வெளிவந்துவிட்டது…

அறிவித்தல்கள்

Theendathagathavan

கே.டானியல், எஸ்.பொ, டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தெணியான், பெனடிக்ற் பாலன், நந்தினி சேவியர், தேவா, அருந்ததி, அ.தேவதாசன், மா. பாலசிங்கம் ஆகிய பதினொரு எழுத்தாளர்களின் பதின்நான்கு கதைகளும், மற்றும் கே.டானியலின் ‘பஞ்சமர்’ நாவலிலிருந்தும் என்.கே. ரகுநாதனின் தன்வரலாறு நூலான ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும்.

தொகுப்பாசிரியர்: சுகன்
வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம், பிரான்ஸ்.

முன்னுரை

-அ.மார்க்ஸ்

லித் இலக்கியத்தில் ஈழம் தமிழகத்திற்கு முன்னோடி. ஈழத் தலித் எழுத்தாளர்கள் பதினொருவர் 1951 தொடங்கி 2006 வரையில் எழுதியுள்ள தீண்டாமை எதிர்ப்புக் கதைகள் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சாதி எதிர்ப்புக் கருத்துகளைப் பேசி, இயங்கி வரும் தோழர் சுகன் இதைச் செய்துள்ளார்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் தலித் இலக்கியம் என்கிற கருத்தாக்கம் தமிழகத்திற்கு வடக்கே உள்ள மாநிலங்களின் கொடை. மராட்டி, கன்னட மொழி தலித் இலக்கியங்கள், அம்பேத்கார் நூற்றாண்டு ஏற்படுத்திய விழிப்புணர்வு ஆகியன இதன் பின்புலம். ஆக எண்பதுகளின் பிற்பகுதிக்குப் பின்னரே தீண்டாமைக் கொடுமை குறித்து எழுதுதல் இங்கே கவனம் பெற்றது. முந்தைய எழுத்தாளர்கள் யாரும் தீண்டாமையையும், அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலங்களையும் கதைப் பொருளாகக் கொள்ள முடியும் எனக் கருதவில்லை. நவீன தமிழிலக்கியம் உருப்பெற்ற 1930கள் தொடங்கி 1990கள் வரை இங்கே எழுத வந்த இலக்கியவாதிகள் அனைவரும் தலித் அல்லாதவர்கள்; சாதிப் படிநிலையில் மேல் நிலையில் இருந்தவர்கள். இவர்களுக்குத் தீண்டாமை ஒரு பொருட்டாகத் தோன்றாதது வியப்பில்லை.

ஆனால் ஈழத்தில் இத்தனை தலித் எழுத்தாளர்கள் 1950கள் தொடங்கி (அதற்கு முன்பும் கூட இருந்திருக்கலாம்) இயங்கி வந்ததும், அவர்கள் தீண்டாமையை இலக்கியப் பொருளாக்கியதும் வியப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உரிய செய்திகள். நவீன அரசியலுடன் உருவான தீண்டாமை எதிர்ப்பு இயக்கங்களும், வீரியமான செயற்பாடுகளும் இத்தகைய இலக்கிய வெளிப்பாட்டிற்குப் பின்புலமாக அமைந்ததை இங்கு குறிப்பிடாதிருக்க இயலாது. வெகுஜனன், இராவணா ஆகியோரால் எழுதப்பட்ட சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்னும் நூல் (புதிய பூமி வெளியீடு, யாழ்ப்பாணம், 1988) ஒரு கட்சி வெளியீட்டிற்கே உரித்தான பலவீனங்கள் நிறைந்த ஒன்றாக இருந்தபோதிலும் அதுவே ஈழத்துச் சாதியப் பிரச்சினையையும் எதிரான போராட்டங்களையும் விளங்கிக் கொள்ளப் பயன்படும் ஒரு முக்கிய ஆவணமாக இதுவரை திகழ்கிறது.

ஹன்டி பேரின்பநாயகம் போன்றோரின் முயற்சியால் 1920கள் தொடங்கி தீண்டாமைக்கெதிரான குரல்கள் அரசியல் களத்தில் ஒலிக்க ஆரம்பித்ததை நாம் அறிகிறோம். 1924 டிசம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் மாநாட்டின் பத்து தீர்மானங்களில் மூன்றாவதாக தீண்டாமை எதிர்ப்புத் தீர்மானம் இருந்தது. 1927ல் காந்தியடிகள் இலங்கை சென்றபோது அவருக்கான வரவேற்பில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவம் அளிப்பதை எதிர்த்து, தெல்லிப்பளையில் அமைக்கப்பட்ட வரவேற்புப் பந்தலைச் சாதி வெறியர்கள் எரித்து நாசப்படுத்தினர். காந்தி வருகை தீண்டாமை எதிர்ப்பிற்கான ஒரு உத்வேகமாக அங்கு அமைந்தது என மேற்குறித்த நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனி அமைப்பாக 1927ல் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் உருவாக்கப்பட்டது. 1920களில் மகாராஷ்டிரத்தில் ‘பகிஷ்கரித் ஹிதகரிணி சபா’ அதாவது ஒடுக்கப்பட்டோருக்கு இதம் அளிக்கும் அவை (Depressed Class Association) என்கிற பெயரில் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அமைப்பின் தாக்கம் இதில் ஏதும் இருந்ததா, இது குறித்த அறிதல் ஈழத்தில் அன்று இருந்ததா என்பது தெரியவில்லை. ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்க உருவாக்கத்தில் கிறிஸ்தவம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. தீண்டாமையைப் பொருத்தமட்டில் இந்தியாவிலும் சரி, ஈழத்திலும் சரி கிறிஸ்தவத்தின் நிலைபாடு இரட்டைத் தன்மையானதாகவே அன்றும் இன்றும் உள்ளது. ஒரு பக்கம் இந்து மதத்தைப் போலவே சாதீயத்தை உள்வாங்கி தீண்டாமையை நடைமுறைப்படுத்துவது; இன்னொருபுறம் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களையும், இயக்கங்களையும், இலக்கியங்களையும் ஆதரிப்பது. நெவின்ஸ் செல்லத்துரை, யோவேல் போல் முதலியோர் இவ்வமைப்பில் முக்கிய பங்காற்றினர்.

இத்தொகுதியிலுள்ள நந்தினி சேவியரின் நெல்லிமரப் ‘பள்ளிக்கூடம்’ என்னும் சிறுகதையில் சைவப் பெரியார் ஒருவர் உருவாக்கிய பள்ளியில் கடைபிடிக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிராகக் கிறிஸ்தவர்களின் வேதக் கோவில் தெருவில் ஒரு பள்ளி உருவான கதையைப் பார்க்கிறோம். ஆனால் கிறிஸ்தவப் பள்ளிகளிலும் இதே போல தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதும் அதற்கெதிராகப் போராட்டங்கள் நடைபெற்றதும் வேறு கதை. டொமினிக் ஜீவாவின் ‘தப்புக் கணக்கு’ கதையில் இந்த அவலம் பதிவு செய்யப்படுவதைக் காணலாம்.

1929இல் 131 சைவப் பெரியார்கள் யாழ்ப்பாணம் ராயல் தியேட்டரில் இந்து மகாசபையின் தலைமையில் கூடி கோப்பாய் அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையை உயர்சாதியினருக்கான தனி நிறுவனமாக ஆக்கவேண்டும் என அரசுக்கு மனுச் செய்தபோதும், சாதியத்திற்கு ஆதரவாகத் தேச வழமையை வலியுறுத்தியும் எல்லோருக்கும் வாக்குரிமை என்கிற கருத்திற்கு எதிராகவும் அன்றைய தமிழ்த் தலைவர் சேர் பொன். இராமநாதன் டொனமூர் ஆணைக்குழு முன் வாக்களித்த போதும் யோவல் போல் போன்றோர் அதை வலுவாக எதிர்த்தனர். டொனமூர் அறிக்கையின் அடிப்படையில் சம ஆசனம், சம போசனம் சட்டமாக்கப்பட்ட போது (1930) பன்னிரண்டு பள்ளிகள் சாதிவெறியர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.

1930, 40களில் ஆங்காங்கு ஏராளமான சிறு அளவிலான தாழ்த்தப்பட்ட மக்களின் சங்கங்கள் உருவாயின. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட இவ்விழிப்புணர்வின் விளைவாக வாலிபர் காங்கிரஸ் மட்டுமின்றி 1930களின் பிற்பகுதியில் ஈழத்தில் அறிமுகமான கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும் தீண்டாமையை எதிர்த்துப் பேச வேண்டியதும் இயங்க வேண்டியதும் அவசியமாயிற்று. 1943ல் இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் புகழ்பெற்ற அமைப்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கெனவே உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சிறுபான்மை என்பது மத, மொழி அடிப்படையில் வரையறுக்கப்பட்ட போதும் ஈழத்தில் அது தாழ்த்தப்பட்டவர்களையே குறிக்கும்.

இத் தொகுப்பின் சமர்ப்பணத்தில் 1945 செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற மகாசபையின் மூன்றாம் மாநாட்டுத் தீர்மானங்களைப் பார்த்திருப்பீர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கைகள் என்னவாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தளமாகத் தாழ்த்தப்பட்டவர்களே இருந்தனர். எனினும் தமிழகத்தைப் போலன்றி ஈழத்தில் கம்யூனிஸ்ட்கள் சாதிப் பிரச்சனையின் தனித்துவத்தை ஏற்று இயங்கியது குறிப்பிடத்தக்கது. தேசியப் பிரச்சினையைக் கம்யூனிஸ்டுகள் கணக்கில் கொள்ளவில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றளவும் தேசியவாதிகளால் புறக்கணிக்கப்படும் சாதியப் பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் அளித்தது அங்கு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, 1966, 67களில் ஈழத்தில் நிச்சாமம் /சங்கானை முதலான இடங்களில் நடைபெற்ற மாபெரும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு முக்கியமானது. அதே நேரத்தில் அன்றைய தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் இது குறித்து, சங்கானை ஷங்காய் ஆகிவிட்டது எனப் பேசினார். இத் தொகுப்பிலுள்ள முக்கிய சிறுகதையான எஸ்.பொ.வின் ‘களத்தில்’ இது பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். ஷங்காய் என அமிர்தலிங்கம் குறிப்பிட்டது மாவோயிஸ்டுகள் ஊடுருவிவிட்டனர் என்கிற பொருளில், நக்சலைட்டுகள் ஊடுருவி விட்டனர் என இங்கே சொல்கிறார்களே அப்படி.

தாழ்த்தப்பட்டோரின் இப்போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ஜனநாயக உணர்வு படைத்த ஆதிக்கசாதியினரும் கலந்து கொள்ள நேர்ந்ததற்குக் கம்யூனிஸ்ட் கட்சியே காரணமாக இருந்தது. கே. ஏ. சுப்ரமணியம், நா. சண்முகதாசன் போன்ற தலைவர்கள் அன்று தலைமறைவாக நேரிட்டது. இத்தகைய தலைவர்களின் உருவிலேயே மணியத்தாரை இக்கதையில் எஸ்.பொ. படைத்துள்ளார். இத்தொகுப்பின் முக்கியமான கதை இது. முடிவு சற்றே நாடகத்தன்மையாக இருந்த போதிலும் ஈழத் தமிழை ஆக உச்சமான வீரியத்துடன் எஸ்.பொ. கையாண்டுள்ளார். அவர் சாதி எதிர்ப்புக் கதைகளே எழுதியதில்லை என்கிற குற்றச்சாட்டு தகர்ந்து போகிறது.

இத்தொகுப்பிலுள்ள கதைகளை மூன்றாகப் பிரிக்கலாம். யாழ் சமூகத்தில் பாரம்பரியமாக நிலவி வந்த தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்பவற்றை முதலாவது பிரிவில் அடக்கலாம். பெனடிக்ற் பாலனின் ‘கவரிமான்கள்’, நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’, கே. டேனியலின் ‘ஆற்றல்மிகு கரத்தில்’ மற்றும் பஞ்சமரிலிருந்து எடுத்த பகுதி, எஸ்.பொ.வின் ‘களம்’, என்.கே. ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம்’ மற்றும் அவரது சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி ஆகியன இப்பிரிவில் அடங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எளிய முறையில் அடுத்து என்ன என்பதை ஆரம்பத்திலேயே ஊகித்துவிடக் கூடியதாக எழுதப்பட்டுள்ள போதிலும் இவை சித்திரிக்கும் காட்சிகள் நம்மை அதிர வைக்கின்றன. குறிப்பாக பள்ளியில், இளம் வயதில் குழந்தைகள் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமைகள் அம்பேத்கரின் வாழ்வை நமக்கு நினைவூட்டுகின்றன. ‘தேநீர்க் கடைகளுக்குப் போகவேண்டும் எண்டினம், கோயிலைத் திறந்துவிடுங்கோ எண்டினம், பாராளுமன்றத்தில் இடம் வேண்டுமெண்டினம், இப்ப பாத்தியளே எங்கடை வீட்டுக்கை பொம்புளை எடுக்க வந்திட்டாங்கள்’ என ஆதிக்க சாதியினர் சீறிக் கிளம்புவதைப் பார்க்கும்போது தான் தமிழ்க் கலாச்சாரத்தின் பொது அடிப்படையை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

தாழ்த்தப்பட்ட இளைஞன் போலிஸ் வேலையில் சேர சான்றளிக்க மறுக்கும் விதானையார் தன் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுதான்; ‘இந்திய நாட்டிலிருந்து முதன் முதலாக வந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மயிலிட்டியில் இறங்கிக் கால் வைத்த சிங்க மாப்பாணர் பரம்பரை’ என்பது. எல்லா இடங்களிலும் உள்ளூர்க்காரர்கள், மண்ணின் மைந்தர்கள் என்பதுதான் பெருமைக்குரிய விஷயம். ஆனால் இங்கோ தமிழகத்திலிருந்து வந்த ஒரிஜினல் வெள்ளாளர் என்பதுதான் பெருமையாகிறது. இந்தியா உங்களுக்குப் பவுத்தத்தை அளித்தற்காகப் பெருமைப்படும் வேளையில் சாதியை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறது என காந்தியடிகள் தமது இலங்கை உரையில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. காந்தியடிகளுக்கு வெட்கத்திற்குரிய ஒன்று இவர்களுக்கு பெருமைக்குரியதாகிறது.

தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என இங்கு அறியப்பெற்ற டானியலின் எழுத்துகளைப் பொருத்தமட்டில் அவரது நாவல்களின் அளவிற்கு சிறுகதைகள் சோபிப்பதில்லை. அடக்குதலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்கள் ஆயுதத்தை எடுக்கும்போதுதான் அவர்களுக்கு இழப்புகள் குறைகின்றன என்கிற ஒரு அம்சத்தை இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள அவரது கதை சுட்டிக்காட்டுகிறது. வெறுமனே ஆயுதத்தை எடுத்துப் பயனில்லை, இயக்கப் பின்னணியும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, தான் Politically correct என்பதையும் அவர் காட்டிக் கொள்கிறார். அரசியல் ரீதியில் தான் சரியாகத்தான் இருப்பதாக அவ்வப்போது நிறுவிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அன்று அவருக்கிருந்தது. அதற்காக அவரது இந்த முடிவை நாம் புறக்கணித்துவிடவும் இயலாது.

போர்ச் சூழலின் விளைவாக இன்று புலம் பெயர்ந்த பின்னும் சாதி உணர்வுகள் நீங்கவில்லை என்பதைப் பதியும் கதைகளை இரண்டாம் பிரிவில் அடக்கலாம். அ. தேவதாசனின் ‘அசல்’, தேவாவின் ‘ஊசி இருக்கும் இடங்கூட’, அருந்ததியின் ‘கேள்விகள்’ ஆகியன இவ்வகைப் பட்டவை. புலம் பெயர்ந்தும், அகதி வாழ்விலும், அகதி முகாம்களுக்குள்ளும், தேசியப் போராட்டம் உச்சமடைந்த நிலையிலுங்கூட சாதி உணர்வு அழியவில்லை என்பதை இவை நிறுவுகின்றன. இந்த உண்மைக்கு மாறாக இங்குள்ள தமிழ் தேசியவாதிகள், தனித் தமிழ்த் தேசியவாதிகள் உட்படப் பேசி வருவதும், தேவையில்லாமல் சாதிப் பிரச்சினையைக் கிளறுவதாக நம்மைக் குற்றம் சாட்டுவதும் கவனிக்கத்தக்கது. இங்கிருந்து அடிக்கடி அய்ரோப்பா சென்று முழங்கிவரும் எவரும் இதைக் கண்டிக்காததும், பதிவு செய்யாததும் வேதனைக்குரியது. தேவாவின் கதை ரொம்பவும் நுணுக்கமானது. புலம்பெயர் வாழ்வும் கூட தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து விடுபட வழிவகுக்காதது ஒரு புறம் என்றால், சாதி, தீண்டாமை முதலியவற்றைப் புரிந்து கொள்ள இயலாத, Immigrants எல்லோரையும் தேவையற்ற சுமை எனக் கருதக்கூடிய, அன்னிய ஆட்சியாளர்களிடம் இதைப் புரியவைத்து நீதி பெற இயலாத வேதனையை அவர் கூர்மையாக சித்தரித்துள்ளார்.

தேசிய இனப் போராட்டத்தினூடாக சாதி உணர்வுகள் இன்று ஈழத்தில் ஒழிந்துவிட்டன என்கிற பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கின்றன மூன்றாம் பிரிவுக் கதைகள். தெணியானின் ‘தீண்டத்தகாதவன்’ மற்றும் ‘வெளியில் எல்லாம் பேசலாம்,’ மா.பாலசிங்கத்தின் ‘கோடாரிக்காம்பு’, தேவதாசனின் ‘கண்ணி’ ஆகியவை இவ்வகையில் அடக்கம். தான் இறந்து போனால் முடிக்கப்படாத தன் நாவலை எழுதி முடிக்கத் தகுதியானவர் என டானியலால் ஒரு முறை கூறப்பட்ட தெணியானின் ‘வெளியில் எல்லாம் பேசலாம்’ என்னும் கதையும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. சுவிஸிலிருந்து கையில் பணத்துடன் வந்துள்ள, அண்ணர் தன் தம்பியையும் அழைத்துக் கொண்டு அவர்களின் சகோதரிக்காக வீட்டுமனை ஒன்று வாங்க வேண்டி வெள்ளாள நிலவுடைமையாளரிடம் வந்து பேசுவதே கதை. இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிய அறிய கமக்காரனின் மொழி மாற்றம் அடைவதை நுணுக்கமாகச் சித்திரிக்கிறார் தெணியான். கமக்காரரை எப்படி அழைப்பது எனச் சகோதரர்கள் தயங்குகின்றனர். யாழ்ப்பாணத்து ஐயா சாமானியமானவரல்லர், பாரம்பரியமான ஐயா என்கிறார் தெணியான்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல. இங்கும் அப்படித்தான். அதனால்தான் நம்மொழி சாதி காப்பாற்றும் மொழி என்றார் பெரியார். சார் என்பது ஆங்கிலச் சொல்லானாலும் ஐயாவுடன் ஒப்பிடும்போது ரொம்பவும் Seculer ஆனது. மா. பாலசிங்கத்தின் ‘கோடாரிக் காம்பு’ ஒரு தனித்துவமான கதை. மீண்டும் தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்க வாய்ப்பளிக்கும் கதை. தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளும் கூட உள்ள உட்சாதி ஒடுக்குமுறையைச் சொல்லுகிறது இது. பஞ்சம சாதிகளுக்குள் உள்ள இந்த படிநிலை வேறுபாடும் உள் தீண்டாமையும் சிறுபான்மை தமிழர் மகா சபையுள்ளும் கூட வெளிப்பட்டதாக அறிகிறோம். யாழ்ப்பாணப் பஞ்சம சாதிகளைப் போலவே அப்பால் ஆக மோசமான இழி தொழிலுக்கு ஆட்படுத்தப்படும் கொழும்பிலுள்ள அருந்ததியர்கள் இத்தொகுப்பிலும் விடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணச் சமூகத்தில் இன்றளவும் தொடரும் சாதியக் கட்டமைப்பை இலக்கிய வழிநின்று புரிந்து கொள்ள உதவும் இத் தொகுப்பு தேசிய இனப் போராட்டம் குறித்து இங்கே கட்டமைக்கப்படும் மாயைகளில் ஒன்றைத் தகர்த்தெறிகிறது.

பிரதிகள் கிடைக்குமிடங்கள்:
நிச்சாமம் பதிப்பகம்
Sugan Kanagasabai
3eme DT
1,Rue Honore de Balzac
95140 Garges les gonesse
France
[email protected]

மாலிகா புக்ஸ்
No. 22/7, GF-4, ‘Ganesh Nest’ Apartments
Pillayar Koil Street, Tharamani,
Chennai – 600 113. Tamil Nadu, INDIA

கருப்புப் பிரதிகள்
45ஏ,இஸ்மாயில் மைதானம்
லாயிட்ஸ் சாலை,சென்னை 5
செல்:9444272500

39 thoughts on “வெளிவந்துவிட்டது…

  1. 55 வருசத்தில 14 கதைதான் தேறியிருக்கிதெண்டதால் தலித் பிரச்சினையும் அவ்வளவுதான் எண்டு கொள்ளமுடியுமா?

    இலங்கையில் தலித்பிரச்சினையும் போராட்டமும் நியாயம் இருக்குது. அதிலும் இப்போ பிரபாகரனையும் தமிழ்செல்வனையும் சிவனேசனையும் தலைவா;களாக ஏற்றுக்கொள்ளக்டகூடிய அளவுக்கு யாழ்.மேட்டுக்குடியில் ஒரு மாற்றம் இருக்கிது எண்டதையும் மறுக்கமுடியாது. ஆனால் புலம்பெயர் சூழலில் வலிஞ்சு பிரச்சினைகளைத் தேடவேண்டி இருக்கு. குறிப்பாக இலக்கியச்சூழலில் தலித் என்ற அடையாளம் சுலபமான கெளரவஅந்தஸ்தாகவும் உலாவருகிறது.

    புலம்பெயர் சூழலில் தலித்தியம் பேசுவதென்பது ஒரு முகவரிதேடும் வீண்முயற்சிதான்.
    அதுசரி கிடைக்கிற சலுகைகள ஏன் விடுவான். ம். ம்.. நடக்கட்டும்! நடக்கட்டும்!!

  2. பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் ஈழத்தில் தேசிய இனவிடுதலைப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன் முற்றிலும் ஒத்தப்போக முடியாது. இடதுசாரி கருத்துக்களை முன்வைத்த ஈ.பி.ஆர்.எல்.எவ்> ஈரோஸ்> புளொட் போன்றவை சாதியத்தை மறுதலித்திருந்தன. ஆயினும் விடுதலைப் போராட்டம் யாழ் மேலாதிக்க வர்க்கத்திலிருந்தே தோற்றம் பெற்றதாலோ என்னவோ அவர்களின் பிடிக்குள்ளேயே தனது ஆன்மாவை தொலைத்து நின்றது. இந்த யாழ் மேலாதிக்கமே சாதியத்தையும் பிரதேச வாதத்தையும் தனது நலன்சார்ந்தும் தனது பலவீனங்களை மறைத்துக்கொள்ளவும் வளர்த்து வந்தது. வருகின்றது. தனது தேவைகளுக்கு பொருத்தமான தலைமையாக அது விடுதலைப்புலிகளை தெரிவு செய்துகொண்டதில் வியப்புக்கு இடமில்லை. யாழ் மேலாதிக்கத்தின் உள்வாங்கலே இன்று கிழக்கு துருத்தி நின்கின்றது. யாழ் உயர்குடியென தம்மை விளித்துக் கொள்வோர் சாதீயத்தை மட்டுமல்ல பிரதேசங்களாலும் மட்டக்களப்பான்> வன்னியான்> தோட்டக்காட்டான்> என தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு தமது அழிவை தாமே தேடிக்கொள்கின்றனர். உள்ளுரில் அகதிகளாக இடம்பெயரும்போதுகூட கிணற்றுத் தண்ணீரில் சாதி காத்த இந்த சமூகத்திற்கு இன விடதலை ஒரு கேடா?

  3. ம்! சுகன்களுக்கெல்லாம் அ.மார்க்ஸ் எப்போ பேராசிரியர் மார்க்ஸ் ஆனார். அவர் தான் எழுதிய நூல்களில்கூட அவர் இவ்வாறு குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. மார்க்சியப் பல்கலைக் கழகம் கொடுத்ததா? அல்லது பின்நவீனத்துவப் பல்கலைக்கழகம் கொடுத்ததா பேராசிரியர் பட்டம். இந்த லட்சணத்தில் இதோ வெளிவந்துவிட்டது பேராசிரியர் அ.மார்க்ஸ் இன் முகவுரையுடன்… என பட்டம் (விளம்பரம்) விடுகிறீர்கள். அதுசரி… பெண்ணியம் பேசும் முதல்வாங்குக்காரருக்கு இந்த நூலின் தலைப்பு „”தீண்டத்தகாதவன்“ என ஆண்பால் சொல்லாக (நடைமுறையில் இயங்குவதுபோலவே) மண்டைக்குள் தட்டுப்பட்டிருக்குது பாருங்க… அதைச் சொல்லணும்.

    மார்க்ஸ் ஏன் இப்படி ஆனார்… முகவுரையின் முடிவுரையில் சொல்கிறார்.
    //இத் தொகுப்பு தேசிய இனப் போராட்டம் குறித்து இங்கே கட்டமைக்கப்படும் மாயைகளில் ஒன்றைத் தகர்த்தெறிகிறது.//
    இந்தத் மாயையை தகர்க்கும் விசயம் ஏற்கனவே சிந்திக்க மறுக்கும் புலிவிசுவாசிகளைத் தவிர எல்லோருமே பெரும்பாலும் பேசியாயிற்று. 84 இன் கடைசிப் பகுதியிலும் 85 இன் நடுப்பகுதிவரையிலும் ஈபிஆர்எல்எப் உட்பட ஈரோஸ் உட்பட புளொட் அதிலும் குறிப்பாக சந்ததியார் பேசிப் பேசிச் சல்லடையாய்க் கிழிச்ச விவகாரத்தை தண்ணிகாட்டி உருவம் செய்து முஷ்டியால் குத்துவதைப்போலல்லவா இருக்கிறது. இங்கு நான் சொல்வது இந்த மாயைத்தகர்ப்பைப் பற்றி, சாதியத் தகர்ப்பைப் பற்றியல்ல. திரிப்புகளின் திருவுருவங்களுக்கு இதுக்குள்ளாலையும் வளைஞ்சு நெளிஞ்சு வரத் தெரியும் எண்டாலும் சொல்லிவைக்கும் ஒரு நப்பாசை.

  4. தக்சன் என்ன சொல்லவருகிறீர்கள்…
    யாழ்மேட்டுக்குடியில் உள்ள கோபத்தை எல்லா மக்கள்மீதும் அல்லவா கொட்டித்தீர்க்கிறீர்கள்….
    ஓ..அல்லது நீங்கள் வர்க்க விடுதலைக்கு வாறீர்களா?…
    வரக்கம் பற்றியும் சாதிபற்றியும் கதைக்கமுன்னர் இனவாத அரசாலையோ அல்லது புலியாலயோ பூனையாலயோ ஒரு இனம் கண்முன்னே அழிந்துகொண்டிருக்கிறது என்பதை உணருவது முக்கியமானது.

  5. //ம்! சுகன்களுக்கெல்லாம் அ.மார்க்ஸ் எப்போ பேராசிரியர் மார்க்ஸ் ஆனார்.//

    அவர் கடந்த இருபது வருடங்களாகவே பேராசிரியர்தான். இப்போது சென்னை மாநிலக் கல்லூரியல் இயற்பியல் பேராசிரியராக இருக்கிறார்.பின்நவீனத்துவம் பேசினால் பேராசிரியர் என்றெல்லாம் அழைக்கக் கூடாதா? நாங்கள் சிவத்தம்பி,சிவசேகரம், சுபவீ போன்றவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதும் போதும் நீண்டகாலமாகவே பேராசிரியர்கள் என்றுதான் குறிப்பிட்டு எழுதி வருகிறோம். இதில் உங்களுக்கு என்ன கடுப்பு? கார்ல் மார்க்சை குறிப்பிடும்போது எப்போதும் பேராசான் என்றுதான் எழுதுவோம். பெரியாரையும் கே. டானியலையும் தந்தைகள் என விளிப்பதும் எங்கள் வழக்கம். அம்பேத்கரை அண்ணல் அல்லது பாபாசாகேப் என்றுதான் எழுதுவோம். கருணாநிதி என்று எழுதும் போதெல்லாம் கலைஞர் என்று விளித்து எழுதாமல் இருந்ததில்லை. எங்காவது எங்களின் கட்டுரைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த மரியாதை விளிப்புகள் விடுபட்டிருக்கலாம். ஆனால் கூடியவரையில் இந்த மரியாதை விளிப்புகளை நாங்கள் பயன்படுத்தவே விரும்புகிறோம். கலகம், தலித்தியம், விளிம்பு நிலைச்செயற்பாடுகள் என்றெல்லாம் பேசுபவர்கள் மரியாதை விளிப்புகளை பயன்படத்தக் கூடாது, முடிந்தவரை தூஷணம் எழுத வேண்டும், மட்டரகமான தாளில் புத்தகம் போட வேண்டும், குளிக்கக் கூடாது, குடிக்காமலே இருக்கக் கூடாது என்றெல்லாம் ஒரு முட்டாள்தனமான புரிதல் புகலிட இலக்கியச் சூழலில் நிலவுவது எங்களிற்குத் தெரியும். ஆனால் இந்த விசயத்தில் மட்டுமாவது நாங்கள் முட்டாள்களில்லை என்பது எங்களிற்குத் தெரியும்.

    //பெண்ணியம் பேசும் முதல்வாங்குக்காரருக்கு இந்த நூலின் தலைப்பு „”தீண்டத்தகாதவன்“ என ஆண்பால் சொல்லாக (நடைமுறையில் இயங்குவதுபோலவே) மண்டைக்குள் தட்டுப்பட்டிருக்குது பாருங்க… அதைச் சொல்லணும்//

    இது அறப்படிச்ச வேலை. நூலின் தலைப்பு ‘தீண்டத்தகாதவன் முதலான ஈழத்து தலித் சிறுகதைகள்’ என்பதாகும். அதாவது உள்ளே இடம்பெற்ற கதைகளில் தெணியான் எழுதிய கதையின் தலைப்பு தீண்டத்தகாதவன் என்பதாகும். அது ஒரு தலித் ஆணைப் பற்றிய கதை. ஆதனால் அந்தக் கதைக்கு தீண்டத்தகாதவன் என்று பெயர். தெணியான் ஒரு தலித் பெண்ணை மையமாக வைத்து இதே கதையை எழுதியிருந்தால் தீண்டத்தகாதவள் என்றுதான் தலைப்பிட்டிருப்பார். தொகுப்பிற்கும் தீண்டத்தகாதவள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும். தொகுப்பிலுள்ள 14 கதைகளிலும் இந்தக் கதையின் பெயரே தொகுப்பிற்குப் பொருத்தமாயிருந்ததால் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டது. தந்தையற்றவன், பழிக்கப்பட்டவன், கவர்மென்ட் பிராமணன் என்ற தலைப்புகளோடு வந்த தலித் நூல்களையெல்லாம் படித்திருப்பீர்கள். அவை போலத்தான் இதுவும்.

    தீண்டத்தகாதவன்/ள் என்பவை ஒன்றும் பெருமைக்குரிய பட்டங்கள் கிடையாது. இந்தப் பட்டங்கள் ஆதிக்க சாதியினரால் தலித்துகள் மீது சுமத்தப்பட்ட சிலுவைகள் ஆகும். இந்தச் சிலுவைகள் தூக்கியெறியப்பட வேண்டியவை. ஆனால் நீங்கள் தீண்டப்படாதவன் தானா இருக்கிறான் தீண்டப்படாதவள் இல்லையா என்று கேட்பது யோக்கியமான கேள்வியா? அதாவது ஒரு வீடு தீப்பற்றி எரியும்போது உள்ளே ஒரு மனிதன் மாட்டிக்கொண்டான் என்று பதறும்போது ஏன் உள்ளே ஒரு மனுசியும் மாட்டிக்கொள்ளவில்லை என்று ஒருவர் கேட்பது எவ்வளவு வக்கிரமோ அவ்வளவு வக்கிரமானது உங்கள் ன்/ ள் கேள்வி.

    //இத் தொகுப்பு தேசிய இனப் போராட்டம் குறித்து இங்கே கட்டமைக்கப்படும் மாயைகளில் ஒன்றைத் தகர்த்தெறிகிறது.//
    இந்தத் மாயையை தகர்க்கும் விசயம் ஏற்கனவே சிந்திக்க மறுக்கும் புலிவிசுவாசிகளைத் தவிர எல்லோருமே பெரும்பாலும் பேசியாயிற்று. 84 இன் கடைசிப் பகுதியிலும் 85 இன் நடுப்பகுதிவரையிலும் ஈபிஆர்எல்எப் உட்பட ஈரோஸ் உட்பட புளொட் அதிலும் குறிப்பாக சந்ததியார் பேசிப் பேசிச் சல்லடையாய்க் கிழிச்ச விவகாரத்தை தண்ணிகாட்டி உருவம் செய்து முஷ்டியால் குத்துவதைப்போலல்லவா இருக்கிறது//
    அதில் ‘இங்கே’ என்பது ஈழத்தையல்ல இந்தியாவைத்தான் குறிக்கிறது. முன்னுரையைப் படித்துப் பார்த்தீர்களானால் அது தமிழகத் தமிழ்த் தேசியர்களை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம். அதாவது இந்தியாவில் மாயை உடைகிறது என்கிறார் பேராசிரியர் மார்க்ஸ். அதை விளங்கிக்கொண்டு அதில் ஏதாவது கருத்து முரணிருந்தால் விவாதியுங்கள். மற்றபடிக்கு உங்களின் வருகைக்கும் கருத்துகளிற்கும் நன்றி.

    -சத்தியக்கடதாசி

     

  6. இன்மை பிரதிகள் எங்கே பெற்றுக்கொள்ளலாம். 2வது இதழும் வெளிவந்துவிட்டதா?
    அன்புள்ள சேனன் அண்ணா அறிவது>
    தலித் மேம்பாட்டு இயக்கமும் ஏன் பெரியாரும் கூட இந்துமதம்தான் சாதியின் மூலம் என்றும் அது அழிஞ்சாத்தான் சாதிஅழியும் எண்டும் சொல்லியருக்கினம்.
    ஆகவே மதங்களுக்கான வரலாற்றுத்தேவை இனிமேல் இல்லவே இல்லையென்று நீங்கள் உறுதியாக ஏலங்கூறும்போது….
    தலித் இயக்கததிற்கான தேவையும் இல்லையென்று வாதிடமுடியுமா என்பதுதான் எனது தாழ்மையான கேள்வி.
    நன்றி.
    வணக்கம்

  7. பேராசான்,அண்ணல், தந்தை… எல்லாமே மதிப்பு விளிப்புகள்தான். அதைப் பயன்படுத்துவது கூடாது என்று நான் சொன்னதாக நீங்கள் எங்குவைத்துப் புரிந்துகொண்டீர்கள். இந்த விளிப்புகள் எல்லாம் சமூகப் புத்திஜீவிகளாக, செயற்பாட்டாளர்களாக அவர்கள் விளங்கியதில் கிடைத்தது. பேராசிரியர் என்ற பட்டம் அப்படிப்பட்டதல்ல. அவர் படித்துப் பெற்ற பட்டம். அது அவர் கல்வித்தளத்தில் கடுமையாக உழைத்துப் பெற்ற பட்டம்தான். அந்தத் தளத்தில் தன்னை நிலைநிறுத்த அவர் இதைப் பாவிப்பதில் என்னிடம் எந்தக் கேள்வியோ கடுப்போ இல்லை. ஆனால் இந்தக் கல்விமுறைகளின்மீதும் இதை வழங்கும் நிறுவனம் மீதும் கடுமையான விமர்சனங்களை (மிகச் சரியாகவே) முன்வைக்கும் ஒரு சமூகப்புத்திஜீவி என்ற வகையில் அவன்/ள் இந்தப் பட்டத்தை சமூகச் செயற்பாட்டுத் தளத்தில் பாவிப்பதை அர்த்தமற்றதாகக் காண்கிறான்/ள். அதனால்தான் அ.மார்க்ஸ் தான் எழுதிய நூல்களில் அவ்வாறு குறிப்பிடவில்லை என நான் நினைக்கிறேன். சேகுவேராகூட டாக்டர் சேகுவேரா என்று தன்னைக் குறிப்பிட்டது கிடையாது. கல்வித்தரத்தை முதன்மையான அளவுகோலாக முன்நிறுத்தும் ஒரு மனோபாவத்துக்கு பேராசிரியர் என்ற சொல் மரியாதை விளிப்புச் சொல்லாக இருக்கும். உங்களுக்குமா?? அதை தலித்தியம் கலகம் என செயற்படுபவர்கள் மரியாதை விளிப்புகளைப் பயன்படுத்தக்கூடாது என்று நான் கருதுவதாக (அல்லது சொல்வதாக) அர்த்தப்படுத்துவது கொச்சைத்தனமானது.

    தலித்தியம் பேசுபவர்கள் முடிந்தவரை தூசணம் எழுதவேண்டும், குடிக்காமல் இருக்கக்கூடாது என்ற புரிதல் புகலிடத்தில் இருக்கிறது என நீங்கள் கருதுவீர்களானால் அதற்கான பொறுப்பு உங்கள் பக்கம்தான் (புகலிடத்தில்) அதிகம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த வசனத்தை தூசணம்(?) பேசக்கூடாது என்று சொல்வதாகவோ குடிக்கக்கூடாது என்று சொல்வதாகவோ அர்த்தப்படுத்தினால் அதற்கு எனது எழுத்துப் பொறுப்பல்ல.

    நூலின் தலைப்பு “தீண்டத்தகாதவன் முதலான ஈழத்து தலித் சிறுகதைகள்” என்று எனது குறிப்பைத் திருத்தித்தொடங்கிய உங்கள் விளக்கம் பின்பு “தீண்டத்தகாதவன்” என்ற சிறுகதை பொருத்தமான தலைப்பாகத் தெரிந்ததால் “தீண்டத்தகாதவன்” என்று நூலுக்குத் தலைப்பிடப்பட்டது என்கிறீர்கள். இந்த நுண்விளையாட்டுத்தனமாகவே நூலின் தலைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுகதைத் தலைப்புப் பற்றி என்னிடம் எந்தக் கேள்வியுமில்லை. தலித் ஆண் பற்றிய கதை என்றதால் அதை அப்படி தலைப்பிட்டதில் என்ன கேள்வி இருக்கமுடியும். இதில் பாலர்பாடம் நடத்த வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது. ஒரு நூலின் தலைப்பு சிறுகதையின் தலைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்ற நியதி இல்லையே. உங்கள் பாலர்பாட தர்க்கப்படியே நூல் என்ன தலித் ஆணைப் பற்றியா பேசுகிறது என்று கேட்க அல்லது விவாதிக்க எனக்கு கூச்சமாக இருக்கிறது. அதற்கு நீங்கள் காட்டிய உதாரணம் கொடுமையானது. பற்றியெரிகிற வீட்டுக்குள் தலித் ஆண் மட்டுமில்லை பெண்ணும்தான் இருக்கிறாள் என்றுதான் நான் சொல்லவந்தேன். விடுபட்டுப்போன அந்தப் பெண்ணைப் பற்றி நான் பேசவருவதை அந்தத் தீயில் அவளை நான் தள்ளிவிடுவதாக என்மீது வக்கிரத் தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள்.

    மாயைத் தகர்ப்புப் பற்றிய எனது கருத்து “இங்கே” என்ற சொல் பிரதியை வாசித்து முடிந்தபோது அது எனக்குத் தந்த வினை. மார்க்ஸ் இந்தியாவில் இருக்கிறார் என்பதால் இங்கே என்பதை இடம் சார்ந்து இந்தியா என்று பிரதியிடும்படி கேட்கிறது உங்கள் பொழிப்புரை. எனக்கோ அது பிரதி சார்ந்து கருத்துத் தருகிறது. அந்த வசனத்துக்கு முன்னாகவோ பின்னாகவோ தமிழகத்தையோ இந்தியாவையோ இது தொடர்பில்(!) சுட்டாதபோது அவர் தமிழகத்தில்(அல்லது இந்தியாவில்) என்று குறிப்பிட்டிருந்தால் பிரதி என்னிடமும் உங்கள் வாசிப்பைத் தந்திருக்கும். பிரதியை எழுதியவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத ஒருவரிடம் உங்கள் பொழிப்புரை என்னாவது? அதை உங்கள் வாசிப்பில் நான் விளங்கிக்கொண்டு விவாதிக்க வாருங்கள் என்று நக்கீரிப்பதில் எங்கே பிரதி சம்பந்தமான பன்முக வாசிப்புக்கு கதவைத் திறந்துவிடுகிறீர்கள்?

    vasu

  8. தீண்டாமை செத்த பாம்பு… இன்னும் அத கழுத்தில மாட்டிக்கொண்டு…
    வருவாய்க்கு ஒரு வழியோ, சிரிப்பா இருக்கு…

  9. தீண்டாமை செத்தபாம்பா இருக்கலாம். இருக்கட்டும். ஆனா வருவாயக்கு ஒரு வழியென்கிறதை நீங்கள் சொல்லத்தான் சிரிப்பா இருக்கு. உந்த வட்டிக்காரர மற்ற முதலாளிமாரையெல்லாம் விட்டுப்போட்டு தலித் புததகம் போடச்சொல்லுங்கோ

  10. “நிச்சாம வெளியீட்டினரின் உரிமையிலும்இ அவர்கள் சுதந்திரத்திலும் நாம் தலையிட முடியாது என்ற போதிலும். பேரா.அ.மார்க்ஸ் முன்னுரையுடன் (!!!) எனும் முன்பக்கப் பதிவானது இத்தொகுப்பிலுள்ள படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்குமான கருத்தியல் இடையூறாக நாம் அடையாளம் காண்பதால் எமது தளத்தில் அதை தணிக்கை செய்துள்ளோம். அதற்காக நண்பர் அ.மார்க்ஸிடம் மட்டுமே மன்னிப்பும் கேட்கின்றோம்.”
    – தூ -http://www.thuuuu.canalblog.com/

    அ. மார்க்ஸின் முன்னுரையுடன் உங்களுக்கு உடன் பாடில்லை. பிறகேன் அவரிடம் மன்னிப்பு! ‘பேராசிரியர்’ என்பதற்காகவா????

  11. கல்வித்தரத்தை முதன்மையான அளவுகோலாக முன்நிறுத்தும் ஒரு மனோபாவம் வேண்டத்தகாத ஒன்றுதான். வாசுவின் கருத்தோடு முழுமையாக உடன்படமுடிகிறது.

  12. ஆமாமா…. குறுந்தமிழ்த் தேசியம் என்னும் கொடும் விசப்பாம்பைத் தோழில் போட்டு> வரிப்பணமாய் வருமானத்தை உறிஞ்சும் உங்களுக்கு தீண்டாமை செத்த பாம்பாய்த் தோன்றும்தானுங்கோ…???

    -தமயந்தி-

  13. இரண்டு தசாப்தத்திற்கு மேலாக புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்கள் வேரூன்றிவிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு புகைச்சல்கள் காணப்பட்டாலும் பாரதூரமாக> டேய் ஏன்ரா பேரை வைக்கிறாய்? சட்டையைக்கழட்டடா> பனையில வைச்சே தறிச்சுவிழுத்துதல் போன்ற சம்பவங்கள் எதுவும் நடந்துவிடமுடியாது. இந்த நாட்டுசட்டங்களும் பாதுகாப்பளிக்கின்றன. புலம்பெயர் சூழலில் தலித்தியம் பேசுவோர் யாரும் ஆழமான தலித்பிரச்சனைகள் எதையும் வெளிக்கொணரவில்லை. கலியாணப்பிரச்சினையில் சாதிபார்தத்தல் முக்கியவிடயமாகபேசப்படுகிறது? உண்மைதான். ஆனால் இதைக்கூட ஒரு வேற்றுநாட்டுப்பிரசையிடம் விளங்கப்படுத்தமுடியாது. கலியாணங்கள் பேசிமுடிக்கப்படும்போதுதான் இந்தப்பிரச்சினை. எவ்வளவுகாலத்திற்கு புலம்பெயர்சூழலில் பேச்சுக்ல்யாணம் சாத்தியப்படும்? ஒரு எல்லைவரைதான் தாக்குப்பிடிக்கமுடியும்..
    எது எப்படி இருந்தபோதும் புலம்பெயர்சூழலில் முறையான தலித்பிரச்சனைகளை முன்வைத்து அவைபற்றிபேசப்படாது பழையகதைகளை திரும்பதிரும்பபேசுதல் தமது இருப்புக்களை தக்கவைப்தற்கான வேண்டாதமுயற்சிதான். புலம்பெயர்சூழலில் தலித்தியம் பேசுதல் என்பது இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களை நிமர்ந்தெழச்செய்வதற்கு பதிலாக பலரைகூனிக்குறுகவே செய்கிறது என்ற உண்மையையும் உணர்வது நன்று.
    தொடர் கருத்துப்பரிமாற்றத்திற்கு விருப்பமாக..

  14. நிச்சாமம் பதிப்பகம் ஒரு சர்வதேச நிறுவனம் இதன் வெளியீட்டை பகிஸ்காpக்கும் தூ……..ஒரு மாற்றான அமைப்பு மூண்டு பேருக்கு ஒரு அமைப்பு ? படிக்க நாலுபேர்…..ஆரோக்கியமான முன்னெடுப்புகள்…..?துவும் பின் நவீனத்துவமெண்டால் நாங்கள் ஒண்டும் கதைக்கேலை ஐயா……

  15. எங்கன்ட ஆச்சி எனக்குத் தந்த அவான்ட ஒரு கடுக்கன்.
    அசல் தங்கம் ஆறு பவுண்.
    இப்ப அது என்ர மனிசியின்ட கழுத்தில எந்தக் கலப்புஞ் செய்யாமல்
    ரெட்டப்படஇடுச் சங்கிலியாத் தொங்குது.
    ஐயா நான் என்ன சொல்ல வாறனெண்டால்
    வடிவந்தான் மாறியிருக்கு
    ஆனால்
    தங்கம் தங்கமாவே இருக்கு.

    சீராளன்

  16. Sanchai said //எது எப்படி இருந்தபோதும் புலம்பெயர்சூழலில் முறையான தலித்பிரச்சனைகளை முன்வைத்து அவைபற்றிபேசப்படாது பழையகதைகளை திரும்பதிரும்பபேசுதல் தமது இருப்புக்களை தக்கவைப்தற்கான வேண்டாதமுயற்சிதான். புலம்பெயர்சூழலில் தலித்தியம் பேசுதல் என்பது இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களை நிமர்ந்தெழச்செய்வதற்கு பதிலாக பலரைகூனிக்குறுகவே செய்கிறது என்ற உண்மையையும் உணர்வது நன்று.//

    நீங்கள் கூறியிருக்கும் இந்த கருத்து அபத்தமானதாக தெரிகிறது.

    தாய்மண்ணில் பொதுமக்களால் கைவிடப்பட்ட ஒதுக்கப்பட்ட இம்மக்களுக்கு அயல் நாடுகளில் தமக்கென்று உரிமை குரல் கொடுக்க சில பேர் மற்றும் அமைப்புகள் இருப்பது அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் மனமகிழ்ச்சி அடையவே செய்வார்கள்.

    மேலும், சில வேளைகளில் ஆதிக்க சாதி என்று கூறிக்கொள்பவர்கள் இதை வைத்தே எளியவர்களுக்கு சில இடையூறுகள் செய்யவும் வாய்ப்புகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொண்டாலும், இது போன்ற அயல் நாட்டு அமைப்புகள் இவர்களை கொஞ்சமாவது சிந்திக்க செய்யும்.

    அயல் நாடுகளில் புலம்பெயர் மக்களால் இப்பிரச்சினைகளை எடுத்து அலசுவதினால் பண்ணாடுகள் அளவில் இந்த அநியாயங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்படும்.

    உதாரணத்திற்கு,

    ஈழத்தமிழர்களின் தனித் தமிழீழம் பற்றிய பிரச்சினைகளை உலக அளவிற்கு கொண்டுவந்து அனைத்து மக்களின் அறிதலுக்கும் புரியும் வண்ணம் போராட்டங்கள், நிகழ்ச்சிகள், அப்படி இப்படி என்று புலம்பெயர்ந்த அயல் நாடுகளில் செய்கிறர்களே. இது ஏன். தங்கள் பிரச்சினையை உலக பிரச்சினையாக, சிறுபான்மையினர் நசுக்கப்படும் பிரச்சினையாக, மனித உரிமை மீரல் பிரச்சினையாக அனைத்துலகமும் கருதவேண்டும் என்கிற உண்மைக்காகவே அல்லவா? இதை மட்டும் அங்கிருக்கும் ஏனைய தமிழர்கள் தங்களை தாழ்மைபடுத்துவதாக கருத மாட்டார்களா?

    அதைப்போல்தான் இதுவும்.

    எதுவாகவாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மற்றும் ஊடகங்களை அவர்கள் தேவைக்கு உபயோகித்து ஏற்பட்டற்போல் தங்களது உரிமைக்காக போராடுவார்கள். இதில் எந்த குறையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வெகு நீண்டகாலமாக அநியாயமாக அயோக்கியர்களால் நசுக்கப்பட்டுவரும் எளிய மக்கள் தங்களது அடிப்படை வாழ்வுரிமைக்காக துவக்கி இருக்கும்ஒரு போராட்டத்தின் ஆரம்பமே இவைகள்.

    நன்றி. மாசிலா.

  17. நன்றி மாசிலா.
    எழுத்துமூலம் கருத்துப்பகிர்வுக்கு முன்வந்தமைக்கு.
    எழுத்துமூலம் கருத்துப்பாpமாறுவதில் ஒரு பொறுப்புணர்வு இருந்தாலும் சிலதெளிவீனங்களும் ஏற்படவாய்ப்புண்டுதான்.
    ‘புலம்பெயர்சூழலில் தலித்தியம் பேசுதல் என்பது இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களை நிமர்ந்தெழச்செய்வதற்கு பதிலாக பலரைகூனிக்குறுகவே செய்கிறது ‘ இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்மண்ணில் வேரூன்றியவா;களைப்பற்றியே கதைக்கிறேன். பிரச்சினைகளைக்கடந்து இனவாதஅரச மற்றம் சாதிய பிரச்சினைகளைக்கடந்து அமைதியாக புலம்பெயர்மண்ணில் வேரூன்றுபவா;களைப்பற்றியே கதைக்கிறேன்.

    புலம்பெயர்சூழலில் முறையான தலித்பிரச்சனைகளை முன்வைக்கம்போதுதான் இங்கு தலித்அமைப்புகளுக்கும் வலிமைஉண்டு. எனவே அவைபற்றி முன்வைத்து பேசுமாறு மாசிலா அவ்ர்களை அன்போடு வேண்டுகிறேன்.
    விவாதங்கள் வெறறிதோல்விக்காக நடத்தப்படுவன அல்ல. உண்மைகள் வெளிச்சத்திற்குகொண்டுவருதலே அதன்முக்கிய பண்பு.

  18. சுகனின் முயற்சி பாராட்டத்தக்கது. அ.மார்க்சை பேராசிரியர் என்று போடாமல் விட்டிருக்கலாம். பேராசிரியர் என்ற பதத்தின் பின் வெறும் பட்ட படிப்புக்கான பட்டயம் கட்டப்படவில்லை. மாறாக சமுக அந்தஸ்த்தை அது பிரதிபலிக்கிறது. அ. மார்க்சே அத்னை விரும்பியிருக்கமாட்டார். ஆனால் இதனை பெரிது படுத்துவது இங்கு அவசியமல்ல. இது ஆரோக்கியமான விமரிசனத்துக்கு இட்டு செல்லாது. தலித் மக்களின் வரலாறு தமிழ் தேசிய கருத்தியலால் மறைக்க பட்டு அனைவரும் தமிழர் என்ற ஒற்றை பரிமாணத்துள் அடககப்பட்டிருக்கும் இச்சூழலில் இவ்வாறான முயற்சிகள் வரவேற்க தக்கதே. தமிழ் தேசிய வாதத்தின் அரசியல் வறுமை அதன் உடைவுக்கான அடித்த்ளம். தேசியவாதம் வீரியமற்ற ஒரு ஆணை போன்றது. அது தன்னை வீரியமுள்ளவனாக காட்டிக்கொள்ள முடிந்த வரை முயலும். தனது வீரியமின்மையை மறைப்பத்ற்கு பெண்ணை குறை சொல்லும். உன்னில் தான் பிழை டாக்டரிடம் காட்ட வா என்றால் மறுக்கும். அது போல் தான் தேசியவாத சக்திகள் வீரம் செறிந்த தலித் போராட்டங்களை அந்த வரலாறுகளை காண் பயப்படுகிறார்கள். பெரும்பாலான கதைகள் சோசலிஸ்ட் அல்லது சோசல் றியலிச்ம் அடிப்படையில் அமைந்திருப்பினும் சாதிய கொடுமைகளை சித்தரிப்பது என்றவகையில் மாற்று வரலாறு. இதனை ஆவணப்படுத்தியதுநல்ல முயற்சி.

  19. கலகம்இ தலித்தியம்இ விளிம்பு நிலைச்செயற்பாடுகள் என்றெல்லாம் பேசுபவர்கள் மரியாதை விளிப்புகளை பயன்படத்தக் கூடாதுஇ முடிந்தவரை தூஷணம் எழுத வேண்டும்இ மட்டரகமான தாளில் புத்தகம் போட வேண்டும்இ குளிக்கக் கூடாதுஇ குடிக்காமலே இருக்கக் கூடாது என்றெல்லாம் ஒரு முட்டாள்தனமான புரிதல் புகலிட இலக்கியச் சூழலில் நிலவுவது எங்களிற்குத் தெரியும். ஆனால் இந்த விசயத்தில் மட்டுமாவது நாங்கள் முட்டாள்களில்லை என்பது எங்களிற்குத் தெரியும்.

    சுகன் சோபா இருவரும் கடந்த காலங்களில் செய்த வேலைகளை கொஞ்சம் இரைமீட்டுப் பாருங்கள். தும்புத்தடி விளக்குமமாறு வைத்துக் கூட்டம் தொடங்கியது. குணசேகரனது கூட்த்தில் தண்ணி அடித்தது. கொரில்லாக் கூட்டத்தில பேசத் தொடங்கு முன் போத்தல் மூடியில் வாத்தக் குடித்தது மற்றும் இருள்வெளித் துண்டப்பிரசுரம் எல்லாவற்றையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். புஸ்பராஜாவின் காரில் பியா; கடித்து சிவப்பு விளக்கில் எடுக்கச் சொல்லிக் கலகம் செய்து அவா;2000பிராங் கட்டியது எல்லாம் யாரது கலகம் என்பதை நினைவு கொள்ளுங்கள் எப்போதும் போல தவறுகளை மற்றவா;களின் தலையில் போட்டுவிட்டு தப்பிக்கும் மனோபாவம் உங்களிடமும் இருப்பதையிட்டு வெட்கம் கொள்கிறோம்.

  20. சுகன்
    எனது கருத்தை வெளியிடாமல் தவிர்த்ததுக்கு நன்றி ஐயா.
    நான் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளுடனும் கனவுகளுக்கு மேல் கனவுகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    கற்சுறா

  21. கற்சுறா -குடிக்காதவர்கள் நல்லவர்களுமல்ல. குளிக்காதவர்கள் (மன) அழுக்கானவர்களுமல்ல. தகாத வார்த்தைப் பிரயோகம் இழிநிலை மக்கள் மேல் காலங்காலமாக பயன்படுத்தப்படும் போது வராத் கோபம் கற்சுறாவிற்கு இப்போது ஏன் வருகிறது. கடவுளுக்கு பெரியார் விள்க்குமாத்தால் அடித்தது அன்றைய சமுக விZஉமியங்களுக்கெதிரான ஒரு குறியீடு. குத்து விளக்கேற்றி விழா தொடங்குவதற்கெதிரான் ஒரு எதிர்ப்புணர்வாகவேநிகழ்ந்தது. குடிப்பது குடிக்காமல் இருப்பது தனிநபர் சார்ந்த விடயம். இதற்கு விழிம்புநிலை செயற்பாட்டாள்ர் அனைவரையும் குற்றம் சொல்வது sweeping generalisation.

  22. தும்புத்தடி விளக்குமாறுவைத்து கூட்டம்நடத்தியது. ஓ.கே. அத ஒரு மாற்றாக அவதானம் கொள்ளலாககொள்ளலாம்.
    குணசேகரகூட்டத்தில் தண்ணி அடித்து பினாத்தியது.
    அது கெடு. தண்ணிக்கெடு. விடுவம்.
    கூட்டம் தொடங்கமுன் போத்த்ல் மூடியில் வாத்துக்குடிச்சது..
    அது பேசப்பயத்தில.. அதபோக்க மூடியப்பாவிச்சு ஸ்ரயிலாக்கினது.
    அதயும் விடுவம்.
    இருள்வெளித்துண்டுப்பிரசுரம். பரவாயில்ல. நல்லவிசயம்.
    ஆனால் புஸ்பராஜாவின் பியர் குடித்து> சிவப்பு விளக்கு….2000ஆயிரம் ஈரோ கட்டினது…இது ரூ…ரூ..மச்.

    பிழை விடாத மனிசர் இருக்கேலாது. சிலதுகள திரும்பிப்பாக்க வெக்கமாத்தான் இருக்கும். இருந்தால் வெக்கப்படாமல் ஒத்துக்கொண்டு முன்னேறுறதுதான் நல்லது. தேவயில்லாமல் ஞாயந்தெண்டுறது வேஸ்ற்.

  23. பேராசிரியர் எண்ட விடயத்திலை ராகவன் விலக்குப்பிடிக்கிறார். இது கட்டுடைப்பு விமர்சனங்களை வேண்டிநிற்கிற காலம். நுண்களங்களிலை ஒடுக்குமுறை வடிவங்களின்ரை அல்லது ஒடுங்கியிருத்தலின்ரை உளவியல்வரை ஊடுருவிப் பேசுற காலம். சுத்தியக்கடதாசியர்களும் இதுபற்றித்தான் அதிகம் பேசுபவர்கள். பேராசிரியர் என்பது சமூக அந்தஸ்தைத் தருவதாகச் சொல்றார் ராகவன். ஏந்தச் சமூகம்? ஆதிக்கக் கருத்தியலைக் கொண்ட பார்ப்பன அல்லது வெள்ளாள சமூகத்தின் அந்தஸ்தையா?.புரியவில்லை.

    ஃகற்சுறா -குடிக்காதவர்கள் நல்லவர்களுமல்ல. குளிக்காதவர்கள் (மன) அழுக்கானவர்களுமல்ல.ஃஃ

    என்னமா தத்துவம் பேசுறார் ராகவன்.
    கற்சுறா கூறியிருப்பதில் என்ன தவறு. கலகம் என்ற போர்வைக்குள் நடத்தப்பட்டவைகளை அவர் வெளியே இழுத்துக் காட்டியிருக்கிறார். விளக்குமாத்தால் பெரியார் கடவுள் சிலைக்கு அடித்தார் என்றால் அது ஒரு எதிர்மறுப்பு நடவடிக்கைதான். அதாவது பார்ப்பனிய கருத்தியல்மேல் விழுந்த அடி. அது ஒரு நடவடிக்கை. ஒரு தாக்குதல். விளக்குமாத்தையும் செருப்பையும் நீட்டி நிமிர்ந்து படுக்கவைச்சு கூட்டம் நடத்தினது எதுக்கு விழுந்த அடி. கூட்டத்திலை பங்குபற்றினவர்களின் கருத்தியல் மீதா? அல்லது விளக்குமாறும் செருப்பும் குத்துவிளக்கின் இடத்தை மாற்றீடு செய்ததா? அப்படியாயின் அவைதான் தலித்துகளின் வரவேற்புக் கலாச்சாரமாகக் காட்டுகிற வேலையா? புரியுதேயில்லை.

    தலித்துகள் எல்லாம் குடித்துவிட்டு போதையிலா கூட்டம் நடத்துகிறார்கள்? குடிக்கிறது ஒழுக்கயீனம் எண்ட -ஆதிக்கசக்திகளின்- கருத்தியலை மறுதலிக்க குடிக்கிறது தலித்துகளின் ஒழுக்கம் எண்டு காட்டுற வேலையா இது. தலித் குடிச்சாலென்ன பார்ப்பனன் குடிச்சாலென்ன அளவுக்கு மிஞ்சின குடி போதை தரும் நிதானமிழக்கச்செய்யும். நினைவாற்றலுக்குக் குறுக்கே வரும் உடல் ஆரோக்கியத்துக்கும் தீமை தரும் எண்டதெல்லாம் பொதுவானதுதான். சீரியஸான விசயங்களைப் பேசுகிறபோது இதைத் தவிர்ப்பது நன்மையையே தரும். குடிக்கிறது எண்டது ஒழுக்கம் ஒழுக்கயீனம் எண்ட இருமைக்குள் அகப்படாத (மேற்குலக) சமூகத்துள் இருந்துகொண்டு இந்த குடிஜாலம் காட்டுறது கலகமல்ல ஒரு பலவீனம்.

    இதேபோல் புலம்பெயர் கவிதைகளை அரைகுறைத்தனத்தோடு தொகுத்து வெளியிட்ட திருநாவுக்கரசுக்கு கற்சுறா கடிதப் பாணியில் எழுதின விமர்சன மொழியும் தலித்துகள் என்றால் தூசணம்பேச வேண்டும் என்ற தோற்றத்தைக் கொடுத்ததுதான்.

    ஈழத்திலை இண்டைக்கு சாதிய ஒடுக்குமுறை எந்த நுட்பமான வடித்தை எடுத்திருக்குது சமகால உதாரணங்கள்இ தேசியப் போராட்டமும் சாதியமும்; -அது தலித்துகளை உள்வாங்கினதாலை எழுந்திருக்கிற உள்முரண்கள்… எண்டெல்லாம் நிறையப் பேச இருக்கயிக்கை அதுபற்றியெல்லாம் ஆய்வுத்தன்மையுடன் நூல்கள் வெளிவரவேண்டிய காலத்திலை ஏற்கனவே வெளிவந்த விசயங்களை அதுவும் காலஇடைவெளியைக்கூட கவனத்திலை எடுக்காமல் தொகுப்பு விடுறதிலை புதிசா நமக்கெல்லாம் ஒண்டும் பெரிசா கிடைக்கப்போறயில்லை.

  24. சத்தியக்கடதாசி கட்டுரைகளைவிட பின்னூட்டங்கள் குறிப்பிடும்படியாக உள்ளன. எம்மைப்போன்றவர்களை பலகோணங்களில் வாசிக்கத்தூண்டுகிறது.
    நன்றி

  25. கருத்துப்பரிமாற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பங்குபற்றாது ‘துரை’த்தனமாக ஒதுங்கிக்கொள்ள அவர்களுக்காக நியாயந்தெண்டுவது தேவையில்லாத ஒன்றுமட்டுமல்ல பிழையாயும் போய்விடும். இருந்தாலும் சொல்கிறேன்.
    இந்தகலகக்காரர் தலித்தியத்தயும்> பி.ந.தையும் சேர்த்துப்பேசியதால் நீங்கள் குழம்புகிறீர்கள். பி.ந. சரியாக புரிந்துகொள்ளாமல் (அதற்காக நாங்கள் புரிந்துகொண்டோம் என்று அர்ர்தமல்ல) அரைகுறைhக கலகமும்செய்துகொண்டு தலித்தியமும் பேசியதால் வந்தவினை.
    பி.ந. காரர் எல்லோரும் தலித்தியவாதிகளுமல்லர். தலித்தியவாதிகள் எல்லோரும் பி.ந.காரருமல்ல.
    இவ்ர்களுடைய கலகங்கள் (அதில் ஒருபகுதி எங்களுடையதும்தான்; ஏனென்றால் காலங்கடந்து கதைக்கிறோம்)
    பி.ந. குழந்தைப்போராளிகளைப்போன்றது.

    ‘விளக்குமாறும்; செருப்பும் வைத்துகூட்டம் நடத்தியது’ அந்தநேரத்தில் குத்துவிளக்குக்கு மாற்றீடாக ஒன்றைக்கொண்டுவரவேண்டும் என்றஉணர்வை சிந்தனையை தூண்டியது என்பதை மறுக்கமுடியாது. இதுவரை மாற்றாக ஒன்றையும் சிந்திக்கமுடியவில்லை என்பது வேறுவிடயம்.

    ‘குடிக்கிறது எண்டது ஒழுக்கம் ஒழுக்கயீனம் எண்ட இருமைக்குள் அகப்படாத (மேற்குலக) சமூகத்துள் இருந்துகொண்டு இந்த குடிஜாலம் காட்டுறது கலகமல்ல ஒரு பலவீனம்.’
    வாசு நீங்கள் பிரான்ஸில் இல்லை என்ற நினைக்கிறேன். சுத்த தமிழ் குறிப்பாக யாழ்ப்பாணத்துக்குள்தான் பிரான்ஸ் தமிழர்கள் வாழ்கிறார்கள். விதிவிலக்குகள் உண்டு. இந்தக்கலகத்தை நம்மதோழர்கள் ‘கலகமாக’ செய்யவில்லை என்ற விமர்சனத்தை வைக்கலாம்.
    வாசுவின் குறிப்புகள் கவனங்கொள்ளவேண்டியவை. நன்றி

  26. ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதை இன்னும் முடியவில்லை. இப்போ அது பரீசில் மையங் கொண்டிருக்கும் ஒரு புயலாய்த்தான் படுகிறது. எப்போ வேண்டுமானாலும் எந்தத் திசை வேண்டுமானாலும் நகரலாம் பெயரலாம் கரையலாம். தீண்டாமை ஒழிந்துவிட்டது> சாதியம் தேய்ந்து விட்டது> இப்போ அதைப்பற்றிப் பேசுவது வேஸ்ற் என்றெல்லாம் சொல்லும் பெருமகன்கள் ஒரு தடவை என்னிடம் வாருங்கள் பச்சை பச்சையாகக் காட்டுகிறேன். கவட்டுக்குள் தலையைப் புதைத்து வைத்துக்கொண்டு கண்டறியாத நியாயங்கள் பேச வேண்டாம். நீறு பூத்த தணலாய் சாதியம் எப்படியெல்லாம் இந்த நாடுகளில் அமீபாபோல் குடல் வீங்குகிறதென்று நான் நிரூபிக்கிறேன். சீராளன் என்ற பெயரில் சூசகமாய் சொல்லிப் பார்த்தேன் எந்த மர மண்டையிலும் உறைக்கவில்லை. உறைத்திருக்கும் ஆனால் யாவரும் அதைப் புரிந்து கொள்ளாதவர்கள்போல் நடிக்கிறார்கள். நடிப்பு சுதேசிகளே! உங்களுக்கு எங்கேனும் மூலை முடுக்கில் மனச்சாட்சி எஞ்சிக் கிடந்தால் வாருங்கள் பிச்சை எடுத்தேனும் அல்லது புலிப் பினாமிகளிடம் வட்டிக்கெடுத்தேனும் றிட்டென் ரிக்கட் நான் தருகிறேன் >சாதியம் எப்படியெல்லாம் முண்டாசு கட்டிக்கொண்டு சந்னதம் ஆடுதென்று கண்ணெதிரில் நான் காட்டுகிறேன்.
    நண்பன் சுகனுக்கு! நீ நிறைய நல்லதும் தேவையானதும் செய்கிறாய் வணங்குகிறேன். அதேவேளை தேவையற்றதும் நிறையச் செய்கிறாய் நண்ப. கட்டுடைப்பு என்னும் பெயரால் நீ எந்தக் கோவணத்தைக் கழட்டிப் போட்டாலும் மற்றவர்கள் அதை எடுத்து தோய்த்துக் காயவைத்து மடித்துத் தருவார்கள் என்று நினைக்கிறாய். தட்டிக்கேட்க ஆளில்லை என்ற தலைக் கனம் உனக்கு. உன்னை நேரில் சந்தித்தால் தலையில் குட்டியே நியாயம் பறைவேன். பானுபாரதியும் நானும் சேர்ந்து உயிர்மெய் என்ற காலாண்டு சஞ்சிகையின் மூன்று இதழ்கள் உனக்கும் உன் கூட்டத்துக்கும் அனுப்பி வைத்தோம். உங்களிடமிருந்து மசிரளவுகூட றெஸ்பொன்ஸ் இல்லை. காற்றுள்ளபோதே… கதைபோல் மார்க்கெட்டிங் எதுவோ அதன் பக்கம்தான் உங்கள் இலக்கியப்பணி இருக்குமோ…? கொடுக்குக் கட்டிக்கொண்டு உனது கையாட்கள் நாலுபேரை ஏவங்கேட்க அனுப்பாதே. உள்ளதை உள்ளபடி நீயே எழுது. அதற்கு நான் தலை வணங்குவேன். நியாயப் படுத்தும் நியாயவாதிகள் நிறையப்பேர் உன்னிடம் உண்டு என்பது எனக்குத் தெரியும். நீ வா. நியாயம் பேச நீ வா. இலக்கியப் பம்மாத்து நடாத்தும் பேர்வழிகளுக்குள் உன்னையும் அடக்க நான் விரும்பவில்லை. அதனாலேயே உன் முகத்தில் அறைந்து நியாயம் கேட்கிறேன்.

    -தமயந்தி நோர்வே-
    தொலைபேசி: (0047) 70 13 37 05

  27. யாரையும் வக்காலத்து வாங்குவது அல்ல எனதுநோக்கம். ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதைப்பற்றிய விமர்சனம் என்ற வகையில் ஆரோக்கியமான கருத்தாக்கங்கள் விமர்சனங்கள் என்ற வரம்புக்குள்நின்று பேசுவதே விவாத்ங்களை தூண்டும். எங்களுக்குநேரடியாக அறிமுகமல்லாத ஒரு பதிப்பாளரோ எழுத்தாளரோ புத்தகமொன்று வெளியிடும் போது அவரது ஆதி மூலங்களைநாம் தேடி செல்வதில்லை. எங்களுக்கு தெரிந்தவர் புத்தகம் வெளியிடும் போதுநாம் எல்லைகளை மீறுகிறோம்.

  28. எல்லைகளை மீறுவது என்பது ஒரு பொpய சமாச்சாரம் இல்லை. அதுவும் சுகன் சோபாசக்தி போன்றவா;களுக்கு அது சா;வ சாதாரணம். கிடைத்த இடங்களிலெல்லாம் அதனைப் பாpசோதித்தவா;கள். அதற்குப் பின் அரசியல் ஒன்று இருப்பதாகவே நமக்குத் தொpகிறது. ஆனால் அவை எதையும் தாம் செய்யாதது போல் சொல்வதுதான் வெட்கமானது. பழைய இயக்க் காரா;கள் சொல்வார்கள் நாம் இருந்த போது அந்தக் கொலைகள் நடக்கவில்லை.நாம் அதனைச் செய்யவில்லை என்று அதே பாணியை இவா;கள் கையாள்வது அசிங்கமானது. இவா;களது இதேமாதிரியான பல செயற்பாடுகளை நாம் அவ்வப்பபோது சொல்லியே வந்திருக்கிறோம். இன்னும் சொல்வோம். குமுதத்தில் பேட்டிகொடுத்த அ.மார்க்சை நாக்குப்பிடுங்க கெள்வி கேட்ட சோபாசக்தி ஒவ்வொரு இந்தியப் பயணத்தின் போதும் குமுதம் வாசலைத் தட்டி வருவதை நாம் வாசித்துக் கொண்டுதானே இருக்கிறோம். சுகனுடைய பேட்டியை போடாத குமுதத்திற்கு(பலா; சொல்லக் கேள்வி சுகன் இதுவரை வாய்திறக்கவில்லை)ஒரு சுரணையும் இல்லாது திரும்ப சோபா பெட்டி கொடுத்து வந்திருப்பது என்பது நமக்கும் தான் வெட்கமானது.அவருக்கு அது இல்லை. அவ்வளவு கலகக்காரா; அவா;.

  29. தமயந்தி என்ன பேசுகிறீர்கள்? தெளிவாகவே பேசுவது நல்லது. புலம்பெயர் சூழலின ஆழமான தலித்பிரச்சினைகளை முன்வைத்து கதைக்குமாறு கேட்கப்படும்போது கதைக்கவேண்டியதுதானே. இருபதுவருட புலம்பெயர் வாழ்வும் சாதீயப்பிரச்சினையும்> எந்தவகையில் பு.பெ.தமிழர் பிரச்சினைவிட ஆழமாகிறது? இலங்கையில் தலித் பிரச்சினையுடன் புலம்பெயர் தலித் பிரச்சினைகள் எந்தவகையில் வேறுபடுகிறது. எதையும் எழுத்தில் வைக்கும்போதுதான் அதற்கு அழுத்தம் அதிகம். நீங்கள் பிச்சைஎடுத்து வட்டிக்கெடுத்து ஒன்றுரெண்டு பேருக்கு காட்டுவதைவிட இப்படி இணையங்களில் எழுதுங்கள். பயன் அதிகமுண்டு.

  30. சில விடையங்களை தமயந்தியும் நன்றாக இனங்கண்டிருக்கிறார். ஆனால் சிலா; இனங்கண்டம் திக்கோழியாய் இருப்பது தாpத்திரமானது.

  31. கற்சுறா

    அமைதிஇ அமைதி …….
    எலலோருக்கும் எல்லாமும் வழங்கப்படும்.
    அமைதியாக இருக்கவும்.

    Theo 

    சத்திய கடதாசி

    இந்த வாசகத்தின் பின்னாலுள்ள ஒளிவட்டம் அவைருக்கும் தொpகிறதா?
    இந்த ஒளிவட்டம் தான் நமக்குப் பிரச்சனை.
    சுகனுக்கும் சோபாவுக்கும் பிரச்சனை.
    வழங்குவது
    பெற்றுக்கொள்வது
    குறித்த கொன்செப்ற் பற்றி நாம் நிறையவே பேசவேண்டியிருக்கிறது
    அனைத்துத் தளங்களிலும்.
    முதல் எழுதப்படும் மொழிகள் குறித்து பேசவெண்டும்.
    அதன்பிறகே
    கவிதை
    கட்டுரை
    கதை
    மயிர்

  32. அதிதீவிரங்கள் உப்பிடித்தான் முடியுமெண்டு ஒருபம்மாத்து பரதேசிசொன்னதுகூட சரியாப்போச்சு.

  33. //இருபதுவருட புலம்பெயர் வாழ்வும் சாதீயப்பிரச்சினையும் எந்தவகையில் பு.பெ.தமிழர் பிரச்சினைவிட ஆழமாகிறது? //

    —-
    நான் இலங்கை தமிழன் இல்லைதான். இருந்தாலும், என் சொந்த விருப்பத்திற்கு மாறாக ஒரு கட்டாயத்தின் பேரில் பிரான்சில் வசிக்கும் நான், மேலும் தலித் என்கிற முறையிலும் உங்கள் கேள்விகளுக்கு என் மனதில் பட்டதை சொல்ல முயற்சிக்கிறேன்.
    —-

    சாதாரண தலித் அல்லாத தமிழர்கள் புலம்பெயர்ந்த சூழலில் அவர்களுடைய தாய்மண்ணை நினைத்து போராடுவது என்பது நியாயமே. இது ஒரு பெரிய கடமைச் சுமை.

    புலம்பெயர்ந்த தலித் இலங்கையர்கள் இந்த போர் சுமையை ஒரு தோளில் சுமந்துகொண்டும் மற்றொரு தோளில் ஆதிக்கர்கள் சாதிய அடக்குமுறைகளால் அவர்களுக்கு இழித்த கொடுமைகளை எதிர்த்து வேறுமொரு போர்சுமையை சுமந்தும் வருகின்றனர்.

    தலித் அல்லாத தமிழர்களுக்கு கடந்த இருபது வருடங்களாகத்தான் போர், வறுமை, கொலை, அவமானம், இழிநிலை, உயிர்பிச்சை, பசி, பஞ்சம், பட்டினி, கற்பழிப்பு, வீடெறிப்பு, அநீதி, உறவுகள் இழப்பு போன்ற கடின வாழ்க்கை என்ன என்று அறிந்திருக்கின்றர்.

    ஆனால், தலித்துக்களோ பல நூற்றாண்டுகளாக இவ்விழி நிலையை அனுபவித்தும் வாழ்ந்தும் வருகின்றனர்.

    இப்போது நீங்களே சொல்லுங்கள். இதன்படி, பல நூற்றாண்டுகள் நடக்கும் போரைவிட இருபது வருடங்களே நடக்கும் போர்தான் அவர்கள் கண்களுக்கு பெரிதாக தெரியுமா?

    தலித் அல்லாத தமிழர்களுக்கு போர் பிரச்சினை என்பதனால்தான் இப்போது உலகம் முழுதும் பு.பெ. தமிழர்கள் மேடை போட்டு முறையிடுகின்றனர்.

    இவ்வளவு காலமும் அனைத்து இழிவுகளையும் வாழ்ந்து அனுபவித்து கடந்து தாண்டி வந்திருக்கு பு.பெ. தலித் தமிழர்கள் தங்களது நீண்டகால முதல் போருக்கே முதல் முடிவு காண முயற்சிக்கிறார்கள்.

    இதில் தவறேதும் இல்லை.

    நாளைக்கே இலங்கையில் அமைதி திரும்பி அனைத்துலக பு.பெ. தமிழர்களும் இலங்கைக்கு திரும்பி சகஜ வாழ்க்கைக்கு வந்தாலும், இத்தலித்துகளின் பிரச்சினைகள் மட்டும் இருப்பது இருந்துகொண்டே இருக்கும். இது முடிவில்லாத போரே.

    பு.பெ. தலித்துக்கள் அந்நிய நாடுகளில் வசதியாக, பாதுகாப்புடன் சகல மரியாதைகளுடன் வாழும்போதே இச்சந்தர்பத்தை பயன்படுத்தி, தன் நாட்டில் தமக்கு மறுக்கப்பட்ட ஆனால் இங்கு கிடைத்த அனைத்து சுதந்திரங்களையும் செவ்வென நடைமுறை படுத்தி தங்களது வாழ்க்கை போராட்டத்திற்கு குரல் கொடுக்கின்றனர். கட்டாயம் கொடுக்கவும் வேண்டும்.

    முதலில் தம் சமுதாயத்தியத்திற்கு அமைதியான கன்னியமான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்கு வழி கிடைத்தால்தானே
    பிறகு மற்றவர்களை பற்றி நினைக்க போராட சக்தி பிறக்கும். நேரமும் கிடைக்கும்.

    தனக்கு மிஞ்சினால்தான் தானம்.

    இலங்கை தலித்துக்களின் பல நூற்றாண்டு கால போராட்டதில் தனித்தமிழீழ போராட்டம் என்பது இவர்களுக்கு ஒரு சிறு சண்டையே.

    சிறு சண்டைகளைவிட பெரிய விசப்போர்களை முதலில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பது அனைத்து மனிதனின் இயற்கை குணம் அல்லவோ!

    நன்றி.

  34. மாசிலா!
    சிவத்தம்பி தோத்தார் போங்கள்!!!

  35. //மாசிலா!
    சிவத்தம்பி தோத்தார் போங்கள்!!! //
    புரியவில்லை சஞ்சய். இவர் யாரென்று எனக்கு தெரியாது.
    .
    நீங்கள் கேட்டிருக்கும்
    //இருபதுவருட புலம்பெயர் வாழ்வும் சாதீயப்பிரச்சினையும் எந்தவகையில் பு.பெ.தமிழர் பிரச்சினைவிட ஆழமாகிறது? //
    இந்த கேள்விக்கு இணை பதிலாக மேலும் என்னுடைய மேற்கூறிய கடைசி பின்னூட்டத்திற்கு கருத்தூட்டவும், இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒப்பிட்டு நினைவூட்ட விரும்புகிறேன்.
    .
    பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடிய தந்தை பெரியார் வெள்ளையன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நாளை கருப்பு தினம் என அறிவித்தார்.
    .
    ஏன் தெரியுமா?
    .
    நான் மேலே சொல்லி இருந்தேனே, அதே காரணத்திற்காகத்தான். சுதந்திரத்திற்கு பிறகு, வெள்ளையன் நாட்டை விட்டு வெளியே போன பிறகு மறுபடியும் ஆட்சியானது ஆதிக்க பார்ப்பனர்கள் கைவசம் விழுந்து சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாதவர்க்ள், ஒதுக்கப்பட்டவர்கள் அனைவரும் திரும்பவும் பழைய நிலைக்கு வந்து அவதிப்படுவர் என்றுதான் பெரியார் அப்படி சொன்னார்.
    .
    இந்த நிகழ்ச்சியை பார்த்தால், பெரியாருக்கு வெள்ளைக்கார அடிமை இந்தியாவின் சுதந்திரத்திற்கான போரை விட சூத்திரர்களின், தீண்டப்படாதவர்க்ளின், ஒதுக்கப்பட்டவர்களின் நீண்ட கால அடிப்படை வாழ்வுரிமைக்காக போராடும் இந்த போரே அவர் கண்களுக்கு பெரிதாக தெரிந்து இருக்கிறது.
    .
    சுதந்திரம் என்பது அனைவருக்குமான சுதந்திரமாக இருத்தல் அவசியம்.
    .
    ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டும் கிடைக்கும் சுதந்திரம் என்பது வெறும் போலி சுதந்திரமே!
    .
    சுதந்திரம் என்பது அனைவருக்குமான சுதந்திரமாக இருத்தல் அவசியம்.
    .
    ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டும் கிடைக்கும் சுதந்திரம் என்பது வெறும் போலி சுதந்திரமே!
    .
    “போரும் அதே போல்தான்!”.
    .
    ஆதிக்க வர்க்கத்தினருக்கான மட்டும் நடக்கும் போர் ஒரு உண்மையான போர் அல்ல. அப்படியானால், இது சமுதாயத்தின் ஒரு அங்கத்தினருக்கான இலாபம் அளிக்க கூடிய சுயநல போரே!
    .
    இவ்வளவு அடக்கி ஒதுக்கி இழித்த மக்களை இன்று தனக்கு ஆபத்து என்கிறபோது மட்டும் துணைக்கு வா, ஆதரவு கொடு, என்னைப்பற்றி கொஞ்சம் நினை, பேசு, எழுது, குரல் கொடு, போராட்டம் செய் என்றால் இவர்கள் கொஞ்சம் இலேசாக உதட்டோரச் சிரிப்பு சிரிக்கத்தான் செய்வார்கள்!

  36. மாசிலா>
    திரும்பவும் சொல்கிறேன்
    சிவத்தம்பி தோத்தார் போங்கள்!

    //இருபதுவருட புலம்பெயர் வாழ்வும் சாதீயப்பிரச்சினையும் எந்தவகையில் பு.பெ.தமிழர் பிரச்சினையவிட ஆழமாகிறது? //
    மாசிலா நீங்கள் சிரமப்பட்டு விவாதம் ஒன்றும் செய்வேண்டாம். குறைந்தது> இருபது வருட புலம்பெயா;வாழ்வில் சாதீயப்பிரச்சினையை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். பிறகு பு.பெ. தமிழர் பிரச்சினையைக்காட்டிலும் எங்கு ஆழமாகிறது என்று பார்ப்போம்!
    நேரடியாக பதிலுக்கு வராமல் சுற்றிவளைத்து இழுத்தடித்து ‘பூவுக்கும் நோகமல் புஷ்பத்திற்கும் நோகாமல்’ திரும்ப கேள்வியும் கேட்கமுடியாமல் பதில்சொல்லி முடிப்பீர்களானால் மீண்டும் சிவத்தம்பியே திரும்பவருவார்…

  37. பிச்சைக்காரனுக்கு கையில் புண் இருந்தேயாகவேண்டும்.இல்லையெனில் பிச்சைபிச்சையெடுக்க முடியாது கம்யுனிசவாதிகளுக்கும் மற்றவர்கள் மீது தலித் என்ற புண் இருந்தேயாகவேண்டும்.இல்லையெனில் இவர்களால்(கம்யுனிவாதி)பிச்சைபிச்சையெடுக்க முடியாது .

  38. இந்தியக் கைக்கூலிகள் சிலர் இலங்கையில் தமிழர்களில் சில பிரிவினரை இன்னும் இழிநிலைக்குத்தள்ளுவதற்கே தலித் என்ற பதத்தைப்பயன்படுத்துகின்றார்கள்.பிரச்சனைகளை எதிர்த்துப்போராட இவர்களுக்கு வீரம் கிடையாது.தலைமை தாங்க தகுதியோ அனுபவமோ கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *