தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

கட்டுரைகள்

– ராகவன்
“நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்”
அம்பேத்கர்

இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்று இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இன – தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்.

தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் யாழ்ப்பாணத்திலேயே அரும்பி வேர்விட்டு விருட்சமாகியதால் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையையும் ஒடுக்கும் சாதியினரின் ஆதிக்கத்தையும் அதன் அரசியல் அதிகார வேட்கையையும் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

தமிழத் தேசியவாதம் குறுகிய நோக்கம் கொண்டது. அது தமிழர் என்று தான் வரையறுக்கும் மனிதர் அல்லது மனித குழுவினர் அல்லாதவரை அந்நியராக, விரோதியாகக் கருதுகின்றது. தேசியவாதத்திற்கு உலகளாவிய பார்வை கிடையாது. அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது.

தமிழ்த் தேசியவாதம் சாதிய அடிப்படையிலான சமூக – கலாச்சாரக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனெனில் அதன் அடிப்படை பிறப்பு, இரத்த உறவு, பாரம்பரிய நிலம் போன்ற சாதியக் கருத்து நிலைகளே. பிறப்பு உனது முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகளால் நிச்சயிக்கப்படுகிறது என்ற சனாதன சைவக் கோட்பாட்டால் நியாயமாக்கப்படுகிறது. இதுவே சாதியின் அடிப்படை என வேதம் சொல்கிறது. இரத்தம் தூய்மையானது, அது மற்ற சாதிகளுடன் கலந்தால் அழுக்காக போய்விடும் – இங்கு இரத்தம் என்பது விந்தும் சேர்ந்தது – என்கிறது. சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழத் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்.
ragavan/ராகவன்/தமிழ்த்தேசியமும் தலித்தியமும்

‘தலித்’ என்ற பதத்திற்கு நசுக்கப்பட்ட மக்கள் அல்லது நொருக்கப்பட்ட மக்கள் என்பது பொருளாகும். மக்களைப் பிறப்பின் அடிப்படையில் சாதிகளாக அடையாளப்படுத்தும் ஆதிக்கசாதிச் சனாதனிகளால் தங்கள்மீது திணிக்கப்பட்ட பஞ்சமர், அவர்ணர், இழிசனர், தீண்டத்தகாதோர், அரிசனர் போன்ற சொல்லாடல்களைத் தலித்தியம் உறுதியாக நிராகரிக்கிறது. இந்தச் சாதியச் சொல்லாடல்கள் தங்களை இழிவுசெய்ய ஆதிக்கசாதியினரால் உருவாக்கப்பட்டவையெனத் தலித்தியம் கருதுகிறது.

“1972ம் வருட தலித் பாந்தர்களின் (Dalit Panthers) அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
“தாழ்த்தப்பட்டவன், நவீன புத்த மதத்தவன், தொழிலாளி, கூலி விவசாயி, பெண், அரசியலிலும் பொருளாதாரத்திலும் சுரண்டப்பட்டவர்கள் போன்றவர்கள் தலித்கள். தலித்கள் கடவுளை நம்புவதில்லை. மறுபிறவியையும் நம்புவதில்லை. ஏற்றத் தாழ்வுகளைக் போதிக்கும் புனித நூல்ளைத் தலித்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் விதியை நம்புவதில்லை. ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் தான் அவர்களை அடிமையாக்கின.”

தலித்தியம் தமிழத் தேசியத்தின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குள்ளாக்குகிறது. ‘சாதி அடிப்படை பிறப்பாலானது’ என்ற சனாதன சைவ வேளாள ஆதிக்கசாதிக் கருத்தியலை மறுதலிப்பதன் மூலம் அது பிறப்பால் தமிழன் என்ற தேசிய அடித்தளத்தையே தகர்க்கிறது. தமிழ்மொழி சாதியக் கூறுகளை கொண்டிருப்பதை அம்பலப்படுத்தித் தமிழ் பேசுபவன், தமிழன் என்ற தேசிய அடையாளத்தையே நிர்மூலமாக்குகிறது. நிலம் மறுக்கபட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத மக்களை, அடிமையிலும் இழிவாக நடத்தப்படும் மக்களைத் தமிழ் கலாச்சார ஒற்றை அடையாளத்திற்குள் திணிக்கப்பதைத் தலித்தியம் எதிர்க்கின்றது. மாறாக தலித்தியம் தன்னை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அரசியல் – பொருளாதாரச் சுரண்டல்களிற்க்கு ஆட்பட்டவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துகிறது. எனவே அதற்குகொரு உலகளாவிய தத்துவப் பார்வை இருக்கிறது.

அடையாளம் என்பது நித்தியமானது என்பதைத் தலித்தியம் மறுதலிக்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது.

தமிழத் தேசியவாதம் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட வரலாறுகளை இருட்டடிப்பு செய்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாறே இலங்கையின் வடக்குக் கிழக்கு வரலாறு எனத் திரிக்கிறது. ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ போன்றவை இயங்கியதையும் தலித்கள் தமிழீழப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆலயப் பிரவேசப் போராட்டம், உணவகங்களில் சமவுரிமைப் போராட்டம், பாடசாலைகளில் அனுமதிக்கான போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் அவர்கள் யாழ்ப்பாண ஆதிக்கசாதி வெறியர்களின் வன்முறைகளிற்கும் கொலைகளிற்கும் ஆளானார்கள் என்பதையும் தமிழத் தேசியம் மறைக்கின்றது.

1958 – 1977- 1983 இன வன்முறைகளைத் தனது ஒடுக்கப்பட்ட வரலாற்றின் அத்தியாயங்களாகக் காட்டும் தமிழ் தேசியவாதம் 1944ல் ஒரு தலித் மூதாட்டியின் உடலை வில்லூன்றிச் சுடலையில் தகனம் செய்ய முயன்ற முதலி சின்னத்தம்பி என்ற ஒரு தலித்தை வெள்ளாளர்கள் சுட்டுக் கொன்றதையும் சங்கானைப் போராட்டத்தில் சின்னர் காத்திகேசுவைக் கொன்றதையும் இன்னும் பலபத்துச் சாதியப் படுகொலைகளையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேல் நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் குறித்துக் கள்ள மௌனம் சாதிக்கிறன்றது. 1960களில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் நிகழ்ந்தப்பட்ட சாதிவெறி வன்முறைகள் பற்றியும் அது வாய் திறக்க மறுக்கிறது.

சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழத் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது. சாதியத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அதன் தேசிய இருப்புக்கு ஆபத்தாக வந்துவிடும் என்பதில் தமிழ்த் தேசியவாதம் கவனமாகவே இருக்கின்றது என்பதை அதன் நடவடிக்கைகளும் சாதியக் குணாம்சமும் நமக்குக் காட்டுகின்றன.

சாதி சமயமற்ற ‘சோசலிசத் தமிழீழம்’ வெறும் காகித்ததில்தான். தாயகத்தை மீட்ட பின்பு ஈழத்தில் சாதியற்ற சமத்துவம் நிலவும் என்பதைத் தலித்தியம் அப்பட்டமான ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றது.
தமிழ்த் தேசியவாதம் இன அடிப்படையிலானது. அது மொழி, கலாச்சாரம் என்ற இரு முதன்மைக் கருதுகோள்களிற்குள் தன்னை வரையறுக்குகிறது. தமிழ் தேசியவாத கருத்தியல் தமிழினம் தனக்கென்று தனித்த இயல்புகளை கொண்டிருப்பதாலும் அவர்கள் மொழி, கலாச்சாரத்தால் ஒன்றுபட்டிருப்பதாலும் தமிழினம் என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து மாறாமல் நிரந்தரமாக இருக்கிறதென்றும் இந்த மாறாத இயல்பே அவர்களை அய்க்கியப்படுத்தி அவர்களுக்கான ஒரு கூட்டான உள்ளுணர்வை கொடுப்பதாகவும் தங்களை ஒருங்கிணைக்கும் உள்ளுணர்வே தங்களது இருப்பைத் தேசமாக உணர வைக்கிறது என்கிறது தமிழ் தேசியம். இந்தக் கருத்தியலை நிலை நாட்டுவதற்கு கதைகள், புராணங்கள் இலக்கியங்களைத் தமிழ் தேசியவாதம் ஆதாரமாக காட்டுகிறது. தமிழரின் அரசுகள் முன்னர் தனியாக இருந்ததாகவும் அபகரிக்கப்பட்ட தேசத்தின் இறைமையை மீளவும் நிலை நாட்டுவதே தமிழரின் கடமை என்று அது முழங்குகிறது.

“மாறாத் துயிலில் ஆழ்ந்த அழகியின் (Sleeping beauty) இளமையின் மாறாத்தன்மை போன்று உருவகிக்கப்படும் நித்தியமான கலாச்சாரம் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் போது அடிபட்டுப் போகின்றது” என்பார் ஸ்டுவட் கால் (Stuard Hall) .

தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் இந்த அடிப்படையிலேயே தன்னை உருவகம் செய்கின்றது. தமிழின் இளமை, தொன்மை, தமிழ் கலாச்சாரத்தின் நித்தியம் ஆகிய சாராம்சவாதங்களையே தமிழ்த் தேசியவாதம் முன் வைக்கிறது. ஆனால் தேசியக் கருத்தியலானது நவீனகால உருவாக்கமென்பதையே ஆய்வுகள் நமக்குக் கூறுகின்றன. தேசியவாதக் கருத்தியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், வர்க்கத்தின் அபிலாசைகளை அடைவதற்கான அரசியல் வடிவமே. இந்த அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான கருத்தியல் பரிமாணத்தைத் தமிழ் தேசியவாதம் மொழி, கலாச்சாரம் ஆகிய கருத்துருக்கள் மூலமாக வடிவமைக்கிறது. “சமுக ஏற்றத் தாழ்வுகளையும் சுரண்டலையும் மறைத்து அனைவரும் ஒன்று என்ற மாயையைத் தேசம் கொடுப்பதால் தேசியம் ஒரு கற்பிதம்” என்பார் அண்டர்சன்.

பண்டைய தமிழ் இலக்கியங்களிலோ புராணங்களிலோ ‘தமிழன்’ என்ற சொல்லாடல் இருப்பதை யாராவது கண்டு பிடித்தால் தமிழ்த் தேசியம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தது என்பதை நாம் ஒத்து கொள்ளத்தான் வேண்டும். ‘தமிழன்’, ‘தமிழச்சி’ அல்லது ‘தமிழர்’ என்ற சொல்லாடலகள் சங்க இலக்கியங்களிலோ பக்தி இலக்கியங்களிலோ தேவார திருவாசகங்களிலோ கிடையவே கிடையாது. ‘தமிழ்’ என்ற சொல்லாடல் மொழியைக் குறிக்கச் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழர் ‘என்ற இன அடையாளப்படுத்தல் சங்க இலக்கியங்களிலோ காலனித்துவத்துக்கு முன்வந்த பனுவல்களிலோ இல்லை. ஆனால் சாதி பற்றி பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. புறனானூறில் அந்தணர், குறவர், வேந்தர், குடிகள் போண்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இது மேலதிக ஆய்வுக்கு எடுக்கப்பட வேண்டியது.

‘தமிழர்’ என்ற அடையாளப்படுத்தல் நவீனகால உருவாக்கம் என்பதே தெளிவு. தமிழ் இன அடையாளப்படுத்தலுக்கு முன் சாதியரீதியான அடையாளப்படுத்தல் இருந்தது என்பதும் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழ்த் தேசியவாத கருத்தியலின் தொன்மைவாதம் ஆய்வுக்குள்ளாக்கப்படும் போது ஆட்டம் காண்கிறது.

வெள்ளையர்களின் காலனியாதிக்கக் காலத்திற்கு முன்னரே சாதி அமைப்பு இருந்தது என்பதற்கு ஆதாரங்களைத் திரட்டத் தேவையில்லை. எனவே இந்த கட்டுரையானது தமிழத் தேசியம் குறித்துப் பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களைப் பரிசீலிக்கின்றது.

(1) காலனிய காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் -குறிப்பாக வேளாளர்கள்- எவ்வாறு தமது அரசியல் – சமூக- பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்தினார்கள்?

(2) சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து 1983 வரையான தமிழத் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதிய பரிமாணமும்.

(3) 1983ற்குப் பின்னான ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதிய பரிமாணமும்

(4) 1986ற்குப் பின்னான விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்.

காலனித்துவ காலகட்டம்:

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், காலகட்டத்தில் வரி விதிப்பதற்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்கனவேயிருந்த சாதியடிப்படையில் சனத்தொகையைப் பகுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகள் என்று டச்சுகாரர்கள் வகுத்தனர். இக்காலகட்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். ஆதிக்க சாதியினரின் அதிகாரம் மேலும் வலுவாக்கப்பட்டது.

காலனித்துவ காலத்திலும் அதன் பின்னும் யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் ‘உயர்’ சாதி அடிப்படையிலேயே தனது ஆதிக்கத்தை தக்கவைத்து கொண்டது. காலனித்துவத்திற்குப் பின்னான அரசியல் அதிகாரப் பகிர்வு போட்டியில் ஏற்கனவே தான் காலனித்துவ காலத்தில் அனுபவித்து வந்த சலுகைகளும் அதிகாரமும் பறிபோய்விடுமென்ற பயமே தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் அடிப்படை.

“காலனித்துவ காலகட்டத்தில் புதிய சமூக அமைப்புக்கான கருத்தியல் தளமான கல்விமுறை அதன் ஆரம்பத்திலேயே ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த சமுகக் குழுக்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது… இந்தச் சக்திகளுக்குத் தாங்கள் பரம்பரையாக ஆதிக்கத்திலிருக்கிறோம் என்ற பார்வையை மாற்ற வேண்டிய எவ்வித தேவையும் இருக்கவில்லை” என்கிறார் அம்பேத்கர். காலங் காலமாக ஆதிக்கத்திலிருந்த யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினர் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுத் தமது ஆதிக்கத்தைச் சமூக, பொருளாதார ரீதியில் மேலும் வலுவாக்கிக் கொண்டனர்.

ஏற்கனவே உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஜீவாதார உரிமைகள் காலனித்துவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் மேலும் நசுக்கப்பட்டன. பிரித்தானிய காலனித்துவம் ஆதிக்க சாதியினருடன் சமரசம் செய்துகொண்டு அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கியது பிரித்தானிய காலனித்துவம் மையப்படுத்தப்பட்ட நிர்வாக வசதிக்காக அரசியல் அமைப்பு முறையை அமுல்படுத்தியதும் இந்த நிர்வாக அலகுகளை இயக்குவதற்காக ‘கிளாக்கர்களை’ உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுத்ததும் வரலாறு. இன்று தேசியவாதத்தின் பீஷ்மரான கா.சிவத்தம்பி தனது முன்னைய ஆய்வொன்றில் “காலனித்துவம் ஏற்கனவே சாதியால் வரையறுக்கப்பட்டிருந்த சமுக ஒழுங்கைக் குலைக்க முயலவில்லை. மாறாக ஆதிக்க சாதியினரை முதன்மைப்படுத்துவதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாயிருந்த வெள்ளாளரை ஆங்கிலக் கல்வி கற்க வைத்துத் தனது கிளாக்கர் படையை நிறுவியது…யாழ்ப்பாணத்தில் கல்விக்கூடங்களின் தொகையும் அதனால் உருவாக்கப்பட்ட அரச அலுவலர்களது தொகையும் அதன் சனத்தொகை வீதாசாரத்துடன் ஒப்பிடும்போது அதீதமானது” என்கிறார்.

காலனித்துவப் பொருளாதார அமைப்பானது உற்பத்தியை மையமாகக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் ‘உயர்’ சாதியினர் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட்டுப் பெருவாரியாக அரச அலுவலகப் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். காலனிய அரசு நிறவாத அரசாக இருந்ததால் சாதிரீதியான பிரிவினைகளை மாற்றக்கூடிய அரசியல் தார்மீகப் பலம் அதற்கு இருக்கவில்லை. கிறிஸ்தவ மதம் யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரிவினைகளை உள்வாங்கி கொண்டது இதற்கு நல்ல உதாரணம். ஒருசில பாதிரிமாரும் நிறுவனங்களும் கல்விக் கூடங்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்குத் திறந்து விட்ட போதும் சாதிய முரண்பாடுகளில் ஆதிக்க சாதியினரின் விருப்புகளிற்கு காலனித்துவ அரசு விட்டுக்கொடுத்தே வந்தது. சமுக மாற்றத்தைக் காலனிய அரசு விரும்பவில்லை. அது தனது இருப்புக்கு ஆபத்தாகலாம் எனக் காலனித்துவ அரசு கருதியிருக்க இடமுண்டு.

யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் இருப்பிற்கு சைவ சித்தாந்தக் கருத்தியல் நியாயம் கற்பித்தது. வர்ணாசிரம தர்மத்தின்படி சூத்திரர்களாக வரையறுக்கப்படும் சாதி வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்து சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தியதோடு அதற்கான சித்தாந்தத்தையும் வகுத்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளை குடிமை, அடிமை, சிறைக்குட்டிகள் என்ற வகைகளிற்குள் அடக்கினர். நிலங்கள், கோயில்கள் அனைத்தும் பெருமளவில் வெள்ளாளர்களின் சொத்தாகவே இருந்தன. புறநடையாகக் கரையார்கள் மட்டும் வெள்ளாளருக்குப் போட்டி சாதியாக இருந்து வந்தனர். இது பற்றிய ஆய்வு தனியாக மேற்கொள்ளப்பட வேண்டியது.

சாதிய இறுக்கம் காலனித்துவ காலத்தில் நெகிழ்ந்து வருவதையும் கிறிஸ்தவ மதமாற்றங்கள் சாதிய கட்டுமானத்தைச் சற்றுச் சலனப்படுத்துவதையும் கண்ட வெள்ளாளச் சமூகம் தனது சாதிய நலனை ஆறுமுக நாவலரிடம் அடையாளம் கண்டது. ஆறுமுக நாவலரின சைவ சித்தாந்தம் சாதிய வேறுபாட்டை நியாயப்படுத்தியது. இந்தியாவில் இந்து சமயத்திற்குள் சீர்சிருத்தம் செய்யப் புறப்பட்டுச் சாதியை ஒழிக்க முயன்ற வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகளை நாவலர் எதிர்த்து வள்ளலாரின் பாட்டு ‘மருட் பா’ என வாதிட்டார். சாதியத்தை இறுக்கமாக பேணுவதற்கான வழிமுறைகளை நாவலர் சைவசித்தாந்தத்தின் மூலம் வழி மொழிந்தார். சைவ சித்தாந்தம் கூறுகிறது:

“எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியர் இடத்திலும் கள்ளுக் குடிப்பவர் இடத்திலும் மாமிசம் புசிப்பவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.”

நாவலர் கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்தது அந்த மதம் சம்பந்தமான வெறுப்பாலல்ல. அது சாதியக் கட்டுமானத்தைக் குலைத்துவிடும் என்ற பயத்தால்தான். தனது பாடசாலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுத்த நாவலர் ஏதாவது ஒரு பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவன் அனுமதிக்கபட்டால் அதற்கு எதிராகவும் கொக்கரித்தார். “பறை பஞ்சமர், பெண்கள் அடிப்பதற்காகவே பிறந்தார்கள்” என்றார் நாவலர். இந்த சைவ சித்தாந்தக் கருத்தியலின் அடிப்படைதான் இன்றைய தமிழத் தேசியவாதததின் தோற்றமும் வளர்ச்சியும்.

சாதி அமைப்புமுறை ஆதிக்க சாதிகளால் தொடர்ந்தும் இறுக்கமாகப் பேணப்பட்டு வரும் அதேவேளையில் தங்களது நலன்களைத் தொடர்ந்து பேணிக்காக்கவே யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம் தேசியவாதத்தை அரசியல் கருத்தியலாக விதைத்தது.

காலனித்துவ அரசுகள் படிப்படியாக சரிந்து வரும் காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசு காலனித்துவத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நிகழ்த்தாமலே சுதந்திரம் பெற்ற இலங்கையை ஒரு ‘மாதிரி’ நாடாக, ஒரு ‘சக்சஸ் ஸ்டோரி’யாகப் பார்த்தது. தாங்கள் வெளியேறுவதற்கு முன்பாகச் சில திட்டங்களையும் பரிந்துரைத்து சுதேசிகளுக்கு ஆட்சிக் ‘கலை’யைக் கற்றுக்கொடுத்தது.

இந்தக் காலகட்டம் காலனித்துவ அரசு பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த காலம். டொனமூர் கொமிஷன் சுதேசிகளின் அதிகாரத்தைப் பற்றிப் பேசிய காலம். ‘தமிழர்’ தமக்குப் போதிய அதிகாரம் வேண்டுமென்ற காலம். தமிழத் தேசியவாதிகளின் கருத்தின்படி தமிழர் தம்மை ஒரு தனித்துவமான இனமென்று கூறி அதிகாரப் பகிர்வு கேட்ட காலம். ஆனால் காலனித்துவத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அடக்கப்பட்டு வந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பற்றித் தமிழ்த் தலைமை மூச்சும் காட்டவில்லை.

1944ல் “நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாணச் சமூகம் மிசனரிகளாலும் அரச நடவடிக்கைகளாலும் பயன்பெற்றுக் கல்வியில் முதன்மையாக நிற்கின்றது’ என்று அறிக்கையிட்டது சோல்பரிக் கொமிஷன். ஆனால் அந்தக் கல்வியை பெறத் தடுக்கப்பட்டவர்களாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தார்கள். சோல்பரிக் கொமிஷனிடம் ‘இருக்கும் கல்விக் கூடங்கள் போதாது இன்னும் கல்விக்கூடங்கள் வேண்டும்’ என்று கேட்ட யாழ்ப்பாணத் தலைமை மறுபுறத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்விகற்ற படித்த பாடசாலைகளை எரித்துச் சாம்பராக்கியது.

இந்த காலத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட தமிழ்த் தேசியப் பெருங்கதையாடலை நிராகரித்தனர். ‘ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கமம்’ 1927ல் உருவாக்கப்பட்டது. சங்கம் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்கு பாடசாலை அனுமதியும் சமபந்தியும் கோரிப் போராட்டங்களை நிகழ்தியது. 1931 இல் சர்வசன வாக்குரிமைக்கு டொனமூர் கொமிசன் சிபார்சு செய்தபோது பொன். இராமநாதன் நடேசன் போன்ற தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசியல் உரிமையொன்று கிடைப்பதைப் பொறுக்க முடியாமல் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு அவர்களின் ஆதிக்கசாதி நலனிலிருந்தே முகிழ்த்தது. ஆனால் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளோ ‘பெரும்பான்மைச் சிங்களவரகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற தூரப்பார்வை இத் தலைவர்களுக்கு இருந்ததனால் அவர்கள் அதனை எதிர்த்தார்கள்’ என வியாக்கியானம் கொடுக்கிறார்கள்.

நிலப்பிரபுகளுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கவேண்டும், கல்வியற்றவர்களுக்கும் பெண்களுக்கும் அந்த உரிமை இல்லை என்று வாதாடினார் இராமநாதன். ஆனால் சிங்கள நிலப்பிரபுக்கள் எண்ணிக்கையில் தமிழ் நிலப்பிரபுக்களை விட அதிகம். எனவே சர்வசன வாக்குரிமை இல்லாவிடினும் சிங்களப் பெரும்பான்மையே அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும். தவிரவும் இராமநாதன் சிங்கள மேல்தட்டு வர்க்கத்துடன் சுமூகமான உறவை வைத்திருந்ததுதான் வரலாறு. எனவே இங்கே இராமநாதனின் ‘தூரப்பார்வை’ என்ற வாதமே அடிபட்டுப்போகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தமிழ்த் தேசிய இனமாக அடையாளம் காண மறுத்தனர். யாழ்ப்பாணத்து ‘உயர்’சாதிக்காரரின் அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவே தமிழ் தேசியவாதக் கருத்தியலின் உள்ளுறை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தனர். அதிகாரப் பகிர்வு கேட்கும் அதே வர்க்கம் தாழ்த்தப்பட்டவர்களிற்கு அரசால் வழங்கப்பட்ட சிறிய சலுகைகளை கூட மூர்க்கமாக எதிர்த்து வந்ததைத் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்கறிவார்கள். தங்களுக்கு இவர்கள் கொடுத்த அடையாளம் சாதி அடையாளமே தவிர தமிழ் அடையாளமல்ல என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியும். 1943ல் வட இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டதும் இதன் பின்னணியில்தான். அடுத்த வருடமே மகாசபை அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர் மகாசபையானது.

1944ல் சோல்பரி கொமிசனின் முன்னால் தனியான ஓர் அறிக்கையை மகாசபை சமர்ப்பித்தது. சிறுபான்மைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் வேறானவை, அவர்கள் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடங்கமாட்டார்கள் என மகாசபை வலியுறுத்தியது. தங்களது உரிமைகளைச் சாசனரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் எனவும் மகாசபை வலியுறுத்தியது. அய்ம்பதிற்கு அய்ம்பது கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடம் “தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும், பாடசாலை அனுமதி தரப்படவேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழ்க் காங்கிரஸ் சமர்பிக்கும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டால் தனி அறிக்கையொன்றைத் தாங்கள் சோல்பரிக் கொமிஷனிடம் சமர்ப்பிக்கவிருப்பதைக் கைவிடுவதாக” மகாசபை தெரிவித்தது. ஆனால் ஆதிக்க சாதியினரின் பிரதிநிதியான பொன்னம்பலம் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்ததால் மகாசபை தனியாகவே கொமிஷனிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

தமிழ்த் தலைமையானது சாதி வெறியர்களுடன் கூட்டு சேர்ந்து மகாசபை அங்கத்தவர்களை மிரட்டியது. சோல்பரிக் கொமிஷன் அங்கத்தவர்களை இரகசியமாக தலித் மக்களின் குடியிருப்புகளிற்கு அழைத்துச் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இழிவாக நடத்தப்படுகிறார்கள் என்று மகாசபை உறுப்பினர்கள் காண்பித்தார்கள். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் சாதி அரசியலால் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கற்களாயின.

சுதந்திரம் பெற்ற காலகட்டத்திலிருந்து 1983 வரையான தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதியப் பரிமாணமும்:

பொருள் உற்பத்திமுறைமை, அதற்கான அரசியல் சமூகக் கட்டுமானம், அதனை வழி நடத்துவதற்கான நிர்வாக இயந்திரம் என்ற அடிப்படையிலேயே இலங்கையில் காலனித்துவ அரசு தனது சுவடுகளை விட்டு சென்றது. காலனியாதிக்க காலத்திலேயே அரச நிர்வாக சேவைகளில் தமது கால்களை ஆழ ஊன்றியிருந்த யாழ் மத்தியதர ஆதிக்கசாதி வர்க்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இச்சூழலில் இருந்தன. தொழில் வளர்ச்சியற்ற இச்சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளுக்கான போட்டி இனரீதியான சிந்தனைக்குத் தீனி போட்டது.

கல்வி மறுக்கப்பட்டு அரசு நிர்வாகப் பதவிகள் மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த போட்டியின் பங்குதாரரில்லையென்பதுதான் உள்ளங்கை நெல்லிகனி உண்மை. தனிச் சிங்கள மொழிச் சட்டம் 1956ல் நிறைவேற்றப்பட முன்பு ஆங்கிலக் கல்வியே சமூகப்படிகளில் ஏறுவதற்கான கருவியாக இருந்தது. ‘ஆங்கிலக் கல்வி வேண்டாம், தாய்மொழிக் கல்வி வேண்டும்’ என யாழ்ப்பாண அரசியல் தலைமை அதுவரையும் போராடவில்லை. தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்து பின்னர் தமிழ் வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்படும் என மாற்றம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தாய்மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வந்தன. அவர்களுக்கு மேற்படிப்பு என்பதும் பல்கலைக்கழகம் செல்வதென்பதும் கனவாகவேயிருந்தன. ஆசிரியர்களிலிருந்து அதிகாரிகள் வரை திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்கத் தடையாக இருந்தனர்.

தமிழர் தமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்ததற்கான அடிப்படை காரணம் 1970களில் தரப்படுத்தலை அரசு நடைமுறைப்படுத்தியதே எனத் தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் முன்வைக்கிறது. கல்வியில் சிறந்த அறிவார்ந்த தமது இனம் தரப்படுத்தலை கண்டு சினந்து போராட்டத்தில் குதித்தது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இதுவெனத் தமிழ்த் தேசியவாதிகள் இன்றும் கூறுகிறார்கள்.
ஆனாலும் காலங்காலமாக ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களும் வரலாறுகளும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. இலவசக்கல்வி முறை இலங்கையில் இருந்தபோதும் 0.01 வீத சனத்தொகையே மேற்படிப்புக்கு செல்லக்கூடியதாக இருந்தது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்கலைகழகம் செல்லும் போட்டியிலும் அரச அதிகாரிகளாகும் போட்டியிலும் யாழ்ப்பாண மத்தியதரவர்க்கம் முக்கியமான பாத்திரத்தை வகுத்தது. ‘கோழி மேய்த்தாலும் கோர்ணமெந்தில் மேய்க்கவேண்டும்’ என்ற தேவவாக்கு யாழ்ப்பாண ஆதிக்கசாதி அமைப்பின் தாரக மந்திரமாயிருந்தது. தனது பங்குகள் குறைந்து போக அது ஆத்திரம் அடைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவொரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. இதனை ஆதிக்க சாதியினரின் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள். ஏனெனில் இதே சமகாலத்தில்தான் அவர்கள் கோவில் பிரவேசம், தேனீர்கடை பிரவேசம் போன்ற பல்வேறு சமூக விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு ஆதிக்க சாதியினரால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.

அப்போதைய இலங்கை அரசு இந்தப் பிணக்கை ஓரளவு தீர்க்க முன்வந்தபோது தமிழப் பழமைவாதத் தலைமை எரிச்சலடைந்தது. சாதி முறைமைகள், கோவில் பிரவேசம் ஆகிய உள்வீட்டு பிரச்சனையில் அரசு தலையிட வேண்டிய அவசியமில்லையென அது வாதித்தது.
சாதியப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தமிழத் தலைமைகள் பயந்ததன் அடிப்படைக் காரணம் அவர்களது ஆதரவுத்தளம் மத்தியதர வர்க்கச் சாதிமான்களில் தங்கியிருந்ததாலேயேயாகும்.

சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ்த் தேசியத் தலைமை கொச்சைப்படுத்தியது அல்லது அது உள்வீட்டு பிரச்சனை என்றது. சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சாதிக்கெதிரான போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்து போராடியபோது தமிழத் தலைமை ‘சங்கானை ஷங்காயாக மாறுகிற’தென்று இனவாத அரசென்று தங்களால் சொல்லப்பட்ட இலங்கை அரசுக்கு முறையிட்டது.
இதே காலகட்டத்தில்தான் தமிழ்த் தேசியவாதிகளின் பத்திரிகையான ‘சுதந்திரன்’ கோவில் பிரவேசம் பற்றிப் பேசக் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தகுதி இருக்கிறது, ஏனெனில் அவர்கள் நாத்திகர்கள் எனப் பக்கம் பக்கமாக எழுதியது.

தமிழரசுக் கட்சி சமபந்தி போசனம் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி சமரசப் போக்கை கொண்டுவர முயன்றபோதும் தாழ்த்தப்பட்ட மக்கள் இதனை வெறும் நாடகமாகவே கருதினார்கள். தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று என தென்னிலங்கை அரசுக்கு காட்டி தங்களது இனவாத அரசியலை நடத்துவதற்கான தந்திரோபாயத்தில் தாங்கள் பங்குதாரர் இல்லை என தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து கூறினார்கள். ‘சமபந்தி போசனம் செய்ய வருபவர்களே சம்பந்தம் பண்ணச் சம்மதமா’ என குரலெழுப்பிச் சாதிய தேசியவாதத்தை அம்மணமாக்கினார்கள

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் ஆதிக்கசாதி யினரின் பிரச்சனைகளாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களது பிரச்சனை ஆதிக்கக்கசாதியினரின் நேரடி ஒடுக்குமுறைக்கெதிரான தொடர்ந்த போராட்டமாகவே இருந்தது. ‘புத்த மதம் ஆதிக்க மதம்’ என்றது ஆதிக்கசாதி. தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த சமயத்திற்கு மாறுவது தமது சமூக விடுதலைக்கான ஒரு படிக்கல் என்றே கருதினார்கள்.

1970களில் தமிழத் தேசியச் சக்திகள் ஆயுத வன்முறையை ஆரம்பித்தபோதும் 1983வரை அது யாழ்ப்பாணத்துளளேயே முடங்கிப் போயிருந்தது. சிறு குழுக்கள் திடீரென்று ஒரு பொலிஸ்காரனையோ துரோகியென்று முத்திரை குத்தப்பட்டவரையோ கொல்வது அல்லது ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்ற மட்டிலேயே அவர்களது நடவடிக்கைகள் 1983 வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அலைக்குள் அகப்படவில்லை. ஏனெனில் தமக்கு கல்வியை மறுக்கும் அதே ஆதிக்கசாதியினர்தான் உயர்கல்வி கற்க ‘தரப்படுத்தல்’ தடையாக இருக்கின்றதென்று கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தது தலித்களிற்கு வேடிக்கையாக இருந்தது. 1971ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் 1972ல் மாவட்டரீதியான கோட்டாவாக மாற்றப்பட்டுப் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு, மன்னார், மலையகம், வன்னி போன்ற தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து முதன்முறையாக மாணவர்களிற்குப் பல்கலைகழகம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த விடயத்தை யாழ் மையவாதத் தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக மறைத்துவிடுகிறார்கள். தமிழ்த் தேசியவாதத்தின் உருவாக்கமே யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக இருந்தது.

1976ல் வட்டுகோட்டைத் தீர்ர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய போது தமிழீழம் சாதி சமயமற்ற சமதர்ம குடியரசென்றும் தமிழீழத்தில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்படும் என்றும் கூறியது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அடிப்படை உரிமைகள் சட்டரீதியாகக் காகிதங்களில் ஓரளவிற்கு உத்தரவாதப்படுத்தினாலும் கூட அந்தக் குறைந்த பட்ச உரிமைகளைக் கூட நடைமுறைப்படுத்த அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கக் கூட்டணி குறிப்பிடத் தகுந்த எந்தப் பங்களிப்பையும் இன்றுவரை கொடுத்ததில்லை. அரசியல் சாசனத்தில் தலித்களிற்குச் சில உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தும் அதனை நடைமுறைப்படுத்த யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் பெரும் தடையாயிருந்தனர். தேசியவாதத் தலைமை இந்தச் சாதிய மேலாதிக்கதால் கட்டப்பட்டதால் நிலவிவரும் சாதிய அமைப்புமுறையை எதிர்ப்பதற்கான வீரியம் அதனிடமிருக்கவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தேசியவாதத்திற்குள் உள்வாங்குவதற்கு அது முயற்சித்தது.

1981ம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் பொலிஸாரால் தீக்கிரையாக்கப்பட்ட போது கிளர்ந்தெழுந்த யாழ்ப்பாண ‘உயர் ‘சாதிச் சமூகம் அதேகாலகட்டத்தில் எழுதுமட்டுவாளில் சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட சிறார்களைத் தாக்கி அவர்களது புத்தகங்களைப் பறித்து தீக்கிரையாக்கும் போது ஏன் பார்த்துக்கொண்டிருந்தது? எனக் கேள்வியெழுப்பினார் கே.டானியல்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு படிப்பு எதற்கு அது எங்களது ஏகபோகம் என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறையே இதற்குக் காரணம். இந்த ஆதிக்கசாதிச் சிந்தனை முறையை அரசியல், சமூக தளமாகக் கொண்ட தேசியவாதக் கருத்தியல் தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைக்கு முரணாகவே அப்போதும் இப்போதும் செயல்படுகிறது

1960களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆய்வு செய்து “மாவிட்டபுரக் கோவில் பிரவேசப் போராட்டமானது வெள்ளாள ஆதிக்கத்தை வைதீகத் ( Ritual) தளத்தில் எதிர்கொண்டது. இந்தப் போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கபட்டன. சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தணிப்பதற்காகத் தமிழ்த் தலைமை ஒரு ‘தற்காப்புத் தேசிய வாதமாக’ ( Defensive Nationalism) தமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்தது. இந்த உத்தியின் மூலம் இன உணர்வுகளிற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளீர்க்க தமிழ்த் தலைமை முயன்றது” என்கிறார் பாகன்பேகர் (1990).

சாதிய ஒடுக்குமுறைகளை ‘ஒற்றுமை’யின் பேரால் தமிழத் தேசியவாதம் மறைக்க பார்க்கிறது. தனது பல்லைக் குத்தி மாற்றானுக்கு மணக்கவிடக்கூடாது என்று வியாக்கியானம் வேறு.

1983ல் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆயுதம் தூக்கும் வரையில் தாழ்த்தப்பட்ட மக்களிற்குச் சாதிய விடுதலைப் போராட்டத்தை நடத்தக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட சனநாயகச் சூழலிருந்தது. ஆயுத வன்முறை தமிழ்த் தேசியத்தின் வடிவமாக்கப்பட்ட பின்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட்டங்களை நடத்துவதற்காக மட்டுப்படுத்தப்பட்டிருந்த சனநாயகமும் தமிழ்த் தேசியவாதத்தால் முற்றாகவே துடைத்தெறிப்பட்டது என்பதுதான் வரலாறும் நிதர்சனமும்.

1983க்குப் பின்பு ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதியப் பரிமாணமும்:
1983 யூலை வன்முறைகள் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. ஆயுதப் போராட்த்திற்கான அடித்தளம் வலுவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள், ரெலோ, புளொட் ஆகிய அமைப்புகள் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தொடர்ச்சியாகவேயிருந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான எவ்விதச் சிந்தனைப் போக்கையும் இவை கொண்டிருக்கவில்லை. மாறாகச் சாதியச் சிந்தனைகளின் அடிப்படையிலேயே இவர்களது தமிழ்த் தேசியம் கட்டப்பட்டது. 1984ல் புத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொழுத்தப்பட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கபட்டபோது இந்த ஆயுதத் தலைமைகள் இந்த நேரத்தில் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாதெனச் சாட்டுச்சொல்லி இப்பிரச்சனையைக் கையாள தயங்கினர். ‘உயர்’சாதியை பகைத்தால் ஒற்றுமை குலைந்துவிடும் என்பது அவர்களது வாதம். இதே போல் கல்லுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தை ரெலோ வன்முறை கொண்டு அடக்கியது. EPRLE, NLFT போன்ற அமைப்புகள் தேசியவாதக் கருத்தியலைக் கொண்டிருப்பினும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகச் சமகாலத்திலேயே போராட்டம் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது முக்கிமானதுதான். ஆனாலும் இராமநாதன் பொன்னம்பலம் காலத்திலிருந்து வந்த தமிழர் ‘ஒற்றுமை’ குலைந்துவிடக்கூடாது என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறைமை தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களிடமும் நீடித்தது, நீடிக்கின்றது.

EPRLF தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் தன்னுடன் இணைத்து கொண்டது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் ஆதிக்கம் செலுத்திய சூழலில் தங்களின் அடிப்படை உரிமைகளை இவ்வியக்கங்கள் மூலம் வென்றெடுக்கலாம் எனக் கருதித் தாழ்த்தப்பட்ட மக்கள் இயங்கங்களில் இணைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது மட்டுமல்லாமல் தமக்குக் காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்புகளில் இணைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. தமது சாதிய மேலாதிக்கத்திற்கு இது ஆபத்து என கருதிய யாழ்ப்பாண உயர்சாதி வர்க்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகளில் சேருவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் எதிர்த்தார்கள். ‘முந்தி இயக்கம் நல்லாயிருந்தது. இப்போது கண்டதுகளும் சேர்ந்து அதை பழுதாக்கியெல்லோ போட்டுதுகள்’ எனப் புறணி பேசினர். ஈ பி ஆர் எல் எப் அமைப்பை ஈழத்துப் பள்ளர் என அடைமொழியிட்டு அழைத்தனர். சாதிய அமைப்பு முறைக்கு எதிரான போராட்டம் தேசியவாதக் கருத்தியலுடன் பொருந்தாது என்பதற்கு ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்வி சரியான உதாரணம்.

சாதிய எதிர்ப்பானது சமூக ஏற்றத் தாழ்வுக்கெதிரான போராட்டம். அது சைவ சித்தாந்தக் கருத்தியலை நிராகரிக்கிறது. தமிழ்த் தேசியவாதம் யாழ்ப்பாண சாதிய மேலாதிக்கத்தை பேணிக்காப்பதற்கான போராட்டம். எனவே ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம் தேசியவாதத்திற்கும் தலித்தியத்திற்கான அடிப்படையான தீர்க்கப்படாத முரண்பாடுகளை அடையாளம் கண்டுகொள்ள அது தவறியதேயாகும். தமிழ்த் தேசியம் சாதிய அடிப்படையிலான கருத்தியலென்பதால் அது சாதியத்திற்கெதிரான கருத்துக்களை முன்வைப்பது அதன் அரசியல் இருப்புக்கு ஆப்பு வைக்கும் வேலையே.

ஆயுத அமைப்புகள் தலையெடுத்த பின்பு தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்த தாழ்த்தப்பட்ட மக்களிற்கு சாதிய விடுதலைக்கான அமைப்புகளை நடத்தும் உரிமைகள் மறுக்கப்பட்டன. தமிழத் தேசியத்தின் பேரால் தமிழர் ஒற்றுமையின் பேரால் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சனநாயக உரிமைகளும் பறிக்க பட்டன. தலித்தியத்தை பேசுபவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர். 1986ல் விடுதலை புலிகள் மற்றைய அமைப்புகளை அழித்துத் தமது தனி ஆதிக்கத்தை கொண்டுவந்த பின்பு ஒரு தலித் இயக்கத்திற்கான அனைத்து கதவுகளும் பலாத்காரமாக வடக்கில் மூடப்பட்டன.

1986ற்குப் பின்பு விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மிகவும் பிற்போக்கானதும் பழமை வாதமானதும் மாற்று அரசியல் அமைப்புக்களை கருத்துக்களை சகிக்க முடியாததுமாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. விடுதலை புலிகளின் தோற்றமும் அரசியல் பரிமாணமும் அதன் அமைப்பு முறையும் யாழ்ப்பாண ஆதிக்கசாதிக் கருத்தியலினதும் அதன் சர்வாதிகாரச் சாதி கட்டமைப்பினதும் வெளிப்பாடே.

ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் பெரும்பாலும் யாழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவேயிருந்தனர். தமது கல்வியில் அல்லது தமது சமூகத்தின் ( இங்கு நான் சமூகமெனக் குறிப்பிடுவது ஆதிக்க சாதியினரை) கல்வியில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டியது என்பதே அவர்களது அடிப்படையான பிரச்சனையாக இருந்தது. இராசராச சோழனின் ஆட்சியைக் கனவு கண்டது, சோழரின் இலச்சினையைத் தனது சின்னமாக்கித் தமிழீழத் தேசத்திற்கான கற்பிதத்தை உருவாக்கியது, சைவநெறிப் புனிதங்களையும் ஒழுக்கங்களையும் பேணிப் பாதுகாத்தது, காதல் – பாலுறவு போன்ற விசயங்களில் பச்சைப் பழமைவாதம் போன்ற பல்வேறு பிற்போக்குவாதக் கூறுகளால்தான் அந்த இயக்கம் கட்டியெழுப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் வெள்ளாளர், கரையார் ஆகிய இரு சாதிப்பிரிவினரே ஆதிக்கம் செலுத்தினர். சாதிய படிக்கட்டுமானத்தில் கரையார் வெள்ளாளருக்கு அடுத்தபடியாகக் கீழேயிருந்தபோதும் அவர்கள் வெள்ளாளரின் ‘குடிமை’களாக இருக்கவில்லை. அதனை விட முக்கியமானது சமயக் கருத்தியல் தளத்தில் ( Ideological base of saiva religious ritual ) அவர்கள் தீண்டதகாதவர்களாக வகுக்கப்படவில்லை. வெள்ளாளர் போன்று கரையாரும் கோவில்களுக்கு சொந்தகாரராக இருந்தனர். சன்னதி போன்ற கோவில்களில் தலித்களின் ஆலய பிரவேசத்தை தீவிரமாக எதிர்த்து நின்றவர்கள் கரையார்கள். மாவிட்டபுரம் கோயில் பிரவேச போராட்டத்தில் வெள்ளாளருடன் கூட்டு சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான வன்முறையில் கரையார்களும் ஈடுபட்டார்கள். கரையாருக்கும் வெள்ளாளருக்குமிடையே ஆதிக்க போட்டி தொடர்ந்து இருந்து வந்தது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்முறையில் இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்தனர்.

சைவ ஆகம முறைப்படி கரையார் தீட்டுபட்டவர்களாக கருதப்படவில்லை என்றேன். இதன் அடிப்படையே இவர்களின் தமிழத் தேசியவாதக் கூட்டு. ‘வல்வெட்டித்துறை’ ஞானமூர்த்தி என்பவர் தமிழ்க் கொங்கிரஸ் – தமிழரசுக்கட்சி இணைப்புக்கு முன்னின்றவர் என்பதும் வல்வெட்டித்துறைப் பிரதேசம் கரையார் சமூகத்தின் முக்கிய தளம் என்பதும் அது தமிழத் தேசியவாதத்தின் ஒரு முக்கியமான பிறப்பிடம் என்பதும் அறியப்பட்ட உண்மைகள்.

புலிகள் தமது அமைப்பில் ‘ஒழுக்கமானவர்களை’ சேர்ப்பதில் ஆர்வம் காட்டினர். 1983ற்குப் பின்னர் ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புகளில் பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் இணையும்போது விடுதலைப்புலிகளோ தங்கள் தெரிவுகளை மிகவும் கவனமாகவே செய்தனர். ‘கண்டவர்களையும்’ இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் விளைவு உயர் சாதிகளைச் சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் புலிகள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தினர்.

கரையார சமூகத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் முடித்ததானது முக்கியமான குறியீடாக ( Symbolic significance) அமைந்தது. தலித் பெண்ணொருவரைப் பிரபாகரன் மணந்திருந்தால் வெள்ளாளரோ கரையாரோ தமது அரசியல் ஆதரவைப் புலிகளுக்கு கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. மன்னர்கள் முன்னைய காலத்தில் மற்றைய மன்னர்களின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக அம்மன்னர்களின் குமாரிகளை திருமணம் செய்வது ஒரு தந்திரோபாயமாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இதனை திட்டமிட்டுச் செய்யாவிடினும் இந் நடவடிக்கை இரு சாதிகளுக்கிடையே ஒரு குறைந்தபட்ச இணக்கப்பாட்டைக் கொண்டுவந்தது எனலாம்.

விடுதலை புலிகள் தாங்கள் சாதியத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டி கொண்டாலும் அவர்களது அமைப்பு முறையும் அரசியல் புலமும் நடைமுறையும் சாதியத்தின் தூண்களால் கட்டப்பட்டதென்றே கூறலாம். சாதியம் எவ்வாறு தன்னை ஒரு கூம்பு வடிவாக உருவமைத்திருக்கிறதோ அதேபோல் தான் விடுதலை புலிகளின் அமைப்பு முறையும் கட்டப்பட்டிருக்கிறது. சமூக நடைமுறையில் சாதியக் கருத்தாக்கம் எவ்வாறு தனது கருத்துருக்களை மனிதரிடம் பதிக்கிறது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம். யாழ்ப்பாணா சாதிய அபைப்பை ஒரு கூம்பு வடிவமான அதிகார கட்டமைப்பாக பார்க்கலாம். வெள்ளாள சமூகம் கூம்பின் உச்சியில் இருந்து கொண்டு அடியிலுள்ள சாதிகளை அடிமை குடிமைகளாக பிரித்துத் தனக்கு சேவகம் செய்யும் சாதிகளாக வைத்திருக்கிறது. இந்த அமைப்பு முறை ஜனநாயகம் அற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகள் கேட்டு போராடும் போது அடக்குமுறையை ஏவி விடுகிறது. இது வெறும் அமைப்புமுறை மட்டுமல்ல இதற்குப் பின்னல் உள்ள கருத்தியலும் அது ஆதிக்க சமூகத்தினதும் அடக்கப்பட்ட சமூகத்தினதும் சிந்தனை முறையில் பாதிப்பு செலுத்துகின்றதென்பதும் கவனிக்கபட வேண்டிய விடயங்கள். சொல்வதை செய்ய வேண்டும், மாற்று கருத்து இருக்க கூடாது, அதிகாரத்திற்குக் கட்டுபட வேண்டும் போன்ற பல்வேறு கருத்துருக்கள் இந்த சிந்தனை முறைக்குள் ஒளிந்திருக்கின்றன. இந்த அமைப்பு முறையைப் புலிகளின் அமைப்பு முறையுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசங்களைக் கண்டுபிடித்தல் அரிது.

விடுதலை புலிகளின் அரசியற் பலமானது யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் கையிலேயே இருக்கிறது. 1983ற்குப் பின்னர் ஏராளமான யாழ்ப்பாணத் தமிழர்கள் குறிப்பாக ‘உயர்’ சாதித் தமிழரகள் ஐரோப்பாவிற்கும் கனடாவிற்கும் குடிபெயர்ந்து தம்மை நிலை நிறுத்திக்கொண்டனர். தாழ்த்தப்பட்ட மக்களும் வறியவர்களும் அநேகமாக நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்களாகவோ இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து துன்பம் அனுபவிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களது சிறார்கள் வறுமை காரணமாக ஒரு புறமும் வலுக்கட்டாயமாக மறுபுறம் புலிகளின் இராணுவத்தில் இணைக்கப்படுகிறார்கள். இந்த வெளிநாட்டு ‘உயர்’சாதிச் சமூகமே புலிகளின் அரசியல், பொருளாதார அடித்தளமாகச் செயற்படுகிறது.
வெளிநாட்டு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பார்வையும் விடுதலை புலிகளின் அரசியல் பார்வையும் ஒன்றுக்கொன்று முண்டு கொடுப்பதாகவும் இணைந்து செயல்படுவதாகவும் இருக்கின்றன

வெளி நாட்டில் வாழும் இந்த ஆதிக்கசாதித் தமிழரகள்; ஊர் சங்கங்கள், கோவில்கள், சடங்குகள், தமிழ் பாடசாலைகள் மூலமாகத் தமது சாதி அமைப்பையும் சைவ சித்தாந்த கருத்தியலையும் பேணிக் காப்பற்றி வருகிறார்கள். சாதிச் சங்கங்களை மறைமுகமாக ஊர் சங்கங்கள் என்ற பேரில் அமைப்பதும் ஆதிக்க சாதியினரின் கடவுளரை வைத்து வெளி நாடுகளில் கோவில் கட்டி இலங்கையில் கூட இல்லாத புதிய ஆகம விதிகளும் அனுட்டானமும் கடைப்பிடிப்பதும் தங்கள் குழந்தைகளுக்கு சாதிய, சமயக் கலாச்சாரங்களைத் தமிழ் என்ற பெயரில் ஓதுவதும் தொடர்கிறது. ஊர் அடையாளமென்பது சாதிய அடையாளத்தின் வெளிப்பாடே. ஊர் பெருமை என்பது சாதிய பெருமையின் வெளிப்பாடே. இந்த ஊர் சங்கங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்க படுவதுமில்லை. அவர்கள் சேருவதுமில்லை.

இந்த சங்கங்களையும் கோவில்களையும் தமிழ் பள்ளிக்கூடங்களையும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் பினாமிகளுமே பெருமளவு கட்டுப்படுத்துகிறார்கள். நல்லூர் கந்தனுக்கு, காயத்திரிக்கு, பிள்ளையாருக்கு கோவில் கட்டும் இவர்கள் வைரவருக்கு, அய்யனாருக்கு, முனிக்கு ஏன் கோவில் கட்டவில்லை என்பதைச் சொல்லி தெரிய த் தேவையில்லை.
ஒரு புறம் இறுக்கமான சாதி அனுட்டானங்களை மேற்கொள்ளும் இவர்கள் தங்களை சாதியடிப்படையில் இறுக்கமாக அடையாளப்படுத்தி வருபவர்கள். மறுபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள். இது ஒன்றும் முரண்பாடல்ல. இவர்களது தேசியவாதம் சாதிய அடிப்படையில் அமைந்ததென்றே இது அச்சொட்டாக நிறுவுகின்றது.

மறுபுறம் சாதிய கட்டுமானத்தின் அரசியல் வெளிப்பாடாக வந்த தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதி இருப்பது போலி என மறுக்கிறது. சாதிய அமைப்பு முறைமையை அழித்தொழிப்பதற்கான தலித்திய சிந்தனை முறைமையையும் போராட்டத்தையும் தமிழ்த் தேசியவாதம் எவ்வாறு கொச்சைபடுத்தி முற்றாக மறைக்கப் பார்க்கிறது என்பதற்கு விடுதலைப்புலிகளின் ஆசியுடன் அதன் அதிகாரபூர்வ வெளியீடாக வந்த அடேல் பாலசிங்கத்தின் ‘சுதந்திர வேட்கை’ எனும் புத்தகம் வசமான உதாரணம். சாதிய பிரச்சனைகளைப் பற்றி மேலோட்டமாக இரண்டு பக்கங்களில் அதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
அடேல் சொல்கிறார்:
“குறித்த இந்த சமுக மக்கள் யாழ்ப்பாண சமூக அமைப்பில் கள்ளிறக்கும் சாதி. பரிதாபம் என்னவென்றால் ஆற்றலும் கடின உழைப்பும் தற்பெருமையும் கொண்ட இந்த மக்கள் யாழ்ப்பாண சமுக கட்டமைப்பில் அடிமட்டத்தில் நிறுத்தப்பட்டருந்தனர். பிறப்பினால் ஒரு மனிதனை ஒரு சாதிக்குள் தள்ளி விடும் சமுக அமைப்பு காட்டு மிராண்டிதனமானது. … யாழ்ப்பாணத்து சமுக அமைப்பை நான் கணிப்பிட்ட அளவில் அங்கு உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என வகுத்திருப்பது ஒரு போலியான அடிப்படையிலேயெ என்பேன்…. தம்மை உயர் சாதி என அழைத்துக்கொள்ளும் வெள்ளாள ஆண்கள் தம் அருகிலுள்ள கள்ளிறக்கும் வீடுகளுக்கு மறைவாக செல்வதை நான் கண்டுபிடித்த போது அது வேடிக்கையாகவே இருந்தது . நான் எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். பிளாவில் கள் அருந்தியபடியே தாழ்த்தப்பட்ட பெண்களின் கரங்களால் மீன் பொரியலையும் இறால் பொரியலையும் சுவைத்து மகிழ்வதில் பல மணி நேரம் செலவிடுகிறார்கள். நல்ல தண்ணி போட்டதும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சமுகப் படி முறை காணாமல் போகிறது என்பதை அறிந்த போது அது மனதுக்கு ஆறுதலாக இருந்தது”.

பழங்குடி மக்களை நிறவாத அடிப்படையில் அழித்து தமது ஆதிக்கத்தை உருவாக்கிய அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வந்த அவருக்கு கொஞ்சமாவது சமுகப் பிரக்ஞை இருந்திருந்தால் நூற்றாண்டுகளாக நிலவி வரும் சாதி அமைப்பு முறை போலியானதென்றும் கள்ளுக்கொட்டிலில் காணாமல் போகிறதென்றும் அடேல் கதையாடியிருக்க மாட்ட்டார். வெள்ளையர்களும் கருப்பர்களும் மதுச்சாலையில் ஒன்றாகக் குடித்தால் நிறவாதம் போலியானதாக போய்விடும் என்று கூட நாளை இந்த அம்மையார் எழுதக்கூடும். இவர் ஈழத்தில் இருந்த தசாப்தங்களில் தான் அண்ணாசாமி என்ற தலித் ஈவினையில் கண்டதுண்டமாக வெட்டப்பட்டார். அண்ணாசாமியுடன் ஒன்றாக குடித்த ‘உயர்’சாதி நபர்கள் இக்கொலையில் சம்பந்தம் என்பதும் உண்மை.

மறு புறம் தமிழ்த் தேசியவாதிகளின் தலித்தியம் குறித்த Official position இதுதான் என்பதும் தெளிவு.

தொகுப்பாக:
மேற்குறிக்கப்பட்ட தரவுகளின்படி தமிழ்த் தேசியவாதம் ஆதிக்க சாதிகளின் அரசியல் கருத்தியலின் வெளிப்பாடு. அது சாதிய சிந்தனை முறையில் ஊறிப்போய்க் கிடக்கிறது.

அகிம்சை போராட்டத்திலிருந்து ஆயுதப்போராட்டம் வரை சாதிய கூறுகளின் அடித்தளத்திலேயே தமிழ்த் தேசியவாதம் கட்டப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்காவரை சாதியமைப்பின் கரங்கள் நீண்டுகொண்டே போகின்றன. வெளிநாடுகளிலும் தனது சாதிய இருப்பை யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதி சமய – கலாச்சார – கல்வி அமைப்புகளை நிறுவித் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது. அதுவே தமிழ்த் தேசியவாதத்தின் கருத்தியல் வெளிப்பாடாக அலையாய்ப் பரவுகிறது.

தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் தலித்தியக் கருத்தியலுடன் அடிப்படியில் முரண்படுகிறது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் சாதியத்தை தனது கருத்தியல் அமைப்பியல் பரிமாணங்களாகக் கொண்டிருக்கிறது. தலித்தியம் சாதிய கட்டுமானத்தையும் அதன் கருத்தியல் தளத்தையும் அம்பலப்படுத்தும் போது தேசியவாதம் ஈடாடிப்போகிறது. சாதி இல்லை என்று மறுக்கிறது.

இதன் பின்னணியில் பல்வேறு வரலாறுகள் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கபடுகின்றன. தலித்திய சிந்தனை, அதன் வரலாறு, போராட்டங்கள் அனைத்தும் ஒற்றை பரிமாண வரலாற்றியலால் மறைக்கப்படுகின்றது.

தலித்தியம் ஒருபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கெதிராகப் போராட வேண்டியிருக்கிறது. மறு புறம் ‘உயர்’ சாதி ஆதிக்கத்திற்கும் சைவசித்தாந்த கருத்தியலுக்கும் எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழத் தேசியவாதம், ‘உயர்’ சாதி ஆதிக்கம், சைவ சித்தந்தம் அனைத்தும் பின்னி பிணைந்திருப்பினும் இவற்றை வெவ்வேறு தளங்களில் தலித்தியம் சந்திக்க வேண்டியிருப்பதே கள யதார்த்தம்.

தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் வீச்சு இன்று தலித் இருப்புக்கான அற்ப சொற்ப சனநாயகத்தையும் மறுத்துத் தலித்திய போராட்டங்களை வடக்கில் அடக்கி ஒடுக்கி முடிவுக்கு கொண்டு வந்த இச்சூழலில் புலம் பெயர்ந்த நாடுகளில் தலித்தியம் தனது தடத்தைப் பதித்திருக்கிறது. தலித்தியமானது தன்னை ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கம், பால்நிலை ஆகியவற்றுடன் அடையாளம் காண்பதால் குறுந் தமிழ்த் தேசியப் பார்வையை நிராகரிக்கிறது. தலித்தியத்திற்கு ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. Dalit panthers அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக விடுதலைப் போராட்டத்துடன் தங்களை அடையாளப்படுத்திய பாரம்பரியத்தை கொண்டவர்கள். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் சாதியால் நிறத்தால் பால்நிலையால் அரசியல் பொருளாதார அமைப்பால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மாந்தர்களை ஒன்றிணைக்கும் விடியலிற்கான விடுதலைக் கோட்பாடு தலித்தியம்.

(இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் பிரான்ஸில் நடத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டில் (20.10.2007)வாசிக்கப்பட்ட கட்டுரை.)

பயன்பெறு பிரதிகள்:
1.Caste of the Tiger /Ravikumar/ http://www.himalmag.com/
2. Anderson / Immagined Communities
3. E Leach /Aspects of Caste / 1960
4. Gail Omvolt/ Dalit Vision
5. Murugkar /Dalit Panther Movement in Maharashtra/ 1990
6. அடேல் பாலசிங்கம்/ சுதந்திர வேட்கை/ Fir Max
7. S L Sharma et al / nation and national identity in South Aisa

15 thoughts on “தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

  1. இந்த கட்டுரையின் ஆசிரியர் தமிழ் தேசியம் ஆயுதம் தாங்கிய சூழலின் முதல் தலைமுறையை சேர்ந்தவர். இக்கட்டுரை நிறுவ முனையும் முக்கிய கருப்பொருள் தமிழ் தேசியமும் தலித்தியமும் சமாந்திரமாக முன் நகராது என்பதாகும். அவை சாரம்சத்தில் எதிரெதிரானவை.

    ஆக, தலித்தியத்தின் எழுச்சி என்பது தமிழ் தேசியத்தின் தோல்வி என்பதே கட்டுரையாளரின் ஒப்புதல் வாக்குமூலம்.

  2. ‘தேசியம் எதிர் தலித்தியம்” ? ‘தேசியம் எதிர் மார்க்சியம்” ?

    பி.இரயாகரன்
    28.10.2007

    கடைந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட திரிப்பு. இது தலித்துக்கு எதிரானவர்களின் சதி. ஆதிக்க சாதியினர் தலித்துக்களுக்கு கொடுக்க விரும்பிய நஞ்சு.

    புலியெதிர்ப்பை அரசியல் அடிப்படையாக கொண்டவர்களும், சகல இயக்க புல்லுருவிகளும் இதைத்தான் நிறுவ முனைந்தனர், முனைகின்றனர். இதை ஒப்புப்பாடவும், தலித்தியத்தை சவப்பெட்டியில் வைத்து தூக்கி எடுத்துச் செல்லவும், தலித்மாநாட்டில் கும்மாளமாக குழுமி நின்றனர். இதற்கு ராகவன் என்ற முன்னாள் புலியும், இன்றும் புலியாகவே சிந்தித்து எழுதிய கட்டுரை (http://www.satiyakadatasi.com/?p=115)உதவும் என்று நம்பினர்.

    இப்படி தலித் மாநாட்டை தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு அரசியல் மாநாடாக்க விரும்பினர். இப்படி புலியெதிர்ப்பு மற்றும் இயக்க புல்லுருவிகள் அங்கு சலசலத்தனர். தலித்திய மாநாட்டையும், தலித்திய பிரச்சனையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்புகளை முன்வைத்தனர். இவர்கள் அங்கம் வகிக்கும் இயக்கங்கள், தலித் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது, இருக்கின்றது. ஆனால் தலித் மாநாட்டுக்கு ஆதாரவாம். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றனர்.

    இந்த மாநாடு நடப்பது உறுதியான போது, எப்படி விழுங்குவது என்றே அவர்கள் திட்டமிட்டனர். தாம் இதை எதிர்க்கவில்லை என்று காட்டவும், ஆதரவு தெரிவிப்பதாக கூறி விழுங்கவும் விரும்பினர். இந்த வகையில் பலர் இதற்கென்றே, பாடைகளைக் கட்டிக்கொண்டு வந்திருந்தனர். ரீ.பீ.சீ இந்த அடிப்படையில், திட்டமிட்டு வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது.

    இந்த அரசியல் சதியையும், அதன் நுட்பத்தையும், இதன் சூக்குமத்தையும், நாம் புரிந்து கொண்டு, இதன் கபடத்தை தோலுரித்தோம். எமது எச்சரிக்கை கலந்த உணர்வுகள் மூலம், அதை துல்லியமாக கிள்ளி எறிந்தோம். தலித் மக்களின் வெற்றி என்பது, புலியெதிர்ப்பு அணிக்குள் அது கொள்கையளவில் சரணடைய மறுத்தது தான்.

    எமது அனுபவம், சந்தர்ப்பங்கள், தொடர்ச்சியான புலியெதிர்ப்பு அணிகளின் நடத்தைகள், எமது தெளிவான துல்லியமான அணுகுமுறை மூலம், சதிகளையும் சூழ்ச்சிகளையும் கபடத்தையும் சுக்குநூறாக்கினோம்.

    ‘தமிழ்த் தேசியமும் தலித்தியமும்” என்ற ராகவனின் கட்டுரையும், அவரின் உரையும் தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்று நிறுவுவதே நோக்கமாக இருந்தது. இதன் மூலம் அவர் சாதிக்க நினைத்தது, தலித் மக்களை புலியெதிர்ப்பின் பின் ஒன்று இணைப்பது தான். வேறு எந்த தலித்திய நோக்கமுமல்ல. அவர் கூற முனைந்தது, நாங்களும் நீங்களும் புலியெதிர்ப்பில் ஒன்று என்பதே. இங்கு நாங்கள் என்பது உயர்சாதியினர், நீங்கள் என்பது தாழ்ந்த சாதியினர். இப்படி ஆதிக்க சாதியினரின் குரலாக, அவரின் அறிவொழுகும் கட்டுரையில் பாசிசமாக கொட்டியது.

    இதற்கு அவர் எடுத்துக் கொண்ட மையமான வாதம், தேசியம் சமன் புலி என்ற எடுகோள். இப்படி புலியெதிர்ப்பின் அரசியல் அச்சே, இதில் தான் உள்ளது. உண்மையில் ராகவன் 1980 களின் முன்னும் பின்னும் எதை அவர் தேசியமாக கருதி புலியில் செயல்பட்டாரோ, அதை இன்று மீண்டும் ஒப்புவிப்பது தான, இதில் உள்ள அரசியல் சூக்குமம். 1978 இல் நடந்த புலிகளின் உடைவில் ராகவன் போன்றவர்கள் எதை தேசியம் என்று கருதி புலியின் பின் நின்றனரோ, அதையே இன்றும் தேசியமாக கற்பிப்பது தான் அபத்தம்.

    பிரபாகரனும் புலிகளும் கூறிய தேசியமும், அன்று புலியில் இருந்து பிரிந்தவர்கள் வைத்த தேசியமும் வேறு. பிரிந்து சென்றவர்களுடன் இருந்த சுந்தரம், இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உமாமகேஸ்வரனை மறுபடியும் சேர்த்து, பழையபடி புலியின் தேசியத்தை உயர்த்தினர். பிரிந்த பலர் ஒதுங்கினர். ஒரு சிலர் புதிய இயக்கங்களை உருவாக்கினர். இப்படி தேசியம் பற்றி பல வரலாறுகள் தொடர்ச்சியாக இருக்க, ராகவனும் அவரையொத்த புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலித் தேசித்தையே இன்றும் தேசியமாக காட்டுவது மூலம் தான் இவர்களின் அரசியல் இருப்பே நீடிக்கின்றது.

    இப்படி உண்மையில் பிரபாகரன் புலிக்கு மட்டும் தலைவர் அல்ல, புலியெதிர்ப்பு அணிக்கும் தலைவராக உள்ளார். பிரபாகரன் வைக்கும் தேசியத்தை ஆதரிப்பது, அவரின் தேசியத்தை தேசியமாக காட்டி எதிர்ப்பது என்ற வகையில், பிரபாகரன் புலி மற்றும் புலியெதிர்ப்பின் உண்மையான கோட்பாட்டுத் தலைவராகிவிடுகின்றார். பிரபாகரனின் தேசியத்தை தேசியமாக காட்டித் தான், தலித் எதிர் தேசியம் என்று நிறுவ முனைகின்றனர். இப்படித்தான் இந்த கும்பலின் மொத்த அரசியலும் உள்ளது.

    கடந்த 30 வருடத்தில் புலிக்கு வெளியில் மாற்று தேசியம் இருக்கவில்லையா? இப்படி ஒன்று இல்லை என்பது புலியெதிர்ப்பு மற்றும் துரோக இயக்கங்களின் அரசியல் நிலையாகும். எதிரியுடன் அன்னிய சக்திகளுடன் கூடி நிற்கின்ற, இந்த இழிந்து போன பிரிவுகளின் அரசியல் என்பது, அதை இல்லை என்பதுதான். புலிகளைப் பொறுத்த வரையில் அதை அழித்தல், அவர்களின் இருப்பு சார்ந்ததாகின்றது.

    நாம் அந்த கூட்டத்தில் தெளிவாக மாற்று தேசியத்தை சுட்டிக்காட்டிய வரலாறு, உள்ளடக்கத்தில் தலித்திய வரலாறும் கூட. ஆம் அன்றைய இயக்கங்கள் அனைத்தும் அதாவது புலி உட்பட, அனைவரும் சமூக விடுதலையையும் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான வேலைத்திட்டத்தையும் முன்வைத்தே இயக்கங்களைக் கட்டினர். இதனடிப்படையில் அணிகள் இயக்கத்தினுள் உட் சென்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது.

    இன்று பாசிச புலிகளாகி இதை மறுக்கும் அவர்களின், அன்றைய வேலைத்திட்டம் தெளிவானது. சில உதாரணங்கள் இதை தெளிவுபடுத்தும். ‘தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்.” என்று பாலசிங்கம் கூறுகின்றார். ‘தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே” தமது இலட்சியம் என்றனர் தமது முதல் வேலைத்திட்டத்தில். இப்படி மக்களின் அரசியல் விடுதலையைப் பற்றி அவர்களின் முதல் அறிக்கை தெளிவாகவே பேசுகின்றது.

    அந்த விடுதலை என்பது ‘சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்” ஆட்சியாக அமையும் என்றனர்.

    அத்துடன் அவர்களின் முதல் அறிக்கை விட்டுவிடவில்லை. “சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்” என்றனர்.

    சமூக அமைப்பை விளக்கும் அவ் அறிக்கை ‘தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்” என்றனர்.

    இதை முன்வைக்கும் எம்மை புலிகள் துரோகி என்கின்றனர். புலியெதிர்ப்போ எம்மை புலி என்கின்றனர். அதை விடுவோம்.

    சகல இயக்கமும் இதையொத்த ஒரு வேலைத்திட்டத்தை அல்லது இதைவிட உயர்ந்த வேலைத்திட்டத்தை முன்வைத்து தான் அமைப்பைக் கட்டினர். எந்த உறுப்பினரும், இதற்கு எதிரான உணர்வுடன் அமைப்புகளில் இணையவில்லை. இன்றைய தலித் மாநாடு கூட, இந்தளவுக்கு கொள்கையளவில் கூட முன்னேறவில்லை. அந்தளவுக்கு அது பிற்போக்காகவே இன்றும் உள்ளது.

    அன்று இப்படி வைக்கப்பட்ட முற்போக்கான நடைமுறைச் சாத்தியமான சரியான தேசியத்தை, இன்று போல் அன்றும் மறுத்தவர்கள் யார்? இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்களின் தலைமை தாங்கும் தகுதியற்ற அறிவற்ற குருட்டுத் தன்மை, இராணுவ சாகசத்துடன் தலைமையை நிர்ணயம் செய்ததும், அன்னிய சக்திகளின் கூலிக் குழுவாக (இந்தியாவும் இந்தியாவூடாக ரூசியாவும் மற்றும் அமெரிக்கா) மாறத் தொடங்கி போது, இந்த இலட்சியங்களை, தலைமையே எதிராக பார்க்கத் தொடங்கியது. இது தான் எமது இயக்க வரலாறு. இப்படித் தான், மனித குலத்துக்கு எதிராக அவாகள் இயங்கத் தொடங்கினர்.

    இயக்கம் முன்வைத்த மனித இலட்சியங்களை இயக்க நடைமுறையில் கோரியவர்களை, அதை அடிப்படையாக கொண்டு இயங்கியவர்களை, உள்ளியக்க படுகொலைகளின் மூலம் அந்த முற்போக்கான தேசியக் கூறை அழித்தனர். பலரை திட்டமிட்டு ஒதுக்கினர். பிற்போக்கு சக்திகளைக் கொண்டு தலைமையை நிரப்பினர். அதாவது உள்ளியக்க படுகொலைகளின் மூலம் மனித இலட்சியத்தை முன்வைத்தவர்கள் கொல்லப்பட்டனர். சித்திரவதைகளை சந்தித்தனர். பலரை சிதைத்தனர். அரசியலை விட்டு ஓடவைத்தனர். இப்படி உள்ளியக்கத்தை தூய பிற்போக்கான கூறாக மாற்ற, முற்போக்கை சுத்திகரித்தனர். அடுத்து சமூகத்தில் இதைச் செய்யத் தொடங்கினர்.

    புலிகள் மற்றைய இயக்கங்களை அழித்து வரலாற்றை தனதாக்கும் முன்பாக, அனைத்து பெரிய இயக்கமும் இதைத்தான் செய்தனர். இயக்க அழிப்பை புலிகள் முன்னெடுத்த பின், அனைத்தையும் புலிகள் முழுமையாக செய்து முடித்தனர்.

    இப்படி தான் முற்போக்குத் தேசியம், பிற்போக்கு தேசியமாக மாறியது. இதைத்தான் ராகவனும் தலித் மாநாட்டில் இருந்த பலரும் செய்தனர் அல்லது கோட்பாட்டளவில் அதை ஆதரித்தனர். இன்றுவரை ஆதரிக்கின்றனர்.

    இந்த தலித் மாநாடு, முற்போக்கு தேசியத்தில் சாதி ஒழிப்பை வலியுறுத்தி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண மறுத்து நின்றது கண்கூடு. அதை அவர்கள் உணரவில்லை என்ற அடிப்படையில், தமது சுயவிமர்சனத்தை வைக்க வேண்டியது அவசியமானது என்ற வகையில், அவர்கள் மீதான விமர்சனத்தை செய்ய முற்படவில்லை. இப்படி உண்மையில் தலித்திய பிரதிநிதிகளாகவும் கூட, நாங்கள் மட்டுமே வரலாற்று தொடர்ச்சியில் நிற்பது இன்று வெளிப்படையானது.

    இப்படி தேசியம் தொடர்பான வரலாறு இருக்க, ராகவன் தேசியம் எதிர் தலித்தியம் என்கின்றார். யாரெல்லாம் தேசியத்தின் மூலம் சாதியை ஒழிப்பதாக கூறி அணிதிரட்டினரோ, அவர்களே அதை நடைமுறையில் கோரியவர்களை கொன்றதை ‘தேசியம் எதிர் தலித்தியம்” மூலம் மூடிமறைக்கின்றனர். இப்படிக் தாங்கள் கொன்றதைக் கூட, அவர்கள் தமது பதிவில் எடுக்க மறுத்துள்ளார். எப்படிப்பட்ட தலித் விரோதிகள். இந்த கொலைகளை நியாயப்படுத்த, கொன்றவர்களின் வலதுசாரி பாசிசத்தை தேசியமாக காட்டுகின்றனர். இப்படித்தான் அவரின் தலித் பற்றி வலதுசாரிய மலட்டு ஆய்வுரை தொடங்கியது.

    ராகவன் புலியின் தலைமையில் இருந்த போது, பாசிசத்தை தேசியமாக கருதிசெயல்பட்டதை கொள்கையளவில் கூட சுயவிமர்சனம் செய்யாமையை தான் ‘தேசியம் எதிர் தலித்தியம்” என்கின்றது. தாம் ஏன் கொன்றோம் என்ற உள்ளடகத்தை மூடிமறைத்து, அதை தேசியம் என்று கூறி நியாயப்படுத்துவது என்பது கடைந்தெடுத்த பொறுக்கித்தனம். அவர் இயக்கத்தில் இருந்து விலகியது என்பது, தேசியம் பற்றிய மாற்று அரசியலில் இருந்தல்ல. அதையே அவரின் ‘தேசியம் எதிர் தலித்தியம்” கோட்பாடு அழகாக நிறுவுகின்றது. அவர் புலியில் இருந்து விலகியது, தனது அதிகாரம் பற்றியதேயொழிய தேசியம் பற்றியதல்ல. தேசியம் பற்றி அவரின் கருதுகோள், இதை நிறுவுகின்றது.

    சாதியொழிப்பை உள்ளடக்கிய முற்போக்கு தேசியத்தை முன்வைத்தவர்களை அழித்து உருவானதே, எமது தேசிய வரலாறு. இப்படி பிற்போக்கு வலதுசாரிய பாசிசத்தை, தேசியமாக காட்டுவது புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பும் தான். தேசியம் பற்றி திரித்து வைக்கின்றவர்கள், அதை தேசியமாக காட்டுகின்ற புலி மற்றும் புலியெதிர்ப்பு கோடபாடுகள் தான் சமூகத்தின் போக்கை நிர்ணயம் செய்ய முனைகின்றனர். இதை மறுத்து நாங்கள் மட்டும் முரண்நிலையாக இருப்பதும், தலித் மக்களின் உண்மையான விடுதலைக்காக உறுதியோடு நிற்பவர்களாக இந்த வரலாற்றில் நாம் நிற்கின்றோம்.

    உட்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்கள் யார்? ஏன் கொல்லப்பட்டனர். அவர்கள் முன்வைத்த தேசியம் எது? இப்படி மாறுபட்ட தேசியக் கூறுகள், எமது இந்த தேசியப் போராட்டத்தில் இருந்துள்ளது. இதை மறுத்து ஒற்றைப் பரிமாணத்தில் தேசியத்தை காட்டுகின்ற ராகவன், மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் திட்டவட்டமாக மக்களுக்கு எதிரானதும், படுபிற்போக்கானதுமாகும். தேசியத்தை புலியிசமாக காட்டுவது, புலிக்கு சோரம் போவது தான். இவர்களின் அரசியலே, புலியின் பாசிசத்தை தேசியமாக காட்டுவதில் தான் மிதக்கின்றது. புலியின் பாசிசத்தை மூடிமறைப்பதன் மூலம், தமது பாசிசத்தை பாதுகாப்பது புலியெதிர்ப்பு அரசியலாகின்றது.

    புலி பாசிசத்தை தேசியமாக காட்டும் ராகவன், அம்பேத்கரை துணைக்கு அழைக்கின்றார். “நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்” அம்பேத்கரின் இக் கூற்று ராகவனின் கோட்பாட்டுக்கு எதிரானது. அம்பேத்கர் வேறு ஒரு தேசியம் உண்டு என்பதையும், அதை செய்யக் கோருகின்றார். ‘நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள்” என்ற அழைத்து கூறுவதையா, நீங்களும் நீங்கள் அங்கம் வகிக்கும் புலியெதிர்ப்பு அரசியலும் செய்கின்றது. இல்லை. அம்பேகத்கர் கூறுகின்றார், இதை செய்யாத வரை ‘நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை” எவ்வளவு தெளிவான வாதம். இதையா நீங்களும் உங்கள் கும்பலும் தமிழ் மக்கள் முன் வைக்கின்றீர்கள். அம்பேத்கர் சரியாகவே அதை செய்கின்றார். சமூகத்தை மாற்றப் போராடுகின்றார்.

    இப்படி ராகவன் கட்டுரையின் தொடக்கத்தில் போட்ட அம்பேகத்கர் வரியே , அவரின் ஆய்வுக்கு எதிரானது. எங்களுடைய நிலைக்கு மட்டும் தான் அது மிகப் பொருந்தும். அம்பேத்கரின் இந்த விமர்சனம், தேசியத்தை சாதிக்கு எதிராக நிறுத்தவேயில்லை. தேசியத்தின் தேவையை, சாதிய ஒழிப்பின் ஊடாகவே கோருகின்றார். இது தான் அவரின் முரண்பட்ட அம்சம்.

    இதைக் கூட புரிந்துகொள்ளாதவர்கள், தேசியம் என்பதை புலியிசமாக காட்டுகின்றவர்கள் எதைத்தான் தலித் மக்களுக்கு கூற முடியும். தலித் மக்களின் தலையில் அரைக்க முனைகின்றனர். பிரபாகரனையும், அவரின் புலி இயக்கத்தையும் மறுப்பதாக கூறும் இவர்கள், அதைப் பாதுகாப்பது தான் இதில் உள்ள சூக்குமமாகும். தேசியத்தை புலியில் இருந்து வேறுபடுத்தி பார்க்க மறுக்கின்ற அரசியலை, தலித்துகளுக்கு அம்பேத்கருக்கு மாறாக அம்பேத்கரின் பெயரில் அவிக்கின்றனர். பிரபாகரன் தேசியம் என்றால் என்னவென்று எதை வரையறுத்துள்ளாரோ, அதையே மீண்டும் தேசியமாக காட்டுவது அதை ஏற்றுக்கொள்வது புலியெதிர்ப்பின் அரசியல் மலட்டுத்தனமாகும். இதுவே இதில் உள்ள பிரதானமான மையமான விடையம். இதை நாம் அங்கு துல்லியமாக அம்பலப்படுத்தினோம்.

    பிரபாகரனும் புலிகளும் கூறுவதா தேசியம்? இதை யாரால் விவாதிக்க முடியும்? இந்த கேள்வியை, புலியெதிர்ப்பு கேள்வியாய் கேட்பதில்லை. அதை விவாதத்துக்கு எடுப்பதில்லை. மாறாக அதை தேசியமாக கூறிக்கொண்டு தான், தமது பிற்போக்கான அனைத்து வகை செயல்பாட்டை நியாயப்படுத்துகின்றனர்.

    வலதுசாரிய பிற்போக்கு கூறு இடதுசாரிய முற்போக்கு கூறுகளை அழித்ததால், தேசியம் பிற்போக்கான கூறாகிவிடுமா? இல்லையே. எப்படிப்பட்ட சாதிய மலட்டு ஆய்வு. அனைத்தையும் கட்டுடைப்பதாக கூறுகின்ற எவரும், இதை கட்டுடைப்பதில்லை. வலதுசாரி பாசிச கூறு முற்போக்கை அழித்து வெல்வதற்கு, இந்தியா முதல் அமெரிக்கா வரை பயிற்சியும் ஆயுதமும் கோட்பாடு வழிகாட்டலையும் வழங்கியதே எமது வரலாறு. இப்படித்தான் முற்போக்கு கூறுகள் அழிக்கப்பட்டது. ஏன் இன்றுவரை அந்த பிற்போக்கு கூறு தான் புலி அல்லாத தளத்திலும் ஆதிக்கம் வகிக்கின்றது. இது இன்றைய எமது சமகால வரலாறு.

    வலதுசாரியம் அன்று அழித்தது, தேசியத்தின் தோல்வியா? இல்லை. எல்லா பிற்போக்குவாதிகளும், இதை தேசியத்தின் தோல்வியாக கூறுவதும், இதை தேசியம் என்பதும், எம் கண்முன்னால் நடக்கும் கோரமான சமூக இழிவாடல்கள். இப்படி இவர்களின் அரசியல் நேர்மை, தெளிவாகவே அம்மணமாகின்றது.

    ‘தேசியம் எதிர் தலித்தியம்” என்று கூறும் ராகவன் ‘இன தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்.” என்கின்றார். தேசியத்தை புலியிசமாக காண்பவர், எப்படி தீர்க்கப்படாத அந்த முரண்பாட்டை காணமுடியும். வார்த்தைகளால் வேடிக்கை காட்டுகின்றார். புலிப்பாசிசம் சமூக முரண்பாடு எதையும் தீhக்காது. உண்மையில் அதை பாதுகாப்பதால் தான், அது பாசிசமாக இருக்கின்றது. இது தேசியமாக காட்டுவது சித்தரிப்பது, ‘தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்” என்று புலுடா விடுவது அரசியலாகின்றது.

    தேசியத்தை பற்றி இந்த புலி ‘அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது.” இதுவா தேசியம். தேசியம் என்பது, குறைந்தபட்சம் முதலாளித்துவ புரட்சியை அடிப்படையாக கொண்டது. சகல நிலப்பிரபுத்துவ சமூகக் கூறையும் ஒழித்துக்கட்டுவதே தேசமாக கொண்டு அமைவதே தேசியம். இதற்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று முதலாளித்துவ தேசியம். இரண்டு பாட்டாளி வர்க்கத் தேசியம். பாட்டாளி வர்க்கத் தேசியம் சர்வதேசியத் தன்மை கொண்டது. இரண்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. தேசிய பொருளாதாரத்தை மறுக்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதே தேசியம். இப்படி தேசியம் பற்றிய வரையறை மக்கள் நலன் சார்ந்துண்டு. இதை புலிகள் மறுக்கலாம், புலியிசத்தை தேசியமாக கொண்ட புலியெதிர்ப்பு (நீங்கள்) மறுக்கலாம். தேசிய உண்மைகளை மறுக்க, யாராலும் முடியாது.

    தேசியத்தின் உண்மைத் தன்மையை மறுக்க முனையும் இந்தப் புலி ‘சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழத் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்.” என்கின்றார். இதனால் தேசியம் எதிர் தலித். என்ன வேடிக்கை. தேசியம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையை அடிப்டையாக கொண்டது. நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, நிலத்தை உழுபவனுக்கு பங்கிடுவதை அடிப்படையாக கொண்டது. புலிகளின் திட்டம் கூட இதையே வலியுறுத்தியது. தேசியம் சரியாகத்தான் அன்றும் இன்றும் உள்ளது.

    மறுபக்கத்தில் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இல்லை என்பதால், எப்படி தேசியம் தவறாகிவிடும். நீங்கள் பாதுகாக்கும் உன்னதமான இந்த சுரண்டல் அமைப்பில், உழைக்கும் மக்கள் கூட்டம் அப்படித்தான் உள்ளது. நிலமற்ற மக்கள் போராடவில்லையா? போராடக் கூடாதா? நிலமற்ற அந்த தலித் பாட்டாளி வர்க்கத்தின், புரட்சிக்காகவா நீங்கள் கூச்சல் போடுகின்றீர்கள். இல்லை, நிச்சயமாக எதிர்புரட்சிக்காக அல்லவா! அதாவது தாழ்த்தப்பட்டவனுக்கு எந்த வகையிலும் நிலம் கிடைக்கக் கூடாது, என்பதற்காகத்தான், தேசியத்தை திரித்துக் காட்டுகின்றீர்கள். ஆதிக்க சாதிகளின், ஆதிக்க வர்க்கத்தின் குரல்கள் இவை.

    ‘நிலம் மறுக்கப்பட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது.” என்பதன் மூலம் நிலம் கிடைக்கும் வழியை தடுப்பது, இந்த தலித் விரோதிகளின் நோக்கமாகும். சரி நிலம் இல்லை, அது கிடைக்கும் வழி என்ன? அதை மட்டும் சொல்ல மாட்டார்கள். புலிகளின் பாசிசம் தேசியத்தின் பெயரில் அதை மறுப்பதால், தேசியம் அதை மறுத்துவிடுமா? ஏகாதிபத்திய எடுபிடிகளாகி சலசலக்கும் நீங்கள், யாருக்கு வேடிக்கை காட்டுகின்றீர்கள்.

    ‘நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது.” சரி எப்படித்தான் சாதி ஒழியும். அல்லது எப்படி ஓழிப்பீர்கள். அதை மட்டும் சொல்லவரமாட்டார்கள். உழைக்கும் மக்களின் எதிரி, முன்னாள் இன்னாள் புலியாக இருந்தால், இருப்பதால் இப்படி புலியாகி ஒப்பாரிவைக்கின்றது. எதிர்ப்புரட்சி கோட்பாட்டைக் கட்டிக்கொண்டு அழுகின்றது. பாட்டாளி வர்க்கப் புரட்சி முன்வைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் மூலம் மட்டும் தான், சாதியை ஒழிக்கும். இதற்கு மாற்று வழி எதுவும் கிடையாது. தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்கின்ற இந்த புலியெதிர்ப்புக் கோட்பாடு, தலித்தியத்துக்கு எதிர் அல்லாதது எதுவென்றாவது சொல்ல முனைகின்றதா? அது ஏகாதிபத்தியமே என்று சொல்லுவதற்கு, இந்த நாய்கள் படுகின்ற பாடு சொல்லிமாளாது.

    எப்படித்தான் குத்தி முனகினாலும், உங்கள் எதிர்ப்புரட்சி புலியின் பெயரால் புரட்சியாகிவிடாது. ‘சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது.” ஆகாகா அம்பேத்கரையே மறுக்கின்ற இழிவாடல்கள். தேசியம் பேசினால் தான், சாதியம் ஒழியும். தேசியத்தை தலித்தியம் தனது சொந்த அதிகாரத்துக்காக கையில் எடுத்தால் தான், சாதி ஒழியும். வேறு எந்த வகையிலும் சாதியை ஒழிக்கமுடியாது. தலித்திய விடுதலையை மறுத்த தேசிய மறுப்பில் தான், சாதி கூறு கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

    புலி பாசிசம் ஏன் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து நிற்கின்றது? ஏன் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுக்கின்றது. அந்த இயக்கத்தில் இருந்தவருக்கு நன்கு தெரியும். சமூக முரண்பாடுகளை தீர்க்கக் கோரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, இது அவசியமாகின்றது. சமூக ஓடுக்கு முறையைக் களையக் கோரும் தேசியத்தை மறுத்து, தேசியத்தின் பெயரில் பாசிசப் புலியிசம் பரிணாமித்து நிற்கின்றது.

    ‘சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம்” என்பது தவறானது. மாறாக வீறு கொண்ட தேசியமாக பரிணாமிக்கும். அது புலிப் பாசிசத்தை ஒழித்துக்கட்டும். உண்மையாக தேசியம் சரியாக முன்னுக்குவரும். அது வரக் கூடாது என்பது புலியெதிர்ப்பின், எதிர்ப்புரட்சிகர அரசியல் சாரமாகும்.

    ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தமது அதிகாரத்தை அடைவதற்காக, சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையும் போராட்டத்தின் ஊடாக போராட்டத்தை தனதாக்கவேண்டும். இந்த வகையில் தேசியம், வர்க்கப் போராட்டம் என, எந்த சமூக ஒடுக்குமுறையும் தனதாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறவேண்டும். இந்தப் போராட்டத்தை அதுவே தலைமை தாங்க வேண்டும். இதைப் புலியும் சரி, புலியெதிர்ப்பும் சரி, ஒருநாளும் அனுமதிக்காது என்பது வெளிப்படையானது.

  3. புலிசார்பு மற்றும் புலியெதிர்ப்பு இல்லாத தலித் போராட்டத்தை உள்வாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கானதாக ‘இருந்திருக்கும்’ என்பதும், தற்போது புலிகளால் முன் வைக்கப்படும் பாசிச தமிழ் தேசியமும், ஏகாதிபத்திய சார்புடைய புலியெதிர்ப்பு அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டியவை என்பதுமே, என்னால் புரிந்து கொள்ளப்பட்ட, இராயாகரனின் நீண்ட எதிர்வினையில் உள்ள சாரம்சம்.

    ‘மார்க்சிஸ்ட்’ என்று தன்னைத் தான் விழித்து எழுதும் இராயாகரன் தான் சொல்ல விரும்பும் கருத்துகளை வார்த்தைகளில் சிலுசிலுப்பு காட்டாமல் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுத முதலில் பழகிக்கொள்ள வேண்டும்.

    இராயாகரன் மேலே எழுதியுள்ள ‘விமர்சனத்தை’ சாதாரண தமிழ் அறிவுள்ள ஒருவரிடம் ‘கொழித்தெடுக்க’ விட்டால் மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லக்கூடிய ‘கருத்துகள் எனக் கருதக்கூடியவை’ இரண்டு பத்திகளைத் தாண்டாது. ஆனால் இராயாகரன் ‘குத்தி முறிஞ்சு’ முப்பத்தி மூன்று பத்திகளில் நீட்டி முழங்கியுள்ளவைகளில் வெற்று வேட்டுகள் ஏராளம்.

  4. You don’t understand the basic concept of nation and nationalism. The entity of the nationalism has always been used for the benefit of imperialism as well feudalism in srilanka . Nationalism is something against the feudalism and in the 3rd world context its also against the foreign economy and imperialism. LTTE and the other groups are anti-nationalist. Try to find out the what nationalism is!! At least google it!!

  5. ரயாகரனின் வாதத்தில் காழ்ப்புணர்வும் பொறாமையுமே மேலோங்கியிருப்பதாக நான் கருதுகிறேன். இவ்வாறான தனிநபர் தாக்குதல்களை அவர் கைவிடுவார் என எல்லாம் வல்ல ஸ்டாலினையும் பொல்பொட்டையும் வேண்டுகிறேன். என்மேல் அவர் தொடுத்த காழ்ப்புணர்வு கொண்ட அவதூறுகளிற்கு நான் பதில் சொல்வதோ அல்லது ரயாகரன் மேல் பதிலுக்கு பதிலடி போடுவதோ எனதுநோக்கமுலமல்ல. எனதுநேரத்தை அரசியல் முதிற்சியற்ற வெட்டி விவாதங்களில் வீணாக செலவிடுவது வேஸ்ட்.

    ஆனாலும் அவரது கட்டுரையில் தொக்கிநிற்கின்ற கருத்துரீதியான விடயங்களை மட்டும்நான் விவாதத்துக்குள்ளாக்கிறேன்.

    அம்பெத்கார் பற்றிய அவரது கண்டுபிடிப்பில் அவர் ஒரு தேசிய வாதி . அவர் கூறுகிறார் : இப்படி ராகவன் கட்டுரையின் தொடக்கத்தில் போட்ட அம்பேகத்கர் வரியே , அவரின் ஆய்வுக்கு எதிரானது. எங்களுடைய நிலைக்கு மட்டும் தான் அது மிகப் பொருந்தும். அம்பேத்கரின் இந்த விமர்சனம், தேசியத்தை சாதிக்கு எதிராக நிறுத்தவேயில்லை. தேசியத்தின் தேவையை, சாதிய ஒழிப்பின் ஊடாகவே கோருகின்றார். இது தான் அவரின் முரண்பட்ட அம்சம்.

    அம்பேத்கார் தெளிவாக கூறுகிறார்: ‘ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தேசம்’ முதலில் ரயாகரன் அம்பேத்காரை ஒழுங்காக வாசிக்க வேண்டும்.

    எனது கட்டுரை தமிழ் தேசியவாததின் அரசியல் சமூக பின்னணியை காலனித்துவ பின் காலனித்துவ காலப்பகுதிகளில் அடையாளம் காண முயன்றது. தலித் மக்களின் போராட்டம் இந்த சம கால பகுதிகளில் எவ்வாறு ‘ தமிழர் ஒற்றுமை’ யின் கீழ் ம்றைக்கப்பட்டது எனநான் ஆதாரங்களுடன் காட்டினேன். இந்த விடயங்களில் ஒன்று கூட விவாதத்திற்கு வரவில்லை.நான் எந்த இடத்திலும் தலித்தியம் சர்வ ரோகநிவாரணி என்று கூறவுமில்லை. மார்க்சிய எதிர்ப்பை காட்டவுமில்லை. வரட்டுத்தனமான படி முறை வளர்ச்சி சிந்தனை மார்க்கியத்தின் ஆன்மாவையே அழித்து விடும். இதுவே நாம்நடைமுறையில் புரட்சிக்கு பிந்திய சமூகங்களான சோவியத்திலும் சீனாவிலும் கண்ட உண்மை. மாங்காயை அடித்து கனிய வைக்கும் வேலையை ஸ்டாலின் செய்து சோவியத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் பேரில் கட்சி சர்வாதிகாரமாக்கி பொலிட் பீரோவிலிருந்து தனக்கு எதிரான அனைவரையும் கூண்டோடு கைலாயம் அனுப்பியது வரலாறு. இந்த பாடங்களை காண மறுத்து இது வெறும் ஏகாதிபத்திய பிரசாரம் என கூறி விமர்சனங்களை ஏற்க மறுக்கும் மார்க்சிசத்தை பைபிளாக்கும் நபர்களே மார்க்கியத்தின் பரம எதிரிகள்.

    சிலருக்கு ஒரு ஆதங்கம் இருக்கிறது.நாங்கள் நல்ல தேசிய வாதத்தை முன் வைத்தோம். ஆனால் புலிகள் தேசிய வாதத்தை கையில் எடுத்ததால் அது பாசிசமாகிவிட்டதென்று. தேசிய வாதம் காலனித்துவத்துக்கெதிரான போராட்டங்களில் முற்போக்கான அம்சங்களை கொண்டிருந்தது எனபதை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளலாம். இந்த தேசிய வாதம் இன ரீதி யாக பெரும் பாலும் இருக்கவில்லை. காலனித்டுவத்திற்கெதிரான சகல இன குழுக்களையும் குறைந்த பட்சம் கொள்கையளவிலாவது ஒன்றாக்க முயன்றது. காலனித்டுவத்திற்கு பின் வந்த இன ரீதியான தேசிய வாதம் பிற் போக்கானது என்பது எனது கருத்து.

    முக்கியமாக வட பகுதியில் எழுந்த தமிழ் தேசிய வாதமும் அதன் சமூக பின்னணியும் பற்றி ஏற்கெனவே நான் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். விடுதலை புலிகள் ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை. அவர்கள் யாழ் மைய வாத சாதிய தேசியவாததின் வெளிப்பாடே. ஏன் சாதிய எதிர்ப்பை சம காலத்தில் போராட்ட வடிவமாக கொண்ட அமைப்புகள் வெற்றி பெற முடியவில்லை. இதற்கான பதிலுக்கு ரொக்கட் சயன்ஸ் தேவையில்லை.

    எனது கட்டுரை முடிந்த முடிவொன்றோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென்றோ நான் சொல்ல வரவில்லை. தமிழ் தேசிய அடையாளம் அதன் அரசியல் சமூக பின்னணி ஆகியவற்றை நான் கேள்விக்குள்ளாக்கிறேன். இது வெறும் புலி அரசியல் அல்ல. இதற்கான அரசியல் ராமனாதன் காலத்திலிருந்தே ஆரம்பிக்க பட்டுவிட்டது. அது எல்லாமிருக்க ஒரு விசயம் பட்டும் எனக்கு விளங்கவில்லை. ரயாகரன் கூறுகிறார்:நாம் தவிடு பொடியாக்கினோம்.நாம்நொருக்கினோம் என்று. எனக்கு தெரிந்த அளவில் ரயாகரன் என்ற தனிநபர் ஒரு சில கருத்துகளை தலித் மானாட்டில் தெரிவித்தார்.

  6. ராகவன்
    தேசியம் என்பது அடிப்படையில் சமூகத்தில் வராலாற்று வளர்ச்சியில் ஒரு தவிர்க்க முடியாத கட்டம். நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்கெதிரான புதிய அமைப்பு முறையே இது. சாதீயம் பிரதேச வாதம் போன்ற மக்கட் பிரிவினைகளைக் கொண்டிருக்கும் இந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு தேசிய இனமாக ஒருங்கிணைவதற்கான போராட்டம் தேசியப் போராட்டத்தின் ஒரு அம்சமாகும்.
    மூலதனச்ச்ந்தையை நோக்கி அணிதிரளும் ஒரு மக்கள் கூட்டம் தேசிய இனமாக பரிணமிக்கும்.
    இந்த தேசிய இன உருவாக்கத்தின் ஆரம்பமே காலனி ஆதிக்கத்திற்குப் பின்னர் நாம் கண்ட தமிழ் தேசிய இன உருவாகமாகும்.
    இதந்த தேசிய உருவாக்கத்திற்கெதிரான ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட சீரழிப்பின் விழைவே விடுதலைப் புலிகளாகும்.
    பிரஞ்சுப்புரட்சிக்குப்பின்னர் உருவான தேசியம் என்ற கருத்து இனங்களுடன் தொடர்புடையதாகும்.
    பல மக்கட் குழுக்களின் ஒருங்கிணைப்பே பிரஞ்சு தேசிய இனமானது. இந்த இணைபுக்கெதிராக அனகாரிகவையும் ஆறுமுக நாவலரையும் ஏன் புலிகளையும் தனது அன்னிய மூலதன நலனுக்காக ஏகாதிபத்தியம் உருவாக்குகிறதென்றால் நாமும் தேசியத்திற்கெதிராக குரல் எழுப்புவது சரிதானா?

  7. வரலாறு என்பது ஒரு வரலாறல்ல. அடிமை முறை நில பிரபுத்துவம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் போன்ற சொல்லாடல்களை பிரயோகிக்கும் போது அவை ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்புக்கு பொருந்துமா என பார்க்காவிட்டால் அவை அர்த்தமற்றவையாகிவிடும். மார்க்ஸ் சொல்கிறார்: அய்ரோப்பிய சமூக அமைப்பை பற்றிய ஒரு ஆய்வை நான் செய்திருக்கிறேன். அதனை மாஸ்டர் திறவு கோலாக பாவித்து எல்லா சமுகத்திற்கும் அப்படியே பாவிக்க வேண்டாம்.
    மூல தன சந்தையைநோக்கி திரளும் சமூகம் தேசியமாகும் என்பது உண்மையாக எனக்கு விளங்கவில்லை. இன்றையநிலையில் முதலாளித்துவ சர்வதேசியம் தனது தேசிய எல்லைகளை உடைக்க முயற்சிக்கிறது. உலக மயமாக்கல் பற்றிய பார்வைகள் எமக்குநிரம்ப தேவை. மூல தன சந்தையைநோக்கி திரள வேண்டுமெனில் தேசிய எல்லைகள் உடைப்பதில் தான் சாத்தியம். உலக மயமாக்கம் சரி என்பதெல்ல எனது கருத்து.

    யாழ்ப்பாணத்து சமூகத்தைநிலப்பிரவுத்துவ சமூகம் என்ற வகையில் வரையறுப்பது மிகவும் கடினமானது. வெள்ளாளர்கள் சிறுநில விவசாயிகளாக இருந்து கொண்டு மற்றையவர்களை குடி மக்களாக வைத்திருக்கும் ஒரு வித்தியாசமான சமூக அமைப்பு முறை அது. வரலாறு என்பது படி முறையாக தேசிய விடுதலைக்கூடாகத்தான் போக வேண்டுமென்ற ஒருநியதியும் கிடையாது. தமிழ் தேசிய உருவாக்கம் எவ்வாறு ஏகாதி பத்தியங்களால் திட்டமிட்டு சீரளிக்கப்பட்டது என்பதற்கு எந்த வித திண்ணியமான ஆதாரங்களும் கிடையாது. அவ்வாறு திட்டமிட்டு தேசிய வாத உருவாக்கம் ஏகாதிபத்தியத்தால் அழிக்கப்பட்டது என்பதற்குநாவலன் ஆதாரம் அல்லது விளக்கமாவது கொடுக்க வேண்டும். பிரன்சு புரட்சிக்கு பின்னர் வந்த தேசிய உருவாக்கம் இன அடிப்படை என்பது தவறானது. அய்க்கிய ராச்சியம் அமெரிக்கா இந்தியா சீனா போன்றநாடுகள் தேசிய வாதத்தை இன அடிப்படையில் வைக்கவில்லை. மாறாகநாட்டின் பிரசைகள் என்ற அடிப்படையிலேயே வைத்தன. ஆறுமுகனாவலரும் அனாகரிக தைர்மபாலாவும் தனது அன்னிய மூல தனத்திற்காக எவ்வாறு ஏகாதிபத்தியம் உருவாக்கியது. இது அர்த்தமற்ற வசனமாக எனக்கு படுகிறது. ஏதோ ஆறுமுகநாவலரும் அனாகரிக தர்மபாலாவும் நில பிரபுக்களுடன் சேர்ந்து அன்னிய ஆதிக்கத்தை ஆதரித்தவர்கள் என்ற தொனி இதில் வருகிறது. தேசியம் என்ற ஸ்டாலினிய வரைவிலக்கண பூதக்கண்ணாடி கொண்டு அனைத்தையும் ஆய்வுசெய்ய முடியாது. இன ரீதியான தேசியவாதம் குறுகியது. ஏனெனில் தனது வரைவிலக்கணங்களுக்குள் அடங்காதவர்களை அது விலக்குகிறது. மதத்திற்கு கூட ஒரு விசாலமான் பார்வை இருக்கிறது.நீங்கள் குறிப்பிட்ட மதத்தில் சேர்ந்து விட்டால் ( இந்து மதம் இத்ற்கு விதிவிலக்கு ஏனெனில் அது சாதிய கட்டுமானத்தை கொண்டிருக்கிறது) உங்களது நிறம் இனம் நாடு என்பதன் காரணமாக குறைந்த பட்சம் தத்துவார்த்த ரீதியாக மதம் உங்களை புறக்கணிக்காது.நாடளாவிய தேசியம் தனது பிரசைகளை தவிர மற்றவரை அன்னியராக்குகிறது. இன ரீதியான தேசியம் இன்னுமொரு படி மேலே போய் தனது இன வரைவிலக்கணத்துள் பொருந்தாத அனைவரையும் அன்னியராக்குகிறது. நாவலனின் மூல தன சந்தைக்கு அருகில் வருவதற்கான சக்தி கூட இந்த இன தேசியவாதத்திற்கு கிடையாது. இன தேசியவாதம் பழமையை கனவு காண்கிறது புதிய சிந்தனைக்கூடாக. இதன் அடிப்படையே மற்றைய இனங்களை குறைத்து மதிப்பிடுவதிலேயே தங்கியிருக்கிறது. அது சிங்கள இன தேசிய வாதமாக இருக்கட்டும் அல்லது தமிழ் தேசிய வாதமாக இருக்கட்டும். அடிப்படையில் இரண்டும் ஒன்று தான். இந்த இன தேசிய வாத சிந்தனை முறையிலிருந்து நாம் மீள வேண்டும் என்பதே எனது கருத்து.

  8. ராகவன்
    மார்க்சீயம் என்பது நீங்கள் சொல்ல முனைவதைப் போல் சமூகத்தை ஆராய்வதற்கான முறை என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபடும் இல்லை. இந்த முறையைப் பாவித்து எழுதப்பட்டதுதான் மனிதகுல வரலாறு. இது ஐரோப்பிய சமூகத்திற்கு மட்டும் தான் பொருந்தும் என்று மர்க்ஸை விடுங்கள் சாமுவெல் கன்ரிங்டன் மக்ஸ்வெல் போன்ற தீவிர முதளாளித்துவ கூர்ப்புக் கோட்பட்டிற்கெதிரானவர்கள் கூடக் கருத்துச் சொல்லியதில்லை. மனிதகுல வரலாற்றை உலகம் தழுவியதாகவே வாதிட்டனர். மன்னர் காலத்து ஐரோபாவோடு அதே கால இன்ட்தியாவை ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன ஒற்றுமை!! இது நிலப்பிரபுத்துவத்தின் மேல்கட்டுமனப் பண்பு.
    தவிர இந்தியாவின் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தை தீவிர மார்க்ஸ் எதிர்ப்பாளர்கள் கூட , மறுத்ததில்லை. வரலாறு தெரிந்த கால கட்டங்களான கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட காலப்ப்குதியின் சமூக அமைப்பு முறையை பாஸிஸ்டுகக்ள் கூட ஒத்துக் கொள்கிறார்கள்.
    தவிர உங்களுக்கு மர்க்ஸ் தான் தேவையானால், இந்திய நிலப்பிரபுத்துவம் பற்றியும் இந்தியாவில் காலனி பொருளாதாரம் எவ்வாறு தேசிய மூலதன உருவாகத்தை தடைசெய்கிறது என்றும் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். the law of human evolution என்ற மார்க்ஸியத்தி அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவது கூடத்தவறில்லை. ஆனால் தயவுசெய்து இதை மார்க்சியத்தின் பேரால் அரங்கேற்ற வேண்டாம்! மார்க்ஸ் பாவம் தம்பி மாரி இல்லையப்பா!!
    ஜே.ப்ளக் என்பவருக்கு எங்கல்ஸ் எழுதிய கடித்தில் ஆபிரிக்க நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு தாமத்மானதையும் முதலாளித்துவம் எவ்வாறு தாமதமாகலாம் எனவும் விளக்குகிறார்.
    தேசிய இனங்களின் உருவாக்கம் பற்றியும் தேசியம் பற்றியும் பலர் பேசிய்ள்ளார்கள். மார்க்ஸியம் வேண்டாவிடால், எர்னஸ்ட் கெல்னர் என்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக சமூகவியற்பிரிவின் முன்னைய விரிவுரையாளர் எழுதியுள்ள தேசமும் தேசியவாதமும் பற்றிய நூலைப் படித்துப் பாருங்கள். ஆக இங்கு வார்த்தைகளைக் காட்டி வெருட்ட வரவிலை. நிலப்பிரபுத்துவத்தை அப்புசாமி என்று அழைதுக்கொள்ளுங்கள். ஆனால் உற்பத்திசக்திகளின் அடிப்படைகளை மறந்துவிடாதீர்கள்.
    இனத் தேசியவாதம் மதத்தேசிய வாதம் என்றெல்லம் உன்றுமிலையப்பா. இதுபற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தி;ல் கூறுகிறேன். மர்ர்க்ஸையும் மார்க்கண்டனையும் கூட விட்டுவிட்டு சமூகத்தின் இயக்கத்தை உற்பத்திசக்திகளின் நிலையின் அடிப்படையில் ஆராய்ந்து பாருங்கள் மர்க்ஸைப்புரிந்து கொள்வீர்கள்.
    ஆதங்களுடன் தேசியச் சீரழிப்பிற்கான எனது கட்டுரைகளை தேனியில் படித்துப் பாருங்கள்.
    ராகவன்
    மார்க்சீயம் என்பது நீங்கள் சொல்ல முனைவதைப் போல் சமூகத்தை ஆராய்வதற்கான முறை என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபடும் இல்லை. இந்த முறையைப் பாவித்து எழுதப்பட்டதுதான் மனிதகுல வரலாறு. இது ஐரோப்பிய சமூகத்திற்கு மட்டும் தான் பொருந்தும் என்று மர்க்ஸை விடுங்கள் சாமுவெல் கன்ரிங்டன் மக்ஸ்வெல் போன்ற தீவிர முதளாளித்துவ கூர்ப்புக் கோட்பட்டிற்கெதிரானவர்கள் கூடக் கருத்துச் சொல்லியதில்லை. மனிதகுல வரலாற்றை உலகம் தழுவியதாகவே வாதிட்டனர். மன்னர் காலத்து ஐரோபாவோடு அதே கால இன்ட்தியாவை ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன ஒற்றுமை!! இது நிலப்பிரபுத்துவத்தின் மேல்கட்டுமனப் பண்பு.
    தவிர இந்தியாவின் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தை தீவிர மார்க்ஸ் எதிர்ப்பாளர்கள் கூட , மறுத்ததில்லை. வரலாறு தெரிந்த கால கட்டங்களான கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட காலப்ப்குதியின் சமூக அமைப்பு முறையை பாஸிஸ்டுகக்ள் கூட ஒத்துக் கொள்கிறார்கள்.
    தவிர உங்களுக்கு மர்க்ஸ் தான் தேவையானால், இந்திய நிலப்பிரபுத்துவம் பற்றியும் இந்தியாவில் காலனி பொருளாதாரம் எவ்வாறு தேசிய மூலதன உருவாகத்தை தடைசெய்கிறது என்றும் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். வாந டயற ழக நஎழடரவழைn in hரஅயn hளைவழசல என்ற மார்க்ஸியத்தி அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவது கூடத்தவறில்லை. ஆனால் தயவுசெய்து இதை மார்க்சியத்தின் பேரால் அரங்கேற்ற வேண்டாம்! மார்க்ஸ் பாவம் தம்பி மாரி இல்லையப்பா!!
    ஜே.ப்ளக் என்பவருக்கு எங்கல்ஸ் எழுதிய கடித்தில் ஆபிரிக்க நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு தாமத்மானதையும் முதலாளித்துவம் எவ்வாறு தாமதமாகலாம் எனவும் விளக்குகிறார்.
    தேசிய இனங்களின் உருவாக்கம் பற்றியும் தேசியம் பற்றியும் பலர் பேசிய்ள்ளார்கள். மார்க்ஸியம் வேண்டாவிடால், எர்னஸ்ட் கெல்னர் என்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக சமூகவியற்பிரிவின் முன்னைய விரிவுரையாளர் எழுதியுள்ள தேசமும் தேசியவாதமும் பற்றிய நூலைப் படித்துப் பாருங்கள். ஆக இங்கு வார்த்தைகளைக் காட்டி வெருட்ட வரவிலை. நிலப்பிரபுத்துவத்தை அப்புசாமி என்று அழைதுக்கொள்ளுங்கள். ஆனால் உற்பத்திசக்திகளின் அடிப்படைகளை மறந்துவிடாதீர்கள்.
    இனத் தேசியவாதம் மதத்தேசிய வாதம் என்றெல்லம் உன்றுமிலையப்பா. இதுபற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தி;ல் கூறுகிறேன். மர்ர்க்ஸையும் மார்க்கண்டனையும் கூட விட்டுவிட்டு சமூகத்தின் இயக்கத்தை உற்பத்திசக்திகளின் நிலையின் அடிப்படையில் ஆராய்ந்து பாருங்கள் மர்க்ஸைப்புரிந்து கொள்வீர்கள்.
    ஆதங்களுடன் தேசியச் சீரழிப்பிற்கான எனது கட்டுரைகளை தேனியில் படித்துப் பாருங்கள்.

    உங்களுடைய கருத்துக்களுக்கு விரிவான கட்டுரைஒன்றை சில நாட்களில் அனுப்பி வை;ப்பேன

    உங்களுடைய கருத்துக்களுக்கு விரிவான கட்டுரைஒன்றை சில நாட்களில் அனுப்பி வை;ப்பேன

  9. marx didnt say anything like that ragavan annachhci!!
    neenkal marx aip paavichchu vudukura ulda than ithu.
    annachi ivan nanvalan tharavali poththakaththa suladi suladi padikkiravankal kathaikka maddum than aakkal. ivankalukithira eluthi mukodaipadamal .. pesama douglas sankari endu kuppdidu meeting vaiyunkovan. marx ellam unkalukuch sarivarathi annachchi.

  10. நேற்று வந்த அண்டர்சனை விடுங்கள்.. 73 வருடக்களுக்கு முன்பு தந்தை பெரியார் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்

    “இன்றைய தேசாபிமானம் என்பது
    உங்களுடைய சுயமரியாதையையும்
    முற்போக்கையும் தடுப்பதாகவே
    இருந்து வருகிறது.
    அதற்காகவே தேசாபிமானம்
    என்பது கற்பிக்கப்பட்டது
    என்று கூடச் சொல்லலாம்”.

    ( 29.09.1935 இல் ராசிபுரத்தில் ஆற்றிய சொற்பொழிவில்)

  11. ஆதாரம் 1
    இந்து மதத்தின் ஆதாரமாகக் கருதப்படும் வேத மந்திரங்கள் எந்தத் தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலேயரால் மொழிபெயர்க்கப்படவில்லை. பௌத்தமதத்தினை ஆதாரமாகக் கொண்ட தமிழ் இலக்கியங்களான மணிமேகலையும், குண்டலகேசியும் ஆங்கிலேயரால் வடமொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.

    ஆனால் மகாவம்சம் என்ற மர்மக்கதை போன்ற பாளிமொழியில் அமைந்த மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நூலானது ஆங்கிலேயரின் உத்தரவின்பேரில் அவசர அவசரமாக சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

    1874ம் ஆ ண்டு இலங்கையில் இங்கிலாந்து அரசின் கவர்னராகப் பணியாற்றிய சேர் வில்லியம் எச்.கிரகரி (றுடைடயைஅ ர்.புசநபழசல) என்பவர் இங்கிலாந்து நாட்டில் கல்விகற்று வந்த இலங்கைப் பௌத்தர்களுடன் இணைந்து வண. ஹிக்கடுவ ஸ்ரீ சமுனன்கல நாயக்க தேரர் (ஏநn. ர்மைமயனரறந ளுசைi ளுயஅரயெமெயடய யேலயமய) மற்றும் வண. பந்துவந்தாவ ஸ்ரீ தேவராக்கித்த தேரர் (ஏநn டீயனெரஎயவெயசடயறய ளசைi னுநஎயசயமமiவாய) ஆகியோரைக் கொண்டு மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதைகளை சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்ச்சி செய்து கிராமமட்டங்கள் வரை இருந்த விகாரைகள் முழுவதுமாக விநியோகம் செய்தனர். இதனூடாக மொத்த மக்கள் மத்தியிலும் இந்த மகாவம்சம் பரப்பப்பட்டது.

    மூலதன உருவாக்கத்துடன் கூடவே எழுந்த நாடுதழுவிய தேசிய உணர்வினை சீர்குலைத்து தமது பிரித்தாளும் தந்திரத்தினை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் பரவப்பட்ட மகாவம்சம் உருவாக்கிய முதலாவதும் முக்கியமானதுமாக அறியப்பட்ட மனிதன் தான் அனகாரிக்க தர்மபால என்னும் பௌத்த துறவியாவார்.

    இன்றைக்கும் இலங்கை பேரினவாத அரசால் பௌத்தர்களின் நாயகனாகப் போற்றப்பட்டு பள்ளிப்பாடப் புத்தகங்களையும் தபால்தலைகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த அனகாரிக்க தர்மபால என்ற மகாவம்சத்தின் நவீனகால வாரிசான இவர்தான் புதிய இலங்கையின் பௌத்த பேரினவாதத்தின் கர்த்தாவானார்.

    சிங்கள இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவ மதத்தவரான இவர் ஆரிய பௌத்த பேரினவாதக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பினார்.

    ஆயனயஅந டீடயஎயவளமல என்ற மேற்கத்தையை தத்துவாசிரியரின் நேரடியான மேற்பார்வையில் உருவான அனகாரிக்க தர்மபால தமிழர்களைத் திராவிடர்கள் என்றும் சிங்களவர்களை ஆரியர்கள் என்றும் வகுத்து ஆரியர்களே ஆளப்பிறந்தவர்கள் என்று தமது ஆசிரியரின் கொள்கைகளைப் பரப்பி மக்களைக் கூறுபடுத்தினார்.

    ஆயனயஅந டீடயஎயவளமல என்று பிரபலமான ஹெலனா பெற்றொவ்னா ஹான் (ர்நடநயெ Pநவசழஎயெ ர்யாn) அல்லது ர்நடநயெ டீடயஎயளமல என்ற தத்துவவியலாளரின் எழுத்துக்களினால் அனகாரிக்க தர்மபால மட்டுமல்ல, ஹிட்லர் உட்பட மற்ற உலகத் தலைவர்களும் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தனர்.

    31.07.1831இல் ரஷ்யாவின் உக்ரெயின் பிரதேசத்தில் பிறந்த இவர் அமெரிக்காவின் நியு யோர்க்கிலும் ஜேர்மனியிலும் இறுதியாக இங்கிலாந்திலும் வசித்துவந்தார்.

    பல தத்துவவியலாளர்களால் புதிய தத்துவகாலத்தின் ஆரம்பகர்த்தா என வர்ணிக்கப்பட்ட டீடயஎயளமல பல சர்ச்சைக்குரிய தத்துவங்களை முன்வைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கவும் முனைந்தவர். குடியேற்ற நாடுகளில் தனது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்திய இவரின் கருத்துக்கள் எதிர்காலத்தில் இலங்கை என்ற நாட்டை இரத்த ஆறுபாயும் மனிதக் கொலைகளின் மண்ணாக மாற்றியது என்பது பலருக்கும் ஆச்சரியமான விடயமாக அமையலாம்.

    1873ம் ஆண்டு நியுயோர்க் நகரில் குடியேறிய இவரின் திருமண வாழ்வு தொடர்பாகவும் அதனூடாக அரசியல் தொடர்புகள் தொடர்பாகவும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிலவுகின்றன.

    1874ம் ஆண்டு ஊழடழநெட ளுவநயட ழுடஉழவவ என்பவரை நியுயோர்க்கில் சந்தித்த ஆயனயஅந டீடயஎயவளமல அவருடன் ஒன்றாக வாழ ஆரம்பித்தார். பின்னதாக வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் 1875ம் ஆண்டு வுhநழளழிhiஉயட ளுழஉநைவல என்ற அமைப்பை ஊழடழநெட ளுவநயட ழுடஉழவவ உடன் இணைந்து ஆரம்பித்தார். எந்த மதத்தினையும் சாராத இந்த அமைப்பானது எல்லா மதங்களினதும் அடிப்படைக் கருத்துக்கள் சரியானது என்றும் அதன் மனித சிந்தனை ஊடான வெளிப்பாடுகள் தவறானவை என்றும் கருத்துக்களைக் கொண்டிருந்த இவர், ஆரியர்களே மனித இனங்களில் மேலானவர்கள் என்றும் நாகரீகமடைந்த உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்துக்களை முன்வைத்ததினூடாக மனித இனத்தைக் கூறுபோட்டார்.

    ர்நடநயெ டீடயஎயளமலயின் எல்லா எழுத்துகளுமே இனவாத, நிறவாதக் கருத்துக்களைக் கொண்டவையாக அமைந்திருந்தன.

    வுhந ளுநஉசநவ ழக னுழஉவசiநெ என்ற நூலில் ஆரியர்களைப் பிறப்பால் மனித இனத்தின் உச்சநிலையிலுள்ள நாகரீகமடைந்தவர்களாகவும், அப்ரொஜின் இன மக்கள் போன்ற ஆதிக்குடிகளை அரை மிருகங்களாகவும் வர்ணிக்கிறார்.

    இவ்வாறு இனவாதத்தையும் நிறவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மனித இனத்தைக் கூறுபோட முனைந்த இவர், இந்த நோக்கத்திற்காக இலங்கையில் தேர்ந்தெடுத்த மனிதர் தான் அநகாரிக்க தர்மபால என்பவராவார்.

    1864ம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த ஒரு செல்வந்தரின் மகனாகப் பிறந்த அநகாரிக்க தர்மபாலவின் பிறப்புப்பெயர் டேவிட் ஹேவவிதாரண (னுயஎனை ர்நறயஎவையசயயெ) என்பதாகும். கிறீஸ்தவராகப் பிறந்த அநகாரிக்க தர்மபால தமது ஆரம்பக் கல்வியை கிறீஸ்தவக் கல்லூரிகளிலேயே மேற்கொண்டார்.

    மகாவம்சம் ஆங்கிலேயர்களால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், இலங்கையில் எழுந்த சிங்கள-பௌத்த எழுச்சியினால் உந்தப்பட்டார்.

    இதே காலப்பகுதியில், 1882ம் ஆண்டில் ஆயனயஅந டீடயஎயவளமல யின் வுhநழளழிhiஉயட ளுழஉநைவல இன் தலைமையகம் தென் இந்தியாவிலுள்ள அடையாறு என்ற இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், வுhநழளழிhiஉயட ளுழஉநைவல இனைச் சார்ந்தவர்கள் பௌத்த மதத்துடன் தமது ஆரிய இனவேறுபாட்டுத் தத்துவத்தை அடையாளப்படுத்த ஆரம்பித்தனர்.

    ஆயனயஅந டீடயஎயவளமலயும் ஊழடழநெட ழுடஉழவவஉம் பௌத்தத்தை ஆரியர்களின் உயர்ந்த மதமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த இருவரினதும் இறுதிக்கால வாழ்க்கை பௌத்தக் கொள்கைகளுடன் எந்தச் சார்புநிலையிiனையும் கொண்டிராத போதிலும், பௌத்த மதத்தைச் சுற்றிய இவர்களது ஆர்வத்தினால் இலங்கைக்குப் பலமுறை பயணம் செய்தனர்.

    ஊழடழநெட ழுடஉழவவ மட்டும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்த ஆங்கிலேய கவர்னர்களின் ஆதரவுடன் 300 பௌத்த பாடசாலைகளை ஆரம்பித்தார். இந்த நேரத்தில் தான் ஊழடழநெட ழுடஉழவவ இன் பௌத்தமதப் பிரச்சார வேலைகளுக்கு அநகாரிக்க தர்மபால ஆதரவாக இருந்தார். ஆரிய மேலாதிக்கவாத நாஸிச தத்துவத்தால் ஆட்கொள்ளப்பட்டார்.

    ஆயனயஅந டீடயஎயவளமல யின் ஆளுமைக்கு உட்பட்ட இவர், அவரது ஆதரவுடன் பாளி மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அநகாரிக்க தர்மபாலவிற்கு 20 வயதாக இருக்கும்போது, 1884ம் ஆண்டில் ஆயனயஅந டீடயஎயவளமல அவரை தென் இந்தியாவிலிருந்த வுhநழளழிhiஉயட ளுழஉநைவல இன் தலைமையத்திற்கு அழைத்துச்சென்றார்.

    இதன் பின்னர் இலங்கை திரும்பிய அநகாரிக்க தர்மபால, இலங்கையிலிருந்த வுhநழளழிhiஉயட ளுழஉநைவல இன் காரியாலயத்தில் தங்கி முழுநேரமாகப் பணியாற்றினார்.

    1886ம் ஆண்டு ஊழடழநெட ழுடஉழவவ பௌத்த பாடசாலைகளை நிறுவும் நோக்குடன் இலங்கைக்கு வந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றிய அநகாரிக்க தர்மபால பின்னதாக பௌத்த துறவியாக மாறினார்.

    மகாவம்ச மொழிபெயர்ப்பிற்கும், வுhநழளழிhiஉயட ளுழஉநைவல இன் உருவாக்கத்திற்கும் பின்னதாக எழுந்த பௌத்த-சிங்கள மேலாதிக்க உணர்வின் ஆரம்பகர்த்தாவாகத் திகழ்ந்த இவரின் கருத்துக்கள் கிராமப்புறங்கள் வரை சென்று மிகவும் அடிமட்ட மக்களின் சிந்தனை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தின.

    தேசியவாதம், மகாவம்சம், ஆயனயஅந டீடயஎயவளமல யின் சிந்தனைகள் ஆகியவற்றின் நச்சுக் கலவையான இவரின் கருத்துக்களும் பிரச்சாரங்களும் தான் பௌத்த-சிங்கள அடிப்படைவாதத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்தது. அமைதியையும் சமாதானத்தையும் போதித்த பௌத்த விகாரைகள் இனவாதத்தையும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தையும் கக்கும் நெருப்பாக மாறின. இது ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்திற்கு மிகப் பாரிய வெற்றியைக் கொடுத்தது.

    இந்தியாவில் உருவான தேசிய எழுச்சியினது தாக்கத்தாலும், இயல்பாக பொருளாதார மாற்றத்தாலும் உருவான ஏகாதிபத்திய மூலதனத்திற்கு எதிரான இலங்கை மக்களது உணர்வலைகள் கூறுபோடப்பட்டு, தேசிய சக்திகளும், தேசிய உணர்வும் சீர்குலைக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அத்திவாரமிடப்பட்டது.

    ஆயனயஅந டீடயஎயவளமல யின் சிந்தனைகள் எவ்வாறு ஜேர்மனியில் ஹிட்லர் பரப்பிய நாஸிசத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படைக்காரணிகளில் ஒன்றாக அமைந்ததோ, அதுவே காலனி ஆதிக்கத்தால் எற்கெனவே சீரழிந்துபோன இலங்கையிலும் அநகாரிக்கவில் ஆரம்பித்து பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கும் இனப்பிரச்சினையின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது.

    அநகாரிக்கவும், டீடயஎயவளமல யைப் போலவே பிரித்தாளும் நோக்கத்திற்காக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட ஆரிய தத்துவத்தை தமது எழுத்துக்களினதும் பிரச்சாரங்களினதும் அடிப்படையாகக் கொண்டிருந்தார்.

    பிற்காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும், கிறீஸ்தவ மதத்திற்கும் எதிராக அநகாரிக்க கடும் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்ட போதிலும் இலங்கையில் உருவாகிவந்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வையும், நாட்டின் சொந்த மூலதனத்தை அபிவிருத்தி அடையச்செய்யும் தேசியவாதத்தைக் கூறுபோட்டு, நாட்டைச் சீரழிப்பதில் அநகாரிக்கவின் பங்கானது, பிரித்தானிய பிரித்தாளும் தந்திரத்திற்கு பெரும் சேவையாற்றியதுடன், சிங்கள-பௌத்த தேசியவாதத்தையும், தமிழ் தேசிய வாதத்தையும் உருவாக்கி பெரும் தேசிய இன மோதல்களை ஏற்படுத்திற்று.

    ஆங்கிலேயர் உருவாக்கிய ஆரியர் கோட்பாட்டின் முதலாவது சர்வதேசப் பிரதிநிதி ஆயனயஅந டீடயஎயவளமல என்றால், அதன் இலங்கைப் பிரதிநிதி அநகாரிக்க தர்மபாலவாகத் திகழ்ந்தார்.

    ‘இந்த அழகான, பிரகாசமான தீவு ஆரியச் சிங்களவர்களால் சொர்க்க பூமியாக மாற்றப்பட்டிருந்தது. அதன் மக்களுக்கு மதசார்பற்ற நிலை பற்றித் தெரியாது. இந்துக்களும், கிறீஸ்தவர்களும் மிருகக் கொலைக்கும் களவுக்கும் பொய்க்கும் விபச்சாரத்திற்கும் பொறுப்பானவர்களாவர்’ என்று குறிப்பிடும் அநகாரிக்கவின் உரைகளில் ஒன்று மிகப் பிரபல்யம் வாய்ந்ததாகும்.

    இவரின் உரைகள் இலங்கையின், கல்வி கலாச்சார அமைச்சினால் தொகுத்தும் நூலுருவில் வெளியிடப்பெற்றுள்ளது.

    ஊழடழநெட ழுடஉழவவ மற்றும் ஆயனயஅந டீடயஎயவளமல ஆகியோரால் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட்ட இந்த அநகாரிக்க தர்மபால, தமிழர்களையும், முஸ்லீம்களையும் சிங்கள மக்களின் எதிரியாகக் காட்டுவதற்கு தம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதனூடாக, பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு மகத்தான சேவை செய்து வந்தார். துட்டகமுனு, எல்லாளன் போரைத் தமிழர்களுக்கு எதிரான போராகச் சித்திரித்து தமிழர்களை இலங்கையின் எதிரிகளாகக் காட்ட முற்பட்டார்.

    மேலும், நிறவாதத்தைத் தூண்டும் நோக்குடன் சிங்களவர்களைத் தூய்மையான ஆரியர்களாகக் குறிப்பிட்ட இவர், தாம் வட இந்தியர்கள், ஐரோப்பியர்கள், ஈரானியர்களை ஒத்த ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தமிழர்கள் இரண்டாம்தர நாகரீகமடையாத திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்.

    தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க வேண்டும் என்று இவர் ஆரம்பித்துவைத்த அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம், இன்றைக்கு இலங்கையை பிணக்காடாக மாற்றியுள்ளது.

    காலனி ஆதிக்க சக்திகளால் தமது சொந்த நலன்களுக்காக ஊக்குவித்து வளர்க்கப்பட்ட அநகாரிக்க தர்மபால, இன்றும் அரச பாடப் புத்தகங்களிலும், கலாச்சார, பண்பாட்டு வைபவங்களிலும், விகாரைகளிலும் வரலாற்றுக் கதாநாயகனாக வர்ணிக்கப்படுகிறார். அநகாரிக்கவினூடாக பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஆரம்பிக்கும் இனவாதம், அமைப்பு மயப்படுத்தப்பட்ட அடிப்படைவாத விகாரைகளினூடாக விரிவுபடுத்தப்பட்டு, அரசியற் கட்சிகளால் உந்தப்பட்டு, சர்வதேசிய சக்திகளால் ஆதரிக்கப்பட்டு சிங்கள தேசிய இனத்தையே மாய இருளுக்குள் வைத்திருக்கிறது.

    தெற்காசியாவினதும், இலங்கையினதும் வளர்ச்சியையும் சுதந்திரத்தையும் சீரழிக்கும் அபாயமுள்ள இந்தக் கருத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியானது, சர்வதேசிய மயமாக்கலுக்குப் பின்னதான உலக ஒழுங்கமைப்பில் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் எதிர்பாராத சுயவளர்ச்சிக்குப் பின்னர் மிகுந்த முக்கியத்துவமடைந்துள்ளது.

  12. reply to Rajang. Marx makes no claim to have produced a master key to history. Historical materialism is not “an historico-philosophic theory of the marche generale imposed by fate upon every people, whatever the historic circumstances in which it finds itself”. (Marx, Karl, Letter to editor of the Russian paper Otetchestvennye Zapiskym, 1877) His ideas, he explains, are based on a concrete study of the actual conditions that pertained in Europe.

  13. னாவலன் – உங்களது கட்டுரையின் ஆங்கில பதங்கள் தமிழெழுத்தாக மாற்றப்பட்டதால் புரியவில்லை. முடிந்தால் திருத்தவும்.

  14. //…..தலிதுக்களின் விடுதலை என்பது தமிழ்த் தேசிய அரசில் அவர்கள் செலுத்தும் ஆளுமையினாலையே சாத்தியமாகும். போர் புரட்டிப் போட்ட சாதிய அடுக்கின் அதன் நிறுவனங்களின் அழிவில் இருந்தே ஒரு சம தர்மமான தமிழ்த் தேசிய அரசு சாத்தியமாகும்……//

    கூட்டணியும் தனது வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தில் ”சம தர்ம” தமிழ் ஈழம் என்றுதான் நிறைவேற்றியது.

    உதெல்லாம் நடக்கக்கூடிய சங்கதியோ!!!!

    தம்பி அற்புதனும் ”ஒரு சம தர்மமான தமிழ்த் தேசிய அரசு” என்று அள்ளி எறியிறியள். ஏதும் அற்புதங்கள் நிகழ்ந்தால் ஒழிய உதுவும் நடைமுறை சாத்தியம் இல்லை……!!!!!!………?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *