TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பு

கட்டுரைகள்

TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பு

ஷோபாசக்தி

இன்று ஒருசில ஈழத்தமிழர்களின், இணையக் கருத்தாடல்களிலும் கட்டுரைகளிலும் அரசியற் சேறடிப்புக்களிலும் படுபோக்கிலித்தனமான இரு முறைமைகள் தொழிற்படுகின்றன. முதலாவதாக அவர்களை ஒரு கறுப்பு வெள்ளைக் கருத்துநிலை அலைக்கழிக்கிறது. விடுதலைப் புலிகள் மேல் ஒருவர் விமர்சனங்களை வைத்தவுடனேயே அவர் எந்தவித ஆதாரங்களுமற்றுத் தேசத்துரோகி, அரச உளவாளி எனத் தீர்ப்பிடப்படுகிறார். அவர் குறித்த அவதூறுகள் nitharsanam.comமிலும் eddappar.comமிலும் வெளியிடப்படுகின்றன. அதேபோல விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்காக எந்தப் பேயுடனும் கூட்டுச் சேர்வதிற்குத் தயாராயிருக்கும் EPDP, PLOTE, ENDLF அவர்களின் வானொலி TBC, கோயில் மூனாக்களின் ‘தமிழ் ஜனநாயகக் காங்கிரஸ்’ போன்றவற்றின் மீது ஒருவர் விமர்சனம் வைத்தால் உடனே அவர் புலி, பழப்புலி, அதிகாரவிரும்பி என்று அவதூறு செய்யப்படுகிறார். இந்த ஆதாரங்களற்ற ஈனத்தனமான அவதூறுகளைச் சூட்டோடு சூடாகத் thenee.comமிலும் neruppu.com மிலும் வெளியிடுகிறார்கள். புலிகள் x புலியெதிர்ப்பாளர்கள் என்ற இருமை எதிர்வுகளுக்கு, அதன் வழியே கட்டமைக்கப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளை அரசியலுக்கு, அப்பாலும் வெவ்வேறு அரசியற் போக்குகளும் நிலவுவதற்கான சாத்தியங்களை இருசாராரருமே ஒப்ப மறுக்கிறார்கள். அரசியற் பன்மைத்துவத்தையும் மற்றமைகளையும் நிராகரிக்கும் இந்தக் கறுப்பு வெள்ளை அரசியலியிலிருந்து தான் சனநாயக மறுப்பும் பாஸிசமும் முகிழ்க்கின்றன.

இதை விளக்கினால், நாளை ஈழத்துத் தலித் மக்களிடம் தலித் அரசியல்அதன் சரியான அர்த்தத்தில்வேர்விடத் தொடங்கும் போது தலித் அரசியலாளர்கள் இந்தக் கறுப்பு வெள்ளை அரசியலின் எந்தவொரு பக்கத்திலும் நிற்க மாட்டார்கள். அவர்கள் புலிகள் புலியெதிர்ப்பாளர்கள் என்ற இரு தரப்பையும் நிராகரித்து விட்டுத் தமது சமூக விடுதலைக்கான தமது அரசியலைத் தனித்துவமான மூன்றாவது தரப்பாகவே கட்டியெழுப்புவார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளை ஆட்சியாளர்கள் பக்கமோ இந்தியக் காங்கிரஸ் பக்கமோ சாய்ந்துவிடாமல் தலித் மக்களின் அரசியலைத் தனித்துவமாக உயர்த்திப் பிடித்த அண்ணல் அம்பேத்கரின் அரசியற் செல்நெறியே எங்களுக்கும் வரலாற்று முன்னுதாரணமாகத் திகழும். ஏனெனில் தேசிய விடுதலையைக் காட்டிலும் சாதிய விடுதலையே தலித் மக்களுக்கு முதன்மையானதாகவிருக்கிறது. இதைப் போலவே வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், மற்றும் சமூகநீதிப் போராளிகள் தமது தனித்துவமான விடுதலை அரசிலைப் பேசுவார்களேயன்றி இந்தக் கறுப்பு வெள்ளைச் சுழலுக்குள் அமிழ்ந்து ‘கன்னை’ பிரித்து நிற்கமாட்டார்கள்.

இரண்டு போக்கிலித்தனமான முறைமைகள் என்றேன். இரண்டாவதாக, முன்பெல்லாம் சிறுபத்திரிகைச் சூழலில் மார்க்ஸியத்தையும், சமூகநீதிப் போராட்டங்களையும், இடதுசாரிக் கருத்துநிலையையும் எதிர்த்தவர்கள் தனிமனித சுதந்திரம், திறமை, கலை, உள்ளொளி, தரிசனம் என்று மென்று முழுங்கி நசுக்கி நசுக்கி முதலாளிய அமைப்பு முறைமையையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தப் போக்கிற்கு Top உதாரணம் சுந்தர ராமசாமி ஆனால் இப்போதோ கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் இந்தக் கொழுப்புப் பிடித்த எழுத்தாளர்கள் ‘தாங்கள் சமூகநீதியின் எதிரிகள்தான், ஏகாதிபத்தியங்களின் ஆதரவாளர்கள்தான்’ என்று இணையங்களில் மார்பை நிமிர்த்திச் சொல்கிறாக்கள்.

மேற்குறித்த இரு முறைமைகளுக்கும் மிகச் சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாகத் தோழர் அசுரா தேனீ இணையத்தளத்தில் TBCக்கு முகம் சுழிக்கும் புலி எதிர்ப்பு என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.அசுராவின் கட்டுரை அலம்பல் தன்மையுடையது. இத்தன்மையை நமது வலைப்பதிவாளர்களுடைய மொழியில் ஜல்லியடிப்பது என்பார்கள். அதிகாரம், யாழ் மையவாதம், ஏகாதிபத்தியம், இருபது ஈரோ எனப் போகிறபோக்கில் சொற்களை விரயஞ் செய்து எப்படியாகத் தருக்க வறுமையுடன் அக் கட்டுரை அசுராவால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் கீழே பரிசீலிக்கலாம்:

TBC வானொலியின் தேவையையும் சேவையையும் வலியுறுத்துவதற்காகவே தான் இக் கட்டுரையை எழுதியதாக அசுரா சொல்கிறார்.

புகலிடத்தில், TBC வானொலி பெருமளவில் அரசியல், ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதும் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் எட்டு வருடங்களாகத் தொடர்ந்து தனது ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இந்த வகையில் விடுதலைப் புலிகளின் பாஸிச நடவடிக்கைகளை உடனுக்குடன் TBC வானொலி பரந்துபட்ட நேயர்களின் கவனத்திற்கு இடைவிடாமல் எடுத்துச் செல்கிறது. புலிகளின் ஊடகங்கள் எப்படியான இழிந்த ஊடக அரசியல் நடத்துகிறார்களோ அதே ‘லெவலு’க்குத் தாங்களும் கீழிறங்கி ஊடக அரசியல் நடத்துவதில் TBC வானொலியாளர்கள் வலு சுழியர்கள். புலிகளுக்கும் புலி ரசிகர்களுக்கும் வெகுசன ஊடகப் பரப்பில் TBC இடைவிடாத தலையிடியாகவே இருந்து வருகிறது. TBCயைப் புலிகள் தமது வழமையான பாணியிலேயே எதிர்கொண்டு கடந்த 08.06.2006 இரவு ஈனத்தனமாக TBC வானொலி நிலையத்தைத் தாக்கினார்கள். நமக்கு TBCவானொலியின் வலதுசாரி அரசியலில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. ஓர் ஊடகம் சொல்லும் கருத்துக்களில் நமக்கு உடன்பாடு இல்லாமலிருக்கலாம். ஆனால் அக்கருத்துக்களைச் சொல்வதற்கு அந்த ஊடகத்திற்கிருக்கும் உரிமைக்காக நாம் பகிரங்கமாகக் குரல் கொடுக்க எப்போதும் தயாராகவேயுள்ளோம். இன்றிருக்கும் கருத்துரிமை மறுப்புச் சூழலில் TBCபோல, தேனீ இணையத்தளம் போல இன்னும் பல ஊடகங்கள் தோன்றவேண்டும் என்கிறோம். அதேவேளையில் அந்த ஊடகங்களின் அரசியலை விமர்சிக்க எங்களுக்கும் உரிமை உண்டென்கிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை எதிரிகளாய்க் கட்டமைப்பதைத்தான், அவதூறுகளால் எதிர்கொள்வதைத்தான் கறுப்பு வெள்ளை அரசியலென்கிறோம்.

TBC என்ற ஊடகத்தின் இருப்பை அசுரா வலியுறுத்துவது நியாயமானது. ஆனால் அசுரா எப்படியாவது தவண்டையடித்து TBCயை விமர்சனங்களிலிருந்து காப்பாற்ற முயல்வது கொடுமையானது. TBC வானொலியின் அரசியல் ஆய்வாளர்களில் நிறையப்பேர் ஏகாதிபத்தியக் கருத்துநிலை விசுவாசிகள் என்ற விமர்சனத்திலிருந்து TBCயைக் ‘கிளியர்’ பண்ணிவிடுவதற்காக ஏகாதிபத்தியக் கருத்துநிலையின் பாதுகாவலானாகவே அசுரா மாறிவிடுகிறார்.

//ஏகாதிபத்தியம் சமூகநீதி மக்கள் சக்தி எல்லாமே வெற்று அரசியல் வார்த்தைகளே// என்றெழுதுகிறார் அசுரா. இன்று ஈராக்கில் வெற்று ஏகாதிபத்தியம் போட்டுக்கொண்டிருப்பது வெறும் சத்த வெடிகளையா? என்று அசுராவைக் கேட்கிறேன். ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் எண்ணுக்கணக்கற்ற மக்கள் கொல்லப்படுவது அசுராவுக்கு எண்ணை யுத்தமாகத் தெரிகிறதா? அல்லது வெற்று யுத்தமாகத் தெரிகிறதா?

சமூகநீதியும் அசுராவுக்கு வெறும் அரசியல் வார்த்தைதானாம். நமது சாதியப் படிநிலைச் சமூகத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஓரளவாவது சரிசெய்வதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப்பெற்ற உரிமைகளையே இந்தியச் சூழலில் சமூகநீதி என்பார்கள். ஈழத்தில் தேனீர்க் கடைகளில் சமவுரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும், ஆலயத்துள் பிரவேசிக்கும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும் சமூகநீதிப் போராட்டத்திற்கான முன் எத்தனங்களெனக் கொண்டால், தலித் மக்களின் பெருந் தலைவர் எம்.சி.சுப்பிரமணியம் 1972 ல் எழுப்பிய ‘தலித்துக்களைத் தனித் தேசிய இனமாக வரையறுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை உறுதியான சமூகநீதிக் கோரிக்கையெனக் கொள்ளலாம். இடஒதுக்கீடு, தனிவாக்காளர், தொகுதிகள் போன்றவற்றைச் சாதித்த சமூகநீதியும் சமூகநீதியை முழுமைப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருப்பவர்களும் அசுராவுக்கு வெற்று வார்த்தைகளா? காலம் முழுவதும் சமூகநீதிக்காகப் போராடிக்கொண்டிருந்த யோவேல்போலும், எம்.சி. சுப்பிரமணியமும், எஸ்.ரி.என். நாகரத்தினமும் அம்பேத்கரும், பெரியாரும் வெற்று அரசியல்வாதிகளா?

மக்கள் சக்தியும் வெறும் அரசியல் வார்த்தைதான் என்கிறார் அசுரா. மக்கள்சக்தி வெற்றுசக்தியா அல்லது மகாசக்தியா என்பதை அசுராவுக்கு நான் சொல்லத் தேவையில்லை. அதை ருஷ்யாவில் ஜார் மன்னனும், சீனாவில் சியாங்கே ஷேய்க்கும், செஞ்சேனையிடம் ஹிட்லரும், வியட்நாமில் பிரஞ்சு ஏகாதிபத்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும், கியூபாவில் பாட்டிஸ்ராவும் வாங்கிய அடிகள் சொல்லும். இப்போது ஈராக்கில் அமெரிக்கப் படைகள் வாங்கிக்கொண்டிருக்கும் அடிகள் சொல்லும்.

//ஏகாதிபத்தியம் சமூகநீதி மக்கள் சக்தி என்று பேசுபவர்களின் ஆழ்மனதில் உறைந்திருப்பது அதிகாரம் சார்ந்த விருப்பே// என்கிறார் அசுரா. இதில் ஆழ்மனம், மேல்மனம் என்று ஒழித்து மறைக்க என்னயிருக்கிறது? இதுவரை உழைப்புச் சுரண்டலாளர்களும் கொலனிக் கொள்ளைக்காரர்களும் ஆதிக்க சாதியினரும் ஆண்டது போதும்! இனி, அரசியலதிகாரத்தைத் தலித்துக்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் கைப்பற்ற வேண்டும்! என்று பகிரங்கமாகத் தானே இடதுசாரிகளும் நக்ஸல்பாரிகளும் தலித் அரசியலாளர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள்! இதிலென்ன தவறைக் கண்டார் அசுரா? இக் குரல்களை காலங்காலமாக நொறுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மனிதர்களின் உரிமைக் குரலாகப் பார்க்காமல், வெறும் அதிகார விருப்பிலிருந்து எழும் குரல்கள் எனக் கொச்சைப்படுத்துவது அயோக்கியத்தனம் அல்லது முட்டாள்த்தனம். மறுக்கிறாரா அசுரா?

//எமக்கு யாழ்ப்பாணியத்தை விடச் சிங்களப் பிரதேசங்களும் அய்ரோப்பிய நாடுகளும் புனித தேசங்கள் தான்// என்கிறார் அசுரா. இதுவொரு நல்ல கொள்கை. பல நுர்ற்றாண்டுகளுக்கு முன்னமே நமது கணியன் பூங்குன்றனாரும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார். நமக்கு அய்ரோப்பியர்கள் கேளிர் தான். ஆனால் நாம் அய்ரோப்பியர்களுக்கு கேளிரா? என்பதுதான் பிரச்சினையே. மூன்றாம் உலக நாடுகளில் வெள்ளையர்கள் கொலனி பிடித்துக் கொள்ளையடிக்கும் வரை கொள்ளையடித்து, ஒட்ட உறிஞ்சிவிட்டு வெளியேறியபோது உருவாக்கி வைத்துவிட்டு வந்த தேசிய இனச் சிக்கல்களாலும், இனக்குழு மோதல்களாலும், இவர்கள் தங்கள் ஆயுத வணிகத்திற்காக மூன்றாம் உலக நாடுகளில் War Lordடுகளை உருவாக்கிவிட்டதாலும் போர்களால் நாடிழந்து வீடிழந்து ஏதிலிகளாகத் தஞ்சம்கோரி ஓடிவரும் மூன்றாம் உலக மக்களை அய்ரோப்பிய அரசுகள் எப்படி வரவேற்கிறார்கள்? இவர்கள் தமது எல்லைகளில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வரவேற்ப்பு வளைவுகளையா வைத்திருக்கிறார்கள்? அங்கே கொழுத்த வேட்டை நாய்களையல்லவா வைத்திருக்கிறார்கள்!

அய்ரோப்பாவில் அகதிகளை வரவேற்பதற்கான சட்டமான ஜெனிவா 25 July 1952 அகதிச் சட்டம் நிறைவேற்றப்படும் போது அய்ரோப்பாவின் சமூக பொருளியல் நிலைமைகள் வேறு மாதிரியிருந்தன. அது அய்ரோப்பிய முதலாளியத்தின் செழுமைக் காலமாயிருந்தது. அய்ரோப்பிய மூலதனத்துக்குப் பெருமளவிலான கூலிகள் தேவைப்பட்ட காலமது. தவிரவும் நடந்து முடிந்திருந்த இரண்டாம் உலகப்போரின் வடுவும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்தும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளியேறிய முதலாளியச் சிந்தனையாளர்களிற்கும் கலைஞர்களிற்கும் புகலிடம் கொடுத்து அவர்கள் மூலம் கொம்யூனிஸ எதிர்ப்பைப் பரப்புரை செய்வதும் ஜெனிவா அகதிச் சட்டத்தின் மற்றைய காரணங்கள்.

இந்த மூன்று காராணிகளும் இன்றைய அய்ரோப்பிய சமூக, பொருளியல் சூழல்களில் பெருமளவு அர்த்தமற்றுப் போய்விட்டன. 1980களில் தொழிற்துறையில் நிகழந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சியுடன் உலக முதலாளியம் தனது வரலாற்று நெருக்கடியான அபரித உற்பத்தி நெருக்கடிக்குள் மறுபடியும் ஒருமுறை சிக்கிக்கொண்டது. பல்கிப் பெருகிய உற்பத்தி சக்திகளால் முதலாளிய சந்தையில் கடும் போட்டிகள் உருவானதால் மலிவு விலையில் உற்பத்திப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களே சந்தைப்போட்டியில் வெற்றியடையும் நிலையுருவாகியது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பதற்காக மலிவான கூலித்தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், தொழிற் சங்கங்கள் வலுவற்றிருக்கும் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி உலக முதலாளியம் மூலதனங்களையும் தொழிற்சாலைகளையும் நகர்த்தியது. Nike இந்தோனேசியாவிலும் Coke இந்தியாவிலும் கொடிகட்டிப் பறக்க மேற்கு நாடுகளில் தொழிலாளர்களுக்கு வேலை பறந்தது. இன்று பிரான்ஸில் வேலையில்லாதோரின் தொகை 12 விழுக்காடாயிருக்க, அய்ரோப்பிய யூனியனில் வேலையில்லாத இளைஞர்கள் தொகையின் சராசரி 15 விழுக்காடாயிருக்க அய்ரோப்பிய அரசுகள் தமது கதவுகளை அகதிகளுக்கு இறுக மூடிக்கொண்டன. இப்போது அய்ரோப்பிய முதலாளியத்திற்கு மூன்றாம் உலக நாடுகளிலிலிருந்து மூன்றாம் உலக மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று முடித்த விஞஞானிகளும் மருத்துவர்களும் கணனி நிபுணர்களும் தான் தேவையேயொழிய அகதிகள் என்ற சிறப்புப் பெயரில் அழைக்கப்படும் கூலித்தொழிலாளர்கள் தேவையில்லை. இன்று அசுராவின் புனித பூமியான பிரான்ஸில் மட்டும் 300 000 நிராகரிக்கப்பட்ட அகதிகள் Sans Papiers என்ற பரிதாபத்துக்குரிய அடையாளத்தோடு வதிவிட உரிமை, மருத்துவ உதவி, வேலை செய்வதற்கான உரிமை, சமூகநல உதவிகள் எதுவுமற்றுத் திருடர்கள் போல வாழ்ந்து துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். அரசியல் அகதிகளைப் புதிதாக ஏற்றுக்கொள்ள அய்ரோப்பிய அரசுகள் மறுப்பதற்கு இன்னொரு புனிதக் காரணமும் உள்ளது. அய்ரோப்பாவுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்களே. இவர்கள் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சூடான், நைஜீரியா, செனகல், மாலி, அல்ஜீரியா, துனிசியா, மெராக்கோ, துருக்கி, பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வருகிறார்கள். ஏற்கனவே கூலித்தொழிலாளர்களாக வட ஆபிரிக்காவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் அழைத்து வரப்பட்டு இரண்டு மூன்று தலைமுறைகளாக அய்ரோப்பியாவிலேயே தங்கிவிட்ட முசுலீம்களோடு புதிதாக வரும் அகதி முசுலீம் சமூகமும் சேரும்போது அய்ரோப்பாவின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பொறுக்குமா சிலுவைப் போராளிகளின் வாரிசுகளுக்கு? அவர்கள் மூடிய கதவுகளில் முசுலீம்களின் பேரால் ஒரு பெரிய பூட்டையும் தொங்கவிட்டார்கள். செவ்விந்தியப் பழங்குடிகளைப் பூண்டோடு கொன்றொழித்து ஆசியாவையும் ஆபிரிக்காவையும் கொள்ளையிட்டுக் கட்டியமைக்கப்பட்ட கலைக்கோயில்களும், கலாசாரமும், பண்பாடும், நாகரிகமும், முதலாளிய அரச நெறிகளும், வெள்ளை நீதி நெறிகளும் கொண்ட பூமி அசுராவுக்கு புனித பூமியாக இருக்கலாம். ஆனால் இது எங்களுக்குப் பாவத்தின் விளைநிலம்.

//முசோலினியையும் ஹிட்லரையும் ஸ்டாலினையும் இல்லாமற் செய்த புனிதபூமியிது// என்மிறார் அசுரா. முஸோலினியையும் ஹிட்லரையும் இன்றைய நியோ நாஸிகளையும் லூ பென்னையும் கொலைகாரன் ரொனி ப்ளேரையும் யுத்த வெறியன் புஷ்ஷையும் அபு கிரைப் கொடுஞ்சிறையில் ஈராக்கியப் பெண்களை பாலியல் வதை செய்த சுண்ணி தடித்தவர்களையும் இதே புனிதபூமிதானே உருவாக்கிற்று? என அசுராவை நாம் திருப்பிக் கேட்கலாம். ஹிட்லர் கத்தியின்றி இரத்தமின்றி ஜெர்மனிய தேசியத்தை முழங்கியபடியே பெரும் மக்கள் ஆதரவுடன் தானே பதவிக்கு வந்தான்? என்றும் நாம் அசுராவைக் கேட்கலாம்.

பாஸிஸ்ட் முஸோலினியையும் நாஸி ஹிட்லரையும் ஸ்டாலினையும் ஒரே வரிசையில் வைத்துச் சேறடித்து ஆத்திரமூட்டுகிறார் அசுரா. தோழர் ஜோசப் ஸ்டாலின் மீது த்ரொஸ்கிஸ்டுகளை விடக் கடும் விமர்சனங்கள் வைத்தவர்கள் வேறு யாருமில்லை. ஆனால் அவர்கள் ஸ்டாலினின் ‘தனிநாட்டில் சோஸலிசம்’, ஸ்டாலின் Third Internatinolலைக் கலைத்தது, மொஸ்கோ சதிவழக்குகள், கலை இலக்கியத்தில் ‘ஸ்தானோவியம்’ போன்ற ஸ்டாலினின் தத்துவக் கோட்பாடு நிலைகளின் மீதும், நடைமுறைத் தவறுகளின் மீதும் தான் விமர்சனம் வைத்தார்களேயொழிய த்ரொஸ்கியவாதிகள் ஒருபோதும் ஸ்டாலினை பாஸிஸ்டுகளோடும் நாஸிகளோடும் ஒப்பிட்டுப் பேசியதில்லை. த்ரொஸ்கி ஒரு முறை “இப்படியான தவறுகளைச் செய்வாரென்று முன்னமேயே ஸ்டாலினுக்குத் தெரிந்திருந்தால் அவர் ஆட்சிப் பொறுப்பையே ஏற்றிருக்கமாட்டார்” என்றார். த்ரொஸ்கியவாதிகள் ஸ்டாலினை பாஸிஸ்டுகளுடனும் நாஸிகளுடனும் ஒப்பிட்டுப் பேசாததால் அசுராவும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்றில்லை. அவர் பேசலாம். ஆனால் அவர் தன் ஒப்பீட்டைச் சான்றுகள் மூலமும் கருத்துக்கள் மூலமும் நிறுவ வேண்டும். இதற்கு அவர் ஸ்டாலினிசத்தின் தீவிர எதிர்பாளர்களும், மார்க்ஸிய அறிஞர்களுமான லியோன் த்ரொஸ்கி, ஜேம்ஸ். பி. கனன், ஜெரி ஹீலி, நிக் பீம், டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியா, அழகலிங்கம் ஆகியவர்களை விட அதிகமாகப் படிக்கவேண்டியிருக்கும். அதை விடுத்து போகிறபோக்கில் ஒற்றை வரியில் ஒரு மவுஸ் சொடுக்கில் ஹிட்லரும் ஸ்டாலினும் ஒனறுதான் என அசுரா நெளிப்புக் காட்டுவது அரசியல் விவாதமாகாது! நேர்மையாகாது! அறமாகாது!! அசுராவாவது பரவாயில்லை… பன்னாடை ஜெயதேவன் ஒருமுறை TBC வானொலியில் நமது மாபெரும் ஆசான் லெனினையே அராஜகவாதி என்றார். போல்ஷிவிஸம் என்றால் என்ன? சோவியத் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றால் என்ன? என்று ஒன்றுந் தெரியாத பயல்களையெல்லாம் அரசியல் ஆய்வாளர்களென மேடையேற்றினால் அவர்கள் இப்படித்தான் நாக்கு வளைப்பார்கள்.

அசுரா, முஸோலினி ஹிட்லர் வீழ்ச்சியுடன் ஸ்டாலினையும் சேர்த்து ஸ்டாலினும் வீழ்ந்தார் எனக் குதூகலிக்கிறார். முஸோலினி தப்பியோடும் போது அவனைப் பிடித்து வீதியோர மரத்தில் தலைகீழாகப் பன்றியைப் போல கட்டித் தொங்கவிட்டுச் சனங்கள் அவனை அடித்தே கொன்றார்கள். சோவியத் யூனியனின் செஞ்சேனை நாஸிப் படையைத் தோற்கடித்து பெர்லினைக் கைப்பற்றியபோது தோல்வியின் விளிம்பில் நின்று தற்கொலை செய்தவன் ஹிட்லர். ஆனால் ஸ்டாலினோ தன் அரசியல் வாழ்வில் வீழ்ச்சியையே அறியாதவர். அவரின் காலத்தில் தான் சோவியத் யூனியன் தோல்வியே காணாத வல்லரசாக எழுந்து நின்றது. இறக்கும் வரை சோவியத் யூனியனின் அசைக்க முடியாத தலைவனாக, இரும்பு மனிதனாகத் திகழ்ந்தவர் தோழர் ஸ்டாலின்.

எனவே இங்கே ஸ்டாலினின் வீழ்ச்சியென்று அசுரா குறிப்பிடுவது சோவியத் யூனியனின் வீழ்ச்சியையே என்றுதான்அசுரா வேறொரு விளக்கத்தைத் தராதவரை நாம் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்கும் ஸ்டாலினிசத்தின் மீது பல கேள்விகள் உள்ளனதான். ஆனால் அதற்காக சோவியத் யூனியனின் வீழ்ச்சியையோ கிழக்கு அய்ரோப்பியச் சோஸலிச நாடுகளின் வீழ்ச்சியையோ நம்மால் அசுராவைப் போல கொண்டாடி மகிழ்ந்துவிட முடிவதில்லை.மிகவும் பின்தங்கிய நாடுகளில் தோன்றிய அந்தச் சோஸலிச அரசுகள் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவில் இல்லாதொழித்தன. மதத்தை வைத்து அரசியல் நடத்தியவர்கள், அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்கள், ஏழை விவசாயிகளைச் கசக்கிப் பிழிந்து தங்கள் காதற் கிழத்திகள் மூத்திரம் பெய்யத் தங்கத்தாலேயே மூத்திரக் குடுவைகள் செய்து கொடுத்த பிரபுக்கள் அடக்கி வைக்கப்பட்டனர். அப்போதுதான் வளரிளம் நிலையில் இருந்தாற் கூட அந்தச் சோஸலிச அரசுகள் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கல்வியையும் நாட்டின் அடிப்படை உள் கட்டுமானங்களையும் சாதித்துக் காட்டின. அதுவரை தேவாலயங்களுக்குள்ளும் அடுப்படிகளுக்குள்ளும் ஒடுங்கிக் கிடந்த பெண்கள் அரசியலிலும் அறிவியியலிலும் விளையாட்டுத் துறையிலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள். புட்னிக் என்றாலும் சரி ஒலிம்பிக் என்றாலும் சரி இந்த மக்கள் சாதனைகள் மேல் சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்கள். ஸ்டாலினுக்குப் பின்பான சோவியத் யூனியனைக் கடுமையாக விமர்சித்த மாவோயிஸ்டுகள் கூட சோவியத் யூனியனைச் சமூக ஏகாதிபத்தியம் என்றுதான் கணிப்பிட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் நமது பெரியார் ஈ.வெ.ரா கூட தனக்கேயுரிய பாணியில் “இந்தியாவை வெள்ளைக்காரன் தான் ஆள வேண்டும், அதுவும் ரஷ்யாக்காரன் தான் ஆள வேண்டும்” என ஒரு தடாலடி அடித்ததைத் தோழர்கள் அறிந்திருப்பீர்கள். கொம்யூனிஸ்ட் கட்சிகளின் திரிபுவாதத்தாலும், கட்சிக்குள்ளேயே ஓர் அதிகார ஒட்டுண்ணி வர்க்கம் வளர்ந்திருந்ததாலும், உலக முதலாளியத்தின் இடைவிடாத நெருக்கடிகளாலும் சி.அய்.ஏ போன்ற ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களின் எண்ணற்ற அரசியற் சதிகளாலும் இன்று முன்னைய சோஸலிச நாடுகளிலிருந்து சோஸலிசம், கொம்யூனிஸம், சோவியத் போன்ற சொற்கள் மறைந்து விட அங்கெல்லாம் வேறொரு புதிய சொல் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருக்கிறது. அந்தச் சொல் மாபியா. அந்த நாடுகளின் தற்போதைய பிரதான ஏற்றுமதிப் பண்டம் பெண்கள். என் சீரழிந்த பூமி சிறிலங்காவிலிருந்து அசுராவின் புனித பூமியான பிரான்ஸ் வரை அந்தப் பெண்கள் பாலியல் பண்டங்களாகப் படுக்கைப் பிண்டங்களாக வதைபடுகிறார்கள். இதிற் கொண்டாட என்ன புண்ணாக்கிருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர் அசுரா தான் சொல்லவேண்டும்.

அசுராவின் இவ்வளவு அலம்பல்களும் பினாத்தல்களும் வளங்கெட்ட கதைகளும் ஏதற்காக? ‘மங்கொள்ளக்கார’ ஏகாதபத்தியத்தை நியாயப்படுத்துவதற்காக! அதன் மூலம் TBCவானொலியாளர்கள் ஏகாதிபத்திய ஆதரவுக் கருத்துநிலை கொண்ட மேற்கத்திய முதலாளிய அறத்தை விசுவாசிக்கும் முதிர் முட்டாள்கள் என்ற நமது எதிர்மறை விமர்சனத்தை நேர்மறையாக்குவதற்காக. மறுபடியும் சொல்கிறேன். ஏகாதிபத்திய நாடுகள் ஈழப் பிரச்சினையை மட்டுமல்ல எந்தப் பிரச்சினையையுமே தார்மீகங்களாலும் மனித உரிமைகள் நோக்கோடும் அணுகுவதில்லை. அவர்கள் தமது சொந்த நலங்களினாலும் இலாப நோக்கோடுமே பிரச்சினைகளை அணுகுகின்றனர்.

TBC அரசியல் ஆய்வாளர்களாலும் விடுதலைப் புலிகளாலும் சனநாயக நாடுகள் என்றும் சமாதான அனுசரணையாளர்கள் என்றும் கூறப்படும் மேற்கு நாடுகள் உண்மையில், சரியான அர்த்தத்தில் சனநாயக நாடுகள் தானா? சமாதானத்தின் அனுசரணையாளர்கள் தானா? இன்றுவரை இந்தப் பகற் கொள்ளைக்காரர்களிற்கு மூன்றாம் மண்டல நாடுகளில் நேரடி மற்றும் மறைமுகக் கொலனிகள் உள்ளன. அசுராவின் புனிதபூமி கடல் கடந்த பிரஞ்சு மாகாணங்கள் என்ற பெயரில் குவாத்தலூப்பையும் மார்ட்டினிக்கையும் ரியூனியனையும் தயிட்டியையும் பசுபிக் தீவுகளையும் கொலனிகளாக வைத்திருந்து அந்த நாடுகளின் வளங்களைத் திருடுகிறது. அங்கு அணுகுண்டுச் சோதனை வெடிப்புகளைச் சுதேசிகளின் எதிர்ப்புகளை மீறியும் நிகழ்த்துகிறது. இதுவரை உலக வரலாற்றில் எப்போதாவது இந்தப் போலி சனநாயக நாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் நின்றிருக்கிறார்களா? மாறாக இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களாகவும் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் திகழ்ந்த சிலியின் அலன்டேயையும் கொங்கோவின் லுமும்பாவையும் பொலிவியாவில் சே குவெராவையும் சதிகளைச் செய்து கொன்றொழித்தார்கள். இலங்கையிலும் ஈராக்கிலும் பர்மாவிலும் லைபீரியாவிலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று முட்டிக்கொண்டு முட்டைக் கண்ணீர் வடிக்கும் இந்த மேற்கு நாடுகளில் மனித உரிமைகளின் நிலை என்ன? மேற்கில் பிரித்தானியா, ஜெர்மன், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின் உள்ளிட்டுப் பதினான்கு நாடுகளில் CIAயின் இரகசியச் சிறைகள் உள்ளன என்றும் அங்கே இஸ்லாமியத் தீவிரவாதிகள் எனச் சொல்லி சிறைப் பிடிக்கப்பட்ட முசுலீம்கள் வதைக்கப்படுகிறார்கள் என்றும் Amnesty Internationalலை ஆதாரங் காட்டி Le Monde பத்திரிகை (07.06.2006) வரைபடங்களுடன் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இதுவா புனிதமான பூமி? என நாம் கேட்டால் அசுரா சாராம்சமான கேள்விகளைத் தவிர்த்து விட்டு //மேற்கு நாடுகளை விமர்சிப்பவர்கள் ஏன் மேற்கு நாடுகளில் வசிக்க வேண்டும்? அவர்களின் அல்லைப்பிட்டியில் போய்க் குந்த வேண்டியதுதானே// என்று சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறார். அசுரா மேற்கு நாடொன்றில் வசிப்பதால் மேற்கு நாடுகள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்தும் படுகொலைகளையோ மேற்கு நாடுகளின் இஸ்லாம் விரோதப் போக்கையோ, வெள்ளைத் திமிரையோ அசுரா கண்டும் காணாமலுமே இருந்து விடுவாரா? என்று கேட்கிறேன்.

ஈழத்தை விடுங்கள் புகலிட தேசங்களிற் கூட ஈழத் தமிழர்களுக்கு மேற்கத்தைய அரசுகளும் காவற் துறையும் நீதி செய்ய மாட்டார்கள் என்கிறேன். இதற்கு HUMAN RIGHTS WATCHசின் இறுதி யுத்தத்திற்கு நிதியுதவி செய்தல் என்ற அறிக்கையிலிருந்து ஓர் ஆதாரத்தைத் தர முடியும். பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மீது புலிகள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்களைக் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினர் முன்னாள் இலண்டன் நகரக் காவற்துறை ஆய்வாளர் Philip Perryயிடம் கேட்டபோது அவர் சொன்னார்:”சில வருடங்களுக்கு முன்னர் இங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக வேண்டுமென்றே கவனிக்காமல் இருப்பது என்னும் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அக்கட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கமானது சமாதான ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கியது. அக்கட்டத்தில் அவர்கள் புலிகள் இயக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க விரும்பவில்லை. ஆகவே அக்கால கட்டத்தில் சகல தகவல்களும் கிடைக்கப் பெற்றாலும் பயங்கரவாத விடயங்கள் தொடர்பாகக் கையாளும் விசேட பிரிவானது இங்கு என்ன நடக்கின்றது என்பதை மறுதலித்தே வந்திருக்கின்றது. (தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம்:50)

ஆக மேற்கு அரசுகளும் காவற்துறையும் தங்கள் ஏகாதிபத்திய அரசியல் வியூகங்களின் அடிப்படையில் செயற்படுவார்களே தவிர நீதியின் அடிப்படையில் செயற்படுவதில்லை. அவர்கள் தங்களின் நலன்களின் அடிப்படையில் புலிகளின் மீதோ சிறிலங்கா அரசின் மீதோ அழுத்தங்களைப் போடுவார்கள், ஆதரிப்பார்கள், அல்லது Philip Perry சொன்னது போலக் கண்டும் காணாமலும் இருப்பார்கள். ஆகவே நாம் TBC அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது போல ஏகாதிபத்தியங்களின் கால் பிடித்தோ அல்லது அய்ரோப்பிய எம்.பிக்களின் வால் பிடித்தோ நீதியுடன் கூடிய சமாதானத்தைப் பெற்றுவிட முடியாது. மாறாக நாம் TBC சொல்வதிற்குத் தலைகீழாக நடக்க வேண்டும். மேற்கில் இன்னமும் எஞ்சியிருக்கும் இடதுசாரிகளுடனும் அரச எதிர்ப்பாளர்களுடனும் நிறவெறி எதிர்ப்பாளர்களுடனும் கலகக்காரர்களுடகும் தான் நாம் அரசியற் தோழமைகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்கள் என்ற இனச் சாரம்சத்துள் பல்வேறு வகையான மக்கள் குழுக்களையும் பொத்தாம் பொதுவாக அடக்கிவிடக் கூடாது. ஒவ்வொரு மக்கள் குழுக்களுக்கும் தனித்துவமான அரசியற் பிரச்சனைகள் அவர்களின் சாதிய, பால், வர்க்கத் தன்னிலைகள் சார்ந்து உள்ளன என்பதையும், 1921ல் தோன்றிய பொ. அருணாசலத்தின் தமிழ் காங்கிரஸிலிருந்து முந்தநாள் முளைத்த ஜெயதேவனின் ஜனநாயக காங்கிரஸ் வரைக்கும் தோன்றிய அனைத்துத் தமிழ் தேசியவாதப் போக்குகளும் யாழ் மையவாதத்தையே, சைவ வேளாள அரசியலையே தூக்கிப்பிடித்தன என்பதையும், புலிகள் பாஸிஸ்டுகள் என்பதையும் அசுராவைப் போலவே நாமும் சொல்லி வருகிறோம். ஆனால் நாம் இந்தக் கருத்துக்களைத் தொடர்சியாகச் சொல்லி வருவது இவற்றுக்கான மாற்று அரசியலை முன்மொழியவேயன்றி அசுராவைப் போல எதை எதிர்ப்பதாக வாயடிக்கிறாரோ மறுகணத்தில் அதுக்கே பல்லிளித்து ஆதரவுக் கட்டுரை எழுதவதிற்காக அல்ல. TBCபணிப்பாளரும், சிவலிங்கமும், ஜெயதேவனும், ஜெமினியும், விவேகானந்தனும் தமிழ்த் தேசியம் பேசாமல் என்ன தலித் தேசியமா பேசிக் கொண்டிருக்கிறார்கள்? “குடிகாரர்கள்”, “ஆங்கிலம் தெரியாதவர்கள்”, “எட்டாம் வகுப்புப் படித்தவர்கள் ” என்ற மேட்டுக்குடிப் பரிகசிப்புக்கள் அவர்களின் சொல்லாடல்களில் நிரம்பி வழிவதை அசுரா கேட்டதில்லையா? கோயில் முதலாளிகள் அங்கே உட்கார்ந்திருந்து சைவக் குட்டிக் கதைகள் சொல்வதை அசுரா விளிம்பு நிலை அரசியலென்றா நினைத்துக்கொண்டிருக்கிறார்? இரண்டு இந்துக் கோயில் முதலாளிகளையும் நடு வீட்டிற்குள் வைத்துக்கொண்டு யாழ்மையவாதம் தலித்தியம் என்று பேசத் தூ! உங்களுக்கு வெட்கமாயில்லையா?

இறுதியாக ஒன்று…ஒரு வாதத்திற்காக, எதிர்காலத்தில் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு சனநாயக அரசியலுக்கு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது TBCக்குப் புலிகளை எதிர்பதற்கு ஒன்றுமேயிருக்காது. ஏனெனில் அவர்களும் ஏகாதிபத்திய ஆதரவு இவர்களும் ஏகாதிபத்திய ஆதரவு, அவர்களும் தமிழ்த் தேசியம் இவர்களும் தமிழ்த் தேசியம், அவர்களும் வலதுசாரிகள் இவர்களும் வலதுசாரிகள், அவர்களும் கோயில் இவர்களும் கோயில். ஆனால் நாங்கள் அப்போதும் புலிகளை எதிர்ப்போம். ஏனெனில் நாங்கள் புலிகளின் குட்டி முதலாளித்துவ – யாழ் மையவாத- தேசியவாத வேலைத்திட்டத்தை எதிர்க்கிறோம். “இந்தியச் சூழலைப் பொறுத்தவரை ஒரு வகையான நக்ஸல்பாரி மனநிலை அறிவுஜீவிகளுக்குத் தேவை” என்பார் அ.மார்க்ஸ் (புதியபார்வை யூன் 1 -15.) ஈழத்துச் சூழலைப் பொறுத்தவரை எல்லோருக்குமே நக்ஸல்பாரி மனநிலை வேண்டுமென்கிறேன் நான். எந்தவிதச் சமரசமோ முகத் தாட்சண்யமோயின்றி எல்லாவற்றின் மீதும் நாங்கள் கேள்விகளை எழுப்புவோம். அனைத்து வலதுசாரி அரசியலாளர்களையும் ஈவிரக்கமின்றி விமர்சிப்போம்.

ஒடுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்தைத் தமது சொந்தக் கைகளிலேயே எடுப்பதும், தமிழ் முசுலீம் சிங்கள உழைக்கும் மக்களின் அய்க்கியத்தைக் கட்டி எழுப்புவதும் இப்போதைக்குக் கனவாக இருக்கலாம். ஆனால் அது அசுரா சொல்வது போல அதிகாரம் சார்ந்த கனவாயிருக்காது. பிரேமுடைய வார்த்தைகளிற் சொன்னால் அது அறஞ் சார்ந்த கனவு

12 thoughts on “TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பு

  1. TBCயைப் புலிகள் தமது வழமையான பாணியிலேயே எதிர்கொண்டு

  2. //இதற்கு HUMAN RIGHTS WATCHசின் இறுதி யுத்தத்திற்கு நிதியுதவி செய்தல் என்ற அறிக்கையிலிருந்து ஓர் ஆதாரத்தைத் தர முடியும்//

    ஆதாரம் என்னவோ புலிக்கு எதிராகப் பொருந்துகிறது. ஆனால் ‘ஹியூமன் ரைட்ஸ் வோச்’ சின் வரலாறு அறிந்தவர்கள் இந்தமாதிரியான கருத்துகளின் உள்நோக்கத்தை ஒரு கோணத்தில் பார்க்காமல் மற்றைய கோணத்திலும் பார்க்கவேண்டும். இங்கே யூகோஸ்லாவிய வீழ்ச்சியின்பின் பதிவியேற்ற புதிய அதிபர் அளித்த விருந்தில் HRW இற்கு கிடைத்த விஷேட பாராட்டில் அவர் ‘நீங்கள் இல்லை என்றால் நாம் இல்லை’ என்று HRW ஐப்பார்த்துத் தெரிவித்தது குறிப்பிடவேண்டும். இந்த HRW முன்னை நாள் Helsinki Watch. இதன் நோக்கம் சோவியத் நட்புநாடுகளின் ‘மனித உரிமை மீறல்களை’ அவதானித்தல் என்ற போர்வையில் தமது ‘விளையாட்டுகளை’க் காட்டுவதே. தேனீ, TBC, ஜெயதேவன், ஜெயதேவனின் அண்ணன் போல!

    // “குடிகாரர்கள்”, “ஆங்கிலம் தெரியாதவர்கள்”, “எட்டாம் வகுப்புப் படித்தவர்கள் ” என்ற மேட்டுக்குடிப் பரிகசிப்புக்கள் அவர்களின் சொல்லாடல்களில் நிரம்பி வழிவதை ..//

    புலிகளுக்கு மேற்குலகில் இருந்துவரு தொடர் ஆதரவுக்கு இவ்வாறான பரிகசிப்புகளும் ஒருவகையில் காரணமாகின்றன. மேற்குலகில் ஆரம்பத்தில் வந்த ‘ஆங்கிலம் தெரிந்த’ , ‘பத்தாம் வகுப்பு படித்த’ கூட்டத்தினரின் இவ்வாறான பரிகசிப்புகளினால் இவர்களிடம் சேராமல் அண்மையில் வந்தவர்கள் தம்மை அரவணைக்கும் குழுவில் சேர்வது ஒன்றும் பிழையானது அல்லவே!

  3. //சோபாசக்தியினால் எழுதப்பட்ட அல்லைப்பிட்டிக் கதையிலும் (பிறந்த ஊர் பாசம்) சில அபத்தங்களைக் காணலாம். ஒட்டு மொத்த மக்களின் நலன்களைக் கருதாமல் தனிப்பட்ட நலன் அல்லது அவர் பேசுகின்ற அரசியலில் தெளிவின்மை, (பின் நவீனத்துவம், தலித்தியம்) அல்லது உறுதியின்மை Nபுhன்ற தன்மையின் வெளிப்பாடகவே உள்ளது. அதுவே அவரது ரி.பி.சி பற்றிய கணிப்புக்கும் காரணியாயுள்ளது.//
    இந்த கருத்து அவரது உற்ற தோழர் தேவதாசன் சொல்லிகிறார். நம்ப முடியவில்லை………………………….

  4. ‘அல்லைப்பிட்டி கதையிலிருந்து

    (தேவதாசன்)

    ஏகாதிபத்தியமா.. !!! யாழ்ப்பாணியமா.. !!!

    தோழர் சோபாசக்தியினால் எழுதப்பட்ட அல்லைப்பிட்டிக் கதையின் பின் மரியசீலன் அவர்களால் சோபாசக்திக்கு விமர்சனம் எனும் தலைப்பில் தேனியில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையானது உண்மையிலேயே அபத்தமானதுதான். விடுதலை இயக்கங்களில் இருந்து வெளியேறியவர்கள், அதிலும் ஆயுதம் ஏந்தியவர்கள் எவருமே புனிதமானவர்களாக இருப்பார்கள் என சிந்திப்பதோ, சித்தரிப்பதோ மற்றவர்களையும், ஏன் தங்களையும் முட்டாளாக்கும் முயற்சியாகும். ஒருவர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வை வெளிக்காட்டுவதற்கு ஊடகங்களைப் பயன் படுத்துவது மிகவும் அநாகரிகமானது. இதனால் தனிப்பட்டவர்கள் தங்களுக்குள்ளான முரண்பாடுகளை மேலும் வளர்த்துக் கொள்வதைத் தவிர இவர்களால் சமூகத்துக்கோ, மக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

    சோபாசக்தியினால் எழுதப்பட்ட அல்லைப்பிட்டிக் கதையிலும் (பிறந்த ஊர் பாசம்) சில அபத்தங்களைக் காணலாம். ஒட்டு மொத்த மக்களின் நலன்களைக் கருதாமல் தனிப்பட்ட நலன் அல்லது அவர் பேசுகின்ற அரசியலில் தெளிவின்மை, (பின் நவீனத்துவம், தலித்தியம்) அல்லது உறுதியின்மை Nபுhன்ற தன்மையின் வெளிப்பாடகவே உள்ளது. அதுவே அவரது ரி.பி.சி பற்றிய கணிப்புக்கும் காரணியாயுள்ளது.

    ரி.பி.சி பற்றிய கருத்து ஏற்கனவே இவருக்கு நன்றாக புரிந்திருக்கும் அது ஒரு ஜனநாயக ஊடகம், இலங்கையில் நடக்கின்ற குறிப்பாக அதிலும் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக நடாத்தப் படுகின்ற அரசியலுக்கும், செய்திகளுக்கும் அவர்களது தமிழ்த் தேசிய கொள்கைகளுக்கும் மாற்றாக அல்லது முரணான செய்திகளை வெளியிட அல்லது அவர்களது அரசியலை விமர்சிக்க பிற ஊடகங்கள் முனைந்ததில்லை. அப்படி ஒரு பணியை இதுவரை முன்னெடுக்கவும் புலிகள் விட்டதில்லை. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் நடைபெற்று வருகின்ற காட்டுத் தர்பாரை தட்டிக்கேட்க யாராவது இருந்தார்களா?

    ஐரோப்பபாவில் இலக்கியச் சந்திப்புகளை நடத்துபவர்கள் மட்டுமே அதுவும் மாற்று இலக்கிய அவசியம் கருதுபவர்களும் மாற்று அரசியலைக் கோருபவர்களும் உள்ளடங்கிய ஒரு கணிசமான எண்ணிக்கையினரே வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ கூடி மனித உரிமைகளுக்கான அவசியத்தையும், அனைத்துப் படுகொலைகளையும் கண்டித்து வருகிறார்கள்.

    தினம் தினம் புலிகளின் முகத்துக்கு நேரே தங்களுடைய கருத்துக்களை பல கொலை மிரட்டலுக்கும் மத்தியிலும் அஞ்சாது கூறிவரும் ஊடகம் ரி.பி.சி மட்டுமே. இவ் ஊடகம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதென்றோ, சார்பானதென்றோ யாரும் உறுதிமொழி கூறியதில்லை. அதுவும் தமிழ்த் தேசிய ஊடகம்தான.; ஆனாலும் மாற்றுக் கருத்துக்கள் பேசுவதற்கான தளமாக அது தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. கடந்த வியாழக்கிழமை (08-06-06) புலிகள் ரி.பி.சி வானொலி நிலையத்துள் புகுந்து அங்குள்ளவர்களை கொலை செய்ய முனைந்த செயலும் சோபாசக்திக்கு மகிழ்வூட்டும் செயல்தானா.!!!

    சோபாசக்தி ரி.பி.சி யில் பங்கு கொள்பவர்கள் ஏகாதிபத்திய வாதிகள் என்றும் ஜெயதேவன் அவர்கள் அதற்கு திடீர் தலைவர் என்றும் கூறி காறி உமிழ நினைப்பதற்கு பின் இருக்கின்ற அவரது அரசியல் மிகவும் சந்தேகத்திற்குரியது. இலங்கைத் தமிழ் மக்களில், யாழ் மேலாதிக்க சமூகமாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், கிழக்கு மாகாண தமிழர்களாக இருக்கலாம், தலித்துகளாக இருக்கலாம் அனைவரினதும் சம பங்களிப்புடன் உலகில் இயங்கிவரும் ஒரே ஒரு தமிழ் வானொலி ரி.பி.சி மட்டுமே. மற்றைய ஊடகங்கள் அனைத்தும் யாழ் மேலாதிக்க சமூகத்தின் நலன்களைப் பேணுவதற்காக மட்டுமே செயல்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சோபசக்தியிடமும் உள்ள சமூக மேலாதிக்க நிலைப்பாடுதான் என்ன ஜெமினி தீவானுக்கு தீவானே சுத்தலாமா எனும் அவரின் வேண்டுகோள்.(அவரது சத்தியக் கடதாசியில்) நாம தீவாங்கள்தானே மற்றவர்களை சுத்தவேணும்!!! எனும் மறை பொருள் மிதப்பதையும் ரி.பி.சி நேயர்கள் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

    ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நு சு ழு ளுஇ நு P சு டு கு போன்ற இயக்கங்களினால் ஏகாதிபத்தியத்திடம் போராட்டத்தை கையளித்து விடுவதிலும் பார்க்க இந்தியா, ஆசியா மட்டத்துடன் எமது பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று கூறியதை நான் அறிந்திருக்கிறேன் ஆனால் இப்போது உலக நாடுகள் அனைத்தும் புலிகளை தடை செய்த பின்னர் புதிதாக ஏகாதிபத்தியம் பற்றிப் பேசுவதானது சோபாசக்தி இதுவரை பேசிவந்த அரசியலுக்கு முற்றும் முரணானது என்றே கருதுகிறேன். என்னைப் பொருத்தவரையில் யாழ்ப்பாணியமா!!! ஏகாதிபத்தியமா மோசமானது எனக்கோட்டால் யாழ்ப்பாணியமே என்று ஓங்கி உரக்கச் சொல்வேன்.

    ஏகாதிபத்தியம் பொருளாதார சுரண்டலுக்காக அரசுகளின் அதிகாரத்ததை தன் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வைத்துக் கொள்ள முனைகிறது. ஆனால் யாழ்ப்பாணியமோ அதையும் தாண்டி பிரதேசம், சாதி, தீண்டாமை, மதம், பெண்ணடிமை, இந்துத்துவம் என பல பத்துப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு கீழ்த்தரமான இயங்கியலைக் கொண்டது. இந்த கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடே விடுதலைப் புலிகளின் அரசியலாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின்போது புலிகளின் அரசியல் ஆலோசகர் கூறிய கூற்றே இதற்கு துல்லியமான உதாரணம் எனலாம். விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்வதால் உலகில் வாழும் தமிழ் மக்களை புலிகளிடமிருந்து பிரிக்க முடியாது என. ஆம் உண்மைதான்!!அகதியென்ற பெயரிலும், பணம் பெருக்கவும், தம்மை பாதுகாத்து வளர்த்துக் கொள்ளவும் புலம் பெயர்ந்தவர்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது வீதமானவர்கள் யாழ்ப்பாணத் தவர்களே. அதிலும் பெரும்பான்மையினர் யாழ் மேலாதிக்க சாதியினரே. இவர்களில் பெரும்பான்மையினர் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள் என்பது அவர் சொல்லாமலே எவருக்கும் புரியும் அதைத்தான் அவரும் திருவாய் மலர்ந்து சொன்னார்.

    சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் மற்றும் இடது சாரிகளும் ஆட்சி அமைக்கும் போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து புலிகள் வரை சண்டையிடுவதும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அமரும்போது அமைதிகாப்பதும் பிரேமதாசாவிடம் பொன்னும், பொருளும் வாங்கி இந்தியப் படையுடன் மோதியதும்,முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜுவ்காந்தியை படு கொலை செய்ததும், முஸ்லிம் மக்களை இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் வடக்கிலிருந்து துரத்தியதும், கிழக்கு மாகாண மக்களை வெறும் கூலிப்படைகளாக வைத்திருப்பதும், தலித்துக்களை திட்டமிட்டுக் கொல்லுவதும், பேச்சுவார்த்தைகளை இந்தியாவிடமிருந்து பிரித்து ஐரோப்பாவிற்கு விற்றதும் இது போன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக செய்து முடித்தார்களே இவர்களல்லவா சோபாசக்தி பேசுகின்ற ஏகாதிபத்தியத்தை விட மோசமானவர்கள் மட்டுமல்லாது மிக அயோக்கியர்கள். ஏகாதிபத்தியம் பற்றி பேசுவதானால் ஐரோப்பிய நாட்டில் இருந்துதான் பேசவேண்டும் என்பதல்ல. அதை அல்லைப்பிட்டியில் இருந்தும் பேசலாம், பம்பலப்பிட்டியிலிருந்தும் பேசலாம், ஈராக்கிலிருந்தும் பேசலாம், அமரிக்காவிலிருந்தும் பேசலாம.; ஏன் நீங்கள் நிரந்தரமாக வசிக்கும் ஐரோப்பிய நாடுகளில் கூட சுதந்திரமாக பேசலாம். ஆனால் புலிகளின் கருத்துக்கு மாறாக சுதந்திரமாக பேச வாய்திறக்க முடியுமா? ஆனால் ரி.பி.சி அதைச் செய்து வருகிறது.

    ஈழப்போராட்டம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளாலும் சரி அரசாங்கப் படைகளாலும் சரி தினம், தினம் கொல்லப் படுகின்ற தலித்துகளுக்கு யார் பொறுப்பு? யாழ் மேலாதிக்க சாதியினர் தங்கள் திமிர்த்தனத்தை நிலை நிறுத்த தனிநாடு கேட்டுவிட்டு யுத்தம் என்று வந்தவுடன் முகம் கொடுக்க முடியாமல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என மூட்டை மூடிச்சுகளுடன் வெளிநாடுகளில் ஒழிந்து கொண்டு யாராவது சண்டை பிடிக்கட்டும் நாம் போய் ஆட்சி அமைப்போம் என்னும் நரித்தனத்தில் காத்திருக்கிறார்கள். இவர்களே பிரபாகரனை முருங்கை மரத்திலும், தமிழ்ச்செல்வனை கிழுவை மரத்திலும் ஏத்திவிட்டு பொறுத்;தது போதும் தலைவா பொங்கி எழு போரிடு என்பதும். எப்போதாவது ஒரு ஊர்வலம் நடத்திவிட்டு தானும் தன் குடும்ப நலனும் என வாழ்கிறார்கள். ஆனால் வெளிநாடு வர வக்கில்லாத அந்த ஏழைத் தலித் மக்கள் மூச்சு விடுவதற்கு கூட முன் அனுமதி பெறவேண்டிய அவல வாழ்கையில் வாழ்கின்றனர். ஆனால் நடுநிலைத் தோழர்களோ ஏகாதிபத்தியத்தின் மீது பழியை போட்டுவிட்டு ஏகாந்தமாய் இருப்பதும் யாழ் மேலாதிக்கத்தின் வெளிப்பாடுதான்.

    அமெரிக்கா வியட்நாமை குண்டு போட்டு அழித்தபோது பிரான்ஸ் அரசு ஆயிரம், ஆயிரம் மக்களை தனது நாட்டில் குடியமர்த்தி வாழ்க்கை கொடுத்தது. அதைப் போன்று இந்த உலகில் யாராவது தேவ தூதரைப் போல் இலங்கைக்கும் சென்று நித்தம் நித்தம் துன்பத்தால் துடித்துக் கொண்டிருக்கும் அந்த தலித் மக்களை அழைத்துச் சென்று வாழ்க்கை கொடுப்பார்களானால் அது ஏகாதிபத்தியமாக இருந்தாலென்ன எந்தப் பிசாசாக இருந்தாலென்ன நான் அவர்களின் பாதங்களுக்கு பூச் சூடித் தினம் பூசை செய்வேன்.

    இத்தால் அறியத் தருவது என்னவெனில் தமிழீழ விடுதலை என்னும் பெயரில் நடக்கும் கொலை கொள்ளை அரசியலில் பேச்சுவார்த்தை யாவுமே யாழ் மேலாதிக்க சமூகத்தின் சிந்தனையின் வெளிப்பாடே வடக்கு- கிழக்கு, முஸ்லிம், தலித்தென பன்முகப்பட்ட கலாச்சாரங்களுடன் வாழும் மற்றைய மக்களையும் தமிழ் பேசும் மக்கள் என்னும் ஒற்றை வரியில் கூறி முழுப் பழியையும் மொத்தத் தமிழ் மக்கள் மீது சுமத்தாமல் நடைபெற்ற, நடைபெறுகின்ற அனைத்து அழிவிற்குமான தார்மீகப் பொறுப்பை யாழ் மேலாதிக்க சமூகமே பொறுப்பேற்க வேண்டும் என தலித் மக்களின் குரலாக நான் முன் மொழிகிறேன்.

  5. அசுரா மற்றும் தேவதாஸ்சுக்கான எனது பதில் வெளிவரவுள்ளது. தேவதாஸ் யாழ்பாணியமா, ஏகாதிபத்தியமா என்ற கேள்வி எழுப்புகின்றாh. தமது எதிரி யாழ்பாணியம் என்கின்றார். அசுரா யாழ்ப்பாணியம் தான் எகாதிபத்தியம் என்கின்றார். நல்ல நகைச் சுவை தான்.

    இதன் மூலம் சொல்ல வருவது ரி.பி;சி யாழ்பாணியம் அல்ல என்பதே. மற்றொன்று ஏகாதிபத்தியம் யாழ்பாணியத்தை ஒழிக்க போராடுவதாக கூறுகின்றனர்.

    எகாதிபத்தியத்தை யாழ்ப்பாணியத்துக்கு எதிராக தேவதாஸ் காட்டுவதே அரசியல் வேடிக்கை தான். யாழ்பாணியம் வேறு எகாதிபத்தியம் வேறுயல்ல.

    உலகின் சகல சமூக ஒடுக்குமுறைiயும் தன்னகத்தே உள்வாங்கி அதை பாதுகாப்பது தான் எகாதிபத்தியம்;. மனிதன் மீதான் சகல ஒடுக்குமுறையையும் பாதுகாக்கும் போதுதான், எகாதிபத்திய பொருளாதாரம் பாதுகாப்படுகின்றது. அடிநிலைச் சாதிகளின் சாதிய விடுதலை என்பது பொருளாதார ரீதியான விடுதலையுடன் தொடர்புடையது. தாழ்ந்த சாதிகள் பொருளதாரப் பலம் பெறுவது அவர்களின் விடுதலையின் முன்நிபந்தனை. இதையெல்லாம் எகாதிபத்திய பொருளாதாரம், அதாவத உலகமயமாதல் அனுமதியாது. இதை மறுத்து ஒன்றையொன்று எதிராக காட்டவது, சீவி சிங்காரரித்து வேஷம் போட்டு காட்டுவது சுத்த மோசடி.

    பி.இரயாகரன்
    13.06.2006

  6. சோபாசக்தி நீங்கள் நிறைறய கழம்புகிறீர்கள். உங்களுக்க உது தேவையில்லாத வேலை. நீங்கள் படைப்போடு மட்டும் நின்ற கொள்வதே உசிதமானது. உ;ஙகளது குழப்பம், உங்களுடைய உளவிருப்பத்தை மற்க்க அனாவசிய சிப்பபுச்சாயம் பூசகிறீர்கள். ஆனாலும் அது பொருந்தவில்லை.

    உருத்திரன்

  7. ரியிசியில் இவர் தலித்துகளுக்கு சார்பாக கதைத்தால் அந்த பொறுக்கி ஜெயதேவன் அடித்து நிறுத்துவார் என்பது தேவதாசுக்கு தெரியாதா?? அசுரா தேவதாஸ் முதலில் தங்களை சுயவிமர்சனம் செய்து விட்டு தமிழ் மக்களைப்பற்றி கதைக்க வரவேண்டும். தேவதாஸ் ஏன் ரியிசியில் சொந்தப் பெயரில் கதைப்பதில்லை பயம்… நேர்மையிருப்பின் சொந்தப் பெயரில் கதைக்கட்டும். இது அவருக்கு விடும் சவால் தேனீக்கு வக்காளத்து வாங்கும் தேவாதாஸ் சோபசக்தியின் கட்டுரையை தேனீ பிரசரிக்காவிட்டமை ஜனநாயகம் என்கிறாரா

  8. TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பை அடையாள்ம் காட்டியதற்கு நன்றி தோழரே!

    ஆனால் நீர் எதற்காக HRW இற்குப்பல்லிளிக்கிறீர். HRW இன் பூர்வீகம் அறிவீரோ? அறிய வேண்டின் வலைப்பின்னலில் தேடவும்.

    இவ்வறிக்கையில் புலிக்கெதிராக சாட்சிக்கழைக்கப்பட்டவர் பட்டியலில் TBC/சுவிஸ்/ஜெனிவா ‘புகழ்’ ராமராஜும் உள்ளாரே! சுவிஸில் அவரின் குற்றச் செயல்கள் யாவை? இவருடைய சாட்சியம் நம்பகத்தன்மை உள்ளதா?
    புலியெதிர்ப்பின் அடிப்படையே ‘வசதியாகப் பல்லிளிப்பது’ தான். அது TBC என்றாலென்ன HRW, UNICEF, DBS Jeyaraj, Jeyadevan etc என்றால் என்ன எல்லாம் ஒன்றுதான்!

  9. //உலகின் சகல சமூக ஒடுக்குமுறையையும் தன்னகத்தே உள்வாங்கி, அதை பாதுகாப்பதுதான் எகாதிபத்தியம்; மனிதர்கள் மீதான சகல ஒடுக்குமுறையையும் பாதுகாக்கும் போதுதான் எகாதிபத்தியப் பொருளாதாரம் பாதுகாக்கப்படுகின்றது. அடிநிலைச் சாதிகளின் சாதிய விடுதலை என்பது பொருளாதார ரீதியான விடுதலையுடன் தொடர்புடையது. தாழ்ந்த(தாழ்த்தப்பட்ட) சாதிகள் பொருளாதாரப் பலம் பெறுவது அவர்களின் விடுதலையின் முன்நிபந்தனை. இதையெல்லாம் எகாதிபத்தியப் பொருளாதாரம் -அதாவது உலகமயமாதல் அனுமதியாது. இதை மறுத்து ஒன்றையொன்று எதிராகக் காட்டவது, சீவிச் சிங்காரரித்து வேஷம் போட்டுக் காட்டுவது,(அனைத்தும்) சுத்த மோசடி. //

    இரயாவின் இக் கருத்துக்கள்தாம் நேர்மையானதும்,விஞ்ஞானப+ர்வமானதும்! இதனடிப்படையில்தாம் சமூகம் நகர்கிறது.இதைவிடுத்துத் தனி நபர்களின் விருப்பினடிப்படையிலல்ல!

  10. தோழர் ஷோபாசக்தி அவர்களே சரித்திரம் வெல்பவர்க்ளாலேயே எழுதப்படுகிறது என்பது நீங்கள் அறியாததல்ல. சோவியத் யூனியனை வல்லரசாக்கியதில் ஸ்ராலினின் பங்கை அவரின் மனித உரிமை மீறல்களையும் மீறி மெச்சும் நீர் ஏன் ஈழத்தில் புலிகளின் பங்கை ஏற்க மறுக்கிறீர் என்பது புரியவில்லை. ஸ்ராலினை 100% மும் அமெரிக்க எகாதிபத்தினை 110% மும் எதிர்க்கலாமே?

    புலிகள் வெற்றி கொண்டால் சரித்திரம் பின்வருமாறு எழுதப்படலாம்…..

    “அசுரா, உமாமகேஸ்வரன், சிறிசபாரட்ணம் வீழ்ச்சியுடன் புலிகளையும் சேர்த்து பாசிசவாதிகளும் வீழ்ந்தார் எனக் குதூகலிக்கிறார். சிறிசபாரட்ணம் தப்பியோடும் போது அவனைப் பிடித்து சுடுவதற்கு மக்கள் துணை நின்றனர். அது மட்டுமல்லாது டெலோத் துரோகிகளைக் கொண்றவர்களுக்கு சோடா கொடுத்து தாகம் தீர்த்தார்கள். உமாமகேஸ்வரனையோ அவருடைய இயக்கத்தினரே துரோகத்தனம் அறிந்து நடுவீதியில் நாயைப்போல் சுட்டு சனங்களின் பார்வைக்கு விட்டார்கள். இந்திய ஏகாதிபத்திய விரிவாக்கப்படையை தோற்கடித்து யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைப்பற்றியபோது தோல்வியின் விளிம்பில் நின்று மாலைதீவுச்சதியும் கைகூடாமல் தனது தோழர்களாலேயே கொல்லப்பட்டவன் உமாமகேஸ்வரன். ஆனால் புலிகளோ தம் போரியல் வாழ்வில் வீழ்ச்சியையே அறியாதவர்கள். அவர்களின் காலத்தில் தான் ஈழம் தோல்வியே காணாத சுயஅரசாக எழுந்து நின்றது. இண்று வரை தமிழர்களின் அசைக்க முடியாத தலைவர்களாக, இரும்பு மனிதர்களாகத் திகழ்பவர்கள் புலிகள்!!!!

  11. புலிகள் என்பது ஒரு கருத்துநிலை. அது வெறும் நபர்களல்ல.; இந்த யதார்த்தத்தை நாம்
    புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். ஈழத் தமிழர்களைப்பொறுத்தமட்டில் புலி எதிர்ப்பு
    அல்லது புலிஆதரவு என்ற அடிப்படிநிலையே இருக்கமுடியும். மூன்றாம் பாதை முப்பத்தைந்தாம்பாதை
    என்பதெல்லாம் வெறும் சவடல். அந்த அடிநிலையிலிருந்தே மற்றயபாதைகள் கட்டமைக்கமுடியும்.
    எல்லோரையும் கடுமையாகச்சாடுபவர்முன் தன்னை புனிதமானவாராக கட்டமைக்கும் ஆசை
    நிழலாடுகிறது.

    புலியாயிருந்தாலென்ன எதிராயிருந்தாலென்ன ஆழ்மனங்களில் பெரியமாற்றங்களை எம்மில்
    கணடுகொள்ளமுடியாது. புலியின் அத்துமீறிய ஜனநாயக எதிர்ப்பே இன்றைய முதல்விரோதி.
    புலி எதிர்ப்பாளர்களாகிய நாங்களும் வன்முறையை கையிலெடுக்காதவரையில் மட்டுமே புலியை
    விட மாறுபட்டவர்கள். எங்களிடம் இருக்கிற மனவிகாரங்களை நீங்கள் பின்னூட்டங்களில்
    தாராளமாக காணலாம். எவ்வளவ புனைவுகள். புனைவுகளுக்குச் சாட்சிக்குப் கோஸ்டிசேர்த்தல்
    வேறு உலகளாவியரீதியில்..

    அனைத்துக்கொலைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.!
    மனச்சாட்சியைத் தொட்டுப்பாருங்கள். எவ்வளவு பொய் பேசுகிறோம். கௌசல்யன்
    கெலையையையும், யோசேப்பரராஜசிங்கத்தின் கொலையையும்…..இன்னம் இதுவகையறாக்கள்
    கொலைகளையும் கண்டு நாம் மனம்மகிழ்ந்து கொண்டுதானே கண்டிக்கிறோம். எங்களின்
    ஆழ்மனம் மகிழ்ச்சிகொள்கையில் உந்த கண்டிப்பு பம்மாத்துதானே. பிறகு புலிகளிடமிருந்து
    நியாயங்களை நீதிகளை அறங்களை எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்?

    திரும்பவும் சொல்ல ஆசைப்படுகிறேன். புலி என்பது ஒரு கருத்தியல். அது
    யாழ்ப்பாணக்கருத்தியல்தான். யாழ்ப்பாணியம் என்றால் என்னவென்று அறியவேண்டுமாயின்
    கா. சிவத்திம்பியின் யார் இந்த யாழ்ப்பாணத்தான்? என்ற நீழ் கட்டுரையைப்படிக்கவும்.
    இந்த புலிக்கருத்தியலை வெல்வதற்கு இந்த அணுகுமுறைகள் சரிவராது.

  12. தேனி இணையத்தளத்தில் தொடர்ந்து தலித்தெதிர் சொற்கள், இந்நூற்றாண்டிலும் வெட்கப்படவேண்டிய தலித்துக்கு எதிரான நகைச்சுவைகள் போன்றவை தொடர்ந்தும் வெளிவருவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்,புலியை எதிர்கிறோம் என்றபெயரில் தலிதுக்களை எதிர்க்கும் வேலைதான் தேனி செய்துகொண்டிருக்கிறது இது எனது நீண்டநாள் விமர்சனமாக இருந்தது .சுகன் சத்தியக்கடதசியில் தேனிக்கு எதிராக எழுதிய விமர்சனத்துடன் நான் உடன்படுகிறேன் சுகனுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் சுகன் முன்வைக்கும் கருத்தை யாரும் மறுக்க முடியாது இலங்கையில் இன்னும் வெட்கப்படவேண்டிய விடயங்களை வீரகேசரி போன்ற பத்திருகைகளில் வரும் விழம்பரங்களில் பார்க்க முடிகிறது .இதைதான் புகலிடத்திலும் தேனிபோன்ற இதழ்கள் செய்துகொண்டிருக்கின்றன , அண்மையில் சோபாசக்திபற்றி ஒருவர் எழுதியிருந்தார் தான் தலித்தென்றும் கூறியிருந்தார் தேனி போன்ற இதழ்களை ஏன் இவர் அடையாளம் காணாமல் போனார்கள் சோபாசக்த்திபற்றிதிடீரென இவ்ளவு செய்திகள்தெரிந்திருக்கும் இவர் வேறு தலித் இதழிலோ அல்லது இவர் அவருடன் உறவ்வாடித்திரிந்தபோதோ விரும்பியிருந்தால் இலக்கியக்கூட்டங்களிலோ சொல்லியிருக்கலாமே எதற்கு தேனிபோன்ற தலிதெதிர்பான தழங்களை தலித்துகளுக்காக குரல்கொடுக்க சொல்கிறீர்கள் , பெண்களும் தலித்துக்கலும் கறுப்பர்களும் தம்மை இழிவு செய்பவர்கலிடமே அகப்படுகிறார்களா ,ஒரு கறுப்பின ஆணோ பெண்ணோ அல்லது ஒரு தலித் ஆணோ பெண்ணோ அல்லது இந்திய சினிமாக்களில் நடிக்கும் பெண்களோ அல்லது உலகம் முழுக்க இப்படியான தவறுகளை அனுமதிக்கும் பெண்களோ சினிமாவில் வரும் தமது பாத்திரங்களிலும் ,விழம்பரங்களில் நடிக்கும்போதும் தாம் எவ்வளவுதூரம் இழிவாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்றுகூடதெரியாமல் நடிக்கிறார்கள் அதுபோல் தான் எழுதும் பத்திரிகைகள் எந்த கொள்கைகளுடையன என்ற பிரஞ்ஞை இல்லாமலா எழுதுகிறார்கள் எமக்கு இருக்கும் புரிதலைப் பயன்படுத்தி உண்மையில் எமக்கு எதிரானவர் யார் என்பதை இனங்கண்டுகொள்ளவேண்டும் இவர்களை அம்பலப்படுத்தவேண்டும் இவர்களுக்குள் நாம் மறைந்துவிடக்கூடாது
    இதைத் தேனி இதழுக்கும் அனுப்புகிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *