளது.

சிங்கள மக்களின் பராம்பரியப் பிரதேசங்களில் இப்படிப் பரந்து குடியேறும் உரிமையை தமிழர்கள் தடையின்றிக் கொண்டிருக்கும் போது, இனக்கலவரம் பற்றிய பயமின்றி வாழத் தொடங்கியுள்ள போது, வடக்கு மாகாணம் சிங்கள, முஸ்லீம் மக்களை முழுமையாக வெளியேற்றிவிட்டு தனித்தமிழ்ப் பிரதேசமாய் நிலைக்க முயல்கிறது. புலிகளின் நோக்கம் தமிழ்ப் பகுதிகளை இனத் தூய்மைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக மாற்றுவதாகும். தமிழ்த் தேசம் சிங்களத் தேசம் எனப்பேசும் புலிகள் கொழும்பில் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதும் முதலிடுவதும் ஏன்? தமிழ் பகுதிகளில் ஏன் முதலீடு செய்வதில்லை? ஏன் சிங்கள தேசத்திற்கு ஓடுகிறார்கள்? புலிகளின் தமிழ் தேசத்தில் சிங்கள, முஸ்லீம் மக்கள் நுழைய முடியாது. முதலீடு வர்த்தகம் செய்ய முடியாது. வாழவோ சுற்றுப் பயணம் செய்யவோ முடியாது. ஆனால் புலிப் பாசிசம் கொழும்பில் இராணுவத் தாக்குதல்களை நடத்தும், குண்டு வைக்கும், உளவறியும், பத்திரிகை நடாத்தும், வர்த்தகம் செய்யும். இலங்கை அரசின் கீழ் தொழிலாளர்களும் ஜனநாயக இயக்கங்களும் பலவிதக் கட்சிகளும் செயல்படுமளவு முதலாளித்துவ ஜனநாயகம் இருக்கிறது. கொழும்பிலிருந்து புலி ஆதரவாகப் பத்திரிகை நடாத்தும் அளவுக்கு ஜனநாயகம் நிலவுகிறது. ஆனால் புலிப் பாசிசத்தின் தமிழ்த் தேசத்தில் எந்தப் பன்மைவாதக் கருத்தும் அமைப்பும் அரசியலும் கிடையாது. இலங்கை அரசும் புலிப்பாசிசமும் சமம் என்று உரைப்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்வதில்லை. தாராள முதலாளித்துவ இலங்கை அரசாங்கத்திற்கும் திருத்தவே முடியாத படுபிற்போக்குப் பாசிசப் புலிக்குமுள்ள வித்தியாசம் இதுதான்.

இலங்கை இடதுசாரி அமைப்புகள் சிங்களவர்கள் அல்லாத சிறுபான்மை இனத்தவர்களை தம் தலைவர்களாகக் கொண்டிருந்தனர். இத்தகைய இனவாதம் கடந்த போக்குத் தமிழர்களிடம் வளர்ந்திருக்கவில்லை. பீற்றர் கெனமனை தமிழரசுக் கட்சி கூட்டணி மேடைகளில் “பீத்தல் பறங்கி” என்று பேசுமளவுக்கு அவர்கள் அற்ப இனவாதிகளாக இருந்தனர். இனச்சுத்த வாதிகளாக இருந்தனர். ஆனால் இடதுசாரிகளோ சர்வதேசியத்தைத் தரிசிப்பவர்களாக இருந்தனர். லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள் இலங்கைச் சோஷலிச எழுச்சியை இந்தியத் துணைக்கண்ட சோஷலிச எழுச்சிகளோடு இணைக்க அரும்பாடுபட்டார்கள். சமசமாஜிகள் தொடர்பு கொண்டிருந்த, 1936-1939ல் நடந்த ஸ்பெயின் மக்கள் கிளர்ச்சியில் உலகின் 50 நாடுகளைச் சேர்ந்து 40000 சர்வதேசிய வாதிகள் கலந்துகொண்டு போரிட்டனர். சகல கண்டங்களிலிருந்தும் வெள்ளை, கறுப்பு ,ஆண், பெண் என்ற பேதமின்றியும் கிறீஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லீங்கள் என்ற வித்தியாசம் இன்றியும் ஸ்பானிய மக்களை ஆதரித்தும் பிராங்கோ பாசிசத்தை எதிர்த்தும் போராடித் தம் சர்வதேசக் கடமையைச் செய்தார்கள். இந்த மனிதக் கலாச்சாரம்தான் மாக்ஸ்சியவாதிகளின் அரசியற் கலாச்சாரமாகும். இதை முன்னோடியாகக் கொண்டே பிற்காலத்தில் சேகுவேரா ஆர்ஜன்டீனாவில் பிறந்து கியூபப் புரடசிக்குப் போரிட்டு ஆபிரிக்கக் காடுகளில் அலைந்து பொலிவியக் காடுகளில் போராடி மடிந்து போனான்.

சோவியத் யூனியனில் ஸ்டாலினிசம் தேசிய இனங்களை ஒடுக்கிய போதும் ஒன்றுபட்ட பொதுப் பொருளாதாரத்தின் பயனாக இனக் கலப்பும் குடியேறுதலும் தீவிரமாகியது. ருஸ்ஷியர்கள், ஆர்மெனியர்கள், உக்கிரேனியர்கள், ஜோர்ஜியர்கள் உட்படப் பல இனங்கள் முழு சோவியத் யூனியனிலும் பரந்து குடியேறினார்கள். சோவியத் குடியரசுகளான உக்கிரேன், வெள்ளை ரசியா, உஸ்பெகிஸ்தான், காசஸ்தான், ஜோர்ஜியா, அசபயான்,லிதுவேனியா, மொல்டாவியா, லான்துரியா, கிர்சியா, தாகிஸ்தான, ஆமெனியா, துர்க்மேனியா, எஸ்தோனியா எதுவும் ஓர் இனம் மட்டும் வாழ்ந்த குடியரசுகளாக இருக்கவில்லை. 1939 -1959 இடையில் மட்டும் 8 முதல் 10 மில்லியன் மக்கள் சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து ஆசியப் பகுதிகட்கு குடியேறினார்கள். இக்கால கட்டத்தில் கசாக்ஸ்தானில் 52.8 வீதமாகவும் பொதுவாக ஆசியக் குடியரசுகளில் 29.8 வீதமாகவும் குடியேறியவர்களின் தொகை இருந்தது. சோவியத் இலக்கியங்களைப் படிப்பவர்கள் அதிலுள்ள பல்லினக் கலாச்சாரத்தைக் காண்பார்கள். மனித குலம் ஒன்று கலப்பதும் கூடி வாழ்வதும் ஒருசமுதாய விதியாகும். பாசிசவாதிகளே இனக்கலப்பை அசுத்தம் என்று கருதினர். யூதர்கள் தனியே இஸ்ரேலிலும் கறுப்பின மக்கள் ஆபிரிக்காவிலும் ஆசியர்கள் ஆசியாவிலும்தான் வாழ வேண்டுமென்று கோருவது இன்றைய உலக யதார்த்தத்தை விளங்கத் தவறுவதாகும். கெட்ட காலத்திற்கு ஒரு தமிழீழம் கிடைத்தால் அங்கு ஆபிரிக்கர்களும் செவ்விந்தியர்களும் அவுஸ்திரேலிய ஆபுஜீனிஸ்டுகளும் அரசியல் தஞ்சம் கோரி வந்தால் அரசியற் தஞ்சம் தருவார்களா? இன்று உலகமெல்லாம் பரவிச் சிதறி அகதியாய் வாழும் தமிழ் தேசியவாதிகள் இதற்கு ஒருநாளும் மனம் ஒப்பமாட்டார்கள்.

10 thoughts on “வடக்குக் கிழக்கும் தமிழர் தேசியமும்

  1. தமிழ் அண்ணா!
    என்னெண்டு உப்பிடி உங்களாலை எழுதமுடியுது?
    எனக்கு உதை வாசிக்கவே ஒருமாதம் காணாது,
    எனக்காக நீங்கள் சுருக்கமாக எழுதப்பழக வேண்டாம்,
    ஒருமாதத்தின்பின் எனது அபிப்பிராயத்தை முடிந்தால் எழுதுகிறேன்.

  2. It’s a very good documatation. I hope you may analize tamil groups too. Beacuse we need to leave some histery for future generation.
    thank You & good luck

  3. தமிழ் மக்களுக்கு எந்த ஒரு இனப்பிரச்சனையும் கிடையாது என்பதும்இ அனைத்தும் தமிழ் பிற்போக்கு சக்திகளினது சூழ்ச்சி என்பதும்இ பேரினவாதத்தின் அரசியல் எடுபிடியாகிப் போன திரொக்சிட்டுகள் புலம்பலாகும்; இதை தலை கீழாக நின்று நிறுவ முனைகின்றனர்.

    இலங்கையில் திட்டமிட்ட இன குடியேற்றம் நடக்கவில்லை என்றும்இ இன அடிப்படையிலான திட்டமிட்ட தரப்படுத்தல் நடக்கவில்லை என்றும்இ இன ஒடுக்குமுறையே இல்லை என்றும் கூறுகின்றது இக்கட்டுரை. இப்படியும் பேரினவாதத்தின் எடுபிடியாக திரொக்சியம் அனைத்தையும் தலைகீழாக்கி வாதிட முடிகின்றது. கூறப் போனால் தமிழ் பிற்போக்கு சக்திகளின் மகுடத்தில் எறி அமர்ந்தபடிஇ ஒடுக்கபட்ட தமிழ் மக்களின் முகத்தில் துப்ப முடிகின்றது. இந்த புலியெதிர்ப்பு திரொக்சிட்டுகள் இப்படி பேரினசாத்துக்கு கம்பளம் விரிக்கினர். நல்ல அரசியல் பிழைப்புத் தான்.

    தமிழ் பிரதேசம் என்ற ஒன்று கிடையாதுஇ சுயநிர்ணயம் அது ஸ்ராலினிஸ்ட்டுகளின் வெற்று வேட்டு புலம்பல் என்கின்றனர். வேடிக்கை என்னவென்றால் இந்த திரொஸ்கிட்டுகள் லெனின் தலைமையிலான கட்சி சுயநிர்ணயத்தை வைத்துஇ ஸ்ராலினை தலைமையில் நடைமுறைப் போராட்டத்தை நடத்திய போதுஇ அதில் இனைந்து நின்றது கிடையாது. மாறாக லெனினுக்கு எதிராகஇ அந்த புரட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள்;. லெனின் – ஸ்ராலின் தலைமையிலான கட்சியில் ஒட்டுண்ணியாக ஓட்டியவாகள்இ சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் தானே. பெரும் தேசியத்தின் பின்னால் அரசியல் பட்டும் விடுபவாகள்.

    இன்று பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்கியத்தை ஓப்புக் கொள்வதும்இ ஒரு தீர்வை முன்வைக்கப் போவதாக கூறுகின்றது. இந்த நிலையில் தான்இ இந்த திரோக்கிய அன்னக்காவடிகளால் இப்படி புலம்ப முடிகின்றது.

    தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வாழ்வதை புரிந்து கொள்ள முடியாதுஇ அதை சிங்கள பேரினவாத திட்டமிட்ட குடியேற்றத்துடன் ஒப்பிடுவதுஇ அதை தலைப்பாக இக்கட்டுரை கொள்வதும்இ அண்மையில் பேரினவாத தலைவர்களின் கூற்றில் இருந்த பிரதிபலிக்கின்றது?. அந்தளவுக்கு அரசியல் அற்பத்தனம் மிதக்கின்றது.

    பி.இரயாகரன்;

  4. அப்பப் பா…….
    மச்சான் கேத்தில குக்கரில வை, ரீ ஒண்டு குடிக்கவேணும்.

    சனியனே இப்பதானே உன்னையும் கேட்டனான் வேண்டாமெண்டெல்லே சொன்னனி!

    ஆருக்குத்தெரியும் இன்னும் நீளுமெண்டு!!!!!

  5. வட இலங்கைத் தமிழர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய கட்டுரை. எத்தனையோ உண்மைகள் அடங்கியிருக்கின்றன. இருப்பினும் என் கருத்துக்கள்: ஆசிரியர் இதை முற்றிலும் ஆய்வுக்கட்டுரைப் பாணியில் எழுதியிருக்கவேண்டும். ஏன் வரலாற்று ஆவணங்களின் பெயர் மற்றும் புள்ளிவிவரங்கள் வந்த பத்திரிகைப் பெயர்கள் மேலும் தேதிகளைக் குறிப்பிடத் தவறினார்? புலிகளின் பாசிஸம் தெரிந்ததுவே. அவர்களைத் தனியாக ஒரு கட்டுரையில் போட்டுத் திட்டியிருக்கலாம். அவர்கள் பாணியிலேயே எழுதுவது கட்டுரையின் செய்தியை மலினப்படுத்துகிறது. புலம் பெயர்ந்த (வட) இலங்கைத் தமிழர்கள் எல்லாருமே மோசமானவர்கள் அல்ல. அதிகமானவர்கள் காசு சேர்க்க வந்தாலும் மனசுக்குள் அமைதி வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான். (வெளியே வேறுவிதமாய்ப் பாட்டுப் பாடுவார்கள்.) தவிர எல்லாருமே மேல்தட்டு வர்க்கமல்ல. ஈழவேந்தன் அள்ளிவிடுகிற ளொள்ளை எல்லாரும் நம்பிவிடக்கூடாது என்று ஆசிரியர் படபடப்பதுவும் தெரிகிறது. மீண்டும் இந்தக் கட்டுரை திருத்தங்களுடன் இன்னும் சான்றுகளுடன் வெளிவந்தால் சிறப்பு. நக்கல்கள் நையாண்டிகள் வேண்டாம்.பாலசிங்கம் தான் செத்துப்போய்விட்டாரே! ஆசிரியர் செய்வாரா?

    அன்புடன் ராணா

  6. கட்டுரையை எல்லாரும் படிக்கவேணுமெண்டதில தமிழரசனுக்கம் அக்கறையில்லை. சத்தியக்கடதாசிக்கும் கவலையில்லை.

  7. பிரபாகரன் காலப்பிசாசு மட்டுமல்ல காலப்பிழையும்.

  8. மிரபோ , மாரா

    ரூசோ , வோல்தயர்

    அலெக்ஸாண்டர் தூமாஸ்

    விக்ரர் கியூகோ

    எமிலி ஸோலா , ஆந்ரே மல்றோ

    மேரிகியூரி , பியர் கியூரி

    இவர்கள் கல்லறை நினைவிடம்

    பந்தயோன்

    27 .01 2007 சனிக்கிழமை
    இலவசமாகத் திறந்துவிட்டார்கள்

    சத்தோ றூஸிலிருந்து

    இருபதுபேருமில்லாத விசாவற்றவர்க்கான

    ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு

    இருநூறு அதிரடிப்படையினர் , பொலிஸார்

    வண்டிகள் முழுத்தெருக்களையும் நிறைத்து நிற்கின்றன(ர்)

    விசாவற்றவர்கள் கறுப்பர்

    படையினர் வெள்ளையர்

    ஒருகிழமைக்குமுன் ரயிலில்

    சகபயணி கேட்டார்

    ஏன் ஆபிரிக்காவிலிருந்து உங்கள் நாட்டிற்கு

    வந்தாரில்லை ?

    அரசர்கள் அந்நியரை வரவிடுவதில்லை

    அடிமைகளைப் போகவிடுவதுமில்லை

    அரசர்களும் அடிமைகளும்

    அரசர்களும் அடிமைகளும்

    அரசர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *