குட்டிக் குட்டி மோடிகள் ( தூற்று.கொம் – பகுதி 7 )

கட்டுரைகள்

சென்ற வருடம் கீற்று இணையத்தளம் அதனது ஆறாம் ஆண்டு விழாவில் ஏற்பாடு செய்திருந்த ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக – அரசியல் ஒடுக்குமுறைகள்’ அமர்வு குறித்து ‘லும்பினி’ இணையத்தளத்தில் பிலால் முகமது – லக்கிலுக் இருவரும் இணைந்து ஒரு விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தார்கள். கீற்று ரமேஷ் அந்தக் கட்டுரை குறித்த தனது எதிர்வினையை ‘கீற்றை முடக்கச் சதி’ என்ற தனது கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

“கூட்டத்தில் நடந்த சிறு சலசலப்பைப் பெரிதாக்கி, கீற்று இணையதளம் முஸ்லிம்களுக்கு எதிரான தளம் என்று காட்ட முயற்சித்தார்கள். அதுவும் எப்படி? பிலால் முகமது என்ற பெயரில் சுகுணா திவாகர் எழுதினார். இத்தகைய அயோக்கியத்தனமான வேலையைச் செய்வது ஆர்.எஸ்.எஸ். பாணி அல்லவா? இதை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் சுகுணா திவாகர் செய்தது ஏன்?”

இந்தக் கேள்விக்கு சுகுணா திவாகர் பதில் எழுதுவதே பொருத்தமாயிருக்கும். எனினும் கீற்று விவாதங்களை எதிர்கொள்ளும் விறுத்தங்களைப் பார்த்தால் மானம் ரோசமுள்ள மக்கள் கீற்று இணையத்தோடு விவாதத்தில் இறங்குவது முடியாத காரியமே என்பதில் உண்மையில்லாமலில்லை. கீற்றுவிற்கு விவாதத்திற்கான தர்மம், நியாயம் ஏதும் கிடையாது. அதனால்தான் ‘சுகுணா திவாகருக்கு ஒரு இலட்ச ரூபாய்கள் அவர் பேசும் புலியெதிர்ப்பு அரசியலுக்காக வழங்கப்பட்டது’ எனக் கீற்று ரமேஷால் துடிக்கப் பதைக்க அப்பட்டமான பொய்யொன்றை எழுத முடிந்தது. எனினும் நான் கீற்று ரமேஷுக்குப் பதிலளிக்க விரும்புகிறேன். சுகுணா திவாகர் எனது தோழமை என்பதற்காக அல்லாமல் அக்கட்டுரையைப் பிரசுரித்த ‘லும்பினி’ இணையத்தின் ஆசிரியர்களில் நானுமொருவன் என்ற முறையில் பதில் சொல்ல விரும்புகிறேன். ‘எனது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளிற்கு நான் பொறுப்புக் கிடையாது, வெறுமனே பிழைகள் திருத்திப் பிரசுரிப்பது மட்டுமே எனது வேலை’ எனக் கீற்று ஆசிரியரைப்போல பொறுப்பில்லாம் கழன்றுகொள்ளும் பச்சோந்தித்தனம் என்னிடம் கிடையாது. முதலில் பிலால் முகமதுவும் லக்கிலுக்கும் இணைந்து லும்பினி இணையத்தில் எழுதிய அந்த விமர்சனக் கட்டுரையைப் தயவுசெய்து ஒருமுறை படித்துவிடுங்கள் தோழர்களே:

முஸ்லீம் விரோதப் போக்கிற்கு முட்டுகொடுக்கும் கீற்று.காம்

“இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னை புறக்கணித்தாலும் பரவாயில்லை. என்னுடைய அரசு என்னை கொன்றுபோட்டாலும் நான் இதை சொல்ல தயங்கப் போவதில்லை” – அரங்குக்குள் நாம் நுழைந்தபோது அந்த இஸ்லாமிய நண்பர் ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக ஒரு நீண்ட பட்டியலை கிட்டத்தட்ட கால்மணி நேரம் வாசிக்க ஆரம்பித்தார். எண்பதுகளில் தொடங்கி இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது / கொல்லப்பட்டது குறித்த தலைப்புச் செய்திகளாக அவை அமைந்திருந்தன. சிங்களவர்களில் தொடங்கி தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் பலவும் கூட கடந்த முப்பதாண்டுகளில் இஸ்லாமியர் மீது தொடுத்த தாக்குதல்கள் குறித்த நீளமான அறிக்கையாக அது இருந்தது. மிகக்கவனமாக அந்நண்பர் தொண்ணூறில் இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் எண்பதினாயிரம் முஸ்லீம்கள் கட்டிய துணியோடும் ஐநூறு ரூபாய் காசோடும் வெளியேற்றப்பட்டச் செய்தியை தவிர்த்தே பேசிக்கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு. கடைசியாக, “எங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாகதான் 2009 மே-யில் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்ததாக இலங்கை இஸ்லாமியர் இன்று சொல்லுகிறார்கள். அது தவறான நிலைப்பாடு. நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றுகூறி முடித்தார். அவர் இஸ்மாயில். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரது உரை முடிந்ததுமே ஓவியர் வீரசந்தானம் ஆவேசத்தோடு மேடையை நோக்கி கூட்டத்தின் மையத்திலிருந்து முழங்கினார். “புலிகள் இஸ்லாமியரைத் தாக்கியதாக பட்டியல் வாசித்தீர்கள், ஒவ்வொரு தாக்குதலும் எத்தகைய சூழலில் நடந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்” என்றார். வீரசந்தானத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ஒருவர், “நாங்கள் ஒரு லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். நீங்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஏதோ பட்டியலை வாசிக்கிறீர்கள்” என்று விசித்திரமாக குரல் கொடுத்தார். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த தோழர் சுப.வீ.யும் மேடையிலிருந்தவரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பின்னால் இருந்தவர்களுக்கு சுப.வீ. என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது கேட்கவில்லை.

மீண்டும் அந்நண்பர் ஒலிபெருக்கியைக் கைப்பற்றினார். வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே இஸ்லாமியர் தாக்கப்பட்ட சம்பவங்களை பேசத் தொடங்கினார். பின்னர் சமகாலத்தில் புலிகளால் விரட்டப்பட்ட தமிழர் அமைப்புகள் பலவும் கூட சிங்களவரை சரணடைந்ததை சொன்னார். கடைசியாக கருணா அம்மானும் கூட இங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட பின்னால் சிங்களப் பேரினவாத அரசிடம் போய்ச்சேர வேண்டியிருந்தது என்பதையும் சுட்டிக் காட்டினார். இஸ்லாமியரை மட்டும் எப்படி இத்தகைய சூழலில் தனித்து குற்றம் சாட்டமுடியும் என்றவகையில் அவரது தொனி இருந்தது. குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தை அறுத்தெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு இணையான கொடூரங்கள் இலங்கையிலும் நிகழ்ந்திருக்கிறது. அவ்வகையில் வயிற்றில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட ஒரு குழந்தை அம்மிக்கல்லில் அடித்து கொலை செய்யப்பட்டது என்றும் கண்ணீர் ததும்ப பேசினார்.

மேலும், கிழக்கில் இஸ்லாமியர் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல்கள் கருணா அம்மானின் கட்டளைப்படி நடந்தது. ஆனால் அவையெல்லாம் பிரபாகரனின் கட்டளைப்படி நடந்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த பின்னர்தான் கருணா கூறினார். கருணாவின் கூற்றை முழுமையாக ஏற்கமுடியாது. வடக்கில் நடந்த தாக்குதல்களுக்கு பிரபாகரன் காரணமென்றால், கிழக்கில் கட்டளைத் தளபதியாக இருந்த கருணாதான் அங்கே நிகழ்ந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் கூட்டத்தில் பெரிய சலசலப்பு. பேசிக்கொண்டிருந்த நண்பரை பேசவிடக்கூடாது என்று உரக்க கத்த ஆரம்பித்தார்கள்.

ஓரிருவர் மேடைக்கு முன்பாகச் சென்று பேசவிடாது இடையூறு செய்யவும் தொடங்கினார்கள். முன்பு அதே நண்பர் வாசித்த பட்டியலுக்கு விளக்கம் கேட்டவர்களே, அவர் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது நிறுத்தவும் சொன்னார்கள் என்பது பெரிய முரண். இதையடுத்து அவசர அவசரமாக தமிழக இஸ்லாமியத் தோழர் ஒருவர் மேடையைக் கைப்பற்றினார். “நமக்கும் இந்து ராமுக்கும், துக்ளக் ராமசாமிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை நிச்சயம் நாம் உணர வேண்டும். மேடையில் பேசிய நண்பருக்கு இங்கே நிலவும் சூழல் சரியாகத் தெரியவில்லை. ராஜபக்‌ஷேவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கோரிக்கை முதன்முதலாக நம்மிடமிருந்துதான் எழுப்பப்பட்டது!” என்று பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே தெரிவிக்க சலசலப்பு ஒட்டுமொத்தமாக அடங்கியது.

என்ன கொடுமை பாருங்கள்! இதுவரை இங்கிருக்கும் இஸ்லாமியர்கள், இந்தியத் தேசியத்துக்கு விசுவாசமாக இருப்பதாக வலிந்து காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இனி, விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசியத்துக்கும் தாங்கள் விசுவாசிகள்தான் என்று காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடந்தது இந்து மக்கள் கட்சியின் கூட்டத்தில் அல்ல. ‘முற்போக்குத்தளம்’ என்று தம்மைச் சித்தரித்துக்கொள்கிற ‘கீற்று’ இணையதளத்தின் ஆறாம் ஆண்டுவிழாவில் நடந்த கொடுமைதான் இது.

கீற்று.காம் நடத்திய அத்தளத்தின் ஆறாம் ஆண்டு விழாவில் இஸ்லாமியர்கள் மீதான சமூக – அரசியல் ஒடுக்குமுறைகள் (பாதிக்கப்பட்ட சகோதரர்களின் வாக்குமூலங்கள்) அமர்வில் வாக்குமூலம் கொடுக்கவந்த இலங்கை இஸ்லாமியத் தோழர் ஒருவருக்கு தமிழ்மண்ணில் நிகழ்த்தப்பட்ட அவமானங்கள். சிறுபான்மை இஸ்லாமியச் சகோதரர்கள் தங்கள் மீது ஏவப்பட்ட படுகொலைகள் குறித்துப் பேசும்போதெல்லாம், தமிழ்த்தேசியவாதிகளின் குரல், ‘ஒரு லட்சம் தமிழர்கள் செத்திருக்கிறார்கள், சில ஆயிரம் முஸ்லீம்கள்தானே செத்திருக்கிறார்கள்’ என்பது. கொலைகள் என்பது கொத்துக்கொத்தாய் நடந்தால்தான் அதுகுறித்துப் பேசுவோம் என்பது என்னவகையான மனநிலையில் சேரும் என்பதை யோசிக்க வேண்டும்.

கீற்று முன்பே தெளிவாக குறிப்பிட்டுவிட்டு இந்நிகழ்வை நடத்தியிருக்கலாம். தாங்கள் எதிர்ப்பது இந்திய இஸ்லாமியர்கள் மீதான சமூக – அரசியல் ஒடுக்குமுறைகள்தானே தவிர, இலங்கை இஸ்லாமியருக்கானதல்ல என்று. பாவம், இது புரியாமல் வந்துவிட்ட அந்த இலங்கைத் தோழர் கூட்டத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். மேலும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக்கூட நாங்கள் விரும்புகிற குரலில்தான் பேச வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும், குரல்வளையைத் துழாவித் தங்கள் குரல்களைப் பிடுங்கி எடுப்பதும் ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் வேறென்ன?

இந்நிகழ்வை ஒரு சாதாரண சம்பவம் என்று நம்மால் சுலபமாக கடந்துபோய்விட முடியாது. இது ஒரு எச்சரிக்கை. இந்துத்துவா எப்படி நரேந்திர மோடிகளை வளர்த்ததோ இஸ்லாமியருக்கு எதிராக இந்தியாவில் வெறியாட்டம் ஆடியதோ, அதைப்போல தமிழின் பெயரால் நவீன மோடிகள், நீரோக்கள் வளர்ந்துவருகிறார்கள் என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சான்று.

சிங்களவெறியன் ராஜபக்‌ஷே ஆயிரம் ஆயிரமாக தமிழர்களைக் கொன்று குவித்தானே? அவனிடம் போய் எந்தச்சூழலில் எம்மக்களை நீ கொன்றுக் குவித்தாய் என்று விளக்கம் கோருவோமா? இலங்கையில் இஸ்லாமியர் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களை சிங்கள பவுத்தன் ஒடுக்குகிறான், கொல்கிறான். தமிழ் இந்துவும் ஒடுக்குகிறான், கொல்கிறான் – இதுதான் அந்த நண்பர் சொல்லவந்த செய்தி. தேதிவாரியாக சம்பவங்களை பட்டியலிட்டு சொல்லியிருக்கிறார். இப்படி சம்பவங்களே நடக்கவில்லையென்று தமிழ்த் தேசியவாதிகளால் ஆதாரப்பூர்வமாக விளக்க முடிந்தால் நிச்சயமாக மகிழ்ச்சிதான். “நடந்தது. ஆனா ஏன் நடந்ததுன்னா…” என்று நாம் இழுப்பதே எவ்வளவு கொடூரமானது? “உங்களோடு சேர்ந்து நாங்களும் கொல்லப்பட்டிருக்கிறோம். நீங்களும் எங்களைக் கொன்றிருக்கிறீர்கள்” என்று அந்நண்பர் சொல்லுகிறார். உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒப்புக்கொள்வதில் தயக்கமென்ன? மாறாக நாம் அவரது குரல் எங்கும் பதிவுசெய்யப்பட்டுவிடக் கூடாது என்பதில் அல்லவா கவனம் செலுத்துகிறோம்? இங்கே பேச அவரை அழைத்துவந்துவிட்டு அவமானம் அல்லவா செய்கிறோம்?

பார்வையாளர்கள் மட்டுமா அந்நண்பரை அவமானப் படுத்தினார்கள்? இந்நிகழ்வை நடத்திய கீற்று நிர்வாகி ரமேஷ் பின்னர் விளக்கமளிக்கத் தொடங்கினார். “நாங்கள் இந்நிகழ்வை நடத்துவதாக அறிவித்ததுமே, இந்த இலங்கை நண்பர் எங்களை தொடர்பு கொண்டார். இலங்கையில் நடைபெறும் இஸ்லாமிய ஒடுக்குமுறைகள் குறித்து நிறைய விஷயங்களை சொன்னார். ஆனால் இங்கே பேசும்போது ‘வேறு’ மாதிரியாக பேசிவிட்டார்” என்று சப்பைக்கட்டு கட்டினார். கீற்று நிர்வாகி இம்மாதிரியான ‘விளக்கத்தை’ அளித்துக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அந்த நண்பரும் தர்மசங்கடமாக நெளிய வேண்டியிருந்தது.

நம்மைப் பொறுத்தவரை தமிழன் மீது நடக்கும் தாக்குதல்களை பாசிஸமென்போம். தமிழன் யாரையாவது தாக்கினான் என்று தெரியவந்தால் மூடிமறைப்போம் – இதுதான் இன்றைய பரவலான நிலைபாடாகிப் போனது. இதற்கு கீற்றின் ஆண்டு விழாவில் நடந்த நிகழ்வுகளே சாட்சி. ஆனால் கீற்றைப் பொறுத்தவரை இப்படியாக நடப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பத்திரிகையாளர் பாலாவின் ‘ஈழம் – ஆன்மாவின் மரணம்’ என்ற கார்ட்டூன் புத்தகத்தின் வெளியீட்டு விழாவை இதே கீற்று தளம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பேசியவர்களில் ஒருவர் தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனின் சகோதரரும் ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற மரண மொக்கைப் படத்தை இயக்கியவரும், அது தணிக்கைத் துறையால் தடைசெய்யப்பட்டதாலேயே போராளி ஆகிப்போனவருமான புகழேந்தி தங்கராஜ், சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ராமதாஸ், திருமா, வைகோ போன்ற புலி ஆதரவாளர்களை ஒரே கூட்டணியாக நிற்க வைக்க நடந்த பேச்சுவார்த்தை பற்றி தன் பேச்சில் குறிப்பிட்டார்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூட்டணி குறித்து பாரதிய ஜனதா கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். பா.ஜ.கவும் இந்த கூட்டணி நிற்குமிடங்களில் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவாறாக தமிழகம் முழுவதுமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் நிறுத்துவதற்கு 15 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் திருமா கழன்றுகொண்டதால் கூட்டணியும் பணால், தேர்தலிலும் நிற்கவில்லை. அந்த 15 பேரில் ஒருவர் பாரதிராஜா. அவரை நிற்கவைத்த தேர்ந்தெடுத்த தொகுதி திண்டுக்கல். அதற்குப் புகழேந்தி சொன்ன காரணம், ‘அவர் அந்த இனத்தோட அடையாளம்’. அந்த இனம் என்பது ‘தமிழினம்’ அல்ல. முக்குலத்தோர் இனம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஈழமக்கள் ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவத்தையும் ஆதிக்கச்சாதி உணர்வையும் தூக்கிப்பிடிப்பவர்கள்தான் தமிழ்த் தேசியவாதிகள். தான் ஒருங்கிணைத்த கூட்டத்தில் வெளிப்பட்ட ஆதிக்கச்சாதி உணர்வு தமிழ்த் தேசியவாதிகள் – இந்துத்துவவாதிகளின் கள்ளக்கூட்டு பற்றி விமர்சனம் எழுதுவதற்கு யோக்கியதையற்ற கீற்று.காம் கோவையிலே அ.மார்க்ஸ் கூட்டத்தில் நடக்காத ஒன்றைப் பதிவாக எழுதி வாங்கிப்போட்டது. மேலும் இதுகுறித்து விமர்சனங்களை முன்வைப்பவர்களை எல்லாம் ‘ராஜபக்‌ஷே ஆதரவாளர்கள்’, ‘காசுக்கு விலைபோனவர்கள்’ என்று அவதூறு செய்வதற்கும் கீற்று.காம் தயங்கியதில்லை.

புலிகளின் கைகளில் துவக்குகள் இருந்ததால் அவர்கள் துரோகிகளாக நினைத்தவர்களை எல்லாம் போட்டுத்தள்ளினார்கள். இந்த இணையப் புலிகளின் கைகளில் துவக்குகள் இல்லாததால் பின்னூட்டங்களிலும் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ‘போட்டுத்தள்ளுகிறார்கள்’. முஸ்லீம் விரோத புலிகளை ஆதரித்தும், இந்து உணர்வுடைய தமிழ்த் தேசியவாதிகளின் அவதூறு வாந்தி வதந்திகளுக்கு மேடை அமைத்துக்கொடுத்தும் வந்த கீற்று தளம், முஸ்லீம்களின் பிரச்சினைகளைப் பேசுவதாகப் பாசாங்கு காட்டிய மேடையிலேயே கோவணம் அவிழ்ந்து அம்பலமான காட்சியை என்னவென்று சொல்ல!

* * * *

பிலால் முகமது – லக்கிலுக்கின் கட்டுரையை இவ்வாறு சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம்: ‘கீற்று’ முஸ்லீம்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து ஏற்பாடு செய்திருந்த அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிப்பதற்காக, தன்னார்வமாகத் தனது சொந்தப் பணத்தில் பயணம் செய்து தமிழகம் சென்ற இலங்கை முஸ்லீம் தோழர் இஸ்மாயில் முஸ்லீம்கள் மீது சிங்களப் பேரினவாதத்தால் மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளாலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்துப் பேசுகிறார். அவர் புலிகளையும் விமர்சித்ததால் வெகுண்ட புலியாதரவாளர்கள் இஸ்மாயிலிடம் மேலும் விளக்கங்களைக் கட்டாயப்படுத்திக் கேட்கிறார்கள். இஸ்மாயில் தனது தரப்பைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் பேசவிடாமல் இடையூறு செய்யப்பட்டுத் தடுக்கப்படுகிறார். அவரது குரல் முடக்கப்படுகிறது. நிகழ்வு ஏற்பாட்டாளரான கீற்று ரமேஷ் “இலங்கையிலிருந்தபோது வேறுமாதிரியான விடயங்களைச் சொல்லிவிட்டு இங்கே வந்து இஸ்மாயில் கவிழ்த்துவிட்டார்” என முனகுகிறார். இந்த முனகல் மூலம், ஒருவேளை நிகழ்ச்சிக்கு முன்னரே புலிகள் குறித்தும் தான் விமர்சிக்க இருப்பதாக இஸ்மாயில் சொல்லியிருந்தால்  அவர் ஆண்டு விழா மேடையிலேயே ஏற்றப்பட்டிருக்கமாட்டார் என்பதைத்தானே கீற்று ரமேஷ் சொல்ல வருகிறார்.

நடந்தது ஒரு கருத்து வன்முறையும் கருத்துச் சுதந்திர மறுப்பும். இவர்களே  வில்லங்கத்திற்கு விளக்கத்தைக் கோருவார்களாம். சொல்லப்படும் விளக்கங்கள் இவர்களிற்கு உவப்பில்லாவிட்டால் இவர்களே ‘மைக்’கைப் பிடுங்கவும் செய்வார்களாம். இலட்சம் பெரிசா, நூறு பெரிசா என  மனக்கணக்காகப் பிணக்கணக்கைப் பார்த்து கூக்குரலிடவும் செய்வார்களாம். கீற்றுவின் அமர்வுக்கு தன்னார்வமாகப் பயணம் செய்து நாடுவிட்டு நாடுவந்த சாட்சியின் குரல் இடையூறு செய்யப்பட்டதல்ல கீற்று ரமேஷின் கவலை. பாதிக்கப்பட்ட சாட்சியின் குரல் எதிர்பார்த்த மாதிரி அல்லாமல் வேறுமாதிரி அமைந்துவிட்டது என்பதுவே ரமேஷின் கவலை. இந்த அப்பட்டமான அடாவடித்தனமும், இஸ்மாயிலின் குரல் மீதான தடையும் கீற்று ஆசிரியரைப் பொறுத்தவரை வெறும் ‘சிறு சலசலப்பு’ மட்டுமே. அப்படித்தான் அவர் இந்த நிகழ்ச்சியை மதிப்பிடுகிறார். பெங்களுருவில் தஸ்லிமா நஸ்ரின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையையும், ஓவியர் உசேன் மீது தொடராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் ‘சற்றே பெரிய சலசலப்புகள்’ எனக் கீற்று ரமேஷ் சொல்லக்கூடும்.

“தாங்கள் எதிர்ப்பது இந்திய இஸ்லாமியர்கள் மீதான சமூக – அரசியல் ஒடுக்குமுறைகள்தானே தவிர, இலங்கை இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகளை அல்ல என்பதை ‘கீற்று’ முன்பே தெளிவாக குறிப்பிட்டுவிட்டு இந்நிகழ்வை நடத்தியிருக்கலாம்” என பிலால் முகமது – லக்கிலுக் சுட்டிக்காட்டும் புள்ளி கவனத்திற்குரியது. ‘முற்போக்கு’ப் பேசும் தமிழகப் புலி  ஆதரவாளர்கள் எல்லோருமே ஒன்றுபடும் ஒரேபுள்ளி இதுதான்.

இவர்கள்,  இஸ்லாமியர்களின் பிரச்சினையை மட்டுமல்ல, தலித்  மக்களின் பிரச்சினைகள், இந்துத்துவ எதிர்ப்பு, பெண்ணுரிமை, கலாசார அடிப்படைவாத மறுப்பு, மாவோயிஸ ஆதரவு, மனிதவுரிமைகள் பாதுகாப்பு என இந்தியச் சூழலில் உரத்துப் பேசுகிறார்கள். இவர்களில் ஒருசாரார் தீவிரக் களப்பணிகளிலும் ஈடுபடுபவர்கள். ஆனால் இவர்கள் பேசும் அத்தனை நியாயங்களும் ஈழம் என்றும் புலிகள் என்றும் வரும்போது அப்படியே தலைகீழாக மாறிப்போய், இவர்கள் பேசிய விடுதலைக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் மனிதவுரிமைகள் விழுமியங்களையும்  தலையைச் சுற்றித் தூர வீசிவிட்டு இவர்கள் சந்தர்ப்பவாதிகளாகி  நிற்பதைத்தான் நாங்கள் கவலையுடன் அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இந்தியாவிற்கு ஒரு நியாயமும் ஈழத்திற்கு முற்றாக வேறொரு நியாயமும் இவர்களிற்கு எவ்வாறு சாத்தியமாகிறது. இரு தேசங்களுக்கிடையிலுமான அரசியல், பண்பாடு வேறுபாடுகளுக்கேற்ப கோட்பாடுகளிலும் அரசியல் நிலைப்பாடுகளிலும் நெகிழ்வுத்தன்மைகள் சாத்தியமே. ஆனால் அடிப்படை அரசியல் நிலைப்பாடே மாறிப்போவதை எவ்வாறு மதிப்பிடுவது. மோடியால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களிற்காக இவர்கள் உகுக்கும் கண்ணீர் புலிகளால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் விடயத்தில் அடைத்துக்கொள்வது எதற்காக? அருந்ததி ராய் மீது இந்திய அரசின் அழுத்தங்களை எதிர்த்துக் கோபமாகக் கொப்பளிக்கும் இவர்களது குரல்கள் புலிகளால் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கம்யூனிஸ்டுகள், தலித் தலைவர்களது விடயத்தில் மவுனிப்பது ஏன்? பிடல் கஸ்டோரோவிடமும் ஹியூகோ சாவேஸிடமும் தத்துவார்த்த தவறுகளைக் கண்டுபிடிக்கும் இவர்களது விட்டுக் கொடுக்காத புரட்சிகரம் மூன்று இலட்சம் மக்களை உயிருள்ள மணல் மூடைகளாகவும், மனிதத் தடுப்பரண்களாவும் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவின் மீட்புக் குரலுக்காகக் காத்திருந்த பிரபாகரன் விடயத்தில் குத்துக்கரணம் அடிப்பது எப்படி?

களத்திற்கு ஒரு வேஷம் கட்டும் இவர்களது கண்ணீர் நீலிக் கண்ணீர் என்றும் இவர்களது கோபம் போலிக் கோபம் என்றும் இவர்களது புரட்சிகரம் வெறும் நாடகம் என்றும்  ஏன் சொல்லக்கூடாது! ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது குட்டி நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

செய்ய வேண்டிய அநீதியையும் திமிராகச் செய்துவிட்டு அதற்கு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் நடந்தது ‘சிறு சலசலப்பே’ எனச் சப்பைக்கட்டு வேறு கட்டிவிட்டு கீற்று ரமேஷ் கேட்கிறார்: “பிலால் முகமது என்ற பெயரில் சுகுணா திவாகர் எழுதினார். இத்தகைய அயோக்கியத்தனமான வேலையைச் செய்வது ஆர்.எஸ்.எஸ். பாணி அல்லவா?”

இதிலென்ன ஆர்.எஸ்.எஸ்தனத்தைக் கண்டுவிட்டார் ரமேஷ். ஒரு முஸ்லீம் அல்லாதவர் முஸ்லீம் அடையாளத்தில் மறைந்திருந்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் தொடுப்பதும் முஸ்லீம்களின் அரசியலையும், சிறுபான்மையினர் ஆதரவு அரசியலையும் கொச்சைப்படுத்துவதும்தான் ஆர்.எஸ்.எஸ். பாணி.  இங்கே சுகுணா திவாகர் அதையா செய்தார். மாறாக இஸ்லாமியர்களிற்கு கீற்று இழைத்த துரோகத்தை அம்பலப்படுத்தினார். அன்று கீற்றுவின் ஆண்டு விழாவில் இஸ்மாயிலின் குரலைத் தடுத்து நிறுத்தியவர்களும் அதற்கு நியாயம் கற்பித்த கீற்று ஆசிரியரும் செய்த செயல்கள் ஆர். எஸ். எஸ். பாணி கூடக் கிடையாது. அன்று நடந்தது அசல் ஆர்.எஸ்.எஸ் அரசியல். அதைச் சிறு ‘சலசலப்பு’ எனப் பசப்புவது அயோக்கிய அரசியல். தமது அயோக்கிய அரசியலை சுயவிமர்சனம் கூடச் செய்ய மறுப்பவர்கள்   தமது அரசியலை அம்பலப்படுத்தியவர்கள் மீது ஆர். எஸ்.எஸ். முத்திரையைக் குத்திவிடத் துடிப்பது படுகேவலமான பழக்கவழக்கம்.

ஒரு முஸ்லீம் அல்லாதவர் முஸ்லீம் அடையாளத்தோடு முஸ்லீம்களது பிரச்சினைகள் குறித்துப் பேசுவது சரியா என்பது ரமேஷின் கேள்வி. இதே கேள்வியைத் திருப்பிப் போட்டு ‘கீற்று’ ரமேஷ் தனது புனைபெயராக, தலித் மரபில் அடையாளம் காணப்படுவதோடு தலித் விடுதலையின் குறியீடாகவே திகழும் ‘நந்தன்’ என்ற பெயரைத் தனது புனைபெயராகச் சூடிக்கொண்டிருப்பதையும், ‘குமுதம்’ இதழில் ‘டாப் 10’ சாதனையாளர் பகுதியில்  ‘ கீற்று ரமேஷ்’ எனத் தன்னை அடையாளப்படுத்திவிட்டு இணையத்தில் மட்டும் ‘கீற்று நந்தன்’ என்ற பெயரை உபயோகிப்பது குறித்தும் நானும் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்தவகைக் கேள்வி ரமேஷை மடக்க உபயோகப்படுமேயொழிய அது  நேர்மையான கருத்து விவாதமாயிருக்காது. வேற்றுப் பாலினத்தின் பெயரை,  வேற்று மதத்தினரது பெயரை, வேற்று இனத்தினரது பெயரை தமது புனைபெயர்களாகக்கொண்டு தமிழ் எழுத்துலகப் பரப்பில் பல பத்துப்பேர்கள் செயற்படுகிறார்கள். இவர்களை இவர்களது கருத்துகளையும் செயற்பாடுகளையும் வைத்து மதிப்பிடப் போகிறீர்களா அல்லது பெயர்களை வைத்து மதிப்பிடப் போகிறீர்களா. இதே கீற்று இணையத்தில்  எழுதும் பொன்னிலா பெண் பெயரை புனை பெயெராகச் சூடிக்கொண்டு  பெண்களது பிரச்சினை குறித்துப் பேசுவது ஆணாதிக்கத் தந்திரமே என நீங்கள் கருதுவீர்களா? மன்னிக்கவும் நான் அவ்வாறு கருதவும் மாட்டேன், பிரச்சினைகளைக் கறுப்பு வெள்ளையாக எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளவும் மாட்டேன். அரசியல் பிரச்சினைகளையும எழுத்தாளர்களையும் நான் அணுகும் வழி கண்டிப்பாக இதுவல்ல.

பத்திரிகைத் தொழில் சார்ந்து இயங்கும் தோழர்கள் பத்திரிகைக்கு  வெளியே வெவ்வேறு புனைபெயர்களில் எழுத வேண்டியிருப்பதற்கான சூழலை நாம் புரிந்துகொள்வோம். என்னதான் புனைபெயராயிருந்தாலும் ஒரு முஸ்லீம் அல்லாதவர் முஸ்லீம் அடையாளத்தோடு எழுதியது விமர்சனத்துக்குரியதே எனக் கருதும் தோழர்களும்  இருக்கக்கூடும். ஆனால் அந்த அடையாளத்தோடு ஒருவர் எதைக் குறித்து, எவ்வாறு எழுதினார் என்பதையும் இணைத்தே நீங்கள் பிரச்சினையை மதிப்பிட வேண்டும். சூழலிலிருந்து பிரச்சினையைத் தனியே பிய்த்தெடுத்துப் பரிசீலனை செய்வது  சரியாகாது.  ‘பிலால் முகமது’ பெயர் குறித்த உங்களது அதிருப்தியும் கரிசனமும் முஸ்லீம்களின் நலன்கள், உரிமைகள் குறித்த அக்கறையிலிருந்து உங்களிற்குத் தோன்றுவது உண்மையெனில் சுகுணா திவாகரை விமர்சிப்பதற்கு முன்னாக நீங்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டியது கீற்றுவின் இஸ்லாமிய விரோதப் போக்கையே. கீற்றுவைக் கண்டிக்காத உங்களிற்கு சுகுணா திவாகரை விமர்சிக்கும் தார்மீக உரிமை கிடையாது. அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களிடமிருப்பது தனிநபர்கள் மீதான காழ்ப்பே தவிர இஸ்லாமியர்கள் மீதான கரிசனையல்ல.

உங்களது  அதிருப்தியை, கீற்றுவின் இஸ்லாமிய விரோதப் போக்கை அம்பலப்படுத்திய திருப்தியோடு  சுகுணா திவாகர் ஏற்கவும் கூடும். ஆனால் கீற்றுவின் மீதான உங்களது கண்டனம் புறக்கணிக்கப்படும், அல்லது கண்டனம் செய்யும் நீங்கள் வெறுமனே அவதூறுகளால் எதிர்கொள்ளப்படுவீர்கள். அதுதான் சுகுணா திவாகருக்கு நடந்தது. இலட்ச ரூபா லஞ்சக் குற்றச்சாட்டை அவர் சுமக்க வேண்டியிருக்கிறது.  கீற்று ரமேஷோ ஒரு முழுப் பூசணிக்காயைத் தூக்கி ஒரு ப்ளேட் பிரியாணியில் கமுக்கமாகப் புதைத்துவிட்டு, ‘சிறு சலசலப்பு’ எனச் சொல்லிவிட்டு அடுத்த அவதூறை உருவாக்கப் போய்விட்டார். ‘அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக!’ என்கிறது அல் – குர்ஆன்.

ஈழத்து சமூகவியல் / சாதியமைப்பு /  ‘இயக்க’ வரலாற்றியல் அறிஞர் மினர்வா கீற்று இணையத்தில் எழுதிப் பரபரப்பைக் கிளப்பிய  “ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை” என்ற கட்டுரையின் யோக்கியதையை அடுத்த பகுதியில் ஆய்ந்துவிடலாம் தோழர்களே.

(நிழற்படம்: புலிகளால் நிகழ்த்தப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்)

1 thought on “குட்டிக் குட்டி மோடிகள் ( தூற்று.கொம் – பகுதி 7 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *