கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!!!

கட்டுரைகள்

“சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு உருத்திரமூர்த்தி சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு”

என்ற தலைப்பில் தேனி இணையத் தளத்தில் க.மகாதேவன் எழுதிய கட்டுரையை தொடர்ந்து;
“அவதூறுகளுக்குப் பதில் எழுதுவதில் பயனில்லை என்பதுதான் எனது நிலைப்பாடாக இருந்தது..”எனும் ‘கோபுரம்’ உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் க.மகாதேவன் கட்டுரைக்கு
“மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதித் தள்ளியிருக்கிறார்..

“மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” இனி பள்ளத்திலிருந்து சுகன்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!!!ஆ….. ஹா…..ஆ…….. ஆஹா….

‘கோபுரம்’..

தம்மைக் கோபுரங்களாகவும் சிகரங்களாகவும் மலைகளாகவும் ஆகாயத்தில் தம்மைத் தாமே நிறுத்துவது சேரன் (சோழ பாண்டிய) பரம்பரைக்குப் புதிதல்ல. அவர் அப்பா உருத்திரமூர்த்தி தம்மைத் தாமே ‘மகாகவி’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.
மற்றோரை மாடுகளாகவும் எருமைகளாகவும் பன்றிகளாகவும் பள்ளத்தில் இருக்கின்ற பஞ்சைப் பராரிகளாகவும் இழித்துரைப்பது, குறைந்தபட்ச மனித நாகரீகம் கூட இல்லாதவனுடைய சொல்லாட்சி அன்றி வேறென்ன ?(என்னத்தைப் படிச்சு எங்கேயிருந்தாலென்ன சட்டியில் இருக்கிறது தான் அகப்பையில் வரும்)

புதிதாகத் தம்மைப் புனிதமானவர்களாக நிறுத்துவதற்கு இன்று கோபுரம் இன்றியமையாததாகி விட்டது. அது எந்தக் கோபுரம் என்று தெரியவில்லை அனேகமாக அளவெட்டி குப்பிளாவளைப் பிள்ளையார் கோவில் கோபுரமாக இருக்கலாம்.

யாரும் எதை நோக்கியும் எவர் நோக்கியும் கேள்வி எழுப்பக் கூடாது. கேள்வி எழுப்பினால் உடனே கோபுரம் ஆட்டங்கண்டு விடுகிறது. எவர் எவர் எல்லாம் மற்றையோரை மெளனமாக்குவது என்று விவஸ்தையேயில்லாமற் போய்விட்டது. பாண்டிச்சேரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஓர் அன்பர் “நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே ! நீங்கள் ஏன் களத்தில் நின்று போராடக்கூடாது ? ” என்று கேட்டிருக்கிறார். அதற்குக் ‘கோபுரம்’ உருத்திரமூர்த்தி சேரன் “பிரபாகரனும் தான் களத்திற்குக் செல்லவில்லை” என்று பதில் சொல்லியிருக்கிறது. கேள்வி கேட்டவர் வாயடைத்து மெளனமாகிப் போனார்.
அவ் அன்பருக்குத் தெரியாது ‘நமது பரம்பரை போர்புரியட்டும்’ என்பதன் மனோபாவம்.

கோபுரத்தின் முகமும் முன்தோற்றமும் என்னவென்று சாமானியர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. அவை எப்போதும் தம்மிலும் கீழாகத்தான் மற்றவற்றை நோக்குகிறது. கொபுரங்கள் தம்மை நோக்கி கை தொழுவதைத்தான் வேண்டுகின்றன. கை நீட்டுவதையல்ல.

பாசிசத்தின் மூலம் இதுதான். அடிபணிவதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளல். மற்றவர்கள் தாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என விருப்பப்படல்.

பள்ளத்திலிருந்து
சுகன்
09.05.2006
தோடுப்புகள் நன்றி தேனி இணையத்தளம்.