யுத்தம்: தலித் கேள்வி

நேர்காணல்கள்

-சுகன்

யாழ்-மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் அரசியற் படுகொலையில் ஆரம்பித்த தமிழ்த் தேசிய அரசியல் எவருடைய கடைசிக் கொலையில் முடிவுறும் என்று இன்னுங்கூட நிச்சயிக்கமுடியாத நிலையிலும் முடிவுறும் என்பதுமட்டும் முடிவாகத் தெரிகிறது.

சமகால இலங்கை அரசியலில் சாட்சிகளாக இருப்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது பாதுகாப்பானது என்கிற நிலைமையும் தர்க்கமும் இருந்தபோதிலும் இந்த யுத்தத்தில் சாட்சிகள், பாதிக்கப்பட்டோர், கைதிகள், காரணவர் என யாவருமே ஒன்றில் மற்றொன்றாய் மாறிமாறி வினைபுரிந்தும் தேசத்தின் முதல் மகனிலிருந்து கடைசி மனிதர்வரை பங்காளிகளாக இருக்கிறார்கள்,இருக்கக்கூடும்,இருக்கமுடியும்.எல்லோருமே ஒருவகையில் நிரபராதிகள் எனவும்கூடும்.

யாரைத்தான் விட்டுவைத்தது இந்த யுத்தம்?

கொலையாளிகள் இருவர் தாம் செய்யப்போகும் கொலையை கடும்பிரயத்தனத்திலும் நிறுத்தமுடியாமல் போகும் நிலையைச் சொல்லும் லத்தீன் அமெரிக்க நாவல் கூறும் சூழ்நிலையை இலங்கைக்குப் பொருத்தமுடியாவிடினும் மூன்று பத்தாண்டுகளாக கொலைகளை நிறுத்தவும முடியவில்லை.

கொலைகளுக்கெதிரான மறுப்பறிக்கைகளினதும் கண்டன அறிக்கைகளினதும் தேவையும் இப்போது இல்லை. சமுகத்தின் பொது அறம், தர்மநியாயங்கள்பற்றிய கதை கூறுதலும் இப்போது இல்லை. அளவுகளும் இல்லை.

யுத்த தர்மம்! ஆம் யுத்த தர்மம் மட்டுமே நியாயமென்றாகி நீண்ட காலமாகிவிட்டது. சர்வதேசிய மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்புகள்கூட நவீன யுத்த தர்மத்தின் விழுமிய நியாயத்திலேயே கருத்துக்களையும் கண்டனங்களையும் ஆணித்தரமாகவும் பவ்வியமாகவும் வைக்கின்றன.

ஆதிகால யுத்த தர்மங்களைத் தற்போது நோக்குமிடத்து ஆச்சரியமளிக்கின்ற அதேவேளை ஆராதிக்கத் தகுந்ததாகவும் போற்றுதலுக்குரியதாகவும் ஆகிவிட்டது.

1) நேரடியாக தம் எதிரிக்குத் தூதரை அனுப்பி நிலைமையை தெரிந்துகொள்ளல்.
2) புலவோரை எதிரியிடம் அனுப்பி ஏற்படப்போகும் விபரீதங்களை அளவளாவுதல், உசாவுதல்
3) மீண்டும் மேலுமொரு விசேட தூதரை அனுப்பி நிலைமையை நிச்சயித்துக்கொள்ளல்
4) தன்படை, நேச படை, ஆதரவளிக்கும் அண்டைநாட்டு மன்னர் நிலை,
இவற்றின் பலங்களையும் எதிரியின் பலம் பலவீனங்களையும் படைப்பலத்தையும் கணக்கிடுதல்.
5) வெற்றியை உறுதிப்படுத்தல்
6) தோல்வி நிச்சயம் எனில் சரண் அடைதல்,சமாதானமாகப்போதல்.
7) களபூமி என்றழைக்கப்படும் இருபடையினருக்கும் பொருத்தமான யுத்தப்பிரதேசத்தைத் தேர்ந்துகொள்ளல்.
8, குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், முதியோர், துறவிகள், அறவோர், ‘அந்தணர்’, மாடுகள், வளங்கள், இவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
9) போருக்கான நாள் நேரம் இவற்றை பரஸ்பரம் அறிவித்து (றாந்தே- வூ கொடுத்து) ஏற்றுக்கொள்ளச் செய்தல்
10) எதிரியைக்கொண்டே போருக்கான நாள் குறித்தல்
11) அன்றைய நாளிற்கான யுத்தத் தொடக்கத்தையும் முடிவையும் பரஸ்பரம் அவற்றிற்கான சங்கை ஊதி பின் தம் முகாங்களுக்குத் திரும்புதல்.

இவற்றைப்பார்க்கும்போது போரிற்கென ஒரு தர்மம் இருந்தது தெரிகிறது. ஊதுவதற்குச் சங்கு இல்லையே தவிர தற்போதைய போரிலும் தர்மம் இருக்கத்தான் செய்கிறது.

மக்களைப் பாதுகாப்பான இடங்களிற்கு அப்புறப்படுத்திவிட்டு போரில் ஈடுபடும் இருதரப்பினரினதும் இழப்புகளை நிகழ்வுகளைக் கலிங்கத்துப் பரணியையும் விஞ்சும்வண்ணம் முழு ஈடுபாட்டோடு பார்த்து கேட்டு அபிநயித்து ஆதாரமாகக் கொண்டு உலகு தழுவி இந்த யுத்தத்தின் முடிவை எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.

உற்பத்தி-பரிவர்த்தனை பொருளாதாரத்தை விஞ்சி யுத்தப் பொருளாதாரமும் யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கைமுறைமை, அதுசார்ந்த கலை, அழகியல், பண்பாடு, யுத்தம் தந்த புதிய மனிதர்கள், யுத்தமேற்படுத்திய நேச உறவுகள், எதிரிகள், புதிய வாழ் நிலங்கள் என இந்த யுத்தம் விட்டுச்செல்லும் விழுமியங்கள் மிகவும் காத்திரமானவை.

மிகப்பெரும் ஆளுமைகளை இந்த யுத்தம் தந்திருக்கிறதா இல்லையா?

‘நம்மிற் சிலர் இது வேண்டாம் நாம் பழைய நிலைக்கே போய்விடலாம்’ என்று இரண்டு பத்தாண்டுகளிற்குமேலாகவே கூறிவருகிறார்கள்.குறிப்பாக கவிஞர் அருந்ததி 1986 இல் தனது முதலாவது கவிதைத் தொகுப்பிற்கு “சமாதானத்தின் பகைவர்கள்” என்றே பேரிட்டார்.“துப்பாக்கிக் கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது” என்று ஆதிகால ‘தூண்டில்’ சஞ்சிகையில் தயபால திரணகம கட்டுரை எழுதியிருந்தார். போர் எதிர்ப்பு, சமாதானத்தைக் கோருதல் என்பது துரோகச் செயலாக நிறுவப்பட்டபோதிலும் அதைப் பெருமையாகவே ஏற்றுக்கொண்டு போர்நிறுத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி நாம் பழைய நிலைக்கே போய்விடலாம் என்று எப்போதும் போலவே சிலர் இப்போதும் சொல்லிவருகிறார்கள். தமிழ்த்தேசியவாதம் நம்மைக் கொண்டுவந்துவிட்டிருக்கும் நிலையைப்பார்த்தீர்களா? என்று சிவசேகரம் இப்போதும் கேட்கவே செய்கிறார்.

இந்த அழகிய நாட்டை ரயில் பாதைகளால் எப்படி அழகாக இணைக்கலாம் என அவரொத்தவர்கள் கனவுகாணுகிறார்கள். தோழர். டக்ளஸ் தேவானந்தா எல்லோரும் இணைந்தால் இன்னும் இரண்டு வருடத்திலேயே மீண்டும் சீரழிந்தவற்றைச் சீர்செய்துவிடலாம் என்கிறார்.

யுத்தம் முடிந்து புதிய இலங்கை பழைய இலங்கையின் நிலையை அடைய எடுக்கும் காலத்தில் உலகம் எப்படி மாறியிருக்கும் என்பதை 2025 ஆம் ஆண்டிற்கான மேற்குலகின் திட்டமிடல்கள் ஓரளவு காட்சிப்படுத்துகின்றன.

தலித்துகளாகிய நாம் யுத்தமுடிவின்பின் எவ்வாறு எதிர்கொள்ளப்படுவோம்?அதற்கான சிறந்த உதாரணத்தையும் எச்சரிக்கையையும் இறந்தகாலமும் நிகழ்காலமும் நமக்குச் சொல்கின்றன.

1986 இல் நடந்தது இது: தலித் சமூகத்தைச்சேர்ந்த இரு அரசாங்க நிருவாக உயர் அதிகாரிகள் அரசாங்க அதிபர்களாகிக்கொள்வதற்கு சேவை, திறமை, அனுபவம், நேர்மை போன்ற தகுதிகள் இருந்தும் அவர்களது சாதிகாரணமாக ஒருபோதுமே அப்பதவிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை. யாழ்.உதவித்தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்தவரை 1986 இல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பதவிக்கு கொழும்பில் இருந்த சில சிங்கள உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். அன்றைய ஐ.தே.க. அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த அத்துலத்முதலி ‘அவ்வாறான அரசாங்க அதிபர் நியமனத்தை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு வழங்குவதை யாழ்ப்பாண சமூகம் ஏற்றுக்கொள்ளாது’ எனக்கூறி அச்சிபாரிசினை மறுத்துவிட்டார். அவ்வாறே யாழ். உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியான தாழ்த்தப்பட்டவர் மன்னார் அரசாங்க அதிபர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டபோதும் அவரது சாதி காரணமாக அந்நியமனம் கிடைக்கவில்லை. இதேபோன்று கல்வித்துறையின் உயர் நிர்வாகப் பதவிகளிலும் சாதியம் மிக நுணுக்கமாகப் பார்க்கப்பட்டது.

யுத்தமுடிவின் பின்னான மீள் நிர்மாணங்கள் சிவில் சமூக நிலைகள் எல்லாம் சீர்செய்யப்படும்போது சாதியம் எப்படிப் பரிமாணம் எடுக்குமென 2002 இன் சமாதான காலத்தில் நாம் அனுபவித்தோம்.

இந்த முப்பது வருட யுத்தச் சூழலிலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள், இலங்கை அரசு, இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், சர்வதேச சமாதான இயக்கங்கள், கண்காணிப்புக் குழுக்கள், தன்னார்வக் குழுக்கள், இடதுசாரிகள் என எல்லாவற்றிற்கும் யாழ் வெள்ளாள சமுகம் தண்ணிகாட்டிவிட்டு இன்னும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் நிலையில் நமக்குத் தேவை அதிகார சக்திகளுடன் பேரம் பேசும் பிரக்ஞை.

5 thoughts on “யுத்தம்: தலித் கேள்வி

  1. சுகன்

    மன்னராட்சி யுத்தத்தில் போரிலே வென்ற நாட்டுப் படைகள் அந்நாட்டுப் பெண்களைக் கவர்ந்து கொள்ளுதல் அடிமைகளாக்குதல் சொந்தவிருப்பு வெறுப்பற்றவர்களாகக் கருதிப் பெண்களின் மேலே தம் வெற்றிக்களிப்பைத் தீர்த்தலும் உண்டே.

    tharmini

  2. அன்புள்ள சுகன் மற்றும் தர்மினி,

    இந்தப்பிரச்சினை குறித்து தொடர்ந்து சிந்தித்து வருவதால் ஒரு சிறு இடையீடு செய்ய அனுமதியுங்கள். தர்மினி கூறுவது போல மன்னராட்சி காலத்தில் குடிமக்கள் யுத்தங்களால் பாதிப்படைந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அத்தகைய பாதிப்புகள் யுத்தத்தின் உபவிளைவுகள் என்று படுகிறது. குறிப்பிட்ட போர்வீரனையும் பெண்ணையும் பற்றிய பிரச்சினையாக அது சுலபத்தில் மாறுகிறது (அரு.ராமனாதனின் வீர பாண்டியன் மனைவி என்ற புதினம் இவ்வகையில் மிக முக்கியமானது). ஆனால் நம் காலத்தில் யுத்தம் என்பதே குடிமக்கள் மேலான யுத்தமாக மாறிவிட்டது. போர் வீரர்கள் களத்தில் சந்திப்பது என்பது தற்செயலாகவும், விமானங்களில் சென்று குடிமக்களையும், அவர்கள் வாழ்வாதாரங்களையும் நாசம் செயவது என்பதே போர்முறையாகவும் மாறிவிட்டது. எந்த ஒரு மனித உயிரியும் அரசு சார், அரசியல் சார் அடையாளங்களிலிருந்து மீளவது கடினமானதாக மாறி வருகிறது. எனது நோக்கம் அந்தக் காலமே பரவாயில்லை என்று கூறுவதல்ல; நிகழ்காலத்தை எப்படி விமர்சிப்பது என்பதுதான். தலித்துகளின் மக்களாட்சி உரிமைகளை குறித்து கவனம் குவித்துள்ள சுகனின் அக்கறையும் அப்படியானதுதான் என நினைக்கிறேன்.

  3. இனிய தர்மினி!
    போரில் இப்படியான தர்மங்களும் வலியுறுத்தப்பட்டன எனவும்
    இன்னும் கெமுனு – எல்லாளன் சமர்க்களத்தில் படைகளை விலக்கி அவ்விருவரும் மட்டுமே போரிட்டதாகவும் கொல்லப்பட்ட எல்லாளனிற்கு சமாதி எழுப்பி மக்களை அச்சமாதியை வணங்கி வருமாறு கெமுனு வலியுறுத்தினான் எனவும்
    கெளரவரின் வெற்றிக்காக நாட் குறித்துக்கொடுத்தது சகாதேவன் எனவும் நீங்கள் அறிவீர்கள்.

    இவை பெரும்பாலும் இலக்கியத் தொன்மங்கள்.
    சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்,கடற்புறா, சேரமான் காதலி போன்ற புனைவுகளிற்கப்பால் அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி ‘என்ற புதினம் கொஞ்சம் வரலாற்றுடன் நெருங்கிவருகின்றது. சோழ-பாண்டிய- ஈழ கள நிலவரங்களையும் யுத்தங்களின் தோற்றங்களையும் அது ஓரளவிற்குச்சொல்கிறது.
    இத்தகைய வரலாற்றினடியில் சோழர்களே ஆகப்பெரிய அழித்தொழிப்பாளார்கள் என்று ஆய்வாளர்கள் துணிகிறார்கள்.
    அகப்பட்ட ஊர்களையெல்லாம் கொளுத்திச்சென்று வெற்றிக்கொடிநாட்டுதல் அவர்களது யுத்ததந்திரம்.
    பொலனறுவை ராஜேந்திர சோழனால் கொழுத்தப்பட்டது படித்திருப்பீர்கள்.
    மட் கலம் உடைத்துப் பொற்கலம் எடுத்தது தமிழ்மரபு .
    மாவீரர்,மறவர் போன்ற போர்விருதுகளை வழங்கும் தமிழ்மறம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தைக் கோருவது தமிழரின் வீரத்திற்கு இழுக்கு. போர் எனில் யாரோ ஒருவர் வெல்வதும் மற்றவர் தோற்பதும் போரில் தவிர்க்கமுடியாதுதானே!

  4. சுகன்
    ராஜன்குறை எழுதியிருப்பது போல அப்பாவி மக்களின் மீதான அறமற்ற யுத்தமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது மறம் வீரம் பற்றி வேண்டாம்.எப்படியாவது ஓயட்டும் போர்.நாம் ஒரு பட்டாசு வெடித்தால் திடுக்கிடுவோம் . ஓயாமல் காதைப்பிளக்கும் ஒலியோடு நாளாந்தம் ஐம்பது அறுபது நுhறுக்கு மேல் இறப்புகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.ஆயுதங்களை நேசிப்பவர்கள் மட்டும் மோதட்டும் வீழட்டும் வெல்லட்டும்.

    ‘வீரபாண்டியன் மனைவியில்’ ஜனநாத கச்சிராயனும் ஊர்மிளாவும் தான் நிறைந்திருப்பதாக என் அபிப்பிராயம் (எனக்குப் பிடித்த பாத்திரங்களும்).ஈழம் பற்றிய விபரங்கள் பெரிதாக இல்லை.

    தர்மினி

  5. குழந்தைகளே
    நீங்கள் மனிதாபிமானம் நிறைந்தவர்கள். மரணத்தையும் கொடூரத்தையும் கண்டு மனம் நொந்து கொள்பவரகள். மனிதன் தோன்றிய காலம் தொட்டே யுத்தமும் தொடங்கி ஏராளமான துன்பங்கள் நிறைவேறின. மனித வரலாற்றில் கோடானு கோடி மனிதர்கள் யுத்தத்தில் மாண்டு போயினர். அந்த யுத்தங்ள் ஏற்படாதிருந்தால் இன்று பூமியில் வாழ்வதற்கு இடமிருந்திருக்காது. இருக்கும் மனிதர்களுக்கு உணவும் தண்ணீரும் போதாதிருந்திருக்கும். இத்தனை யுத்தங்கள் வந்த பின்னும் இத்தனை கோடி மானிடர்கள் இறந்த பின்னும் பூமியின் வளங்கள் எஞ்சியிருப்பவர்களுக்குப் போதாதுள்ளது.

    இயற்கையில் நியைதியில் ஒரு புள்ளியைத்தானும் உங்கள் கோட்பாடுகளும் கொள்கைகளும் மாற்றிவிடாது.

    யுத்தம் முடிவடைந்த பின்னரும் மீண்டும் தலித்துகள் முன்னரைப்போல் இடர்ப்படாதிருக்க வேண்டுமெனில்

    தலித்துகளையும் வெளியேற்றிவிட்டு வெள்ளாளரும் சிங்களவர்களும் போர் செய்யவேண்டும். அதன் பின்னர் ஏற்படும் அமைதியின் பின்னர் பெளத்த-சிங்கள-தலித்துகள் அனைத்து உரிமையோடும் கெளரவமாக வாழலாம்.

    சுகனின் கனவும் பலிக்கும்.
    சோபா சக்தியின் கனவும் பலிக்கும்.

    தலிபான்கள் தமது மனைவியரின் முகங்களை மூடியது இஸ்லாத்தின் காரணமாக என நம்பிய ஒரு காரணம் உண்மையானதே.

    இருப்பினும் தம்முகத்தின் தாங்கமுடியாத அழகின்மையை மறைப்பதற்காக தமக்கு முடக்காடு போட்ட பெண்களின் பெயரால் இஸ்லாத்தை வஞ்சிப்பது நியாயம் அற்றதல்லவா.

    சிந்தியுங்கள் குழந்தைகளே.

    அல்லாகு அக்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *