கடந்தவை

எனது நூல்களைப் பெற

B74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppu2004@rediffmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
March 10th, 2007 | : கட்டுரைகள் |

சாயும் காலம் - ஷோபாசக்தி

saayum kaalam

shobasakthi

pusparajahகடந்த வருடம் இதே நாளில் தோழர் புஸ்பராஜாவின் உடல் வைக்கப்பட்டிருந்த காம்பறாவின் மூலைகளில் நாங்கள் மரத்துப்போய் நின்றிருந்தோம். அவரின் இருப்பைவிட அவரின் இறப்பு ஒருவருட காலத்திற்குள்ளாகவே அவரின் முக்கியத்துவத்தை எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.

1997ல் ‘இனியும் சூல் கொள்’ இலக்கிய சந்திப்பு மலர் தயாரிப்பு வேலைகள் லஷ்மி/கலைச்செல்வன் வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது அசோக் என்னை அங்கே அழைத்துச் சென்றிருந்தார். அங்கேதான் நான் புஸ்பராஜாவை முதலில் சந்தித்தேன்.

அதற்குச் சில நாட்களிற்குப் பின்பு பிரான்ஸில் நடந்த 23வது இலக்கியச் சந்திப்பிலிருந்து நான் அவருடன் கொஞ்சம் நெருக்கமாகத் தொடங்கினேன். எங்களின் நண்பர்களில் பலர் அதுவரை பேசிவந்த தேடல் முன்னோக்கு, மார்க்ஸிய முன்னோக்கு, மூன்றாவது பாதை முன்னோக்கு, எல்லாவற்றையும் ஒத்தி வைத்துவிட்டுப் புலியை எதிர்ப்பதற்காக எந்தப் பேயுடனும் கூட்டுச்சேரத் தயார் என்று பேசத் தொடங்கியிருந்த காலமது.

புஸ்பராஜா தனது பேச்சிலும் எழுத்திலும் இலங்கை அரசின் உறுதியான எதிர்ப்பாளராயிருந்தார். அவருக்கு விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த பலருடன் தனிப்பட்ட நட்பிருந்தது, எனினும் அவர் தேசிய விடுதலை இயக்கங்களுடனான தனது அரசியல்ரீதியான உறவுகளை முற்றாகத் துண்டித்திருந்தார். விடுதலைப் புலிகளின் பாஸிஸ அரசியலையும் மற்றய தமிழ் இயக்கங்களின் அராஜகங்களையும் பகிரங்கமாக அவர் மேடைகளிலும் எழுத்திலும் எதிர்த்தார். அடிப்படையில் அவர் தீவிரமான இலக்கிய வாசகராயிருந்தார். ஜெயகாந்தனின் கதைகளை அவர் ஞாபகத்திலிருந்து வரி பிசகாமல் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். பண்பாடு, கலாசாரம், சமூக ஒழுங்குகள் அவரின் எள்ளலுக்குரியவை. அவர் தனது கடைசி நாட்களில் அணு அணுவாய்த் துடித்து ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட சாவை நோக்கித் தவழ்ந்து கொண்டிருந்தபோதும் உறுதியான கடவுள் மறுப்பாளராகவேயிருந்தார். இறுதிவரை அவருக்கு மார்க்ஸியம், பெரியாரியம் மீது ஈடுபாடிருந்தது. ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூலின் பின்னட்டையில் கூட அவர் தன்னை அப்படித்தான் அடையாளப்படுத்தியிருக்கிறார். புஸ்பராஜாவின் இத்தகைய அரசியல் பண்புகள் என்னை விரைவிலேயே அவரின் அணுக்கமான தம்பியாக்கிவிட்டது.

அதேவேளையில் புஸ்பராஜாவிற்கு இந்திய அரசின்மீது ஒரு அரசியல் சாய்விருந்தது. இந்தியாவின் தலையீடில்லாமல் ஈழத்தில் தமிழ் மக்களுக்கான உரிமையையோ சமாதானத்தையோ பெற்றுவிட முடியாது என அவர் நம்பினார். அதேபோல அவர் அநியாயத்திற்கு அ.அமிர்தலிங்கத்தின் விசுவாசியாய் இருந்தார். இயக்கங்களின் வீரத்தின் மீதும் ஹீரோயிஸத்தின் மீதும் அவருக்குப் போதியளவு மயக்கமுமிருந்தது. இவை குறித்து நான் அவரை நேரிலும் காய்ந்திருக்கிறேன், எழுத்திலும் கூட்டங்களிலும் காய்ந்திருக்கிறேன்.

எங்களுடைய பத்து வருடகால அரசியல் இலக்கிய உறவும் இப்படிக் காய்தலும் உவத்தலுமாகத்தான் கழிந்தன. இவற்றுக்கு அப்பாலும் எங்களிருவரிடமும் சில சின்னச் சின்ன விடயங்களில் ஒற்றுமைகளிருந்தன. இருவரும் பயணம் செய்வதிலும் அது குறித்த திட்டங்களையும் கற்பனைகளையும் வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வமானவர்கள். எம்.ஜி.ஆர் பாடல்களின் தீவிர ரசிகர்கள். நான் ஒரு தேர்ந்த சமையற் கலைஞன். அவரோ தேர்ந்த சாப்பிடும் கலைஞன். இருவருமே வாசிப்பதினால் மட்டுமல்ல குடிப்பதினாலும் மனிதன் பூரணமடைகிறான் என்ற கொள்கையுடையவர்கள்.

தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் வந்தவர்களிடையே சாதி ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வும் சாதியெதிர்ப்புப் போர்க்குணாம்சமும் உள்ளவர்களைக் காண்பது அரிது. ஆனால் புஸ்பராஜாவிடமிருந்து சாதியத்திற்கு எதிரான குரல் உக்கிரத்தோடு எழுந்தது. புகலிடச் சூழலில் தலித்தியம் குறித்த சிந்தனைகள் எழுந்தபோது தமிழ்த் தேசியவாதிகள் போலவோ வைதீக மார்க்ஸியர்கள் போலவோ தூய இலக்கியவாதிகள் போலவோ அவர் தலித்தியச் சிந்தனைகளை எதிர்த்தாரில்லை. மாறாகத் தலித் சிந்தனை மரபில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார். ‘கறுப்பு’த் தொகுப்பு நூலில் அவர் எழுதிய ‘புகலிடத்தில் சாதியம், இந்துமதம்’ என்ற கட்டுரை மிகவும் முக்கியமானது. அவ்வாறே பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனைகளைக் குறித்தும் அவர் காழ்ப்புணர்வின்றி விவாதித்தார். 1999ல் தோழர் அ. மார்க்ஸை அழைத்து நாங்கள் பாரிஸில் நடத்திய ‘பின்நவீனத்துவமும் மார்க்ஸியமும்’ என்ற கருத்தரங்கை அவர்தான் முன்னின்று நடத்தினார்.

‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூல் வெளிவந்தபோது அதைப் புலிகளையும் முந்திக்கொண்டு புஸ்பராஜாவின் தோழர்களே கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் தங்களையும் நூலில் புஸ்பராஜா விமர்சித்திருந்ததால் சுருங்கிப் போனார்கள். தங்கள் தரப்பு நியாயங்களையும் வாதங்களையும் சொல்லும் அவசரத்தில் அவர்கள் அந்த நூலின் வரலாற்று முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டார்கள். இலங்கைப் பேரினவாத அரசுகளாலும் இந்திய அமைதிப் படையினராலும் புலிகளினாலும் மற்றைய ஆயுதந் தாங்கிய இயக்கங்களாலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் முற்றாகத் தொகுத்துத் தமிழில் முதலாவதாக எழுதப்பட்ட ஓர் வரலாற்று ஆவணம் என்ற மதிப்பைக்கூட அவர்கள் அந்த நூலுக்கு வழங்கத் தயாராகயிருக்கவில்லை. ஒரு கட்டத்தில் புஸ்பராஜாவின் நூல் ஒரு புனைவு, ஒரு நாவல் என்றளவிற்கெல்லாம் சேறு வீசப்பட்டது. அந்த நூல் வெளிவந்த தருணத்திருந்து அந்த நூலை உறுதியாக ஆதரித்து நிற்பவர்களில் நானும் ஒருவன். சென்னையில் ‘சுயமரியாதை இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த விமர்சனக் கூட்டத்தில் அந்நூலின் இன்றியமையாத முக்கியத்துவத்தைக் குறித்து நான் பேசினேன். அந்தப் பேச்சை அடியொற்றி ‘அநிச்ச’ இதழிலும் ஓர் கட்டுரையை எழுதியிருந்தேன். அந்த நூலைக் குறித்து ‘இது ஒரு ஆய்வு நூலல்ல. ஆய்வாளர்களுக்கெல்லாம் பயன்படப்போகிற ஒரு முதன்மை ஆவணம். ஒரு போராளியின் நேரடிச் சாட்சியம். வரலாறுகள் எழுதப்படும்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் சாத்தியம், கோணங்களுக்கு ஏற்ப வரலாறுகளும் வேறுபடும். அவைகளில் இதுவும் ஒன்று’. என அடையாளம் பதிப்பகத்தார் எழுதிய வார்த்தைகள் சத்தியமான வார்த்தைகள்.

புஸ்பராஜா தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவர். தமிழீழ விடுதலை இயக்கத்தை (TLO) நிறுவிய தலைவர்களில் ஒருவர். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரஞ்சுக் கிளையின் முதலாவது பிரதிநிதி. அந்தத் தலைமைப் பண்பும் செயற்திறனும் ஆளுமையும் அவருடன் எப்போதுமிருந்தன. ஒரு கருத்தரங்கத்தை வடிவமைத்து நடத்துவதிலோ இலக்கியச் சந்திப்புச் செயற்பாடுகளிலோ புஸ்பராஜா மிகுந்த ஆளுமையுடன் திகழ்ந்தார். 2002ல் புலிகள் ஆதரவுத் தமிழ்த் தேசியவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இடையேயும் அவர் பாரிஸின் மையப்பகுதியில் பெரும் கூட்டத்தைத் திரட்டி மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தையும் அழைத்து ‘அமிர்தலிங்கம் பவளவிழா’வை நடத்திக்காட்டினார். தன்னுடைய அரசியற் கருத்துக்களில் உறுதிகாட்டும் அதேவேளையில் சகல சனநாயகத் தரப்புகளையும் மறுத்தோடிகளையும் அணைத்துப் போகும் பக்குவமும் மிரட்டல்களுக்கும் சலசலப்புகளுக்கும் கொஞ்சமும் அஞ்சாத நிதானமும் புஸ்பராஜாவிடம் இருந்தன.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலின் முன்னுரையில் புஸ்பராஜா இப்படி எழுதினார்:

‘நான் எந்த விடயத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மௌனியாக இருக்க விரும்பவில்லை. மௌனியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் கூறுவதுதான் சரியானது என்ற பிடிவாதமும் என்னிடமில்லை. இவர்களுடன்தான் பேசுவேன் இவர்களுடன்தான் உறவு கொள்வேன் என்ற இறுமாப்பும் என்னிடமில்லை. துப்பாக்கி இல்லாத யாருடனும் நான் எப்போதும் பேசத் தயாராக உள்ளேன். நான் ஈழத்தை நேசிப்பவன். ஈழத்தை நேசிக்கும் மற்றொவருக்கு அல்லது பலருக்கு எனது கருத்தின் மீது, நடைமுறையின் மீது உடன்பாடில்லாமல் இருக்கலாம். அதை நாங்கள் பேசித் தீர்க்கலாம். இடையில் துப்பாக்கிக்கு என்ன வேலை?’

தோழர் புஸ்பராஜா போன்றதொரு ஆளுமையின் முடிவு ஈழத்தில் சனநாயகத்தையும் அமைதியையும் வேண்டி நிற்பவர்களுக்கும் புகலிட இலக்கியச் சூழலுக்கும் ஒரு பேரிழப்பு என்பதை எங்களால் இந்த ஒருவருட காலத்திற்குள்ளாகவே தீர உணர முடிகிறது. புகலிடத்தில் மாற்றுக் கருத்தாளர்களிடையேயும் இலக்கியவாதிகளிடையேயும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேகமான கருத்து மாற்றங்களையும் தெளிவான அணிக்குவிப்புகளையும் இயக்க மீட்புவாதங்களையும் உற்றுக் கவனிக்கும்போது பிரான்ஸில் தோழர் புஸ்பராஜாவின் இடம் இனிக் காலாதி காலத்திற்கும் வெற்றிடமாகவேயிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

நான் ஒரு வாய்விடாச் சாதி. எனக்கு இலக்கியச் சூழலிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி அச்சுறுத்தல்களும் பதற்றங்களும் தோன்றும்போது அதை மவுனமாக மனதுக்குள் புதைத்துவைத்து மறுகிக்கொண்டேயிருப்பேன். பதற்றமும் துயரமும் என் கட்டுப்பாட்டை மீறும்போது அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் அபயம் கோருவதற்கும் எனக்கு எனது ஓரிரு இலக்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருமில்லை. அவர்களில் மூத்தவரை நான் இழந்து நிற்கின்றேன்.

2

senthil

கடந்த மாதம் இருபத்தெட்டாம் தேதி பிரான்ஸிலிருந்து லண்டனுக்குக் காரில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் தோழர்.செந்தில் என்ற ரவீந்திரநாதன் செந்தில்ரவி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்றிருந்த தோழர்.செழியன் படுகாயமடைந்தார். செழியனின் ஒரு கையும் காலும் செயலற்றுப் போய்விட்டன என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

1994ல் பிரான்ஸில் நடந்துகொண்டிருந்த புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் வகுப்புகளிற்கு செந்திலும் செழியனும் வரத் தொடங்கினார்கள். அப்போது செந்திலுக்கு இருபத்தைந்து வயது, செழியன் அவரைவிடவும் மூன்று வயதுகள் குறைவானவர். இருவரும் வன்னியிலுள்ள மல்லாவிக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் உறவினர்களுங்கூட.

அடுத்த வருடம் பிராங்போர்ட்டில் கட்சியின் கோடைகால முகாம் நடந்தபோது நானும் செந்திலும் செழியனும் பதினைந்து நாட்கள் முகாமில் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருந்தோம். கட்சிக்குப் புதியவர்களான நாங்கள் உலகம் முழுவதுமிருந்து வந்து அங்கு கூடியிருந்த ட்ரொஸ்கிஸ்டுகளைக் கண்டு அளவிடமுடியாத பரவசத்தில் திளைத்தோம். பெரும் ட்ரொஸ்கிய அறிஞர்களான பீற்றர் ஸ்வாட்ஸ், நிக் பீம்ஸ் போன்றவர்களின் வகுப்புகளில் கலந்துகொண்ட பின்பு மூவரும் பேயடித்தது போல எழுந்து நடந்து ஒன்றாகவே படுக்கைக்குச் செல்வோம். படுக்கைகளில் அமர்ந்திருந்த போது செந்திலின் தலையின் பின்னால் ஓர் ஒளிவட்டம் தோன்றி மறைவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது என் தலையின் பின்னாலும் ஓர் ஒளிவட்டம் சுற்றுவதாகச் செந்தில் சொன்னர். நாங்கள் இருவருமே செழியனின் தலைக்குப் பின்னாலும் ஓர் ஒளிவட்டம் மின்னி மறைவதைக் கண்டோம்.

நாங்கள் படுக்கைகளில் கிடந்த பின்னிரவொன்றில் செந்தில் தன்னுடைய பதின்மவயதுகளில் ஈழப் புரட்சி அமைப்பில்(EROS) தான் வேலைசெய்த அனுபவங்களை எனக்குச் சொன்னார். தான் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு துப்பாக்கியை வன்னிக்குக் கடத்திச் செல்லப் பட்டபாடுகளை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையிடையே கெக்கட்டமிட்டுச் சிரித்துக்கொண்டுமிருந்தார். கட்சியில் தொடங்கிய எங்களின் நட்பு விரைவிலேயே நானும் செழியனும் ஒரே அறையில் வசிக்குமளவிற்கு வளர்ந்தது.

1995லிருந்து மூன்று வருடங்கள் Paris-10ல் அமைந்திருந்த எங்களது சிறிய அறையில்தான் கட்சியின் பெரும்பாலான அரசியல் வகுப்புகளும் விவாதங்களும் நடந்தன. அரசியல் வகுப்புகளைத் தோழர் ஸ்டீவ் நடத்துவார். தோழர்கள் ஞானா அல்லது கண்ணன் வகுப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருவார்கள்.

அரசியல் வகுப்பென்றால் பால்கன் உடைவு, இடைமருவு வேலைத்திட்டம், சர்வதேச முன்னோக்கு, பப்லோயிஸம் என்று நாட்கணக்கில் போகும். கட்சியின் மொழிநடையே கொஞ்சம் திருகலாயிருக்கும். இதில் மொழிபெயர்ப்பு வேறு. நான் சிறிது சிறிதாக வகுப்புகளில் ஆர்வம் இழக்கத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் மனது வகுப்பிலிருந்து விலகி ‘அங்கே அரசாங்கம் நவாலியில் குண்டு போடுகிறது, புலி முஸ்லீம்களைச் சுட்டுக்கொண்டிருக்கிறான் இவர்களென்ன பொஸ்னியாவில் டிட்டோயிஸம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று எனக்கு மூளை காயத் தொடங்கிவிடும். திடீரெனக் “கொம்ரேட் அந்தோனி பிரெட்டன்வூட்ஸ் அமைப்பின் வீழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறார்?” என்ற தோழர் ஸ்டீவின் குரலைக்கேட்டு நான் திடுக்குற்று கண்களைச் சுழற்றிச் சுற்றுமுற்றும் பார்ப்பேன். செழியனும் செந்திலும் கருமமே கண்ணாகக் குறிப்புகளைத் தாள்களில் எழுதிக்கொண்டேயிருப்பார்கள்.

1994 ஒக்ரோபரில் புலிகள், அன்றைய சிறிலங்கா அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்துப் புலிகள் இயக்கத்தால் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் நாங்கள் புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகத்தின் பத்திரிகையான ‘தொழிலாளர் பாதையை’ விற்றுக்கொண்டிருந்தபோது புலிக் குண்டர்கள் எமது கைகளிலிருந்த பத்திரிகைகளையும் வெளியீடுகளையும் பறித்துக் கிழித்தெறிந்தார்கள். தோழர் ஞானா முகத்தில் தாக்கப்பட்டார். 1996 மார்ச் மாதம் செழியனும் இன்னும் மூன்று தோழர்களும் ‘லா சப்பல்’ கடைத்தெருவில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்தபோது புலிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். தோழர்கள் ஞானாவும் சந்திரனும் இரத்தக் காயங்களுக்கு உள்ளானார்கள். அந்தக் காலம் முழுவதும் நாங்கள் தொழிலாளர் பாதை விற்கச் செல்லும் இடங்களிலெல்லாம் புலிகளால் மிரட்டப்பட்டோம்.

இத்தொடர் சம்பவங்களால் செழியன் மன அழுத்தத்துக்கு ஆளானார். ஒரு நள்ளிரவில் அவர் தூக்கத்திலிருந்து எழுந்திருந்து பிதற்றத் தொடங்கினார். அவரது பேச்சு முழுவதும் ஆங்கிலத்திலும் பிரஞ்சிலுமே இருந்தன. “நான்தான் ட்ரொட்ஸ்கி, சைபீரியாவில் என் கைகளிலும் கால்களிலும் பூட்டப்பட்ட விலங்குகளுடன் நான் பேசுகிறேன். நாங்கள்தான் உலகப் புரட்சியை செய்து முடிக்கப் போகிறவர்கள்!” என்று விடியும்வரை அவர் அனர்த்திக்கொண்டேயிருந்தார். விடிந்ததும் தோழர் ஞானாவும் நானும் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அப்போது சற்றுத் தெளிந்திருந்த செழியன் தனக்கு அச்சத்தைப் போக்கும் மாத்திரைகளைக் கொடுக்குமாறு மருத்துவரைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்.

நான் கட்சியுடனான தொடர்புகளைத் துண்டித்த பின்பு என்னுடனான தொடர்பை செந்திலும் செழியனும் பெருமளவில் குறைத்துக்கொண்டார்கள். அவர்களைப் பொறுத்தளவில் கொள்கைக்கு அப்பால் உறவுகள் ஏதுமில்லை. அவர்களுக்குக் கட்சிக்கு முன்னால் நட்பு தூசுக்குச் சமானம். இளைஞர்களுக்கு உரிய கேளிக்கை மனநிலையோ குழப்படிகளோ அவர்களிடம் கிடையாது. பிரான்ஸில் கட்சியில் பத்துப் பேர்கள் கூட இல்லாத நிலையிலும் ஒரு பெரும் இரகசியச் சங்கத்தின் உறுப்பினர்கள் போலவே அவர்களின் அளவெடுத்த பேச்சுக்களும் கட்டுப்பாடான நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.

சில வருடங்களுக்கு முன்பு செந்தில் தனது துணைவி செல்வியுடனும் குழந்தையுடனும் லண்டனில் குடியேறிவிட்டார். அவர் சிலமாதங்களிற்கு ஒரு தடவை தனது குடும்பத்தினருடன் செல்வியின் தாயாரைப் பார்க்கப் பிரான்சுக்கு வருவார். செல்வியின் தாயார் நான் குடியிருக்கும் கட்டடத் தொகுதியில்தான் வசிக்கிறார். எப்போதாவது கட்டடத் தொகுதியின் கீழே திடுக்கடி மடக்காக நானும் செந்திலும் சந்தித்துக் கொள்வோம். செந்திலுடன் செழியனும் எப்போதுமிருப்பார். என்னுடனான அவர்களது உரையாடல் நூற்றுக்கு நூறு வீதம் இறுக்கமான அரசியல் சார்ந்ததாகவேயிருக்கும். என்னுடைய கருத்துக்கள் எல்லாம் அவர்களிற்கு நகைப்புக்குரியதாகவே இருக்கும். இந்த விசயத்திலெல்லாம் அவர்கள் ஈன இரக்கமே பார்க்கமாட்டார்கள்.

ஒருமுறை என்னிடமிருந்து அவர்கள் ‘மூலதனம்’ தமிழ் மொழிபெயர்ப்பின் முதலாம் பாகத்தை இரவலாக வாங்கிச் சென்றார்கள். சில மாதங்களின் பின்பு நான் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டபோது “மூலதனத்தை கார்ல் மார்க்ஸ் எங்களுக்காகத்தான் எழுதினார், அது உங்களுக்குத் தேவைப்படாது” என்று சொல்லிவிட்டார்கள். அவர்களின் மூர்க்கத்தனமான பதிலடிகளைத் தாங்க முடியாமல் இப்போது கொஞ்சக் காலமாகவே அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நானாகவே முந்திக்கொண்டு நான் அரசியலிலிருந்தே ஒதுங்கிவிட்டேன் என்று அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன். அவர்களுக்கு மார்க்ஸிய நூல்களையும் கட்சி வெளியீடுகளையும் தவிர மற்றவற்றைப் படிக்கும் பழக்கம் அறவே இல்லாததால் நான் பரவலாக எழுதிக்கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது.

பொதுவாகவே விவாதங்களில் சண்டையை வலித்துக்கொண்டுநிற்கும் நான் செந்திலுடனோ செழியனுடனோ ஒருபோதும் சண்டையிட்டதில்லை. அவர்கள் என்னை நியாயமற்ற முறைகளில் அவமதித்தபோதும் எனக்கு அவர்களில் கோபமே வந்ததில்லை. ஒரு அடக்கமான புன்னகையுடன் நான் அவர்களை எதிர்கொண்டேன். இப்போது நிதானிக்கும் போது தெரிகிறது,கட்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பும் அவர்களின் கடின உழைப்பும் அவர்கள் மீதான எனது மதிப்புக்கும் அன்புக்கும் சில தடவைகள் நான் அவர்களுக்கு அடிபணிந்ததிற்கும் காரணங்களாகின்றன.

தோழர். செந்திலுக்கு எனது இறுதி வணக்கங்களைச் செவ்வணக்கங்களாகச் சொல்ல என் மனம் அவாவுகின்றது. ஆனால் எனக்குத் தெரியும் செந்தில் இப்போதுகூட அவரின் இந்த முன்னாள் தோழனின் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

3

செந்தில் இறந்துபோய்ச் சரியாக இரண்டு நாட்கள் கழித்து எனது நீண்டகால நண்பனான ராஜேஸ் என்ற உருத்திரகுமார் நோய்வாய்ப்பட்டுத் தமிழ்நாட்டில் இறந்து போனார். உருத்திரன் எனது அல்லைப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர். என்னிலும்விட அய்ந்து வயதுகள் மூத்தவர். லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி பெற்ற போராளிகளில் ஒருவர். 1986வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில்( PLOTE ) இயங்கியவர்.

நான் ஆறாவது வகுப்பில் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் சேர்ந்தபோது உருத்திரன் அங்கே பதினோராவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அங்கே அவர் ஒரு ஹீரோவாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். பாடசாலைக் காலத்தில் அவர் இயக்கி நடித்த நாடகங்கள் புகழ்பெற்றவை. அந்தப் பதின்ம வயதுகளிலேயே அவர் அனல் பறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அப்போது அவர் கம்பன் கழகப் பேச்சாளர்களில் ஒருவர். உருத்திரன் மாவட்ட அளவில் முதன்மையான ஓட்டப் பந்தய வீரர். அக்காலத்தில் 100 மீற்றர், 200 மீற்றர், 800 மீற்றர் ஓட்டங்களில் அவரையடிக்கத் தீவுப்பகுதியில் ஆளே கிடையாது. பாடசாலையின் உதைபந்தாட்ட அணியிலும் அவரே முக்கியமான வீரராக இருந்தார். இயற்கையிலேயே வாட்டசாட்டமான உருத்திரன் தனது உடற்பயிற்சிகளால் ஒரு மல்யுத்த வீரனைப்போன்ற தோற்றமும் வாய்க்கப் பெற்றிருந்தார்.

உருத்திரனுக்கு நான் எப்போதும் ஒரு செல்லப்பிள்ளையாகவே இருந்தேன். அவர் என்னைத் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் முழுவதும் தான் பேசும் பட்டி மன்றங்களுக்கும் கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்வார். அவர் பங்கு பெறும் ஓட்டப்பந்தயங்களில் அவரது உதவியாளன் நானே. அவரின் மாற்றுடைகளை வைத்திருப்பது, குளுகோஸ் கொடுப்பதிலிருந்து அவர் வென்றெடுக்கும் கோப்பையைச் சுமந்து வருவது வரைக்கும் எனக்கு உவப்பான விடயங்கள். ஆனால் உருத்திரன் தோற்கும் நிலை ஏற்பட்டால் பட்டி மன்றத்தையோ விளையாட்டுப் போட்டியையோ ஏதாவது ஒரு வழியில் அவர் குழப்பியே தீருவார். அவரிடம் அவரின் திறமைகளுக்கு நிகராகத் திமிருமிருந்தது. லைட்டான சண்டித்தனமுமிருந்தது.

அவர் யாழ் இந்துக் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்பில் சேர்ந்த பின்னும்கூட எனதும் உருத்திரனதும் நட்புத் தொடந்துகொண்டேயிருந்தது. நானும் உருத்திரனும் கட்டை ராசுவும் இரவிரவாகக் கிராமத்தின் மணற் திட்டிகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டேயிருப்போம். பாடல்கள், நாடகம், திரைப்படம், பெட்டைகள் என அலைந்துகொண்டிருந்த எங்களின் பேச்சு யூலைக் கலவரத்தைத் தொடர்ந்து ஒரு தீர்க்கமான திசையில் செல்லலாயிற்று. 1983 தீபாவளி தினத்தன்று இரவு யாழ் பஸ் நிலையத்தில் உருத்திரனும் கட்டை ராசும் என்னிடம் விடைபெற்றுச் சென்றனர்.

1986ல் மீண்டும் உருத்திரனும் நானும் சந்திக்கும்போது இருவரும் வெவ்வேறு இயக்கங்களில் இருந்தோம். எனது இயக்கத்திற்கும் அவரின் இயக்கத்திற்குமிடையே வரலாற்றுரீதியான பெரும் பகையிருந்தது. எங்களின் அத்தனை கால நட்பையும் மீறி, இப்போது ஒருவர்மீது மற்றவருக்கு எப்போதுமே சந்தேகமும் எச்சரிக்கையுணர்வும் இருப்பதை நாங்கள் இருவருமே உணர்ந்துகொண்டோம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த மனத் தடைகள் நம்மிருவரையும் அறியாமலேயே நெகிழ்ந்துபோயின. அத் தருணங்களில் நாங்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தோம். ஒன்றாகச் சூழ் கொழுத்தி மீன்பிடிக்கச் சென்றோம். இந்த விதிகளுக்கு மீறிய கூட்டுக்காக அவரின் இயக்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கூட்டுக்காகப் பின்னொரு நாளில் எங்களது முகாமொன்றில் என்னை அடிபின்னி எடுத்துவிட்டார்கள்.

நீண்ட பல வருடங்களிற்குப் பின்பு 1999ல் மீண்டும் நான் உருத்திரனை சென்னையில் சந்தித்தேன். அவர் கிண்டியில் ஒரு தொலைத் தொடர்பு நிலையத்தை நடத்திக்கொண்டு வெளிநாட்டுப் பயண முகவராகவும் இயங்கிக்கொண்டிருந்தார். அவரின் தொலைத்தொடர்பு நிலையத்தில் வைத்து நானும் உருத்திரனும் முதலாவதாகவும் கடைசியாகவும் சேர்ந்து குடித்தோம். அதற்குப் பின்பும் சில தடவைகள் நான் சென்னை சென்றிருந்தபோதும் உருத்திரனைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஏனோ அமையவில்லை.

இந்த வருடம் ஜனவரியில் நான் சென்னைக்குச் சென்றிருந்தபோது ஒரு நண்பரின் தாயாரின் இறுதிச் சடங்குகளிற்காகப் பெசன்ட் நகர் மயானத்திற்குச் சென்றிருந்தேன். இறந்துபோன பெண்மணி உருத்திரனின் நெருங்கிய உறவினர். மயானத்தில் வந்து நின்ற ஒரு வாகனத்திலிருந்து இறங்கிய ஒரு வாட்டசாட்டமான இளைஞன் வாகனத்திலிருந்து ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல உருத்திரனைக் கைகளில் வாரியெடுத்துச் சக்கரநாற்காலியில் அமரவைத்தான். அந்த ‘மல்லாமலை’ உருத்திரன் ஒரு அடிபட்ட கிழட்டுப் பறவையைப்போல சக்கரநாற்காலியில் துவண்டு கிடந்தார். எட்டு வருடங்களிற்குப் பின்பு என்னைக் கண்டபோதும் முதற் பார்வையிலேயே அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அந்தப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரனின் கால்களும் கைகளும் சூம்பிப்போய்க் கிடந்தன. அவரின் இரு கண்களும் முற்றாக மஞ்சள் படர்ந்துபோய்ப் பூனையின் கண்களைப்போல் கிடந்தன. அவரின் நாவு தடுமாறிக் கொண்டிருந்தது.

அவர் அங்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து திரும்பவும் தூக்கிச் செல்லப்படும்வரை அவர் என்னுடன் பேசிக்கொண்டேயிருந்தார். நான் அவரது சக்கரநாற்காலியைப் பற்றியவாறே நின்றிருந்தேன். அவர் துண்டு துண்டாகப் பழைய கதைகளைப் பேசிக்கொண்டேயிருந்தார். நானும் பேசவேண்டும் என்று அவர் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. ஒன்றையும் மிச்சம் வைக்காமல் பேசித் தீர்த்துவிட வேண்டும் என்ற அவாவில் அவர் பேசுவதாகத் தோன்றியது.

அவர் பேசப்பேச நான் ‘ம்’ கொட்டியவாறே நின்றிருந்தேன். அப்போது என் மனம் ‘உருத்திரன் விரைவிலேயே இறந்துவிடுவார்’ என்று சொல்லியவாறேயிருந்தது. ஏனெனில் தோற்கும்போது விளையாட்டைக் குழப்புவது உருத்திரனின் இயல்பு.

24 comments to சாயும் காலம் - ஷோபாசக்தி

  • varathan

    ஒருவா; மறையும்போது அவாpன் நல்லபக்கங்கங்களைமட்டுமே இரைமீட்பது ஓர் நல்பண்பாகவே கருதுகிறேன். அது சோபாசக்தியிடமும் இருக்கிறது. நன்றி சோபாசக்தி

  • paran

    முரண்பட்ட கருத்தியலை கொண்டவர்கள்
    ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடுவதே பிழை!
    உன் கருத்தோடு உடன் பட்டவனோடு மட்டும் நட்பு வை!
    உன் கருத்தோடு சற்றேனும் அவன் விலகி இருந்தால்
    அவன் வேண்டப்படாதவன்! ….. தீண்டப்படாதவன்….
    அவனையும் உன்னையும் ஏதாவது ஒரு புள்ளி இணைத்து விட்டால் நீ புலி!
    இதுதான் இன்றைய மாற்றுச்சிந்தனை!
    இதுதானாம் பன்மைத்துவம்!
    இதுதானாம் ஐனநாயகம்!
    இது வெல்லுமாம்!
    சோபா சக்தியின் நட்புகளும் உறவுகளும்
    பன்மைத்துவ சிந’தனையோடு இருப்பது
    வரவேற்கத்தக்கது!

    எல்லோரும் இதை அங்கீகரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!

  • Kanna

    I would like to thank you, because most of the time you pointing out the fogotten submissive persons in this so call freedom fights. Thank You
    Kanna

  • ரகு

    //..ஒருவா; மறையும்போது அவாப்ன் நல்லபக்கங்கங்களைமட்டுமே இரைமீட்பது ஓர் நல்பண்பாகவே கருதுகிறேன். …//

    வரதன்,
    நல்ல ஜோக்!
    செய்வதை எல்லாம் செய்து விட்டு செத்ததற்குப்பிறகு எல்லோரும் புகழ வேண்டுமாம் அது நல்ல பண்பு வேறாம்.
    இந்த பம்மாத்தெல்லாம் எங்களுக்கு நால்லாக விளங்கும். எதிர்க்கருத்து வந்துவிடுமென்று வருமுன் காக்கும் பின்னூட்டம் விடுகிறீர்களோ???

    புஷ்பராஜாவின் ‘சாட்சியம்’ பற்றி எவ்வளவு ‘நசல்’ விமர்சனம் வந்ததென்றும் எங்களுக்குத்தெரியும். அதுமட்டுமல்ல இந்தியாக்கப்பலில் ஸ்பெசல் பெர்மிசனில் திருகோணமலை போய் ஈ.பி.ஆர்.எல்ஃ உடன் ஜீப்பில் வலம் வந்து பக்கத்து அறையில் அழுகுரல் கேட்டபின்பும் ‘மனச்சாட்சியுடன்’ இரவு சாப்பிட்டு முடித்தவர் அவர். அப்போது தனது ஊரை போய்ப்பார்க்க சிந்தனை இல்லை. சாகப்போகிறோம் என்றவுடன் வடலிக்குள் இருந்து கள்ளுக்குடிக்க ‘சுடலை ஞானம்’ வந்த, மண்ணை நேசித்த மைந்தன்!!!! குமுதக்காரன் கேட்டுவிட்டான் என்று உணர்ச்சிவப்பட்டு ‘கூட்டணி’த்தனமாக சொல்லிப்போட்டார் போல இருக்கு!
    ஓ, இன்னுமொன்று சொல்லவேண்டும். விடிந்து கோழிகூவமுன் ஆயுதத்துடன் எதிரிகளைத் தேடி அலைந்தவர் இவர். புலி செய்தபோதெல்லாம் ‘புலி யாரைத்தான் விட்டது’ எண்றும் தாங்கள் செய்தபோது வெறும் ‘போராளிகள்’ செய்தார்கள் என்று சாட்சியம் கூறியவர்.
    எழுதிக்கொண்டே போகலாம்!!!!!!
    புலிவால், மனிதநேயம் அது இது எண்று ஒப்பாரி வைப்பார்கள்!!!

  • சோபா சக்திக்கு…
    உங்களுடைய நளினமான எழுத்துக்கள் மூலம் எங்கள் எல்லோரையும் கவர்ந்து விடுகறீர்கள். இயல்பாகவே வாசிப்பின் மிருதுவான பக்கங்களோடு எம்மை இருத்தி கூடவே இழுத்துச் செல்லும் உங்களது பாங்கு குறித்து நாம் எப்போதும் பெருமைப்படுவதுண்டு.இது எல்லோருக்கும் கைவராது. எங்களில் அநேகர் கூட இருக்கும் நண்பர்கள் இறந்தவுடன் அவர்கள் குறித்த எந்தப்பதிவையும் எழுதமாட்டார்கள். இறந்தவர்கள் இனிமேல் தேவைப்படமாட்டர்கள் என்பதில் தெளிவாய் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அப்படியில்லை. அனைத்து நண்பர்களையும் மனதில் வைத்து எழுதிவருகிறீர்கள். பள்ளி நண்பன் தொடக்கம் பயிற்சி பட்டறை நண்பன் வரை ஞாபகம் கொள்கிறீர்கள். அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுடன் நீங்கள் முரண்பட்ட விடையங்கள் அவர்கள் உங்களுடன் முரண்பட்ட விடையங்கள் எதையும் எழுதாமல் மிகக் கெளரவமளித்து இறந்தவர்களுக்குரிய மரியாதை செலுத்தும் உங்கள் குணம் பாராட்டத்தக்கது.இறந்தவர்கள் எதையும் திரும்பி எழுதப்போவதில்லை என்பது உங்களுக்குத் தெர்யும்தானே. அவர்கள் சார்பில்நாங்களாவது சில விடையங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் .அதற்கான சந்தர்ப்பத்தைத் தந்துதவ வேண்டும். என்ன சிக்கலென்றால் நாங்கள் சொல்லப்போக உவங்கள் சும்மா உப்பிடித்தான் சும்மா சும்மா சண்டைபிடிப்பாங்கள் என்று கொஞ்சப்பேர் காய் நகர்த்துவாங்கள். நாம என்ன செய்ய முடியும்?

  • Mosses

    “இலங்கைப் பேரினவாத அரசுகளாலும் இந்திய அமைதிப் படையினராலும் புலிகளினாலும் மற்றைய ஆயுதந் தாங்கிய இயக்கங்களாலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் முற்றாகத் தொகுத்துத் தமிழில் முதலாவதாக எழுதப்பட்ட ஓர் வரலாற்று ஆவணம்” புஸ்பராஜா மறைந்த புண் ஆற முன்பே இந்த ஆவணத்தை பற்றிய நீங்கள் பிரசுரித்த உங்கள் பாணியிலான மிக நீண்ட வசைபாடலை விட அவர் வாழும் போதே அவரது இரண்டாவது பதிப்பை திருத்தி வெளியிடுவதற்கு வகை செய்த விமர்சனங்கள் உங்களுக்கு சேறு வீசலே தவிர வரலாற்று தேவைக்கு தேவையானவையே.

  • thevan

    புஸபராஜா பற்றி என்னிடம் என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. கூட்டணிக்காரா; பிறகு ஈபிக்காரா; என்றும் காரணம் இருக்கலாம். ஆனால் சோபசக்தியின் எழுத்துக்குப்பிறகு புஸ்பராசாவிடம் இப்படியெல்லாம் உயா;ந்த பக்கங்கங்கள் இருக்கினற்னவா என்ற ஆச்சாpயப்படமுடிகிறது. யாரையும் நாங்கள் எழுந்த மானத்துக்கு குறிசுடமுடியாதுதான்.

  • Seelan

    செந்தில், செழியன் இருவரும் சந்தித்த விபத்து மிகக்கொடுமையானது.
    தன்மோகம் இல்லாத இரண்டு வலிய சீவன்கள்.
    மனசை உறுத்துகிறது.

    நிலவுக்கஞ்சி பரதேசம் போக பாரிசில் யமன் மோட்டார் வாகனத்தில் வந்திருக்கிறான். இதயத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற என் அனுதாபங்கள் இருவரினதும் குடும்பத்திற்காக.

    சர்ப்பம் தீண்டி இறப்பவர்களை விட சாலைகளில் வாகன விபத்துக்களில் சாகிறவர்கள் பல மடங்கு அதிகம் எனினும் இன்றைக்கும் எமக்கு பாம்பைக்கண்டால் தொடை நடுங்குகிறதே தவிர வாகனங்களைக் கண்டு அல்ல.

    புலிப்பாஸிச யுகத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை.

    - சீலன்

     

  • ரகு

    //புலிப்பாஸிச யுகத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை.

    - சீலன்/

    //

    தொழிலாளர்களுக்கான சம்பளத்த்தையோ உரிமையையோ கேட்டால் ‘முற்பிறப்பில பாவம் செய்தவன் உழலத்தான் வேண்டும்’ என்றும் ‘கலியுகத்தில் நல்லவர்களுக்குக் காலமில்லை” என்றும் இப்படித்தான் பஞ்சமர்பற்றி யாழ் சாதீய/சைவக்காரர்கள் காரணம் கற்பிப்பார்கள்,கதை விடுவார்கள்

    சீலன், நீங்கள் எப்போது யாழ்ப்பாண குட்டிமுதலாழித்துவ, சாதீயவன்முறை, தொழிலாளர் அடக்குமுறை , கூட்டணி அரசியல்வாதியாக மாற்றம் பெற்றீர்கள்????

  • Thakshan

    உண்மை பலருக்கு சுடத்தான் செய்யுது. பரவாயில்லை. சுடுற அளவுக்கு தோலாவது உணர்ச்சியோட இருக்கேயெண்டு ஆச்சரியப்படுவோம். அமரர் புஸ்பராஜா இந்தளவுக்காவது சாட்சியங்களை துணிந்து முன் வைத்தார். சிலர் சாட்சியங்களையும் இருக்கவிடக்கூடாதென்பதில் எவ்வளவு அக்கறையாயிருக்கினம். போராட்டத்தின் ஏகபோகிகள் சேடம் இழுக்கினம்போல தெரியுது. எல்லா புதைகுழிகளிலுமிருந்து எழும்பி ஒருமுறை காறித்துப்பினால்போதும் அமிழ்தே மூச்சுத்திணறி செத்துப்போடுயிடுவார் ‘பங்கர் சாமி’. உயிரின் பெறுமதி ஒரு தோட்டாவின் விலை தான் என்ற அளவுக்கு மட்டுமே சிந்திக்க தெரிந்தவர்கள் ‘விடுதலை’ வாங்கி தர போகினம். இன்னும் நம்புவோம். அவையின்ர சமன்பாடுகளையும் தேற்றங்களையும் விதிகளையும் வைத்து எந்தக் கணக்கை போட்டுப்பார்த்தாலும் பூச்சியம் தான் விடையாய் வருது.

  • ரகு

    ///. அமரர் புஸ்பராஜா இந்தளவுக்காவது சாட்சியங்களை துணிந்து முன் வைத்தார்….//
    அதில் முக்கால்வாசிக்கு மேல் ஊகங்கள் தான். எஞ்சியிருந்த ‘சாட்சியங்கள்’ கூட பலரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டவை தான்.

    //…. போராட்டத்தின் ஏகபோகிகள் சேடம் இழுக்கினம்போல தெரியுது. …///
    சத்தம் போட்டுச் சொல்லாதையுங்கோ. ‘பெருமாள்’ சாமி பொட்டுவைச்சு மாலை போடப்போயிடப்போறார் !!!

    //..எல்லா புதைகுழிகளிலுமிருந்து எழும்பி ஒருமுறை காறித்துப்பினால்போதும் …///

    ஏன் புதைகுழியிலிருந்து எழும்ப வேணும். உயிரோட இருக்கிறதுகள் துப்பிக்கொண்டுதான் இருக்குதுகள். என்ன பிரச்சனை எண்டால் துப்பிற எச்சில் அதுகளுக்கு மேலயே வந்து விழுது!!!

    //… அவையின்ர சமன்பாடுகளையும் தேற்றங்களையும் விதிகளையும் வைத்து எந்தக் கணக்கை போட்டுப்பார்த்தாலும் பூச்சியம் தான் விடையாய் வருது. …///

    உண்மைதான், சோசலிசம், பூர்சுவா, போல்ஸ்விக், மென்ஸ்விக், மாற்றுக்கருத்து, மக்கள்போராட்டம், இந்திய மேலாதிக்கம், ஆளும்வர்க்கம், சிங்கள பாட்டாளி வர்க்கம், ஐ.பி.கே.எஃ, குட்டிமுதலாளி, உலகத்தொழிலாளர்கள்……நீண்டுகொண்டே போகும். கடைச்சியில் பூச்சியம் தான் விடையாய் வந்தது!!!!

  • ரகு

    வரதன்,

    /..ஒருவா; மறையும்போது அவாப்ன் நல்லபக்கங்கங்களைமட்டுமே இரைமீட்பது ஓர் நல்பண்பாகவே கருதுகிறேன். அது சோபாசக்தியிடமும் இருக்கிறது…/

    நீங்கள் சோபாசக்தியின் கே.எஸ்.ராஜா பற்றிய பதிவையும் படித்து விட்டு எழுதியிருக்கலாம்!

    ” மதுரக்குரல் மன்னன்”
    http://www.satiyakadatasi.com/?p=69

  • uruthiran

    நண்பா; ரகுவும் சேடமிழுக்கிறார். விரைவில் சத்தியக்கடதாசி நல்லதொருர பங்குதாரரை இழக்கப்போகிறது.

  • மக்கள் விரோத வலதுசாரிய அரசியலுக்கு லாடம் கட்டும் முயற்சி தேவைதானா!

    பி.இரயாகரன்
    23.04.2006

    அண்மையில் மரணமடைந்த புஸ்பராஜா பற்றி, பலரும் எதிர்பார்த்தது போல் நான் எதையும் எழுதாமல் இருந்தேன். அவரின் 35 வருட அரசியல் சார்ந்த பொதுவாழ்வும், சில காலம் கடுமையான சித்திரவதையுடன் கூடிய சிறைவாழ்வும் என எதையும், அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முற்படாத ஒரு நிலையில் மரண நிகழ்வு நடந்தது. தனிப்பட்ட நட்பே முன்னிலைப்படுத்தப்பட்ட அஞ்சலிகளே எனது விமர்சனத்தை அவசியமற்றதாக்கியிருந்தது. ஆனால் ஒரு மாதத்தின் பின்பாக அவரை அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்தி, இதுதான் புரட்சிகரமான அரசியல் பாதை என்று அடையாளப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட ஒரு நிலையில், இவ் விமர்சனம் அமைகின்றது. அவரைப்பற்றி ஒரு ஒளித்தொகுப்பு ஒன்றைக் கூட வெளியிட்டவர்கள் “விதையாய் விழுந்தாய் விருட்சமாய் எழுவோம்” என்று அதற்கு தலைப்பிட்டுள்ளனர்.

    இது ஒருபுறம் என்றால், புஸ்பராஜா மரணத்தின் முன்பே தனது மரணம் தெரிந்த ஒரு நிலையில், தன்னைப்பற்றிய ஒரு அரசியல் விளம்பரத்தை அடிப்படையாக கொண்டு ஒரு அரசியல் முன்முயற்சியையும் முன்னெடுத்து இருந்தார். இந்திய மக்களின் வாழ்வையே நஞ்சாக்கும் ஆனந்தவிகடனில் வழங்கிய இறுதிப் பேட்டி ஒன்றில், இறுதி தொலைகாட்சி பேட்டி (இது டான் தொலைக் காட்சி பேட்டி. இது மரணத்தின் பின் ஒரு மாதம் கழித்து வெளிவந்தது.), இறுதி கையெழுத்து உயில் என்று அவரே தன்னைப்பற்றி அமர்க்களப்படுத்திவிட்டு சென்றுள்ளார். இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் பிரமை கட்டமைக்கப்பட்டு, இது தான் புரட்சிகரமான நடவடிக்கையாக காட்டுகின்ற அரசியல் முயற்சி மீதான விமர்சனமே இது.

    பொதுவாக விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் புலிக்கு மட்டுமல்ல, புலியின் எதிர்தரப்புக்கும் கிடையாது. வன்மம் கொண்ட காழப்புகள் இதன் பின் சுழன்றடிக்கின்றது. இதன் எதிர்வினை தனிப்பட்ட தூற்றுதலாகவே மாறுகின்றது. பொதுவாழ்வில் மரணமடைந்தவர்கள் மீதான விமர்சனத்தை செய்யும் போது, விமர்சனம் இருப்பவர்கள் கூட அதை மூடிமறைத்தபடி மிகச் சிறந்த அரசியல் நடிகராகி விடுகின்றனர்.

    பொதுவாக புலியல்லாத தரப்புகள் தமக்குள் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்ற பொதுவான கண்ணோட்டம் காணப்படுகின்றது. புலிகள் தாம் அல்லாதவர்களை எதிரியாக கருதி, அவர்கள் மேல் திணிக்கின்ற வன்முறையையும், அது வழங்கும் அடையாளத்தினையும், புலியல்லாத தரப்பு தமது சொந்த அரசியல் அடையாளமாக கொள்கின்ற ஒரு பொது நிலையில், எமது விமர்சனங்களை இவர்கள் கூட புலிப்பாணியில் தான் எதிர்கொள்ளுகின்றனர்.

    எமது விமர்சனங்கள் அரசியல் ரீதியாக அமைகின்ற போது, புலி மற்றும் புலியல்லாத பொதுத்தளத்திலும் கூட உள்நுழைந்து விடுகின்றது. ஒரு சரியான மக்கள் நலன் சாரந்த அரசியல், இந்த இரு பொது போக்குக்கும் வெளியில் தான் உள்ளது. இதுவே அரசியல் விமர்சனமாகின்றது.

    வாழும் போது ஒன்றையொன்று குழிபறித்து முதுகுக்குப் பின்னால் அரசியல் செய்யும் கூத்துகள் சொல்லிமாளாது. ஆனால் மரணத்தின் பின் திடீரென தூக்கி நிறுத்தி கட்டமைக்கின்ற அரசியல் பிரமைகள் வேஷங்கள் அனைத்தும், தமிழ் பேசும் மக்களின் விடுதலையின் பெயரில் அரசியலாய் செய்யப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பது இது போன்ற இழிந்து போன முன்முயற்சிகளை தடுத்து நிறுத்தி, மக்களுக்காக அவர்களின் சொந்த பிரச்சனைகள் மீது போராடி உண்மையாக மக்களுக்காக வாழக்கோருவது தான்.

    இதைப் புரிந்துகொள்ளாத பொதுவாழ்வும், தியாகங்களும் அர்த்தமற்றதாக, மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது. மக்களின் எதிரியாக உள்ள அரசியலுக்கு துணை போவது தான் நிகழ்கின்றது. நாங்கள் அதை புரிந்து கொள்ளமுடியாத அரசியல் அப்பாவிகளாக இருப்பது ஒருபுறம், இதைப் புரிந்தும் அதையே அரசியலாக நம்புவது மறுபுறம். புஸ்பராஜாவைப் போல், தியாகங்கள் புலிகளாலும் நிகழ்த்தப்படுகின்றது, புலியெதிர்ப்பு அணியிலும் நிகழ்தப்படுகின்றது. எப்படி இதைப் புரிந்து கொள்வது? இந்த தியாகங்கள் உண்மையில் மக்களுக்கானதாக இருப்பதில்லை. இது புஸ்பராஜாவுக்கும் விதிவிலக்கல்ல. இதை முதலில் நாம் புரிந்துகொள்வது வரலாற்றக் கடமையாகின்றது.

    புஸ்பராஜாவின் கடந்தகால செயற்பாட்டை பற்றி நான்கு தளத்தில் பிரித்து ஆராய்வதன் மூலமே, சூக்குமங்களை கடந்து அவரை சரியாக நாம் இனம் காணமுடியும்.

    1. 30, 35 வருடத்துக்கு முந்திய அவரின் கடந்தகால அரசியல் இறுதிகாலம் வரை மாற்றம் இன்றி இருந்ததையும், அது சார்ந்த அவரின் அரசியல் நடத்தைகள் பற்றியதும்.

    2. புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டி நின்றது.

    3. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற அவரின் நூல் தொடர்பானது.

    4. தனது மரணம் தெரிந்த நிலையில், இதை அடிப்படையாக கொண்டு அவர் வழங்கிய பேட்டிகள், மற்றும் அவசர சந்திப்புகள், மற்றும் இறுதியாக அவர் எழுதி வைத்தவை.

    நான்கு தளத்தில் பல உட்பிரிவுகளுடன் புஸ்பராஜா பற்றிய பிரமைகள் கட்டமைக்கப்படுகின்றன. எது எப்படி இருந்தாலும் கடைசி இரண்டு தான், இறுதி நேரத்தில் அவரைப்பற்றி சொல்வதற்கு பலருக்கும் ஒரு அடிப்படையை உருவாக்கி கொடுத்தது. புஸ்பராஜா கடைசி நிமிடத்தில் தன்னைப்ப்றி ஒரு விம்பத்தை கட்டுவதில், தீவிரமாக தானாகவே முனைந்தார். அவர் இதற்காக இந்தியா வரை கூட சென்றவர். தனது மரணம் இந்தியாவில் ஒரிரு நாட்களில் என்று தெரிந்தவுடன், அவசரமாக பிரான்ஸ் திரும்பி மரணித்தன் மூலம் கூட, தனது அனாதை மரணத்தைக திட்டமிட்டு தவிர்த்துக் கொண்டவர். இப்படி மிகவும் திட்டமிட்ட வகையில் தன்னை கட்டமைக்க முனைந்த புஸ்பராஜா பற்றி, நாம் அரசியல் ரீதியாக எப்படி புரிந்து கொள்வது.

    அவரின் கடந்தகால நிகழ்கால அரசியல்

    30, 35 வருடத்துக்கு முந்திய அவரின் கடந்தகால அரசியல் எந்த மாற்றமும் இன்றி இறுதிகாலம் வரை அப்படியே நீடித்தது. அவர் தன்னையும், கடந்தகால அரசியலையும் சுயவிமர்சனம் விமர்சனம் செய்தது கிடையாது. இது சார்ந்தே அவரின் அனைத்து அரசியல் நடத்தைகளும் இருந்தன. இந்த உண்மையை அரசியல் ரீதியாக ஆராயும் பட்சத்தில், அவை எந்த விதத்திலும் மக்களுக்கானவையாக இருக்கவில்லை.

    1970களில் அவர் வரிந்து கொண்ட அரசியல் என்பது, அடிப்படையில் வலதுசாரிய அரசியல் தான். இந்த அரசியல் வழியில் இருந்து, அவர் என்றும் தன்னை சுயவிமர்சனம் செய்தது கிடையாது. அதை அவர் போற்றினார். அதை தனது பெருமைக்குரிய ஒன்றாக காட்டி, அந்தப் பிரமைகளுடன் மடிந்து போனவர். அவரை அறிமுகப்படுத்தியது அந்த அரசியல் தான் என்ற போதும் கூட, அது மக்களுக்கு எதிரான வலதுசாரிய அரசியல் என்பதை அவர் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. தன்னை தலித் என்றும், புலியெதிர்ப்பு அணியாகவும், புலம்பெயர் இலக்கியவாதியாகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினராக காட்டி, வாழ்ந்து மடிந்த காலத்திலும் கூட, ஒரு வலதுசாரியாகவே வாழ்ந்தவர். இந்த அரசியல் இடதுக்கு எதிரான மிகவும் வன்மமிக்க ஒரு அரசியலாகவும், இடதுக்கு எதிரான வன்முறையைக் கையாள்வதில் துணை போவதில் பின்நிற்காத ஒருவராகவே இருந்தார். இடதுக்கு எதிராக ஜனநாயக மறுப்பாளராகவே எதார்த்ததில் வாழ்ந்தார்.

    1970 களில் தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணியில் இளைஞர் பிரிவுகளில் தீவிரமான செயற்பாட்டாளராக இருந்தவர். 1970 களில் கூட்டணியின் அரசியல் எதிரிகளைக் கொல்லத் தொடங்கிய தனிமனித பயங்கரவாதத்துடன் நெருக்கமான தொடர்புகள், பங்குபற்றல்களை கொண்டிருந்தவர். இந்த தனிமனித பயங்கரவாத அரசியலுடன், அவர் என்றும் முரண்பட்டது கிடையாது. ‘கொலைகளை நிறுத்துங்கடா” என்ற அவரின் இறுதி மரணச் செய்திலும் கூட, தனிமனித பயங்கரவாத அரசியலை நியாயப்படுத்தி விட்டே சென்றவர். அவர் தனது கடந்தகால செயற்பாட்டை பெருமையாக முன்னிலைப்படுத்தியவர். மரணம் வரை அதைப் பீற்றியவர்.

    அவரின் கடந்தகால தனிமனித பயங்கரவாத செயல்களும், பேரினவாதத்துக்கு எதிரான போராட்டங்களும் அவரை சிறிலங்காவின் சிறைக்கு இட்டுச் சென்றது. இதனால் பலத்த சித்திரவதைகளை பலமுறை சந்தித்தவர். அவரின் குடும்பமே பேரினவாதிகளின் சித்திரவதைகளை தொடர்ச்சியாக சந்தித்தது. அக்காலத்தில் புஸ்பராஜாவும் அவர் குடும்பமும் சிறிலங்காவின் கொடூரங்களுக்கு ஒரு எடுத்துகாட்டான அடையாளமாக, பலரும் அறியக் கூடிய ஒன்றாகவும் இருந்தது. இதைச் சொல்லியே புலிகள் இயக்கம் முதல் பல இயக்கங்களும் அரசியல் செய்தனர்.

    அன்று புஸ்பராஜா மரணித்து இருந்தால், சிவகுமாருக்கு கிடைத்த அதே அந்தஸ்து கிடைத்து இருக்கும். ஆனால் அந்த அதிஸ்ட்டம் அவருக்கு கிடைக்கவில்லை. 1982 களில் பிரான்ஸ் வந்தபின், இவரின் இரண்டாவது அரசியல் காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்யுடன் இணைந்த பின் தொடங்கியது.

    இங்கும் இந்திய ஆக்கிரமிப்புக்கு முன் பின் என்று இரண்டு காலகட்டத்திலும் அவரின் அரசியல் பாத்திரம் உண்டு. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சென்ற கப்பலில் சென்ற போதும் சரி, பின்பு ஆக்கிரமிப்பாளனின் கெலியில் மக்களின் மேலாக பறந்து திரிந்த போதும் சரி, இந்திய இராணுவ பாதுகாப்பில் கூலி இராணுவ முகாமில் தங்கி இருந்த போதும் சரி, இவர் கொல்லப்பட்டு இருந்தால் அதன் விளைவு எப்படிப்பட்டதாக இருந்து இருக்கும்;.

    இவரின் பொதுவாழ்வில் மரணத்தின் தளம், மரணத்தின் இடம் எல்லாம் மாறிக் கொண்டே இருந்தது. நேர்மையான மக்கள் அரசியலை முன்னெடுக்காத வரை, மரணம் கூட அவர்களின் அரசியலை நியாயப்படுத்திவிடாது. இப்படி பல்வேறு வழிகளில் புஸ்பராஜா பயணித்த நிலையில், இந்த வரலாற்றை சரியானதாக காட்டுவது அந்தப் பாதையில் செல்ல முனைவது முனைப்புக் கொள்வது கடும் விமர்சனத்துக்குரியது.

    தமிழ் மக்கள் என்ற பெயரில் நடத்திய அனைத்து அரசியல் கூத்தும், மக்களின் வாழ்வுடன் தொடர்பற்றவையாக இருந்தது. அதிலும் வலதுசாரியத்தை அடிப்படையாக கொண்டது. இது இயல்பாக மக்கள் விரோத அடிப்படையில் பாசிசத்தை தனது அரசியல் சித்தாந்தமாக வரிந்து கொண்டது. இதில் புஸ்பராஜா பங்கு கொண்டதுடன், அதை என்றும் சுயவிமர்சனம் செய்தவரல்ல. மாறாக கடைசி வரையும் அதை பெருமையாக காட்டி நியாப்படுத்தியவர். அவரின் நூல் அதையே செய்ய முனைகின்றது.

    தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலுடன் சங்கமித்து இருந்த புஸ்பராஜாவின் அரசியல், படுபிற்போக்கான யாழ் மேலாதிக்க குறுந்தேசியவாதம் தான். அனைத்து சமூக ஒழுக்குமுறையையும் களைவதற்கு எதிரான ஒரு குறந்தேசிய அரசியல் தான். இதை அவர் கடைசிக்காலம் வரை கூட மாற்றியது கிடையாது. தனது கடைசிக்காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு நடத்திய அஞ்சலிக் கூட்டம் முதல் தொண்டமானுக்கு நடத்திய அஞ்சலிக் கூட்டம் வரை, இதற்கு சிறந்த சான்று பகிர்கின்றது.

    கூட்டணியின் தமிழ் தேசிய அரசியல் என்பது, 1940 முதலே இனவாதத்தை அடிப்படையாக கொண்டது. தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பெயரில் ஏமாற்றி, அவர்களின் வாழ்வை சூறையாடுவதை அடிப்படையாக கொண்டது. சிங்களப் பேரினவாதத்தைக் காட்டி அதில் தமது சொந்த குறுந்தேசிய வாதத்தைக் கட்டமைத்தனர். உண்மையில் சிங்கள பேரினவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் எதைச் செய்தனரோ, அதைத்தான் தமிழ் தேசியத்தின் பெயரில் குறுந்தேசியவாதிகள் செய்தனர். கூட்டணியின் மிகச் சிறந்த ஆயதமேந்திய பிரதிநிதிகள் தான் புலிகள். கூட்டணியின் அரசியலுக்கு வெளியில் புலிகளுக்கு என்ற தனித்துவமான அரசியல் கிடையாது. கொலைகள் பற்றிய கண்ணோட்டத்திலும் கூட.

    கூட்டணியின் அரசியல் என்பது யாழ் மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. உயர்சாதியத்தை அடிப்படையாக கொண்டது. ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. தமிழ் தரகு முதலாளிகளின் ஏக பிரதிநிதிகளாகவும், தமிழ் நிலப்பிரபுத்துவத்தின் ஏக பிரதிநிதிகளாக தம்மை வெளிப்படுத்தி, அதற்காக தமிழ்மக்களை அடிமைப்படுத்தியவாகள். இப்படி சமூகத்தின் சகல அவலத்தினையும் பாதுகாக்கும், வலதுசாரி கூட்டணி அரசியலில் தான், புஸ்பராஜா தன்னை நிலைநிறுத்தியவர். அவரின் மரணம் வரை அதையே புலிகள் விதிவிலக்கின்றி தமது கோட்பாட்டு நீட்சியாக பேணியவர்.

    அன்று முதல் இன்று வரை கூட்டணி அரசியல் இடது எதிர்ப்பை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. அன்று தமது அரசியலுக்கு போட்டியாளராக இருந்தவர்களை துரோகிகளாக காட்டி படுகொலை செய்வித்தவர்கள். பிரபாகரன் கூட அப்படி அமிர்தலிங்கத்தால் வளர்க்கப்பட்டவர். தனிமனித பயங்கரவாத அரசியல் எடுபிடியாகத் தான் இவர்கள் வாலட்டியவர்கள். இந்த கூட்டணியின் தொடர்ச்சியான அரசியலில் புஸ்பராஜா விசுவாசமாக அதற்காகவே கடைசி வரையும் குலைத்தவர். “கொலைகளை நிறுத்துங்கடா” என்று சொன்னவர், கடந்தகாலத்தில் அதாவது கூட்டணி காலத்தில் நடந்த இதே போன்ற அரசியல் கொலைகளை அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதை அவர் தனது சொந்த நூலில் நியாயப்படுத்தியுள்ளார்.

    புஸ்பராஜா தமிழரசுக் கட்சியுடன் தொடர்பு கொண்ட காலத்தில் தான், சாதியத்துக்கு எதிரான போராட்டம் யாழ் மண்ணில் வீறு கொண்டிருந்தது. உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் கூட நடைபெற்றது. பேரினவாதத்துக்கு எதிரான போரட்டங்களும் கூட, இடதுசாரி கண்ணோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதைக் கூட்டணி தெளிவாகவும் துல்லியமாகவும் எதிர்த்தது. பேரினவாதத்துடன் இந்த விடையத்தில் கூட்டுச் சேர்ந்து இடதுகளை ஒழித்துக்கட்ட போராடியது. தீவிர குறுந்தேசியத்தை மாற்றாக முன்வைத்தது.

    ஒடுக்கப்பட்ட ஒரு சாதியில் இருந்து வந்த புஸ்பராஜா, தீவிர இடது எதிர்ப்பு கொண்ட வலதுசாரிய உயர்சாதிய கட்சியில் இணைந்து கொண்டது மட்டுமல்ல, அதை தனது மரணம் வரை நியாயப்படுத்தியதை நாம் எப்படி இன்று நியாயப்படுத்த முடியும். புஸ்பராஜா இந்தக் குறுந்தேசிய, யாழ் மேலாதிக்க, உயர்சாதிய, ஆணாதிக்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தனது கடந்தகால வரலாற்றை, அவர் என்றுமே சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இறுதி வரை அதை பாதுகாக்கும் அரசியலையும், அரசியல் நடத்தைகளிலும் ஈடுபட்டவர். அதை காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வலதுசாரிய அரசியல் வழியில் நியாயப்படுத்தியவர். உதாரணமாக பெண்ணிய நோக்கிலும் கூட நியாயப்படுத்த முனைந்தவர். பெண்களை தாம் இயக்கத்தில் இணைத்ததாக கூறுவதை பெண்ணியம் என்கின்றார். புலிகளும் தான் பெண்களை இயக்கத்தில் இணைக்கின்றனர். இது பெண்ணியமா?

    தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டின் பின்பு ஏற்பட்ட பிளவும், மீண்டும் கூட்டணிக்கு வரும் மீள் பிளவிலும் கூட, பிற்போக்கான அரசியல் தேர்வையே செய்தவர். இதன் பின்பாக கூட்டணி அரசியலில் சிதைந்து சிதறிய ஒரு நிலையில் உதிரியாகின்றார். இதன் பின்பாக தனிப்பட்ட நலன், குழு நலன் அடிப்படையில் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் இணைந்தவர். ஈ.பி.ஆர்.எல்.எவ் உலகத்தை ஒற்றை ஏகாதிபத்தியமாக வகைப்படுத்தி, சோவியத் என்ற சமூக ஏகாதிபத்தியத்தை சோசலிச நாடாக காட்டி, இந்திய கைக்கூலிகளாகவே அவ்வியக்கம் கட்டமைக்கப்பட்டது. வர்க்கம் என்பது அவர்களுக்கு வெறும் சொல்லலங்காரம் மட்டும் தான். சாதியம் என்பது ஆளெடுக்கும் ஒரு சாதிய விளைநிலம் தான். சாதியப் போராட்டம் நடந்த மண்ணில், இந்த இயக்கம் தொடர்ச்சியான எந்த சாதிப் போராட்டத்தையும் திட்டமிட்டு முன்னெடுக்கவில்லை.

    உண்மையில் யாழ் மேலாதிக்க இயக்கமாகவே அது உருவானது. சிந்தனையும் செயலும் அப்படித் தான் இருந்தது. இதற்கு எதிராக செழியன்-தாஸ் தலைமையிலான உள்முரண்பாடு கூர்மை அடைந்து இருந்தது. இன்று புலியின் பின்னால் வாலாட்டி நிற்கும் பிரேமச்சந்திரன் தான், அந்த இயக்கத்தின் உண்மையான தலைவன். பத்மநாபா அந்த இயக்கத்தின், வெறுமனே மனிதாபிமானம் கொண்ட ஒரு பொம்மை. மாறாக பிரேமச்சந்திரன் இந்தியாவின் நேரடியான கைக்கூலி. இந்த இயக்கத்தை புலிகள் தடைசெய்து படுகொலைகளை நடத்தியதன் பின்பாக, இந்தியக் கைக்கூலித்தனமே ஆளுமை பெற்று அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாறியது. மற்றைய போக்குகளை அவ்வியக்கம் அனுமதிக்கவில்லை.

    இந்திய ஆக்கிரமிப்பின் போது ஒரு கூலிப்பட்டாளமாகவே அது செயற்பட்டது. இதன் போது புஸ்பராஜா எப்படி செயற்பட்டார். இந்தியக் கைக் கூலியாக, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கூலி இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினார். ஆக்கிரமிப்பாளனின் துணையுடன் வடக்கு கிழக்கு மண்ணில் பவனி வந்தவர். இந்திய கெலிகளிலும், இந்திய இராணுவ வாகனங்களிலும், இந்திய போர்க் கப்பலிலும் தமிழ் மக்களை சுற்றியும் மேலாகவும் ஊடறுத்தும் திரிந்தவர். இப்படி தான் இவரின் வலதுசாரிய அரசியல் இயல்பாகவே இழிவான சமூக பாத்திரத்தை வகித்தது.

    ஈ.பி.ஆர்.எல்.எவ் சமூகத்தில் இழிந்து சிதைந்து போகும் வரை, அதில் ஒட்டிக் கொண்டிருந்தவர். இதன் பின்னால் புலியெதிர்ப்பு அணி, புலம்பெயர் இலக்கியத்துடன் ஒட்டிக் கொள்ளத் தொடங்கியவர்.

    அதிகாரமற்ற ஒரு நிலையில், வக்கற்றுப் போனவர்களின் நிலையையே தனது வாழ்வாக கொண்டிருந்தார். இது உருவாக்கும் வக்கற்ற புலம்பல்களே, இலக்கியமாகவும் அரசியலாகவும் வெளிப்பட்டது. சமூகத்துக்கு என வழிகாட்ட வக்கற்றுப் போனார்கள். இதை அவர் தனது இறுதிப் பேட்டியில் தெளிவாகவே, மக்களுக்கு எனச் சொல்ல தன்னிடம் எதுவும் இல்லை என்கின்றார். மாறாக தம்மை மிதப்பாக காட்டுவதன் மூலம், சமூகத்தில் ஒரு இடம் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்பில் அங்கும் இங்குமாகவே ஒடித் திரிந்தவர். எல்லாருடனும் சிரித்துக் கதைத்து தன்னைத்தான் நடுநிலையாளனாக காட்டிக் கொள்ள முனைந்தவர்.

    புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டியது

    போக்கிடமற்றவர்களின் தங்குமிடமாக புலியெதிர்ப்பு மூகமுடி எப்போதும் உதவி வந்தது. இது புஸ்பராஜாவுக்கும் விதிவிலக்கல்ல. புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டிக் கொண்டதன் மூலமே, தனது இறுதி காலத்தை அரசியலுக்குள் ஒட்டியவர். அங்கும் அவர் புலியுடன் இணங்கிக் கொள்ளும் வகையில், ஒரு வலதுசாரிய நடுநிலை போக்கை அங்குமிங்குமாக கையாண்டவர். புலிகளின் சில நடத்தைகளை மட்டும் எதிர்த்தவர், அவர்களின் சமூக பொருளாதார குறுந்தேசிய அரசியலை சரியென்று கூறியவர். இதுதான் அவரின் கடந்தகால தேசிய அரசியலாக இருந்தது. இது இயல்பில் புலிகளுடன் முரண்படாத வகையில், தன்னைத்தான் நியாயப்படுத்திக் கொள்ளவே உதவியது. அனைத்து தரப்பிடமும் இருந்து, தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற தீவிரமாக முனைந்தவர். இது தான் அவரின் இறுதிகால அரசியல் முயற்சியாக இருந்தது.

    மக்கள் அரசியலைக் கைவிட்ட புலியெதிர்ப்பு என்பது 1990 களில் ஒரு அரசியல் போக்காகவே தொடங்கியது. புலிகள் அல்லாத அனைவரையும் படுகொலைகள் மூலம் அழித்த புலிகள், தாம் அல்லாத அனைத்தையும் எதிரியாக முத்திரை குத்தினர். இந்த நிலையில் மற்றவர்கள் அனைவரையும் ஒரு அணியாக புலிகளே அடையாளம் காட்டத் தொடங்கினர். துரோகி என்று பொதுவாக புலிகள் இட்ட அடையாளமே, புலியெதிர்ப்பு அணியாக அவர்களையே ஒரு கும்பலாக ஒருங்கிணைத்தது.

    இந்த புலியெதிர்ப்பு கும்பல் அரசியல், தனித்துவமான தமது சொந்தக் கருத்துகளை படிப்படியாக இழந்து இழிந்து போனது. புலிக்கு எதிரான அனைத்தும், இந்தக் கும்பலின் கருத்து என்ற உள்ளடகத்திலேயே இந்தப் போக்கு அரசியலாக வளர்ச்சியுற்றது. இதற்குள் முரண்பாடு என்றால், தனிநபர் ஈகோ முரண்பாடுகள் மட்டும்தான் இதற்குள் எஞ்சியது. புலிகள் தாம் அல்லாதவர்களை ஒன்றாக்கி அவர்களையே இழிவுபடுத்தியது போது, அவர்கள் அந்த இழிவை விசுவாசமாக ஏற்றுக் கொண்;டு முதலில் செய்தது தமது சொந்தக் கருத்துக்களை இழந்தது தான். இழிந்து அரசியல் ரீதியான சீரழிந்து, மக்களை எதிரியாக பார்க்கின்ற ஒரு அரசியல் உணர்வாக அது வளர்ச்சியுற்றது. இதுவே புலிகளை மேலும் மக்களுக்கு எதிராகப் பலப்படுத்தியது. மக்களுக்கு எதிராக இரண்டு வலதுசாரிய அணிகள், எதிர்நிலையில் ஒன்றையொன்று எதிர்த்தபடி உருவானது.

    இரண்டும் புலிகள் சமன் மக்கள் என்ற கோட்பாட்டை உயர்த்தினர். மக்களின் நியாயமான கோரிக்கைகளை புலியின் கோரிக்கையாக காண்பது இதன் அரசியலாகியது. இதை புலிகள் தாம் செய்தனர் என்றால், புலியெதிர்ப்பணியும் இதையே செய்து, அனைத்தையும் புலியாகக் கண்டது. இது இயல்பில் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையையே மறுக்கத் தொடங்கியது. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் முரணற்றவகையில் ஒழிப்பது தான் ஜனநாயகக் கோரிக்கை. இதைப் புரிந்து கொள்ளாது, புரிந்துகொள்ள முனையாது, மக்களின் கோரிக்கையை புலிகள் கொண்டுள்ளதாக கருதிய புலிகளும், புலியெதிர்ப்பு கண்ணோட்டமும் இயல்பாக, தமது சொந்த தவறான முடிவுகளால் இயல்பில் மக்களுக்கு எதிராகவே மாறின. சிலர் அங்கும் இங்குமாக தமது சொந்த வலதுசாரிக் கருத்துகளை இவ் இரண்டுக்குள்ளும் தேடினர். இந்த வகையில் புஸ்பராஜாவும் ஒருவர்.

    கும்பலாக ஒருங்கிணைந்த புலியெதிர்ப்பு அணி, தன்னை வலது இடது கலந்த ஒன்றாக காட்டியபடியே இடது அரசியலையே களைந்து கைவிட்டது. மாறாக வலது அரசியலையே முதன்மைப்படுத்தியது. இதன் வளர்ச்சி ஏகாதிபத்திய புலியெதிர்ப்பையும், சிறிலங்காவின் புலியெதிர்ப்பையும், இந்தியாவின் பிராந்திய புலியெதிர்ப்பையும் கூட தனக்குள் சுவீகரித்துக் கொண்டது. இது இயல்பாக புலிக்கு எதிரான அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாகக் கூடி கும்மாளம் அடிக்கும் ஒரு அரசியல் களமாக மாறியது. இவர்களிடத்தில் மக்களுக்கு வழிகாட்ட சொந்த அரசியல் என எதுவும் எஞ்சியிருக்கவில்லை. புலிக்கு எதிரான அரசுகளின் அரசியல் பொருளாதார நிலைப்பாட்டையும், கூலித்தனத்தையுமே புலியெதிர்ப்பு அரசியலாக கொண்டு வளர்ச்சியுற்றது. இது கடந்து வந்த காலம் முழுக்க படிப்படியாக முன்னேறி, இன்று தீவிர புலியெதிர்ப்பு வாந்தியாக பேந்துவிடுகின்றனர். இதில் இருந்த சில பிரிவுகள் அல்லது தனிப்பட்டவர்கள் முரண்பட்டு வெளியேறுகின்றனர். தம்மை தனித்துவமாக அடையாளம் காட்ட விரும்பிய போதும், அவர்களும் இந்த வட்டத்துடன் மிக நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்படுகின்றனர் என்பதே துரதிஸ்ட்டமானது.

    மக்கள் நலன்களை உயர்த்தி, அதைக் கோட்பாட்டு ரீதியாகவே மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல் அற்பத்தனத்தின் மொத்த விளைவு இது. மக்களுக்கு என்று சொல்வதற்கு எதுவுமற்றவர்களின் கதம்பமாக, இது சீரழிந்த வண்ணம் உள்ளது. புஸ்பராஜா தனது வலதுசாரிய அரசியலுடன் இதற்குள் வலுவாக குந்தியிருக்கவே முனைந்தவர். மக்கள் நலன் எதையும் முன்வைக்கவோ, அதைக் கோரவோ முனையவில்லை. மக்களுக்கு எதிரான பொது அரசியல் போக்கை அம்பலப்படுத்த முனையவில்லை. மாறாக மக்கள் விரோத கும்பலாகவே குந்தியிருந்தபடி, புலியுடன் தனது வலதுசாரிய அரசியலூடாக பாசக்கயிற்றை அங்கு எறிந்தவர். தனது மரணத்துக்கு முந்திய இறுதிப் பேட்டியில் புலியிடம் வேண்டுகோள் விடுக்க முனைந்தவரே ஒழிய, மக்களுக்கு சொல்ல எதுவும் தம்மிடம் இல்லையென்றவர். உண்மையில் வலதுசாரிய அரசியலிடம் மக்களுக்கு சொல்லவென எதுவும் இருப்பதில்லை.

    இந்த புலியெதிர்ப்பு அணியின் முன்முயற்சியின் ஒருபகுதி தான் இலக்கிய சந்திப்பு. இலக்கிய சந்திப்பின் தொடக்கம், இடதுசாரிய நிலைப்பாட்டுடன், மக்களுக்கு வழிகாட்டும் முனைப்புடன் உருவாக்கப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியாக தெளிவற்ற, மக்களுக்கு வழிகாட்ட வக்கற்ற சஞ்சிகைளும், இலக்கியவாதிகளும் படிப்படியாக தமது சொந்த இடது நிலைப்பாட்டை கைவிட்டு வலதுசாரியாக மாறிவந்த நிலையில், வலதுசாரிகளின் ஆதிக்கத்தில் இந்த சந்திப்பும் அரசியல் ரீதியாக சிதைந்து போனது. மாறாக தமது அரசியல் அரிப்புகளை பேசுமிடமாக, தனிபட்ட நபர்களின் அற்பத்தனங்களை தீர்க்கும் இடமாக மாறி, சந்திப்பு ஒரு சுற்றுலாவாக பொழுதுபோக்காக மாறியது. இங்கு மக்களுக்காக எதையும் கூறுவதுமில்லை, பேசுவதுமில்லை.

    தன்னார்வக் குழுக்களிடம் பணம் வாங்கி நக்குபவர்களும், இடதுசாரி சித்தாந்தத்தை கைவிட்டு அதை வீம்புக்கு அலட்டிக் கொண்டு அரசியலில் வாழ்பவர்கள் என பலரும், படிப்படியாக வலதுசாரியக் கோட்பாட்டின் உள்ளடகத்தில் இணங்கி இசைந்த சந்திப்பாக சிதைந்து, உருக்குலைந்து சமூகத்துக்கே நஞ்சிடுகின்றனர். புலியெதிர்ப்புக் கவசத்துடன் புலம்பெயர் இலக்கியம் என்ற கவர்ச்சியுடன் படுபிற்போகான வலதுசாரிய நிலைக்குள் இலக்கியச் சந்திப்பு செயல்வடிவம் பெற்று அது செய்தது எல்லாம், இடது போக்கை இழிவுபடுத்தி புறக்கணித்தது தான். புலியின், ஏன் கடந்தகால குறுந் தேசியவிடுதலைப் போராட்டத்தின் வலதுசாரிய அரசியலை, அது என்றுமே கேள்விக்குள்ளாக்கியது கிடையாது. மாறாக வலதுசாரிய அரசியலில், தமது கால்களை ஆழப்புதைத்துக் கொண்டனர். புஸ்பராஜா போன்றவர்கள் இயல்பாகவே இதனுடன் ஓட்டிக் கொண்டனர்.

    மறுபக்கத்தில் புலம்பெயர் இலக்கிய சந்திப்பு எதையும் சொந்தமாக செய்ய வக்கற்றுப் போனது. இந்த இலக்கியத்தின் சிதைவையும், அதன் இயலாத் தன்மையையும் நாம் காண்கின்றோம். இதற்கு வெளியில் தான் ஒருசில இலக்கியங்கள் வெளிவந்தன, வெளி வருகின்றன. இலக்கிய சந்திப்பின் கொள்கை கோட்பாட்டுக்கு வெளியில் தான் இவை கூட உருவாகின்றது.

    இந்த இலக்கிய சந்திப்பு தனது வலதுசாரிய அரசியலால் சிதைந்து சின்னாபின்னமாகி வந்த நிலையில், அதைச் சரிக்கட்டவே, பின்நவீனத்துவம் தலித்தியம் என்று பல பெயர் கொண்ட கோட்பாடுகளை பெயருக்கு அதில் புகுத்தினர். இப்புதிய வடிவங்கள் செயற்கையாகவே உள்ளடகத்தில் அல்லாது அதில் பிரதிபலித்தது. இந்தியாவின் பிரதிபலிப்பாகவே இப்போக்கு இங்கும் பிரதிபலித்தது. இந்தியாவில் சிதைந்து சீரழிந்த போது, இங்கும் அது மூச்சுத்திணறி செத்துப் போனது.

    இதன் போதும் புஸ்பராஜா தனத வலதுசாரிய அரசியலைக் கைவிடாது அதன் பிரதிநிதியாக தன்னை காட்டிக் கொள்ள வலிந்து முனைந்தார். ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து வந்தவர் என்ற அடையாளத்துடன், செயற்கையாகவே தனது வலதுசாரிய நிலையில் நின்று அதைப்பற்றி எழுதவெளிக்கிட்டவர். ஆனால் அதில் அவர் ஒட்டிக்கொள்ள முடியவில்லை. தனது வலதுசாரிய நிலைக்கு ஏற்ப சாதியத்தை மேய்ந்தார். இதுவே தனக்கு ஒரு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுத் தரும் என்று நம்பினார். ஆனால் சாதியத்தின் சமூகக் கூறுகளைக் கொண்டு, கடந்த காலத்தில் தான் பின்பற்றிய வலதுசாரிய அரசியல் முன்னிறுத்திய சாதிய ஒடுக்குமுறை மீதான விமர்சனத்தை அவர் முன்னெடுக்கவில்லை. தனது சொந்த நூலில் பின்நவீனத்துவ தலித்திய நோக்கில் நின்று, கடந்த காலத்தையும் தனது செயற்பாட்டையும் கூட அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதை நியாயப்படுத்தியபடி, தன்னைத்தான் தலித் என்றார். ஒரு வலதுசாரியின் அரசியல் இப்படித்தான் என்பதையே, அவர் நிறுவிக்காட்டினார். சாதியம் பற்றிய தரவுகளை தொகுப்பதன் மூலம், தலித் என்ற பெயரில் தங்கிநின்று மற்றவனை திட்டுவதன் மூலம், சாதிய போராட்டத்தில் தானும் பங்காளி என்று காட்டவே முனைந்தவர். ஆனால் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற அவரின் நூலில், அவர் தன்னை ஒரு வலதுசாரிய உயர்சாதிய பிரதிநிதியாகவே வெளிப்படுத்தி நிற்கின்றார். அவரின் கடந்தகாலச் செயற்பாடுகள், யாழ் மேலாதிக்க உயர்சாதிய ஆணாதிக்க சுரண்டும் வர்க்கத்தின் குறுந்தேசியமாகவே இருந்தது. இதை அவர் தனது மரணம் வரை நியாயப்படுத்தியவர். இது தான் அவரின் அரசியல்.

    ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூல் மூலம் சேடம் கட்ட முடியுமா?

    நூல் பற்றிய முழுமையான விமர்சனத்துக்கு என எடுத்த எனது குறிப்புகள், என் முன் இருந்த போதும், நேரம் இன்மையால் அதை எழுதமுடியவில்லை. இருந்த போதும் அவரின் மரணத்தை இந்த நூலின் மூலம் அரசியலாக்க முனையும் நிலையில், இந்த நூல் பற்றி எனது குறிப்பான விமர்சனம் தான் இது.

    நான் முன்பே எழுதியது போல், இந்த நூல் சொல்ல முனைவது பிரபாகரன் இடத்தில் நான் இருக்கவேண்டியவன் என்ற வலதுசாரிய அங்கலாய்ப்புடன் தனது சொந்த நலனை முன்னிறுத்தி தொகுக்கப்பட்டுள்ளது. (நூல் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கமும் அடங்கும்.) அதற்கேயுரிய தகவல்கள், எல்லாம் தானாக இருந்ததாக காட்ட முனையும் போக்கு, இடது வெறுப்புடன் கூடிய வன்மம் மிக்க கண்ணோட்டம், மக்களின் அரசியல் போராட்டத்தை வெறுக்கும் அரசியல் போக்கு புலிகளிடம் மண்டியிட்ட வேண்டுகோளாக மாறுகின்றது. மக்கள் மீதான நம்பிக்கையை, மக்களே வரலாற்றை தீர்மானிப்பவர்கள் என்ற உண்மையை எங்கும் எதிலும் அவரிடம் காணமுடியாது.

    இந்த நூல் பல தவறான தகவல்களையும், திரித்த தகவல்களையும் கூட வழங்குகின்றது. தன்னை முன்னிலைப்படுத்தி, தனது வலதுசாரிய அரசியலை முதன்மைப்படுத்தி, குறுந்தேசிய வரலாற்றை நியாயப்படுத்தி வெளிவந்தது. திட்டமிட்ட வகையில் இடதுசாரிப் போராட்டத்தையே முற்றாக இருட்டடிப்பு செய்து இந்த நூல் செய்தது. வலதுசாரியத்துடன் ஏற்பட்ட இடது முரண்பாடுகளைக் கூட, புலிப்பாணியல் எதிராக காட்டுவது, இந்த நூலின் அரசியல் சாரமாகும். பிரபாகரன் தனது வலதுசாரிய அரசியல் பார்வையில் தாம் தூய்மையானவர்கள் என்று எப்படி ஒரு போலியான கட்டமைப்பை உருவாக்கினரோ, அதையே புஸ்பராஜாவும் செய்து தன்னைத்தான் முன்னிலைப்படுத்த முனைகின்றார்.

    அக்காலத்தில் மக்கள் பற்றி தனது சொந்த நிலைப்பாட்டை அவர், புலிப் பாணியில், எல்லாம் தாமாக தமது அரசியலாக காட்டுகின்றார். புலிகளின் வலதுசாரிய பாசிச அரசியலையே, புஸ்பராஜா அப்படியே பிரதிபலிக்கின்றார். தனது ஒடுக்கப்பட்ட சாதிய முரண்பாடுகளைக் கூட அவரால் கண்திறந்து பார்க்க முடியாத அன்றைய நிலையில், அப்படியே இன்று விமர்சனமின்றி ஒப்புவிக்கின்றார். சுயவிமர்சனம், விமர்சனம் என்பது அறவே கிடையாத ஒரு வலதுசாரிய கண்ணோட்டம் கொப்பளிக்கின்றது.

    மிக அப்பட்டமான துரோகம் என்னவென்றால் அக்காலத்தில் நடந்த மக்கள் போராட்டங்களை மறுதலிப்பதன் மூலம், அதை இருட்டடிப்பு செய்கின்றார். மேல்சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், குறுந்தேசிய இயக்கத்துக்கு எதிரான அடிநிலை சாதிகளின் போராட்டம், இயக்கத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்கள், குறுந்தேசிய ஆணாதிக்கத்துக்கு எதிரான பொதுப் போராட்டங்கள் என எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. கூட்டணிக்கு எதிரான போராட்டங்கள், வலதுசாரிய அரசியலுக்கு எதிரான போராட்டங்கள் என பல, அவரால் திட்டமிட்டு மறைக்கப்ப

  • மிக அப்பட்டமான துரோகம் என்னவென்றால் அக்காலத்தில் நடந்த மக்கள் போராட்டங்களை மறுதலிப்பதன் மூலம், அதை இருட்டடிப்பு செய்கின்றார். மேல்சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், குறுந்தேசிய இயக்கத்துக்கு எதிரான அடிநிலை சாதிகளின் போராட்டம், இயக்கத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்கள், குறுந்தேசிய ஆணாதிக்கத்துக்கு எதிரான பொதுப் போராட்டங்கள் என எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. கூட்டணிக்கு எதிரான போராட்டங்கள், வலதுசாரிய அரசியலுக்கு எதிரான போராட்டங்கள் என பல, அவரால் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. வலதுசாரிய தனிமனித பயங்கரவாதங்கள் நியாயப்படுத்தப்பட்டு, கதாநாயகர்கள் பற்றி பிரமையூட்டி அவ் வலதுசாரிய அரசியல் போற்றப்படுகினற்து. இவர் பதிய மறுத்த பல போராட்டங்கள் பலரும் அறியும் போராட்டமாக இருந்தது. சில புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைளில் பதிவாகியும் உள்ளது.
    இது ஒருபுறம். மறுபக்கத்தில் அவர் சார்ந்து இருந்த அரசியல் போக்குக்கு எதிரான மக்கள் போராட்டங்களை, மிகவும் திட்டமிட்டு மறைக்கின்றார். சொன்னவைகளை தனது வலதுசாரிய நிலைக்கு ஏற்ப, இன்றும் கூட திட்டமிட்டு திரித்து காட்டுகின்றார். எல்லாவற்றையும் வலதுசாரிய அரசியலுக்குள், கறைபடியாத ஒன்றாக நிறுவிக்காட்ட முனைகின்றார். இந்த குறுந்தேசிய வலதுசாரிய அரசியல் சரியானதாக சித்தரிக்க முனைகின்றார்.
    நான் சோபாசக்தியின் ‘ம்” நாவல் விமர்சனக் கூட்டத்தில் வைத்து சுட்டிக் காட்டியபடி, ‘ம்” நாவலின் பல உண்மை சம்பவங்களுடன் முரண்பட்டவற்றை புஸ்பராஜா நூல் கொண்டிருந்தது. அங்கு பிரசன்னமாகியிருந்த புஸ்பராஜா, பின் இது பற்றி என்னுடன் கதைத்த போது, தனது வலதுசாரி கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தியபடி தவறுகள் உண்டு என்றார். தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை தவிர்க்கும் நோக்கில், தனிப்பட எனக்கு கூறப்பட்டது தான்.
    உதாரணமாக ஊர்காவற்துறை இன்ஸ்பெக்டர் பற்றிய அபிப்பிராயத்தில், அது அப்படித்தான் இருந்தது என்கின்றார். அந்த இன்ஸ்பெக்டர் பற்றிய மதிப்பீட்டில் சோபாசக்தியின் உண்மை பாத்திரம் சரியாகவே இனம் காண்கின்றது. புஸ்பராஜாவின் பாத்திரம் பிழையாக வலதுசாரிய நோக்கில் இனம் காண்கின்றது. எதிரியை பிழையாக அடையாளம் காட்டி நண்பனாக்குகின்றது. நண்பனை எதிரியாக்குகின்றது. இது குறுந்தேசிய புலி அரசியல் இப்படித் தான் சமூகத்தை வகைப்படுத்தி அழித்தொழிக்கின்றது. ஒருவன் பற்றிய உண்மை மதிப்பீட்டை அரசியலுக்கு அப்பால் இட்டுச் சென்று, தனிமனித நோக்கில் அணுகிவிடும் வலதுசாரிய மதிப்பீடுகளே இவை, மனிதவிரோத இன்ஸ்பெக்டரை குறுந் தேசியத்துக்கு ஆதரவானவராக காட்டுகின்றது. இது எமது குறுந்தேசிய போராட்டம் முழுக்க காணப்படுகின்றது. எதிரி நண்பன் பற்றிய மதீப்பீட்டையே இது முற்றாக எதிர்நிலைத்தன்மை கொண்டதாக அணுகிவிடுகின்றது. இதன் விளைவையே நாம் இன்று ஒரு சமூகமாகவே அனுபவிக்கின்றோம்.
    இதுபோல் பல நூறு விடையங்களை இப்படி பார்க்க முடியும். சந்ததியார் பற்றிய புஸ்பராஜவின் மதிப்பீடும் இப்படித்தான். பாலசிங்கத்தின் ‘போரும் சமாதானமும்” நூல் போல், புலிகள் அல்லாத மற்றொரு வலதுசாரிய அரசியலை வெளிக்கொண்டு வருகின்றது. உதாரணமாக பிரபாகரன் மாத்தையா என்ற இரண்டு வலதுசாரிகள் வரலாற்றை எழுதினால், அல்லது கருணா பிரபாகரன் என்ற இரண்டுபேரின் வரலாற்றை எழுதினால் நிச்சயமாக முரண்பட்ட இரண்டு வரலாறு இருக்கும். அதைபோல் தான் புஸ்பராஜா தனது வலதுசாரிய அரசியல் பாத்திரத்தை நியாயப்படுத்தி எழுதுகின்றார். இங்கு மக்கள் பற்றியோ, அவர்களின் அரசியல் கோரிக்கையைப்பற்றியோ, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுகளின் பிரத்தியேகமான சிறப்பான கோரிக்கை பற்றியோ, இயக்க கண்ணோட்டங்களைப்பற்றியோ அல்ல. மாறாக தன்னை முதன்மைப்படுத்தி, அந்த வலதுசாரிய மக்கள் விரோத நடத்தையை தமிழ் மக்களின் தலைக்கு மேல் வைக்க முனைகின்றார். கடந்தகால வலதுசாரிய மொத்த மக்கள் விரோத அரசியலையும் நியாயப்படுத்துகின்றார்.
    இங்கு புலியல்லாத பிரிவினால் புத்தகம் நிராகரிக்க முடியாத ஒன்றாகவும், பலரும் வியந்து பார்க்கும் வண்ணம் எது மாற்றுகின்றது. மக்களுக்கு எதையும் வழிகாட்ட முடியாத ஆளுமையற்ற சமூக இருப்பில், தம்மைத்தாம் தக்கவைக்க முனைகின்ற போது ஏற்படும் அதிர்வே இப்படி பிரதிபலிக்கின்றது. இந்த அரசியலுக்கு வெளியில் நூல் பலரும் இலகுவாக தெரிந்து கொள்ள முடியாத, பல சம்பவங்களை தொகுத்தளிக்கின்றது. இவற்றில் பல தவறுகள் இருந்த போதும் கூட, பல திட்டமிட்டு விடப்பட்டு இருந்த போதும் கூட, தனிப்பட்ட நபர்கள் பற்றி மிகைப்படுத்தியும் கொச்சைப்படுத்திய போதும் கூட, அது கொண்டுள்ள தரவுகள் சார்ந்து நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. இதேபோல் தான் அன்ரன் பாலசிங்கத்தின் ‘போரும் சமாதானமும்” என்ற நூல் பழைய பேச்சுவார்த்தையில் என்ன நடத்தது என்ற சில ஆவணக்கடிதங்களை முதன் முதலில் வெளிக் கொண்டுவந்துள்ளது. சமூகத்தையும் அக்காலத்தையும் திரும்பி பார்க்க இது உதவுவது போல், புஸ்பராஜாவின் நூலும் உதவுகின்றது அவ்வளவுதான். இதற்கு வெளியில் மக்கள் நலன் சார்ந்து பார்த்தால், இந்த நூல் அரசியல் ரீதியாகவே பயனற்றது. மக்களை வெறும் பொம்மையாக்கி இழிவாக்குகின்றது.
    இதை கவனத்தில் கொள்ளாது அரசியல் ரீதியாக முன்னோக்கி காட்டுவது, அரசியலில் பொறுக்கித்தனமாகும்;. புஸ்பராஜா விரும்பியது என்ன? இந்த நூலை விமர்சிக்காது இருக்கும் ஏற்பாட்டைத் தான். நூல் வெளியீட்டை ஒரு பணச்சடங்காகவே செய்தவர், அதை அங்கு விமர்சனம் செய்யாது இருக்க திட்டமிட்ட பலத்த வலதுசாரிய அரசியல் ஏற்பாட்டையே செய்தவர்.
    இந்த நூலுக்கு எதிரான ஒருசில விமர்சனங்கள் பின்னால் வெளிவந்தன. பாரிசில் சிலர் இணைந்து வெளியிட்ட சிறிய நூல் அதில் ஒன்று. இது தனிப்பட்டவர்கள் சிலரின் அதிருப்தியை அடிப்படையாக கொண்டு விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது சோபாசக்தியின் விமர்சனம் மரணத்தின் பின் (இது முன் கூட்டியே எழுதப்பட்டதாக கூறப்படுகின்றது) ‘அநிச்ச” இதழ் இரண்டில் வெளிவந்துள்ளது. இது அரசியல் ரீதியாக வலதுசாரிய பக்கத்தின் சிலகூறுகளை அம்பலப்படுத்த முனைகின்றது. குறிப்பாக வலது சாரியத்தை சாதிய நோக்கில் காண முனைகின்றது. மறுபக்கத்தில் இதை சமநிலைப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இந்த சமநிலைப்படுத்தலை புலிகளின் சில ஈனச்செயல்களை விமர்சிப்பதை எடுத்துக்காட்டி செய்யப்படுகின்றது. இதையே அவரும் தனது மரணத்துக்கு முந்திய செய்திகளிலும் கூட, இந்த உத்தியையே கையாளுகின்றார்.
    இப்படியான முயற்சி எல்லாம், வலதுசாரிய புலியெதிர்ப்பு அரசியல் உள்ளடகத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. சாதிய அடிப்படையில் நிராகரிக்கின்ற சமநிலைக் கோட்பாடு, மக்கள் பற்றிய முழுமையாக புரிந்த தெளிவாக வழிகாட்ட திறனற்ற வெளிப்பாட்டின் விளைவாகும். ‘மௌனம் என்பது சாவுக்கு சமம்” என்று கூறுவதால் மட்டும் நிலைமை மாறிவிடுவதில்லை, மாறாக மக்களுக்கு வழிகாட்டும் வகையில் முன்நகர்வது அவசியமாகும்.
    சோபாசக்தி சமூகம் சார்ந்த சமகால விடையங்கள் மீதான எழுத்தாளன் என்ற வகையில், அவரில் அண்மையில் ஏற்பட்டு வரும் மாற்றம் வரவேற்க்கத்தக்கது தான். இன்னமும் மக்களைவிட்டு விலகி நிற்கும் போக்கு, சமூகத்துடன் தொடர்பற்ற சூழல் உருவாக்கும் தனிமனித அற்பத்தனங்களில் எஞ்சிக்கிடக்கின்றது. இது புஸ்பராஜா போன்ற வலதுசாரிகளுக்கு தொங்கு பாலத்தை கட்டிவிடலாம் என்று முனைப்புக் கொள்கின்றது. மக்களையும் அவர்களின் வாழ்வு சார்ந்த உள்ளடகத்தில் இருந்து சமூகத்தைக் கற்றுக் கொள்வது அவசியமானதாகும். தனிமனிதர்கள் மக்களின் வாழ்வுடன், எப்படி எந்த சமூகப் பொருளாதார அரசியலுடன் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையே நுணுகிப் பார்த்து, அணுகுவதையே கோருகின்றது சாதி மட்டுமல்ல, சமூகத்தின் பல ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் சமூக உணர்வோட்டங்களை புரிந்து, உணர்ந்து, வாழ்ந்து பிரதிபலிப்பதன் மூலம், மக்கள் கலைஞனாக அவர்களுக்காகவே வாழ முற்படுதலே எழுத்தாளனின் சமூகக் கடமையாகும். இதைவிடுத்து தனிநபர்களின் வலதுசாரி பாத்திரத்தின் இழிந்துபோன அரசியலை மொத்தமாக பார்க்காமல் பகுதியாக அதை பிரித்து போற்றி நிற்கும் முயற்சி அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரானதே. இதை புரிந்துகொள்வது காலத்தின் தேவையுடன் அவசியமானது.
    மரணத்தை தெரிந்து கொண்டு திட்டமிட்டு செய்த தீடீர் அரசியல்
    தனது மரணம் தெரிந்தவுடன் ஒரு திட்டமிட்ட ஒரு அரசியலையே புஸ்பராஜா செய்தார். வழங்கிய பேட்டிகள், மற்றும் இந்தியா வரை சென்று நடத்திய அவசரச் சந்திப்புகள், மற்றும் இறுதியாக எழுதி வைத்தவை என சில.
    பலரும் இதற்குள் நின்று புஸ்பராஜாவை காட்ட முனைகின்றனர். ஆனால் எதார்த்தம் என்னவென்றால் இந்த இறுதி செய்திகளில் கூட, மக்களைப்பற்றி அவர் பேசவில்லை. புலியிடம் வேண்டுகோள்களை விடுத்து, வலதுசாரிய சீர்திருத்தத்தையே மீண்டும் முன்வைக்கின்றார்.
    ‘புஸ்பராஜா பேசுகின்றேன்” என்ற தனது இறுதிக் குறிப்பில் ‘..என்னால் இயன்றதைச் செய்தேன். அது வெற்றியளித்தது” என்கின்றார். அந்த வெற்றி தான் என்ன? தமிழினமோ தோற்றுப் போய் நிற்கின்றது. தனது சொந்த வாழ் நிலையை சொல்லியழ கூட முடியாத அவல வாழ்வில் தவிக்கின்றது. ஆனால் புஸ்பராஜா சொல்லுகின்றார் தான் இயன்றதைச் செய்து, அதுவும் வெற்றியளித்துள்ளது என்கின்றார். தனிப்பட்ட வாழ்க்கையை அப்படி சொல்லுகிறாரா?
    பொதுவாழ்வு என்றால், அது வெற்றியளித்தது என்றால் அது என்ன? அது வலதுசாரிய புலி அரசியல் தான். இதற்கு வெளியில் வேறு எதுதான் வெற்றியளித்தது. அவர் வலிந்து வரிந்து கொண்டு வலதுசாரிய அரசியலின் இன்றைய நிலையைத் தான், அவர் வெற்றியென்கின்றார்;. அது எவ்வளவு பெரிய தோல்வி என்பதை, புலி அழிவுடன் காலம் தெளிவாகவே எடுத்துக் காட்டும்.
    அந்தக் குறிப்பில் புஸ்பராஜா விட்டுச் செல்லும் வேண்டுகோளில் ‘தயவு செய்து கொலைகளை நிறுத்துங்கடா. போதும் கொலைவெறி, மனித சுதந்திரத்தை மதியுங்கள். உயிரின் விலையை மதியுங்கள்” என்கின்றார். இந்த வரிகள் பொதுவாக பார்க்குமிடத்தில், என்ன ஜனநாயக கோசம்! இது எல்லோரையும் மெய்சிலிர்க்க செய்கின்றது. ஆகா ஆகா ஒரு கை பிடியுங்கள், புஸ்பராஜாவை நாம் தூக்குவோம் என்று முனைகின்றனர். இந்த விடையத்தை நாம் எப்படி புரிந்து கொள்வது. இதுவும் வலதுசாரிக் கோரிக்கை தான்.
    இவர் தனது அதிகாரம் நிலவிய காலத்தில், இவர் உதவியுடன் நடந்த தனிமனித படுகொலைகள் முதல் நியாயப்படுத்திய தனிமனித படுகொலைகள் வரை இவர் விமர்சித்தாரா எனின், இல்லை. தனிமனிதப் படுகொலையை நியாயப்படுத்தும் வலதுசாரி அரசியலை அவர் விமர்சிக்கவில்லை. அந்த அரசியலே வலதுசாரிய பாசிசமாகி புலிகளாகவுள்ளது. தனிமனித பயங்கரவாத வலதுசாரிய அரசியல் தான் இன்றைய படுகொலைகள். அன்று தமிழரசுக் கட்சியும், பின் கூட்டணியும் தனிமனித படுகொலைகளை செய்வித்து, அதை ஊக்குவித்து உதவிய வரலாற்றின் தொடர்ச்சிதான் இன்றைய புலிகள். பிரபாகரன் அன்றைய தமிழரசு கட்சி உருவாக்கிய கொலைகார கும்பலின், கொலைகாரனாக இருந்தவர் தான். இன்று மொட்டையாக கடந்தகாலத்தை நியாயப்படுத்தி புனிதப்படுத்தியபடி, கொலைகளை நிறுத்து என்று சொல்வது எவ்வகையானது.
    கொலைகளை நிறுத்துங்கள் என்பது அரசியல் மோசடிதான். இன்று ஏகாதிபத்தியம் முதல் புலிகள் அல்லாத அனைத்து தரப்பும் இதை முன்வைக்கின்றது. இதில் அரசியல் ரீதியாக கூர்ந்து பார்த்தால், மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடியே எஞ்சுகின்றது. அன்று தேசியத்தின் பெயரில் அனைவரும் ஒன்றாக மக்களுக்கு எதிராக இருந்தது போல், இதுவும் சூக்குமாக மக்களுக்கு எதிராக உள்ளது. கொலைகளை நிறுத்து என்ற கோரிக்கையில் சரி, கண்டனத்திலும் சரி, எப்படி புஸ்பராஜா தனது கோரிக்கையை ஏகாதிபத்திய கோரிக்கையில் இருந்து வேறுபடுத்துகின்றார். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். தான் இருந்த வலதுசாரிய அரசியல் வழியில் இருந்து, இதை எப்படி வேறுபடுத்துகின்றார்? உண்மையில் ஏகாதிபத்திய வலதுசாரிய கோரிக்கையும், புஸ்பராஜாவின் வலதுசாரியக் கோரிக்கையும் ஒன்றுதான். இந்தியாவின் கோரிக்கையும் புஸ்பராஜாவின் கோரிக்கையும் ஒன்றுதான். ஆனந்தசங்கரியின் கோரிக்கையும், புஸ்பராஜாவின் கோரிக்கையும் ஒன்று தான். தனது கடந்தகால வலதுசாரிய அரசியலை விமர்சிக்காது, அதை போற்றியபடி மொட்டையாக கூறிவிட முடிகின்றது.
    டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய அவரின் இறுதிப் பேட்டி ஒன்றில், மக்களுக்கு சொல்ல எதுவுமில்லை என்று கூறும் புஸ்பராஜா, புலிகளிடம் வேண்டுகோளை விடமுடிகின்றது. இது தான் புஸ்பராஜா. மக்கள் பற்றிய அக்கறையற்ற வலதுசாரிய அரசியல் இப்படி கொக்கரிக்கின்றது. தனது ஒடுக்கபட்ட சாதிகளின் விடுதலையைத்தன்னும் கூட, ஒரு அரசியல் வேண்டுகோளாக விட முடியாது போகின்றது. அதை பற்றி அலசமுடிகின்றது அவ்வளவுதான். தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகளை விட்டால் வேறு யாரும் இல்லையென்கின்றார். உண்மையில் வலதுசாரிய புலியாகவே அவா பேசுகின்றார். மக்கள் இருக்கின்றனர் என்பதையே நிராகரிக்கின்றார். இது ஒரு மக்கள் விரோத வலதுசாரிக் கருத்து. கவுரவமான தீர்வுக்கு புலிகளை இணங்ககோரும் வேண்டுகோளே நகைப்புக்குரியது. சரி அந்த கவுரவம் தான் என்ன? யாருக்கு கவுரவம்? அந்த தீர்வு தான் என்ன? அது தமிழ் தேசிய அபிலாசைகளை தீர்க்குமா? சாதியை ஒழிக்குமா? ஆணாதிக்கத்தை ஒழிக்குமா? பிரதேசவாதத்தை ஒழிக்குமா? சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்குமா? தேசிய பொருளாதாரத்தை கட்டுமா? இதை எந்த வலதுசாரி அரசியலும் செய்யாது. புலிகள் இதை ஒருக்காலும் செய்ய மாட்டார்கள். பின் யாருக்கு கவுரவம்! உண்மையில் யாரிடம் வேண்டுகோள் விடவேண்டும் என்றால், மக்களிடம் தான். உண்மையில் தேசியம் என்பது, சமூகத்தின் அனைத்து அடக்குமுறையையும் ஒழிப்பதுதான்.
    இதற்கு மாறாக உருவான புலிகள் என்ற வலதுசாரிகளின் சூறையாடல்கள், கொலைகள் என்பது தனிமனித பயங்கரவாதத்தின் தோற்றுவாயாகும். வலதுசாரிய தனிமனித பயங்கரவாத அரசியல், பாசிசமாகி மக்களை கண்டு அஞ்சும் நிலையில் தான், தமது இருப்புக்கான ஒரு அரசியலாக கொலைகள் அடிப்படையாகின்றது. அன்று கூட்டணி கொலைகளை செய்ய கோரியதும், உதவியதும், அதை அரசியல் ரீதியாக பாதுகாத்த வரலாற்றில், பிரபாகரனும் அதற்குள் உள்ளடங்கியிருந்தவர். அதை ஒட்டிய பல ஆவணங்களை, புஸ்பராஜாவே எடுத்துக் காட்டி பெருமைப்படுகின்றார். இப்படி கொலையை ஆதரித்து, உதவி, அரசியல் ரீதியாக முண்டு கொடுத்த இவர்கள், இன்று கொலையை நிறுத்து என்கின்றனர். ஆனந்தசங்கரியும் இதைத் தான் சொல்லுகின்றார். இவர்கள் கடந்தகாலத்தை சுயவிமர்சனம் செய்தது கிடையாது.
    ‘விதையாய் விழுந்தாய் விருட்சமாய் எழுவோம்” என்று கோரி ஆவணம் வெளியிடுகின்றீர்களே, எதை விதையாக்குகின்றீர்கள். எதை விருட்சமாக கோருகின்றீர்கள். வலதுசாரிய அரசியலை விதையாக விதைத்து, விருட்சமாக எழுந்த புலிகளையா மீண்டும் கோருகின்றீர்கள்! போதும் நிறுத்துங்கள்!
    மக்களின் பெயரால், மக்களின் முதுகில் சவாரி செய்யாதீர்கள். முடிந்தால் மக்களுக்காக, அவர்களின் வாழ்வுக்காக, உண்மையாகவும் நேர்மையாகவும் போராடக் கற்றுக் கொள்ளுங்கள்.

    RAYA

  • sugan

    இடுகாட்டு அமைதி
    :::::::::::::::::::::

    இன்று நாம் பேசத்தவறினால்

    இடுகாட்டு அமைதி கவிந்துவிடும் .

    ஒவ்வொரு குடும்பமும் கருகிப் போகும்
    ஒவ்வொரு வீடும் சாம்பல் குவியலாகும்.

    அமைதிக்கு அப்பாலிருந்து

    அவலக்குரல் மீண்டும் வரும்.

    இங்கு யாரும் இல்லை

    யாருமே இல்லை-
    யாருமே இல்லை.

    மூலம் ; சாகிர் லூதியான்வி
    தமிழாக்கம் ; புதுவை ஞானம்

  • nesan

    நமது முற்போக்குவாதிகளும்  மார்க்சியர்களும் இப்படியொரு  சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது  1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத்  யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு  வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின்  பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட  சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி  அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா,  அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு  மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி,  ஆகியோரே அவ்வாறு கொல்லப்படவர்கள்.  இதன்போது சாரின்  வீட்டு நாயும் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு இரண்டாம் நிக்ளஸ் என்று ஒரு திரைப்படமும்  இருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான அந்த திரைப்படம் சார்  மன்னனுக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக விளையாட்டுத்தனமானவர்களாக சித்தரிக்கப்படும்  அவனது, அழகான பெண் பிள்ளைகளுக்காக பார்க்கும் எவரும்  கண்ணீர் சிந்துவர். மார்க்சியர்கள் குறிப்பாக ரஸ்ய போல்ஷவிக்  அமைப்பினர் மிகக் கொடுரமானவர்கள், ஈவிரக்கமற்றவர்கள்  என்பதாக ஒரு பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும்  என்பதுதான் அந்த திரைப்பட இயக்குனரின் அரசியலும் கூட.  ஆனால் இந்த சம்பவம் ஒரு வரலாற்று பின்புலத்தில் வைத்து  புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. அந்த  நேரத்தில் ரஸ்ய அரசியல் சூழலில் முக்கிய விடயமாக  உரையாடப்பட்ட மேற்படி கொலைகள் ஒரு புரட்சிகர அரசியல்,  ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின்  பின்னனியிலேயே மார்க்சியர்களால் விளக்கப்பட்டது. உண்மையில்  மனித உரிமை, ஜனநாயகம் என்ற சொல்கொண்டு மேற்படி  சம்பவத்தை நாம் அளவிட்டால் லெனின் ஒரு மோசமான  கொலைகாரராகத்தான் தெரிவார். ஆனால் ஒரு போராட்டச் சூழலில்  அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான  சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான  அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில்  பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள சிலருக்கு இன்றும் விளங்காமல்  இருக்கும் விடயமும் இதுதான். மனிதநேயம் பற்றி மாவோ  கூறியிருப்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்கின்றேன்.  “மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும்  வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில்  அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத  காரியம்” (வர்க்கம் என்ற இடத்தில் நமது இனத்துவ  அடையாளத்தை குறித்துக் கொள்ளுங்கள்) இந்தக் கூற்றை  அடிப்படையாகக் கொண்டு மாவோவை ஈவிரக்கமற்றவர்,  கொலைகளை ஆதரிப்பவர் என்று சொல்லிவிட முடியுமா? மார்க்ஸ் முன்னிறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தின்  நீட்சிதான் லெனின், மாவோ போன்றவர்களின் அனுகுமுறையும்  கருத்துக்களும். பாட்டாளிகள் புரட்சியின்போது எதிரிகளான  முதலாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்பதன்  உள்ளடக்கம்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். உண்மையில்  மனிதநேய நோக்கில் எதிரியான சாருக்கு பதிலாக சாரின் மனைவி பிள்ளைகள் மீதான கொலை வேதனைக்குரிய ஒன்றுதான். ஆனால்  ஓர் அரசியல் பின்புலத்தில் அதற்கான வலுவான நியாயமுண்டு.  எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது.  என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான்  அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக  எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொ

  • KARAN

    THANGS RAYAKARAN

  • Thakshan

    யதீந்திரா! லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ கொடுங்கோலன் ஜாரின் குடும்பத்தை அடியோடு அழித்தார். இங்க பாடடாளி மகன் தன்ர பிள்ளையை இயக்கத்துக்கு அனுப்பேல்லை எண்டொல்லோ சிறையில வைக்கப்படுறான். உங்களுக்கு தெரிஞ்சவையாரும் வன்னியில இருந்தா ஒருக்கா தொடர்பெடுத்து கேட்டுப்பாருங்கோ யார்ர வீட்டிலயாலும் பிள்ளையை பறிகொடுக்காம இருந்தா புலியின்ர இன்ரலிஜன்ட் வீக் எண்ட முடிவுக்கு வரலாம். வன்னி மன்னரோட ஒப்பிடேக்க ஜார் மன்னரெல்லாம் ஜுஜுபி. யாதார்த்தத்துள் வாழ்ந்தால்த்தான் வலி புரியும். எங்கேயோ மனித உரிமைகளை மதிக்க தெரிந்த ஒரு இடத்தில் அடைக்கலம் தேடிவிட்டு கொலைகளுக்கு ஞாயம் தேடி கண்டுபிடிக்கிறதோட மட்டுமில்லாமல் மார்க்ஸ்> லெனின்> மாவோவோட எல்லாம் ஒப்பிட்டு பார்க்க இங்க ஒரு புரட்சியும் நடக்கேல்ல. உங்களைபோல தேரான தேரெல்லாம் தெருவழிய நிக்க தேவாங்குகள் கொஞ்சம் விடுதலை எண்டு வெளிக்கிட்டது தான் வந்த வினையெண்டு நினைக்கிறன்.ம்ம்ம்…..

  • யதீந்திராவின் பின்னூட்டம் தமிழ் சேர்க்கிளிலும் தமிழரங்கத்திலும் தனிக்கட்டுரையாக மறு பிரசுரமாக்கப்பட்டுள்ளது.

    நன்றி
    தமிழரங்கம்

  • ravi

    யதீந்திரா!
    மாற்றுக்கருத்தாளா; அரைவேக்காட்டுத்தனமானவா;களை உருவாக்கித்தான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்!
    இன்னும் லேற் றில்லை. கொஞ்சம் முயற்சித்துப்பாருங்கள!!

  • ரகு

    யதீந்திரா,

    நீங்களாவது நிலைமைகளை அவதானித்து திருந்திவிட்டீர்கள். நானோ இந்தக்கூட்டத்துக்கு (அரைவேக்காட்டு) துணபோனவன் மட்டுமல்ல இன்னும் பல அரைவேக்காட்டுக்கூட்டத்தினை உருவாக்க காரணமானவனும் கூட. எல்லாம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய மொத்தமான புத்தகங்களை கண்ணைக்கசக்கிகொண்டு வாசித்ததன் விளைவு. எனக்கும் ஐயப்பாடு இருந்தது ஆனாலும் எம்மை ஏன் சோசலிசவாதிகள் ஏமாற்ர வேண்டும் என்ற ஒர் நம்பிக்கைதான் இவ்வளவு பொய்களையும் ஏற்றுக்கொள்ள வைத்தது!
    சொல்லிக்கொண்டே போகலாம் எமது ‘மாற்றுக்கருத்து’ அனுபவங்களை. என்ன சொன்னாலும் ஏறாது அவர்களுக்கு. எங்கேயோ ஒரு பெயர் தெரியாத ரஷ்ய எழுத்தாளர் எழுதிய நூலில் 375ம் பக்கத்திலிருந்து ஒரு நீண்ட தமிழ் மொழிபெயர்ப்பு வசனத்தை எடுத்து விட்டு தமது ‘பாண்டித்தியத்தை’ காட்டுவார்கள்!

  • Lavan

    இன்று லண்டன் பாராளுமன்றத்தில் நடைபெறும் சந்திப்பில் உலகில் கலாச்சாரம் பண்பாடுகளை> இனங்களுக்கிடையே உறுதிசெய்யும் அமைப்பான யுனெஸ்கோ> தமிழரின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை அவமதித்து> தமிழரின் ஒரு கணவனுக்கு ஒரு மனைவி என்ற கலாச்சாரத்தை அவமதித்து> சட்டபடி 3 திருமணம் முடித்தவருக்கு> யுனொஸ்கோவின் விதிமுறைக்கு மாறாக கலாச்சார பரிசிலை வழங்கி இருந்தமை அனைவரும் அறிந்த செய்தியே. குறித்த பரிசிலை பெற்றுக்கொண்ட சில்மிசச் செல்வரும் பாராளுமன்ற கலந்துரையாடலில் கலந்து கொள்கிறார்.

    - நிதர்சனம்.
    அண்ண அப்ப தேசத்தின்குரல் மட்டும் எப்பிடி ரெண்டு கலியாணம் முடிக்கலாம். அதுவும் வெள்ளக்காரியை? தமிழ் பண்பாட்டில எங்கினேக்க ஓட்டை?

  • ragu

    லவன்,

    இது புஷ்பராஜா , செந்தில்ரவி பற்றியதும் அவர்கள் சார்ந்த கொள்கைகள் , அது பற்றிய நோக்குகள் பற்றிய பதிவும் பின்னூட்டங்களும் இடும் இடமல்லவா?
    இதில் ஏன் நிதர்சனம் பற்றி பின்னூட்டமிடுகிறீர்கள். தேவை எனின் நிர்வாகியிடம் அதற்காக தனிப்பதிவைக்கோரலாமே? என்னைப்பொறுத்தவரை சோபாசக்தி(நிர்வாகி), இல்லை என்று சொல்லமாட்டார். அவருடன் கருத்துரீதியான ஒற்றுமை எனக்கு இல்லை ஆனால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் களம் அமைத்துக்கொடுக்க தயங்கமாட்டார் என நினைக்கிறேன். நிதர்சனத்தை எங்கே வைப்பது என்று தெரியாதவர்களல்ல சத்தியக்கடதாசி வாசகர்கள்.
    எனவே தயவு செய்து திசைதிருப்பல் விளையாட்டுகள் வேண்டாமே !!!

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner