உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!

கட்டுரைகள்

– ஷோபாசக்தி

னைத்து சமூக வெளிகளிலுமிருந்தும் ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொரு வெளிகளாக அத்துமீறி நுழையும்போது அவர்கள் ஆண்முதன்மைச் சமூகத்தால் கொடூரமாக ஒடுக்கப்படுகிறார்கள். மீறல்களைச் செய்த பெண்களின் மீது ஒழுக்கமின்மை, ஓடுகாலி, பரத்தை போன்ற வசைகளைச் சுமத்தி அவற்றையே பெண்கள் மீதான முதன்மை ஆயுதங்களாகச் சுழற்றிவிடுவதே ஆண்முதன்மைச் சமூகத்தின் காலாதிகாலத்திற்குமான யுத்த தந்திரமாயுள்ளது. இலக்கியவெளியும் இதனிலிருந்து தப்பித்துவிடவில்லை.

பெண் எழுத்துகளின் உச்சமாக நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தால் துதிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆண்டாளின் கவித்துவத்திற்குத் தொடர்ச்சியே இல்லாமல் ஆண்டாள் தெய்வப்பிறப்பாகவும் தொன்மமாகவும் நிறுவப்பட்டிருந்த தமிழ் இலக்கியச்சூழலில் பத்து வருடங்களிற்கு முன்னர் அலையெனப் பெண் எழுத்தாளர்களின் எழுச்சி சாத்தியமானபோது அவை சிறுபத்திரிகை வட்டாரங்களிற்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்ததுடன் வெளியிலும் கடுமையான கண்டனங்களைப் பெற்றன. சொல் புதிது, பொருள் புதிதெனச் சுழன்றடித்த பெண்மொழியின் அலையில் ஆண்களால் வடிவமைக்கப்பட்டிருந்த மொழி அமைப்புக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்த ஆண் விமர்சகர்கள் பதறிப்போனார்கள்.

‘நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி’ என்றார் பெரியார். நமது மொழி சாதியை மட்டுமல்ல ஆணாதிக்கத்தையும் காப்பாற்றுவதே. ஆண்களின் நலன்சார் நோக்கிலிருந்து கட்டப்பட்டதுதான் நமது மொழி. இந்த மொழி அமைப்புக்குள், மரபுக்குள், ஒழுங்கிற்குள், அழகியலுக்குள் நின்றுகொண்டு பெண்கள் எழுத மறுத்தனர். எப்போதும் போலவே அறிவுஜீவிகளிற்கும் தொழில்முறை ஆய்வாளர்களிற்கும் வசப்படுவதற்கு முன்னமே பெண் படைப்பாளிகளிற்கு அவர்களிற்கான தனித்துவமான பெண்மொழி சாத்தியமாயிற்று.

பெண்கள் அவர்களின் தனித்துவமான மொழியுடன் அரசியல் வெளிகளிற்குள் நுழையும்போது ஏற்கனவே நிறுவனப்பட்டிருக்கும் மொழியுடன், நிறுவப்பட்டிருக்கும் அரசியல் கருத்துகளையும் அந்தக் கருத்துகளைச் சுமந்திருக்கும் அரசியல் அணிகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் அணிகள் ஏற்கனவே முன்முடிவுகளுடனும் கறாரான வேலைத் திட்டங்களுடனும் மொழி, கலாசாரம், மரபு குறித்தெல்லாம்  திட்டவட்டமான மதிப்பீடுகளுடனும் அளவுகோல்களுடனும் உள்ளன. அவ்வளவும் ஆண்களால் உருவாக்கப்பட்ட மதிப்பீடுகளும் அளவுகோல்களும். இந்த அளவுகோல்களிற்கு கட்டுப்பட வேண்டிய அவசியமோ, அந்த அளவுகோல்களின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் கேள்விகளிற்கும் சீண்டல்களிற்கும் பதிலளிக்கவேண்டிய நிர்ப்பந்தமோ பெண் படைப்பாளிக்குக் கிடையவே கிடையாது.

லீனா மணிமேகலையின் சமீபத்திய கவிதைகள் குறித்து ம.க.இ.கவினர் எழுப்புவது கேள்விகளை அல்ல. ஏனெனில் அவர்களிற்கு அந்தக் கவிதைகள் மீது கேள்விகள் ஏதுமில்லை. அந்தக் கவிதைகள் ஆபாசமானவை, மார்க்ஸியத்தை இழிவு செய்பவை என்றெல்லாம் அவர்களிற்கு உறுதியான முடிவுகளுள்ளன. அவர்களது குற்றச்சாட்டுகளை அவர்கள் உறுதியாக முன்வைத்திருக்கிறார்கள். இப்போது அவர்களிற்குத் தேவைப்படுவது லீனா மணிமேகலையிடமிருந்து ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே.

பதினைந்தாம் தேதி, கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள் நடத்திய ‘இந்து மக்கள் கட்சிக்கு’ எதிரான கண்டன ஒன்றுகூடலில் புகுந்து ம.க.இ.கவினர் எழுப்பியதும் கேள்விகளல்ல. “உனது அனுபவத்தில் நீ பார்த்த சி.பி.அய், சி.பி.எம் கட்சியினருடைய ஆண்குறி வகைமாதிரிகளைச் சொல்” என்று கேட்டது வெறும் ஆணாதிக்கத் தடித்தனம் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. ஒரு விசாரணையில் பொலிஸ் அதிகாரியோ, மதத் தலைவரோ கேட்கும் முதல் கேள்வி இவ்வாறுதான் இருக்கும். ஸ்டாலின் காலத்தில் கலை இலக்கியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்தவரும் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான ஸ்தானோவ் சென்ற நூற்றாண்டின் ருஷ்ய இலக்கியத்தின் ஆகச் சிறந்த பெண் கவியான அன்னா அக்மதோவாவை ‘பாதி பரத்தை, பாதி கன்னியாஸ்திரி’ என்று தீர்ப்பிட்டார். பொலிஸ் அதிகாரிக்கும் மதத் தலைவருக்கும் பொலிட்பீரோ உறுப்பினருக்கும் வர்க்க அரசியல் வேறாயிருக்கலாம், ஆனால் பால்நிலை அரசியல் ஒன்றுதான். அங்கே வர்க்கத்தை முந்திக்கொண்டு குறிகள்தான் துருத்திக்கொண்டு நிற்கின்றன. அல்லாமல் ‘பரத்தை’யென்றும் ‘தேவடியாள்’ என்றும் எப்படியொரு கம்யூனிஸ்டின் வாயிலிருந்து வார்த்தை வரும்? அந்தக் குறி அரசியல் அவர்களின் ஆண்முதன்மை உளவியலிலிருந்து உருவாவது. ஒரு தொழிலாளியோ, முதலாளியோ வர்க்கத்தை மட்டுமே  அடையாளமாகக் கொண்டவர்களல்ல. வர்க்கம், பால், சாதி, இனம், நிறம் போன்ற அடையாளங்களும் சேர்ந்ததுதான் மனித உயிரி. வர்க்க சாராம்சவாதத்திலிருந்து பெண்களுடைய, தலித்துகளுடைய, கருப்பர்களுடைய இன்னபிற ஒடுக்கப்பட்டவர்களின் தனித்துவமான பிரச்சினைகளை அணுகும் அரசியல்முறைமை மற்றதின் இருப்பை மறுக்கும் கடும் அடக்குமுறை அரசியல் நிலையையே தோற்றுவிக்கும்.

தங்களது ஆணாதிக்கக் கொழுப்பெடுத்த கேள்வியை நியாயப்படுத்துவதிற்கு ம.க. இ.கவினர் தந்தை பெரியாரை துணைக்கு அழைத்திருக்கிறார்கள். ” ‘நாகம்மா தேவடியா’ என்று சுவரில் எழுதியிருந்தபோது அதைப் பெரியார் அலட்சியமாக எதிர்கொண்டு புறக்கணித்தார், லீனா மட்டும் ஏன் கொதிக்கிறார்” எனக் கேட்கிறார் வினவு. நாகம்மையாரைத் தேவடியாள் எனப் பழித்ததிற்குப் பெரியார் வேண்டுமானால் அலட்சியமாகச் சிரித்திருக்கலாம், ஆனால்  தன்னைத் ‘தேவடியா’ எனச் சொல்பவனை எதிர்கொள்ளும்போது நாகம்மையார்  நிச்சயமாகச் சிரிப்பால் அந்தக் காவாலியை எதிர்கொண்டிருக்கமாட்டார். வசமான செருப்பால்தான் அவனை  நாகம்மையார் எதிர்கொண்டிருப்பார். ஆணாதிக்க வக்கிர மொழியும் தடித்தனமான கருத்தியலும் கவிந்திருக்கும் இந்தச் சூழலில் அதை எதிர்கொள்வதற்கு வேறென்ன  மார்க்கத்தை ஒரு பெண்ணிற்கு இந்தச் சமூகம்  விட்டுவைத்திருக்கிறது. பெண்களை வல்லாங்கு செய்த ஆண்டைகளின் ஆண்குறிகளை பூலான்தேவி அறுத்து எறிந்ததும் ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறுதான். இந்தப் பால்நிலை அடிமைச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான தன்னிலைகளும் உணர்வுகளும் அவற்றிலிருந்து கிளம்பும் எதிர்வினைகளும் நிச்சயமாகவே வேறுவேறானவை. இதில் பெரியாருக்கும் விலக்கில்லை. அதைப் பெரியார் சரியாகப் புரிந்துகொண்டதின் வெளிப்பாடுதான் ‘ஆண்களின் தலைமையில் பெண்கள் விடுதலை அடைய முடியாது’, ‘பெண் விடுதலைபெற ஆண்மை அழிய வேண்டும்’ போன்ற அவரின் புகழ்பெற்ற சொல்லாடல்கள்.

கூட்டத்தில் கேள்வி எழுப்புவது சனநாயக உரிமை என்றும் அதை மறுப்பது சனநாயக மறுப்பு அல்லது கோழைத்தனம் என்பதும் ம.க.இ.கவினது வாதம். அங்கே ம.க.இ.க. எழுப்பியது கேள்விகளையல்ல ஆணாதிக்க வசைகளையே என்பதைச் சற்றே ஒருபுறத்தே வைத்துவிட்டு அவர்களது வாதத்தைப் பரிசீலிக்கலாம்.

ஒருதரப்பினர் தமது கருத்துகளை பரப்புரை செய்வதற்காக நடத்தும் கூட்டத்தில் மாற்றுத்தரப்பினர் கேள்விகள் கேட்க வழங்கப்படும் நேரத்தில் கேள்விகளைக் கேட்பதென்பது வேறு. ஆனால் கூட்டத்தை நடக்கவிடாமல் ஆரம்பத்திலிருந்தே வசைகளை எழுப்பிக் குழப்பநிலையை எற்படுத்துவதை ஒருபோதும் கருத்துச் சுதந்திரம் என்றோ கலகத்தனம் என்றோ வரையறை செய்ய முடியாது. அது கலகத்தனம் என்றால் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே ‘சிவசேனா’தான் ஆகச் சிறந்த கலகக்காரர்கள். ம.க.இ.க. அன்று நடத்தியது கலகம் கிடையாது, அது வெறும் காவாலித்தனம் மட்டுமே.

ம.க.இ.கவினர் அவர்களாக ஒரு கூட்டத்தை நடத்தும்போது அதை நடத்தவிடாமல் கூச்சலிட்டு இடையூறு செய்வதோ அல்லது அவர்களது எழுத்துகளிற்கு தடையைக் கோருவதோதான் அவர்கள்மீதான கருத்துச் சுதந்திர மறுப்பு ஆகுமே ஒழிய இன்னொரு தரப்பினரின் கருத்துக் களத்தை வன்முறையாலும் அய்ம்பது பேரின் ஆள்பலத்தாலும் கைப்பற்ற விடாமல் ம.க.இ.கவினரை தடுப்பது கருத்துச் சுதந்திர மறுப்பாகாது. ம.க.இ.கவினது ஆணாதிக்கத் தடித்தனக் கேள்விகளுக்கெல்லாம் மானமுள்ளவர்களால் மேடை அமைத்துக் கொடுக்க முடியாது. அதைச் சகித்துக்கொண்டிருக்கவும் முடியாது. நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவு செய்து எழுத்தாளர்கள் கூட்டத்தை ஒழுங்கு செய்வார்களாம், அங்கே ம.க.இ.கவினர் வந்து கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களைப் பேசவிடாமல் கூச்சலிட்டுக் குழப்பம் செய்து அரங்கைக் கைப்பற்றப் பார்ப்பார்களாம். இது எந்தவூர் சனநாயகம்?

ம.க.இ.கவினர் தாராளமாக பிரச்சாரம் செய்யட்டும். லீனாவுக்கு கவிதை எழுத உரிமையுள்ளதுபோலவே அதை விமர்சிக்க ம.க.இ.கவினருக்குப் பூரண உரிமையுள்ளது. ஆனால் அது மற்றவர்களின் கூட்டங் கூடும் உரிமையை, கருத்துச்சொல்லும் உரிமையை இடையூறு செய்யாத சனநாயக நெறிகளுடனான விமர்சனமாக இருக்கவேண்டும். இப்போது கூட லீனா மணிமேகலையின் கவிதைகளைச் சுவரொட்டிகளாக ஒட்டப்போவதாக ம.க.இ.கவினர் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். அதுவொரு வரவேற்கத்தக்க சனநாயகபூர்வமான போராட்டம். அந்தச் சுவரொட்டிகளை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்வது அவர்களின் உரிமை. அதை அவர்கள் லீனா மணிமேகலையின் முகத்தில் கொண்டுபோய் ஒட்டாதவரை அதில் நமக்கு எதிர்ப்பதற்கு ஏதுமில்லை.

கவிதைகள் சுவரொட்டிகளாக்கப்பட்டு ஊர் முழுதும் ஒட்டப்பெறும் பாக்கியம் அநேகமாகத் தமிழ் இலக்கியச் சூழலில் சுப்பிரமணிய பாரதிக்குப் பிறகு லீனாவுக்குத்தான்  வாய்த்திருக்கிறது என நினைக்கிறேன். சிறுபத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகள் ஒரு அய்நூறு, ஆயிரம் வாசகர்களைத் தாண்டிப் பரவலாகப்  போய்ச் சேர்வதில்லை என்ற மனக்குறை எப்போதுமே படைப்பாளிகளிற்கு உண்டு. அதிலும் கவிஞர்களின் நிலை மேலும் மோசமானது. கவிதையைக் கவிஞர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்ற நக்கல் பேச்சும் இலக்கிய வட்டாரங்களிற்குள் உள்ளதுதான். குறிப்பாக அடித்தள மக்களிடம் நமது எழுத்துகள் சென்று சேர்வதில்லை என்ற மனக்குறையும் படைப்பாளிகளிற்கு உள்ளது. ம.க.இ.கவினர் லீனாவின் கவிதைகளைச் சுவரொட்டிகளாகத் தொழிலாளர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் ஒட்டப்போவதாக அறிவித்துள்ளார்கள். சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியம் அடித்தளமக்களிடம் சென்று சேர்வதில்லை என்ற வசை இவ்வாறாக ம.க.இ.கவினரால் கழியட்டும்!

கூட்டத்தில் தாங்கள் நடத்திய காவாலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் வைக்கக்கேட்டு வினவு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் என்னைக் குறித்து இரண்டு கொடூரமான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். முதலாவது குற்றச்சாட்டு ‘செங்கடல்’ படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளியை நான் தாக்கினேன் என்பது.

கடந்த சனவரியில் வினவு இணையத்தளத்தில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே அதை மறுத்து அவ்வாறு ஊதியப் பிரச்சினைகள் ஏதும் நடக்கவில்லை என லீனா மறுப்புத் தெரிவித்திருந்தார். சற்றுத் தாமதித்து வினவுவின் குற்றச்சாட்டை மறுத்து நானும் நீண்டதொரு மறுப்பை எழுதியிருந்தேன். அந்த மறுப்புகளையெல்லாம் வினவு பொருட்படுத்தவில்லை போல் தெரிகிறது. அவர் மீண்டும் அதே குற்றச்சாட்டை என்மீது சுமத்தியுள்ளார். அதுதான் நான் ஏற்கனவே மறுப்புத் தெரிவித்துவிட்டேனே என்று என்னால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தொழிலாளியை ஊதியம் கேட்டதற்காக அடித்தேன் என்பது என் அடிப்படை அரசியல் அறத்தையே புரட்டிப்போடும்  குற்றச்சாட்டு. ஒரு கம்யூனிஸ்டாக எனக்குப் பெருத்த அவமானத்தைத் தரக்கூடிய குற்றச்சாட்டு அது. எனவே மறுபடியும் ஒருமுறை அந்தக் குற்றச்சாட்டை நான் முற்று முழுவதுமாக நிராகரிக்க வேண்டியுள்ளது.

என் மறுப்பை வினவு ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது நம்பவில்லை. நான் எனது முந்தைய மறுப்புக் கட்டுரையில் தினத்தந்தியின் நம்பகமற்ற தன்மையையும் ‘நம் தேசம்’ மற்றும் ‘தமிழக அரசியல்’ இணையத்தளங்களிற்கு உதவி இயக்குனர் தீபக் வழங்கிய நேர்காணலின் நம்பகமற்றதன்மைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருந்தேன். அதற்குப் பதிலாகத் தீபக் ‘தன்னுடைய கருத்தை லீனாவின் மீதுள்ள கோபத்தால் நம்தேசம் இணையம் திரித்துப் போட்டுவிட்டது’ எனவொரு விளக்கம் கொடுத்து ‘இனியொரு’வில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். தினத்தந்தி மற்றும்  தீபக்காலேயே தவறென நிராகரிக்கப்பட்ட செய்திகளை விட்டுவிடலாம். ‘இனியொரு’வில் தீபக்கால் எழுதப்பட்ட கடைசிக் கட்டுரையையே தீபக்கின் தெளிவான வாக்குமூலமாகக் கொண்டு இப்பிரச்சினையை இப்போது அணுகலாம்.

படப்பிடிப்பில் ‘பேட்டா’ பிரச்சினைகள் இருந்ததாகவும் உதவி இயக்குனர்கள், கமெரா உதவியாளர்கள் போன்றவர்களிற்கு ஊதியம் வழங்கப்படாமல் அவர்கள் பேட்டாவை மட்டுமே நம்பியிருந்தார்கள் எனவும் சொல்லும் தீபக் கட்டுரையின் இறுதியில் தான் முழுப் படத்திற்கும் 35 000 ரூபா ஊதியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும், 10 800 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டதாகவும் நடந்த பிரச்சினையின் பின்னாக மிகுதிப் பணத்தைத் தான் நிராகரித்துவிட்டதாகவும் பணம் தனக்கொரு பொருட்டல்ல என்றும் நட்புக்காகவே படத்தில் பணியாற்ற வந்ததாகவும் கூறுகிறார். ஆகவே இங்கே தீபக்கைப் பொறுத்தவரை ஊதியப் பிரச்சினைகள் ஏதுமில்லை. தவிரவும் உதவி இயக்குனர்கள் பேட்டா அடிப்படையில் அல்லாமல் மாதச் சம்பளத்தின் அடிப்படையிலேயே பணிசெய்ததையும் தீபக் இங்கே உறுதி செய்கிறார். உண்மையும் அதுதான். செங்கடல் படப்பிடிப்பில் பேட்டா போன்ற நடைமுறைகள் ஏதுமில்லை. மொத்தமாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையிலேயே தொழில்நுட்பக் கலைஞர்களும் தொழிலாளர்களும் பணிசெய்தார்கள்.

தனது கட்டுரையில் “பேட்டா வழங்காததால் தொழிலாளர்கள் படச்சுருளுடன் ஓடிவிட்டார்கள் அதற்கும் எனக்கும் என்ன தொடர்பு?” எனத் தீபக் கேட்கிறார். இல்லாத பேட்டாப் பிரச்சினையால் தொழிலாளர்கள் படச்சுருளுடன் ஓடிப்போனார்கள் என்று தீபக் சொல்லும் பொய்யை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அப்படி ஓடிப்போன எந்தத் தொழிலாளியை நான் தாக்கினேன்? எங்கே வைத்துத் தாக்கினேன். ஊதியம் கேட்டபோது ஷோபாசக்தி தாக்கிவிட்டான் என்று எந்த யூனியனில் அந்தத் தொழிலாளர்கள் முறையீடு செய்திருக்கிறார்கள்? அல்லது காவற்துறையிடம் முறையீடு செய்திருக்கிறார்களா? தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் வினவு எந்தத் தொழிலாளிக்கு ஊதியம் கொடுக்க மறுத்து நான் தாக்கினேன் என்று நிரூபித்துவிட்டு அப்புறம் “தொழிலாளிகளிற்கு ஊதியத்தை மறுத்து  ஷோபாசக்தி அடித்தான்” என்று பேசட்டும். வினவுவால் மறுபடியும் மறுபடியும் இவ்வாறான பொய்களை உருவாக்க முடியுமே தவிர அதை நிரூபிக்கமுடியாது. படச்சுருளை எடுத்துச் சென்ற தொழிலாளர்களான வெங்கட்டும், யூசுப்பும் இந்தச் சம்பவங்களிற்கு ஒரு மாதம் கழித்துத் தொடங்கி நடந்த செங்கடலின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிலும் கமெரா உதவியாளர்களாக எங்களுடனேயே வேலைசெய்தார்கள். ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கிவிட்டுத் தொடர்ந்து எந்த யூனியன் பிரச்சினைகளுமில்லாமல் அதே தொழிலாளர்களுடன் எப்படிப் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடியும்? வினவு ஆராய்ந்து சொல்லட்டும்.

நடந்த தகராறு பேட்டா, ஊதியம் தொடர்பானதல்ல. படச்சுருள் எடுத்துச் செல்லப்பட்டதால் மட்டுமே எனக்கும் தீபக்குக்கும் தகராறு நடந்தது. ஊதியத்தின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டதாகவும் மிகுதியைத் தானே நிராகரிப்பதாகவும் தீபக் தெளிவாகவே சொல்லியிருக்கும்போது எங்கிருந்து வந்தது ஊதியப்பிரச்சினை? எந்தத் தொழிலாளி என்னால் ஊதியப் பிரச்சினையால் தாக்கப்பட்டார்? வினவு சொல்லட்டும். நிரூபிக்கட்டும், பார்த்துவிடலாம்.

படச்சுருளை எடுத்துச் சென்றிருந்தால் உட்கார்ந்திருந்து கவிதை எழுதாமல் அல்லது பொலிஸில் புகார் கொடுக்காமல் எதற்குத் தீபக்கைத் தாக்கினாய் என்பது வினவுவின் கேள்வி. கவிதை எழுதினால் ம.க.இ.கவினர்தான் வீட்டுக்கு வருவார்களே தவிர படச்சுருளெல்லாம் திரும்பவராது. படப்பிடிப்பு நிலையிலிருக்கும்போதே படச்சுருளை பொலிசாரின் கைகளுக்கு கொடுக்குமளவிற்கு நாங்கள் அப்பாவிகளல்ல.

தொழிலாளியைத் தாக்கினேன் என்று எழுதுகிறீர்களே, நான் மட்டுமென்ன பிர்லா – டாடாவின் பேரப்புள்ளையா? நானும் கடந்த இருபது வருடங்களாக உணவுச்சாலைகளில் தட்டுக் கழுவியும் சுப்பர் மார்கெட்டுகளில் சுமைகளை ஏற்றியும் இறக்கியும் வேலை செய்துவரும் அடிமட்டத் தொழிலாளிதான். இரண்டு நாட்களாக நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பில் உருவான படச்சுருள்களை இழந்துபோன பதற்றத்தால் நிகழ்ந்த தகராறை ஊதியப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினையாக உருவகித்து இல்லாத வர்க்க எதிரியை உருவாக்க ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்?

நான் தமிழகத்தில் இருந்தபோது ‘விண்’ தொலைக்காட்சியில் ‘ஷோபாசக்தி என்ற பிரஞ்சு உளவாளி கோடிக்கணக்கான பணத்துடன் சினிமா தயாரிப்பதற்காகத் தமிழகம் வந்துள்ளார்’ என்றொரு செய்தி சொல்லப்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தார்கள். அது எவ்வளவு கேனத்தனமான செய்தியோ அதேயளவு கேனத்தனமான செய்திதான் நான் தொழிலாளர்களை படப்பிடிப்புக்கு அமர்த்தினேன் என்று தீபக் இனியொருவில் எழுதும் செய்தி. இந்த ஒரு செய்தியே தீபக்கின் பொய்யுரைக்கும் திறனுக்குச் சான்று. இந்தியாவுக்குச் செல்வதற்கு நான் ஊரில் பட்ட கடனையே ஆறுமாதமாகியும் இன்னும் நான் கட்டி முடிக்கவில்லை. இதற்குள் என்னையொரு படமுதலாளியாகச் சித்திரித்து அதிலிருந்து ஒரு அவதூறு. அதைத் தொட்டு ஒரு வர்க்கப் பஞ்சாயத்து. உண்மையில் அவ்வாறு தொழிலாளர்களின் ஊதியம் குறித்தவொரு பிரச்சினை அங்கே நடந்திருந்தால், அது அடிதடியளவிற்குச் சென்றிருந்தால் என்னிடம் தயாரிப்பாளர்தான் அறைவாங்கியிருப்பார். அதுதான் எனது வர்க்கப்பண்பு, அதுதான் எனது அரசியல் பாரம்பரியம்.

வினவு இரண்டாவதாக என்மீது வைக்கும் குற்றச்சாட்டு இன்னும் கேவலமானது. நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேனாம். எனது இத்தனை வருடகாலச் செயற்பாட்டில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதராவான ஒரு சொல்லை என்னிடமிருந்து வினவுவால் ஆதாரம் காட்ட முடியுமா? ஆனால் டக்ளஸின் அரசியலை நான் தொடந்து எதிர்த்துவருவதற்கு ஆதாரமாக என்னால் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரமாக என்னால் முன்வைக்க முடியும். கொஞ்சமாவது அரசியல் நேர்மை இருப்பின் பணம் பெறும் இந்தக் கேவலமான குற்றச்சாட்டை வினவுவோ ம.க.இ.கவோ நிரூபித்துக்காட்டட்டும். நேரில் வருவது, வீடுகளிற்குப் போவது எல்லாவற்றையும்விட தாங்கள் எழுதுவதற்கு  யோக்கியத்துடன் பொறுப்பேற்றுக்கொள்வதே முக்கியமானது என்பது மக்கள் கலை இலக்கியக் கழத்தினருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

எனது ‘பழி நாணுவார்’ என்ற முந்தைய மறுப்புக் கட்டுரையில் வினவு ஏற்கனவே எழுதியிருந்த அப்பட்டமான பொய்களைக் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தேன். ‘செங்கடல்’ திரைப்படம் தமிழக மீனவர்களுக்குப் புலிகளால்தான் பிரச்சினை என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுவருகிறது  / இப்படத்திற்காக சமுத்திரக்கனியிடம் லீனா ஒரு கோடி ரூபாய்கள் பெற்றிருக்கிறார் / லீனா மணிமேகலையும் சேர்ந்து தீபக்கைத் தாக்கினார் என்றெல்லாம் வினவு எழுதியவை கலப்பில்லாத பொய்கள்  எனச் சுட்டிக் காட்டியிருந்தேன். பின்னூட்டங்களிற்குப் பின்னூட்டம் மின்னல் வெட்டில் விரல் சொடக்கில் பதில் சொல்லிவரும் வினவுக்கு நான் சுட்டிக்காட்டிய அவரின் பொய்கள் குறித்துக் கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் கருத்துக் கூறத் தெரியவில்லை. இப்போது புதிதாக டக்ளஸ் தேவானாந்தாவிடம் பணம் வாங்குகிறேன் என்றொரு புத்தம் புதிய பொய்யுடன் அவர் வந்துள்ளார். பொய்களைக் குறித்துக் கேள்வி எழுப்பினால் அவற்றுக்குப் பதில் இன்னொரு புதிய பொய்யா? நல்லாயிருக்குதய்யா உங்கள் புதிய ஜனநாயகம்.

இந்த நேரடியான, மிக எளிமையான கேள்விகளிற்குப் பதில்களைச் சொல்லாமல் சுற்றிவளைத்து ‘கவிதையைப் பற்றிய உனது கருத்தென்ன?’, ‘இந்தக் கட்டுரை கம்யூனிஸ எதிர்ப்புக் கட்டுரை’ என்றெல்லாம் நீங்கள் பொருள் மாறிப் பேசிப் போக்குக்காட்டுவதற்கு நான் உங்களை அனுமதிக்கப்போவதில்லை. லீனா மணிமேகலையின் கவிதைகளிற்கு மட்டுமல்ல உங்களால் ‘சரோஜாதேவி’ எழுத்துகள் என வசை பொழியப்படும் எல்லாப் பெண்கவிகளின் எழுத்துகளிற்கும் நான் நீண்டகாலமாகவே ஆதரவளித்து வருகிறேன். எனது கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் நீண்டகாலமாகவே அவற்றிற்காக வரிந்துகட்டி வாதாடி வருகிறேன்.

யோனி, முலை, மயிர் என்று எழுதுவதும் கம்யூனிச தலைவர்களை பெயர் சுட்டி எழுதுவதும் இலக்கியமா என்று தயவு செய்து என்னிடம் கேட்காதீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல்வரியையே மாற்றிப்போட்டு “இதுநாள் வரையிலுமான ஏடறிந்த சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் பெண்குறிகளுக்கும் ஆண்குறிகளுக்கும் இடையே நடத்த இடையறாத போராட்டத்தின் வரலாறேயாகும்” எனப் பலவருடங்களுக்கு முன்னமே  ‘பத்துக் கட்டளைகள்’ என்று நான் கதை எழுதியிருக்கிறேன். உங்களால் ‘ஆபாசம்’ எனச் சொல்லப்படும் சொற்களை வைத்து எழுதி ஒரு ‘ஆபாசப்பட்டறை’ போலவே நான் இலக்கியத்தில் இயங்கி வந்திருக்கிறேன். ஒரு கூட்டத்திலோ அல்லது தெருவிலோ  என்னை மடக்கி “எங்கே உனது அனுபவத்தையும் வகைமாதிரிகளையும் சொல்?” என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் உங்களுக்குப் பதில் சொல்லப்போவதுமில்லை. பழனி சித்த மருத்தவரைத் தவிர வேறு யாரிடமும் நான் எனது அனுபவங்களைக் குறித்துக் கலந்தாலோசிப்பதாக இல்லை.

இல்லாத ஊதியப் பிரச்சினையை வைத்து உங்களுக்கு வசதியான  இந்த நோஞ்சான் ‘வர்க்க எதிரி’யை  நீங்கள் கட்டமைத்து காட்டியிருப்பதுபோலவே எனது இந்தக் கட்டுரையை ஒரு கம்யூனிஸ எதிர்ப்புக் கட்டுரையாக நீங்கள் கட்டமைக்கவும் முயற்சிக்கலாம். ஆலய நுழைவுப் போராட்டங்கள், சங்கராச்சாரிக்கு எதிரான போராட்டங்கள், தாமிரபரணியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம், பார்ப்பன எதிர்ப்பு மாநாடு என மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய  பல்வேறு சமூகப் போராட்டங்களை மிகுந்த மதிப்புச் செய்பவன் நான். ஈழப் பிரச்சினையில் ம.க.இ.கவினரின் நிலைப்பாட்டை ஆதரித்து நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். எனது வலைப்பக்கத்தில் வினவு இணையத்தளத்திற்கு நான் இணைப்புக் கொடுத்தும் வைத்திருந்தேன். ஆனால் 15ம் தேதிக் கூட்டத்தில் நீங்கள் நடத்தியது கம்யூனிஸ்டுப் போராட்டமல்ல. அன்று நீங்கள் நடத்தியது  காவாலித்தனம். அய்ம்பது பேர்கள் உடனிருக்கிறார்கள் என்ற திமிரில் அன்று நீங்கள் காட்டியது ஆள்பலத்தை முன்னிறுத்திய அதிகாரம். அன்றைய கூட்டத்தில் நீங்கள் காட்டிய வன்மம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான ஒடுக்குமுறை. அன்று நீங்கள் லீனா மணிமேகலையிடம் எழுப்பிய கேள்வி ஆணாதிக்கக் கருத்தியல் வன்முறை. இவற்றைச் சொல்வதால் நான் கம்யூனிஸ விரோதியாகிவிடமாட்டேன். இவற்றைச் சொல்லாவிட்டால்தான் நான் கம்யூனிஸ விரோதி.

ஏனெனில் “ஒடுக்குமுறை, வன்முறை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் எந்தவொரு வடிவத்தாலும் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் விதிவிலக்கேதுமின்றி அவையனைத்திற்கும் பதிலடி கொடுப்பதும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதும் ஒரு கம்யூனிஸ்ட்டின் கடமை” என்று விளாடிமீர் இலியீச் லெனின் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.