நூல் அறிமுகம் – தியோ

தோழமைப் பிரதிகள்

…….சுணைக்கிது

சிறுகதைகள்
நிரூபா

குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. என்று ஒரு அயல் அட்டமே, ஒரு சிறு கிராமமே நிரூபாவின் புனைவுலகில் நமக்கு அறிமுகமாகி மெல்ல மெல்ல அவர்கள் நம்மோடும் நெருக்கமாகி விடுகிறார்கள். அவர்களது மன எழுச்சிகள்,பிரிவுகள், சந்திப்புக்கள், வெறுமைகள், துரோகங்கள், எழுத்தெழுத்தாகத் திரும்பத் திரும்ப நிரூபாவால் எழுதப்பட்டுள்ளன. இது ஒரு சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் அதே வேளையில் புனைவுக் களத்தைப் பொறுத்த வரையில் வரிசை மாறிக் கட்டப்பட்ட அத்தியாயங்களைக் கொண்ட நாவலாகவும் தன்னை இயல்பாகவே நிறுத்திக் கொள்கிறது.

நிரூபாவின் கதைகளில் புகலிடப் பெண் எழுத்தாளர்களின் பேரடையாளங்களான சல்லிசான கோஷங்களோ, நீதிமொழிகளோ, வசைகளோ தேங்கி நிற்பதில்லை.அவை இஸங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை அதன் அழகுகளுடனும் அபத்தங்களுடனும் ‘குழந்தைத்தனமான’ பரிசுத்தத்துடன் சித்திரித்துக் காட்டுபவை.

இந்த வகை எழுத்துக்கள் ஒரு அன்பான கடிதம் போல நமக்கு உடனேயே நெருக்கமாகி மனக் கசிவை ஏற்படுத்தி விடுகின்றன. இது ஒரு கதை சொல்லியின் பலமென்றால் இதுவே நிரூபாவின் பலவீனமும் ஆகி விடுகிறது. பல தருணங்களில் நிரூபாவின் கதைகள் வெறும் உருக்கமான வாக்குமூலங்களாகவே நின்று விடுகின்றன. அவை வாசகர்களிடம் இரக்கத்தை அல்லது தீர்ப்பைக் கோரி நிற்கும் பிரதிகளாகவே எஞ்சிவிடுகின்றன. நிரூபாவின் பிரக்ஞாபூர்வமான கட்டுப்பாட்டிலிருந்து பிரதி நழுவி விடும் தருணங்களிலெல்லாம் பிரதி தானாகவே கோள்மூட்டித்தனமான எழுத்துக்களையும் எழுதிச்செல்கிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான “சுணைக்கிது” மிகவும் முக்கியமான கதை. ஒரு சிறுமி பாலியல் வதை செய்யப்படும் வலியை முதலைக் கண்ணீரோடு வாசக மனதைச் சுரண்டிவிடும் நோக்கமற்று வெறும் வாசிப்பு அதிர்ச்சிக்காக அல்லாமல் வலியை வலியாக அதன் சாத்தியமான எல்லாப் பரிமாணங்களுடனும் நிரூபாவால் கலையாக நிகழ்த்திக் காட்ட முடிகிறது. அதே வேளையில் தனது மையப் பாத்திரப் படைப்புக்களுக்காக நிரூபா ஆடும் வழக்கை பிரதியில் எதிர் மறையாகக் கட்டப்பட்டிருக்கும் பாத்திரங்களுக்காக நிரூபா ஆடுவதில்லை. கிட்டத்தட்ட பூலன் தேவியின் நீதி முறைமை தான் ஒட்டுமொத்தப் பிரதியிலும் காணக்கிடைக்கிறது. இந்தப் படைப்புக் கோணம் ஏராளமான வில்லன்களைக் கதைகளில் உருவாக்கிவிட (வில்லன்கள் கிடைக்காவிட்டால் நிரூபா பிரதியில் உடனடியாகவே பாம்புகளையும் மயிர்க்கொட்டிகளையும் ஊர விட்டு விடுகிறார்) நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற எதிர்வுகளே கதைகளை வளர்த்துச் செல்கின்றன. இந்தத் தட்டையான கதை சொல்லும் முறையிலிருந்து தமிழ் நவீன கதைப் பரப்பு நகர்ந்து வெகு நாட்களாகின்றன.

ஒரு ஊரில் ஒரு கொடுமைக்கார அரசன் இருந்தானாம். அங்கு ஒரு கூலி இருந்தானாம். இளவரசிக்கு கூலி மேற் காதலாம் என்ற வகைமாதிரியில் கணபதி என்ற ‘தோட்டக்காட்டு’க் கூலி பற்றி ‘ஒரு பழம் தப்பிச்சிண்ணு…’என்றொரு கதை.
‘ஒருக்கா என்னட்டச் சொல்லிப்போட்டுப் போயிருக்கலாம்தானே’.எனத் தொடங்கி ‘கணபதியெண்டா எனக்கு நல்ல விருப்பம்’. எனக் கதை முடிகிறது. தோட்டக்காட்டார்கள், கள்ளத் தோணிகள், வடக்கத்தியார்கள் எனப் பழித்துரைக்கப்படும் மனிதர்களில் ஒருவன் கணபதி. இளவரசிக்கு கணபதி என்றால் விருப்பம். அவள் கணபதியில் பச்சாதாபத்தைக் கதையில் பொழிகிறாள். ஆனால் கணபதிக்கு இளவரசியில் நல்ல விருப்பமா? என்ற கேள்விக்குள் நிரூபா நுழைவதில்லை. ஒரு அரசியற் குரலை ஒலிக்க விடுவதற்கான சந்தர்ப்பத்தை நிரூபா லாவகமாகத் தவிர்த்துக் குழந்தைத் தனமான வெற்று மனிதாபிமானத்தினுள் ஒழித்து விடுகிறார். ‘பிரச்சாரம் கலையாகாது ஆனால் நல்ல கலை பிரச்சாரமாகும்’ என்பார்கள்.
‘கோணக் கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சிண்ணு
உதைச்சானய்யா சின்னத்துரை’
சின்னத் துரையை இளவரசி என மாற்றிப் பாடக் கணபதிக்கு ஒரு நொடி போதும். மற்றவர்களின் குரலை நிரூபா எக் காரணம் கொண்டும் பிரதிக்குள் அனுமதிப்பதேயில்லை. இதைக் நிரூபாவின் குறையாகச் சொல்ல முடியாது. இத்தகைய ஒற்றைப் பார்வை எதார்த்தவாத எழுத்தின் குறைபாடு. எதார்த்தவாத எழுத்து முறைமை பிரதிக்குள் பல்வேறு குரல்களை ஒலிக்க விடுவதற்கு பெரும் தடையாக இருப்பதால் தான் இச் சவாலை எதிர் கொள்ளும் படைப்பாளி இடையறாது அ-வரிசை எழுத்து, மாயா எதார்த்தவாத எழுத்து, பின் நவீனத்துவ எழுத்து என வேறு வேறு இலக்கியச் செல் நெறிகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கிறார்.

இத்தகைய பலவீனங்களை விட்டு வட்டால் நிரூபாவின் எழுத்துக்களின் இலக்கு முக்கியமானது. தமிழ்ப் புனைகதையுலகு விட்ட குறை தொட்ட குறையாகத் தட்டிச் சென்ற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தமிழ்ப் பண்பாடு எனக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சாதி ஆண் முதன்மைவாத இந்துப் பண்பாட்டுக்கும் குழந்தைகளின் அக உலகிற்கும் இடையலான முரணகள் ஆகியவற்றைக் கலையூடாக விசாரணை செய்வதிலேயே நிரூபாவின் படைப்புச் சிரத்தை குவிக்கப்பட்டுள்ளது. ஒரு அகதியாக ஒரு பெண்ணாக ஒரு கறுப்பியாக நிரூபாவின் தன்னிலை அவர் எடுத்துக் கொண்ட புனை களத்தில் அவரை இடையறாது இயங்க வைக்கிறது.அந்தத் தன்னிலைகள் நிரூபாவிற்கென சிறப்பான மொழி நடை ஒன்றையும் வகுத்துக் கொடுத்திருக்கின்றன.

பெண் உடலின் பருவ மாற்றங்கள், சிறுமிகளின் பாலியல் மதிப்பீடுகள், பெண்களின் மனோவுலகு போன்ற தனித்துவமான கூறுகளை வெகு நறுக்காக எழுதிச் செல்லும் நிரூபா பெண்களின் அகவுலகை ஒரு பெண்ணால் மட்டுமே துல்லியமாக இலக்கியத்தில் சித்திரிக்க முடியும் என மீண்டும் ஒருமுறை இத் தொகுப்பின் வழியே எண்பித்துக் காட்டியிருக்கிறார். பெண் மொழியின் பல்வேறு சாத்தியங்களுடன் நிரூபாவிற்கு வட்டார வழக்கும் துல்லியமாகக் கை வருகிறது. இலங்கை வானொலி நாடகங்களின் ‘அப்புக்குட்டி’ ராஜகோபால், ‘முகத்தார்’ ஜேசுரட்ணம் பாணியிலான செயற்கைத் தமிழ் வடிவம் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கென புகலிட இலக்கியப் பிரதிகளில் புழங்கி வரும் சூழலில் பதின்ம வயதுகளில் புலம் பெயர்ந்து வந்த நிரூபாவின் மொழியாளுமை ஆச்சரியப்படுத்துகிறது.

சில படைப்பாளிகளுக்கு இன்றைய புகலிட எழுத்தாளர்களுக்கு அதுவும் ஆண்களுக்கு கிடைக்கிற “புத்திஜீவிகள் அங்கீகாரம்” “மகுடம்” பெண்களுக்கு கிடைப்பதில்லை என எவரும் வருந்த வேண்டியதில்லை. அங்கீகாரங்கள் மகுடங்கள் யாரால் யாருக்கு எப்போழுது கொடுக்கப்படுகிறது என நாம் பரிசீலிப்பது முக்கியமானது. யார் அங்கீகரித்தால் என்ன? அங்கீகரிக்காவிட்டால் என்ன? குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. எல்லோருமே நிரூபாவுடன் இருப்பார்கள். நிரூபாவும் அவர்களுடன் இருப்பார்.

04.08.2006

5 thoughts on “நூல் அறிமுகம் – தியோ

  1. நல்லதொரு திறனாய்வு.
    …..
    /நிரூபா பெண்களின் அகவுலகை ஒரு பெண்ணால் மட்டுமே துல்லியமாக இலக்கியத்தில் சித்திரிக்க முடியும் என மீண்டும் ஒருமுறை இத் தொகுப்பின் வழியே எண்பித்துக் காட்டியிருக்கிறார். பெண் மொழியின் பல்வேறு சாத்தியங்களுடன் நிரூபாவிற்கு வட்டார வழக்கும் துல்லியமாகக் கை வருகிறது. இலங்கை வானொலி நாடகங்களின் ‘அப்புக்குட்டி’ ராஜகோபால், ‘முகத்தார்’ ஜேசுரட்ணம் பாணியிலான செயற்கைத் தமிழ் வடிவம் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கென புகலிட இலக்கியப் பிரதிகளில் புழங்கி வரும் சூழலில் பதின்ம வயதுகளில் புலம் பெயர்ந்து வந்த நிரூபாவின் மொழியாளுமை ஆச்சரியப்படுத்துகிறது/
    தொகுப்பை இன்னமும் முழுதாய் வாசித்து முடிக்காத நிலையிலும், வாசித்தவளவில் நிரூபாவின் இந்த மொழியாளுமைதான் என்னையும் வியப்பிலாழ்த்தியிருந்தது.
    …..
    /மற்றவர்களின் குரலை நிரூபா எக் காரணம் கொண்டும் பிரதிக்குள் அனுமதிப்பதேயில்லை. இதைக் நிரூபாவின் குறையாகச் சொல்ல முடியாது. இத்தகைய ஒற்றைப் பார்வை எதார்த்தவாத எழுத்தின் குறைபாடு. எதார்த்தவாத எழுத்து முறைமை பிரதிக்குள் பல்வேறு குரல்களை ஒலிக்க விடுவதற்கு பெரும் தடையாக இருப்பதால் தான் இச் சவாலை எதிர் கொள்ளும் படைப்பாளி இடையறாது அ-வரிசை எழுத்து, மாயா எதார்த்தவாத எழுத்து, பின் நவீனத்துவ எழுத்து என வேறு வேறு இலக்கியச் செல் நெறிகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கிறார்./
    யதார்த்த எழுத்து நடைக்குள்ள பலவீனமாய் நீங்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் குறிப்பிடும் கதை ஒரு சிறுமியின் பார்வையில் விரிவதால் கணபதியின் பக்கத்தை எப்படி நியாயமாய் இருந்து விவாதிக்க முடியும் என்ற இன்னொரு பக்க கேள்வியுண்டு. கணபதியின் பக்கத்தை அபத்தாமாய் எழுதுவதைவிட கணபதி என்ன யோசித்திருப்பார் என்று (நீங்கள் குறிப்பிட்ட மாதிரியும்….) வாசிப்பவர் யோசித்துப் பார்ப்பதற்கான வெளியைத் தந்ததற்கு நிரூபாவைப் பாராட்டலாம். மற்றது ஷோபாசக்தியின் நாவலான ‘ம்’ இலேயே நிறமி பேசுவதற்கான வெளி மவுனமாக்கப்படும்போது நிரூபாவின் சிறுகதையில் கணபதிக்கான வெளி கொடுக்கப்படவில்லை என்று கேட்பது எந்தளவுக்கு நியாயம் என்றும் தெரியவில்லை.

  2. நல்லதொரு திறனாய்வு.

    டீசே தமிழன்,

    வைகறை பத்திரிகையில் நிரூபாவின் புத்தகவெளியீடு பற்றி எழுதுவதாகச் சொன்னார்கள். அதை உங்களின் பதிவில் வெளியிடுவீர்களா?

  3. டீசே

    /யதார்த்த எழுத்து நடைக்குள்ள பலவீனமாய் நீங்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் குறிப்பிடும் கதை ஒரு சிறுமியின் பார்வையில் விரிவதால் கணபதியின் பக்கத்தை எப்படி நியாயமாய் இருந்து விவாதிக்க முடியும் என்ற இன்னொரு பக்க கேள்வியுண்டு. கணபதியின் பக்கத்தை அபத்தாமாய் எழுதுவதைவிட கணபதி என்ன யோசித்திருப்பார் என்று (நீங்கள் குறிப்பிட்ட மாதிரியும்….) வாசிப்பவர் யோசித்துப் பார்ப்பதற்கான வெளியைத் தந்ததற்கு நிரூபாவைப் பாராட்டலாம். மற்றது ஷோபாசக்தியின் நாவலான ‘ம்’ இலேயே நிறமி பேசுவதற்கான வெளி மவுனமாக்கப்படும்போது நிரூபாவின் சிறுகதையில் கணபதிக்கான வெளி கொடுக்கப்படவில்லை என்று கேட்பது எந்தளவுக்கு நியாயம் என்றும் தெரியவில்லை.//
    ‘ம்’ நிறுமிக்கும் ஒரு பழம் தப்பிச்சுண்ணு… கணபதிக்குமிடையில் மிகப் பெரிய இடைவெளிகள் இருக்கின்றன

  4. //இத்தகைய பலவீனங்களை விட்டு வட்டால் நிரூபாவின் எழுத்துக்களின் இலக்கு முக்கியமானது. தமிழ்ப் புனைகதையுலகு விட்ட குறை தொட்ட குறையாகத் தட்டிச் சென்ற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தமிழ்ப் பண்பாடு எனக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சாதி ஆண் முதன்மைவாத இந்துப் பண்பாட்டுக்கும் குழந்தைகளின் அக உலகிற்கும் இடையலான முரணகள் ஆகியவற்றைக் கலையூடாக விசாரணை செய்வதிலேயே நிரூபாவின் படைப்புச் சிரத்தை குவிக்கப்பட்டுள்ளது. ஒரு அகதியாக ஒரு பெண்ணாக ஒரு கறுப்பியாக நிரூபாவின் தன்னிலை அவர் எடுத்துக் கொண்ட புனை களத்தில் அவரை இடையறாது இயங்க வைக்கிறது.அந்தத் தன்னிலைகள் நிரூபாவிற்கென சிறப்பான மொழி நடை ஒன்றையும் வகுத்துக் கொடுத்திருக்கின்றன.//

    இதை நான் வழிமொழிகிறேன்

  5. /ஒரு அரசியற் குரலை ஒலிக்க விடுவதற்கான சந்தர்ப்பத்தை நிரூபா லாவகமாகத் தவிர்த்துக் குழந்தைத் தனமான வெற்று மனிதாபிமானத்தினுள் ஒழித்து விடுகிறார். ‘பிரச்சாரம் கலையாகாது ஆனால் நல்ல கலை பிரச்சாரமாகும்’ என்பார்கள்./

    நல்லதொரு திறனாய்வு.

Comments are closed.