மதுரக்குரல் மன்னன்…..

கட்டுரைகள்

சாலையிற் தார் உருகிச் செல்லும் நெருப்பு வெயிலில் யாழ்ப்பாணத்தின் சிறு நகரம் ஒன்றிற்குள்ளால் எங்களது வாகனம் சென்றுகொண்டிருந்தது. வாகனத்திற்குள் எனது சகாக்கள் முழு ஆயுதபாணிகளாகப் போர்க்கோலத்திற் தயாராயிருந்தார்கள். வாகனத்தின் தலையில் ஒலிபெருக்கிகள் இரண்டு கட்டப்பட்டிருந்தன. வாகனத்தின் பின்இருக்கையில் நான் அமர்ந்திருந்து ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். காலையிலிருந்து நாங்கள் இந்த வாகனத்திற் சிறு நகரங்களையும் கிராமங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்தவாறே வந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சிறு நகரத்தில் எங்களது வாகனம் ஒரு நிமிடம் நின்று கிளம்பியபோது வாகனத்திற்குள் புதிதாக ஏறி என்னருகே உட்கார்ந்தவரிடம் நான் ஒலிவாங்கியைக் கைமாற்றினேன். இனி அவர்தான் அறிவிப்புச் செய்யப்போகிறார். அந்தக் கறுத்த, சிறுத்த உருவமுடைய மனிதரிடம் அவர் செய்ய வேண்டியிருந்த அறிவிப்பு எழுதப்பட்டிருந்த காகிதத்தைக் கொடுத்தேன். காகிதத்தை வாங்கியவர் தனது தொப்பியை வருடியவாறே காகிதத்தை வரி வரியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அக்காலத்தில் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பொடியன்களின் கனவு நாயகன், மதுரக்குரல் மன்னன் கே.எஸ். ராஜா.

எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது என் தந்தை வழிப் பாட்டி இறந்துபோனார். தனித்துப்போன எங்கள் தாத்தா – நாங்கள் அவரை அப்பு என்றுதான் அழைப்போம் – தனது உடைமைகளுடன் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டார். அப்புவிடம் உடைமைகளாக ஒரு துணிமூட்டையும் சாகும்போது ஆச்சி காதில் போட்டிருந்த அரைப் பவுண் தோடும் ஒரு ரேடியோவும் இருந்தன. அப்பு ஒரு விறுக்கர். எத்தனை கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டியிருந்தாலும் ஆள் நடந்துதான் போவார். பஸ்ஸில் ஏறவே மாட்டார். நத்தாருக்கோ வருசத்திற்கோ சுடச் சுடச் சோறும் இறைச்சிக் கறியும் கொடுத்தாற் கூட அதற்குள் ஒருசெம்பு பச்சைத் தண்ணீர் ஊற்றித் தான் பிசைந்து சாப்பிடுவார். எப்போது பார்த்தாலும் “எனக்கென்ன குறை? என்னட்ட அரைப் பவுண் தோடும் ரேடியோவும் இருக்கு” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்.

ஒரு சிங்கள நாட்டார் கதையில் கமறாலவின் மனைவி அவள் வீட்டு உரலை ஏணியாகவும் உட்காரும் ஆசனமாகவும் விளக்கு ஏற்றி வைக்கும் பீடமாகவும் கதவுக்கு முட்டுக் கொடுக்கவும் பயன்படுத்துவாளே! அது போலவே நாங்கள் அப்புவின் ரேடியோவைப் பாடல்கள் நிகழ்ச்சிகள் கேட்கவும் கடிகாரமாயும் அலாரமாகவும் அவசரத்துக்கு அடவு வைக்கும் பொருளாகவும் பயன்படுத்திக்கொண்டோம்.

பத்திரிகைகள், சஞ்சிகைகள் படிக்கவோ திரைப்படம் பார்க்கவோ வசதி வாய்ப்புக்கள் என் சுற்று வட்டாரத்திலேயே கிடையாது. ரூபவாஹினி என்ற பெயரைக் கூட நாங்கள் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பு கொண்டுவந்த ரேடியோ எனக்குப் புதியதோர் கனவுலகத்தையே திறந்து வைத்தது. திரைப்படத்தின் மூலமும் கட்சியின் மூலமும் எம்.ஜி.ஆரின் அதி தீவிர ரசிகர்களானவர்கள் ஆயிரமாயிரமுண்டு. ஆனால் நான் ஆயிரத்தில் ஒருவன். ரேடியோவில் எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டுக் கேட்டே முளைக்கும்போதே எம். ஜி. ஆர் ரசிகனாகவே நான் முளைத்தேன். அநேகமாக எம்.ஜி. ஆரின் அத்தனை ‘தத்துவப்’ பாடல்களையும் நான் மனப்பாடம் பண்ணிவைத்திருந்தேன். இன்று வரை எனக்கு அந்தப் பாடல்களில் ஒருவரி கூட மறந்து விடவில்லை.

நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படிக்கும்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நான் இங்கே தீவில் படித்துக்கொண்டிருந்தேன். எனது அண்ணர் எட்டாம் வகுப்போடு படிப்பு ஏறாமல் பள்ளிக்குப் போகாமல் நின்று விட்டார். அப்போது பப்பா யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தையில் சாக்கு விரித்து தேசிக்காய், இஞ்சிக் கிழங்கு வியாபாரம் செய்துகொண்டிருந்தார். பள்ளிக்குப் போகாமல் நின்றிருந்த அண்ணரையும் பப்பா தனக்கு உதவியாய் சந்தைக்குக் கூட்டிப் போய் வந்துகொண்டிருந்தார். இதனால் சைக்கிளில் போகவும் வரவும் அண்ணருக்கு யாழ் நகரத்திலுள்ள சினிமாத் தியேட்டர்களின் முன்பு வைத்திருக்கும் ‘கட் அவுட்’டுக்களையும் நகரத்துச் சுவர்களில் ஒட்டியிருக்கும் திரைப்பட விளம்பரச் சுவரொட்டிகளையும் கண்டுகளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொருநாள் இரவிலும் அந்தக் ‘கட் அவுட்’டுக்களைப் பற்றியும் சுவரொட்டிகளைப் பற்றியும் அண்ணர் எனக்குக் கதை கதையாகச் சொன்னார். தங்களோடு சந்தைக்கு வந்தால் என்னாலும் ‘கட் அவுட்’டுக்களைப் பார்க்க முடியும் என்றார் அண்ணர். திரைப்படங்கள் பார்ப்பதற்காக அல்ல! வெறும் கட் அவுட்டுக்களைப் பார்ப்பதற்காகவே நான் பள்ளியிலிருந்து நின்றுவிடத் தயாரானேன். பப்பாவிடம் அடி வாங்காமல் ஏதாவதொரு தகுந்த காரணத்தைக் கூறி நான் பள்ளியிலிருந்து நின்றுவிட வேண்டும். நான் ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை உருவாக்கிவிட்டு அதை நிறைவேற்றும் தருணத்திற்காகக் காத்திருக்கலானேன்.

ஒருநாள் முன்னிரவிற் சந்தையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்த பப்பா முற்றத்திற் சாய்வு நாற்காலியில் அமைதியாகப் படுத்திருந்தார். நான் முற்றத்தில் ஆட்டுக்குப் புண்ணாக்குத் தீத்திக் கொண்டிருந்தேன். திடீரென பப்பா என்னைக் கூப்பிட்டு “மகன் படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?” என்று விசாரித்தார். ஆகா! இது தான் நான் காத்திருந்த தருணம். இதை நழுவ விடலாமா? பப்பா வழக்கத்திற்கு மாறாக இன்று கொஞ்சம் சாந்தமாய் இருப்பது போலவும் தெரிகிறது. நான் எனது திட்டத்தின் முதற் பகுதியை நிறைவேற்றத் தொடங்கினேன்.

“பப்பா எனக்குப் படிக்க கஸ்ரமாக்கிடக்கு நான் பள்ளிக்கு போகயில்ல…”
“ஏன் என்ன கயிட்டம்?”
“எனக்கு படிக்கிறதெல்லாம் மறந்துபோகுது பப்பா”
“சரி கயிட்டமெண்டால் விடு, பள்ளிக்கூடத்த விட்டுப்போட்டு என்ன செய்யப் போறாய்?”
“நானும் உங்களோட சந்தைக்கு வாறன் பப்பா”
“சரி நாளைக்கு என்னோட யாவாரத்துக்கு வா! இப்ப ஒரு பாட்டுப் படி பார்ப்பம்…கேப்பம்!”

என்னுடைய திட்டம் இவ்வளவு சுலபமாக வெற்றியீட்டும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. பப்பா தண்ணியைப் போட்டால் அம்மாவைத்தான் பாடச் சொல்லிக் கரைச்சல் கொடுப்பார். ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று என்னைப் பாடச் சொல்கிறார். இன்ப அதிர்ச்சியில் நின்றிருந்த நான் அப்பாவின் எதிரே முற்றத்து மணலில் உட்கார்ந்திருந்து பாடத் தொடங்கினேன்.

“பாடல் இடம் பெற்ற படம்: வா ராஜா வா!, பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்யநாதன்” என்று அறிவிப்புச் செய்யாத குறைதான். மற்றப்படிக்கு எந்தக் குறையுமில்லாமல் “இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகின்றான், மனிதன் வடித்த சிலையிலெல்லாம் இறைவன் வாழுகின்றான்” என்று முழுமையாகப் பாடலைப் பாடி முடித்தேன். இந்தப் பாட்டைப் பாடுவதில் ஒரு நுணுக்கமுள்ளது. சரணத்தின் ஈற்றில் “இசையில் மயங்கி இறங்கி வருகின்றான்/இறைவன் இறங்கி வருகிறான்” என அரை மாத்திரையளவே நிறுத்தி மறுபடியும் பல்லவிக்குக்கு உச்சஸ்தாயில் சீர்காழி எகிறுவார். நான் அந்தப் பாவத்தையெல்லாம் பாடலில் கொண்டு வந்திருந்தேன். பாடல் முடிந்தது தான் தாமதம், அதுவரை கண்களை மூடிச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த பப்பா துள்ளி எழுந்து சாய்வு நாற்காலியின் துணியில் சொருகப்பட்டிருந்த தடியை உருவியெடுத்துக்கொண்டு “அடப் புண்டையாண்டி, ஒரு வரி மறக்காமல் சினிமாப் பாட்டுப் பாடத் தெரியுது… ஆனால் உனக்குப் பள்ளிக்கூடப் பாடம் மறக்குதோ?” என்று உறுமியவாறே என்மீது பாய்ந்தார். தடபடவெனத் தடியடிகள் என் தேகத்தில் விழுந்தன. சும்மாயிருந்த அம்மாவுக்கும் இரண்டு அடிகள் போட்ட பப்பா அம்மாவைப் பார்த்து “வேச எல்லாம் நீ வளர்த்த வளர்ப்புத்தானடி” என்று பற்களை நெருமினார். பப்பாவுக்குத் தெரியாது; நான் அம்மா வளர்த்த பிள்ளையல்ல, நான் ரேடியோ வளர்த்த பிள்ளை.

‘தணியாத தாகம்’, ‘இரைதேடும் பறவைகள்’, ‘கோமாளிகள்’ போன்ற தொடர் நாடகங்களும் ‘கதம்பம்’, ‘முகத்தார் வீடு’ போன்ற உரைச் சித்திரங்களும் ‘வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் சலவாத்தும்’ சொல்லும் முஸ்லீம் நிகழ்ச்சியும் கிழமை தோறும் வரும் ஒலிச் சித்திரங்களும் என்னை ரேடியோவுக்கு அடிமையாக்கிப் போட்டன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பாகிய நூற்றுக் கணக்கான திரைப்படப் பாடல்கள் பாடல் இடம் பெற்ற படம், பாடியவர்கள், எழுதியவர், இசையமைத்தவர் என்பன போன்ற குறிப்பான தகவல்களோடு முழுமையாக எந்தச் சிரமமும் இல்லாமலேயே என் சின்ன மண்டைக்குள் தரவிறக்கம் செய்யப்பட்டன. பாடசாலையில் ஆசிரிய ஆசிரியைகளுக்குத் திரைப்படப் பாடல்களில் ஏதும் சந்தேகமோ கேள்விகளோ இருந்தால் அவர்களுக்குப் பாடல்களைப் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால் எடுத்த வீச்சுக்கு “அழைத்து வாருங்கள் 8 Bயில் படிக்கும் அன்ரனிதாசனை” என்றுதான் கூப்பிட்டார்கள். எங்கள் கிராமத்துச் சண்டியர் ‘குத்துக்கார’ இரத்தினம் கூட என்னைக் கூப்பிட்டு வைத்து எம். ஜி. ஆரின் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்குமளவிற்கு எனது கியாதி என்னைச் சுற்றி ஆகக் குறைந்தது ஒரு கிலோ மீற்றருக்குப் பரவியிருந்தது. நானொரு நடமாடும் குட்டி ‘ரேடியோ சிலோனா’கக் கிராமத்தை வலம் வந்துகொண்டிருந்தேன்.

அப்போதைய இலங்கை வானொலியின் உச்ச நட்சத்திரங்களான அப்துல் ஹமீட், முகத்தார் ஜேசுரட்ணம், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன், சிறீதர் பிச்சையப்பா, கே. எஸ் .பாலச்சந்திரன், எஸ்.எஸ். கணேசபிள்ளை போன்றவர்கள் போலெல்லாம் பேச முற்பட்டதோடு மட்டுமல்லாமல் என்னைத் தன் மழலைக் குரலால் மயக்கி வைத்திருந்த கமலினி செல்வராசன் போலப் பேசவும் நான் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டேன். எதிர்காலத்தில் மேடைகளில் நடிக்க வேண்டும் அல்லது ரேடியோ சிலோனிற்குள் புகுந்துகொள்ள வேண்டுமென்ற இலட்சியத்துடன் நான் இந்தக் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. நான் என் அன்றாட வாழ்க்கையிலேயே இவர்களைப் போலத்தான் பேசிக்கொண்டு திரிந்தேன். ஆடு மேய்க்கும் போது முகத்தார் போல அகடவிகடம் செய்தேன். பஸ்ஸில் தொற்றி ஏறியபடியே “அண்ண ரைட்” என்று குரல் கொடுத்தேன். கிராமத்துக்கு நாற்காலி பின்ன வரும் சிங்களவரான ‘பாஸ்’ ஐயாவோடு உபாலி செல்வசேகரன் போலக் கொச்சைத் தமிழில் கதைத்தேன். தொட்டதற்கெல்லாம் கமலினி போலச் செல்லமாகச் சிணுங்கினேன். இவ்வளவு பேரையும் போலச் செய்ய முயன்றவன் கே.எஸ். ராஜாவைப் போலப் பேச ஆசைப்பட்டிருக்க மாட்டேனா என்ன?

இலங்கை வானொலியிலேயே எனக்கு ஆகவும் பிடித்த நிகழ்ச்சி திரைவிருந்து தான். அப்போதெல்லாம் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் திரைப்படங்கள் பற்றிய கனவிலேயே நான் மூழ்கிக் கிடப்பேன். ஆனால் வருடத்திற்கு ஒன்றிரண்டு திரைப்படங்களுக்கு மேற் பார்க்க வாய்ப்புக் கிடைக்காது. அப்போது கலரி ரிக்கட் ஒரு ரூபாதான். ஆனால் அதற்கே பெரும் தட்டுப்பாடு. அப்படி ரூபாய் கிடைத்தாலும் படம் பார்க்கச் செல்வதற்கு வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். வீட்டாருக்குத் தெரியாமலும் படம் பார்க்கப் போக முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்த பதினொரு தியேட்டர்களிலும் எந்தத் தியேட்டரில் நான் களவாகப் படம் பார்த்தாலும் பப்பாவுக்குத் தகவல் தெரிந்துவிடுகிறது. இந்த உளவறியும் விசயத்திலெல்லாம் பொட்டம்மான் என் பப்பாவிடம் பிச்சை வாங்க வேண்டும். மேதினத்தில் மட்டும் படம் பார்க்கச் செல்ல எனக்கு அனுமதி கிடைக்கும். மேதினமன்று நகரத்தின் எல்லாத் திரையரங்குகளிலும் ஐம்பது சதம் மட்டுமே நுழைவுக் கட்டணம். அந்த ஐம்பது சத நுழைவுச் சீட்டு எல்லா வகுப்புக்களிற்கும் செல்லுபடியாகும். நான் மே தினங்களில் ஐம்பது சதத்துடன் பல்கனியில் இருந்தும் படம் பார்த்திருக்கிறேன்.

ஒரு திரைப்படம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு நிகராகக் கே.எஸ் ராஜா வானொலியில் நிகழ்த்திய திரைவிருந்து நிகழ்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சில தருணங்களில் அந்த நிகழ்ச்சி ஒரு திரைப்படத்திலும் மேலாக எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் காத்திருக்கும் ரசிசிசி….கப் பெருமக்களுக்கு’ என்று ஆரம்பித்து ‘வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ்.ராஜா’ என்று மதுரக்குரல் மன்னன் முடிக்கும் வரை நான் கள்ளால் மயங்குவது போல அதைக் கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்பேன்.

மிகவும் எளிமையான ஒலி ஒட்டு வேலைகள் மூலமும் நடிகர்களின் படிமங்களுக்குத் தகுந்த வசனங்களைப் பொருத்தமான இடங்களில் ஒலிக்கவிட்டும் நிகழ்ச்சியை முடிக்கும் போது ஒரு ‘தொக்கு’ வைத்து முடித்தும் கே.எஸ். ராஜா தனது பாணியை உருவாக்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் கலைஞரின் வசனத்தில் ஜெய்சங்கர், எம்.ஆர். ராதா நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சிறீதர் திரையரங்கில் எம். ஜி. ஆரின் ‘மீனவ நண்பனும்’ ஓடிக்கொண்டிருக்கிறது. திரைவிருந்து நிகழ்ச்சியில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து கே.எஸ். ராஜா நிகழ்ச்சி செய்தார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் ராஜா ஓர் ஒட்டு வேலையைச் செய்வார். முதலில் வண்டிக்காரன் மகனிலிருந்து எம். ஆர். ராதாவின் குரல் “ஏய்! சுட்டுவிடுவேன்… சுட்டுவிடுவேன்” என்றொலிக்கும். அந்த இடத்தில் கே.எஸ். ராஜா அதை அப்படியே நிறுத்தி மீனவ நண்பனிலிருந்து எம். ஜி.ஆரின் குரலை ஒலிபரப்புவார். “அய்யா பெரியவரே, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் துப்பாக்கிச் சூடுபட்ட அனுபவம் எனக்கு ஏற்கனவேயுண்டு” என்று எம்.ஜி.ஆர் சொல்வார். அந்த நேரத்தில் என் ஆன்மா காற்றிலே மிதக்கும். ராஜா சின்ன விசயங்களின் கடவுளாயிருந்தார்.

‘நினைத்ததை முடிப்பவன்’ திரைப்படத்துக்கு ராஜா விளம்பரம் செய்யும் போது “இந்த ரஞ்சித்துக்கு முன்னால யாரும் சிகரட் பிடிக்கக் கூடாது அண்டர்ஸ்ராண்ட்!” என்ற வசனத்தை மறுபடியும் மறுபடியும் ஒலிபரப்புவார். இதைத் தொட்டு இந்த ‘அண்டர்ஸ்ராண்ட்’ என்ற வார்த்தை எங்களை மயக்கிப் போட்டு எங்களுடனேயே நிழல்போல அலைந்தது. “குழை வெட்டப் போவமா அண்டர்ஸ்ராண்ட்!”, “ரெண்டு அவுன்ஸ் புளி தாருங்கோ அண்டர்ஸ்ராண்ட்” என வார்த்தைக்கு வார்த்தை அண்டர்ஸ்ராண்ட் என்று நாங்கள் சுற்று வட்டாரத்தையே கலக்கிக்கொண்டு திரிந்தோம்.

நிகழ்ச்சிகளை முடித்து வைக்கும் போதும் தன் கை வந்த கலையான ஒட்டு வேலைகளால் ராஜா எங்களை இன்ப லாகிரியில் ஆழ்த்துவார். சிவாஜிகணேசன் நடித்த ‘தீபம்’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி ‘ராஜா யுவராஜா’ என்ற பாடல் துண்டை ஒலிக்கவிடுவார். ‘நாளை நமதே’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது’ எனச் சொல்லி படத்திலிருந்து ‘மை நேம் இஸ் ராஜா’ என்ற வசனத் துண்டை ஒலிக்கச் செய்வார். ‘நீயா’ திரைப்பட நிகழ்ச்சியை முடிக்கும் போது படத்திலிருந்து ‘ராஜா என்னை விட்டுப் போறீங்களா?’ என்ற வசனத் துண்டை சிறீபிரியாவின் குரலில் ஒலிக்கவிட்டு ‘மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ். ராஜா’ என்பார்.

யாழ்ப்பாணத்தையே தாண்டியிருக்காத எனக்கு நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்த திரையரங்குகளை எல்லாம் ராஜா காற்றலைகளில் அறிமுகப்படுத்தி வைத்தார். “செல்லமஹால் கொட்டாஞ்சேனை – சமந்தா தெமட்டகொட – ராஜி திருமலை – ஈஸ்வரி வாழைச்சேனை – சிறீதர் யாழ்நகர் வெண்திரைகளில் இன்றே பார்த்து மகிழுங்கள் ‘ஹாய் பேபி’ புகழ் கமலஹாஸன், ‘ஸ்ரைல் நடிகர்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தேவர் பிலிம்ஸின் ‘தாயில்லாமல் நானில்லை’, பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!!” என்று சடுதியில் ஏறியும் இறங்கியும் குழைந்தும் கொஞ்சியும் வரும் ராஜாவின் குரலைக் கேளாதோர்தான் தம் மழலை சொல் இனிதென்பர்.

கே.எஸ். ராஜாவை ஒரு தடவையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற தீராத ஆசையுடன் நான் தவித்துக்கொண்டிருந்தேன். ராஜா முற்றவெளியில் நிகழ்ச்சி செய்கிறார், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் பொதுக்கூட்ட உரையை மொழிபெயர்க்க யாழ்ப்பாணம் வருகிறார் என்றெல்லாம் ராஜாவைப் பற்றிய செய்திகள் இடைவிடாமல் கிராமத்தில் அலைந்துகொண்டேயிருந்தன. இதைத் தவிர ராஜாவுக்கு மொட்டைத் தலை, ராஜா ஒரு கணித மேதை, ராஜா திரைப்படத்தில் நடிக்கப் போகிறார், ராஜாவிற்கும் பி.எச். அப்துல் ஹமீதுக்கும் இடையே மோதல் என ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளும் எங்கள் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அப்போதெல்லாம் ராஜாவை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. பின்பொரு நாள் ராஜாவைச் நேரில் காணும் எனது கனவு பலித்தபோது அது ஒரு கொடுங்கனவாகப் பலித்தது.

1983ல் ராஜா இலங்கை வானொலியிலிருந்து விலகினார் அல்லது நீக்கப்பட்டார். வெலிகடச் சிறையில் கொல்லப்பட்ட அய்ம்பத்து மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்களையும் வானொலில் அறிவிக்கச் சொன்னபோது ராஜா அதற்கு மறுத்துவிட்டார் எனவும் இலங்கை வானொலியிலுள்ள அரச ஆதரவாளர்களின் சதியால் ராஜா இலங்கை வானொலியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்றும் கதைகள் உலாவின. இதற்கு பின்பு ராஜா இந்தியா சென்றுவிட்டார் என அறிந்தேன். இந்தக் காலத்தில் நாட்டில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1983 ஆடிக் காற்றில் அம்மியே பறந்தபோது நானும் ஒட்டிப் பறந்தேன்.

1986ன் முற்பகுதி! கே.எஸ். ராஜாவின் பெயர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் அமளியாய் அடிபடலாயிற்று. புங்குடுதீவில் நடக்கவிருந்த கலை இரவில் கே. எஸ். ராஜா கலந்துகொள்வதாக விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. மக்களுக்கு ராஜா மேலுள்ள அபிமானம் இம்மியளவும் குறையவில்லை என்பதை அன்றைய கலை இரவு நிரூபித்தது. ராஜாவைப் பார்ப்பதற்காகத் தூரத்துத் தீவுகளிலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். அந்தக் கலை இரவை ஈ.பி.ஆர். எல். எவ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு மற்ற மற்ற இயக்கங்களும் போயிருந்தோம். மைதானத்தில் இயக்கத்திற்கொரு மூலைகளில் வாகனங்களை நிறுத்தி வைத்து ராஜாவுக்காகக் காத்திருந்தோம்.

வருவார் வருவார் எனச் சனங்கள் காத்திருந்த ராஜா நள்ளிரவுக்கு மேற்தான் மேடையிற் தோன்றினார். ‘எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ’ என்ற பாடல் வரிகள் பின்னணியில் முழங்க ஒற்றைக் கால் மேடையிற் துள்ள மற்றக் காலைத் தூக்கிக் காற்றிலே உதைத்து உதைத்துத் தலையை உலுக்கி உலுக்கி ஒரு விநோதமான நாட்டியத்தை ஆடியவாறே ராஜா மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தார். ராஜாவின் ஒரு கையில் ஒலிவாங்கி மற்றக் கையில் எரியும் சிகரட். அதற்கு மேல் ராஜா செய்ததெல்லாம் வெறும் அலம்பல். ஆள் நிறை வெறியில் தள்ளாடிக்கொண்டிருந்தார். இயக்கம் ஏற்பாடு செய்த கலை இரவென்றாலும் நிகழ்ச்சிகள் ‘பாட்டுக்குப் பாட்டு’, ‘ஆம் இல்லையென்று சொல்லக்கூடாது’ என்ற வகையில்தான் அமைந்திருந்தன. இவற்றுக்கு இடையிடையே ராஜா தமிழீழ ஆதரவு முழக்கங்களையும் மேடையில் சகட்டுமேனிக்கு முழங்கிக்கொண்டிருந்தார். ராஜாவின் குரல் மட்டும் கொஞ்சமும் வசீகரத்தை இழக்கவில்லை. ராஜாவின் பொருளில்லாத வார்த்தைள் கூட அந்த இரவில் மதுரமாய் ஒலித்துக்கொண்டிருந்தன.

இதற்குச் சில நாட்கள் கழித்து வேலணை மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இதே போன்றதொரு கலை இரவை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ராஜாவின் அட்டகாசம் உச்சத்தைத் தொட்டது. தரையில் ஓங்கி அடித்த பந்துபோல ராஜா மேடையில் துடித்துக்கொண்டிருந்தார். தனது காலை உயரத் தூக்கிக் காட்டி “இந்தக் காலணிகளைப் பாருங்கள்! இவை ஒரு சிங்கள இராணுவ வீரனிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட காலணிகள்” என்றார். “லலித் அத்துலத் முதலி எனது நண்பர்தான், ஆனாலும் அவரைக் கொன்றே தீருவேன் போரென்றால் போர் சமாதானமென்றால் சமாதானம்” என்று ராஜா மேடையில் சவால் விட்டார். ஆயிரக் கணக்கான இராணுவத்தினருக்குக் கொள்ளி போடத் தயாராயிருக்குமாறு ஜெயவர்த்தனாவை எச்சரிக்கை செய்தார். ஒரு ‘திரைவிருந்து’ நிகழ்ச்சியில் செய்வதைப் போலவே அவர் கலை இரவு மேடையில் சினிமாப் பாடல்களிற்கும் பாட்டுக்குப் பாட்டிற்கும் இடையே ஈழப் போராட்டம் குறித்து அர்த்தமில்லாத வெற்று வசனங்களைப் பேசி ஒட்டு வேலைகள் செய்துகொண்டிருந்தார். கொஞ்சம் விட்டால் ‘LTTE வல்வெட்டித்துறை – PLOT சுழிபுரம் – TELO கல்வியங்காடு – EPRLF சின்னமடு வெண்திரைகளில் கண்டுகளியுங்கள் சிவகுமாரன் பிலிம்ஸின் தமிழீழம்’ என்று கூட ராஜா சொல்லியிருப்பார்.

எனக்குச் சீயென்று போய்விட்டது. நான் அன்றிருந்த மனநிலையில் ராஜா ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் மலினப்படுத்துவதாகவுமே எனக்குத் தோன்றியது. எனக்கருகில் நின்றிருந்த என்னுடைய இயக்கப் பொறுப்பாளரிடம் “அம்மான்! கே.எஸ். ராஜா தேவையில்லாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறான்” என்றேன். நானும் பொறுப்பாளரும் மட்டும் மேடையின் பின்புறத்துக்குச் சென்று ராஜாவுடன் பேசுவதற்காக வளம் பார்த்துக்கொண்டிருந்தோம். மேடையில் நின்றிருந்த ராஜா நிகழ்ச்சியின் நடுவே ஒரு முறை மேடைக்குப் பின்னே வரும் போது நான் ராஜாவிடம் “நீங்கள் நிகழ்ச்சி நடத்துவது என்றால் ஒழுங்காக நடத்துங்கள், போராட்டத்தைப் பற்றி அலம்பல் கதைகள் வேண்டாம்” என்றேன். ராஜா எங்களை முறைத்துப் பார்த்தார். தனது இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியவாறு தனது மதுரக்குரலால் அவர் எங்களைப் பார்த்துக் கலப்பில்லாத ஆங்கிலத்தில் கர்ச்சித்தார். எங்களுக்கு ஒரு இழவும் விளங்கவில்லை. ஆனால் அவர் எங்களைத் திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. பொறுப்பாளர் ராஜாவைப் பார்த்து “இனிப் போராட்டத்தைப் பற்றிப் பேசினால் உன்னைத் தூக்குவேன்” என்றார். ராஜா திரும்பவும் மேடைக்குப் போய்விட்டார். இதற்குப் பின்பு ராஜா அந்த நிகழ்ச்சி முடியும் வரை அடக்கியே வாசித்தார்.

இதற்குப் பின் ராஜாவைப் பற்றிச் சில தகவல்கள் கேள்விப்பட்டேன். நிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும் கிராமங்களிலேயே அவர் தங்கிக் கோயில் மண்டபங்களிலும் பாடசாலைகளிலும் உறங்குகிறார், இருபத்து நான்கு மணிநேரமும் போதையிலேயே இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

அது 1986 மே மாதம், திகதி ஏழோ எட்டோயிருக்கலாம். நாங்கள் எங்களது வாகனத்தில் அறிவிப்புச் செய்துகொண்டே அந்தச் சிறுநகரத்துக்குள் நுழையும் போதே சாலையோரத்துத் தேனீர்க் கடையில் ஒட்டி நின்றிருந்த கே.எஸ். ராஜாவைக் கண்டுவிட்டோம். அவரருகே வாகனத்தை நிறுத்தி அவரை வாகனத்தில் ஏறச் சொன்னபோது ராஜா மிரட்சியுடன் எங்களைப் பார்த்தார். பின் தயங்கித் தயங்கி வாகனத்துள் ஏறினார். நாங்கள் எழுதி வைத்திருந்த அறிவிப்பை ஒலிபெருக்கியில் அறிவிக்குமாறு ராஜாவுக்குக் கட்டளையிடப்பட்டது. ராஜா மிரட்சி கலையாமலேயே அங்குமிங்கும் பார்த்தபோது எங்களது வாகனத்திற்குள் சில துப்பாக்கிகளும் ஒரு ஒலிவாங்கியுமிருந்தன. ஒலிவாங்கியைக் கையில் வாங்கிக் குனிந்த தலையுடன் அறிவிப்பைத் தொடங்கிய ராஜாவின் குரல் ஒலிபெருக்கியால் அந்தச் சிறுநகரத்தை உலுக்கிப் போட்டது: “தமிழீழ விடுதலை இயக்கம் ‘TELO’வினருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பு! உடனடியாக நீங்கள் உங்கள் ஆயுதங்களுடன் எங்களிடம் சரணடைந்து விடுங்கள்….”அப்போது மதுரக்குரல் மன்னனின் குரல் நடுங்கிக்கொண்டிருந்தது.

இது நடந்து நான்கு ஐந்து வருடங்களிருக்கும். அப்போது நான் வெளிநாடொன்றில் இருந்தேன். குறிப்பான அந்தக் காலப் பகுதி இலங்கை அரசியலின் உச்சபட்சக் கொதிநிலைக் காலமாயிருந்தது. இந்தக் காலப் பகுதியிற் தான் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், உமாமகேஸ்வரன், பத்மநாபா, கிட்டு, ராஜீவ் காந்தி, அத்துலத் முதலி, காமினி திஸநாயக்கா, பிரேமதாசா எனப் பல முக்கியமான தலைகள் விழுந்துகொண்டிருந்தன. வீடு புகுந்து கொலை, மத்திய குழு கூட்டத்திற்குள் புகுந்து கொலை, மெய்ப் பாதுகாவலர்களால் கொலை, தேர்தற் பிரச்சார மேடையிற் கொலை, கப்பலை வெடிக்க வைத்துக் கொலை, மாலை அணிவிக்கையில் கொலை, மேதின ஊர்வலத்திற் கொலை எனக் கற்பனைக்கு எட்டாத சாகசங்களுடனும் கொடூரங்களுடனும் விடாது கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடையில் ஒருநாள் கே.எஸ். ராஜா கொலை செய்யப்பட்ட செய்தியும் என்னை வந்தடைந்தது. ராஜாவின் உடல் கொழும்புக் கடற்கரையில் வீசப்பட்டிருந்ததாம். இந்தச் செய்தி அப்போது என்னில் எந்தத் துக்கத்தையோ வேதனையையோ கிளர்த்தவில்லை. ஒரு மனிதனை எத்தனை தடவைகள்தான் கொல்வது என்ற சலிப்புத்தான் என்னுள் மேலிட்டது.

38 thoughts on “மதுரக்குரல் மன்னன்…..

  1. ஆயிரம் பக்கங்களில் ஒரு அரசியல் கட்டுரை தரும் வாசிப்பனுபவம் மேலுள்ள ஐந்து பக்கங்களில் விரவிக்கிடக்கிறது.’83 ஆடிக் காற்றில் அம்மியே பறந்தபோது….’ என்று சுருங்கச் சொல்லி கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்துகிறார். இப்படி நிறைக் கூறலாம்.

    அரசியல் எழுத்துகள் மனிதன் தின்று குடிக்கும் உணவு, நீராகாரங்கள் போல ஆனால் கலைகள் இலக்கிய எழுத்துகள் சுவாசக்காற்றுப்போல. .. ஒரு மனிதன் உயிர்வாழ்கிறான் என்பதற்கு அவன் தின்றும் குடித்தும் இருக்கிறான் என்பதைவிட குறைந்த பட்சம் மூச்சு விடுகிறான் என்பது முக்கியம்.

    ‘மதுரக்குரல் மன்னன் அல்லது என் தாத்தாவிற்கொரு ரேடியோ இருந்தது’ எனும் இப்படைப்பின் மூலம் தன்னையும் எம்மையும் மூச்சு விடும் மனிசர்களாக சோஷாசக்தி அடையாளப்படுத்தியுள்ளார்.

  2. துக்கம் சுவாரசஸ்யம்.ஆயிரம் ஷோபாசக்திகள் வருக.யுத்தமே ஓழிந்து போ.

  3. கே.எஸ். ராஜாவின் குரலில் மயங்காத தமிழர்கள் எவரும் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய இறுதிக்காலம் இப்படி மாறிவிட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

    இடையில் உங்களைப்பற்றி சொல்லிக்கொண்டு வந்து பின்னர் கே.எஸ்.ராஜாவிற்கு தாவிவிட்டீர்கள். கட்டுரை அவரைப்பற்றியது என்றாலும், உங்களின் தீராத ஆசை நிறைவேறியதா என்றறியும் ஆவல் ஏற்படுகிறது.

    நன்றி.

    இக்கட்டுரையை முத்தமிழ் குழுமத்திலும் மீள் பதிவு செய்கிறேன்.

  4. However, I think the best voice I heard in Radio Ceylon is B.H.Abdul Hameed. Hameed’s voice is what the present Day English Term – ‘Mellifluous’ truely means.

    -Seelan

  5. ஒரு மனிதனை எத்தனை தடவைகள்தான் கொல்வது? கனம் பொருந்திய இந்தத் தூணில் சோபாசக்தியின் ஆக்கம் இருப்புக் கொண்டிருக்கிறது. வேறுவேறு வடிவங்களில் இன்றுவரையும் அதுதான் நிலைமை. எம்ஜிஆரின் வாயாட்டலில் பிறந்த தத்துவப் பாடல்கள் குருத்து மனங்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் இயக்கவாழ்வுவரை நீடித்ததை பலரிடம் நான் கண்டிருக்கிறேன். இளமை எழுச்சிமிக்கது. அந்த எழுச்சியின் ஒலிஅலையாக கே.எஸ்.ராஜாவின் குரல்… அசைவலையாக பொப் பாடல்கள்… என தொலைக்காட்சி எட்டாத எங்கள் ஊர்களில் இயக்கமுற்றிருந்தன. இந்த அனுபவத்தை ஞாபகத்தில் தூசுபடியாதளவுக்கு உள்வாங்கி அதை வெளிப்படுத்தும் மொழியில் சோபாசக்தி அற்புதமான படைப்பாளிதான் என்பதை இக்கதையும் நிரூபித்திருக்கிறது. அந்த சிறுவனுக்கு சுமார் ஏழு வயதிருக்கும். எங்கள் ஊரில் அடுக்குவசனத்தில் நாடகத்தை தூக்கலாக தொங்கவிட்டிருந்த காலம். தனது வீட்டின் கோடியில் நின்று அவன் சொந்தமாக வசனம் பேசியபடி தடியொன்றைச் சுழற்றிக் கொண்டிருந்தான்.
    “என்னை ஒருமுறை கொன்றவர்கள் மீண்டும் ஒருமுறை கொல்லப் பார்க்கிறார்கள்”. பிய்ந்திருந்த கிடுகுவேலியினூடு இந்தக் காட்சி எனது பார்வையில் விழுந்தது. சொல்லிச் சிரித்தோம் நாட்கள் நாட்களாய் இந்த வசனத்தை. இந்த வசனத்தை லொஜிக் மறுத்தது. ஆனால் எமது விடுதலைப் போராட்ட அரசியல் இந்த வசனத்தை உற்பத்திசெய்துகொண்டே இருந்தது, இருக்கிறது…

  6. சோபாசக்தியின் இந்தப்பதிவினை நினைவுக்குறிப்பினைத்தாண்டி ஒரு நல்ல படைப்பாக்கியிருக்கலாம். எழுத்து சுவாரிசியமாக நீவிபப்படா;கிறது. கொpல்லா நாவலின் ஒரு பகுதியாகவும் சோ;த்துப்படிக்கலாம். இலங்கை வானொலியின்பால் மக்கள் கிறங்கிக்கிடந்தத எனப்த யதார்த்தமே. ஆனால் இடதுசாரி சோபாசக்திக்கு இன்னம் பணி அதிகமுள்ளது. றேடியோ சிலோன் பற்றி சற்று விமாசனபூர்வமாகவும் பார்த்திருக்கவேண்டும்.
    தமிழ்ச்சேவை ஒன்று பற்றி யாருமே கருத்தில் கொள்ளவில்லை.

    நல்ல நினைவோடையும்> எழுத்துவளமுமிக்க சோபாசக்தி தன்னுடைய படைப்பாற்றலையும் வளா;த்துக்கொள்ளவேண்டும்.
    இடதுசாரித்தனம் நல்ல சிந்தனைமுறை. அதை வெறும் பாதுகாப்புகவசமாக மட்டும் கொள்ளாது உள்ளார்ந்த உணாவோடும் செயற்படவேண்டும்.
    சராசரி ரசிகமனங்களை இக்குறிப்பு கவரத்தான் செய்யும். அதில் சோபாசக்திபோன்றவா;கள் திருப்திப்பட்டுக்கொள்ளக்கூடாது.

    மதுரக்குரலோனைவிட தன்னைப்பற்றிய விம்பம் சற்றுதூக்கலாக மிதக்கிறது. எப்படியிருந்தும் கவனங்கொளக்கூடிய குறிப்பு.
    வாழ்த்துக்கள் சோபாசக்தி.

  7. //ஒரு மனிதனை எத்தனை தடவைகள்தான் கொல்வது என்ற சலிப்புத்தான் என்னுள் மேலிட்டது. //

    இது ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் பொருந்தும்…

  8. பிரசுரத்திற்காக அல்ல.

    என்ன! சுகனுக்கு தமிழ்ரத்தம் பீறிட்டுப்பாய்கிறது….

  9. வணக்கம், நண்பரே ……..ஆச்சரியமாகவிருக்கிறது. ஏற்கனவே தமிழக நண்பர் “சுந்தர சுகன்”எனும் சிறு பத்திரிகை நடாத்திக்கொண்டிருக்கிறார், பெயர்க்குழப்பம் ஏற்படுவது புதிதல்ல ராமச்சந்திரனா..என்றேன்..ஆமென்றான் எந்த ராமசந்திரன் என்று நான் கேட்கவில்லை என்று நகுலனின் கவிதையொன்றுள்ளது. ஈழத் தமிழன் என்ற அடையாளத்தை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆதலால் இக் குறிப்பு.

  10. சோபா சக்தியின் பதிவுகள் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு உடன்பாட்டு தோற்றத்தை உருவாக்குகின்றது. மறந்து போன நினைவுகளையும் மனதில் மறுபடியும் பதிய வைக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

  11. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் விடுதலைப்புலிகளை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே வேளை ஒரு சொற்ப தொகையினர் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக விடுதலைப்புலிகளை எதிர்க்கின்றார்கள் என்பதும் உண்மை. இப்படியானவர்களில் எதிரியின் பணத்திற்கு ஆசைப் படுபவர்கள்இ பிற்போக்குவாதிகள்இ முற்போக்கை தவறாக புரிந்து கொண்டவர்கள்இ தண்டனைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பல வகையினர் உண்டு.

    இதிலே பிற்போக்குவாதம் என்று வருகின்ற பொழுது சாதி வெறிஇ மத வெறிஇ பெண்ணடிமைத்தனம் போன்றவைகளை ஆதரிப்பவர்களை இதற்குள் அடக்கிவிடலாம். இவர்கள் விடுதலைப்புலிகளின் போராட்டத்தால் சாதிக்கட்டமைப்பு பலத்த சேதத்திற்கு உள்ளாகியிருப்பது குறித்து கடும் அதிருப்தி கொண்டிருப்பவர்கள். மீண்டும் வேளாள ஆதிக்கம் வரவேண்டும் என்ற நினைப்பவர்கள். பெண்களின் வேலை சமைந்துஇ சமைத்துஇ படுத்துஇ பிள்ளை பெற்றுஇ ஆணைக் கவனித்தல் மட்டுமே என்று நினைப்பவர்கள். பெண்கள் ஆயுதம் ஏந்தி நிற்பதை சகிக்க முடியாது இருப்பவர்கள். இவர்கள் விடுதலைப்புலிகளை எதிர்ப்பதோடுஇ சிறிலங்கா அரசுக்கு சார்பான பரப்புரைகளிலும் நேரடியாகவும்இ மறைமுகமாகவும் ஈடுபடுவார்கள்.

    யாழில் இடப்பெயர்வுக் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரு ஆசிரியர் யாழ் மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் சில ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர். வெளிப்படையாக விடுதலைப்புலிகளுடன் தொடர்பை பேணியவர். அவருடன் கிராமத்தவர்களும் நட்புடனேயே பழகி வந்தார்கள். அவர் அந்தக் கிராமத்தில் இருந்த பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்தார். சூரியக் கதிர் படையெடுப்பு நடந்த பொழுது யாழ் குடாவின் மக்கள் இடம்பெயரத் தொடங்கினார்கள். யாழ் குடா சிறிலங்காப் படைகளின் கையில் விழப் போவது உறுதியாகி விட்டது. அந்த ஆசிரியர் இருந்த கிராமத்திலும் பெரும்பாலானவர்கள் வெளியேறிவிட்டார்கள்: விடுதலைப்புலிகளும் அங்கு இருக்கவில்லை. அந்த ஆசிரியரும் ஒரு சிலருமே இருந்தார்கள்.

    அன்றும் அவர் வழமை போன்று கிணற்றில் தண்ணீர் எடுத்தார். அப்பொழுது அயலவன் ஒருவன் ஓடி வந்தான். வந்தவன் ஆசிரியரை ஓங்கி கன்னத்தில் அறைந்தான். ஆசிரியரின் சாதிப் பெயரை சொல்லித் திட்டி தண்ணீர் எடுப்பதை தடுத்தான். அதுவரை அவரை “மாஸ்ரர்” என்று மரியாதையாக அழைத்த அயலவன்தான் விடுதலைப்புலிகள் இல்லையென்றதும் அப்படி நடந்து கொண்டான். கல்விக்கு மதிப்புக் கொடுப்பதாக சொல்லப்படுகின்ற யாழ்பாணத்தில் நடந்த உண்மை சம்பவம் இது.

    இப்படியான பிற்போக்குவாதிகள் விடுதலைப்புலிகளின் இருப்பை விரும்புவதில்லை. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்ற இந்தப் பிற்போக்குவாதிகள் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தமது பிற்போக்குத்தனத்தைஇ சாதி வெறியை வெளிப்படுத்தாது வேறு முகமூடிகளோடுதான் திரிவார்கள். ஆனால் தற்பொழுது மெது மெதுவாக தம்மை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும்இ பேரினவாத சிறிலங்காவிற்கு ஆதரவாகவும் பரப்புரைகளை மேற்கொண்டு தமிழர்களின் மனங்களை “கொட்டுகின்ற” வேலையை செய்கின்ற இணையத் தளம் ஒன்று தன்னுடைய சாதிவெறியையும் வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கிறது.

    குறிப்பிட்ட இணையத் தளம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கதையை பிரசுரித்தது. அந்தக் கதையின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைப்புலிகளில் இணைந்து நல்ல பொறுப்புக்களில் இருக்கிறார்கள் என்று வயிற்றெரிச்சலை கொட்டியிருந்தது. அந்தக் கதை பற்றிய கண்டனங்கள் வந்த பொழுதும்இ கதாசிரியர் தான் எழுதியது சரியே என்று பிடிவாதம் பிடித்தார்.

    அந்தக் கதையை எழுத்தாளரின் கருத்து என்று அப்பொழுது சிலர் சொன்னார்கள். ஆனால் இப்பொழுது மீண்டும் ஒரு கட்டுரை அதே இணையத் தளத்தில் வந்திருக்கிறது. அந்தக் கட்டுரையில் கட்டுரையாளரின் பெயர் அல்லது புனைபெயர் என்று எதுவுமே இல்லை என்பதால்இ அக் கட்டுரையை அந்த இணையத் தளத்தின் கருத்து என்றுதான் பார்க்க வேண்டும்.

    சிறிலங்கா இராணுவமே தமிழ்மக்களின் காவல்காரர்கள் என்று பரப்புரை செய்யும் அந்தக் கட்டுரைஇ விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற மக்கள் குறித்து இப்படி சொல்கிறது

    “….ஊருக்குள் சண்டியன் வந்தால் ஊருக்குள் உள்ளவர்கள் கொஞ்சபேர் சண்டியனுடன் சேர்வது போல் புலிபொடியல் யாழ்குடாநாட்டுக்குள் வந்தவுடன் அங்கே வேலைவெட்டியில்லாமல் இருந்த கொஞ்சபேர்இ பள்ளிகூட பொடியல்இ ஓதுக்கபட்ட மக்கள்இ காடைகள்இ வறுமை வாழ்கைக்கு கீழ் வாழ்ந்து கொண்ருந்தவர்கள்இ வியாரிகள் இப்படி எல்லாவகையினரிலும் கொஞ்பேர் சேர்ந்து அவர்களின் முகவர்களாகிவிட்டார்கள்.
    முக்கியகுறிப்பு.- நல்லகுடும்பத்தினரோஇ நல்லவசதியுள்ளவர்களோஇ நல்ல படித்தவர்களோ தங்களையோஇ தங்களுடைய பிள்ளைகளையோ இவர்களுடன் இணைத்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை…….”

    இப்படி அந்தக் குறிப்பிட்ட கட்டுரை வெளிப்படையாகஇ தெளிவாக சொல்கிறது. ஒதுக்கப்பட்ட மக்கள்இ வறுமைக்குட்பட்ட மக்கள்தான் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்களாம். “நல்ல” குடும்பத்தவர் யாரும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லையாம்.

    ஒதுக்கப்பட்ட மக்கள்இ வறுமைக்குட்பட்ட மக்கள் என்று சொல்கின்ற பொழுது அது தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களையே குறிப்பிடுகிறது என்று தெரிகிறது. அந்த மக்கள் ஒதுக்கப்பட்டுஇ வறுமைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறார்கள். ஆனால் யார் அந்த “நல்ல” குடும்பத்தவர்?

    நல்ல வசதியுள்ளவர்கள்இ நல்ல படிப்பு உள்ளவர்கள் என்று வேறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நல்ல படிப்புஇ வசதி போன்றவைகளைக் கடந்தும் “நல்ல” குடும்பங்கள் இருக்கின்றன. எதை வைத்து “நல்ல” குடும்பத்தவர் என்று அந்த இணையத்தளம் சான்றிதழ் கொடுத்திருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இந்த பிற்போக்குவாதிகளிடம் “நல்ல” என்ற அடைமொழியைப் பெறுவதற்கு சாதி அடையாளம் தேவைப் படுகிறது.

    ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்கள் நல்ல குடும்பத்தவர்கள் இல்லை என்று அந்த இணையத் தளம் எழுதுகிறது. எவ்வளவு தூரம் ஒரு வக்கிரமான சிந்தனை இருந்தால் இப்படி எழுத மனம் வரும்? அத்துடன் விட்டார்களா? ஒதுக்கப்பட்ட மக்களை “கள்ளப்படை” என்று வேறு அக் கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைக்கு யாழ் குடாவில் கொல்லப்படுகின்ற விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இந்த “கள்ளப்படையை” சேர்ந்தவர்களாம். அவர்கள் கொல்லப்படுவது தவறு இல்லையாம். இப்படி தொடர்கிறது அந்தக் கட்டுரை.

    யாழ் குடாவில் நடக்கின்ற கொலைகளை சாதிக் கண்ணோட்டத்தோடு இந்த இணையத்தளம் அணுகுகிறது. “அங்கே கொல்லப்படுபவர்கள் வேறு சாதிக்காரர்கள்தான்இ எங்களின் ஆட்கள் இல்லை” என்று சாதியத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்கள் கூட்டத்தை ஆறுதல்படுத்த இந்த இணையத்தளம் முனைகிறது. கொலைகளை சாதியின் பெயரில் நியாயப்படுத்தும் அக்கிரமத்தை செய்கிறது.

    இப்படி ஒருபுறம் சாதிவெறியோடு பிற்போக்குத்தனமாக செயற்பட்டுக் கொண்டேஇ மறுபுறம் “தலித்திய” கட்டுரைகளையும் பிரசுரித்து அதை சமப்படுத்தவும் முயற்சிக்கிறது. ஜனநாயகம்இ கருத்துச் சுதந்திரம் என்று “புலிஎதிர்ப்பு” பேசுபவர்கள் உள்ளுக்குள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு இந்த இணையத்தளம் ஒரு உதாரணம்.

    – வி.சபேசன் (04.12.06)

    தயவு செய்து இந்த கருத்து குறித்து உங்கள் பார்வையை செலுத்தவும்…. இவர்களெல்லாம்……….

  12. பரன், தேனி இனையத்தளத்தைதான் குறிப்பிடுகிறார் எனநினைக்கிறேன்.சபேசன் முஸ்லிம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டது பற்றி இதுவரை வாய்திறந்தாரா? அதை முதலில் அறியவேண்டும். “அஙகே கொல்லப்படுபவர்கள் வேறு சாதிக்காறர்கள் ” ,அத்தோடு ” முஸ்லிம் மக்கள்” ,அப்பாவிச் சிஙகள மக்கள், கிழக்கு மாகாண மக்கள்.

  13. தனக்குள் ஒரு வட்டத்தை இட்டு தலித்தியம் பற்றியும் பெரியாரியம் பற்றியும் தனக்கு தெரிந்ததை வைத்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கும் இவர் போன்றவர்களுக்கு சோபாசக்தியின் பாசைதான் புரியும். ஆகவே சபேசன் போன்ற புகழ் விரும்பிகளின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதை தவிர்த்து இது போன்ற விடயங்களையும் கருத்தில் எடுத்து எழுத வேண்டும் என்பதற்காகவே சம்பந்தம் இல்லாத இந்த விடயத்தை இதில் பதிவு செய்திருந்தேன். கொலை கொலை என்று கூறும் இவர்கள் புலிகளினால் செய்யப்பட்ட கொலைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. ஆசிரியர்… கிணறு…. தண்ணி… சூரியக்கதிர்… புலிகள் இல்லாத யாழ்….. சாதித்திமிர் என்று எழுதும் இவர்கள் செல்லன் கந்தையனிடம் திறப்பு கோர்வையை பறித்தவர்கள் யார் என்று சிந்திக்கவேண்டும்! மன்னிக்கவும்….

  14. சாதி ஒழிப்பை புலி செய்யப் போகுதெண்டு நம்புகின்ற சபேசன் அண்ணை உங்களுக்கு ஒன்று தெரியுமோ பிரபாகரன் உள்ளிட்ட அத்தனைபுலி தலைவர்களுக்கும் காதல் அக்சிடெண்ட் உயர்சாதிப் பெண்களோடுதான் வந்திருக்கு.அப்படியெல்லாம் சாதியை ஒழிக்க முடியாது என்பது வேறு விடயம்.தமிழ் சமுதாய மாற்றத்திற்கும் புலிக்கும் என்னய்யா சம்மந்தம்?பொருளாதார பலம் குன்றிய மக்களின் ஒரு பகுதியை புலி பாவிக்கின்றது. சபேசன் அண்ணை எந்த உலகத்திலை இருக்கிறார்?

  15. சோபாசக்தியின் இந்த பதிவு அவர்குறித்த ஒரு சுயவிமர்சனமாகவும் தொனிக்கிறது. உண்மையில் ஒரு ஆரோக்கியமான கருத்து… மிக எழிமையான பதிவு…. சொல்ல வந்த விடயத்தில் சுவாரசியமும் உள்ளடக்கமும் கனதியாக இருக்கின்றது. இது குறித்த பார்வையை செலுத்த வேண்டிய நேரத்தில் சிவபூசைக்குள் கரடியை நுழைத்தது போல் சபேசனின் புலம்பலை நான் திணித்தது தேவையை ஒட்டியதுதான். காத்திருப்போம்…..

  16. சாதித் திமிரின்ரை ஊன்வடியிற கட்டுரையொன்றை பிரபாகரனுடன் பேட்டி என்று தேனீ இணையத்தளம் சில காலத்துக்கு முன்னம் வெளியிட்டிருந்தது. இதுபற்றி சலசலப்பும் ஏற்பட்டது. இந்தக் காய்ச்சலை சுட்டிக்காட்டிறதுக்கு மறுத்தான் (கேள்வி) விடுறது ஒண்டும் சரியான பதிலைத் தந்துவிடாது. முஸ்லிம்களைக் கலைக்கயிக்கை சபேசன் வாய்திறந்தாரா எண்டு கேக்கிறதுதான் பதில் எண்டால் இந்தப் பாணி எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவிடாமல் பண்ணியிடும். அது நோயோடை ஒட்டியிடும்.

    அதுசரி சபேசன் எழுதினதெண்டு தெரிஞ்சதாலை சபேசனை கேட்க முடியுது. புனைபெயரிலை (நம்மைப்போலை) வந்து எழுதிற நாம இந்த ஜனநாயகத் தீமிதிப்பிலை தேறின ஆக்கள் எண்டு எப்பிடி காட்டப்போறம்.

    நேற்று வியாழக்கிழமை ரிபிசி விவாதத்திலை ஒருத்தர் வந்து இன்னொரு (புலிசார்பு) நேயரை அடிச்சார். ஊரிலை சப்பாத்துக்கூட போடத்தெரியாமல் இருந்தவர் வெளிநாட்டுக்கு வந்து இப்ப கதைக்கிறார் எண்டு அழுத்தம் திருத்தமா சொன்னார். பின்னாலை ஆய்வாளர்மாற்ரை சிரிப்பொலி கேட்டுது. அதுக்குப் பிறகு தேனீ ஆசிரியர் (வெளிவாரி ஆய்வாளர்) ஜெமினியும் வந்துதான் போனார். இது தட்டுப்படவேயில்லை. ஏழைஎளியவர்கள்தான் புலியளின்ரை பலிக்கடா எண்டு அழுதுகொண்டு இப்பிடி ஏழைஎளியவர்களை நக்கலடிக்கிற அந்த ஊனப்பட்ட சிந்தனையை மறுதலிக்கிற அளவுக்கு ஆய்வாளர்மாரும் இல்லை. மாறாக சிரித்தார்கள். அவர்களுக்குள்ளையும் அது வடிஞ்சுதான் கிடக்குது. இதுக்கை இவர்களுக்கு தலித்தியம் வேறை…தூ!

  17. பரன்>
    நீங்கள் சோபாசக்தியின் சுயவிமா;சனம் என்று எதை விளங்கிக்கொள்கிறீர்கள்.

    தன்னைப்பற்றி சோபா எந்த இடத்தில் சுயவிமா;சனம் செய்திருக்கிறார் என்பதை கற்பிப்பபீர்களானால் கற்றுக்கொள்ள ஆவலாயுள்ளோம்.
    எளிமையான பதிவு. சுவாரிசியம் ..ஓகே. ஓகே!!
    ஆரோக்கியம் என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்?

  18. கே.எஸ் ராஜா ஒரு ஜனரசஞ்சக அறிவிப்பாளன்.அதை இயக்கங்கள் அவருக்கு விருப்பம் இல்லாத நிலையில் தமது நலன்களுக்கு பாவித்தன.யாராக இருந்தாலும் எந்த செயலாக இருந்தாலும் ஒருவருடைய உள்ளார்ந்த விருப்hம் இன்றி ஈடுபடுத்துவது அவரைக் கொல்வது போன்றதுதான்.சோபாசக்தியும் அதை செய்திருக்கின்றார்.(அவர் புலிகள் அமைப்பில் இருந்திருக்கிறார் என நம்புகின்றேன்)அது தவறென்று தெரிந்தமையால் தான் ஒரு மனிதனை எத்தனை தடவைகள்தான் கொல்வது என்று எழுத அவரால் முடிந்தது.

  19. சோபா சக்தியின் கதை கூறும் பாங்கு வியக்கத்தக்க ஈர்ப்புள்ளது. சமூக நடைமுறைகளுடன் சேர்ந்து இலகு மொழியில் சொல்லும் கதைகளில் அவர் தனது கருத்துதெளிவின்மையையும் வெளிப்படுத்துகிறார். புலிகளின் ஈவிரக்கமற்ற செயல்களின் சில பகுதிகளை சொல்லும்போதுகூட அதற்கு வேறோர்பக்க நியாயம் கற்பிக்க முயல்வதாகவே காணப்படுகிறது. யாழ் நூலக திறப்புவிழாவை நடத்த விரும்பாத புலிகள் அதற்கான காரணத்தை உளபூர்வமாக தெரிவிக்கமுடியாதிருந்ததை அறிவுசார் சமூகம் அறியும். புலிகளினதோ அல்லது சிங்கள அரசினதோ ஆளுமைகளிலிருந்து தப்பி தஞ்சம்பெற்று வாழும் (தங்களை விடுவித்துக் கொண்டு> பணவசதியும் வாய்ப்பும் கிடைத்த) சிலர் இங்குள்ள மக்களின் அவலங்களையும் இயலாமையையும் குறித்து கவலை கொள்வதை கொச்சசைப்படுத்தாமல் சொல்வதானால்> மண்ணை நேசிக்க வேண்டாம் மனிதத்தை நேசியுங்கள். முடிந்தால் யுத்தமில்லா வாழ்வுக்கான கனவுகளை தானும் நேசியுங்கள். வெற்று வீரவசனங்களையும்> இரத்த வெறியையும் நிராகரியுங்கள். இதுவே நீங்கள் பயந்தோடிப்போன வாழ்வின் நேசிப்பை உயிர்ப்பிக்கும். யுத்த கொடுமையில் வாழும் எங்களை வசதிக்காக பயன்படுத்தாதீர். வெறும் வசதியின்மை மட்டுமல்ல மனிதத்துவமும் வாழ்வை களத்தினூடு வெல்வோம் என்ற நம்பிக்கையையும் சேர்ந்தே எங்களை போன்றவர்களை எங்கள் தேசத்தைவிட்டு எங்களை விலகச் செய்யவில்லை.

  20. தக்சனின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்

  21. பெருமதிப்பிற்குரிய விமலா அவர்கட்கு, எனதும் எமதும் நத்தார்- புதுவருட வாழ்த்துக்கள். எனது மேற்குறித்த சிவசுப்பிரமணியம் அவர்களிற்கான அஞ்சலிக் கட்டுரையில் படுகொலை, யுத்தம், ஜனநாயக மறுப்பு, பாசிசம் இவற்றிற்கான ஆணிவேரும் அடித்தளமும் வெள்ளாளா அரசியலிலிருந்து வருபவை எனக் குறிப்பிட்டிருந்தேன்.வெள்ளாள உலகம் பரந்து விரிந்தது. அது சல்பீனியாக்கொடிபோல் எல்லாவற்றையும் மறைத்துப் பரந்திருக்கும்.ஊடகமுட்பட. டார்த்தீனியம் செடிபோல் விசம், காற்றிலும் விசம் . கவனமாக வாரிக் கொழுத்தவேண்டும். எல்லோருக்கும் அழிவு. தமிழ் அரசியலென்ற வெள்ளாள அரசியல் தலித்துகளிற்கு எதிரானது. பாசிசத்திற்கெதிரான மாற்று தாழ்த்தப்பட்டோர் அரசியல் என்ற தலித் அரசியல். எனது மேற்குறித்த கட்டுரையில் ஆசீர்வாதம் தீர்வை வலியுறுத்தினேன். வெள்ளாள அரசியல் அதைக் கவனமாகத் தவிர்ப்பதிலிருந்தே அதன் சாதிய முக மும் நுட்பமும் தெரியும்.மேலும் 1972ல் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் அன்றைய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் தலித்துக்கள் தனித் தேசிய இனமென்ற வரையறையை அன்றைய வெள்ளாள கொம்யூனிஸ்டுகள் உட்பட கவனமாகத் தவிர்த்துக் கொண்டார்கள். அவர் அதற்காகவே உதயவட்டம் என்ற பத்திரிகையை நடாத்தினார். இந்த முக்கியமான விவாதக் களங்கள் வெள்ளாள அரசியல் கவனமாகத் தவிர்த்துக் கொள்பவை. அதைத் தவிர்ப்பதின் தொடர்ச்சியே இன்றைய சமூகப் படுகொலைகள் யுத்தம், பாஸிசம் இவையெல்லாம். இவற்றுக்கான மாற்று தலித் அரசியல்! தலித் அரசியல்!! வெள்ளாளர்களால் இது சாத்தியமில்லை
    – சுகன்

  22. //தயவு செய்து இந்த கருத்து குறித்து உங்கள் பார்வையை செலுத்தவும்…. இவர்களெல்லாம்………. ///

    ///ஆகவே சபேசன் போன்ற புகழ் விரும்பிகளின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதை தவிர்த்து இது போன்ற விடயங்களையும் கருத்தில் எடுத்து எழுத வேண்டும் என்பதற்காகவே சம்பந்தம் இல்லாத இந்த விடயத்தை இதில் பதிவு செய்திருந்தேன்..//

    //இது குறித்த பார்வையை செலுத்த வேண்டிய நேரத்தில் சிவபூசைக்குள் கரடியை நுழைத்தது போல் சபேசனின் புலம்பலை நான் திணித்தது தேவையை ஒட்டியதுதான். காத்திருப்போம்….. ///

    இதெல்லாம் ஒரே ஆளின் கருத்து. கவலை வேண்டாம் முன்பின் முரணாகவும் இல்லையேல் நீட்டிமுழங்குவதும் இவர்களுக்கு கைவந்த கலை!!!!

  23. //பிரபாகரன் உள்ளிட்ட அத்தனைபுலி தலைவர்களுக்கும் காதல் அக்சிடெண்ட் உயர்சாதிப் பெண்களோடுதான் வந்திருக்கு.அப்படியெல்லாம் சாதியை ஒழிக்க முடியாது என்பது வேறு விடயம்//

    தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கிழைக்கப்பட்ட அநீதிகளை நீக்கப் போராடுவோம் என்று சொல்லும் போது எனது ‘மாற்றுக்கருத்து’ நண்பன் (தோழர்) கேட்பான் , ஏலுமெண்டால் ஒரு தாழ்த்தப்பட்டவனை ஒரு மேல்சாதிக்காறி கட்டட்டும் பாப்பம்’ எண்டு!!! இதால போனா அதால வாறது அதால போனா ஏன் இதால வரேல்ல எண்டு கேக்கிறது மாற்றுக்கருத்து எண்டு நினைக்கிற கூட்டம்….

  24. சுகன் உங்களின் மாற்றுத்தளத்தில் தலித்ததுக்களைத்தவிர எவரையும் நுழையவிடாதீர்கள். வெள்ளாளாகளிடத்தில் நீங்கள் அவதானமாயிருப்பது மெத்தச்சரி.
    கே.எஸ்ராஜா என்ன சாதி?
    அழகலிங்கம் ஐயா> தமிழரசன் இவையெல்லாம் என்ன சாதி.
    வடிவாகக் கண்டறிந்து தொழிற்படுங்கள்.
    வெள்ளாளரை எக்காரணம் கொண்டும் நம்ப முடியாது
    சல்பீனியாக்கொடிபோல் எல்லாவற்றையும் மறைத்துப் பரந்திருக்கும்.ஊடகமுட்பட. டார்த்தீனியம் செடிபோல் விசம்இ காற்றிலும் விசம் . கவனமாக வாரிக் கொழுத்தவேண்டும். எல்லோருக்கும் அழிவு. தமிழ் அரசியலென்ற வெள்ளாள அரசியல் தலித்துகளிற்கு எதிரானது

  25. பினோசேக்கான ஒரு கவிதை _____________________________
    அவர்களது லாபத்தில் ஒரு பகுதி காணாமற் போனபோது சனநாயகம் பற்றி நிறையவே பேசப்பட்டது. சனநாயகத்தைத் துப்பாக்கி முனைகள் தாஙகி நின்றபோது மனித உரிமைகள் ஒவ்வொன்றாகக் காணாமற் போயின. அதன் பின் காணாமற் போன உரிமைகள் பற்றிக் குரல்கள் எழுந்தன. குரல்கள் எழும்போதே குரல் கொடுத்தோர் ஒவ்வொருவராகக் காணாமற் போயினர். அதன்பின் காணாமற் போனோர் பற்றிய கேள்விகள் எழுந்தன. கேள்விகள் எழும்போதே கேட்டோர் ஒவ்வொருவராகக் காணாமற் போயினர். கேள்விகள் மட்டும் புதைகுழிகட்கு வழிகாட்டிவிட்டு மெளனமாயின. அதன்பின் மண்மேடுகள் மீது புல் முளைத்துப் புதை குழிகளும் ஒவ்வொன்றாகக் காணாமற்போயின. கேள்விகளும் காலத்தினுட் கரைந்து காணாமற் போயின என்று காலடியை மெல்ல வெளியில் வைத்தான். மெளனங கலைந்த ஒரு கேள்வி காலை இடறியது; இன்னொன்று கைகளைப் பிணைத்தது; வேறொன்று சிறைக்கூடமாக விரிந்தது. கேள்விகளாற் சூழப்பட்ட அவனை மீட்க அவர்கள் வரவில்லை.

    அவர்களது லாபம் குறைவின்றிக் கிடைக்கிறது. அவன் போனால் என்ன, லாபம் குறைவுபடும் வேளை அவர்கட்காகப் புதிய குழிகளை வெட்ட இன்னொரு கொலைகாரன்…….

    சி. சிவசேகரம்

  26. சோபாசக்தி என்ன சாதி.
    என்ற வரியை நீங்கள் தணிக்கை செய்தத்தன் காரணம் என்ன?
    கவனமாயிருங்கள்!
    தூ என்றொரு இயைத்தளமும் இருக்கிறது?

  27. இதுவரை நாம் சிந்திய குருதியும் பெற்ற வலியும் போதாது.தலித்தியத்தையும் கிளப்பி விடுங்கள்.ஒருபக்கம் பேரினவாதம் மறுபக்கம் புலி.இனி நீங்களும் இன்னொருபக்கம்.தமிழ் சமுதாயம் எத்தனை பேரைத்தான் சமாளிப்பது.

  28. விமலா! பேரினவாதத்திற்கும் புலிக்கும் வரலாற்றால் முந்தியது சாதியம்..

  29. சேனன் அப்ப ஏன் சாதியத்திற்கெதிராக போராடாமல் இனவாதத்திற்குப் பின்னால் எடுபட்டுக் கொண்டு போனம்?

  30. விமலா! தவறான பாதையில் எவ்வளவு தூரம் போனாலும் பரவாயில்லை ஆனால் தயவு செய்து திரும்பி வாருங்கள் என்றொரு பொன்மொழியுண்டு… கேட்டதுண்டா?

  31. சேனன் சுகன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தவறான பாதையில் எவ்வளவு தூரம் போனாலும் பரவாயில்லை ஆனால் தயவு செய்து திரும்பி வாருங்கள் என்றொரு பொன்மொழியுண்டு.அப்படியென்றால் நீங்கள் கோருவது வர்க்கப் புரட்ச்சியையா?

  32. வன்முறை மூலம் சில தற்காலிக வெற்றிகளை கண்டவர்கள் தாங்கள் செல்லும் பாதையை ஒருபோதும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை குறைந்த பட்சம் இடறிவிழுந்து முகமூடி கிழியும் வரை… தவறான பாதையில் சரியான இலக்கைத் தேடும் தந்திரம் தங்களின் பலம் என தம்பட்டம் வேறு…என்னவென்பது எங்கள் தமிழ்ச்சாதியை??????

  33. கே.எஸ். ராஜா பற்றிய நினைவுகளை யாழ். எஸ் சுதாகா அவா;களும் அழகாக பதிவுசெய்திருக்கிறார்.
    படிக்க விரும்புபவா;கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்கு செல்லவும்.
    மேலும் பல சுவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

  34. சின்ன வயதில் நாய் குட்டி காவியது போல ஏன் றேடியோவை தூக்கி கொண்டு அலையுறாய் என்று அம்மா ஏச ஏச 4 பற்றறி போடுகிற யுனிக் றேடியோவை கமக்கட்டுக்குள் கொண்டு திரிந்தது கே எஸ் ராஜாவின் அந்த குரலுக்காகத்தான். முல்லைத்தீவில் மாணவர் மன்ற றேடியோ றைக்கொடிங்கின் போது நீங்கள் என்னவாய் வரப்போகிறீர்கள் என்று கனகசபாபதி நாகேஸ்வரன் கேட்டபோது கே எஸ் ராஜாவைப்போல வர வேண்டும் என்று 1979 ஆம் ஆண்டு நான் சொன்னது இப்பொழுது பலித்து விட்டது. அவன் ஒரு மகா கலைஞன்.

  35. நான் இன்றுவரை மதுரக்குரலோன் கே எஸ் ராஜாவின் குரலுக்குத் தீவிர ரசிகை.அவரது குரல் மட்டுமே இன்னும் என்னுள் கேட்டுக்கொண்டிருக்கிறது.அவரது இயக்கமோ தனிப்பட்ட குணநலன்களோ என்றுமே அவரது குரலின் இனிமையைப்ப் பாதிக்கவே செய்யாது ஷோபா.ஆனலும் அவரைப்பற்றிய செய்திகளை அந்த 83 களின் ஆதரவை என்றுமே இழக்காது/இனிய காலை வணக்கம்

  36. காரைநகரில் பிறந்து கொட்டடியில் வளர்ந்த கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (கே எஸ் ராஜா) புலிகளால் கொல்லப்பட்டதாக டக்லஸ் தேவானந்தா சொன்னார். டக்லஸ் தேவானந்தாதான் கே எஸ் ராஜாவைக் கொலை செய்ததாக புலிகள் சொல்லியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *