வெள்ளாள அதிகாரமற்ற வடமாகாண சபை…

கட்டுரைகள்

சுகன்: கட்டுரை தொடர்கிறது…

‘வெய்யிலில் இருந்தாற்தான் நிழலின் அருமை தெரியுமெ’ன்பது முன்னோர் வாக்கு. ‘மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் பின்னர் இனிக்கும்’ என்பதும் மூத்தோர் வாக்குத்தான். மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்பதில் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் கால அரசியல் விவாதங்களில் ‘மாவிட்டபுர அரசியல்’ பேசுபொருளானதில்லை.அதேபோன்றே வடக்கு – கிழக்கு மாகாண அரசு முதல்வர் வரதராஜப்பெருமாள் அவர்கள் காலத்தில் தமிழ் அரசியலே விவாதத்திற்குள்ளானதில்லை. ஏறக்குறைய வலதுசாரி, இடதுசாரி சனநாயக அரசியற் தலைமைகளின் காலம் விவாதத்திற்கிடமின்றி முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு தமிழீழம் தீர்வாக முன்வைக்கப்பட்ட காலமது. மாறி மாறி தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்ட காலம் அது.

தமிழீழம் என்ற ஆண்ட பரம்பரைக் கனவின் நிசத்தில் மிஞசியது எதுவுமில்லை . “எனது சோற்றுப் பானையையும் எங்கே தொலைத்தீர்கள்?” என்று உணர்ச்சிக் கவிஞன் ஒருவனின் கவிதை வரி மட்டுமே மிஞ்சியது. “மாவட்ட அபிவிருத்திச்சபை எதற்கு மதகு திருத்தவா?” என்ற கேள்வியோடு ஆண்ட பரம்பரைக் கனவின் அரசியல் நீள்துயிலில் தொடரும் கொடுங்கனவாக முற்றும் அடைந்ததாயில்லை.
ஆனால் அதே மாவட்ட, பிரதேச, கிராம சபைகளில் மதகு திருத்துவோராக, தெருக்கூட்டுவோராக, கேணி குளம் திருத்துவோராக ஒரு சமூகம் அரசியல் அதிகாரம் எதுவுமற்று அவர்கள் சாதிக்குரிய தொழில்களாக இழி தொழில் செய்யும்போது ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழப் பிரகடனமும் திம்புவில் தீர்வுத்திட்டமுமாக தமிழ் அரசியல் சர்வதேச மயப்பட்டிருந்தது.

“போர்நிறுத்தம் போர்நிறுத்தம் பொங்கலோடை போர்நிறுத்தம் எல்லோரும் பொங்கிப்போட்டுத் தின்னவாருங்கோ!” என்ற தெருக்கூத்துப் பாடல் அப்போதைய போர் நிறுத்தத்திற்கெதிராக பிரசித்தமான பாடல். இப்போது நிலைமை நேரெதிராக.ஒருதலைப்பட்சமாக எத்தனைமுறை போர்நிறுத்தம் செய்தாலும் போர்நிறுத்த அமைப்புகள் பலவாக தொழிற்பட்டாலும் போரை நிறுத்த முடியாமற்தான் உள்ளது. ‘மரணத்துள் வாழ்வோம்’ என்று கவிதை எழுதுவது இலகு.வாழ்வது கயிட்டம்.எங்கள் உறவினரான பண்டிதர் கதிரைவேற்பிள்ளையிடம் போராட்டத்திற்கு உங்களால் எத்தனை பவுண்கள் தரமுடியும் என்று விண்ணப்பப்படிவத்தை போராளி ஒருவர் நீட்டியபோது பண்டிதர் கேள்வியின் அருகே ‘பொருந்தாது’ என்று இலக்கணத் தமிழில் தெளிவாக எழுதியதாக சொல்லிச் சிரிப்பார் எனது நண்பர். போராட்டம் பொருந்தாதா பவுண் பொருந்தாதா கேள்வியே பொருந்தாதா என்பது பண்டிதருக்கே வெளிச்சம்.
லண்டன் தலித் மாநாட்டில் கலந்துகொண்ட மாற்று இயக்கப் போராளி ஒருவருடன் உரையாடியபோது அவர் கூறினார்: “தோழர் நான் புலிகளுக்கு எதிரானவன்தான் ஆனால் பழைய நிலைமையை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. இப்படியே நிலைமை இருப்பது தலித்துகளூக்கு நல்லதும் கூட…”.அவர் குறிப்பிட்டது சமாதானம், தீர்வுகள் என்று வரும்போது அச்சமூட்டக்கூடிய வகையில் தலித்துகளின் எதிர்காலம் இருக்குமென்பதை.யுத்தத்தையே நியாயப்படுத்துமளவிற்கு சாதிய ஒடுக்குமுறையும் சாதீய சமூகமும் ஆனதுதான் யாழ்ப்பாணம்.

இப்போது சமகால அரசியற் தீர்வுத்திட்டத்திற்கு வருவோம் .பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் எனும்போது ‘ஜாதிக கெல உறுமய’ மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் கூடாதென்கிறது.
வடமாகாண சபைக்கான தேர்தல் நடாத்தப்படுமுன்னர் உள்ளூர் ஆட்சிமன்றத் தேர்தல்கள் நடாத்தப்படுமென்றும் தமது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து அபிவிருத்திப்பணிகளை மக்கள் முன்னெடுத்துச் செல்லமுடியுமென்றும் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கிறார். சரி, தமது பிரதிநிதிகளை மக்கள் எப்படித் தேர்ந்தெடுப்பார்கள்? இதுவரைக்கும் தமது பிரதிநிதிகளை மக்கள் எப்படித் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்கள்? மக்கள் என்பதற்கும் ஜனநாயகம் என்பதற்குமான அர்த்தபூர்வமான பொருள்கோடல் வேறெங்கும் சாத்தியமோ இல்லையோ யாழ்ப்பாணத்தில் நிச்சயம் சாத்தியமானதே.ஜனநாயகம் என்றால் வெள்ளாள ஜனநாயகம். பிரதிநிதிகள் என்றால் வெள்ளாளப்பிரதிநிதிகள்.
அமரர் .இராசலிங்கம், அமரர் சிவநேசன் ஆகிய இருவருமே கடந்த முப்பது வருடத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட முடியுமென்றால் பெரியாரின் பாசையில் வெள்ளாளனும் ஜனநாயகமும் நம்மைப்பிடித்த நோய்கள் அன்றி வேறென்ன. அதிலும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் என்பது யாழ்ப்பாண வெள்ளாள அதிகாரத்துவ சமூகத்தில் நூறுவீதம் வெள்ளாளார்களே பிரதிநிதிகளாக வரக்கூடிய நிச்சயமான தேர்தல். அதன் அடிப்படையில் கிராமிய மட்டத்திலும் சமூக மட்டத்திலும் வெள்ளாளர்களின் அதிகாரத்துவமும் ஆட்சியும் உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாவட்ட சபைத்தேர்தல்களில் வெள்ளாளப் பிரதிநிதிகள் அதன் ஊக்குவிப்போடும் பரப்புரையோடும் பலத்தோடும் வருவது இப்போதே நிச்சயமானதே.
இதில் எந்தக்கட்சியானாலென்ன, தலித்துகளின் தலைமையை ஏற்காத எந்த அமைப்புமே வெள்ளாளர்களின் ஆட்சிஅதிகாரத்துவத்திற்காகவும் மீண்டும் ஆண்ட பரம்பரையை ஆளக்கொண்டு வரக்கூடிய வேலை முறைகளுக்காகவுமே காத்திருக்கின்றன. தலித்துகள் மீண்டும் மதகு திருத்தும் வேலையில் சேறள்ளும் வேலைக்காக இப்போதே காத்திருப்பதைத் தவிர வேறென்ன இருக்கிறது.

வடக்கு மாகாண ஆளுநராக கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பிரச்சனை அங்கு சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வருவது. தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரச்சனை ஜனநாயகத்தைக் கொண்டு வருவது.ஆனால் நமக்கு முன்னாலுள்ளது நூற்றாண்டுகளுக்கு மேலானது .அது மனித சமூகத்தின் எல்லா விழுமியங்களையுமே அழித்துப்போடக் கூடியது. ஆக வடக்கு மாகாணத்தின் மக்கள் ஆட்சித் தத்துவம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் ஆட்சி அதிகாரத்திற்கான தத்துவந்தான். எடுத்ததெற்கெல்லாம் நாம் மேயர் செல்லன் கந்தையன் அவர்களை குறிப்பிடுவதாக வெள்ளாளர்கள் எம்மைக் குறைகாண்பதுண்டு.மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் கசப்பான அநுபவத்தை இங்கு நீங்கள் பொருத்திப் பார்க்க வேண்டும். ஆட்சி செய்யும் இனமாக தலித்துகள் இருக்கும் போது இப்படியான உதாரணங்கள் தேவையற்றதாகிவிடும்.

மீண்டும் போராட்டத்தின் எல்லா இழிவுகளையும் புலிகளின் தலையில் போட்டுவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தமிழ்ச்சமூகத்தின் அதிகார சக்திகள் வெளிவந்துவிட்டார்கள்.கிறிஸ்தவ ஆயர்களின் அறிக்கைகள் அதைத்தான் சொல்கின்றன. மீண்டும் யாழ் மேலாதிக்க சமூகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார்? பண்டிதரின் பொருந்தாது என்ற பதில் கேள்விக்கு எழ வாய்ப்பில்லை. யாழ்ப்பாண சமூகம் எப்போதும் தடுமாற்றமற்ற சமூகம். “முயலாமையாற்றடுமாறு மாறுகிறேனிந்த மூவுலகுஞ் செயலாலமைத்த கலைமகளே” என்று கம்பரின் பாடலை நவராத்திரிக்கு ஒவ்வொரு வீட்டிலும் பாராயணம் பண்ணும் சமூகம் யாழ்சமூகம்.

முஸ்லிம் பெருமக்களை துரத்தியடித்தது வெள்ளாளப் பகைப்புலமே என்பதை மாற்றுக்கருத்திற்காகவேனும் மறுப்போர் இப்போது இல்லை. முஸ்லிம்கள் – தலித்துகள் அரசியல் ஐக்கியதிலும் வேலைமுறைகளிலும் கிழக்கு மாகாண அரசிற்கு முன்மாதிரியாக வடமாகாண அரசியல் இயங்க முடியும். வடமாகாண அரசிற்கான முதலமைச்சராக முஸ்லிம் பெருமகன் ஒருவர் வருமிடத்து சர்வதேச நிலவரத்தின்படி வடமாகாணத்திற்குச் சிறப்பான எதிர்காலமுண்டு. சாதீய சமூகம் தொலைந்துபோக வாய்ப்புண்டு. இனங்களுக்கிடையிலான ஐக்கியம், நல்லுறவு, சகோதரத்துவம் வளர வாய்ப்புண்டு. தேவை வெள்ளாள அதிகாரமற்ற வடக்கு மாகாண சபை. ஜனநாயகத் தேர்தலில் இது சாத்தியமில்லை .மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் மொழியில் சொன்னால் நாம் சிறுபான்மையிற் சிறுபான்மையர் .சிறுபான்மைத் தமிழர்.
கிழக்கு மாகாணசபையின் சிறப்பு வேறெதிலுமில்லை. அது யாழ் வெள்ளாளரின் அரசியற் பிச்சையில் உதிக்கவில்லை.தீதோ நன்றோ தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட சுயமரியாதையின் வடிவம் அது. அது வாழும் காலம் குறைவானதாயிருக்கலாம். ஆனால் அது சுயமரியாதையோடு வாழ்ந்த காலமாயிருக்கும்.பாரிஸ் கொம்யூனைப்போல. வடமாகாண சபையும் தலித்துகள், முஸ்லிம்களின் சுயகவுரவத்தில் நிலைக்கவேண்டும். வெள்ளாளர்கள் தலித்துகளுக்குப்போடும் அரசியற் பிச்சையிலல்ல.

26 thoughts on “வெள்ளாள அதிகாரமற்ற வடமாகாண சபை…

  1. “கிழக்கு மாகாணசபையின் சிறப்பு வேறெதிலுமில்லை. அது யாழ் வெள்ளாளரின் அரசியற் பிச்சையில் உதிக்கவில்லை”
    நண்ப- அது முற்றிலும் உண்மை அது மகிந்தசிந்தனையின் உச்சத்திலிருந்து உதித்தது.

  2. தலித்துகளிடம் இருக்கும் வெள்ளாளக் கனவு தகர்த்தெறியப்படுதலே இன்ற தலித்சமூகத்தின் முன்னாலுள்ள சவால். வெள்ளாளச்சமூகம் ஒரு துப்புக்கெட்ட பிற்போக்கான பண்பாட்டையுடைய சமூகம். இதையிட்டு தலித் சமூகம் ஏன் கனவில் மிதக்கவேண்டும்? இதையும் தாண்டிய நல்லதொரு பண்பாட்டை நோக்கி ஏன் கனவுகாணக்கூடாது. இலங்கையிலுள்ள தலித்துக்களின் சிக்கல் பல்வேறு பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த தலித்மக்களின் நிலை அவ்வாறானதல்ல. புலம்பெயர்சூழலில் தலித்துக்ள் தங்களுக்கான புதிய பண்பாட்டை நோக்கி ஏன் நகரக்கூடாது? இங்கும் வெள்ளாளக்கனவிலும் வெள்ளாளர்களின் அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்கவேண்டுமா?

  3. இடைக்கால நிர்வாக சபையில் ஏன் கிழக்குமாகாணப் பிரதிநிதிகள் ஒருவருக்கும் இடமில்லாமல் போனது என்ற ஒரு கேள்விக்கு எத்தனை கொலைகள் நடந்தேறியது என்பதை நாம் பார்த்திருந்தோம் தானே. சுகனின் கட்டுரைக்கு வியாக்கியானமும் விளக்கமும் எழுதும் நண்பா;கள் இந்தக் கேள்விக்கு முதலில் தகுந்த பதில் எழுதவேண்டும். இடைக்கால நிர்வாக சபையில் கிழக்குமாகாணத்திற்கு இடமில்லாமல் போனதை விடவும் வடக்கு மாகாண சபை வெள்ளாள அதிகாரமற்றதாக இருக்க வேண்டும் என்று சுகன் இப்போதே கேட்டுவைக்க வேண்டிய தேவையை உணரவேண்டும். அது யாழ் சமூகத்திடம் சாத்தியமாகாது என்று தொpந்திருந்தும். கதைகளை வேறுபக்கம் திசை திருப்பாது தலித்துக்களையோ அல்லது முஸ்லீம்களையோ வடமாகாண அரசியலில் தொpவு செய்து காட்டவேண்டும் இந்த யாழ்சமூகம். அதன் பின் நாம் பேசமுற்படுவோம்.

    கற்சுறா

  4. அண்ணை சுகன்,
    கிட்டடியில ஒரு நண்பரோட கதச்சுக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார் இலக்சனில மக்கெயினோ இல்லாட்டி ஒபாமாவோ வெல்லுவார் எண்டு. நான் சொன்னன் ஒபாமா வெண்டால் நல்லது எண்டு. அதுக்கு அவர் சொன்னார் இல்லை ஐசே அவன் வெண்டால் இந்த கறுவலின்ர அட்டகாசம் தாங்கேலாது மக்கெயின் தான் வெல்ல வேணும் எண்டு. இதில சிக்கல் என்ன எண்டால் அவர் ஒரு ‘தலித்’!!!!!யாழ்ப்பாணம் ரவுண் ஆள். துரையப்பா அவரின்ர குடும்பத்துக்கு வேலை எல்லாம் எடுத்துக்குடுத்தவர்!

  5. “அல்லது முஸ்லீம்களையோ வடமாகாண அரசியலில் தொpவு செய்து காட்டவேண்டும் இந்த யாழ்சமூகம். அதன் பின் நாம் பேசமுற்படுவோம்.

    கற்சுறா”


    நல்லம் நல்லம் அப்பிடியே பேசாம இருங்கோ.

  6. சுகனுக்கு விருப்பமான கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று

    எதிரியின் முறுவல்
    சி.சிவசேகரம்

    எதிரி முறுவலுடன் வந்தான்
    மக்கள் முறுவலுடன் வரவேற்றனர்
    மண் அங்குலம் அங்குலமாகப் பறிபோனது.
    எதிரி புகழுரைகளுடன் வந்தான்
    மக்கள் மகிழ்வுடன் வரவேற்றனர்
    மண் ஏக்கர் ஏக்கராகப் பறிபோனது.
    எதிரி பரிசுகளோடு வந்தான்
    மக்கள் நன்றியோடு வரவேற்றனர்
    மண் சதுரமைல்களாகப் பறிபோனது.

    மக்கள் விழிப்புற்றபோது எதிரி
    முறைப்புடன் கையில் ஆயுதங்களுடன்
    கவசவாகனமேறி வந்தனர்.
    மக்கள் ஆயுதந் தரித்தபோது
    மண்ணை ஆபகரித்தனவால்
    மண்ணை ஆள இயலவில்லை.

    எதிரி போர்நிறுத்தம் பற்றிப் பேசினான்
    அமைதி பற்றியும்
    ஆயுதக் களைவு பற்றியும் பேசினான்.
    மக்கள் போரை நிறுத்தி அமைதி பற்றிப்பேச
    ஆயுதங்களைக் களைந்த பின்
    மண் மீண்டும்
    அங்குலம் அங்குலமாக
    ஏக்கர் ஏக்கராகச்
    சதுரமைல்களாகப் பறிபோனது.

    எதிரியின் இனிய சொற்கள்
    வலிய ஆயுதங்களிலுங் கொடியன.

    http://www.keetru.com/neythal/mar08/sivasekaram.php

  7. தப்பித்தல் நிகழும் தருணம்
    மிகவும் உன்னதமானது

    நுண்ணிய புள்ளியின் மையத்திலிருந்து
    புறப்படும் தாக்குதல்கள்
    வலியின் அளவுகளில் எதிர்கொள்ளப்படுவனவல்ல

    ஒரு வன்முறையிலிருந்தோ
    ஒரு விபத்திலிருந்தோ
    ஒரு பிறப்பிலிருந்தோ
    ஒரு காதலிலிருந்தோ
    எப்படித்தப்புவதென
    தவித்தலில் கிடைக்கலாம்

    நமக்கான நேரம்
    தப்பிக்க முடியாததாய்
    துரத்திவருகின்ற மரணத்திடம்
    என்ன செய்யமுடியும்
    உன்னால் என்னால் நம்மால்

    யாழன் ஆதி கவிதைகள் ;முற்றுகை; காலாண்டிதழ்;சூலை 2008:

    இனிய ரஃபேல்!
    இது கவிதைக்கு எதிர்க்கவிதையால் பதிலிசெய்வதல்ல.
    ஆனாலும் கவிதைகளால் உரையாடும் கதையாடலை
    முடிவிலிவரை நடாத்தலாம்.
    மேலும் ஒரு கவிதையை உங்கள் தரப்பிலிருந்து தாருங்கள்.
    நானும் தேடிப்பார்க்கிறேன்.

  8. லண்டனில் நடந்த தலித் மாநாட்டில் வடமாகாணத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இடைக்கால நிர்வாக சபையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரியளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினரை கோருவது என்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு என்ன நடந்தது ? கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டு ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா ?

  9. இனிய ரஃபேல்!
    உங்களிடமிருந்து பதிலுக்கு வேறுகவிதை வராதவிடத்து
    நான் என்ன செய்வேன்!

    ஆக்காண்டி ஆக்காண்டி
    எங்கெங்கே முட்டைவைத்தாய்

    கல்லைப்பிளந்து நான் கடலோரம் முட்டைவைத்தேன்
    வைத்ததுவோ மூண்டுமுட்டை
    பொரித்ததுவோ நாலுகுஞ்சு
    மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூணுமலை சுத்திவந்தேன்
    பாத்தகுஞ்சுக்கிரைதேடி பவளமலை சுத்திவந்தேன்
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    நானழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும்
    இஞ்சிக்குப்பாய்ந்திடத்தே இலாமிச்சை வேரூன்றி
    மஞ்சளுக்குப் பாய்ந்திடத்தே மாதாளை வேரூன்றி
    தாழைக்குப் பாய்ந்திடத்தே வற்றினது காணீரே!

  10. நண்பர்களே! நீங்கள் இணைப்புக்கொடுத்திருக்கும் தெசம் நெற்றிற்கு அழுத்தினால் அது கிசுகிசு டொற் கொம் இற்கு செல்கிறது.
    வேண்டுமென்றே அப்படி இணைப்பு கொடுத்தீர்களா? தவறாயின் திருத்திவிடுங்கள்..

  11. தனுவின் கேள்வியை கவனத்தில் எடுங்கள். பதில் தாருங்கோ. அப்பதான் அடுத்த வேலைத்திட்டம் பற்றி ஏதாவது உருப்படியா யோசிக்கலாம்

  12. இனிய சுகன் அனைத்துப் பணிகளையும் உழைப்பு உறக்கம் விட்டு சத்தியக்கடதாசி மட்டும் பார்ப்பதுதான் என்வேலையா? அல்லவே!

    உங்கள் பதில் – பின்னூட்டமே நண்பர் தொலைபேசியில் சொல்லித்தான் தெரியவந்தது.

    நிற்க யாழன் ஆதி நன்றாகக் கவிதை எழுதுகிறார் !

    நானும் சில பார்த்தேன்.

    …யாழன் ஆதி கவிதைகள்…

    மல்லிகைப்பூ கொல்லையில்
    அஞ்சு பத்து ஆடி ஓய்ந்த நேரத்தில்
    அந்தியில் மலர்ந்திருக்கும்
    மல்லிகைகளைப் பறிப்போம்
    சட்டைப் பையில் நிரப்பிய
    கர்வத்தோடு
    வீடேறுகையில்
    வாசலில்
    பூஞ்செடிக் குச்சியோடு அம்மா

    இன்னும் தேடுகிறேன்
    என்னைச் சுற்றியிருந்த
    மாணிக்கம் பொ¢யப்பா
    முனிரத்தினம் சித்தப்பா
    லேசாய் முதுகு வளைந்த
    சுப்புரப்பா
    கோல் விளையாடி கையொடிந்த
    வெங்கடேசன்
    அதனால் ஓடிப்போன
    பாண்டியன்
    எவரெவரோ யெததனைப் பேரோ
    எல்லார் வாழ்க்கைகளையும்
    நான் தொலைத்த
    என் வாழ்க்கையையும்.

    கெண்டைக்கால் தசைகள்
    மேலேறி கல்லாய் நிற்க
    தொடை தசைக் கட்டுகள்
    பிளவுப்பட்டுத் தொ¢ய
    கபாடி விளையாடுவார்கள் அண்ணன்கள்
    எப்படியாவது பிடித்துவிட தோணும்
    பட்டையைப் போய் அவர் தொடுவதற்குள்
    என் சின்ன கைகளால்

    நன்றி : விழிப்புணர்வு – ஆகஸ்ட் இதழ் 2008

    …உயிர் எழுத்து…

    – யாழன் ஆதி –
    ஒற்¨க் கண்ணீர்த் துளியென
    இரவின் மீதொரு துயரம்

    உயர்ந்த கம்பங்களில்
    தெறிக்கின்றது வெளிச்சம்

    தார்ச்சாலையின் நீண்ட தனிமையில்
    கொதிக்கிறது துயில்

    இருளடைந்த வயிற்றுக்குள்
    நிரம்பியிருக்கின்றன கைகள்.

    நூலறுந்த பகல் பட்டம் சிக்கிய
    இரவின் துன்ப வனத்தில்
    எழும்புகிறது பாடக் கனவு.

    கால்மடக்கி உடல் குறுக்கி
    தலை தொங்கி காலத்தின் கைகளில்
    பதுங்குகிறது உழைப்புத் தளிர்

    இரக்கமற்ற சுரண்டலின்
    குன்றாத வெப்பத்தில்
    கனறுகிறது துரத்தப்பட்ட சுவாசக்காற்று

    உழைத்துப் பசித்த அயர்வில்
    தளும்பி நிற்கிறது
    சாத்திய இமைகளோடு உயிர் எழுத்து

    வெட்கமேயில்லாமல்
    இழுத்துப் போர்த்திக் கொண்டு
    மல்லாந்து தூங்குகிறது தேசம்.

    நன்றி : தலித் முரசு இதழ் 2008

  13. என்னா விளையார்றியளா ரெண்டுபேரும்.
    எல்லாரையும் மடையராக்கிகொண்டு

  14. இனிய ரஃபேல்
    இனிய ரமழான் வாழ்த்துகள்!
    அனுராதபுரத்தின் வடபாகத்தே கண்டெடுக்கப்பட்ட நாலுநாட்டார் கல்வெட்டில் காணப்படும் வெண்பா ஒன்று.

    போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்
    தீதி லருள்சுரக்குஞ் சிந்தையா _னாதி
    வருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை
    யொரு தர்ம பாலனுளன்.

  15. இனிய சுகன்

    ரம்ழான் நிறைவடைகையில்தான் வாழத்துவது நல்லது. என்னுடன் பணியாற்றும் இசுலாமிய நண்பர்கள் சொன்னார்கள். தற்போது அவர்கள் நோன்பிலிருக்கிறார்கள்.

    அய்ராவதம் மகாதேவன் தொரன்ரோ வருகின்றாராம். பல்கைல்ககழத்துக்கு அவரை செல்வா கனகநாயகம், சேரன், தர்சன் அம்பலவாணர் ஆகியோர் நடத்தும் (Tamil Studies Conference) தமிழியல் மாநாட்டுக்குக்கு அழைக்கிறார்கள்.

    நல்லதாப் போச்சு ! அவரைக் கலந்து சொல்கிறேன் – கல்வெட்டைப்பற்றி.

  16. இனிய சுகன்
    முன்னதாக நண்பர் ஒருவர் இந்த உரையாடல் குறித்து கொதித்திருக்கிறார். அவரது ஆதங்கம் நியாயமானது. பழகிப்போன பாணிகளில் லயித்திக்கும் உளம் வெளியேறுவது கடினம். சிந்தனையும் அவ்வாறே!

    உரையாடலுக்கான மாதிரிகள் எம்முன் இதுவரை தரப்பட்டவைகள் முன்வைத்தவை ஏற்படுத்தியருக்கும் மாயையிலிருந்து அவரது ஆதங்கம் வருகிறது. அதை நான் மதிக்கிறேன் !

    டீவிலியாகும் உரையாடல்கள் அறிவைப் பெற்றுத்தருகின்றனவோ இல்லையோ மெய்யறிவைப் பெற்றுத் தருகின்றன. அந்தவகையில் மகிழ்ச்சியடைகின்றேன்.

    நண்பரும் அவ்வாறே ஓர் வாசிப்பை இதற்கு ஏற்படுத்திக்கொள்ளுவார் என விளைகின்றேன்.

  17. கொதிப்பிற்கும் கொதிப்பின்மைக்கும் இடையிலான வாசிப்பிற்கு கிடைத்த இடைவெளியில் ஒரு கவிதை

    ஆதாம் இரவின் வஞ்சக வனச் சருகு.

    கொடிமுந்திரி பருவ நாளிசை மிதக்கும்
    விண்மீன் மரச்
    சிறகு நிழலுள்
    மூதாதைப் பூவுலகு

    அருவி இரைச்சலாழத்துளிர்வின்
    நீர் விதை இரவின்
    வானவெளி

    துருவத் திசைகாணத் தளிரழிவுச்
    சருகின் வஞ்சக விக்ரத்துள்
    நகரத்து ஆன்மா

    இமைத்துடிப்பின் சிறுபொழுதுக்
    கருமன்றில் உதிரமலையிலழிந்த
    பசும்புல் மலை

    வெண்ணாழிநுரையியக்கக்
    குருட்டுக் கடலுயிரியின்
    ஸ்படிகப் பாசி

    பாரசிகை நிலத்துக் கன்றினுயா;
    தழைத்த முன்ளுணை வனத்தில்
    ஆதாம்
    தேடும்
    சிருங்கார நடுமரம்

    கவிதை
    வியாகுலன்
    இதழ் பவளக்கொடி

  18. அன்பு சுகன், எத்தனைகாலம் இதைப் பார்த்து சும்மாயிருப்பது,
    இதோ எனக்குப் பிடித்த பிரமிளின் மூன்று கவிதைகள்:

    1.மாலை
    விடிவு பூத்து
    இருளில் வாடும்.
    இதழ்கள் அவிழ்ந்து
    வீழும்.
    குழலின் இருளுள்
    உடலின் செடியில்
    உதயப் பூவுன்
    முகமும்?
    யாவும்,த்ச,
    முடிவின் மடியில்
    தவழும் சிசுக்கள்.

    2. கவிதை
    திமிங்கிலம் பிடிக்க
    கப்பலேறி
    கடல் நீரில்
    குழி பறித்தேன்.
    வந்து கவ்வி
    வசப்படுமென்று
    புலிக்கு இரையாய்
    தூண்டிற்புழு தொங்கவிட்டு
    மரத்திலே காத்திருந்தேன்.
    தூண்டில் துளிர்த்தது
    இலையில் ஊர்ந்து
    வசமாயிற்று
    புயல்.
    நீர் சுழன்று குழிந்து
    பிடிபட்டது
    பிரளயம்.
    (வெறும் பட்டாம்பூச்சி போதும் பிரளயத்திற்கு என்ற கேயாஸ் (chaos) தியரிக் கவிதை!)

    3. நம்பிக்கை
    கல்லில்
    சிரிப்பைச் செதுக்கி
    பூவைப் பிடுங்கி
    அடித்தேன் கல்லில்
    ‘பூஜை’ என்று
    கும்பிட்டது
    கும்பல்.
    ஏதோ சிரிப்பு
    எங்கிருந்து?
    உள்ளிருந்தா?
    வெளியிலா?
    செத்துச் செத்து
    உபதேசிக்கிறது
    பூவின் சிரிப்பு.
    கேட்டேன் பூவைக்
    கும்பிட்டேன்.
    ஊரைப் பார்த்து
    ‘கல்லின் சிரிப்பு
    முறைப்பு’ என்றேன்.
    கேட்ட கும்பல்
    கல்லைப் பிடுங்கி
    பூவையடித்தது.

    இதழ்: காலச்சுவடு

  19. கன்றினுயா
    தழைத்த முன்ளுணை வனத்தில்
    குன்றாத மாதவன்மாக் கோதை
    கவிதை சிருங்கார நடுமரம்
    கால்மடக்கி உடல் குறுக்கி
    தலை தொங்கி காலத்தின் கைகளில்
    பதுங்குகிறது உழைப்புத் தளிர்
    வெட்கமேயில்லாமல்
    இழுத்துப் போர்த்திக் கொண்டு
    பவளக்கொடி
    எதிரியின் இனிய சொற்கள்

  20. // கிழக்கு மாகாணசபையின் சிறப்பு வேறெதிலுமில்லை. அது யாழ் வெள்ளாளரின் அரசியற் பிச்சையில் உதிக்கவில்லை.தீதோ நன்றோ தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட சுயமரியாதையின் வடிவம் அது. அது வாழும் காலம் குறைவானதாயிருக்கலாம். ஆனால் அது சுயமரியாதையோடு வாழ்ந்த காலமாயிருக்கும். வடமாகாண சபையும் தலித்துகள், முஸ்லிம்களின் சுயகவுரவத்தில் நிலைக்கவேண்டும். வெள்ளாளர்கள் தலித்துகளுக்குப்போடும் அரசியற் பிச்சையிலல்ல //

    சுகன் கேட்ப்பதற்க்கும் பார்ப்பதற்க்கும் எம்மை சமாதானப்படுத்துவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது நீங்கள் சொல்லுவதில் சிறிதளவேனும் உண்மையிருக்குமாயின் .
    பிள்ளையான் என்பவரும் , கருணாவும் புலிகளில் இருக்கும்போது எத்தனையோ கொலைகள் கொள்ளைகள் கடத்தல்கள் மிரட்டல்கள் செய்தவர்கள்தான். இவர்கள் ஒருநாள் பாவமன்னிப்பில் (அதாவது மகிந்தவுடன் இணைந்ததில் ) தூயவர்கள்ளாகிவிடமுடியுமாயின் புலிகளும் ஒருநாள் தூயவர்களாகிவிடலாம் இல்லையா , கிழக்கில் இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலைகள் , வன்முறைகள் பெண்வதைகள் ,ஆள்கடத்தல்கள் நடந்துகொண்டுதானே இருக்கிறது
    என்னைப்பொறுத்தவரை தலித்துக்களும் பெண்களும் முஸ்லீம்மக்களும் மற்றய சிறுபான்மைஎன்று கருதப்படும் இனங்களும் சரிக்கு சமன் அல்லது ஓரளவாவது அரசியலில் விகிதாசாரத்தில் இருக்கும் வரை எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை பெயருக்கு ஒரு தலித்தையும் ஒரு முஸ்லீமையும் ஒரு பெண்ணையும் நியமித்துவிட்டால் அங்கு எல்லாம் சுயமரியாதையுடன் நடப்பதாகிவிடுமா ? அப்படியொன்று நடகுமாயின் நாம் எல்லோரும் சந்தோசப்படலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .
    எந்த ஆணையும் சந்தேகி என்பதுபோல எந்த வெள்ளாளனையும் சந்தேகி. எப்பவிலிருந்து டக்கிளஸ்தேவானந்தா உங்களுக்கு தோழரானார் ?

  21. பூமி பலியெடுக்க புத்திரர் பரதேசம்- புண்ணியரும் தன்னாசம்
    சோறு சோறு என்று சொல்லித் துள்ளுது பாலரெல்லாம்
    அன்னம் அன்னம் என்று சொல்லி அழுகுது
    பாலரெல்லாம்
    கோடை அழியவேணும் கொள்ளை மழை பெய்யவேணும்
    மாவு கொதிக்க வேணும் குழந்தை பசியாற வேணும்
    பூமி விளைய வேணும்
    புள்ள பசியாற வேணும்
    (நாட்டார் பாடல்)

  22. செம்மாங்குழல்
    எரித்த
    பொடிகட்டுண்டு
    மிவர் எரிகட்கு
    பாதயிவனிங்கு காணின்
    மாதவையோ
    சீர்மெவு ஏழுகடல் விரித்த
    புதுமலா; நெம்மீன்
    ஊர் கன்று விழுமின்
    பாதயூர் போர்த்தி
    திரிசங்கு எழுநின்ற
    காதமலர்ச் சுடலை
    அய்யகோ! அய்யகோ!
    ஏதுமின் விண்மீன்
    ஏவாளுமன்றோ!

  23. ஆனாலும் மோனிகா!
    பிரேமிளிலும்விட நீங்கள் உச்சமான கவிதைகளை எழுதலாம்.
    பேரன்பும் பெரும் பட்சமும் உடையவரல்லவா நீங்கள்.
    பிக்குனிகளின் வழித்தடமும் மெய்மையுமல்லவா நீங்கள்.
    தேரிகாதையைத்தேடி உங்களிடந்தானே வரவேண்டும்.
    பார்க்கப் பெரும் ஆவலாதியாக இருக்கிறது.
    வந்து நம் எல்லோரையும் பார்த்துவிட்டுப்போகவும்.

  24. கவிஞர் தணிகை செல்வத்தின் கவிதை பிரமாதமாக உள்ளது.
    சொற்களில் புரியாத அர்த்தங்கள் மின்னுகின்றன.
    புதுமலா; நெம்மின்
    என்ற கவிவரியில்
    லா விற்கு அருகில் ஒரு காற்குறி போட்டிருக்கிறார் பாருங்கள்!
    அதுவே கவிதையின் உச்சம்

  25. அங்கு அ வையோ !
    செம்மா அய்யகோ!
    சுடலைச் சீர்மெவு
    பாதை இ வனிங்கு
    கட்டுண்டு விரித்த
    மாது காணின்
    புதுமலர் ஊர்
    போர்த்தி எரித்த
    பொடி எரிகட்கு
    உழல் அய்யகோ!
    பாதயூர்
    திரிசங்குமிவர்
    கன்று காதமலர்
    ஏழுகடல் எழுநின்ற
    நெம்மீன் விழுமின்
    ஏதுமின் விண்மீன்
    ஏ! அவாள்
    உம்! அன்றோ!

    ————-

    திலகருக்கும் தணிகைச் செல்வத்திற்கும் கவிதை ஆக்கம் நன்றாக வருகிறது!
    அதை நான் தொடர்ந்தேன்
    அவர்கள் வழியில் இங்கு!

  26. இரண்டாயிரமாண்டு தமிழ்க்கவிதைகளையும் தமிழ் மொழிக்கட்டமைப்பையும் ஒரேஒரு கவிதையில் ஒன்றுமில்லாமற் செய்துவிட்டீர்களே ஐயா!

    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள் முன்னிருந்த படி இருந்ததுபோல்
    கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந்துளுவும்
    உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்று பலவாயிடினும்
    ஆரியம்போலுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே
    _____சுந்தரம்பிள்ளை___

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *